Friday, May 11, 2007

தோட்டம்

வாழைக் குலை தள்ளி
வைத்த கன்று பலவிருக்கும்

அவரை துவரை கொடியேறி
அழக ழகாய்ப் பூத்திருக்கும்

மலருண்ணும் வண்ணத்துப் பூச்சி
மகரந்தத் தூள் பரப்பும்

கொய்யா மரத்து அணில்
குதித் தோடி விளையாடும்

மா மரத்து மைனா
மண்புழுவைத் தேடி நிற்கும்

வேப்ப மர நிழலடியில்
வெக்கை இன்றி குளுகுளுக்கும்

இளந் தென்றல் மிதமாக
இன்னிசை பாடி வரும்

மண்ணில் கால் பதிக்க
எண்ணம் நடை திறக்கும்

-----

என்றும் அன்புடன்
சதங்கா

19 comments:

  1. சொந்த ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அற்புதம்.

    ReplyDelete
  2. உம்மைக் கண்டா வயத்தெரிச்சலா இருக்கு. இங்கு வெடிக்கும் சர்வர்களுடன் போராடிக்கிட்டிருக்கோம். நீர் மதியம் நல்லா வெட்டிட்டு தூங்கி கனவில் தோட்டத்தில் வேற நடக்கிறீர். உம் கனவில் ஒரு டெஸ்டர் பேபி ரா போதுந்தி! :-)

    சின்ன வயதில் பக்கத்து வீட்டு தோட்டத்தில் உங்கள் கனவில் வரும் அனைத்தும் உண்டு. ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே...

    வேலிகாத்தான் செடியை உடைத்து சோப் தடவுவோம். கோட்டுப் புல் ஆடி தோட்டத்தை நாசம் செய்து திட்டு வாங்குவோம். கொய்யா மரத்தில் ஒரு காயையும் உள்ளங்கை சைஸுக்கு மேலே வர விட்டதில்லை. அந்த வீட்டில் மூன்று சகோதரர்கள். கண்ணன், ரவி, பாபு - சுருக்கமா கண்ராவி பாபு!

    அவரை கொடி படர்வதும் வேகமாக முந்தினம் வைத்த குச்சியில் சுற்றிக் கொள்வதும் அப்படி ஆச்சர்யப்படவைக்கும். கிடைத்த இடத்தை எல்லாம் எடுத்துக்கொள்ளும் சங்கு புஷ்பக் கொடி. இரண்டு நாள் முன்புதான் சிங்கப்பூரில் இருக்கும் நண்பன் இந்நினைவுகளில் வாய் விட்டு அழுதான். இன்று என் நிலைமை அப்படி ஆகிவிடும் போல இருக்கிறது.

    ReplyDelete
  3. சதங்கா,

    அருமையாக ஒரு இந்தியத் தோட்டத்தைப் பதிவு செய்திருக்கின்றீர்கள்.

    //அவரை துவரை கொடியேறி
    அழக ழகாய்ப் பூத்திருக்கும்//

    கண்டிப்பாக நிஜம். எங்கள் வீட்டில் 2 பந்தலாவது இருக்கும் அதை பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும்.

    //கொய்யா மரத்து அணில்
    குதித் தோடி விளையாடும்//

    அப்பா! துறு துறுவென அவை பார்ப்பதுவும், புசு புசு வாலை ஆட்டி ஆட்டி தத்தி ஓடுவது கொள்ளை அழகு.

    //வேப்ப மர நிழலடியில்
    வெக்கை இன்றி குளுகுளுக்கும்

    இளந் தென்றல் மிதமாக
    இன்னிசை பாடி வரும்//

    மிகச் சரியாக சொல்லிவிட்டீர்கள்.

    //மண்ணில் கால் பதிக்க
    எண்ணம் நடை திறக்கும்//

    அந்தக் காலங்களில் அப்படி இல்லை, இப்போது உங்கள் படைப்பை கற்பனை செய்யும் போதே 'எண்ணம்' நடையெல்லாம் இல்லை, குதித்து ஆட்டமே ஆடுகிறது.

    போய்விடாதீர்கள், கருத்து சொல்லாத என்னுடைய பின்னூட்டமா?

    //வாழைக் குலை தள்ளி
    வைத்த கன்று பலவிருக்கும்//

    கற்பனைக்கு நன்றாக இருந்தாலும், நிஜத்தில் வாழை ஒரு குலை தள்ளும், ஒரே ஒரு கன்று வந்தவுடன் வீழ்ந்து விடும் என்றுதான் கேள்வி பட்டு இருக்கிறேன்.
    இதை கவியரசர் கண்ணதாசன் அவருடைய கவிதைத் தொகுப்பில் 'ஜனனம்' என்ற தலைப்பில் பாட்டாகப் பாடியிருக்கிறார்.


    //மலருண்ணும் வண்ணத்துப் பூச்சி
    மகரந்தத் தூள் பரப்பும்//

    வண்ணத்துப் பூச்சி தேனை மட்டும் உண்ணும் என்றுதான் படித்திருக்கிறேன்,

    இப்படி எழுதினால் சரியா?

    மலர்தாவி வரும் வண்ணத்துப் பூச்சி
    மகரந்தத் தூள் பரப்பும்

    //மா மரத்து மைனா
    மண்புழுவைத் தேடி நிற்கும்//

    நான் மைனாவைப் பார்த்தது கிடையாது, கூவும் குரலை கேட்டிருக்கிறேன். நீங்கள் பார்த்தது உண்டா?

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  4. முரளி - மைனாவையும், குயிலையும் குழப்பிக்கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    மைனா பார்ப்பது எளிதாயிற்றே? அந்தப் பிராயத்தில் உங்கள் கவனம் எல்லாம் எதிர்வீட்டு மைனா மேல் என்று குமரன் குன்றிலிருந்து யாரோ குரல் விடுகிறார்கள்....

    ReplyDelete
  5. நாகு,

    நான் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை எங்கள் வீட்டுக்கு எதிர் பக்கம் வீடே கிடையாது. காலி மனைதான். சும்மா குமரன் குன்றம் பற்றி தெரிந்து வைத்துக் கொண்டு சரடு விடாதீர்கள். ஆக குயிலைப் பார்காமலேயே பாரதியார் குயில் பாட்டு பாடினாரா? ஹூம் எனக்கு இது ஒரு புதிய செய்திதான்.

    கவிஞர்கள் சதங்கா மற்றும் கவிநயா உங்கள் கருத்து என்ன?

    அன்புடன்

    முரளி.

    ReplyDelete
  6. பாரதியார் எங்கிருந்து வந்தார் இதில்?

    ReplyDelete
  7. நான் சொல்ல வந்தது, குயிலைப் பார்ப்பதுதான் கடினம். மைனா இந்த ஊர் ராபின் மாதிரி. எங்களூரில் காக்கைக்கு அடுத்தது மைனாதான் அதிகமாக இருக்கும். அதனால்தான் கேட்டேன்.

    ReplyDelete
  8. படித்துப் பாராட்டிய நாகு & முரளி அவர்களுக்கு மிக்க நன்றி.

    உங்கள் கருத்துக்களுக்கு விரைவில் பதிலலிக்கிறேன்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  9. சதங்கா,

    "தோட்டம்" படிக்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இளமை பிராயத்தில் இந்தியாவில் வாழ்ந்தபொழுது இவைகளில் சிலவற்றைப்பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன் (ஒரு மைனா கூட மாட்டவில்லை - அது வேறு கதை). இவைகளை மீண்டும் தோட்டத்தின் மூலம் "பார்வைக்கு/நினைவுக்கு" கொண்டு வந்ததற்கு நன்றி.

    நெல்லிக்காய் மரத்தையும், புளிய மரத்தையும் விட்டு விட்டீர்கள். நாங்கள் வசித்த வீட்டில் ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் உண்டு. தானாகவே காய்கள் விழுவதுண்டு. விழாத காய்களை மரத்தைப்பிடித்து உலுக்கியோ அல்லது மரத்தில் ஏறியோ எடுத்து உப்பில் தோய்த்துத்தின்றிருக்கேன் பல முறை. இந்த நெல்லிக்காய் தின்னும்போதே சில சமயம் பற்கள் "கரக்" என்று உரசிக்கொண்டு கூசுவது வேறு கதை.
    தொடரவும்.

    ReplyDelete
  10. மைனா மாட்டவில்லை, பார்க்கவில்லை என்று அனைவரும் கூறுவதால், உங்கள் பார்வைக்காக இதோ. எந்த மரத்தைவேண்டுமானாலும் நினைவுப் படுத்துங்கள். இந்த சீசனில் மாமரத்தை மட்டும் நினைவுப்படுத்தவேண்டாம். இந்திய மாம்பழங்களுக்கு இவ்வளவு ஆண்டுகள் இருந்த தடையை அமெரிக்கா நீக்கியிருக்கிறதாம். பார்ப்போம் அமெரிக்காவுக்கு மாம்பழ விமோசனம் கிடைக்கிறதா என்று.

    ReplyDelete
  11. நாகு,

    //உம்மைக் கண்டா வயத்தெரிச்சலா இருக்கு. இங்கு வெடிக்கும் சர்வர்களுடன் போராடிக்கிட்டிருக்கோம். நீர் மதியம் நல்லா வெட்டிட்டு தூங்கி கனவில் தோட்டத்தில் வேற நடக்கிறீர். உம் கனவில் ஒரு டெஸ்டர் பேபி ரா போதுந்தி! :-)//

    சாபம் போடாதீங்க சாமி, அப்புறம், இந்த கூட்டாங்கதையில வர்ர மாதிரி என்னோட நம்பர உங்களுக்கு forward பண்ற மாதிரி ஆயிடும்.

    //அந்த வீட்டில் மூன்று சகோதரர்கள். கண்ணன், ரவி, பாபு - சுருக்கமா கண்ராவி பாபு!//

    இது சூப்பர்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  12. முரளி,


    //கற்பனை செய்யும் போதே 'எண்ணம்' நடையெல்லாம் இல்லை, குதித்து ஆட்டமே ஆடுகிறது.//

    கண்டிப்பாக அது அத்தனை உண்மை.

    //கற்பனைக்கு நன்றாக இருந்தாலும், நிஜத்தில் வாழை ஒரு குலை தள்ளும், ஒரே ஒரு கன்று வந்தவுடன் வீழ்ந்து விடும் என்றுதான் கேள்வி பட்டு இருக்கிறேன்.
    இதை கவியரசர் கண்ணதாசன் அவருடைய கவிதைத் தொகுப்பில் 'ஜனனம்' என்ற தலைப்பில் பாட்டாகப் பாடியிருக்கிறார்.
    //

    கவியரசரின் 'ஜனனம்' தொகுப்பைப் படித்தது இல்லை. பல வருடங்கள் முன்னால், எங்கள் பாட்டி வீட்டில் வாழைக் கன்றுகள் பலவற்றைப் பார்த்த ஞாபகம். இந்தப் படத்தைப் பாருங்கள். உங்களுக்காக வலையில் தேடிப் பிடித்து எடுத்திருக்கிறேன்.

    //வண்ணத்துப் பூச்சி தேனை மட்டும் உண்ணும் என்றுதான் படித்திருக்கிறேன்,

    இப்படி எழுதினால் சரியா?

    மலர்தாவி வரும் வண்ணத்துப் பூச்சி
    மகரந்தத் தூள் பரப்பும்
    //

    'மலருண்ணும்' என்று எழுதியது தேனை உண்ணும் என்கிற அர்த்தத்தில். ஒரு மலரிலிருந்து பறக்கையில் அதன் கால்களில் மகரந்தத் தூள் ஒட்டிக் கொள்ளலாம் அல்லவா ? இருப்பினும், உங்கள் திருத்தமும் நன்றாக இருக்கிறது :)

    //நான் மைனாவைப் பார்த்தது கிடையாது, கூவும் குரலை கேட்டிருக்கிறேன். நீங்கள் பார்த்தது உண்டா?//

    மைனாவைப் பற்றி நாகு நிறைய எழுதிட்டார். பத்தாததுக்கு படமும் attach பண்ணியிருக்கிறார். நீங்க சொன்னது இந்த மைனாவைத் தானே ?

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  13. பரதேசி,

    முதலில் கருத்துக்களுக்கு நன்றி.

    //நெல்லிக்காய் மரத்தையும், புளிய மரத்தையும் விட்டு விட்டீர்கள்.//

    இன்னும் நிறைய மரங்கள் இருக்கின்றன. எழுத ஆரம்பித்தால் விரல் ஒடிந்துவிடும்.

    எங்கள் வீட்டிலேயே ஒரு சாத்துக்குடி மரம் இருந்தது. பழம் இங்கே கிடைக்கும் grape fruit size இருக்கும். அப்படி ஒரு இனிப்பு. இது போக பின் வீட்டில் ஒரு எழுமிச்சை. நீங்கள் மரத்தை உலுக்கியது போலச் செய்ய முடியவில்லை. முட்கள் இருப்பதால் ஏறவும் முடியாது. கல்லு தான் ஆயுதம். இதைப் பற்றியும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  14. ஆமாம். நிறைய மரங்கள் இருக்கின்றன எழுத ஆரம்பித்தால். வேப்ப மரத்தைப் பற்றி ஒரு பெரிய கதையே இருக்கிறது. தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  15. அருமையான கவிதை, சதங்கா!

    அன்புடன்,
    கவிநயா

    ReplyDelete
  16. நான் நிறைய்ய்ய்ய்ய மைனா பாத்திருக்கேன்ப்பா!!

    முரளி, நீங்க எதுக்குக் கருத்துக் கேட்டிருக்கீங்கன்னு புரியல. பாரதியோட குயில் பத்தியா, குமரன் குன்றம் பத்தியா - (இதுல எதைப் பத்தியுமே எனக்குத் தெரியாதுங்கிறது வேற விஷயம் :-))

    ReplyDelete
  17. நன்றி கவிநயா.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  18. சதங்கா, அழகுக் கவிதை அருமைக் கவிதை. தேர்ந்தெடுக்கப்பட்ட எளிமையான சொற்கள். கைகள் எழுதும் போது மனம் அசை போட்டு அனுபவிக்கும் இன்பமே தனி தான். நாம் உண்மையாகவே அத்தோட்டத்தில் நின்று அத்தனையையும் நேரில் பார்ப்பது போன்றே இருக்கும். அந்த சுகானுபவமே தனி தான். அதை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    வாழை, அவரை, துவரை, வண்ணத்துப் பூச்சி, அணில், மைனா, வேப்ப மரம், தென்றல், இயற்கை அத்தனையையும் கவிதையில் கண் முன்னே கொண்டு வந்த திறமை பாராட்டத் தக்கது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. சீனா,

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!