Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Sunday, May 01, 2022

பண்ருட்டி பலாச்சுளைகள் - 1

 

பண்ருட்டியில் எங்கள் வீட்டைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் எழுதியதில் இருந்து ஒரு யோசனை. நண்பர்களைப் பற்றி எழுதினால் என்ன? தேவதைகள் என்ற தலைப்பில் ஒரு ஶ்ரீரங்கத்துக்காரர் எழுதிவிட்டார். அங்கு கோவில்கள் அதிகம் என்பதால் இருக்கலாம். எனக்கு பண்ருட்டியில் பலா, முந்திரியைத் தாண்டி வேறு என்ன தோன்றப் போகிறது. "பண்ருட்டி பலாச்சுளைகள்" என்கிற தலைப்பில் பண்ருட்டி நண்பர்களைக் குறித்து தொடரப் போகிறேன்!


குலாம்!


இந்தப் பெயரைக் கேட்டாலே என் நண்பர்கள் அனைவர்கள் முகத்திலும் ஒரு புன்சிரிப்பாவது வராமல் இருக்காது. அந்த அளவுக்கு அனைவருக்கும் நண்பன், சிரிக்க வைப்பவன். எப்போதும் முகத்தில் சிரிப்புதான். வகுப்பின் கோமாளி! அவனை கோபமாகவோ, வருத்தமாகவோ பார்த்ததாக நினைவே இல்லை. 


எல்லா ஆசிரியர்களையும் வம்புக்கிழுப்பான். சட்டையின் மேல் பித்தான்கள் போட்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்திய ஒரு ஆசிரியர் பித்தான்களை திறந்து போட்டிருக்கும் மாணவர்களை அடித்து பித்தான்களை போடச் சொல்லுவார். அவரே இவனை அருகில் அழைத்து பித்தான்களை போட்டுவிட்டிருக்கிறார். ஆங்கில வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்கள் தமிழ் பாடம் வராமல் ததிங்கணத்தோம் போடுவது சகஜம். ஆனால் இவன் ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியரிடம் ஏழாவது எட்டாவது வகுப்பிற்குமேல் தமிழ் பாடம் தேவையில்லை என்று ஒரு நாள் வாதம் செய்தான். எங்களுக்குத்தான் தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமே இனிமேல் எதற்கு என்று. ஆசிரியரும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். கடைசியில் உனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்தானே. ஞமலி என்றால் என்ன என்று கேட்டார். இவன் தெரியாது சார், அப்படி என்றால் என்ன என்றான். நாய் என்றார். இவன் - நான் நாய் என்று சொல்லிவிட்டுப் போகிறேன், எதற்கு ஞமலி, கிமலி எல்லாம் என்றான். வகுப்பே அதிர்ந்தது. ஆசிரியருக்கு என்ன சொல்வதே என்று தெரியவில்லை.


ஒன்பதாவது படிக்கும்போது ஒரு நாள் ஆங்கில ஆசிரியரை ரொம்பவே சீண்டிவிட்டான். கோபம் வந்து வேப்ப மரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இவனை போட்டு விளாசி விட்டார். இவனுக்கு நீண்ட காது - புத்தர் காதன் என்று ஒரு பெயர்கூட உண்டு - அதை பிடித்து இழுத்து அடித்ததால், காதே கொஞ்சம் பிய்ந்தமாதிரி ரத்தம் வேறு. பையை எடுத்துக் கொண்டு உங்களை பாத்துக்கறேன் சார் என்று சவால்விட்டு கிளம்பி போய்விட்டான். ஆசிரியர் சினம் தணிந்து உட்கார்ந்தார். குலாம் என்ன பண்ணப் போகிறானோ என்று கொஞ்சம் பயந்துவிட்டார். பையன்கள் வேறு - சார், அவனுக்கு பனங்காட்டுத் தெருவில் நிறைய நண்பர்கள் உண்டு என்று அவர் பீதியை இன்னும் கொஞ்சம் கிளப்பிவிட்டார்கள். "வீரர்கள்" நிறைந்த தெரு, அவன் வீட்டருகில் இருக்கும் பனங்காட்டுத் தெரு. அவர் அமைதியாக பாடம் நடத்தத் தொடங்கினாலும், புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்கிக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் என்ன ஆகப் போகிறதோ என்று காத்திருந்தோம். மதிய உணவு இடைவேளைப் பிறகு அழகாக மாப்பிள்ளை மாதிரி முகம் கழுவி பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தான். எங்கடா போனே என்று கேட்டோம். நான் வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போட்டு, மதியம் சாப்பிட்டு வந்தேன் என்று சிரித்தான். சும்மா உதார் விட்டிருக்கிறான்.  


பத்தாவது படிக்கும்போது தமிழ் ஆசிரியரை படாத பாடு படுத்தினான். இவனை ஏதோ கேள்வி கேட்டு இவன் பதில் தப்பாகச் சொன்னான். இவன் அருகில் வரலாம் என்று இருக்கையில் இருந்து ஆசிரியர் எழுந்தார். கிட்ட வராதீங்க சார், வந்தா அடிப்பீங்க என்றான். இல்லடா, நான் வந்து நீசொன்னதை திருத்தி சொல்லித் தறேன் என்றார். அதற்கு குலாமின் பதில்: அங்கிருந்தே திருத்துங்க சார்! மேஜை மேல் ஏறி தாவித் தாவி அடிக்கு தப்புவதெல்லாம் சகஜமாக நடக்கும். பத்தாவது பரீட்சையில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தான். ஒவ்வொரு நாளும் வரும் கண்காணிப்பாளரிடம் எங்களுக்கு இந்தப் பாடம் நடத்த ஆசிரியரே இல்லை, அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று தயங்காமல் ரீல் விடுவான். கொஞ்சம் சம்மதம் மாதிரி தெரிந்த அன்றெல்லாம் அவ்வளவுதான் - அப்படியே என் பதில்களை ஜெராக்ஸ் எடுத்தான். ஒரே சிரிப்பும், கும்மாளமும். பத்தாவது பரீட்சை மாதிரியே இருந்ததில்லை இவன் செய்த கலாட்டாவினால்.


பள்ளியில் இவ்வளவு வால்தனம் பண்ணுகிறவனை அவர்கள் கடையில் பார்த்தால் நம்பவே முடியாது. அண்ணனுக்கு பயந்தவன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவி போல் பவ்யமாக உட்கார்ந்திருப்பான். மாலையில் மளிகை பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப் போவான். எதாவது ஒரு சினிமாவில் நுழைந்து கொஞ்சம் நேரம் படம் பார்ப்பான். "அலைகள் ஓய்வதில்லை" ஓடும்போது இது தினம் நடந்தது.  எங்கள் வீட்டுப் பக்கம் வசூலிக்க வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவான். என்னவோ என் ஒரு அண்ணன் மேல் அதீத பாசம். அவனை அடித்துக் கொண்டோ கிள்ளிக்கொண்டேதான் இருப்பான். அண்ணனும் பொறுத்துக் கொள்வான். இவனை கோபித்து அடிக்கக்கூட மனம் வராது. செய்வதை எல்லாம் சிரித்துக் கொண்டே செய்பவன்.  இவன் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ரொம்பவே அதிர்பவர் எங்கள் அப்பாதான். ஏனென்றால் அவனை அவர்கள் கடையில் எப்படி இருப்பான் என்று பார்த்தவர். 


இவன் பயன்படுத்தும் சில பல சொற்றொடர்கள் என் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம். இன்றும் பள்ளி நண்பர்களுடன் பேசினால், குலாமின் சொற்கள் இல்லாமல் பேச்சு முடியாது.


அப்படி இருந்த குலாம் எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுத்தான். "குலாம் போயிட்டாண்டா" என்று சிங்கப்பூரில் இருந்து அழைத்து  ரஃபி அழுதுகொண்டே சொன்னதை என்றும் மறக்க முடியாது. 

Monday, December 18, 2017

மழலை மலர்க்கொத்து

இது என் மழலை மலர்க்கொத்து

அன்பால் ஆர்வத்தால்
அரவணைப்பால் ஆவலால்
என் ஞாயிற்று கிழமையை
மகிழ்விக்கும் என் மழலை மலர்க்கொத்து

புன்னகையால் பொலிவால்
கேள்விகளால் குறும்பால்
புத்துணர்வை தரும் என் மழலை மலர்க்கொத்து

இனிமையாய் இயல்பாய்
இன்பமாய்
அத்தையென்றும் ஆன்டியென்றும்
ஆசிரியையென்றும்
பொலிவூட்டும் என் மழலை மலர்க்கொத்து

சிரிப்பால் பண்பால்
மட்டுமின்றி
என் தாய்மொழியான தமிழ்மொழிக்கு
உங்கள் மழலைச் சொற்களால்
பெருமை சேர்க்கும் என் மழலை மலர்க்கொத்து

ஆயிரம் வணக்கங்களுடன்
சமர்ப்பிக்கிறேன்
- சுனிதா சந்திரமோகன்

(நம் தமிழ்ப் பள்ளியில் எழுத்தறிவிக்கும் ஆசிரியை சுனிதா தம் வகுப்பு மாணவர்களுக்காக எழுதியது)

Thursday, April 24, 2014

நினைவிற்குத் தேன்

ஆடி அசைந்து பள்ளி நுழைந்து
வெயிலும் நிழலும் அப்பிய முற்றத்தில்
அணிவகுத்து நின்று கடவுளை வாழ்த்திய காலை
நிழல் தேடி வட்டமிட்டு அமர்ந்து
கதை பேசிப்பேசி காகம் விரட்டி
கட்டித்தந்ததை உண்ட மரத்தடி மதியம்
ஆவலாய்க் காத்திருந்து மணிச்சத்தம் கேட்டவுடன்
ஆர்ப்பரித்த்து வெறியோடு வளாகம் விட்டு
அங்கும் இங்குமாய்ச் சிதறி ஓடிய மாலை
தன்னைவிடப் பிரம்பை நம்பிய ஆசிரியர்கள்
கேட்கக் கேட்கத் தாலாட்டாய் மாறும் அவர்கள் குரல்
கண்விழித்துக் கண்ட பகல் கனவு
சமைக்காத போதும் சாம்பார் மணக்கும் சத்துணவுக்கூடம்
கவனம் ஈர்த்த கிருத்துவக் கல்லூரிப் பெண்கள்
இடை இடைச் செரித்த பாடம்
பதைபதைக்கப் புரட்டிய வினாத்தாள்
படித்ததை எழுதி முடித்த நிம்மதிப் பெருமூச்சு
அறிவையும் ஆன்மாவையும் தொட்ட சிந்தனைகள்
இவை அனைத்தும் தந்த அனுபவம் கொண்டு
நான் நானாக உருவாகத் துவங்கிய கருவறை
கார்லி கலைக் கோயில்
- வாசு சண்முகம் 



Monday, June 18, 2012

வர்ஜினியா டென்னிஸ் சாம்பியன்


ரிச்மண்ட் தமிழ்ச் சங்க  சிறுவன் ஒருவன் இந்த வருடம் டென்னிஸில் சாதனை படைத்திருக்கிறான். கடந்த ஜூன் 10-ம் தேதி  நடைபெற்ற வர்ஜினியா மாநில உயர்நிலைப் பள்ளி டென்னிஸ் இறுதிப் போட்டியில் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறான் பரணி சங்கர். நமது சங்க உறுப்பினரான பிருந்தா, சங்கர் தம்பதிகளின் மூத்தப் புதல்வன் பரணி சங்கருக்கு மாநில இறுதிப் போட்டி ஒன்றும் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சங்க போட்டி என்று எண்ணுமளவு இரட்டையர் இறுதிப் போட்டியில் நமது சிறுவர்கள் மூவர் ஆடியதை பற்றி இங்கே படிக்கலாம். அந்தப் போட்டியில் இழந்த கோப்பையை இந்த ஆண்டு வெற்றிகரமாக கைப்பற்றியிருக்கிறான் பரணி.

டீப் ரன் பள்ளி இரட்டையர் போட்டியில் வெற்றி வாகை சூடிய செய்தியை இந்தத் தளத்திலும், டீப் ரன் பள்ளியின் தளத்திலும் படிக்கலாம்.

மே மாதத்தில் ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் செய்தித்தாளின் 'இந்த வார சிறந்த விளையாட்டு வீரன்' பரணி சொல்வதை நீங்களே கேளுங்கள்.


இந்த ஆண்டு கல்லூரி செல்லும் பரணிக்கு மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க எங்கள் வாழ்த்துக்கள்!