Showing posts with label தமிழ்த்தாத்தா. Show all posts
Showing posts with label தமிழ்த்தாத்தா. Show all posts

Thursday, February 10, 2011

தமிழ்த்தாத்தா உ. வே. சா.

தமிழ்த்தாத்தா உ. வே. சா.

- மு.கோபாலகிருஷ்ணன்

தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுடைய பிறந்தநாள் பிப்ரவரி மாதம் 19ம் தேதி வருகிறது. 155 ஆண்டுகளுக்கு முன் 1855ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார் . குடும்பத்தில் எல்லோருக்கும் சங்கீதம்தான் பிழைப்பாக இருந்தது.

ஐயர் தன்னுடைய சிறிய தகப்பனாரிடம் ஹரிகதா காலட்சேபம் செய்ய பயிற்சி பெற்றார் .ஆனால் ஐயருக்கு தமிழ் படிக்க வேண்டுமென்று ஆவல். குடும்பத்தில் உள்ளவர்கள் அவருக்கு ஆங்கில கல்வி கொடுத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பினார்கள். வேறு சிலர் சங்கீதத்தில் ஈடுபடும்படி அவருக்கு அறிவுரை கூறினார்கள். எல்லோருடைய விருப்பத்துக்கு மாறாக பிடிவாதமாக தமிழ் கற்பதுதான் தன் நோக்கம் என்று கூறி தந்தையாருடைய சம்மதத்தை பெற்று தமிழ் கல்வியில் ஈடுபட்டார்.

ஐயர் அப்படி பிடிவாதமாக தமிழ்க்கல்வி கற்க முனைந்தது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய பேறாக அமைந்தது என்பதை கணக்கிட்டு சொல்ல முடியாது. அவர் கல்வி கற்கத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்திய காலத்தில் தமிழ்க்கல்வி கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் ஏட்டுச்சுவடிகள் மூலம்தான் கற்பிக்கப்பட்டது. அந்த சுவடி பற்றியும் சுவடிக்கல்வி முறை பற்றியும் தெரிந்தால்தான் சாமிநாதய்யரின் தமிழ்ப்பணியின் பெருமையை புரிந்து கொள்ள முடியும். கணினி மூலமும் அச்சிடப்பட்ட புத்தகத்தின் துணையோடும் கல்வி பெறும் இந்நாளில் அன்றைய நிலை பற்றி கற்பனை கூடச்செய்ய முடியாது. அச்சுக் கலை அப்பொழுதுதான் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அன்று அச்சகங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மிஷனரிகள் வசம்தான் இருந்தன அச்சாகும் நூல்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அரசாங்கம் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆகையால் அன்றைய நிலையில் புத்தகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது.

பள்ளிக்கல்விக்கு இன்று உள்ளதுபோன்று நோட்டு புத்தகங்கள் கிடையாது. செய்யுள் வாய்ப்பாடு எல்லாம் அன்று மனப்பாடம்தான். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஒரு இடத்தில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுதிப் பழக வேண்டும். ஒரு சில மாத பயிற்சிக்குப் பிறகு சுவடி எழுதப் பயிற்சி கொடுக்கப்படும். .சிலேட்டில் எழுதும் பழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் வந்தது.

எழுதப் பயன்படுத்தும் சுவடியை பனை ஓலையிலிருந்து தயாரிப்பார்கள். அந்த பனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஒரு தனிக்கலை. சுவடியில் எழுதுவதற்கு நீண்ட நாள் பயிற்சி வேண்டும். எழுத்தாணி என்ற கருவியைக்கொண்டு சுவடிகளில் எழுதுவார்கள். எழுத்தாணியால் எழுதும்போது மேலாக எழுதினால் எழுத்து தெரியாது. அழுத்தி எழுதினால் சுவடி ஒடிந்துவிடும். எங்காவது ஒரு மூலையில் ஒடிந்தாலும் அந்த சுவடியை தூக்கி எறியவேண்டியதுதான். ஒரு சுவடியில் பத்து பதினைந்து பாடல்களை கூட எழுதுவார்கள். நிதானமாகவும், அதிக அழுத்தம் கொடுக்காமலும் எழுத வேண்டும். எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில் கை வலி எடுக்க ஆரம்பிக்கும்.

அப்படி வலியை அனுபவித்த மாணவன் ஒருவன் எரிச்சலில் பாடிய பழைய பாட்டு ஒன்று உண்டு.

ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா
வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா

என்பதுதான் அந்த மாணவனின் புலம்பல் பாட்டு.

நாம் இன்று எழுதும்போது எழுத்துக்கு புள்ளி வைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுகிறோம். சுவடியில் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால் புள்ளி வைத்தால் ஓலை ஒடிந்து போய்விடும். ஆகையால் புள்ளி எங்கே தேவை என்பதை படிப்பவர்கள் தெரிந்து உணர்ந்து படிக்கவேண்டும். உதாரணமாக கம்பம் ,ரம்பம் என்ற சொற்களை கமபம ,ரமபம என்றுதான் சுவடியில் எழுதுவார்கள்.

படிப்பவர்கள் சொல் அமைந்திருக்கும் நிலைக்கு தக்கபடி படித்து பொருள் கொள்ள வேண்டும். பழைய உரைநடை ஆசிரியர்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவார்கள். வாக்கியங்கள் நீண்டதாக இருக்கும். இந்த ஓலைச் சுவடிகளில்தான் காலம் காலமாக எல்லா பழைய இலக்கியங்களையும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் .

கல்வியறிவு உள்ளவர்கள் எல்லோரும் சுவடியில் எழுதுவதில்லை. சுவடியில் எழுதியவர்கள் எல்லோரும் நிரம்ப படித்தவர்களும் இல்லை. ஓரளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் சுவடி எழுதுவதை தொழிலாகக் கூட மேற்கொள்ளுவார்கள். தேவையான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் சுவடி எழுதியதால் தான் பலபிழைகள் ஏற்பட்டுவிட்டன. இப்படித்தான் பழைய இலக்கியங்களில் பல பாடல்களுக்கு பாடபேதம் நிறைய ஏற்பட்டது. புலவர் எழுதியதற்கு மாறான சொல் உள்ள பாடல்களை பாடபேதம் உள்ளதாக குறிப்பிடுவார்கள்.

இப்படி எழுதிய சுவடிகளை பூச்சி அரிக்காமல் காப்பாற்றுவது மிகக் கடுமையான வேலை. வசம்பு என்ற நாட்டு மருந்து பொருளை சுட்டு அதன் கரியை மஞ்சள் சாற்றில் கலந்து வேறு சில பச்சிலை சாற்றையும் கலந்து ஒரு குழம்பு தயாரிப்பார்கள். அந்த குழம்பை சுவடிகளில் தடவி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யாவிட்டால் சுவடியை பூச்சி அரித்து விடும்.

அடிக்கடி பழைய சுவடிகளில் உள்ள இலக்கியங்களை புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு பழைய சுவடிகளை அழித்துவிடுவார்கள். இந்த பழைய சுவடிகளை ஆற்று நீரில் போட்டால் நதியில் நீர் வளம்பெருகும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆடிப் பெருக்கு காலத்தில் சுவடிகளை வெள்ளத்தில் போட்டு தமிழர்கள் பல பழைய இலக்கியங்களை அழித்திருக்கிறார்கள்.

பல சைவ மடங்களிலும் புலவர்களுடைய சந்ததியினர் வீடுகளிலும் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய கிடைத்தன சைவ மடங்களில் இருந்த ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ள பல தம்பிரான்கள் உள்பட பலருக்கு அங்கே உள்ள ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கம். என்ன அவை என்ன நூல் என்பது தெரியாது. .இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை இருந்த உண்மை நிலை. மாற்றுச் சமய நூல்களை படிக்கக் கூடாது என்று சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்ததால் பல சமய நூல்கள் கவனிப்பாரற்று அழிந்து போயின. அப்படி அழிந்த நூல்களில் பெருமபாலனவை சமண, பௌத்த மத நூல்களும் பல சமயச் சார்பற்ற நூல்களும்தான். உதராணமாக எந்த சமயத்தைப் பற்றியும் பேசாமல் இயற்கை வளத்தைப் பாடிய முத்தொள்ளாயிரம் என்ற நூலின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சங்க காலத்திலும் அதற்கு பிறகும் சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சுவடியில் இலக்கியங்களை எழுதுவதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். அந்த சுவடிகளை பணமோ பொருளோ கொடுத்து தனவந்தர்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் எழுதியதெல்லாம் பெரும்பாலும் நீதி நெறிமுறைகளை போதிக்கும் அறநூல்கள்தான்.

தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அல்லது நீத்தார் நினைவு நாட்களில் இந்த சுவடிகளை தனவந்தர்கள் தானமாகக் கொடுப்பது வழக்கம். இதை கிரந்த தானம் என்று கூறுவார்கள். .சாஸ்திரதானம் என்றும் சொல்வதுண்டு. கிரந்த தானம் என்பது பழங்காலத்தில் சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. .பிறகு சைவ சமயத்தாரும் இந்த வழக்கத்தை மேற்கொண்டனர். நீத்தார் நினைவு நாட்களில் நிலையாமையைப் பற்றி
குறிப்பிடும் தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு சிறிய புத்தகமாக விநியோகம் செய்யும் பழக்கம் பலவிடங்களில் உண்டு. இலங்கையில் வாழும் சைவ வெள்ளாளர்கள் மத்தியில் கிரந்த தானம் செய்யும் வழக்கம் பெரிய அளவில் இன்றும் உண்டு.

சுவடி எழுதியவர்கள் எத்தனை தவறு செய்திருக்கிறார் எத்தனை சொற்களை விட்டிருக்கிறார் என்று தெரியாது. பல புலவர்கள் எழுதிய சொற்களை திரித்தும், தவறாகவும் எழுதப்பட்டது. பல நூற்றுக்கணக்கான நூல்கள் அழிந்துபோய்விட்டன. தப்பித் தவறி சைவமடங்களில் அகப்பட்டுக்கொண்ட மாற்றுச் சமய நூல்கள் கவனிப்பாரின்றி அழிந்து போயின. மிகச் சிறிய அளவிலான சுவடிகள் மட்டுமே காப்பாற்றப்பட்டன. அந்த நாட்களில் யாரிடமாவது நூல் ஒன்றின் சுவடிப்பிரதி இருப்பதாக அறிந்தால் பலர் அவரை நாடி வந்து கையால் எழுதி பிரதி எடுத்துச் செல்வார்கள.

வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி என்ற நூல் ஓலைச் சுவடியில் இருந்தது. அந்த சுவடிப்பதிப்பை பெற பெர்சிவல் என்ற கிறிஸ்தவப் பாதிரியார் 19ம் நூற்றாண்டில் ரூபாய் 150 கொடுத்து வாங்கினார். அந்த நாட்களில் ரூபாய் 150 எவ்வளவு பெரிய தொகை என்பதை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது. அந்த காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை நிலம் ஒரு ஏக்கர் விலை ரூபாய் 500 ஆக இருந்தது. 150 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பதை அனுமானம் செய்து கொள்ளலாம்.

சுவடியை எழுதவதும் எழுதிய சுவடியை காப்பாற்றுவதும் கடினமாக இருந்ததால்தான். கல்வி என்பது அந்த நாட்களில் மனப்பாடம் செய்யும் முறையைச் சார்ந்து இருந்தது. இந்த சூழலில்தான் தமிழுக்கு பணி செய்வதற்காக சாமிநாதய்யர் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அழிந்து கொண்டிருந்த சுவடிகளை காப்பாற்றி அவற்றை புத்தக வடிவில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். சுவடிகளை தேடி அவர் தமிழ்நாடு முழுவதும். பயணம் மேற்கொண்டார். ரயிலில் ,கட்டைவண்டியில் ,வண்டி செல்ல சாலை வசதியில்லாத இடங்களில் கால் வலிக்க நடந்து சென்று ஊர் ஊராக போய் கண்ணில் பட்டசுவடிகளை எல்லாம் கொண்டு வந்தார். பலர் சுவடிகளை கொடுத்து உதவினார்கள். .பலர் கொடுக்க மறுத்துவிட்டனர். இப்படி அரும்பாடு பட்டுஅவர் சேமித்த சுவடிகளிலிருந்து பல பழைய நூல்களை புத்தக வடிவில் பதிப்பித்தார்.

ஐயர் சேமித்த பல ஆயிரம் சுவடிகள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கிறது. இன்று அரசாங்க உதவியோடு இயங்கும் உ. வே. சாமிநாதய்யர் நூல் நிலையம் சென்னை அடையாறில் செயல்படுகிறது. பழைய நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில்.இன்றும் அந்த நூல்நிலையம் தொடர்ந்து செயல்படுகிறது. .