Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, September 28, 2018

மறதி



கடந்த மாதம் துபாயில் வசிக்கும் என் கல்லூரித் தோழன் ராஜேஷ் ரிச்மண்ட் வந்திருந்தான். ரிச்மண்ட் நண்பர்கள் பலர் அவன் குறித்து அறிந்திருப்பீர்கள். இங்கே ஒரு நாள் தங்கி மற்ற தோழர்களை சந்தித்துவிட்டு வாஷிங்டன் வழியாக ஊர் திரும்ப இருந்தான். அவனுக்கு வாஷிங்டன் நகரத்தை சுற்றிக் காண்பித்துவிட்டு வழியனுப்பி வைக்கலாம் என்று கிளம்பினேன்.

போய்க்கொண்டிருக்கும்போது வாஷிங்டன் அருகில் வசிக்கும் நண்பன் ராஜாஜியின் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது. அதுவும் விமானநிலையம் அருகில் இருக்கும் மருத்துவமனை. ராஜாஜியும் ராஜேஷும் சந்தித்து கால் நூற்றாண்டு ஆகியிருந்தது. கடைசியாக இருவரும் சந்தித்தது ராஜாஜியின் திருமணத்தில்தான். அந்த திருமணத்துக்குக்கூட நானும், ராஜேஷும்தான் பெங்களுரில் இருந்து சென்னை சென்றிருந்தோம். ராஜாஜி மருத்துவமனை பார்க்கிங் லாட்டில் காத்துக் கொண்டிருந்தான். அவனுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு  உள்ளே சென்றோம். அப்பா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருடைய ஞாபக சக்தி மிகவும் குறைந்திருப்பதாகவும், இரவு நர்ஸ்கள் கூட அப்பா கத்தி சண்டை போட இருந்ததாகவும் ராஜாஜி கதை விட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் கற்பனைவளம் கொஞ்சம் அதிகம்.

ராஜாஜியின் அப்பா அறைக்குப் போனோம். அவரைப் பார்த்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆயிற்று. மிகவும் மெலிந்திருந்தார். அறையில் நுழைந்ததும் என்னையும் ராஜேஷையும் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார் அவர். எப்படி இருக்கிறீர்கள் மாமா என்றேன். உன்னைப் பார்த்ததும் எனக்கு பலம் இரண்டு மடங்காகிவிட்டது என்றார் மாமா மகிழ்ச்சியுடன். ராஜேஷை பெயர் சொல்லி அழைக்கிறாரே என்று ராஜாஜியிடம் விசாரித்தேன். நீங்கள் இருவரும் வருகிறீர்கள் என்று சொல்லியிருந்தேன். மற்றபடி அவருக்கு அவனை நினைவில்லை என்றான் ராஜாஜி.

உனக்கு ரெண்டு பசங்கதானே ராஜேஷ், என்றார் மாமா. என்னடா என்றேன் ராஜாஜியிடம். அது எல்லாம் சும்மா அடிச்சி விடறார்டா என்றான்.

கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கோபாலகிருஷ்ணன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார் மாமா. ராஜாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் கொஞ்சம் யோசித்தேன், யாரை சொல்கிறார் என்று. நாங்கள் முழிப்பதைப் பார்த்து அவரே சொன்னார். அந்த காலத்து நினைவுகளை எல்லாம் எவ்வளவு அழகாக எழுதுகிறார், சமீபத்தில் ஏதாவது எழுதினாரா என்றார் மாமா. ஆடிப் போய் விட்டேன். கண்கலங்கி விட்டது எனக்கு.

சேதி என்னவென்றால், ரிச்மண்ட் வலைப்பதிவில் திரு. மு. கோபாலகிருஷ்ணன் எழுதும்போதெல்லாம் அவற்றை நான் மின்னஞ்சலில் மாமாவுக்கு அனுப்பி வந்தேன். இவருக்கு கடைசியாக அவற்றை அனுப்பி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். இவருக்கு மட்டும் அல்ல. தமிழார்வம் கொண்ட என் கல்லூரித் தோழர்கள் தந்தைகள் சிலருக்கும் அனுப்புவது என் வழக்கம். மு.கோ. அவர்கள் அண்மையில் சற்று உடல்நலம் குன்றியிருந்ததாலும், ஓரிரு புத்தகங்கள் எழுதுவதில் மும்முரமாக இருந்ததாலும் அவர் நம் பதிவுக்கு எழுதுவது குறைந்திருந்ததை சொன்னேன். முடியும்போது எழுதச் சொல்லு என்றார் மாமா.

மு.கோ. அவர்களே – யார் படிக்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பீர்களே? பாருங்கள் உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். என்ன ஒன்று – யாரும் பின்னூட்டம் இடுவதில்லை, நேரில் பார்க்கும்போதுதான் விசாரிக்கிறார்கள். ஆகவே முடியும்போதெல்லாம் எழுதுங்கள். அந்த காலத்து அரசியலும், வாழ்க்கை அனுபவங்களும், அந்தப் பார்வையில் இந்த காலத்து அரசியல், அனுபவங்களை அலச உங்களால்தான் முடியும்.
-->

Sunday, June 04, 2017

ஞாயிறு போற்றுதும் - முயற்சி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த 'முயற்சி' என்ற சொல் தொடர்பாக இன்று ஒரு குறிப்பு.

I am trying என்பதை எப்படிச் சொல்வோம்?
முயல்கிறேன் என்பது சரியான பயன்பாடு. முயற்சிக்கிறேன் என்பது? தப்புதாங்க.

பயிற்சி என்பதை சொல்லிப் பாருங்கள். செய்து கொண்டிருக்கும் பயிற்சியை "பயிற்சி செய்கிறேன்" என்றோ, பயில்கிறேன் என்றோதான் சொல்கிறோம். பயிற்சிக்கிறேன், பயிற்சித்தான் என்றெல்லாம் கொத்து பரோட்டா போடுவதில்லை. ஆனால் பாவம், முயற்சி மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டது.

சரி,
முயற்சிக்கிறேன், முயற்சித்தான்/ள்/ர் எல்லாம் தப்புன்னு ஆகிடுச்சு.
ஆனால், யோசிச்சிச்சு பார்த்தால் இந்த மாதிரி சொற்களை நாம எல்லா நேரங்களிலும் தவறாகப் பயன்படுத்துவதில்லை.
"பண்ணி" போட்டு ஒரு மாதிரி சமாளிச்சுடுறோம்.
முயற்சி பண்ணினேன் / முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் /முயற்சி பண்ணுவேன்.
இது ஒரு மாதிரி தவறில்லாத பயன்பாடு. பண்ணியை தொறத்திட்டு "செய்" என்ற கட்டளைச் சொல்லை பயன்படுத்தினால் இன்னும் கொஞ்சம் சரியாகிடும். முழுமையாக இல்லைன்னாலும் just pass-ஆவது செய்திடும்.
முயற்சி செய்தேன் / முயற்சி செய்கிறேன் / முயற்சி செய்வேன்.
ஏன் just-pass என்றால், முயற்சி என்பது பெயர்ச்சொல். முயல் என்பதே வினைச்சொல். ஆனாலும் "முயற்சி செய்வதில்" இலக்கணப் பிழை இல்லாததால் கருணை-பாஸ்.

எழுதும் போது இப்படிச்
​சரியாக ​
எழுதலாம்:
முயன்றேன் / முயல்கிறேன் / முயல்வேன்

கவனிக்க: பெயர்ச்சொல்லில் காலம் அறிய முடியாது. ஆனால் வினைச் சொல்லில் காலம் அறியலாம். அந்த வினை முற்றிற்றா இல்லையா என்பதை அச்சொல் தெரிவிக்கும். (காலமொடு வரூஉம் வினைச்சொல் - (தொ.கா))

சொற்சிக்கனம் கூடுதல் சலுகை/நன்மை.

"பண்ணி" suffixed சொற்கள் எல்லாம் இப்படி கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவையே.

இப்போ என்னென்ன சொற்களை* இப்படி "பண்ணி" வெச்சிருக்கோம்-ன்னு யோசிச்சு பாருங்க.

* இந்த, "திங்க் பண்ணி", "லேட் பண்ணி" எல்லாம் விட்டுடலாம். அதெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.

Thursday, June 01, 2017

ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு இலக்கணக் குறிப்பு


உள்ளுர்க்காரர் ஒருவர் வாரந்தோறும் ஏதாவது ஒரு சிறு தமிழ் இலக்கணக் குறிப்பினை ஒரு உரையாடல் குழுவிற்காக எழுதி வருகிறார். அதை நம் வலைப் பக்கத்திலும் பதியுங்கள் என்று கேட்டிருக்கிறோம். அடி விழாது என்ற உறுதியின் பேரில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். நாங்க எல்லாரும் ரெம்ம்ம்ப நல்லவிங்க பயப்பட வேண்டாம்-ன்னு சொல்லியிருக்கோம். முடிஞ்ச அளவு வன்முறையை தவிர்ப்போம். என்ன, சரியா? :)

ஞாயிறுதோறும் ஒரு குறிப்பினை பார்ப்பதால் (போற்றுவதால்), இளங்கோ அடிகளிடம் இருந்து "ஞாயிறு போற்றுதும்"-ங்கறதை கடன் வாங்கி அந்தத் தலைப்பில் எழுதுகிறார். அதே தலைப்பில் நம் வலைப் பக்கத்திலும் பதியச் சொல்லலாம். படிக்கிறவங்க என்ன கிழமையில படிச்சாலும், புரிஞ்சா சரிதானே?


Saturday, January 18, 2014

மொழிகள்

ஆங்கிலத்தை நாம் வெறுக்கவில்லை...அது நமது வியாபார மொழி...
ஹிந்தியை நாம் வெறுக்கவில்லை...அது நமது தேச மொழி...
தமிழை நாம் காதலிக்கிறோம்...இது நமது தாய் மொழி...
 
- சேகர் வீரப்பன்

Thursday, May 16, 2013

திருக்குறள் கணிணி மென்பொருள் - 2

சமீபத்தில் பதிந்த திருக்குறள் கணிணி மென்பொருள் பதிவின் தொடர்ச்சியாக, சில நண்பர்களின் வேண்டுகோளின் பேரில், சிறிது மேம்படுத்தப்பட்ட மென்பொருளைக்  கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.  மேல் விபரங்களுக்கு, மென்பொருளின்  F1 விசையை அழுத்தினால், தகவல் பெறலாம்.





நம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.


திருக்குறள் கணிணி மென்பொருள் முந்தைய பதிப்பு

http://blog.richmondtamilsangam.org/2013/05/blog-post.html




Monday, May 06, 2013

திருக்குறள் ‍- கணிணி மென்பொருள்

அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு மனித வாழ்விலும் ஏதோ ஒருவகையில் கூடவே வரும் பழம் தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் மிக முக்கியமான படைப்பாகும்.

மனனத்தில் தொடங்கிய கல்வி, எழுத்துக்களாய் உருப்பெற்று, ஏடுகளில் அழுந்தி, தாள்களில் தவழ்ந்து, இன்று மின்னணுவியலில் பயணிக்கும் இக்காலத்தில், என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது !

திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும், வரிசையாகவோ, அல்லது குறிப்பான வரிசை அன்றியோ, சிறு கட்டமைத்த‌ கால அவகாசத்தில் காட்டுவதே இத் திருக்குறள் மென்பொருளின் திட்டம். குறிப்பிட்ட எண் கொண்ட குறள் தேடும் ஆற்றலும் இதில் கண்டு பயன் பெறலாம்.

கீழ்க்கண்ட சுட்டியில், இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் முயற்சித்துப் பாருங்கள்.


671 முதல் 680 குறள்களுக்கான ஆங்கில விளக்கம் கிடைக்கப் பெற‌வில்லை. தகவல் இருந்தால்/அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இம்மென்பொருளின் சில திரைக்காட்சிகள்:

முதல் பக்கம்

குறிப்பிட்ட குறள் எண் தேடல் பக்கம்

அசைவூட்டக் கட்டமைப்புப் பக்கம்


தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்புவோம் !

நன்றி !!

Friday, March 01, 2013

யோகம் பயில்



எளிதான நம் வாழ்வை எவ்வளவு கடினமானதாக‌ ஆக்கியிருக்கிறோம். உற‌வுக‌ள், ந‌ட்புக்க‌ள், உண‌வுக‌ள், செல்வம், பதவி, புகழ், வாழ்க்கை முறை எல்லாவ‌ற்றிலும் கோலோச்சினாலும், அடிப்படையான ஏதோ ஒன்றை இழ‌ந்தே இவ‌ற்றை எல்லாம் பெற்றிருக்கிறோம்.

பொதுவாக‌ இந்திய‌ர்க‌ள் உடல் ந‌ல‌த்தைப் பாதுகாப்ப‌தில்லை என்ப‌து உல‌க‌ளாவிய‌ ஒரு எண்ண‌ம். அகவை நாற்ப‌தைத் தொடுகையில் இது ச‌ற்று மாறக்கூடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக இளம்வயது மார‌டைப்பு ப‌ற்றி செய்தி அறிகையில் ந‌ம‌க்குள்ளும் ஒரு ப‌ட‌ப‌டப்புத் தோன்றுகிறது. 'ஓடு உடற்பயிற்சி நிலையத்திற்கு' என்று கிளம்புகிறது ஒரு கூட்டம். 'உட‌ற்ப‌யிற்சி செய்கிறேன்' என்பது ஒரு பெருமிதத்தைத் தருகிறது நமக்கு. உடலுக்கு செய்யப்படுகிறதோ இல்லையோ, 'ஜிம்' சென்றுவ‌ருகிறேன் என்ப‌து இன்றைய‌ இள‌வ‌ட்ட‌ங்க‌ளின் ம‌த்தியில் அந்தஸ்த்தான சொல் ஆகியிருக்கிறது. நாள் முழுக்க‌ உட‌ற்ப‌யிற்சி செய்யும் ம‌னித‌ர்க‌ளும் இருக்கிறார்கள்.

ஜி.யு.போப் சொன்னால் திருக்குறள் படிக்கிறோம். 'ப்ரெய்ன் யோகா' என அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள் என தோப்புக்கரணம் போடுகிறோம். இதேபோன்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், ஜ‌ப்பானியர்க‌ளும், ஏனைய‌ ம‌ற்ற நாடுக‌ளிலும் செய்ய‌ப்ப‌டுவ‌தால் யோக‌ம் ப‌ற்றியும் தெரிந்து வைத்திருக்கிறோம். செய்கிறோமா, இல்லையா என்ப‌து அடுத்த‌ பிர‌ச்ச‌னை :)

உடல் நலம் பேண, மேற்க‌ண்ட‌வாறு க‌டின‌மான‌ உட‌ற்ப‌யிற்சி தேவையா ?, என்றால், தேவையில்லை என்கிற‌து யோக‌க் க‌லை. "இன்றைய வாழ்வின் கடின உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமே. அதுவும் கடின உடற்பயிற்சியினால் உடலின் உள்ளுறுப்புக்கள் சேதமடைய சாத்தியங்கள் அதிகம். யோகத்தில், உடல் வருத்தாது உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி இருக்கிறது". இதுவும் மேற்க‌த்திய‌ அறிஞ‌ர்க‌ள் சொல்லித் தான் நாம் அறிகிறோம். ந‌ம் நாட்டில் தோன்றிய‌ ப‌ல‌ துற‌விக‌ளும், ஞானிக‌ளும் ப‌ன்னெடுங்கால‌ம் செய்து வ‌ந்த‌ யோக‌த்தை, நாம் செய்யாம‌ல் விட்ட‌தை, இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செய்கின்ற‌ன‌. நாமும் செய்ய‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌ யோசித்தால், விடை சுல‌ப‌மே.

ந‌ம‌க்குத் தேவை நிறைய‌ நேர‌ம். கை, கால்க‌ளை நீட்டி முட‌க்க‌ப் போதுமான‌ இட‌ம், ஒரு வ‌ழுக்காத‌ விரிப்பு, ஒரு குரு. இத‌ற்கும் மேலாக, ம‌ற்ற‌ ச‌ந்தை போல‌வே யோகாவிற்கும் ஒரு பெரிய‌ ச‌ந்தை இருக்கிற‌து. உலக அளவில் யோகா, முப்பது பில்லியன் டாலர் சந்தை என்கிறது இணைய ஆய்வறிக்கைகள்.

மேற்சொன்ன குருவும் (பலருக்கு இணையம்), இடமும், விரிப்பும் நமக்குக் கிடைத்தாலும், பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. க‌டின‌ உட‌ற்ப‌யிற்சி செய்ய‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் செல‌விடுகையில், யோகாவிற்கு ஒரு அரை ம‌ணி நேர‌ம் போதும் ஒரு நாள் ஒன்றுக்கு. 'ம‌ன‌ம் ஒன்றுப‌டாத‌ விஷ‌ய‌ங்களில் புல‌ன்க‌ள் வேலை செய்யாது' என்பது பல பழைய பாடல்களின் வாயிலாக நாம் அறியலாம். அதே போல் யோகாவினுள் சென்று உண‌ராத‌ வ‌ரை ந‌ம் யோக‌த்தின் பெருமையை நாம் அனுப‌விக்க‌ முடியாது.

மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இரண்டும் கலந்தது யோகா. 'மூச்ச நல்லா இழுத்து விடுங்க' என்பாரே மருத்துவர், அதே தான் இங்கு மூச்சுப் பயிற்சி. யோக முறைப்படி கை கால்களை நீட்டி மடக்கியோ, மற்றும் இடுப்பு கழுத்தை வளைத்துத் திருப்பியோ நாம் வெளியில் இருந்து செய்யும் உடற்பயிற்சி, நம் உடலின் உள்ளுறுப்புகளை விரிவடையச் செய்கிறது. உடலின் உள்தசைகளையும் இலகுவாக்குகிறது. இதனால் நம்முள் ஆற்றல் பிறந்து பரினமிக்கிறது. இதுவே அனைத்துலகும் ஏற்றுக் கொண்ட யோகத்தின் அடி நாதம்.

எளிய‌ ப‌யிற்சியாக‌ ஆர‌ம்பித்து, நம்மால் முடிந்த வரை க‌டின‌மான‌ யோக‌ ஆச‌ன நிலைக‌ள் வ‌ரை நம்மால் பயணிக்க முடியும். யோகா பற்றி ஏராளமான செய்திகளும் காணொளிகளும் இணையத்தில் இருக்கின்ற‌ன. நம் முன்னோர் கண்டுபிடித்ததை, நாமும் க‌ண்டு, ப‌டித்து, செய்துண‌ர்ந்து ப‌ய‌ன்பெறுவோம் ! உடல் நலம் காப்போம் !!


Sunday, January 29, 2012

சங்கத் தமிழ் மூன்றும் தா!

மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் கலாசார, மொழி பாரம்பரியங்களை போற்றிக் காப்பது என்னை எப்பொழுதும் வியக்க வைக்கும். இங்கு ரிச்மண்டில் எனக்கு  இலங்கை, மலேசியா, சிங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் கயானா நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என்னை மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள். உதாரணமாக எனது மலேசிய நண்பர் சேகரின் மூலம்தான் 'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும்' என்ற பழமொழியின் அர்த்தம் தெரிந்தது.  ஆமை புகுந்தால் வீட்டுக்கென்ன ஆகும்? அந்த ஆமை வெறும் ஆமையல்ல. பொறாமை!

கயானா நண்பர்களின் வீட்டு பஜனைக் கூட்டத்தில் அவர்கள் வாசித்த டன்டால்  எனும் கருவியின் பிண்ணனியும் சுவாரசியமானது. கரும்புத் தோட்டத்து மாட்டு வண்டியின் அச்சை இசைக்கருவியாக பயன்படுத்தி தங்கள் கலாசாரத்தை காத்திருக்கிறார்கள்.

இன்னும் இது போல பல சொல்லிக் கொண்டு போகலாம். இன்றைய நிகழ்வுக்கு வருகிறேன்.  நேற்று  ஒரு நண்பரின் மகளின் நிச்சயதார்த்தத்துக்கு போய்விட்டு அதற்குப் பிறகு எங்கள் மலேசிய நண்பர்களின் வீட்டுக்குப் போய் ஓய்வாகக் கதை பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் அன்றாடம்  தமிழ் மிகக் குறைவாகப் பேசும் சராசரி இந்தியத் தமிழகக் குடும்பங்கள் போன்ற குடும்பம்தான் இவர்களும் :-).  பேச்சு நமது பழக்கவழக்கங்களில் இருந்து பிரார்த்தனை, பூஜை, பாடல்கள் என்று போய்க் கொண்டிருந்தது. சிறு வயதில் கற்ற இறைவாழ்த்து பாடல்கள் பல இருந்தும் நிறைய மறந்துவிட்டது என்று  இரண்டு மலேசியக் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.  இன்னும் எதெல்லாம் நினைவிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டு இல்லத்தரசி தன் இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

இந்தப் பாடல் சத்தியமாக எனக்குத் தெரியாது.  தமிழகத்தில் வளர்ந்த எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  சற்று இந்தப் பாடலைப் பார்ப்போம். ஔவையின் நல்வழியில் வரும் கடவுள் வாழ்த்து இது.


பிள்ளையாரிடம் முத்தமிழ் அறிவைக் கேட்பது போல் அமைந்திருக்கிறது இப்பாடல். ஆனால் அவருடைய பதிவில் இப்பாடலுக்கு  மேலும் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்கிறார் சுந்தர வடிவேல்.

*நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரது வீடியோவை நீக்கிவிட்டேன்.

Sunday, December 18, 2011

தமிழ்சங்கத்தின் விவாதக் குழுமம்


இந்தத் தலைப்பு சரியா! சரியில்லையா! ன்னு தமிழ் நல்லா தெரிஞ்ச நாகு, மெய்யப்பன், சீனிவாசன், வெங்கட் செட்டியார், சத்யா, நடராஜ மூர்த்தி மற்றும், மு.கோ போன்ற தமிழ் அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.  

சொல்ல வந்த விஷயம் (விடயம் நு எழுதனுமோ!) இதுதான்.  தமிழ் சங்கதின் சார்பில் ஒரு குழுமமா சேர்ந்து சில விஷயங்களைப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் கூட்டம் போட்டு பேசினோம். வெறும கூட்டம் போட்டு பேசரதோட, பல நல்ல புத்தகங்களை கடனா வாங்கிட்டு போய் படிச்சுட்டு அடுத்த கூட்டம் நடக்கும் போது கொண்டு வந்து தரலாம்.  உங்க கிட்ட இருக்கர புத்தகங்களையும் இப்படி கொண்டு வந்து கொடுத்து நம்ப மக்களுக்கு படிக்கர ஆர்வத்தையும், படிக்கர விழிப்புணர்வையையும் கொண்டு வரலாம்.
 

சீனிவாசனின் தொடக்க உரைக்கு அப்புறம் தமிழ் சங்கத்தின் இந்த கூட்டங்கள் நல்லா போகுமா போகாதான்னு தெரிஞ்சுக்க நம்ம வெங்கட் செட்டியார் ‘சந்தேகம்’ ங்கர தலைப்பில் பேசினார்.  வெறும பேசினார்ன்னு சொல்லக் கூடாது, சந்தேகமே இல்லாம, நம்ம எல்லோருக்கும் சந்தேகம்ன்னா என்னன்னு கண்டிப்பா சந்தேகம் வர்ர மாதிரி பேசினார்.  இப்படி பட்டைய கிளப்பி வெங்கட் பேசினதும், சத்யா மாறிவரும் பல மாறுதல்களைப் பற்றிப் பேசி நாம இழந்தை பல விஷங்களைப் சொல்லி நம்மை மறுபடி நம்முடைய பால்ய காலத்துக்கு கொண்டு சென்றார்.  கடைசியா நான் ‘அரசியல்’ ங்கர தலைப்பில பொதுவா அரசியல்ன்னா என்ன, நம்மோட தினசரி வாழ்க்கையில அரசியல் எப்படி இயங்குதுன்னு பேச ஆரம்பிச்சு, 45 நிமிஷம் எல்லோரும் விவாதிச்சதுக்கு அப்புறம் வெறும அரசியல்ன்னா என்னங்கரதுல வந்து நின்னதோட கூட்டம் முடிவுக்கு வந்தது.  தமிழ்த்தாய் வாழ்த்தோட துவங்கிய கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவுக்கு வந்தது. 

கடந்த சனிக்கிழமை (12.17.2011) சங்கத்தின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.  இந்த முறை க்ரெடிட் மதிப்பீட்டு எண் என்பது என்ன அதை எதற்காக பார்க்கிறார்கள் என்பது பற்றி நண்பர் ராஜ்குமார் விவரமாகச் சொன்னார்.  இதுபோல பல அரிய பெரிய விஷங்கள் இவரிடம் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்தான். 

இவரை அடுத்து நண்பர் மெய்யப்பன் (தமிழ் சங்கத்தின் தமிழ் ஆசிரியர்) தமிழுக்கு யார் எதிரி என்று காரசாரமாக பேச வந்தவர் முதல் எதிரிகளாக நாகு, நான் மற்றும் சீனிவாசனை உதாரணமாகக் காட்டினார்.  இவர் சொல்ல வந்த கருத்து தமிழ் நசிந்து வருகிறது, நல்ல எழுத்தாளர்கள் பலர் இருந்தும், படைக்கவும், படைப்புகளைப் பதிப்பிக்கவும் ஆர்வம் இல்லாம இருக்காங்க, தமிழ் நாட்டு கோவில்கள்ள இங்கு தமிழிலும் அர்சனை செய்யப் படுங்கர போர்டை பார்த்தா வெக்கமா இருக்கு, தமிழ் கொஞ்சம் கொஞ்சமா நசிஞ்சு போயிட்டே இருக்குன்னு விலாவரியா பேசினார், இது பல நிஜ தமிழ் ஆர்வலர்களுக்கும்,  நம்ம பலருக்கும்  காலம் காலமாக இருக்கும் ஒரு ஆதங்கம்தான்.  ஆனா அதை இவர் சொன்ன விதம், இவருடைய கவலை, தமிழக அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுபோல் போலியாக இல்லாமல் ஹிருதயத்திலிருந்து வந்த ஒரு கவலைங்கரதை விளக்க வேண்டிய அவசியமில்லை.  இவர் பேச்சை குறுக்கிட்டு என்னை மாதிரி எல்லோரும் பேசினாலும், பேச்சு தங்கு தடையில்லாமல் நல்லா இருந்தது.   

ரஜனியோட டிசம்பர் 12 பிறந்த நாளை கொண்டாடர தமிழக மக்கள், தேசிய கவி பாரதியோட டிசம்பர் 11 பிறந்த நாளை கண்டுக்காம இருக்காங்களேன்னு ரொம்ப வருத்தப் பட்டார் மெய்யப்பன்.  ரஜனி பிறந்த நாள் ஒரு கமர்ஷியல் விஷயம், பாரதி  பிறந்த நாள் நம்மை போல பலருக்கு உணர்வு பூர்வமாண ஒன்னு, இதை பத்தி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லைங்கரது என்னோட கருத்து.  இதைத் தவிர அதிகமா பேசப் பட்ட விஷயம் ப்ளாக்ங்கர விஷயம் வந்ததும், ஒரு சென்சார்ஷிப் இல்லாமல் யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் எழுதலாம்ங்கரது.  நாகுவோட கவலை ஒற்றெழுத்து எப்படி எழுதரதுன்னு கூட ப்ளாகுல எழுதர நிறைய பேருக்குத் தெரியலை, ரவியுடைய கவலை, இப்படி தப்பு தப்பா பலர் எழுதரதுனால கூட பல படிச்சவங்க எழுதரதுல ஆர்வம் காட்டாம இருக்கலாம்.  எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.  தமிழை தப்பு தப்பா எழுதினா தப்பு இல்லை.  தப்பான கருத்தை சரின்னு எழுதினாதான் தப்பு.  (ஹீம் நாடகம், கதைன்னு எழுதும் போது எனக்கு இப்படி ஒரு ஃப்ளோ வரதே இல்லை)

ஒரு சின்ன சிற்றுண்டி இடைவெளி (அதாங்க ஸ்நேக்ஸ் ப்ரேக்) க்கு பிறகு மு.கோபாலகிருஷ்ணன், பேசினார்.  இவர் பேசியதை சுருக்கமா சொல்லனும்னா கூட ஒரு பெரிய கதை மாதிரி சொல்லனும்.  பல விஷயங்களை பளிச்ன்னு சொன்னார்.  மெய்யப்பன் கருத்துகள் பலதை ஆதரிச்சும் சிலதை எதிர்த்தும் பேசினார்.  அந்தக்கால அரசியலில் காமராஜர், முத்துராமலிங்க தேவர் ரெண்டு பேருக்கும் நடுவில இருந்த பல விஷங்களைச் சொன்னார்.  பெரியாரைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு, அவருடைய பல நல்ல எண்ணங்களை பத்தி சொல்லிட்டு அந்தப் பேச்சு அரசியலை நோக்கி போறதை தெரிஞ்சுகிட்டு அதை தவிர்த்துட்டு பேசினார்.  இவர் பேச்சு நல்ல பல கருத்துக்களோட இருந்தது.

எனக்கு இப்படிப் பட்ட கூட்டங்கள் பிடிக்கும், ஏன்னா அடுத்தவங்க கருத்து என்னன்னு தெரிய வரும் அது மட்டும் இல்லாமல், கருத்துப் பகிர்வுங்கரது அருமையான ஒரு விஷயம்.  பேசப் பேச பல விஷயங்களைப் பத்தி ஒரு தெளிவு வரும்.  ஆனா இப்படிப் பட்ட நல்ல கூட்டங்கள் தொடர்ந்து நடக்கரதுக்கு நம்மல மாதிரி பலருடைய ஒத்துழைப்பு அதி முக்கியம்.  பேச தயாரில்லையா,  வேண்டாம், ஆனா, வந்து பங்கெடுத்துக்கலாமே.  அதை செஞ்சா 10-15 இருக்கர இந்தக் கூட்டம், 40-50 ஏன் 100 பேர் கலந்துக்கர கூட்டமா மாறும். 

இன்னிக்கு நம்ம எல்லோருக்கும் இருக்கர ஒரு கவலை, நம்ம நாட்டின் அரசியல் நிலைமை மாறாதா, யார் எதைச் செஞ்சா இது மாறும், அன்னா ஹசாரே காப்பாத்துவாரா, மோடி காப்பாத்துவாரா, எப்படி நாம இதுல பங்கெடுத்துக்கரதுன்னு தினம் தினம் யோசிக்கரோம், அதே யோசனையோட, மாசம் ஒரு தடவை இப்படி கூட்டங்களுக்கு வந்தால், ஊர் கூடி யோசிச்சா ஒரு வழி பிறக்காமலா போகும்.

முரளி இராமச்சந்திரன்

Saturday, October 24, 2009

தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு

ஜெயகாந்தனின் "திருக்குறள் காவ்யா" பதிவு படித்ததும் நம் தமிழ் சங்கங்களை வம்புக்கு இழுக்கலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு கிடைத்த பதில்கள் இங்கு மாதிரிக்கு:

அப்ப தான் எல்லோருக்கும் புரிகிறது.
புரிகின்ற மொழியில் பேசுவது ஒன்றும் தப்பு இல்லை.
தமிழர்களை தவிர மற்றவர்களும் வரலாம் இல்லையா?
நமக்கே தமிழ் ஒன்னும் வர மாட்டேங்குது ?
தமிழ் வளர்ப்பதற்கு ஒன்றும் வர வில்லை.
இதை நான் விமர்சிப்பதற்குள் உங்களின் விமர்சனங்களையும் கேட்க விரும்புகிறேன்.
வேதாந்தி

Thursday, August 27, 2009

ஆபீஸில் தூங்கலாமா?

"சபாபதிக்கு வேறொரு தெய்வம் சமானமாகுமோ" என்ற பாடல் தமிழ்நாட்டில் எல்லா சங்கீத மேடைகளிலும் கேட்கலாம்.

"மீசை நரைத்த தாத்தா உனக்கு ஆசை நரைக்கலையே" என்ற கேலி பாட்டு தெருக்கூத்துகளில் அடிக்கடி ஓலிக்கும். இப்படி சங்கீத மேடையிலும், தெருக்கூத்துகளில் பாடும் பாடல்களையும் எழுதியவர் ஒருவர்தான். அவர்தான் கோபலகிருஷ்ண பாரதி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகளில்தான் இந்த பாடல்கள் இடம் பெற்றன. அவர் எழுதிய பாடல்களையும் மற்ற புராணங்களையும், பாடியும் பேசியும் பிழைப்பு நடத்திய ஏழை பிராமணர் அவர். இரவு உணவு வேளைக்கு பிறகு நடைபெறும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க அந்த காலத்தில் நல்ல கூட்டம் கூடும்.

பிரெஞ்சு காரர்கள் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலுக்கு அருகில், பிரிட்டிஷார் பொறுப்பில் இருந்த தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் கோபலகிருஷ்ண பாரதியின் தொடர்க்கதை பிரசங்கம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. காரைக்காலில் உள்ள french agent அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த 2 குமாஸ்தாக்கள் பாரதியின் பேச்சை இரவு வெகு நேரம் கேட்டுவிட்டு, விடியும் முன்பு காரைக்காலுக்கு திரும்பி போனார்கள்.

மறுநாள் ஆபீஸுக்கு வந்த இரண்டு குமாஸ்தாக்களுக்கும் நல்ல அசதி. வேலை செய்ய முடிய வில்லை. இரவில் கண் விழித்தாலும் நடந்த களைப்பும் அவர்களை கொஞ்சம் கண் மூட செய்து விட்டது. கொஞ்சம் என்ன, நல்ல தூக்கம்தான் !! அந்த சமயம் பார்த்து பிரெஞ்சு அரசாங்க அதிகாரி ( மாவட்ட கலெக்டருக்கு சமமானவர்) ஆபீஸுக்கு வந்து விட்டார். தூங்கி கொண்டு இருந்தவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குமாஸ்தாவை அனுப்பி அந்த இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வரச் செய்தார். கையை கட்டி கொண்டு நடுங்கியபடி நின்றார்கள். அதிகாரியினுடைய மிரட்டலை கண்டு, பயந்து, இரவில் கதை கேட்க போனதையும் தூக்கம் இல்லாமல் சில மைல் தூரம் நடந்து வந்த அசதியில் தூங்கி விட்டதாக உண்மையை சொன்னார்கள். "யார் கதை சொன்னார்" என்று அதிகாரி கேட்டார். கோபலகிருஷ்ண பாரதி என்று பதில் அளித்தார்கள்.

அவ்வளவுதான்.

அதிகாரியின் முகத்தில் இப்பொழுது கோபம் போயி ஆச்சரியம். "காசே" என்ற அந்த அதிகாரி கோபலகிருஷ்ண பாரதியை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும். அதுமட்டும் அல்ல அவருக்கு தமிழ் மொழி மீது பற்றும் உண்டு.

பாரதியின் கதை சொல்லும் திறமை பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும், தானும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க வேண்டும் என்று சொன்னார்.

கதை பிரசங்கம் நடக்கும் இடம் மற்ற விவரங்களை கேட்டறிந்தார். பாரதியின் கதை நிகழ்ச்சி தொடர்ந்து சில நாட்களுக்கு அங்கே நடக்கும் என்ற விவரங்களையும் அதிகாரியிடம் அவர்கள் சொன்னார்கள். மறுநாள் இரவு அந்த இரண்டு குமாஸ்தாக்களோடும் வேறு சில பாதுகாப்போடும் அந்த அதிகாரி இரவு நேர இருட்டில் தன்னை மறைத்துக்கொள்ளும் அளவுக்கு வேஷம் போட்டு, பாரதியின் கதை நிகழ்ச்சி நடக்கும் கிராமத்துக்கு சென்றார். வெகு தூரத்தில் நின்று நிகழ்ச்சியை கேட்டு விட்டு காரைக்காலுக்கு இரவிலேயே திரும்பினார். பிரெஞ்சு அதிகாரி ஆன அவர் பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்குள் நுழைவது பற்றி  தயக்கம் இருந்ததால் தன்னை அப்படி மறைத்து கொண்டார்.

சில நாட்களுக்கு பிறகு கோபலகிருஷ்ண பாரதியை காரைக்காலுக்கு வரவழைத்து அவர் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் பற்றி மேலும் விவரங்கள் கேட்டறிந்தார் அந்த பிரெஞ்சு அதிகாரி. அந்த காலத்தில் புத்தகங்களை அச்சிடுவது மிகுந்த செலவு பிடிக்கும் ஒரு விஷயம். ஆகையால் பாரதி தன்னுடைய நூல்களை ஓலைச் சுவடியில்தான் எழுதி வைத்திருந்தார்.

நந்தனார் சரித்திர கீர்த்தனையை புத்தகமாக வெளியிடலாமே என்று அந்த அதிகாரி கேட்டார். தன்னுடைய வறுமை நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்று பாரதி கூறினார். சில மாதங்களுக்கு பிறகு அந்த பிரெஞ்சு அதிகாரி காசே கொடுத்த நிதி உதவியைக்கொண்டு நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் புத்தகமாக வெளிவந்தது.

இப்பொழுது சொல்லுங்கள். ஆபீஸில் தூங்கினால் நல்லதா? கேட்டதா?

எப்படியோ!! இரண்டு பேர் தூங்கியதால் தமிழுக்கு ஒரு நல்லது நடந்தது.

மு. கோபாலகிருஷ்ணன்
(அரவிந்தின் தந்தை)