Showing posts with label பிரயாணம். Show all posts
Showing posts with label பிரயாணம். Show all posts

Tuesday, May 23, 2017

மீனாவுடன் மிக்சர் 29 - {ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 3}

முதல் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 1
இரண்டாம் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 2 

இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்ப்பு கூடம், அமெரிக்கா

நாற்காலியில் அமர்ந்திருப்போர் - பாஞ்சாலி, மீனா சங்கரன், மீனாவின் தாயார் "அம்புஜம்", MLA அராஜகசத்ரு மற்றும் குஞ்சம்மா.

திருவள்ளுவர் சற்று கோபமாக தேர்வு அறையிலிருந்து திரும்பி வந்து வரவேற்ப்பறையில் மீண்டும் அமர்கிறார்.  

Translator: அம்மா அம்புஜம், உங்களை நேர்முகத் தேர்வுக்கு அய்யா உள்ளே கூப்பிடறாங்க.  என்னோட இப்படி சீக்கிரம் வாங்கம்மா!  (வேகமாக உள்ளே செல்ல திரும்புகிறார்).

அம்புஜம்: தம்பி எனக்கும் துள்ளி குதிச்சு வேகமா உங்களோட வர ஆசை தான் ஆனால்  பாருங்க என் கால் முட்டிக்கு அது புரியலையே!  (நாற்காலியை பிடித்து கொண்டு மெதுவாக எழுந்திருக்கிறார்).  

ஏம்மா பாஞ்சாலி நான் தேர்வு முடிஞ்சு வெளியே வர கொஞ்சம் நேரமாகும்.  எனக்கு  அவா கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கு.  அதனால நீ வேணா போய் அதுக்குள்ள உன் தலைல தடவியிருக்கிற  வெந்தயத்தை அலசிண்டு வந்துடறையா?  ஏற்கனவே இந்தியர்கள்னா இவாளுக்கு இளப்பம்னு பேசிக்கறா, நீ பாட்டுக்கு தலைல ஏதோ ஒழுக தேர்வுக்கு  போனா, நன்னாவா இருக்கும்? அதான் சொல்லறேன்.  

மீனா சங்கரன்:  அம்மா,  உனக்கு இது  இப்ப ரொம்ப அவசியமா?  போய் நல்லபடியா தேர்வை முடிச்சு அமெரிக்க பிரஜையாகி திரும்பி வா, சரியா?  ஆல் தி பெஸ்ட் அம்மா.  

அம்புஜம்:  டோன்ட் வொர்ரி மீனா.  நான் தான் ரெண்டு நாளா வெங்கடாசலபதியை வேரோட பிடிங்கியிருக்கேனே.  அதோட பாதாம் கீர் வேற நைவேத்தியம் பண்ணறேன்னு வேண்டிண்டு இருக்கேன். அந்த பகவான் நிச்சயமா என்னை கை விட மாட்டான்.  நான் இதோ போயிட்டு வந்துடறேன்.

(மொழிபெயர்ப்பாளரின் பின்னால் அம்புஜம் தேர்வறைக்கு செல்கிறார்)

Immigration Officer:  Please have a seat Mrs. Ambujam.  Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today? 

Translator:  தயவு செய்து உட்காரவும் திருமதி அம்புஜம்.  உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர இன்று வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?

அம்புஜம்;  சூளுரைக்கறது ஒண்ணும் பிரச்சனை இல்லை தம்பி.  ஆனா வலது கையை அவ்வளவு நேரம் தூக்கி பிடிக்கறது தான் கஷ்டம்.  ஏன்னா கொஞ்ச வருஷமா வலது தோள்பட்டை ல வாதம் இருக்கு.  நானும் எத்தனையோ எண்ணை தடவிப்பாத்துட்டேன்.  ஒண்ணும் கேக்க மாட்டேங்கறது.   உங்க ஆபீசர் கொஞ்சம்ட் adjust பண்ணிண்டா நான் வலது கை சுண்டு விரலை வேணா இப்படி தூக்கிப் பிடிக்கவா?  

(looking at the Translator) தம்பி ஐயாவுக்கு புரியறா மாதிரி  எடுத்து சொல்லுப்பா.  அவர் பாட்டுக்கு நான் சூ சூ போகணும்னு சொல்லறேன்னு தப்பா நினைக்க போறார்.  அடடே என்ன இப்படி பேந்த பேந்த முழிக்கிறார்!  No going one bathroom sir, just taking oath sir.

Translator:  I have no problems.....(Immigration officer interrupted)

Immigration Officer:  Never mind the translation.  I understood that.  Forget the oath part.  Let us begin the interview right away.

Translator:  அம்மா உங்க சுண்டு விரலை கீழே  போட்டுடுங்க.  அய்யா இப்போ தேர்வை தொடங்க போறாரு. 

Immigration Officer: Let us begin with the civics quiz.  

Ambujam: மொழி பெயர்ப்பு தம்பி, நீங்க சிரமப்படாதீங்க.  I talk good English. I will be ok.  நீங்க  பேசாம ரெஸ்ட்  எடுங்க.  

Question 1:  How many US senators are there Mrs. Ambujam? 

Ambujam:  100 senators but I have one question  sir.  Why US needs 100 senators?  Waste of money, isn't it?  இதை தான் காசை கரியாக்கரதுன்னு எங்க ஊர்ல சொல்லுவோம் sir. 

Officer:  Never mind that Mrs. Ambujam.  Let's try a different question - What does the Constitution do?

Ambujam: (தனக்குள்ளே)  என்னதிது?  Constipation பத்தியெல்லாம் இங்க கேக்கறா?  சரி, சாருக்கு வயறு உபாதை  போல இருக்கு. நமக்கு தெரிஞ்ச நாலு வைத்தியத்தை சொல்லுவோமே!

ஒண்ணும் கவலை படாதீங்க சார்.  If you follow my instructions, you will feel better in no time sir.  (Takes a ziploc snack bag from her purse).  Try taking a quarter spoon of this 'அங்காயப்பொடி' with buttermilk for 3 days and life will be smooth again sir.  This powder is magic, I tell you.  I made it myself.  (beams in pride)

Officer (shouts in exasperation):  CONSTITUTION Mrs. Ambujam, not Constipation!  

Ambujam: அடடா எதுக்கு இந்த கத்து கத்தறார்?  Do you have blood pressure sir?  You should see a doctor soon.  Health is wealth, you know.  Look at me.  I am 75 years old and I have no pressure problems at all.  Only people around me have blood pressure sir.  Never me.  (shakes head in pity)

Officer:  That does not surprise me Mrs. Ambujam.  Let's try a different approach here.  What can you do to make this country better if you are a citizen?  Will you make a positive contribution to this nation if you are a citizen?

Translator: அம்மா உங்களை பிரஜை ஆக்கினா, இந்த நாட்டுக்கு ஏதாவது உருப்படியா பண்ணுவீங்களான்னு  ஐயா கேக்கறார்.  

Ambujam: யாரை பார்த்து என்ன கேள்வி கேக்கறாரு?  நல்லா எடுத்து சொல்லுங்க உங்க அய்யாவுக்கு.  உப்பு காரமா வடாம் வத்தல் போட இந்த அம்புஜத்தை மிஞ்ச இன்னும் ஒருத்தர் பொறந்து தான் வரணும்னு. அப்புறம் உங்க ஊரு Burger King la onion rings அப்படீன்னு சொல்லி ரொம்பவே சுமாரா ஒரு பஜ்ஜி போடறாங்களே.  அவங்களுக்கு ஒரு சமையல் பயிற்சி கொடுக்க பிளான் வச்சிருக்கேன்.  இந்த நாடே என் பஜ்ஜி சுவையில மயங்கர நாள் ரொம்ப தூரத்துல இல்லைன்னு அவர்கிட்ட சொல்லுங்க தம்பி. 

Translator: Sir, this woman, apparently, is an expert chef and says that she has plans to revitalize the way this country makes food.

Officer:  Oh really?  That is as good a contribution as any.  Alright Mrs. Ambujam.  Congratulations, you have passed your citizenship test.

Ambujam: Thank you sir.  I knew offering பாதாம் கீர் as நெய்வேத்தியம் was a very good idea sir. (smiles widely)

Officer: Huh?? Never mind.  (to the translatorr) Please show Mrs. Ambujam out and bring Mr. Arajagasathru in for his test.
.
(தொடரும்)

- மீனா சங்கரன்


Saturday, June 20, 2009

அப்பாக்கள் தினம்

அப்பாவின் பேச்சுக்கள் எல்லாம் அனத்தல் என்று தான் தெரியும் ஆனால் அது அவரது ஏக்கம் என்று யாருக்கும் புரியாது. இன்றைக்கு அப்பாக்கள் தினம். எல்லோருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் அவர்களது பெற்றோர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தான். அப்பாக்கள் தினத்தன்று உன் அப்பாவிற்கு எதாவது செய் என்று கூறினேன். அவனோ என்னை ஒரு வித்தியாசமாக பார்த்தான். அது எல்லாம் அமெரிக்கர்களுக்கு தான் பொருந்தும் நமக்கு ஒன்றும் இல்லை.
நானும் யோசித்தேன், நாம் அப்பாவிற்கு சிறப்பாக என்ன செய்தோம் என்று. பணம் அனுப்புவதைத தவிர அவருடைய அன்றாட தேவைகளைப் பற்றி நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நண்பர்களே இந்த நாளில் ஒரு வாழ்த்து சொன்னால் கண்டிப்பாக அவரின் மனம் குளிரும். இதில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என்று பேதம் பார்க்க வேண்டாம்.
இந்த உண்மை நிகழ்ச்சியை கேட்டால் நீங்கள் அப்பாவின் அனத்தலை புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். ஆனால் வந்த இரண்டாவது மாதமே மிக சோகமாக இருந்தான். காரணம் கேட்ட போது அவன் தந்தை தவறி விட்டார் என்று தெரிய வந்தது. அவனை ஆறுதல் தேற்ற எப்படி இறந்தார் என்று கேட்க அவன் குமுறி குமுறி அழுக ஆரம்பித்து விட்டான். இறுதியில் அவன் அமெரிக்கா வந்ததால் தான் இறந்து விட்டார் என்றான். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. மகன் அமெரிக்கா வந்தால் அப்பாக்கள் சந்தோசம் தானே படுவார்கள். இவனோ இப்படி சொல்லுகிறான் என்று குழ்ப்பம்.
மீண்டும் அவனை விசாரித்தேன்.
நீண்ட நாள் முயற்சியில் ஒரு நாள் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் மிக்க சந்தோசம். பையன் முதன் முதலாக வெளிநாடு செல்லுகிறான் என்று பெருமிதம். அவனுக்கும் அது தான் முதல் பயணம். வீட்டை விட்டு வெளியில் செல்லாத ஒருவனுக்கு விமானம் ஏறி வெளிநாடு செல்லப்போகிறான், அவன் அப்பாவிற்கு ஒரு வித பயம் கலந்த சந்தோசம். பயத்தை வெளிக்காட்டாமல் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மிக்க ஆர்வமாயிருந்தார். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். அவனுடன் அவன் அப்பாவும் வழியனுப்ப சென்னை வந்தார். விமான நிலையத்திற்கு மிக முன்னதாகவே வந்து விட்டார்கள். டிக்கெட்டை செக் இன் பண்ணும் போது அதிகாரிகள் அன்று பயணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். அவனுக்கோ தலை சுற்றியது. கரணம் விசாரித்தால் டிக்கெட் ரீ கன்பர்ம் பண்ண வில்லை என்று சொல்லி விட்டனர், மேலும் 48 மணி நேரம் கழித்து தான் பயணம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர்.
அவனும் அவனது தந்தையும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வழியாக அதிகாரிகள் நண்பனுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இவனும் அப்பாவை ஊருக்கு போக சொல்லி விட்டு இரு நாட்கள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரத்தில் அவனுடைய அப்பாவிற்கு இதய வலி. காரணம் அவன் முதற் பயணம் தடை பட்டு விட்ட கவலையிலும், மகனை பிரிந்த கவலையிலும் இதய வலி வந்து விட்டது. அது நாளடைவில் அவரை நிரந்தரமாக பிரித்து விட்டது.
ஒரு வேளை நண்பன் இங்கு வராமல் இருந்தால் அவனது தந்தை உயிரோடு இருந்திருப்பாரோ?

வேதாந்தி

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

Thursday, June 11, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஐந்து)

பயணத்துக்கு தயார்

உஸ்ஸ்ஸ் அப்பாடா....

ஒரு வழியாக ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுது. பாக்கிங்கும் ஒரு 99% முடிஞ்சாச்சு. இனிமே போர்டர் வேல பாக்க கொஞ்சம் பளு தூக்கி தயார் பண்ணிக்கணும். Immigration check, customs, security check எல்லாம் நினைத்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.

இதுல என்ன விசேஷம்னா, எங்களோட ஒரு சபதம் நிறைவேறும் போல இருக்கு. ஆனா இன்னும் இங்கிருந்து கிளம்புகிற வரையில் நிச்சயம் இல்லை. அதனால் மார் தட்டி கொள்ள கொஞ்சம் பயமாக இருக்குகிறது. கட்டயில குட்ட (knock on wood). பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்ற சபதத்தில் படு தோல்வி ஒப்பு கொள்கிறோம். பெட்டிகளில் ஒன்று, சிறியதாக அமைந்து விட்டது. 16.67% வெற்றி பெற்றோம். பெட்டிகளின் எடை, அதிலும் தோல்வியே. கையில் எடுத்து செல்லும் பெட்டிகளில் மட்டும் சற்று நம்பிக்கை வைத்திருக்கிறோம். பாப்போம்.

ரிச்மண்டிலிரிந்து பல குடும்பங்கள் சேர்ந்து, உடன் பயணம் செய்யபோகிறோம். மீனா நினைவு கூர்ந்த வாஷிங்டனில் திருமணத்திற்கு சென்னையிலிருந்து வண்டி பூட்டின கல்யாண குழு போல, சென்னையில் நடக்க விருக்கும் திருமணத்திற்கு நம்ம ஊர்லேந்து ஒரு பெரிய குழு போவது போல் ஒரு உணர்வு. அந்த விதத்தில் இந்த பிரயாணத்தை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

நாராயணன்

இனி வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.


Monday, June 01, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (இரண்டாம் பாகம்)


டிக்கெட் வாங்கும் படலம்:


இந்திய போவதென்பது உறுதி ஆகிவிட்ட நிலையில் அடுத்து வரும் தலை வலி, பயண டிக்கெட் வாங்குவது. இதிலென்ன சார் பெரிய கஷ்டம் இருக்க முடியும்னு நீங்க நினைக்கலாம். அது அவ்வளவு சுலபமா என்ன? எங்கள் வீட்டில் என்றுமே இது எளிதில் சாதித்த ஒரு விஷயம் அல்ல.


பயணம் செய்யும் தேதி ஓரளவிற்கு யூகம் வந்த உடன், எங்களுக்கு தெரிந்த டிராவல் எஜன்ட் நம்பர் எல்லாம் தூசு தட்டி எடுத்து ஒரு பட்டியல் போட்டோம். எமக்கு தெரிந்தவர்களுக்கு தெரிந்த ஏஜன்ட் நம்பர்களையும் அதில் சேர்த்து ஒவ்வொரு ஏஜண்டாக கூப்பிட்டு எல்லோரிடமும் எங்களுடைய பயண திட்டத்தை அறிவித்து டிக்கெட் தேடும் பணியை அவர்களுக்கு குடுத்தோம். அனால் குழ்ப்பம் என்னவென்றால் ஒவ்வொரு ஏஜண்டும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். தலையே சுற்றுகிறது.


ஒரு வழியாக முடிவுக்கு வந்து டிக்கெட் வாங்கியதும் இந்த தலை வலி முடிந்தது என்கிறீர்களா? இல்லை. இப்போ தான் நமக்கு தெரிந்தவர்கள் பலர் அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ கிடைத்த விலையை சொல்லி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவர்.


போனால் போகட்டும் போடா என்ற பாடலை நினைவிற்கு கொண்டு வந்து தேர்த்திக்கொள்ள வேண்டியது தான்.


இந்தியாவிலே இருக்கும் உறவினர் எல்லோருக்கும் நமது பயணத்தை பற்றிய விவரங்கள் அறிவித்த உடன் அதோட நிற்காமல் அவர்களுக்கு இங்கிருந்து வாங்கி வர வேண்டிய பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதன் பட்டியல் போட்டு அனுப்ப சொல்கிறோம்.


ஆஹா..இப்போ தான் காமெடி ஆரம்பம்.


மேலும் அடுத்த பாகத்தில்...

நாராயணன்


Saturday, May 30, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (தொடர் - முதல் பாகம்)

ஒவ்வொரு முறையும் இந்தியா போகலாம்னு ஒரு யோசனை வந்த ஒடனே மட மடன்னு சில எண்ணங்கள் விரைந்தோடி வருகிறது. சென்ற முறை இங்கு வந்திறங்கியதும் எடுத்த சில சபதங்கள் நினைவிற்கு வருகின்றது. நம்முள் சிலர்/பலர் எங்களின் இதே ஆதங்கங்களை அனுபவத்திருக்க கூடும். மறுமொழிகளின் மூலம் பகிர்ந்து கொள்ளவும்.

1. அடுத்த முறையாவது குறைந்த பட்ச எண்ணிக்கை(அவசிய பட்ட அளவு) பெட்டிகளை எடுத்து செல்ல வேண்டும். ஏன் தான் இப்படி முக்கி மொணகி எடுத்து செல்கின்றோமோ?

2. அடுத்த முறை இந்தியாவிலேயே கிடைக்கின்ற சாமான்களை அள்ளி செல்வதை தவிர்த்தால் இதை நம்மால் சாதிக்க முடியுமே.

3. இரோப்பாவில் நாம் சற்று நேரத்திற்காக (transit) வந்திறங்கும் விமான தளங்களில் ஒரு மூலயிலிரிந்து இன்னொரு மூலைக்கு நாம் கையில் எடுத்து செல்லும் பெட்டிகளை (hand luggage) மூச்சு திணற திணற இழுத்து செல்லும் அவலம் எண்ணியாதும் இனிமேலாவது இந்த எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று எடுத்த சபதம்.

4. அடுத்த முறையாவது எடுத்து செல்லும் பேட்டிகள் அனைத்தும் சற்று சிறியதாக இருக்கட்டும். சென்ற முறை பயணத்தில் அடிபட்ட/இடிபட்ட சில பெட்டிகளுக்கு  ஒய்வு குடுத்து வாகும் பெட்டிகளை சற்றே சிறியதாக வாங்க வேண்டும் என்ற கனவு/நினவு.




5. இம்முறையாவது நிறைய சுற்றுலா இடங்களை பார்க்கவேண்டும்.

6. முடிந்த வரை எல்லா விதமான மாம்பழங்களும் ஆசை தீருமளவிர்ற்கு தின்று மகிழவேண்டும்.


7. எல்லா உறவினர்களையும் கண்டு அவர்களுடன் சிறிது நேரமாவது பொழுது கழிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு அந்த உறவுகளையெல்லாம் உணர்வு படுத்தவேண்டும்.

8. சிறு வயதில் நம்முடன் விளையாடிய, பள்ளிக்கு சென்ற நண்பர்களை எல்லாம் சந்திக்க வேண்டும்.

9. நிறைய இசை நிகழ்ச்சிகளுக்கும், சினிமா படங்களுக்கும் சென்று மகிழ வேண்டும்.

10. இதுபோல் பல பல

இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம்  குறிப்பிடத்தக்கது என்னவென்றால் , எமது பயணங்களின் நடுவே யாரெல்லாம் இந்திய செல்வதாக அறிவித்திருக்கிரார்களோ அவர்களுக்கெல்லாம் எங்களுடைய மேல் குறித்திருக்கும் ஞான திருஷ்டியை போதனை வடிவில் குடுத்திருக்கிறோம் (அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும்).

இந்த எண்ணங்களையெல்லாம் நினவு கூர்ந்து இம்முறை முடியுமா என்ற கேள்விக்கு இனி வரும் பாகங்களில் பதில் சொல்கிறேன். ஒரு யூகம் வந்திருக்கும் உங்களுக்கு. இருந்தாலும் பொறுத்திருங்கள், பதில் அறிய.

இனிவரும் பாகங்கள்:

இரண்டாம் பாகம்: டிக்கெட் வாங்கும் படலம்/அவலம்
மூன்றாம் பாகம்: பயண நாள் நெருங்குகின்றது (ஒரு மாசமே உள்ளது)
நான்காம் பாகம்: பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார். (இரண்டே நாட்கள் உள்ளன)

பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

நாராயணன்

Monday, September 01, 2008

சென்னை

சென்னை விஜயத்தின்போது எடுத்த படங்களில் இரண்டு...

கூகுள் மட்டும்தான் அவர்களுடைய விஷயங்களை பீடா டெஸ்ட் என்ற பெயரில் வெள்ளோட்டம்  விடமுடியுமா என்ன? நாங்கள் செய்ய முடியாதா என்கிறார் இவர்.



இவர் கடன் கொடுக்க மாட்டாராம். ஆனால் நம்மை எப்படியாவது கடனாளியாக்க மட்டும் தயார்!

Tuesday, August 12, 2008

சென்னை

  1. சென்னை!

எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது சென்னை! செல்போன்(மன்னிக்கவும் - அலைபேசி) எங்கெங்கும் வியாபித்திருக்கிறது. வீட்டு வேலைக்காரி கையில், கோயிலில் பெருக்கும் ஆயா கையில், திருவண்ணாமலையில் தாலி கட்டி முடித்தவுடன் மணமகன் கையில்... இவ்வளவு நாள் ஒரு போன் இணைப்புக்கே அல்லாடியவர்கள் ஒரு கொலைவெறியுடன் தழுவியிருக்கும் சாதனம் அலைபேசி. அப்பாவின் முகவரிப் புத்தகத்தில் முகவரிகள் எல்லாம் போய் ஒரே போன் நம்பர்களாகத்தான் இருக்கின்றன. போனில் இதுவரை பதில் மட்டுமே பேசிவந்த அம்மா சித்தியின் செல்போன், வீட்டு போன் எல்லாவற்றையும் நினைவிலிருந்தே போடுவதை பார்த்து அசந்து விட்டேன்.

செல்போனிலேயே வினாடிகளில் உங்கள் அக்கவுண்டை டாப்- அப் செய்து விடுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுக்காதீர்கள். குறுஞ்செய்தி வந்து குவிந்து விடும். அண்ணன் மகன் தினத்துக்கு நூறு செய்திகளுக்கு மேல் அனுப்புகிறான். இரவு பனிரெண்டு மணிக்கு என்ன செய்கிறாய் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்று இன்னொரு அண்ணன் மகள் புகார் செய்தாள். இன்னொரு அண்ணன் மகன் இவன் செய்திகளுக்கு பயந்து எண்ணையே மாற்றிவிட்டான். இன்னொரு அண்ணன் மகன் இன்னும் செல்போன் பாவிக்கும் வயதுக்கு வரவில்லை. அவன் என்ன செய்யப் போகிறானோ? என்னிடம் முறைத்துக் கொள்பவர்களின் அலைபேசி எண்களை அவனுக்கு கொடுப்பதாக உத்தேசம்.

அண்ணன் சுஜாதா அஞ்சலி வந்த பத்திரிக்கைகளை சேர்த்து வைத்திருந்தான். சதங்காவின் கவனத்திற்கு - ராமகிருஷ்ணன் மூன்று பக்கத்துக்கு மேல் அஞ்சலி எழுதியிருக்கிறார்.

இவ்வளவு நாள் அமெரிக்காவில் இருந்து வந்து பொருட்களின் விலையைப் பார்த்து 'ஆ ஸம்' என்று வாங்கி குவித்தவர்கள், இப்போது நாற்பதால் வகுத்து பார்த்துவிட்டு அம்மாடி என்று ஓடுகிறார்கள். சரவணா, நெல்லி, சென்னை சில்க்ஸில் வாடிக்கையாளர்களை விட பணியாளர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். எது எதற்கோ ஆடி தள்ளுபடி. ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுத் தம்பதிகள் SMS செய்துகொள்ள ஆடி அட்டகாச தள்ளுபடி!

திருமண மேடையில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள், மணமக்கள், புரோகிதர் தவிர மற்ற அனைவரும் செருப்பணிந்து இருக்கிறார்கள்.

சென்ற மறுதினம் மதிமுகவின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது சேலையூரில். ஓபாமாவுடன் வைகோவின் படம் பெரிய பேனரில்.

ஒரு பேச்சில்: அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஓபாமாவை சந்தித்து கை குலுக்கி, கட்டித் தழுவி முத்தமிட்ட முதல் தமிழன் என்று எங்கோ போய்விட்டது பேச்சு. ஓபாமாவும் வைகோவும் கேட்டிருந்தால் நெளிந்திருப்பார்கள்... குடியரசுக் கட்சியினருக்கு இந்த பேச்சு போயிருந்தால் வரும் தேர்தலில் ஓபாமாவுக்கு எதிராக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. என்னை அசர வைத்த இன்னொரு பேனர் பாண்டிச்சேரியில்.

எந்த பேனரிலும் இவர் பெயரே கிடையாது. புதுவையின் காமராஜர் என்று ஆரம்பித்து ஒரே அடைமொழிதான். அவ்வளவு பிரபலமா என்று வியந்தேன். புதுவை முழுவதும் இவர் பிறந்தநாள் பேனர்தான். சில பேனர்களில் இவர் அமர்ந்திருக்க பக்கத்தில் சிங்கம், புலியெல்லாம். நிறைய பேனர்களில் அந்த வட்டார கட்சி பிரமுகர்கள் அனைவர் முகமும் போட்டு ஒரே அட்டகாசம். எந்த காங்கிரஸ் முதல்வர் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறார்? அதனால்தான் போலிருக்கிறது காங்கிரஸின் தேசிய விளையாட்டான உட்கட்சி பூசல் அதிகமாகி இப்போது டெல்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நீங்கள் இதை படிக்கும்போது முதல்வராக இருக்கிறாரா என்று பார்ப்போம்.

எல்லா கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங்தான். ஒரு மளிகை கடையில் சில பொருட்கள் வாங்கிவிட்டு பில்லைப் பார்த்தால் அதில் ஒரு வஸ்து: Burpy. என் மகன் சிரி சிரி என்று சிரித்தான். அது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? பெட்ரோல் பங்குகள், பண்ருட்டி மளிகைக் கடைகள், ரிலையன்ஸ் ப்ரஷ் என எங்கிலும் பெண்கள்தான். இந்திய ராணுவத்திலும் பெண்களைச் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களாம்.திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் பெண் தேடி அல்லாடுகிறார்கள்.

எஃப் எம் ரேடியோ தமிழ் கலக்குகிறது. அதாவது நம் பித்தன் என் பேச்சை சொன்னமாதிரி, ஆங்கிலத்தில் கொஞ்சூண்டே கொஞ்சூண்டு தமிழ் கலந்து பேசுகிறார்கள். சில DJகள் குரலைக் கேட்டால் நம்ப ஊர் லாவண்யா ராம்கி போலவும், பார்கவி கணேஷ் மாதிரியும் இருக்கிறது. ரிச்மண்டில் எஃப் எம் ரேடியோ ஆரம்பிக்கவிருக்கிறவர்கள் கவனிக்கவும். இதைவிட மோசம் மெகாசீரியல் தமிழ். பார்ப்பவர்கள் அனைவருக்கும் மூளை வளர்ச்சி குறைவு போல மெதுவாகப் பேசுகிறார்கள். பிற்காலத்தில் ஒரு ஆராய்ச்சி பண்ணி இதனால் தமிழர்களின் மூளை அவ்வளவு விரைவாக வேலை செய்யாது என்று டாக்டரேட் செய்யாமல் இருந்தால் சரி.

குசேலன் படப் போஸ்டரில் ஒன்றிலும் அந்தப் படத்தின் கதாநாயகனைக் காணமுடியவில்லை. பாவம் பசுபதி! அனைவர் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கிறது. நாம்தான் இங்கே நின்டென்டோ விற்கும் சாதனங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். சென்னையில் கம்ப்யூட்டரில் gameboy advance, DS எமுலேடர் புரோகிராம் வைத்து அந்த விளையாட்டுகளை பைசா செலவு இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

போக்குவரத்து மிக மிக அதிகமாயிருக்கிறது. சாலையில் சென்றால் எண்திசைகளிலிருந்தும் வருவதால், ஜாக்கிரதையாக ஓட்ட தும்பி மாதிரி கூட்டுக்கண்தான் வேண்டும். இன்னும் மேலே கீழே இருந்துதான் போக்குவரத்து வரவில்லை. அடுத்த முறை அதுவும் வந்துவிடும். நண்பனின் மாமனார் அவருடைய காரை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். நான் எடுத்துக் கொண்டு போனால் அவர் காரை திரும்ப 'எடுத்துக் கொண்டுதான்' வரவேண்டும் என்று மறுத்துவிட்டேன். டாடாவின் நேனோ வராமலே இந்த கதி! நானோ வந்துவிட்டால் உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் புஷ் நானோவை காரணமாக சொல்லுமளவுக்கு பிரச்னை வரப் போகிறது....


இனி உங்களுக்கு சில கேள்விகள்....

1. இது என்ன பூ?




2. இது எந்த மலைக்கோட்டை?


3. இந்த மலைக்கோட்டை?

4. இந்த மலை அடையாளம் தெரிகிறதா? - மேலே கோயிலோ கோட்டையோ கிடையாது....



5. கீழ்காணும் அமைப்பு என்ன? படத்தை பெரிதாக்கிப் பார்க்காமல் சொல்லவும் :-)


பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோயில் சுவற்றில் இருக்கும் சித்திரம்.
சிலோத்துமத்தில் சிலோத்துமம் மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது முற்றினால் மருந்து கிடையாது. (கிளிக் செய்து பெரிய படத்தில் பார்க்கவும்).

6. கடைசி கேள்வி - எனக்கு எத்தனை அண்ணன்மார்? :-)

தொடரும்...