Saturday, October 31, 2009

படம் பாரு கடி கேளு - 40


சார், இந்த பழம் லேசா அழுகினா மாதிரி இருக்கு அதிலிருந்து நல்லதா குடுங்க. முடியாதுன்னா சொல்லுங்க நான் பிக்கிற விதத்தில் பிச்சுக்குவேன்.

Saturday, October 24, 2009

தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு

ஜெயகாந்தனின் "திருக்குறள் காவ்யா" பதிவு படித்ததும் நம் தமிழ் சங்கங்களை வம்புக்கு இழுக்கலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு கிடைத்த பதில்கள் இங்கு மாதிரிக்கு:

அப்ப தான் எல்லோருக்கும் புரிகிறது.
புரிகின்ற மொழியில் பேசுவது ஒன்றும் தப்பு இல்லை.
தமிழர்களை தவிர மற்றவர்களும் வரலாம் இல்லையா?
நமக்கே தமிழ் ஒன்னும் வர மாட்டேங்குது ?
தமிழ் வளர்ப்பதற்கு ஒன்றும் வர வில்லை.
இதை நான் விமர்சிப்பதற்குள் உங்களின் விமர்சனங்களையும் கேட்க விரும்புகிறேன்.
வேதாந்தி

Sunday, October 18, 2009

படம் பாரு கடி கேளு - 39



அட என்னய்யா அநியாயம் இது! இந்த பன்றி காய்ச்சல் வந்தாலும் வந்தது நமக்கும் இதை மாட்டி விட்டுட்டாங்க. ஒரு வார்த்தை பேச முடியலே! ஒண்ணு திங்க முடியலே!

புலவர் புலம்பல்

சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரை தமிழ்நாட்டு வரலாற்றில் மாறாத ஒன்று உண்டென்றால் அதுதான் புலவர்கள் வறுமை. எவ்வளவோ மாற்றங்களும் தமிழ் படித்து தமிழுக்காக வாழ்ந்தவர்களுக்கு நிலையான செல்வ வாழ்வை கொடுத்ததில்லை.

இந்த காலத்தில் கொஞ்சம் மாறி இருக்கலாம். திரைப்படப் பாடல் எழுதி ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் வாங்கும் கவிஞர்களும் உண்டு. படம் வெளிவந்தும் எழுதிய பாட்டுக்கு பணம் வாங்கத் தயாரிப்பாளர்களிடம் நடையாய் நடக்கும் கவிஞர்களும் உண்டு.

தான் எழுதியதாகச் சொல்லி பாண்டிய மன்னனிடம் கொடுத்த பாடலுக்கு ஆயிரம் பொன் பரிசாக கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தான் தருமி என்ற புலவன். அவையில் இருந்த நக்கீரர் பாடலில் பொருள் குற்றம் கண்டவுடன் நம்பிக்கை இழந்த தருமி பட்ட பாட்டை திருவிளையாடல் படத்தில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்போது பட்ட வேதனையை நாகேஷ் அந்த படத்தில் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.

நாகேஷுடைய தோற்றமும் உடல் அமைப்பும் தமிழ்ப்புலவர் கதாபாத்திரத்திற்கு தகுந்த முறையில் அமைந்திருக்கும்.
பிற்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பாடு மேலும் மோசமானது. பதவியில் இருக்கும் அரசர்களை பாடிமனம் குளிரச்செய்து
அவர்களிடம் பரிசு பெற்று வாழ்வதுதான் வாழ்வு என்று சுருங்கிபோனார்கள். அதற்காக போர்க்களத்தையே பார்க்காதவனை போரில் அர்ஜுனன் என்றும், கொடுக்க மனம் இல்லாதவனை பாரிவள்ளல் என்றும் பாடி நாட்களை ஓட்டும் போலி வாழ்க்கை பல புலவர்களுக்கு தலைவிதியானது.

இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் குழப்பம் நிலவியது. பல புலவர்கள் ஆதரிப்பார் இல்லாமல் வறுமையில் வாடினார்கள். ஏன் தமிழ் படித்தோம் என்ற வேதனையில் வாழ்ந்தார்கள். இப்படி வேதனைப்பட்ட ஒரு புலவர் காரிகை கற்று கவி பாடுவதிலும் பேரிகை கொட்டி பிழைப்பது நன்றே என்று பாடினார்.

காரிகை என்பது செய்யுள் இலக்கணத்தை விளக்கிச்சொல்லும் யாப்பருங்கலக்கரிகை என்ற நூல். சுருக்கமாக காரிகை என்கிறார் புலவர். ஊருக்கு அறிவிக்க வேண்டிய செய்திகளை தண்டோரா போட்டு சொல்வது அன்றைய வழக்கம். தோலால் செய்யப்பட்ட அந்த கருவியை பேரிகை என்றும் தமுக்கு என்றும் சொல்வதுண்டு.

சுப்ரதீபக்கவிராயர் ஒரு நல்ல கவிஞர். தனக்கு ஆதரவு கொடுத்த குறுநில மன்னரை மகிழ்ச்சியில் குளிப்பாட்ட அவர் பாடிய "விறலிவிடு தூது" என்ற நூல் மிகவும் பிரசித்தம். இன்றைய சினிமாக்களில் வரும் மசாலா பாடல்களுக்கு சவால் விடும் வகையில் எழுதியிருக்கிறார் .என்ன செய்வது? எப்படியாவது பிழைப்பை நடத்த வேண்டுமே. அதற்காகத்தான்.

தமிழ்நாட்டில் சமயப்பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்து வாழ்க்கையை கழித்தார் கவிராயர். எப்படி வாழ்ந்தாலும் தமிழ்தான் கதி என்று பிடிவாதமாக தமிழை படித்து தமிழுக்காக வாழ்ந்தவர்கள் உண்டு. உ.வே. .சாமிநாதய்யர் அந்த பட்டியலில் இடம் பெற்றவர் . அவர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலப் படிப்புக்கும் அரசாங்க வேலைக்கும் வாய்ப்பு கொஞ்சம் கிடைக்கத் தொடங்கிய காலம். அவருடைய தந்தை ஜமீன்தார் ஆதரவில் வாழ்ந்த சங்கீத வித்வான். அவருடைய இளைய சகோதரர், சாமிநாதய்யரின் சித்தப்பா, கதையோடு கலந்த சங்கீதம் பாடி பிழைப்பு நடத்தியவர்.

உ.வே சாவின் தந்தைக்கு ஜமீன்தார் தானமாக கொடுத்தநிலம் ஒரு வானம் பார்த்த பூமி. நிலத்திலிருந்து நிரந்தரமான வருமானம் கிடையாது. அந்த ஜமீந்தாரருக்கும் கஷ்டகாலம். தன்னுடைய தேவைக்காக அய்யருக்கு தானமாக கொடுத்த நிலத்தை அவருக்கே தெரியாமல் விற்றுவிட்டார்.

எல்லாம் போய்விட்டது. ஆகையால் மகன் சாமிநாதனை ஆங்கிலம் படிக்க வைத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப முயன்றார். அவருடைய சகோதரர் தம்பி மகன் சாமிநாதனை தனக்கு பின்பாட்டு பாடசங்கீதம் கற்க அழைத்தார். சாமிநாதன் சங்கீதமும் வேண்டாம், ஆங்கிலப்படிப்பும் வேண்டாம், தமிழ்தான் படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தான்.

அவருடைய விருப்பப்படியே மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தார். திருவாவடுதுறையில் இளைஞன் சாமிநாதனுக்கு அக்கிரகாரத்தில் அப்பாசாமி அய்யர் வீட்டில் சாப்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது .

சில மாதங்கள் கழித்து ஆசிரியருடன் ஊரை விட்டு வேறு ஊருக்கு போக வேண்டியதாயிற்று. அப்பொழுதுதான் பல மாதங்கள் உணவு அளித்த அப்பாசாமி அய்யருக்கு ஒப்புக்கொண்ட படி பணம் போய் சேரவில்லை என்ற விஷயம் சாமிநாதனுக்கு தெரியவந்தது . இளைஞனுக்கு சொல்லமுடியாத சங்கடம். ஊரை விட்டு போகுமுன் சாப்பாட்டு கடனை எப்படியாவது தீர்க்க முயன்றார் .

உபனயனகாலத்தில் அவருடைய மாமா செய்து போட்ட வெள்ளி அரைஞான்கயிறு அவருடைய நினைவுக்கு வந்தது. விற்று காசாக்க வேறு எந்த பொருளும் அவரிடம் இல்லை. அரைஞான் கயிற்றை விற்று அப்பாசாமி அய்யருடைய கணக்கை தீர்க்கப் போனான் சாமிநாதன். விஷயம் அறிந்த அப்பாசாமி அய்யர் பணம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.
"நீ ஊருக்கு பத்திரமாக போய்ச் சேர், பணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சாமிநாதனை வழி அனுப்பி வைத்தார் அந்த பெரியவர்.

தமிழ் படித்து ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலத்திலும் சாமிநாதய்யர் வளமாக வாழ்ந்ததாக சொல்லமுடியாது. ஓலைச்சுவடிகளை தேடி ஊர் ஊராகச் சென்றார். தேடல் முயற்சியில் பயணத்துக்கும் இதர வகையிலும் பெரிய தொகையை செலவு செய்ய நேர்ந்தது.

பிற்காலத்தில் எழுதிய புத்தகத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட நிதி வசதி இல்லாமல் அவதிப்பட்டார். அவர் தயாரித்த சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட்டு புத்தகமாக வெளியிட கையில் பணம் இல்லை.

1896 அண்டு பாண்டிதுரை தேவர் அய்யரை கெளரவம் செய்ய ஒரு விலை உயர்ந்த பொன்னாடையை அவருக்கு போர்த்தினார். அந்த பொன்னாடையை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு புத்தகம் அச்சிட சாமிநாதய்யர் முடிவு செய்தார்.

சுப்ரமன்யதேசிகர் என்ற சைவசமய பெரியவர் விஷயம் அறிந்து அய்யர் பொன்னாடையை விற்பதை தடுக்க முயன்றார்.
கௌரவப்படுத்த அளித்த பொன்னாடையை விற்பதை பாண்டிதுரை தேவருக்கு தெரிந்தால் அவர் மனம் வருந்துவார் என்று கூறி அதை தடுத்தார். அவரே தற்காலியமாக நிதி உதவி ஏற்பாடு செய்தார். அதனால்தான் அய்யரை பாரதியார் வாழ்த்தி பாடும்போது

"நிதி அறியோம் இவ்வுலகத்து ஒரு கோடி இன்பவகை நித்தம் துய்த்தறியோம்"

என்று வருந்த வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். தமிழுக்காக வாழவந்த உனக்கு உலக இன்பங்களைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியாது என்றார் பாரதி. மாறாகத் தமிழ் மொழியின் வரலாற்றில் உனக்கு நிரந்தரமான, பெருமை மிக்க இடம் கிடக்கும் என்று வாழ்த்தினார்.

பொதியமலை பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய்அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே

என்று பாடினார். கடுமையான வறுமையிலும் தன்னம்பிக்கை குறையாமல் பிடிவாதம் தளராமல் வாழ்ந்த புலவர்கள் உண்டு. தன்னுடைய புலமையையும் நிலையையும் எண்ணி பெருமிதம் கொண்ட கவிஞர்களுமுண்டு. இல்லையென்றால்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

என்று பாடி இருக்கமுடியுமா ? வேறு சில புலவர்கள் வருமையின்கொடுமை யால் தாங்கள் விதியை நொந்து பாடியது உண்டு. அப்போதுகூட தம் மொழியின் வளமையை காட்டும்வகையில் பாடி இருக்கிறார்கள். தங்கள் வேதனையை சொல்லி நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு புலவர் நடனம் ஆட கற்காமல், கழைக்கூத்தாட கற்காமல், செப்பிடுவித்தை கற்காமல், பிழைப்புக்காக தமிழை படித்தோமே என்று தன் வேதனையை வெளிப்படுத்துகிறார். அவர் அதோடு நிறுத்தவில்லை. அழகான பெண்ணாக பிறக்காமல் போனோமே என்கிறார். இன்னும் சற்று மேலே போய் வேறு ஏதாவது கேவலமான தொழில் செய்யப்போகாமல் தமிழைப் படித்தோமே என்று புலவர் புலம்பித் தீர்த்து விடுகிறார்.

பாட்டைப் பாருங்கள். புலவருக்காக நீங்கள் அனுதாபப்படுவதோடு நிச்சயமாக சிரிக்கவும் செய்வீர்கள். புலவர் நோக்கமும் உங்களை சிரிக்க வைப்பதுதான் .

அடகெடுவாய் பலதொழிலும் இருக்க கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாட தெரிந்தோமில்லை
தடமுலை வேசையராய்ப் பிறந்தோமில்லை
கனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
இடமிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை
என்ன சென்மமெடுத்துலகில் இருக்கின்றோமோ !!

தனக்கு வாழ்வு கொடுக்க தவறிவிட்ட தமிழ் மீது அவருக்கு உண்மையில் வெறுப்பு எதுவும் இல்லை. இருந்தால் "கனியான தமிழை விட்டு" என்று புலவர் பாடுவாரா?

மு.கோபாலகிருஷ்ணன்

Wednesday, October 14, 2009

மீனாவுடன் மிக்சர் - 13 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - முதல் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

உங்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான விஷயம்: நான்கு மாதம் முன்பு வெள்ளைவீட்டு சட்ட சபையில் காங்கரெஸ் ஆசீர்வதித்த ஒரு புது மனுவின் படி பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவது, துணி தோய்ப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்வதற்கு அயல் நாட்டிலிருந்து வேலையாட்களை கூப்பிட்டு கொண்டு வரலாம். இந்த மனுவிற்கு அமெரிக்காவில் வந்து குடிபுகுந்துள்ள இந்திய மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

மைதிலி: இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு விமானம் வந்து இறங்க. சீக்கிரமா வாங்க. க்யூவுல முதல் இடம் கிடைச்சா தானே நம்பள யாராவது தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கு? ஆமாம் அந்த ஏஜன்சி பேரு என்ன சொன்னீங்க?

செந்தில்: சபீனா ஸர்ப் சர்வதேச ஏஜென்சி. இவங்க இந்தியாவோட எல்லா மாநிலத்திலையும் நல்லா அலசி வீட்டு வேலைக்கு ஆட்கள் திரட்டி நேர்முகத்தேர்வேல்லாம் பண்ணி இப்போ அமெரிக்காவுக்கு அழைச்சுகிட்டு வராங்களாம். வேலையாட்கள் ப்ளேன்ல வந்து இறங்கினப்பரம் ஏர்போர்ட்ல அந்த காலத்து சுயம்வரம் போல ஏதோ நடக்குமாம். வேலையாட்கள் எல்லா குடும்பங்களையும் நல்லா அலசி பல கேள்விகள் கேட்டு அவங்களுக்கு பிடிச்ச ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுப்பாங்களாம் . நம்பள தேர்ந்தெடுத்தாங்கன்னா ஏஜன்சி கிட்டே கையெழுத்து போட்டுட்டு நம்ம அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டு வேலைக்கு ஆளை அழைச்சுகிட்டு போக சொல்லியிருக்காங்க.

மைதிலி: புண்ணியவான்கள் அந்த ஏஜன்சிகாரங்க. கடவுள் கடாக்ஷம் என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு. மனசு குளிர்ந்து சொல்லறேங்க.

செந்தில்: சரி சரி போதும் வா. ரொம்ப குளிர்ந்தா ஜன்னி வந்திட போகுது. விட்டா சபீனா ஸர்ப் ஏஜென்சி பெயர்ல Trust Fund ஆரம்பிச்சு ஏழை பாழைங்களுக்கு தர்ம காரியங்களே பண்ணுவ போல இருக்கே.

மைதிலி: நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க? போன வாரம் ஜிம்முல நாலு பேர் என்னை மடக்கி 'மொத்தத்துல நீ உருண்டையா இருக்கிறப்போ எப்படி உன் கை மட்டும் தனியா இப்படி இளைச்சு போயிருக்கு' ன்னு கேட்டானுங்க. பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு தான்னு பளிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.

செந்தில்: ஆமாம், கிளம்பறத்துக்கு முன்னாடி பூஜை அறைல அவ்வளவு நேரம் கண்ணை மூடி என்ன தான் வேண்டிகிட்ட?

மைதிலி: வேறென்ன, யாராவது ஒரு வேலயாளுக்காவது நம்ம குடும்பத்தை பிடிக்கணுமேன்னு கவலை எனக்கு. நம்மளை யாராவது தேர்வு செய்தாங்கன்னா இன்னிக்கு சாயந்திரமே Concord முருகன் கோவிலுக்கு வந்து பதினோரு தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிகிட்டு இருக்கேன். அந்த முருகன் மேல தான் பாரத்தை போட்டிருக்கேன். வேலும் மயிலும் தான் நமக்கு துணை.

செந்தில்: விட்டா நீ ஏர்போர்ட்ல உட்கார்ந்து கந்த சஷ்டி கவசமே பாடிடுவ. நீ கொஞ்சம் நேரம் இந்த பேனரை தூக்கிண்டு வரியா? எனக்கு கை வலிக்கறது. பொணம் கணம் கணக்கறது இது.

மைதிலி: அபசகுனமா இப்படி அச்சுபிச்சுன்னு பேசாதீங்க. அந்த பேனரை இப்படி என்கிட்டே குடுங்க. __________________அய்யய்யோ முக்கியமானதை எழுத விட்டுட்டீங்களே? நம்மள தேர்ந்தெடுத்தா Benz கார் வாங்கி தருவோம்னு எழுத சொன்னேனே. இதுல காணுமே. என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே!

செந்தில்: உனக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல? நான் வேணும்னா இனிமே பாத்திரம் தேய்க்கிறேன். எனக்கு Benz வாங்கி கொடு முதல்ல. சரி சரி பேசினது போதும் வா. நல்ல காலம் க்யூவில் ரொம்ப பேர் இல்லை. வீட்டை விட்டு சீக்கிரம் கிளம்பினது நல்லதா போச்சு.

(தொடரும்)

-----------------

இது போல் நிஜமாவே வருங்காலத்தில் நடக்குமா? நீங்க என்ன நினைக்கறீங்க?

-மீனா சங்கரன்

Tuesday, October 13, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 36

நோபல் பரிசு

சமீபத்தில் உலக சமாதான நோபல் பரிசு வழங்கியதில் என்ன லாஜிக்? அவருக்கு அதைப் பெறுவதற்கு தகுதி உண்டா? அவர் என்ன சாதித்து அதைப் பெற்றார்? என்றெல்லாம் கவைக்குதவாத கேள்விகளைக் கேட்டு எதற்கு எல்லோரும் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நோபல் பரிசு தனிப்பட்ட ஒரு நிருவனத்தால் தரப்படுவது. சமாதானத்திற்கு எப்போது அவர்கள் அண்ணல் மாகாத்மாவை 5 முறை தகுதியற்றவர் என்று நிராகரிக்க முடிந்ததோ அப்போதே அவர்கள் தரும் விருதைப் பெறாதவர்கள் ஒன்றும் சோடை போனவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆனால் இந்த விருதை சமீபத்தில் அறிவித்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இரு புறமும் இரண்டு குதிரைகளை இருவர் இழுத்து பிடித்தது போல இருக்கும் இரு சிலைகள்தான். அதில் ஒரு வாசகம் எழுதியிருக்கும் தமிழக அரசு குதிரைப் பந்தயத்தை நிறுத்துவதாக முடிவு செய்ததை ஒட்டி இந்த சிலைகளை முதல்வர் ..... திறந்து வைக்கிறார் என்று, அந்த சிலைகளைத் திறந்து வைத்த பிறகு சாதாரணமாக இருந்த குதிரைப் பந்தயம் ஜாம் ஜாம் என்று இன்றளவும் நடந்து வருகிறது. அந்த கேலிக்கூத்துக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

இந்த பரிசு அறிவிப்பு தவறு என்றால், அண்ணாத்துரை என்ற ஒரு 3ம் தர பேச்சாளர் எப்படி கழிசடை கழகங்களால் பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டாரே அது சரியா? சாதாரண கல்லூரி ஆசிரியர் அன்பழகன் எப்படி பேராசிரியர் ஆனாரே அது சரியா? இந்தியப் படங்களில் மட்டுமே நடிக்கும் கமலஹாசன் உலகநாயகன் என்று பட்டம் பெற்றாரே அது சரியா? விரல் சொடுக்கும் சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சின்னபுள்ளத் தனமா ஆனாரே அது சரியா?, தமிழில் காமத்துப் பாலை மட்டும் கரைத்துக் குடித்த கருணாநிதி முத்தமிழ் வித்தகராக ஆனாரே அது சரியா? நடிப்பு என்றால் சிவாஜி, சிவாஜி என்றால் நடிப்பு என்று இருந்தாலும் அவருக்கு இந்தியாவிலேயே விருது தர மனமில்லாத கேடு கெட்ட அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக ரிக்ஸாகாரன் என்ற திராபைபடத்தில் மகா திராபையாக நடித்து சண்டை காட்சிகளில் மட்டும் தூள் கிளப்பிய எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் கொடுத்தது சரியா?

இதெல்லாம் சரி என்றால் இந்த வருட சமாதான நோபல் விருது இவருக்கு வழங்கப் படுவதும் சரிதான்.

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவர்,ஜிம்மி கார்டருக்கு தந்தார்கள், அல் கோருக்கு தந்தார்கள் அதைப் பற்றியும் எழுது என்று கேட்டார், ஜிம்மி கார்ட்டருக்கு நம்மூர் மேல்சபை பதவியை தருவது போல தந்தார்கள், அல் கோருக்கு வழங்கியது அவர் சார்ந்த கட்சி இணைய தளத்தை கண்டு பிடித்ததை நமக்கு தெரிவித்ததற்காக தந்திருக்கலாம் அது இதயம் இனித்தது, கண்கள் பனித்தது டைலாகிற்கு சமம் என்றேன். அப்படியா சரி, யாசர் அராபத் போன்ற தீவிரவாதிக்கு எப்படி தந்தார்கள் என்று கேட்டார் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை, உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

இலங்கையில் இந்திய (தமிழக) நாடாளுமன்ற உறுப்பினர்களின் விஜயம்.

இது என்ன் லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இதனால் இந்திய அரசியலின் லாஜிக் எனக்கு விளங்கி, தமிழக அரசியலின் லாஜிக் மட்டும் விளங்கவில்லை என்று சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ரெண்டு லாஜிக்கும் குப்பை என்பது எம் கருத்து.

ஒரு புறம் ஆயுத உதவி, மறு புறம் அப்படி எதுவும் இல்லை என்ற டைலாக். மத்திய அரசில் பங்கு வகிக்கும் தமிழக முக்கிய கட்சியான தி.மு.க தனக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில் ஒரு டைலாக் ஒரு நாள், 50 வருடங்களாக எனக்கு தூக்கமே இல்லை என்று ஒரு டைலாக் மறுநாள், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லையே, என்ன செய்வது என்று யாராவது சொல்லுங்களேன் என்று கண்ணீர் மல்க டைலாக் அடுத்தநாள், இவர் ஒரு தமிழினத் தலைவர், இவர் ஒரு முத்தமிழ் காவலர், நவீன சாணக்கியர், பலம் பொருந்திய ராஜ தந்திரி என்று தினமும் இவருக்கு அள்ளக்கைகளின் பாராட்டுகள். சீசீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு என்று ஒரு ஏழைக்கவிஞன் பாடியது இவர் போன்றவர்களைப் பற்றித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல.

இனி தொடங்கிய தலைப்புக்கு வருவோம். இந்த குழு சொல்லி வைத்து சென்றதனால், அங்குள்ள தமிழர் முகாம்களில் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்க முடியும், இருந்தாலும் இலங்கை அரசாங்கம் இவர்கள் வருகையை தடைசெய்யாததே பெரிய விஷயம். அங்கு சென்ற அனைவரின் ஒருங்கிணைந்த ஒரு செய்தியோ அல்லது வெள்ளை அறிக்கையோ வெளிவருவதற்குள், காங்கிரஸ் எம்.பி, சுதர்சன நாச்சியப்பன் முந்திக்கொண்டு வவுனியா ஆட்சியாளரை பாராட்டி ஒரு பெரிய பாராட்டு பத்திரம் வாசித்ததே, ஏதோ ஒன்று சரியில்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு சென்ற திமுக எம்.பிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி போன்றோர் வழக்கம் போல உளறி விட்டு வந்திருக்கிறார்கள். நல்லவேலை தொல். திருமாவளவன்ஏதும் பேசாமல் வந்திருக்கிறார். அவரை பேச விடவில்லை என்றும், அவர் தமிழர்களை சந்திக்கவும் சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், அது சரியானதே. இல்லையெனில இலங்கை வாழ் தமிழர்களுக்கு பால், தேன் எல்லாம் ஆறாக வரப்போகிறது என்ற அளவில் ஏதாவது டைலாக் விட்டிருப்பார், அது தவிர்க்கப் பட்டது நல்லதே.

எப்படி இவர்களால் அசராமல், சளைக்காமல் உளற முடிகிறது, கேட்பவர்கள் கேணையர்கள் என்று எப்படி இவர்களால் தானாகவே ஊகம் செய்து கொள்ள முடிகிறது என்பது எனக்கு புரியாத ஒன்று.

சீன எதிர்ப்பு.

இந்திய ப்ரதமர் இந்தியாவின் மாநிலமான அருணாச்சல் ப்ரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்துஇந்தியாவுக்கான சீனத் தூதரை இன்று அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்தியாவின் ஒரு பாகமான அருணாச்சல் ப்ரதேசத்தின் கலாச்சாரம் சீன கலாச்சாரத்தின் சாயலுடன் இருப்பதால், அது அவர்கள் நாட்டுக்குச் சொந்தம் என்பது சீனாவின் வாதம். எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய வீட்டில் நேபாள நாட்டு கூர்க் குடும்பம் வசித்தார்கள். அவர்கள் இன்றுவரை இரவு காப்பாளர்களாக எங்கள் ஊரில் ரோந்துக்கு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு சீனர்கள் போலவே இருப்பார்கள், அதனால், நாமும் சீனர்களை நம் ஊருக்கு வந்து இரவு ரோந்துக்கு செல்லும்படி சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் சீனாவுக்கு நமது அருணாச்சல ப்ரதேசத்தின் மீது இருக்கும் உரிமை.

மன்மோகன் சிங்கின் அருணாசசல ப்ரதேச விஜயத்தை கண்டிக்கும் சீனாவின் போக்கு எவ்வளவு அபத்தம் மற்றும் தவறான செயல் என்பதை சீனா கண்டிப்பாக உணரப்போவதில்லை. அவர்களுக்கு அதை உணர்த்த இந்தியாவும் முயலப்போவதில்லை. ஆனால் இந்தியா சீனாவுக்கு இதை உணர்த்த இரண்டு செயல்களைச் செய்தால் போதும், ஒன்று, அவர்கள் நாட்டு தூதுவரை திரும்ப செல்லுமாறு பணித்தல், இரண்டு, அவர்கள் நாட்டு இறக்குமதிகளை காலவரையின்றி நிறுத்தி வைத்தல். அது நமது நாட்டு வியாபாரிகளின் முதலீட்டுக்கு ஆபத்து எனில், இனி சீனாவுடன் செயல்படுத்தப்படும் எந்த முதலீடுகளும் இந்திய அரசாங்கத்தின் பரிசீலனைக்குப் பின்பே நடைபெறவேண்டும், இதை இந்திய அரசாங்கம் வழக்கம் போல கால தாமதமாகச் செய்ய செய்ய, இந்திய வியாபாரிகள் வேறு நாட்டோடு இறக்குமதிக்கு ஏற்பாடுகளைச் செய்வார்கள், அது சீனாவுக்கு சரியான அடியாக இருக்கும்.

சீனாவின் இந்த விதமான அட்டூழிங்களைப் பார்க்கும் போது, இரண்டாம் உலகப்போரில் உலகத்தையே கண்களில் விரல் விட்டு ஆட்டிய ஜப்பானியர்கள் அதற்கு முன் சீனாவின் பெரும் பகுதியை தன் கட்டுக்குள் வைத்திருந்து ஆட்டிப் படைத்ததை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்கா/இங்கிலாந்துடன் போரில் இறங்கியதை நாமும் மறந்து சீனாவை சற்று கதறடியுங்கள் என்று சற்று சுதந்திரமாக விட்டால் போதும், சீனாவின் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள்.

கடைசியாக தமிழகத்தில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகுள்ளான ஒரு நடிகையின் வாக்குமூலம் பற்றிய செய்தி ஒரு தினசரி பத்திரிகையில் வந்த சம்பவம் பற்றி என்னை ஒரு நண்பர் எழுதச் சொன்னார், அது பல தமிழ் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்திதான் அது இந்த தினசரியில் வந்ததுதான் தவறே தவிர, செய்தி அல்ல. இதற்கு மேல் இந்த செய்தியை பற்றி விவாதிப்பது என் தரத்துக்கு உகந்தது அல்ல.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

Thursday, October 08, 2009

மீனாவுடன் மிக்சர் - 12 {ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்}

ஒரு வழியா நவராத்திரி சுண்டல் சாப்பிட்ட அஜீரணம் போய் இப்ப தான் மிக்சர் பக்கம் வர முடிஞ்சது. நான் எட்டிப்பார்க்காத இந்த சில வாரங்களில் ஏதோதோ அருமையான பதிவுகளெல்லாம் வந்திருக்கு தமிழ் சங்கத்துல. அதெல்லாம் படிக்கறத்துக்கு முன்னாடி என்னை அதிசயத்தில் ஆழ்த்தும் எங்க ஊர் தமிழ் பெண்களின் சமூக உணர்வைப் பத்தி உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.

சென்னையில் ஒரு பத்து பெண்கள் பொது இடத்தில் கூடும் போது இப்படி பேசித்தான் நீங்க கேட்டிருப்பீங்க - "போத்தீஸ்ல இப்போ ஆடி தள்ளுபடி நடக்குதாம். நீ போக போறியா?", "தங்க மாளிகையில் இந்த வாரம் ஆர்டர் குடுத்தால் கூலி சேதாரமே கிடையாதாம். டீவியில் ஒன்பது மணி செய்தி வாசிக்கற பத்மஜா போட்டுக்கற மாதிரி கழுத்தை ஒட்டி மாங்காய் மாலை இன்னிக்கு போய் ஆர்டர் பண்ண போறேன். நீயும் வரியா?" மற்றும் "நேத்தி கோலங்கள் சீரியல் பாத்தியா? இப்படி கூட ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் இந்த அபியும் தொல்காப்பியனும்". இதெல்லாம் சகஜமா கோவில், கல்யாணம் போன்ற பொது இடங்களில் நம்ம காதில் விழும் சுவாரசியமான பேச்சுகள்.

எங்க ஊர் ரிச்மணட் தமிழ் பெண்கள் எங்கேயாவது கூடினால் பேச்சு கொஞ்சம் வித்யாசமாக போகும். "புளியோதரை நாலு கப்பா அஞ்சு கப்பா?", "கேசரியா சர்க்கரை பொங்கலா?", "பத்து பவுண்ட் வெங்காயம் வெட்ட முடியுமா இல்லேன்னா ஆறு கட்டு கொத்தமல்லி நறுக்க முடியுமா?" இந்த ரேஞ்சுல தான் எல்லோரும் பேசுவாங்க. என்னடா எல்லாமே சாப்பாட்டு விஷயமா இருக்கேன்னு யோசனை பண்ணறீங்களா? சாப்பாடு தான் எங்களுக்கு ரெண்டாவது மதம். சர்டிபிகேட் இல்லாத சமையல் கலை வல்லுனர்களான எங்க ஊர் பெண்கள் சமூக உணர்வு அதிகம் உள்ளவங்க. வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க. கோவிலில் சஷ்டியா? பெருமாளுக்கு கல்யாணமா? தோழியின் பெண்ணோட அரங்கேற்றமா? எடு பேப்பரையும் பென்சிலையும். விறுவிறுன்னு மெனு போடுவதும், போன் மேல் போன் போட்டு ஆட்கள் திரட்டி இரு நூறு அல்லது முன்னூறு பேருக்கு சமைப்பதும் எங்க ஊர் பெண்களுக்கு காலை காப்பி கலப்பது போல அல்வா வேலை. இவர்களின் இந்த திறமையை எப்படி மிஞ்சுவதுன்னு அடுத்த ஊர்க்காரங்க ரூம் போட்டு யோசிப்பதா கேள்விப்பட்டேன்.

உதாரணத்துக்கு இந்த வாரக்கடைசியில் எங்க ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு நிதி திரட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்க இருக்கு. கல்யாண சத்திரம் போல் உள்ள பெரிய ஹாலில் பல குட்டி கடைகள் போட்டு இட்டிலியிலிருந்து கச்சோரி வரைக்கும் சுட சுட உணவு வகைகளை பரப்பி, ஜொள்ளு விட்டுக் கொண்டு வரும் அமெரிக்கர்களுக்கு விற்று (கோவிலுக்கு நிதி திரட்டி) இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதில் நம்ம தமிழ் மக்கள் நடத்தப்போகும் கடை ஊத்தப்பம்/குழிப்பணியாரம்/இட்டிலி கடை. கடந்த பத்து நாட்களாகவே இதுக்கு ரெடியாக எங்கூர் பெண்கள் மும்முரமா வேலை செஞ்சுட்டு வராங்க. ரெண்டு நாள் முன்னாடி பால் வாங்க கடைக்கு போனேன். காய்கறி செக்ஷன் பக்கம் நாலு பெண்கள் நிற்பதும் அதில் ஒரு பெண் பேசுவதும் காதுல விழுந்தது. "நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க." மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!

எங்க ஊருக்கு வர்றதா இருந்தீங்கன்னா இதெல்லாம் கேட்டு பயந்து போய் டிக்கெட்டை ரத்து செஞ்சுராதீங்க. சமூக சேவை மாதிரியே விருந்தோம்பலிலும் எங்க பெண்களை மிஞ்சவே ஆள் கிடையாது. உதாரணத்துக்கு புதுசா ஊருக்கு ஒரு தமிழ் குடும்பம் வந்திருப்பது தெரிஞ்சால் எங்க வரவேற்ப்பு குழு உடனே போய் அவங்களை பார்த்து பேசி வரவேற்று அப்படியே சில பல முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வருவாங்க. அந்த வீட்டு பெண்ணிடம் எத்தனை பெரிய குக்கர் இருக்கு, மூணு தோசையாவது வார்க்க கூடிய மாதிரி பெரிய தோசைக்கல் இருக்கா, ஒரு எழுபத்தைந்து பேருக்காவது சாம்பார் வைக்க தோதான பாத்திரம் இருக்கா - இது போல அத்தியாவசியமான விஷயங்களை தெரிந்து கொண்டு, இதெல்லாம் இருந்தால் மிகப் பெரிய வரவேற்ப்பு கொடுத்து விட்டு வருவாங்க. இப்ப சொல்லுங்க. எப்ப வரீங்க எங்க ஊருக்கு?

நீங்க புதுசா கல்யாணம் ஆனவரா? உங்க மனைவி செய்யும் சமையல் அவங்க அளவுக்கு அம்சமா இல்லையா? வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் ரசவாங்கியும் கனவா போச்சேன்னு கவலைப்படரீங்களா? டேக் இட் ஈசி. எங்க ஊருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வையுங்க. ஒரே மாசம் தான். கல்யாண சமையலுக்கே கான்ட்ராக்ட் எடுக்க தயாராகிடுவாங்க உங்க மனைவி.

தூக்கத்தில் கூட இல்லாத கரண்டியை பிடித்து ஐந்நூறு மைசூர்பாக் கிண்டும் ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?

Tuesday, October 06, 2009

எல்லாம் ஒன்றுதான்!!

சென்ற ஆண்டு வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு வரலாற்று செய்தியை தன் கதைக்கு பயன்படுத்திக்   கொண்டிருந்தார். அதுதான் காலம் காலமாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சைவ வைணவ மோதல்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றவர்கள் அதே கோயிலுக்குள் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்குள் போயிருக்கலாம். தீவிர சைவர்கள் அந்த பக்கமே திரும்பி கூட பார்க்காமல் போவார்கள். அது வேறு விஷயம்.

தீவிர சைவனான சோழ மன்னன் அந்த பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்து கடலில் வீசி எறிந்து விட்டான் என்பது வரலாற்று செய்தி. 400 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சிலை கடலில் இருந்து  மீட்டு அதே இடத்தில் மறுபடியும் நிறுவப்பட்டது.

அந்த பெருமாளை துதி செய்துதான் குலசேகராழ்வார் தன்னுடைய திருச்சிற்றகூடம் என்ற பகுதியில் வரும் பாசுரங்களை பாடியிருக்கிறார்.

இந்த சிலை உடைப்பு விஷயத்தில் வைணவர்களும் சளைத்தவர்கள் அல்ல. நாகப்பட்டினத்தில் இருந்த புத்தர் விஹாரத்தில் புகுந்து சூறையாடி அங்கு இருந்த பொன்னால் செய்யப்பட்ட புத்தர் சிலையை கொள்ளையடித்தார் ஒருவர். அந்த சிலையை உருக்கி, வந்த தங்கத்தை விற்று, அதில் வந்த பணத்தை கொண்டு பல வைணவ கோயில்களுக்கு திருப்பணிசெய்து வைகுண்டத்துக்கு வழி தேடியவர் வேறுயாருமில்லை- நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தில் ஆயிரம் பாசுரங்களை பாடிய திருமங்கை ஆழ்வார்தான் அவர்.

இப்படி ஒவ்வொரு சமயத்தாரும் மற்ற சமயத்து கோயில்களை இடிப்பதும் பெயர்ப்பதும் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் சரித்திரத்தின் பல கட்டங்களில் நடந்ததுண்டு. அந்த நிலப்பகுதிகளில் ஆண்ட அரசர்களுடைய ஆதரவோடுதான் அந்த சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

ஒட்டக்கூத்தர் தீவிர சைவசமயப்பற்று கொண்ட புலவர். வைனவ கோயில்களை இடித்து, அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சிவன்கோயில் கட்டிய மன்னனை புகழ்ந்து கவி பாடியிருக்கிறார் அவர். உலகத்தை காக்கும்தெய்வம் என்று துதிக்கப்படும் திருமாலை சிறுதெய்வம் என்று பாடி தன் வயிற்றெரிச்சலை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் முதலில் ஒரு சமயத்தாரால் கட்டப்பட்டு பிறகு மாற்று சமயத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வேறு தெய்வ சிலைகள் நிறுவப்பட்டன பல ஆதாரங்கள் உண்டு.

கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் வழக்கழிந்து கொண்டிருந்த சமண பௌத்த சமயங்களுக்கு பிறகு வளர்ந்த சைவமும் வைணவமும் பிற்காலத்தில் தான் இப்படி குடுமிபிடி சண்டையில் இறங்கியதாக தெரிகிறது.

பல சமய தலைவர்களும் இந்த சண்டைகளால் பாதிக்கப்பட்டனர். பிற்காலத்தில் கோயில் இடிப்பும் ஆக்கிரமிப்பும் குறைந்து பாடல்கள் மூலம் ஒருவரை மற்றவர் பரிகாசம் செய்யும் நிலை வந்தது. காலப்போக்கில் வேகம் குறைந்தாலும் மாற்றம்பெரிய அளவில் இல்லை.

கல்கியின் பொன்னியின்செல்வன் என்ற நாவலை படித்தவர்களுக்கு ஆழ்வார்க்கடியான் என்ற கதாபாத்திரம் நிச்சயமாக நினைவுக்கு வரும் . வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்படி பேசும் அந்த வைணவர் வழியில் போகும் சைவர்களை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசி சைவ சமயத்தை கேலி செய்வார். கல்கி இந்த கதாபாத்திரத்தின் மூலம் சைவ வைணவ சண்டையை தனக்கே உரிய பாணியில் கேலி செய்திருக்கிறார்.

இப்படி நடந்த மதச்சண்டையில் பல தமிழ்நூல்கள் அழிந்தன. குறிப்பாக சமண பௌதசமயநூல்கள், மதம் சாராமல் சொல்லப்பட்ட பல நீதி நூல்கள் அழிந்து போய்விட்டன.

சைவமடங்களுக்குள் கம்பராமாயணம் உள்ளிட்ட வைணவ நூல்களும், சமணசமயநூலான சீவகசிந்தாமணி, பௌத்த மத நூலான மணிமேகலை போன்ற இலக்கியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த காலத்தில் ஓலைச்சுவடியில்தான் நூல்கள் எழுதப்பட்டன. அவையெல்லாம் கவனிப்பார் இல்லாமல் கரையானுக்கு இரையாகி அழிந்துபோய்விட்டன.

கம்பராமாயணம் மட்டும் இந்த சோதனையிலிருந்து மீண்டது. காரணம் அந்த நூலின் இலக்கியச்சுவை. எல்லா சமயத்தாரும் கம்பராமாயணம் படிப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

19ம் நூற்றாண்டில் ராமாயணம் ராஜகோபால பிள்ளை என்ற தமிழ் புலவர் ஒருவர் வாழ்ந்தார். தீவிர வைணவர் - கம்பராமயணத்தில் கரை கண்டவர். அவரிடம் கம்பராமாயணம் கற்ற மாணவர்கள் அநேகம். ஆனால் அவர் பள்ளியில் மற்ற சமயத்தாருக்கு அனுமதி இல்லை.

இந்த செய்தி தெரிந்தோ தெரியாமலோ ஷண்முகம் பிள்ளை என்ற இளைஞன் ராஜகோபால  பிள்ளை வீட்டுக்கு வந்தான். வந்தவுடன் பிள்ளையின் காலில்விழுந்து எழுந்தான். "நான் தமிழ் ஓரளவு படித்தவன். தங்களிடம் கம்பராமாயணம் படிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல். அருள் செய்து கற்பிக்கவேண்டும்" என்று கெஞ்சி கேட்டான்.

காலில் விழுந்து எழுந்த இளைஞன் முகத்தை பார்த்தார் ராஜகோபலபிள்ளை. நெற்றியில் பட்டையாக விபுதி. கழுத்தில் ருத்ராட்ச மாலை. இப்படி சிவப்பழமாக காட்சி அளித்தான் பிள்ளைக்கோ ஒரே அருவருப்பு.

பெயர் என்ன என்று கேட்டார் பிள்ளை. ஷண்முகம் என்றான் அந்த இளைஞன்.

பிள்ளையின் முகத்தில் அருவருப்பு அதிகமானது. கோபத்தோடு "சைவனுக்கு எல்லாம் நான் பாடம் சொல்ல முடியாது போ" என்று விரட்டினார்.

இளைஞன் எவ்வளவு கெஞ்சியும் பயன் இல்லை வெளியேறினான். ஆனால் அவரிடம் எப்படியாவது ராமாயணம் பாடம் கேட்பதில் தீவிரமாக இருந்தான். எதையும் செய்து அந்த காரியத்தை முடிக்க முடிவு செய்தான்.

சில நாட்களுக்கு பிறகு அதே இளைஞன் ராஜகோபால் பிள்ளை வீட்டுக்கு போய் திண்ணையில் உட்கார்ந்திருந்த அவருடைய காலில் விழுந்து எழுந்தான்.

இப்பொழுது அவன் நெற்றி நிறைய திருமண் காப்பு. வைணவ கோலத்தில் பணிவாக நின்று சொன்னான் - "நான் இப்பொழுது வைணவனாக மாறி விட்டேன் . இனி திருமாலே என் தெய்வம். பெயரையும் ராமனுஜம் என்று மாற்றி கொண்டு விட்டேன் தாங்கள் அருள் செய்ய வேண்டும்" என்றான்.

ராஜகோபலபிள்ளைக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. அன்றே பாடத்தை தொடங்கினார்.

இரன்டு ஆண்டுகள் தொடர்ந்து பிள்ளையிடம் கம்பராமாயணம் பாடம் கேட்டான் ராமனுஜம். அவரிடம் உள்ள ராமணயம் மற்ற நூல்களில் உள்ள புலமையையும் அவருடைய விளக்கம் சொல்லும் ஆற்றலையும் கண்டு
வியந்தான். மிகுந்த விசுவாசத்தோடும் குருபக்தியுடனும் நடந்து கொண்டான்.

சில நாட்களாக ராமனுஜம் பிள்ளையிடம் பாடம் கேட்க வரவில்லை.

திடிரென்று ஒரு நாள் அந்த இளைஞன் பழையபடியே நெற்றி நிறைய விபுதி, கழுத்தில் ருட்ராக்ஷமாலை என்று சைவ திருக்கோலத்தில் வந்து ராஜகோபலபிள்ளை முன்நின்றான். பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போனார். சமாளித்துக்கொண்டு கோபத்தில் வாயில் வந்தபடி வசைமாரி பொழிந்தார் .

அந்த இளைஞன் அமைதியாக சொன்னான் - "ஐயா தாங்கள் புலமையில் ஈடுபாடு கொண்டு எப்படியாவது தங்களிடம் ராமாயணம் கற்கவேண்டும் என்பதற்காக மதம் மாறினேன். என் காரியம் முடிந்துவிட்டது. திரும்பவும் சைவனாக மாறிவிட்டேன். தாங்கள் கொடுத்த கல்விக்கு என்றென்றும் நன்றி" என்று கூறிவிட்டு நடையை கட்டினான்.

மறுபடியும் சைவத்துக்கு மாறி பெயரையும் ஷண்முகம் என்று மாற்றிக்கொண்ட அந்த இளைஞன் பிற்காலத்தில் பல தமிழ் நூல்களுக்கு உரை எழுதும் அளவுக்கு வளர்ந்தார். தஞ்சை வாணன் கோவை என்ற நூலுக்கு ஷண்முகம் பிள்ளை உரைதான் சிறந்தது என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது விஷயமாக ஷண்முகம் பிள்ளையின் நாடகம் சரியா தப்பா என்று ஆராய்ந்தால் ராஜகோபால் பிள்ளையின் குறுகிய நோக்கத்திற்கு இதுதான் மருந்து என்று நிச்சயமாக கூறலாம்.

விசாலமான பார்வையோடு சமயகாழ்ப்புணர்ச்சி இல்லாமல் வாழ்ந்த புலவர்களும் உண்டு.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சடகோப ஐயங்கார் என்ற புலவரை உதராணமாக சொல்லலாம். வைணவரான அவர் எழுதிய சிவராத்ரிமகாத்மியம் என்ற நாடகம் அந்த காலத்தில் மிக பிரசித்தமானது. தமிழ்நாட்டில் பல இடங்களில் அரங்கேறியது. இந்த சடகோப ஐயங்கார்தான் தமிழ் தாத்தா உ.வே. சாமினதாய்யருக்கு ஆரம்ப கால தமிழ் ஆசிரியர்.

17ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த அப்பய்ய தீஷிதர் மிகச்சிறந்த வடமொழி அறிஞர். வேலூர் அருகே ஒரு ஜமிந்தார் ஆதரவில் வாழ்ந்த அப்பய்ய தீஷிதர் வடமொழியில் நூறு நூல்கள் எழுதியிருக்கிறார்.

ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கி அவர் எழுதியுள்ள நூல்கள் பற்றி வடமொழி கற்றவர்கள் பெரிதும் உயர்வாக பேசுவார்கள். அத்வைதியான அப்பய்ய தீஷிதர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மேல்
நூறு பாடல்கள் கொண்ட ஸ்துதி பாடியிருக்கிறார்.

வைனவமததின் மேலோ மற்ற மதங்களின் மீதோ வெறுப்பு காட்டாமல் தன் சமயக்கொள்கைகளில் உறுதியாக நின்று பற்றற்ற வாழ்க்கை நடத்தினார்.

ஒரு சமயம் தீஷிதர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய சென்றார். அமைதியாக, தனியாக நெற்றி நிறைய விபூதி அணிந்து கை கூப்பி நின்றார்.

ஆராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கிய அர்ச்சகருக்கு முதிய வயதில் சைவகோலத்தில் நிற்கும் அவரை யாரென்று தெரிந்திருக்க நியாயமில்லை. விபூதியுடன் நிற்கும் சைவர்களை கண்டால் அந்த அர்ச்சகருக்கு எப்போதும் கொஞ்சம் கசப்புதான். முகத்தை சுளித்தபடி பிரசாதம் கொடுப்பார். கர்ப்ப க்ரஹத்துக்கு நெருக்கமாக சென்று ரெங்கநாதரை முழுமையாக தரிசனம் செய்யும் நோக்கத்துடன் சற்று முன்னே நகர்ந்த தீஷிதரை தனக்கு இடையூராக நினைத்து கோபமாக பேசி, அலட்சியமாக தள்ளினார் அர்ச்சகர்.

தன்னை தானே நிதானம் செய்துகொண்ட தீஷிதர் மறுமொழி எதுவும் பேசாமல் கையில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். பிரகாரத்தை வளம் வர தொடங்கினார்.

பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்துவிட்டு கர்ப்ப க்ரஹத்துக்கு திரும்பிய அர்ச்சகருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ரெங்கநாதர் பள்ளி கொண்ட இடத்தில் இப்பொழுது ஒரு சிவலிங்கம் காட்சி அளித்தது. அர்ச்சகர் கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தார். சந்தேகமே இல்லை. நிச்சயமாக சிவலிங்கம்தான்.

அவருக்கு தூக்கிவாரி போட்டது. கையும் ஓடவில்லை காலும்ஓடவில்லை. ஏதோ தவறு நடந்துவிட்டது என்று அவருடைய உள்மனம் சொல்லியது. உடனடியாக அவருக்கு சிவப்பழமாக தோன்றிய ஒரு முதியவரை கோபத்துடன் தள்ளிய சம்பவம் நினைவுக்கு வந்தது.

உடனே அர்ச்சகர் அந்த பெரியவரை, அப்பையா தீஷிதரை, தேடி ஓடினார். பிரகாரத்தின் ஒரு பகுதியில் அமைதியாக வலம் வந்து கொண்டிருந்த தீஷிதரை தேடி கண்டுபிடித்து அவருடைய காலில் விழுந்தார்.

பெரியவரே தவறு நடந்து விட்டது. மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சி கேட்டு கொண்டு, தான் கண்ட காட்சியை அவரிடம் சொன்னார். திரும்பவும் காலில் விழுந்த அர்ச்சகரை சமாதானப்படுத்திய அப்பையதீஷிதர் "எல்லாம் ஒன்றுதான்" என்று கூறிவிட்டு அமைதியாக தன் வழியில் நடந்தார்.

மு.கோபாலகிருஷ்ணன்

திருக்குறளின் வாரிசாக "திருக்குற‌ள் காவியா"!



திருவள்ளுவர் தவமாய் தவமிருந்து எழுதிய அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ந‌ம்மை மூக்கில் விர‌ல்வைக்க‌ வைக்கிறார், இவர். பார்வையாள‌ர்க‌ள் ப‌குதியிலிருந்து இந்த‌க் குற‌ள் வ‌ருவ‌து எந்த அதிகார‌த்தில்? குற‌ள் எண் 412 எப்ப‌டி துவ‌ங்குகிற‌து? "இக‌லின் மிக‌லினி" என்று துவ‌ங்கும் குற‌ள் எந்த‌ அதிகார‌த்தில் வ‌ருகிற‌து? அத‌ன் குற‌ள் எண் என்ன? "முய‌ங்க‌ப்பெறின்" என்று முடியும் குற‌ள் எத்த‌னையாவ‌து குற‌ள்?.....இப்ப‌டிப் ப‌ட‌ப‌ட‌வென‌ பார்வையாள‌ர்க‌ள் வினாக்க‌ளை விசிறிய‌டித்து வாய் மூடும் முன் வாய் திற‌க்கிறார் மிகச்ச‌ரியான‌ விடையுட‌ன்!

திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் இவரையே தன் வாரிசாக அறிவித்திருப்பார்.

யாரிந்த‌ப் பெரும்புல‌வ‌ர் என்று உங்க‌ள் புருவ‌ம் ச‌ற்றே விரிகிற‌தா? ஒரு சிறுமி என்றால் வியந்து விரியாம‌ல் என்ன‌ செய்யும்? இன்னும் இதில் விய‌ப்பு என்ன‌வென்றால், தாய்த் த‌மிழ‌க‌த்தில் அன்றாடம் தமிழ் பேசி வளர்ந்த சிறுமியல்ல;தும்மினால் ஆங்கிலம்; இருமினால் ஆங்கிலம் என்ற அமெரிக்க மண்ணில் வளர்ந்தசிறுமி என்பது தெரிந்தால் பெருவியப்பே ஏற்படும் அல்லவா?

சிகாகோ தமிழ் பள்ளிகள் இணைந்து நடத்திய‌ விழாவில் அசைந்தாடி மேடையேறிய அந்தச் சின்னஞ்சிறு சிறுமி,"தன் நினைவிலூறிய‌ திருக்குறளைப் பாடலாகப் பாடி, தனக்கு பிடித்த குறள்களைக் கூறி, அதன் அதிகாரங்கள் கூறி, கூடி இருந்தவர்களைக் கவர்ந்தார்.

பட்டம்....

சிறுமியின் திறமையை முற்றிலுமாக அறிய சோதனையில் ஈடுபட்ட மாணக்கர்கள் கேட்ட குறள் எண்களுக்கும், ஆசிரியர்கள் கேட்ட குறள் அதிகாரங்கள் எண்களுக்கும், பெற்றோர்கள் கேட்ட உதடு ஒட்டாத குறளையும், வானத்தையும், மலையையும், கடலையும் விட பெரியவை என்னென்ன எந்தெந்தக் குறளில் அமைந்துள்ளது? அந்தக் குறளின் பண்புப் பெருமைகளையும் சற்றும் பிசிறடிக்காமல் சொல்லி குறளில் தன் ஆழ்ந்த ஈடுபாட்டை குறையின்றி வெளிப்படுத்த அரங்கம் கரவொலியில் அதிர்கிறது. கரஒலி எழுப்பியவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து மீண்டும் கரஒலி எழுப்பி ஆரவாரிக்கிறார்கள். குறையின்றி நிறைவாகக் குறள் சொன்ன சிறுமிக்கு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குநர் இராம்மோகன் திருக்கரங்களால் "திருநிறைசெல்வச்சிட்டு" என்ற பட்டமளித்து மரியாதை செய்யப்படுகிறது.

குறளுக்கு ஒரு டாலர்

சிகாகோ, தமிழ் பள்ளி விழாவில் அதிக திருக்குறள்களை கற்று, நினைவில் பதிக்கும் மூன்று மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு குறளுக்கும் ஒரு டாலர் (dollar) அளிக்கப்படும் என்று காவியாவின் திறனை இங்கு தமிழ் கற்கும் ஒவ்வொரு மாணாக்கரும் அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த விழாவில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாசிங்டன் தமிழ் சங்கம், டெக்சாசின் டல்லாஸ்ஃபெட்னா விழா,ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் விழா, ஆஸ்டின் தமிழ் சங்க விழா என்று தமிழ் மேடைகளில் திருக்குறள் புகழ்பாடிய காவியாவை இப்போது அமெரிக்காவில் "திருக்குறள் காவியா" என்றால் எல்லோரும் அறிகிற நிலைதனைப்பெற்றிருக்கிறார்.

''ஆறுவயதில் அமெரிக்காவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் ஆங்கிலம் என்றாகிவிட்ட பிறகு நம் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதற்காக என் பெற்றோர் தமிழை நாள்தோறும் சொல்லிக்கொடுத்தார்கள். திருக்குறளும் அவற்றில் ஒன்று. பத்துவயதில் ஒரேவாரத்தில் 45 குறள்களை மனப்பாடம் செய்தேன். அப்போது முயற்சி செய்தால் 1330 குறள்களையும் படித்துவிடலாம் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னதை ஒரே வருடத்தில் அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து 2005ம் ஆண்டு 1330 குறள்களையும் சொல்லும் திறன் பெற்றேன். முதன் முதலில் வாஷிங்டன் தமிழ்ச்சங்கவிழாவில் கலந்துகொண்டு சொன்னேன். சிகாகோவில் என்னை அழைத்து கெளரவப்படுத்தியதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 1330 குறள்களையும் ஆங்கிலத்திலும் படிக்கவேண்டும் என்று இப்போது அதில் பயிற்சி பெற்றுவருகிறேன். குறளோவியம் தீட்டிய முதல்வர் கலைஞர் அவர்களையும் கவிஞர்.கனிமொழி எம்.பி.அவர்களையும் சந்திக்கக்கூடிய பெருவாய்ப்பைப் பெற்றதை பெருமையாகவும் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணமாகவும் கருதுகிறேன்'' என்றார்.

உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்று கேட்ட‌போது,"செய்யும் செயலை உண்மையாகவும் முழுமையான‌ ஈடுபாட்டுடனும் செய்வது. செய்யும் தொழிலும், ஈட்டும் பெருளும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் நடப்பது" என்று சொல்லி அறிவின் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார் காவியா.

திருவள்ளுவர் கூறியுள்ள அறிவுரைகளில் எதையாவது நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறீர்களா? என்ற வினாவுக்கு,"செய் நன்றி அறிதல், பொறுமை, அடக்கம் முதலான நற்பண்புகளை பின்பற்றி நடக்கிறேன்" என்றார்.

உங்களையொத்த‌ வ‌யதுக் குழ‌ந்தைக‌ளுக்கு நீங்க‌ள் சொல்ல‌விரும்புவ‌து என்ன? என்று கேட்டு முடிக்கும் முன்,"பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும். பல்துறை திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும்." என்று விடையளித்தார்.

10ம் வகுப்பு பயிலும் இவர், பள்ளியில் ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கூடுதலாக‌ப் படிப்ப‌தாக‌வும், கர்நாடக இசை, புல்லாங்குழல்,பரத நாட்டியம் ஆகியவற்றின் மீது ஆர்வம் ஏற்பட்டு இவைகளை முறையாக கற்றுக்கொள்வதாகவும் ஓய்வு நேரங்களில் ஓவியம் தீட்டுவேன் என்றும் தம் எண்ணங்களை வெளிச்சமிட்டுக்காட்டினார்.

புறங்கூறுவது பிடிக்காது என்று கூறும் இவர், இயற்கை அதிசயங்கள், வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்களை சுற்றிப்பார்ப்பது, பெற்றோரிடம் இரவு படுக்கும் முன் கதை கேட்பது எல்லாம் எனக்குப் பிடித்தமானது என்கிறார்.

சிகாகோ நகரில் மகளுக்கு பட்டம் கொடுத்தபோது தாயையும் பாராட்டிக் கெளரவித்தார்கள். "ஈன்ற‌ பொழுதின் பெரிதுவ‌க்கும் த‌ன் ம‌க‌னைச் சான்றோன் என‌க்கேட்ட‌ தாய்" என்பது குறள். இங்கே உங்கள் ம‌களால் அந்த‌ நிலையை நிச்சயம் எய்தியிருப்பீர்க‌ள். அந்த‌ச்சூழ‌லில் என்ன‌ நினைத்தீர்கள் என்று காவியாவின் அம்மா தேன்மொழியிடம் கேட்டபோது பிரகாசமாய்ச் சொன்னார். "சிகாகோ நகர விழாவில் காவியாவை கௌரவித்தது பெருமையாக இருந்தது. அதை விட, அடுத்து வரும் ஆண்டுகளில் திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு குறள் ஒன்றுக்கு 1 டாலர் பரிசு அறிவித்து ஆர்வத்தை ஏற்படுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

காவியாவுக்கு என்ன‌ மாதிரியான‌ ஊக்க‌ம் த‌ந்து திருக்குற‌ளை ம‌ன‌ப்பாட‌ம் செய்ய‌வைத்தீர்க‌ள் என்று கேட்க‌,"

ஒரு வாரத்தில் 45 குறள்களை உன்னால் படிக்க முடியும் என்றால் 1330 குறள்களையும் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டிப்பாக படித்துவிடலாம் என்றும், அது உனக்கு தன்நம்பிக்கையும் அளிக்கும் என்றும், முதலில் உற்சாகம் ஊட்டும் சில குறள்களை அவளுக்கு சொல்லி, அதற்கு சிறுகதைகளையும் சொல்லி ஆர்வத்தை ஏற்படுதினோம்," என்றார் பெருமித‌த்தோடு.

காவியா எதிர்கால‌த்தில் ஒரு ம‌ருத்துவ‌ராக‌, பொறியாள‌ராக‌...என்ன‌வாக‌ ஆக‌ வேண்டும் என்று த‌யார்ப‌டுத்துவீர்க‌ளா? அல்ல‌து ம‌க‌ள் விருப்ப‌த்துக்கு விட்டுவிடுவீர்க‌ளா? என்று காவியாவின் த‌ந்தை ப‌ன்னீர்செல்வ‌ம் அவ‌ர்க‌ளைக் கேட்க‌,"எதிலும் கட்டாயப்படுத்த மாட்டோம். அவள் விருப்பத்தை அறிந்து, அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து, நாங்கள் மூவரும் கலந்து முடிவு செய்வோம்," என்றார்.

பொதுவாக‌ உங்க‌ள் மக‌ளைப்ப‌ற்றி நீங்க‌ள் பெருமைப்ப‌டுவ‌து எதில்? என்று கேட்க,"எதிலும் உண்மையாக இருப்பாள். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள். வீட்டில் நான் எதாவது சிறு தவறு செய்தாலும் தைரியமாக உடனே என்னை திருத்துவாள்," என்று சொல்லி காவியாவை பார‌தியின் புதுமைப்பெண்ணாக‌ ந‌ம் க‌ண்முன் கொண்டுவ‌ந்து நிறுத்தினார்.

உங்க‌ள் ம‌க‌ளுட‌ன் முத‌ல்வ‌ர் ம‌ற்றும் க‌னிமொழி எம்.பியைச் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வு குறித்து....என்ற கேள்விக்கு,"திருக்குறளைப் படித்த காரணத்தினால் தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என் மகள் மூலம் எனக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு...." என்று மகளின் பெருமை கண்க‌ளில் மின்ன‌லிட‌ச் சொன்னார், காவியாவின் அப்பா பன்னீர்செல்வம்!

சுப்ரபாதம்,கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், திருப்பாவை மற்றும் பல பக்திப்பாடல்களையும் சுலோகங்களையும் அடிபிறழாது சொல்லுவதில் வல்லவராக இருக்கிறார் காவ்யா. திருக்குறளில் புலால் மறுத்தல் அதிகாரத்தை என்றைக்கு படித்தறிந்தாரோ அன்று முதல் புலால் உண்பதையே அடியோடு நிறுத்திவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள காவியா விரைந்து உட‌ல் நல‌ம்பெற‌வும் அமெரிக்காவில் அமெரிக்கையாக‌ ஆங்கில‌த்தில் திருக்குற‌ளை விரைவில் ப‌ர‌ப்ப‌வும் வாழ்த்தி விடைபெற்றோம்
ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா
Thanks to Dinamani
காவியாவிற்கு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை "திருநிறைசெல்வச்சிட்டு" விருது