Sunday, June 15, 2025
ஜம்புபதே...
Saturday, June 29, 2024
தோசை
அந்த உணவு விடுதி பல நாட்களாக, பல நண்பர்களால், பிரபலமாகப் பேசப்பட்டது. ஒரு நாள் தற்செயலாக உள்ளே நுழைந்தோம். நல்ல விசாலமான கடை. அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.
தோசைகளில் அத்தனை வகையுள்ளது என்றே அன்று தான் தெரிந்தது. வகைகளைப் படிக்கவே ஐந்து நிமிடத்துக்கு மேல் வேண்டியிருந்தது. நண்பர் யதார்த்தமாகச் சொன்னார், எப்படி ஒரு சாதாரணமான தோசை, இப்படி பல வகையில் மாறிடுச்சின்னு விவேக் பாணியில்.
தோசை மட்டுமா? Buffet வில், மெது வடை, ஆமை வடை, போண்டா, பஜ்ஜி, பொங்கல், சட்னி, சாம்பார், கிழங்கு மாசால், பூரி, கிச்சடி, என்று அது ஒரு தனி வரிசையில்.
முருகர் (முறுகல் தோசை), ரவா தோசை, சொல்லிவிட்டு, தட்டில் ஒரு மெது வடை, கொஞ்சம் சட்னி, எடுத்து வந்து அமர்ந்தோம். பலவிதமான உரையாடலுக்கு நடுவில், முதலில் முறுகல் தோசை வந்தது. பாதி தோசையின் போது, ரவா தோசை வந்தது. அதற்கு மேல் எவ்வளவோ முயன்றும், சாப்பிட முடியவில்லை.
வயிறு இரண்டு அங்குலம் அசராமல் விரிந்து இரவில் உறக்கம் படுத்தியது. காலையில் எழுந்து, காப்பி போட அடுப்படியில் நுழையும் போது, அந்த நாளில், எங்கள் வீட்டு சின்ன அடுப்படியில் அமர்ந்து, கல்லில் இருந்து, நேராக நேர்த்தியாக, எங்களின் தேவைக்கேற்ப, அம்மா சுட்டு, எங்கள் தட்டுக்கு வரும், தோசை, அலாதி ருசி. காரமான அந்த சட்னி, தனி மகத்துவம். நாவில் எச்சல் ஊரியது. வேறு பிரதாபகள் எதுவும் இருக்காது. எத்தனை தோசை உள்ளே போனது என்றே தெரியாது. எண்ண அம்மா, சம்மதிக்கவே மாட்டாள், “பேசாம வயிறு நிறைய சாப்பிடு, அதுல என்ன கணக்கு”, இன்றும் அந்த வரிகளுக்கு மாற்றமில்லை.
எத்தனை பெரிய கடையோ, சுவையோ, அம்மா சமையல், அது தனியே.
Wednesday, March 20, 2024
ஆடு பாம்பே, நீ விளையாடு பாம்பே!
ஆடு பாம்பே, நீ விளையாடு பாம்பே!
சின்ன வயசிலிருந்தே நம்ம ஊர்ல நஞ்சு கொண்ட நாகப்பாம்புகளா பார்த்ததனாலயே, பாம்புன்னு யாராவது சொன்னாலே சும்மா உடம்புல ஒரு பயம் உண்டாகும். அது போதாதுன்னு, நம்ம தமிழ் சினிமால பாம்பு பழி வாங்குறத பார்த்து அது மேல ஒரு பயம் குறையவே இல்லை. ஒரு பாம்ப அடிச்சா அதோட துணைப்பாம்பு வீடு தேடி வந்து போட்டுரும், 25 ஆண்டுக்கு ஒரு முறை விலை மதிப்பில்லாத மாணிக்கக்கல் கக்கும், பாம்பு(!) புத்துல வெள்ளிக்கிழமையானா பால் ஊத்தணும், முட்டை கொடுக்கணும்னு பல கதையக் கேட்டிருக்கோம். இந்த ஊரிலும் பல கதைகள் உண்டு - குக்கும்பர் (வெள்ளரி) மணம் இருந்தால் அருகே செப்புத்தலையன் (CopperHead) பாம்பு இருக்கலாம், காட்டன் மவுத் (Cottonmouth) உங்களை துரத்தி வந்து கடிக்கக்கூடும்! இதெல்லாமே டுபாக்கூர் கதைன்னு ரொம்ப காலம் கழிச்சு தான் தெரிஞ்சிகிட்டேன்! சரி, கதை எது உண்மை எது ன்னு பார்க்கறதுக்கு முன்னாடி, எந்த பாம்ப கண்டா கொஞ்சம் ஒதுங்கி இருக்கணும், ஏன் பாம்ப பார்த்து பயப்பட வேண்டிய தேவையில்லன்னும், அது நம் இயற்கை உணவு சங்கிலியில் எவ்வளவு இன்றியமையாத கண்ணின்னும் பார்க்கலாம். நானும் எல்லாரையும் போல பயந்து இருந்தவன், நண்பர் நாகுவின் புதல்வன் ஹரி பரசு’வை ஒருமுறை அருகாமை வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்த பாம்பை அகற்ற கூப்பிட்டேன், அவர் வெளியூரில் இருந்ததால் “இது சாதாரண எலி பாம்பு, தைரியமாக ஒரு குப்பை பையில் போட்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் விட்டுவிடிங்கள்” என தைரியம் கொடுத்தார். இன்னும் 10 நிமிடம் விட்டால் அந்த வீட்டுக்காரர் அதை கொன்று விடுவார் என்பதால் தைரியத்தை வரவழைத்து (முகத்தில் மட்டும்!) நானே அகற்றினேன்! அதன் பின் பாம்புகளை அடையாளம் காண்பது , மற்றும் பாதுகாப்பாக எப்படி அப்புறப்படுத்துவது என கற்றுக்கொண்டேன்.
உங்க வீட்டில் பாம்பு வந்துவிட்டால் (ரிச்மண்டில் மட்டும்!), அதை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த என்னை அணுகலாம் (ஜெயகாந்தன் 804-200-9350) அல்லது என்ரைகோ கவுண்டியை அணுகவும் (804- 646-5573). பாம்பு கடித்தால் உடனே அந்த பாம்பின் அடையாளத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அல்லது கைபேசியில் படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவமனையில் தகுந்த சிகிச்சைக்கு இது உதவும். இதுவரை வெர்சீனியால பாம்பு கடிபட்டு உயிர் போனவர்கள் எவ்வளவு தெரியுமா? (விடை கட்டுரையின் இறுதியில்)!
பாம்புகள் இல்லன்னா, நம்ம வீடு, விளைநிலம், மற்றும் கடைகள்ல எலித் தொல்லை அதிகமாயிடும். சின்னத் தவளை, மூஞ்சூரு, எலி, நத்தை வகையிலிருந்து வயல்கள்ல அழிவை உண்டாக்கும் பெரும் பெருச்சாளி வரை பல வகை விலங்குகள் அதன் உணவுப் பட்டியலில் இருக்கு! ஒரு சில பாம்பு வகைகளின் நஞ்சிலிருந்து புற்றுநோய் போன்ற நோய்களுக்கான அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! மனிதர்களுக்கு பாம்பாலான நன்மைகள் எனப் பட்டியலிட நிறைய உண்டு.
முதலில் Poisonous - Venomous இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று பார்க்கலாம். Poisonous என்றால், அதைத் தவறி உண்டால் ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் நிகழ வாய்ப்பு உண்டு - எடுத்துக்காட்டாக, அரளி விதை, ஒரு சில வகை காளான் போன்றவை. Venomous என்றால், இரத்தத்தில் நஞ்சினைச் செலுத்தி செயலிழக்கச் செய்வது, சில நேரங்களில் மரணத்தில் முடியும் வாய்ப்புகள் அதிகம்! பாம்பு நஞ்சை நீங்கள் தவறி உண்டாலும் அதனால் பாதிப்பு அடையும் வாய்ப்பு குறைவே! (உங்கள் உணவு குழாய் மற்றும் உட்புற காயங்கள் இல்லாவிட்டால், நஞ்சைச் செரித்து விடுவீர்கள். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமே, நஞ்சு கூட!)
எந்த பாம்பைக் கண்டால் படை நடுங்கலைன்னாலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவைன்னு பார்க்கலாம். நம்ம வெர்சீனியால 3 வகை நச்சுப் பாம்புகள் உள - செப்புத்தலையன் எனும் Copper Head, காட்டன் மவுத் / வாட்டர் மொகாசின் (Cotton Mouth / Water Moccasin), மற்றும் கேன் பிரேக் / டிம்டர் ராட்டில் (Timber Rattle Snake / Canebreak). இந்த 3 வகை பாம்புகளில் ஏதாவது மனிதர்களைக் கடித்தாலும் விரைவாக மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பெரிய பாதிப்புல்லாமல் காப்பாற்றி விடலாம்!
நம் இரிச்மண்டில் செப்புத்தலையர்கள் மட்டும் தான் உலாவுகிறார்கள். மற்ற நஞ்சப்பர்களுக்கு இங்கே அனுமதி இல்லை போல. செட்டர்பீல்ட் பகுதியில் காட்டன் மவுத் சிலதும் வெர்சீனியா பீச் பகுதியில் காட்டன் மவுத் மற்றும் டிம்டர் ராட்டிலும் ஊர்கின்றன. கீழே உள்ள வரைபடத்தில் அவை எங்கே வாழ்கின்றன என பார்க்கலாம்.
Pics from Virginia herpetological society
பொதுவாக நம் வீடுகளில் காணப்படும் பாம்புகள் நஞ்சில்லாதவை தான். இதில், அதிகம் காணப்படுவது கருப்புப் பாம்பு - Black Racer, கார்ட்டர் பாம்பு (Garter Snake),எலிப் பாம்பு (Rat Snake), டீகேயின் காக்கி பாம்பு (Dekays Brown Snake), தண்ணீர் பாம்பு ( Northern Water Snake) மட்டுமே! இவை கடித்தாலும் மனிதர்களை பெரிதாக பாதிக்காது, மிஞ்சி போனால் ஒவ்வாமை வரலாம்! இவை சிறிய எலி, நத்தை, தவளை, பூச்சிகள் போன்றவற்றை உண்டு வாழ்பவை! இவற்றை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என வேறொரு பதிவில் பார்க்கலாம்!
பாம்புகள் பொதுவாக குளிர் காலத்தில் (செப்டெம்பர்-ஏப்ரல் வரை) புரூமேசன் (Brumation) என்னும் மந்த நிலையில் இருக்கும். புரூமேசன் என்பது காலநிலை குளிர்ச்சியடையும் போது பாம்புகள் அடையும் ஒரு நிலை, அவை சாப்பிடுவதை நிறுத்தி, வேகத்தை குறைத்து, ஒளிந்து கொள்ள இடம் தேடுகின்றன. இது உறக்கநிலையைப் போன்றது, ஆனால் பாம்புகளுக்கு புரூமேசன் போது அதிக தூக்கம் தேவையில்லை, சில சமயம் அவை உறங்கி எழுந்து உணவு மற்றும் தண்ணீருக்காக சிறிய தூரம் போய்த்தேடும். பொதுவாக பாம்புகள் புரூமேசன் காலத்தில் பல வாரங்களுக்கு சாப்பிடவோ, குடிக்கவோ, மலம் கழிக்கவோ நகராது. சில ஊர்வன இனங்கள் உயிர்வாழ்வதற்கு புரூமேசன் இன்றியமையாதது. வானிலை மாறும்போது அவற்றின் உடல் வெப்பநிலையை உயர்த்த முடியாது. நீண்ட மந்தத்தன்மை பாம்புகள் போன்ற ஊர்வனவற்றின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.
மார்ச் மாதம் குளிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பிக்கும் போது வெய்யில் படுவதற்கு வெளியே வருகின்றன. அவை உண்ணும் உணவு செரிக்க வெயில் தேவை!
சரி இனி இவற்றை நம் வீடு மற்றும் தோட்டத்திற்குள் பாம்புகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். பாம்புகள் வீட்டிற்கு வராமல் இருக்க எந்த வகை மருந்து/பொடிகளும் உதவாது! இவற்றை வாங்கி ஏமாறாதீர்!
தோட்டத்தில், புல்லை அடிக்கடி வெட்டி, குட்டையாக வைக்கவும். பாம்புகள் குட்டையான புல்வெளிகள் வழியாக வெளியே தொங்குவதும், நகர்வதும் குறைவு, ஏனெனில் அவை வேட்டையாடிகளின் (எ.கா., பருந்துகள்) கண்களில் பட்டுவிடும். குட்டையான புல்வெளி பாம்புகளைக் காட்டிக் கொடுத்துவிடும். எனவே பாம்புகள் அவற்றை விரும்புவதில்லை.
மரங்கள் மற்றும் புதர்களை ஒழுங்கமைக்க வேண்டும். உங்கள் வீடு மற்றும் வண்டி நிறுத்துமிடம் அருகே மரங்கள் மற்றும் புதர்கள் இருந்தால் அவற்றை நெருக்கமாக வெட்டி, கிளைகள் தரையைத் தொடராதவாறு வெட்டி வைக்கவும். மரங்கள் மற்றும் புதர்களுக்கு அடியில் 2-3 அடி இடைவெளியை உருவாக்குவது பாம்புகளின் நடமாட்டத்தைக் குறைக்கும் மற்றும் பாம்புகள் இருந்தால் அவற்றைக் கண்டறிவதை எளிதாக்கும்.
பறவைகளுக்கு உணவு வைத்தால், அவற்றை வீட்டிலிருந்து முடிந்தவரை தூரத்தில் வைக்கவும். பறவைகள் உண்ணும்போது, உணவை கீழே சிதறி விடுகின்றன. தரையில் உள்ள உணவுத்துணுக்குகள் மூஞ்சுரு போன்ற கொறித்துண்ணிகளை ஈர்க்கின்றன, மூஞ்சுரு & Co பாம்புகளின் உணவு. பாம்பு ஈர்க்கப்படும். பறவைகளின் உணவை அதன் சேமிப்புப் பெட்டியில் இறுக்கமாக மூடி வையுங்கள்.
ஒரு பெர்ச் கம்பத்தை (அமர்ந்து நோட்டம் விட வேட்டையாடிப் பறவைகள் பயன்படுத்தும் கம்பம்) நிறுவவும். பருந்துகள் மற்றும் ஆந்தைகள் இயற்கையான பாம்பு தின்னிகள், அவை நன்கு அமைக்கப்பட்ட பெர்ச் கம்பத்தை விரும்பி வந்து அமரும். அவை அங்கு அடிக்கடி வருவதால், எதுக்கு வம்பு என பாம்புகள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுகின்றன. கம்பங்கள் நல்ல பார்வை படும்படி திறந்த பகுதிகளில் வைக்கப்பட வேண்டும்.
மேலும், செல்ல விலங்குகளுக்கு வீட்டின் உள்ளேயே உணவளிக்கவும். செல்ல விலங்குகளுக்கு வெளியில் உணவளிப்பதால் பாம்புகளை ஈர்க்கும் பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகளை வரும். பின்னாலேயே பாம்பும் வரும். வெளியில் உணவளிப்பது தேவை என்றால், உண்ணாத / எஞ்சிய உணவை உடனே நீக்கிவிடுங்கள்.
உங்கள் தோட்டத்தில் விறகுக் குவியல் இருப்பின் அவற்றை உடனே அப்புறப்படுத்தவும். விறகு, அதிகப்படியான மரக்கட்டைகள் மற்றும் பிற குப்பைகளை உங்கள் வீட்டிலிருந்து ஒதுக்கி வையுங்கள். மரக்கட்டைகள் மற்றும் விறகுகளின் அடுக்குகள், மற்றும் பிற குப்பைகள் ஆகியவை பாம்புகள் மறைவாக வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும்.
உங்கள் தோட்ட நிலப்பரப்பில் தழைக்கூளம் மற்றும் பெரிய பாறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை பாம்புகள் மற்றும் அவற்றின் இரையை ஈர்க்கின்றன, இனப்பெருக்கம் செய்ய நல்ல வாழ்விடமாக அமைத்துக் கொள்ள பாம்புகளுக்கு வசதியாகிவிடும். அதற்கு பதிலாக, சரளை அல்லது கூழங்கற்கள் போன்ற சிறிய இறுக்கமான கற்களைப் பயன்படுத்தவும். நீர் நிலைகள் பாம்புகளைக் கவரும் என்பதால் நீர்த்தோட்டம் மற்றும் வண்ணமீன் (கோய்) குளங்களை தவிர்க்கவும்.
உங்கள் வீட்டின் அடித்தளத்தில் விரிசல்கள் இருப்பின் அவற்றை உடனே அடைத்திடுங்கள். பாம்புகள் இந்தப் பகுதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வீடு, நடைபாதைகள் மற்றும் அடித்தளங்களில் விரிசல் மற்றும் பிளவுகளை அடைக்கவும். குளிர்சாதன மற்றும்/அல்லது வெப்பம் வீட்டில் இருந்து கசியும் விரிசல் மற்றும் பிளவுகளை கண்டறிய ஆற்றல்-தணிக்கை (Energy Audit) ஒரு சிறந்த வழி - இதே விரிசல்கள் மற்றும் பிளவுகள்தான் பாம்புகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களால் பயன்படுத்தப்படக்கூடும்.
பாம்புகளை விலக்கி வைக்க 100% பயனளிக்கும் வழிகள் என எதுவும் இல்லை, மேலே பரிந்துரைத்த எல்லா முயற்சிகளும் தோல்வியுற்றால், வேலி அமைப்பது பற்றி கருத்தில் கொள்ளலாம். வேலியைத் தரைக்குள் சில அங்குலங்கள் புதைத்து, 1/4" அல்லது சிறிய திடமான கண்ணி அல்லது திடமான தாள்களைப் பயன்படுத்தி கட்டப்பட வேண்டும். மேலும், பாம்புகள் மேலே ஏறுவதைத் தடுக்க அதன் மீது ஒரு வளைவைச் சேர்க்க வேண்டும். பல நிறுவனங்கள் காட்டுவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவென்றே சிறப்பு வேலிகளை உருவாக்குகின்றன, தேடிப்பாருங்கள்.
முன் பத்தியில் கேட்ட பாம்பு கடிக்கான விடை:
இதுவரை வெர்சீனியால பாம்பு கடிபட்டு உயிர் போனவர்கள் எண்ணிக்கை - 0!
மனிதர்கள் கண்பட்டு உயிர்போன அப்பாவிப் பாம்புகள் எவ்வளவு இருக்கும் என யோசிச்சுப் பாருங்கள். எல்லாப்பாம்பும் கெட்ட பாம்பல்ல, நாம் தொல்லை கொடுக்காத வரை எல்லாமே "நல்லபாம்பு" தான், செப்புத்தலையன் உட்பட. மாற வேண்டியது நம் மனமும் கண்ணோட்டமும்தான். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.
நா. ஜெயகாந்தன்
(கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி கார்த்தி அங்கமுத்து!)
Wednesday, March 06, 2024
மாயை
தெளிந்த நீல வானம் கண்முன், எண்ணங்களும் இப்போது தெளிந்தது,
வாழ்க்கை ஒரு மாயாஜாலம், எதுவும் நிரந்தரமல்ல, தருணம் பொன்னானது,
இயற்கை இவற்றை ஒரு வர்ணக்கோட்டில் அழகாக தீட்டிச் சென்றது
Thursday, December 07, 2023
பாக்கியம்
Sunday, October 01, 2023
ஒழிக்கப்பட வேண்டிய நோய்
உலகில் ஒழிக்கப்பட வேண்டிய நோய்கள் பல உண்டு. தீ-உயிராக (Virus) உடலுக்குள்
நுழைந்து ஆளைக் கொல்வது முதல் மூளைக்குள் தீ எண்ணமாக நுழைந்து நன்மனதைக்
கொல்வது வரை நோய்கள் பலவிதம், ஒழிக்கப்பட வேண்டியதும் பலது உண்டு.
உலக
வரலாற்றில் மனிதகுலத்தின் அதிகாரம் (Dominance) நாம் சிந்திக்கத் துவங்கிய
பின் வெகுவாக வேகம் எடுத்தது. அதற்கு முன்பு நாம் மற்ற குரங்கின
(Primates) கூட்டத்தைப் போல பத்தோடு பதினொன்றாக ஏனோதானோ என்றே
இருந்திருக்கிறோம். சிந்தனைப் பொறி தட்டிய உடனேயே "முதல் நிலை வேட்டையாடி"
(Apex predator) ஆவதற்கான பாதையில் நகரத்துவங்கிவிட்டோம். ஆனால், சிந்தனை,
நினைவாற்றல், அதை ஒட்டிய செயல்திறன் என்பன ஒருங்கிணைந்து அறிவார்ந்த
(Cognitive) குழுவாக நாம் மாறிய போது நம்முள் பிளவுகளும் போட்டிகளும்
தோன்றின என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
இன்றுவரை தொடர்கிறது.
சமூக வாழ்விலும், அரசியலிலும், நாம் இன்னொரு மனிதனுடன் போட்டியிடும் எல்லா
இடங்களிலும் பிளவுகள் நீக்கமற உள்ளது. அதைத் தவறு என்றும் சொல்வதற்கில்லை.
நம் முன்னேற்றத்துக்கான உந்துதல் இன்னொரு குழு/தனி-மனிதப் போட்டிகளில்
இருந்தே பிறக்கிறது.
போட்டிகள் சரி என்றாலும் ஒரு அறிவார்ந்த
சமூகமாக, பகிர்ந்துண்டு எல்லோரும் பசியாறி இன்புற்றிருக்க தடையாக இருப்பது
மாறுபட்ட சிந்தனை கொண்டோர் மீது வளர்த்துக் கொள்ளும் வெறுப்ணர்வு. பழைமை
விரும்பும் யானை, செலவை விரும்பும் கழுதை, நோயுற்று தடுமாறும் இலை,
சுட்டெரிக்கும் சூரியன் என எந்தக் குழுவில் இருந்தாலும் எதிர்க் குழுவினர்
மீது வெறுப்பை (Hate) வளர்த்தல் நல்லதுக்கில்லை. அப்படியான சூழல் உருவாவதை
நோய் என்கிறார் ஐயன் வள்ளுவர்.
திருக்குறளில் நட்பியல் எனும்
பகுதியை மட்டும் தனியாக ஒரு ஆராய்ச்சி நூலாகவே பதிப்பிக்க முடியும். அதன்
அதிகார வரிசை அமைப்பும், உள்ளடக்கமும் ஆழ்ந்து படிப்போரை அசரடிக்கும்
அடர்த்தி கொண்டது. நட்பு என்பதை எப்படி கவனமாக அமைத்துக்கொள்ள வேண்டும்,
தீய நட்பு, கூடாத நட்பு, பேதைமை (லூசுத்தனம்) என நட்பு மெதுமெதுவாசச்
செல்லும் பாதையிலேயே அதிகாரங்கள் வரிசையாக வருகிறது. நட்பு திரிந்து
கடுப்பாகி வெறுப்பு தோன்றுவது பகை உண்டாகும் முன் என அசத்துகிறது குறளின்
அதிகார அமைப்பு.
வெறுப்புணர்வு துளிர்விடுவதைப் பற்றி எச்சரிக்கும் அதிகாரம் இகல்.
அந்த அதிகாரத்தின் முதல் குறள்,
"இகல் (வெறுப்புணர்வு) என்பது உயிர்களிடையே பிரிவினை எனும் பண்பற்ற தன்மையைப் பரப்பும் நோய்" என்கிறார்.
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
இகல் என்பது எல்லா உயிர்க்கும் பகல் எனும்
பண்பின்மையைப் பரப்பும் நோய்
இகல் = வெறுப்புணர்வு
பகல் = பகுதல் = பிரிவினை
பாரிக்கும் = பரப்பும்
முழு அதிகாரமும் இகல் எனும் வெறுப்புணர்வை ஒழித்தால் கிடைக்கும் நிம்மதி, இன்பம், நன்மை பற்றி பேசுகிறது.
வெறுப்பை ஒழிக்க முடியாமல் போனால் பகை மூளும் என அடுத்த அதிகாரமே பகை பற்றித் துவங்குகிறார்.
அடுத்த
மனிதனோடு பிளவை உண்டாக்கி, சமூகத்தில் நீதியைக் குலைக்கும் சிந்தனைகள்,
வேறுபாடுகள், வெறுப்பு என்பன நோய்களேதான். ஒழிக்கப்படட்டும். பிறப்பு நம்
எல்லோருக்கும் ஒரே முறைதான், இப்பிறப்பில் நம்மைப் போலவே எல்லோரும்
பிறப்பொக்கும் என வேறுபாடு களைந்து மனிதம் தழைக்கச் செய்வோம்.
--------
Friday, September 01, 2023
சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்ட பின்.
பல காரணிகள் இதற்கு இருந்தாலும் தேவைக்கு மேல் உண்பது பெரிய காரணமாக இருக்கிறது. உணவுப் பற்றாக்குறையை அறிவியலின் துணை கொண்டு வென்று விட்டோம். மனித வரலாற்றில் உணவு இவ்வளவு எளிதில் எப்போதும் கிடைத்ததில்லை. ஆனாலும் பஞ்சங்கள் பல கண்ட மனிதன், உணவைப் பார்த்ததும் பாய்ந்து விடுகிறான்.
இன்றைக்கு கைக்கு எட்டிய தொலைவில் எப்போதும் ஏதோ ஒன்று தின்பதற்கு இருக்கிறது. இனிப்பாக, காரமாக, உப்பாக என சுவையாக ஏதோவொன்று நினைத்த போதெல்லாம் தின்பதற்கு பக்கத்திலேயே வைத்திருக்கிறோம். தின்று தின்றே ஒரு வழியாகிறோம்.
போதாக்குறைக்கு தூக்கம் என்பதை ஏதோ நேரத்தை வீணடிக்கும் ஒன்றாக நினைத்து தூங்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டோம். உடலுக்குத் தேவையான ஓய்வைக் குறைத்து, தேவைக்கும் அதிகமான உணவை உள்ளே தள்ளி பெருத்துப் போய் விடுகிறோம். மருத்துவர்களும் ஆய்வாளர்களும் இந்தப் போக்கை சரி செய்யச் சொல்லி மன்றாடுகிறார்கள்.
நம் நண்பர் மருத்துவர் பழனியப்பன் மாலை மங்குவதற்குள் உண்டு முடித்து பின் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்து நல்ல உறக்கம் கொள்ளுங்கள்; நலம் கொடுக்கும் உணவை கவனமாக, அளவாக உண்டு நோயைத் தவிருங்கள் மருந்தின்றி நல்வாழ்வு வாழலாம் என ஒரு முழு நீள தொலைக்காட்சித் தொடரே கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேட்போர் கேட்கட்டும், கேட்டு நல்லபடியாக நடப்போர் நடக்கட்டும். கேளாதோர் மருத்துவமனைக்கு நடக்க வேண்டியிருக்கும்.
ஏன் நலம் கொடுக்க வேண்டிய உணவே உடலைக் கெடுக்கும் நஞ்சாகிறது? உண்பது மகிழ்வாக இருக்கிறது ஆனால் தீங்கு விளைவிக்கிறதே ஏன்? குறைவாக உண்டாலும் சிக்கல், நிறைய உண்டாலும் சிக்கலாகிறதே ஏன்?
பதில் சொல்கிறார் ஐயன் வள்ளுவர்.
மருந்து என ஒரு அதிகாரம் நட்பியலின் கீழ் எழுதுகிறார். அதன் பத்து குறள்களில் ஏழு குறள்கள் உணவைப் பற்றியது. கிட்டத்தட்ட எல்லா குறள்களிலும் அவர் அழுத்தி அழுத்திச் சொல்வது "அளவோடு உண்" என்பதைத்தான்.
நம் விருப்பத்திற்கு ஏற்ற உணவை உண்ணலாம். புலால் வேண்டாம் என அவர் வலியுறுத்துவது துறவற இயலில், துறவிகளுக்கு. மற்றவர்களுக்கு அவர் சொல்லும் கட்டுப்பாடு உணவின் அளவு மீதுதான். மரக்கறி உணவோ புலால் உணவோ, அளவோடு உண்டால் சிக்கலில்லை.
சாப்பிட்ட சாப்பாடு செரிச்சுதா என கவனிச்சு செரிச்சபின் அடுத்த முறை சாப்பிடுவது நீண்ட நாள் நல்லபடியாக வாழ்வதற்கான வழி; செரிச்சு இருந்தாலும் பசித்த பின் சாப்பிடு; மிகப் பிடிச்ச உணவு என்றாலும் கூட "போதும்" என அளவோடு சாப்பிட்டால் துன்பமில்லை, பெருந்தீனி தின்பவர் நோய்க்கு ஆளாவது தவிர்க்கவே முடியாத ஒன்று என தலையில் குட்டாத குறையாக சொல்கிறார்.
மருந்து என பெயர் கொண்ட அதிகாரமில்லையா, மருந்தைப் பற்றி சொல்லாமல் இருப்பாரா? சொல்கிறார். அதில் ஒன்று,
என்ன சாப்பிட்டோம், சாப்பிட்டது ஒழுங்காகச் செரித்ததா என்பதை கவனத்தில் கொண்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கை கழுவினாய் என்றால், மருந்து என்பதே உன் உடலுக்குத் தேவைப்படாது என்கிறார்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
மருந்தென வேண்டாவாம் = மருந்து என்பதே தேவையில்லை
யாக்கைக்கு = உடலுக்கு
அருந்தியது = உண்டது
அற்றது = செரித்தது
போற்றி = கவனத்தில் கொண்டு
உணின் = உண்டால்
"உண்டதையும், செரித்ததையும் கவனத்தில் கொண்டு சாப்பிட்டு வருவோர்க்கு மருந்து என்பதே தேவையில்லை" என்கிறார்.
நல்ல சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு வருவோர்க்கு "சாப்பிடும் முன், சாப்பிட்ட பின்" என எந்த மருந்தும் தேவைப்படாது.
ஐயன் வள்ளுவராகட்டும் மருத்துவர் பழனியப்பனாகட்டும், அவர்கள் சொல்வதெல்லாம் "போதும் என்ற வயிரே பொன்னுடல் போற்றும் வழி" என்பதுதான். வாயைக் கட்டி, வயிற்றையும் கட்டி உடலையும் ஆயுளையும் கெட்டியாக்குவோம்.
Tuesday, August 01, 2023
செங்கோலும் கண்ணீரும்
உலகம், மக்கள் நலம் நாடிய மாபெரும் மன்னர்களை மட்டுமல்ல, வழிநெடுகிலும் கொடுங்கோலர்களையும் கண்டே வந்து கொண்டிருக்கிறது.
தம்
குடிமக்கள் இயல்பாகச் சந்திந்த பிணி- மூப்பு-சாவு எனும் துன்பங்களைத் தம்
இளம் வயதில் கண்டு, குழம்பிப் போய், பதவியைத் துறந்து, துன்பத்தில் இருந்து
விடுதலைக்கான விடைதேடச் சென்றார் புத்த பிரான். வசதியான அரண்மனை வாழ்வை,
அழகிய குடும்பத்தைப் பிரிந்து ஏன் என் குடிமக்கள் துன்பப்படுகிறார்கள்? ஏன்
என்னால் மன்னனாக எதும் செய்ய இயலவில்லை? இதற்கு விடை கண்டே தீர வேண்டும்
என தன்னைத்தானே வருத்தி, நீண்ட தேடலுக்குப் பின் மெய் அறிந்தார். மனித
வாழ்வே மகத்தானது, வெற்று ஆசைகள் அதனைக் குலைத்துப் போடுகிறது, ஆசையே
துன்பத்திற்குக் காரணம் என போதித்து மக்களை சிந்திக்கத் தூண்டினார்.
உலகம்
அவரையும் பார்த்தது, அவரைத் தொடர்ந்த அசோகர் போன்ற கருணையாளர்களையும்
ஆட்சியாளர்களாகக் கண்டது. மனித உயிர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும்
உன்னதமானவையே என்று அறிவித்து மனித வரலாற்றில் விலங்குகளுக்கும்
மருத்துவமனைகளை அமைத்த மென்மனம் கொண்ட மனிதர் அவர்.
புத்தர், அசோகர்
போன்றோரை மட்டுமல்ல, ஆசையே உருவாகக் கொண்ட ஆட்சியாளர்களும் வந்த வண்ணமே
இருக்கிறார்கள். அவர்கள் கையில் சிக்கிய செங்கோல் வளைந்து கொடுங்கோலாக மாறி
மக்களை வதைக்கும் சூழல்களும் வரலாறு பார்த்துதான் வருகிறது. தமிழில்
"கொடு" என்ற சொல்லுக்கு "வளைதல்" என்று ஒரு பொருள் உண்டு. கடமை தவறி,
அறவழியில் இருந்து வளைந்து போன செங்கோல், வளைந்தகோல் = கொடு+கோல் =
கொடுங்கோல் என்றாகிறது.
கோல் என்பது ஆட்சி - குச்சி அல்ல.
நிற்க. தலைப்புக்கு வருவோம்.
ஐயன்
வள்ளுவர் இக்கொடுங்கோலர்களை நோக்கி அரசியல் எனும் இயலில் "கொடுங்கோன்மை"
என ஒரு முழு அதிகாரம் ஒதுக்கி எச்சரித்துத் தள்ளுகிறார்.
அந்த பத்து
குறட்பாக்களில் ஒன்று இயலாமையில் கண்ணீர் சிந்தும் குடிமக்களைக்
குறிக்கிறது. ஆட்சியாளர் பெரும் வலிமையோடு அதிகாரத்தில் அமர்ந்து
இருப்பவராக இருக்கலாம். எதிர்க் குரல்கள் ஓசையின்றி அமைதியாக்கப்படலாம்.
குடிமக்கள் எதுவும் செய்ய முடியாத இயலாமைச் சூழலில் தள்ளப்பட்டிருக்கலாம்.
ஆனால், அந்தக் குடிமக்கள் ஆற்ற முடியாத துன்பத்தில் சிந்தும் கண்ணீர்,
சிறுகச் சிறுகவேனும் ஆட்சியாளரின் வலிமை, அதிகாரம், செல்வாக்கு என எல்லா
செல்வத்தையும் தேய்த்து அழிக்கும் கருவியாகிவிடும் என
எச்சரிக்கை ஒலிக்கும் குறள்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
அல்லல்பட்டு = துன்பப்பட்டு
ஆற்றாது = தாள முடியாமல்
அழுத கண்ணீர் அன்றே = அழுத கண்ணீர் அல்லவோ
செய்வத்தை = ஆட்சி, அதிகாரம் எனும் செல்வத்தை
தேய்க்கும் = சிறுகச் சிறுக அழிக்கும்
படை = கருவி
எந்த
ஆட்சியாளரும் எவ்வளவு வலிமையானவராகத் தோற்றமளித்தாலும், குடிமக்கள்
கண்ணீர் சிந்தும்படி ஆண்டால் அவரது எல்லா செல்வமும் தேய்ந்து அழிந்து
போகும் என எந்த நாட்டுக்கும், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் படியாக
ஒலிக்கும் எச்சரிக்கை மணிக் குறள்.
Friday, July 14, 2023
நம்ம ஊர் பேரைக் காப்பாற்ற
நம்ம பேரை யாராவது பிழையா எழுதினா எம்புட்டு கடுப்பாவோம்?
பள்ளி,
கல்லுாரி, வேலை செய்யும் இடம் என எங்கேயாவது நம்ம பேரை யாராவது
எழுத்துப்பிழையோட எழுதினா சட்டுன்னு அது மட்டும் கண்ணுல படும்தானே? அதே
மாதிரி நம்ம ஊர் பெயருக்கும் ஒரு சிக்கல் இருக்கு. நம்ம ஊரோட பேரை சிலர்
தமிழ்ல எழுதும் போது, தெரியாம தப்பா எழுதிடறாங்க. நம்ம ஊர் பேரைக்
காப்பாற்ற நாம தானே சண்ட செய்யணும்? செஞ்சிடுவோம். :)
எங்க
வாத்தியார் ஒரு சூட்சமம் சொல்லிக் கொடுத்திருக்கார். ஏதாவது கதை சொல்லும்
போது அலுங்காம ஒரு இலக்கண குறிப்பையும் சேர்த்து சொல்லிடணும். ஒரே கல்லுல
இரண்டு மாங்கா-ன்னு ஆகிடும். நாம குட்டியா வெகு எளிதா ஒன்னு பார்ப்போம்.
தமிழ்ப் பெயர்கள் எந்த எழுத்தில் தொடங்கணும், எதுல தொடங்க கூடாது, எதுல முடியணும், முடியக்கூடாது என்பதற்கு விதிகள் இருக்கு.
அதுல எதெல்லாம் கூடாதுங்கறத மட்டும் பிழிஞ்சு எடுத்து இரண்டே வரில சொன்னா, இப்படிச் சொல்லிடலாம்:
1. இந்த 8 எழுத்துகள்ல தொடங்கக் கூடாது:
ட, ணன, ரற, லழள
2. இந்த 8 எழுத்துகள்ல முடியக் கூடாது:
க்ச்ட்த்ப்ற், ங்
அவ்வளவுதான். அவ்வளவேதான்.
அப்போ,
அது மாதிரி அமைந்த புதிய பெயர்களை எழுதும் போது என்ன செய்ய? மீசைக்குப்
பழுது இல்லாமலே கூழ் குடிக்க ஒரு வழி இருக்கு. "டக்"குனு மனசுல வெச்சுக்கற
மாதிரி அதையும் ஒரு கை பார்த்திடலாம்.
தூரமா இருக்கறதை காட்டும்
போது "அதை" என்று சொல்றோம், அதே பக்கமா இருந்தா "இதை" என சுட்டிக்காட்டி
சொல்றோம் இல்லையா? அந்த அ, இ என்னும் எழுத்துக்கள்தான் நம்ம கதாநாயகர்கள்.
(இன்னொரு எழுத்து "உண்டு". அது பொறவு).
அ அல்லது இ இந்த 2ல ஒன்றை
முதல் எழுத்தா வெச்சி எழுதிடுங்க. வாய் விட்டு படிக்கும்போது அதை
விட்டுட்டு படிச்சிடலாம். ஆங்கில சைலன்ட் எழுத்துக்கள் முதலில் வருவது போல
என்னு வெச்சுகுங்களேன் (Knife, Write, Psychology).
அப்படின்னா, நம்ம ஊர் becomes
இரிச்மண்...
கடைசி எழுத்தை என்ன செய்ய?
அங்கே "உ" தான் கதாநாயகி. மெய் எழுத்தோடு உகரம் சேர்த்து எழுதிட வேண்டியதுதான்.
ட் + உ = டு
டடா..
"இரிச்மண்டு".
ஆச்சா?
இப்போ, வழக்கமான ஒரு கேள்வி வரும்.
இந்த "அமைதிப் புறாவை" (Silent letter) தெரியாதவங்க E-Richmond-u என்று வாசிக்க மாட்டாங்களா?
வாசிப்பாங்கதான்.
ஒன்னு, அவங்க வெளியூர்காரர்களாக இருப்பாங்க, இல்லைன்னா கிண்டலுக்காக
அப்படி வாசிப்பாங்க. விபரம் தெரிஞ்சவங்க சரியா வாசிச்சுடுவாங்க.
நம்ம
ஊர் பெயரைக் காப்பாற்ற நாமதானே சண்டை செய்யணும்? செய்வோம். என்னாங்கறீங்க?
இனியும் யாராச்சும் தப்பா எழுதட்டும், உண்மையிலேயே சண்டைக்குப் போவோம்.
சரிதானே? :)
வாழ்க இரிச்மண்டு, வளர்க தமிழ்.
ஆங், இன்னொன்னு.
உங்க சொந்தப் பெயரைக் கூட இதே விதிகளின்படி பட்டி- டிங்கரிங் செய்து கொள்க. உங்களோடு சேர்ந்து தமிழன்னையும் மகிழ்வாள்.
(தினப்படி வாழ்வில், தமிழில் உங்கள் பெயர் எழுதும்போது பயன்படுத்துங்கள். உங்கள் சான்றிதழ்கள் இருக்கறபடியே இருக்கட்டும்)
Sunday, July 02, 2023
கலகத்தலைவன்
உலகில் நாம வந்த நாள் முதல் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கத்தான்
செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து நம்மை எச்சரிக்கவும் கலகக்காரர்கள்
இருக்கிறார்கள்.
பொதுவாக மக்கள் உணர்ச்சித் திலகங்கள். ஏமாற்றுவது
எளிது. பரிதாபமாக மூஞ்சி வெச்சுட்டு பச்சைப் பொய் சொன்னா கூட நம்மாளுகள்ல
பாதி பேராவது நம்பிடறாங்க. சாமி சமாச்சாரம்னா அவ்ளோதான், பேச்சே கிடையாது.
சரக்குக்கும் சாமிக்கும் தான் கூட்டமே நம்மிடையே. கடவுள் பெயரைச் சொல்லி
ஏமாற்றும் களவாணிகளுக்கு வேலை பட்டென முடிகிறது எப்போதும்.
கலகக்காரர்களும்
சமூகப் போராளிகளும் எச்சரிக்கை மணி அடிச்சுட்டே தான் இருக்காங்க,
நமக்குத்தான் அவ்வப்போது காது, மூளை எல்லாம் தூங்கப் போய் விடுகிறது.
நம்மாளு
வள்ளுவர் அப்படியான ஒரு கலகத்தலைவர். துறவு கொள்ளப் போகிறேன் என்பவனிடம்
பேசுவது போல ஆரம்பிச்சு நமக்கு பல எச்சரிக்கைகளைக் காட்டுகிறார் துறவறம்
என்ற பகுதியில்.
பதிமூன்று அதிகாரங்கள் அதில் எழுதுகிறார். துறவி
ஆகப்போகிறேன் என்பவரிடம் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்று பட்டியல்
போடுகிறார்.
திருடாதே, பொய் பேசாதே, சிடுமூஞ்சியாட்டம் இருக்காதே,
கெடுதல் செய்யாதே அப்படின்னு போய்டே இருக்கு. அதில் பலமா யோசிக்கற மாதிரி
ஒரு அதிகாரம். "கறி திங்காதே" என்று. என்னடா, சாமியாரா போறேங்கறவன்ட இதச்
சொல்றாரேன்னு யோசிக்க ஆரம்பிச்சா, "யோவ் வள்ளுவரு செம ஆளுய்யா நீ" என
சொல்லத் தோன்றும். கறி தின்றதும் திங்காததும் அவனவன் விருப்பம்; பெரிசா
"அறிவுரை" சொல்ல யாரும் வரவேண்டாம், ஆனா நான் "முற்றும் துறக்கப் போகிறேன்"
அப்படிங்கறவன்ட, "மொதோ பிரியாணி குண்டான கீழ வை" என்பதில் தப்பில்லை என்று
நினைத்திருக்கிறார். சரியாத்தான் படுது. யோசிக்க யோசிக்க ஆளு உண்மையிலேயே
கன்னியாகுமரில நிக்கிற மாதிரி பெரிசா மனசுல தெரியறார்.
"வேண்டாத வேலை"* அப்படின்னு ஒரு பத்து குறள் சாமியாரா போறவனுக்கு சொல்ற மாதிரி.
மனசுல
வஞ்சம் வெச்சுகிட்டு சாமியாரா போறேன்னு சொன்னா வேற யாரும் வேண்டாம் உன்
உடம்பே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனச ஒழுங்கா வெச்சுக்காம
பெரிய ஆளாட்டம் படம் போட்டாய்னா ஒரு பயனும் இல்லை தெரிஞ்சுக்கோ என்று
திட்டுகிறார் இன்னொரு குறளில். வெள்ளையும் சொள்ளையுமா வேசம் போட்டுகிட்டு
வேண்டாத வேலை எதும் செய்யறது, புதர்க்குள்ள ஒளிஞ்சி அப்பாவிப் பறவைகளைப்
பிடிக்கும் வேடன் செய்யும் செயல் போல தரங்கெட்டது என கடுமையாகத்
திட்டுகிறார்.
இப்படி சாமியார் பயலுகளைத் திட்டிகிட்டே வர்றவர் மெதுவாக நம்மை நோக்கி பேசத் துவங்குகிறார்.
மனசுக்குள்ள
அழுக்கை வெச்சுட்டு எவ்ளோ தண்ணில முங்குனாலும் அழுக்கு போகாது. அழுக்கு
மனசோட பல பேர் சாமியார்னு திரியறான் கவனம் என்கிறார். ஆளப்பார்த்து எதையும்
முடிவு செய்யாதே. நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைஞ்சு வளைஞ்சு
இருக்கும் யாழ் அருமையான இசை கொடுக்கிறது. செய்யும் செயலைக் கொண்டே ஒருவர்
எப்படியானவர் என்பதை உணர வேண்டும், புரியுதா? என்கிறார்.
எல்லாம் சொல்லிட்டு, கடைசியா
"இவனுக
ஏன் ஒன்னு மொட்டையடிச்சுட்டு திரியறானுக, இல்லைன்னா கசாமுசான்னு முடி
வளர்த்திட்டு திரியறானுக, உலகத்தார் முகம் சுழிக்கற மாதிரி நடந்துக்கறத
நிறுத்தினாலே போதும்" என முடிக்கிறார்.
அப்போது இருந்தே இவனுகளால ஏதோ நடந்துகிட்டு இருக்கு. கடுப்பாகி திட்டித் தள்ளி இருக்கார்.
முழு
அதிகாமுமே நையாண்டியும் திட்டுகளும்தான். கூடவே கலகக் குரல். சமயம் எனும்
மனதை மயங்கச் செய்யும் கருவியைப் பற்றி எச்சரிக்கைகள், கிண்டல்கள்
எப்போதும் பெரியோர் செய்துதான் வருகிறார்கள்.
நாமதான்...
மேலே கடைசியாகக் குறிப்பிட்ட குறள்:
பழித்தது ஒழித்து விடின்.
மழித்தல் = மொட்டை அடித்தல்
நீட்டல் = நீண்ட முடி வளர்த்தல்
படித்தவுடன் அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசமான குறள்.
-------
* "வேண்டாத வேலை" = கூடா ஒழுக்கம்