உலகம் எங்கும் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறோம், பொது இணைப்பாக மொழியுணர்வு கொண்டு இருக்கிறோம். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அதைப் பற்றி பேசி மகிழ்கிறோம்.
நல்லது.
இப்படியாக மனிதரை இணைக்கும் அட்டகாசமான கருவியான தமிழ் எப்படி இவ்வளவு காலம் பிழைத்துக் கிடக்கிறது? பேசும் மனிதர்கள் தோராயமாக 80 ஆண்டுகள் மட்டுமே வாழ்கிறோம். ஆனால், சங்கிலித்தொடராக அடுத்தடுத்த தலைமுறைக்கு தமிழைச் சொல்லிக் கொடுத்து பயன்படுத்தவும் ஏற்பாடு செய்தவண்ணம் இருக்கிறோமே எப்படிச் சாத்தியப்பட்டது, படுகிறது?
எத்துணை புறக்காரணிகள் இருந்தாலும் அதை எல்லாம் விட தமிழின் அடிப்படைச் சட்டகம் (Foundational framework) கொண்டிருக்கும் உறுதியே காரணம்.
எவ்வளவு வட்டார வழக்குகள், பிறமொழியில் இருந்து வந்து இயல்பாகக் கலக்கும் சொற்கள், சொல்லாடல்கள், சட்டம் சமயம் போன்றவை தொடுக்கும் அழுத்தங்கள். இத்தனையும் தாண்டி அதன் அடிப்படை மாறாது இருக்க நாம் ஏற்று, பழகிக் கொண்ட இலக்கண முறைமையே தமிழைக் காத்து வருகிறது.
குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித்தரும் போது ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் வழக்கமான ஒரு கேள்வி, "ஏன் தமிழில் பேசுவதும் எழுதுவதும் வெவ்வேறு மாதிரி இருக்கு?" என்பது. மாணவர்களிடம் பதில்-கேள்விகள் கேட்டு அவர்களே அவர்களின் கேள்விக்கான விடையைச் சொல்ல வைத்து புரியவைப்பார்கள் தமிழாசிரியர்கள்.
மாணவர்களின் கேள்விக்கான எளிய விடை: தரப்படுத்துதல் (Standardization).
எப்படி வேணா பேசிக் கொள்ளலாம், எழுதும்போது இலக்கண முறையில் எழுதுதல் வேண்டும் - ஏனெனில் பேசும் போது கேட்பவர் எதிரில் இருக்கலாம், புரியாவிட்டால் மீண்டும் புரியும்படி விளக்கமாகச் சொல்லும் வாய்ப்பு உண்டு, எழுதியதைப் படிப்பவர் எங்கும் இருக்கலாம் பலகாலம் தாண்டியும் படிக்கலாம் அவருக்கும் புரிய வேண்டும் எனில் தரப்படுத்தப்பட்ட வடிவில் (standardized formatல்) எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் அச்சு, செய்தி வாசிப்பு போன்றவை வருவது தரப்படுத்தப்பட்ட வடிவில்.
தமிழ் பிழைத்துக் கிடப்பது அதன் இலக்கணத்தால். எவ்வளவு வளைத்தாலும் ஒடிந்து போகாமல் காப்பது அதன் தரப்படுத்தலால்.
இப்போது தலைப்புக்கு வருவோம்.
தமிழ் எழுத்துக்கள் 30.
உயிர் 12, மெய் 18 - மிதம் உள்ளவை அனைத்தும் இதன் சேர்க்கை.
முதல் பத்தியில் சொன்னது போல எல்லா நாடுகளிலும் வாழ்கிறோம், தமிழ் பேசுகிறோம். அப்படியெனில் அந்தந்த வட்டார மொழிகளின் "மணம்" தமிழிலும் கமழும், - அது மிக இயல்பானது. அம்மொழிகளின் சொற்கள், சொல்லாடல்களை தமிழாக்கி தமிழில் பேசும் போது பயன்படுத்துகிறோம், தவறில்லை. வினைச் சொற்களில் கைவைப்பதே இல்லை. (லவ் பண்ணு, லைக் பண்ணு போன்ற சலம்பல்கள் அவ்வப்போது வரும், தானாக மறைந்தும் போகும்)
பெயர்ச் சொற்களில்தான் குழம்பிப் போகிறோம்.
தமிழ்நாட்டின் இந்நாள் முந்நாள் முதலமைச்சர் பெயர்களை எப்படி எழுதுவது? January, August போன்றவை, Paris, Texas, Washington, Thomas Jefferson, தொடங்கி Nagesh, Suresh வரை எப்படி தமிழின் 30 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி எழுதுவது? சனவரி, பாரீசு, சுரேசு என்று எழுதினால் படிப்பவர் சிரிக்கமாட்டாரா?
சிரிக்கட்டும். பின் சிந்திக்கக்கூடும்.
உலகின் எல்லா மொழிகளின் ஓசைக்கும் தனித்தனி எழுத்து தமிழுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு அறிவார்ந்தது?
பிரஞ்சு மொழியில் John என்பதை எப்படி உச்சரிப்பார்கள் என்று தேடிப்பாருங்கள். அந்த ஒலிக்கொரு தனி எழுத்து ஆங்கிலத்தில் வைத்துக் கொள்ளச் சொல்லாமா? சீன அரேபிய மொழிகளின் ஒலிகளுக்கும் தமிழில் தனித்தனி எழுத்துக்கள் வைத்துக் கொள்ளலாமா? இந்தப் பட்டியலை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?
அப்புறம் தமிழ் என்னாகும்?
மற்ற மொழிகளை விடுவோம், நம்மில் கிட்டத்தட்ட எல்லோரும் கற்ற/ கற்கும் மொழி ஆங்கிலம். அதன் Z எழுத்தைத் தமிழில் எப்படி எழுதுகிறோம்? J என்பதற்கு என்ன "தமிழ் அல்லாத" வரி வடிவத்தைப் பயன்படுத்துகிறோமோ அதையே "மறுசுழற்சி" செய்து ஒப்புக் கொள்கிறோம் - எவ்விதச் மனச்சிக்கலும் இன்றி.
Zimbabwe, Jeep இரண்டையும் தமிழில் எழுதும் போது அவற்றின் முதல் எழுத்து ஒரே வரி வடிவம் - தமிழ் எழுத்து இல்லை என்றாலும் குழம்புவதில்லை. ஒரே எழுத்தை வெவ்வேறு ஒலிகளுக்கு மனத்தடை இன்றி பயன்படுத்துகிறோம்.
அதே மனம் மற்றவற்றுக்கும் ஏன் வர மறுக்கிறது?
சிம்பாவே, சீப் என்று எழுதினால் உலகம் அழிந்தா போய்விடும்?
எழுதும் போது சனவரி, அதை வாசிக்கும் போது January என்பதில் என்ன குழப்பம், கூச்சம்?
மனம் வருவதும் கூச்சம் வருவதும் அவரவர் கல்வி, கேள்வியறிவைப் பொறுத்தது. ஆனால் தமிழ் இலக்கண விதி, அப்படித்தான் தமிழ் எழுத்துக்களை மற்ற மொழி ஒலிகளுக்கு "மாற்றாக" கொண்டு எழுதச் சொல்கிறது. தொல்காப்பியர் எனும் கண்டிப்பான ஆசிரியர் தொடங்கி பணவந்தியார் எனும் மென்மையான சமணத் துறவியார் வரை வகுத்துக் தந்த வழிமுறை அதுதான். தமிழ்ப் பேட்டைக்குள் தமிழ் இலக்கணமே முதன்மை. அமெரிக்கச் சாலையில் எவரும் வலது புறம்தான் வண்டியோட்ட வேண்டும் - வேற்று நாட்டில் மன்னனாகவே இருந்தாலும்.
தொல்காப்பியர் காலத்தில் பரவலாக இச்சிக்கல் இல்லை. ஓரத்தில் குத்த வைத்து உட்காந்திருந்திருக்கும் போலிக்கிறது. அன்னார் ஒரு கோடி மட்டும் காண்பித்து எச்சரித்து விட்டு விட்டார்.
சில நூற்றாண்டுகளுக்குப் பின் பணவந்தி முனிவர் நன்னூல் என்ற தொல்காப்பியத்தின் வழிநூல் எழுதும் போது சமயம் என்ற போர்வை போர்த்திக் கொண்டு இச்சிக்கல் நடு வீட்டில் வந்து அமர்ந்து விட்டிருக்கிறது.
சமயக் காரணங்களுக்காக அந்தந்த சமயம் சார்ந்த பெயர்ச் சொற்களை எழுதும்போது இம்முறையைப் பயன்படுத்துங்கள் என்று ஒரு "நடுப்பாதை" போட்டுக் கொடுத்திருக்கிறார். தமிழ் எழுத்துக்களை மட்டும் கொண்டு எழுதும் முறை. பாம்பும் சாகாமல் கோலும் உடையாமல் இருக்க வழி சொல்லி இருக்கிறார். அந்தப்பட்டியலும் விளக்கமும் இன்னொரு கட்டுரையில்.
சுருக்கமாகச் சொன்னால் "தாமசும் சுரேசும் வாசிங்டனில் சந்தித்தனர்" என்று எழுதுவது சாலச்சரி. எழுதுபவர் சரியாக எழுதியிருக்கிறார். படிப்பவர் சரியாகப் படிப்பது அவரது கடமை, பொறுப்பு.
அதெல்லாம் முடியாது, இல்லியனாய்சு, சோசப்பு விசய் என்று எழுதினால் சிரிப்போம் என்பவர் யாரெனப் பார்த்தால், தமிழ் அறியாதாரோ, சரியாகப் படிக்க முடியாதவரோ அல்லர். போகட்டும்.
சரியாகத் தமிழை எழுதியதை எள்ளுவோர்க்கு ஒரு பெயரை யோசிக்க வேண்டாம். தமிழ் அறம் அவரையும் காக்கட்டும்.
வேற்று மொழிக் கதையைத் தமிழில் பெரும் கற்பனை சேர்த்து அட்டகாசமாக எழுதிய கம்பன் ஓரிடத்தில் கூட கிரந்தத்தைப் பயன்படுத்தவில்லை. தமிழை தம் சமய வழிபாட்டுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திய சீர்திருத்தக்காரர் இராமனுசர், கிரந்தம் இன்றியே கையெத்திட்டுருக்கிறார்.
கம்பனை விட இராமானுசரைவிட தமக்கு மேலாகத் தமிழ் தெரியும் என்று நினைத்துச் சிரிப்போர் சிரித்துக் கொள்ளட்டும். அச்சிரிப்பு தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத தம் சொந்த இயலாமையை நோக்கியது என்பது உறைக்கும் போது நின்றுபோகும்.
சிரிப்போரைத் திருத்த "அது கண்ணாடி சார்" என்று நாம் சொல்ல வேண்டியதில்லை
நம் கடன், நம் கைக்கு பல பல நூற்றாண்டுகள் கடந்தும் அழகிய வடிவோடு வந்து நம்மை இணைக்கும் தமிழுக்கு நல்லது செய்யாவிடினும் காயப்படுத்தாது அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வது. இயன்ற போது ஒரு துரும்மையாவது கிள்ளிப்போடுவது. அப்பணியைச் செய்து கிடப்போம்.
இக்கட்டுரையில் கிரந்தமோ வேற்று மொழிச் சொற்களைத் தமிழ் போலவோ கொண்டு எங்கும் எழுதவில்லை. அவற்றின் தேவை இல்லவே இல்லை, அவையின்றி எந்த இழப்பும் இல்லை என்பது கண்கூடு.
தமிழ் அப்படித்தான் - தனித்தே இனிக்கும், மணக்கும், மயக்கும், இயங்கும்!
வாழ்க தமிழ்.
தலைப்புக்கான விடை: 0
