Tuesday, June 11, 2019

அவர் அப்படித்தான்

ஒவ்வொரு முறை அவரை ஊடகமோ மற்றவர்களோ காயும் போதும் இப்படித்தான் நினைத்துக் கொள்கிறேன்.

"என் நெருங்கிய நண்பன் தவறிச் செய்த தவறுகளுக்காக எப்படி ஒரு போதும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டேனோ அப்படித்தான் இவரையும்"

உண்மைதான். அப்படித்தான். அவரும் அப்படித்தான். விரும்பினால் என் பேச்சைக் கேளுங்கள் இல்லாவிட்டால் நகருங்கள் என்றே இருந்தார் /கிறார் /ப்பார்.

நெய்யில் வறுத்த முந்திரி போட்ட பாயாசத்தை புதுப் பொண்டாட்டி கொடுப்பது போல சிலதும், வெறும் வற மொளகாயும் அரைச்ச செலவும் சேர்த்து செஞ்சது இது, கண்ணு என்று ஊருக்கு போயிருக்கும் போது அம்மா ஊற்றும் கோழிக் குழம்பு போல சிலதுமாக மனதுடனேயே எப்போதும் நெருக்கமாக இருக்கும் அவரை எப்படி, யாரிடம் விட்டுக் கொடுக்கப் போகிறோம்? ஒருக்காலும் முடியாது.

அவரது பொருந்தாத பேச்செல்லாம் கொலுசு போட்ட குட்டிக் காலுடன் செல்லமகள் மார்பினில் உதைப்பது போலத்தான். எப்புடி ஒதைக்குது பாரேன் எனும் உங்கள் அக்கறையை, "உதை வாங்கும்" அப்பன்கள் கண்டு கொள்வதே இல்லை - அவரைப் போலவே.

எனவே நண்பர்களே, நண்பர் போன்றோரே, மற்றவர்களே, அவரை வைய்யும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்: அவர் உங்கள் ஏச்சுகளை கண்டு கொள்வதில்லை என்ற காண்டு உங்களுக்கு இருப்பது தெரியும், அதை விட பெரிய காண்டு,  நாங்களும் கூட அப்படியே என்பதனை அறிந்து அடைக.

கண்டுகொள்ளாதது எப்படி மனதை நோகடிக்கும்? அவர் மேற்கோள் காட்டிய குறள் சொல்லுவது போலத்தான் (யாதனின்...)

கூடுதலாக, அவர் உங்கள் வசையொழிய வாழ்வாங்கு வாழ்கிறார், அவரை வைவோரும் அவர் இசைபடவே நல்வாழ்வு வாழ்வீராக. ​
அவரும் அதைத்தான் விரும்புவார்.

ஏனெனில், அவர் அப்படித்தான்.