Sunday, July 16, 2017

ஒரு சக்களத்திச் சண்டை


என்னமோ ஏதோன்னு பதறிட வேண்டாம். இது தப்பான தொடர்பு பற்றியதல்ல. ​தமிழ் இலக்கணம் தொடர்பானது.

தமிழில் இருபிறப்பி என்று ஒரு சொற்பிரிவு (category) உண்டு. இரு வேறு மொழிகளின் பகுதிகள் இணைந்து புதியதாக ஒரு தமிழ்ச் சொல்லைத் தருவது.

இருபிறப்பி =  Hybrid.
இதுதான் இன்றைய குறிப்பிற்க்கான அடிப்படை.

சக்களத்தி தப்புன்னு தெரியும், சக்களத்தி -ன்னு சொல்வதும் தப்புங்கிறாங்க.
சக + களத்தி = சக்களத்தி.
களத்தி  = துணைவி.
ஆக, இன்னொரு களத்தி = சக களத்தி = சக்களத்தி.

அப்படியானால் அவரவர் தங்களின் "திருமதி மட்டும்"-ன்னு இருந்துட்டா தப்பில்லை; இல்லையா?
Socially சரி. ஆனால் இலக்கணப் படி "திருமதி"-யும் தப்புங்கறாங்க.

ஸ்ரீமதி என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாம் அது. "அப்படியே" பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்துட்டாங்க போல.
ஸ்ரீ + மதீ => திரு + மதி. ஏற்கனவே நம்மிடம் மதி = அறிவு* என்று இருப்பதால் அப்படியே விட்டுடாங்களோ என்னவோ.
*(மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் - திருக்குறள்)

இருப்பினும், மனைவி மதி நிறைந்தவராக இருத்தல் மகிழ்வே.

அப்போ எப்படி மணமான பெண்ணை மதிப்போடு குறிப்பிட?
திருவாட்டி என்பதே சரியாம்.

சக்களத்தியை?
எங்கையர்.

ஒரு பாட்டுல, பாணன் கிட்ட புலப்புகிறாள் ஒரு தலைவி.
"அறிவு கெட்டுப் போய் இங்க ஏன்டா வந்த, அவன் அங்கன எங்கைகிட்ட இருப்பான் போ"-ங்கற மாதிரி வரும்.

நீதானறிவயர்ந் தெம்மில்லு ளென்செய்ய வந்தாய்
நெறியதுகா ணெங்கைய ரிற்கு (ஐந்திணையைம்பது)


இப்போ இருபிறப்பிகள் என்னென்ன புழங்கறோம் யோசிச்சு பாருங்க.
தமிழ் + <பிற மொழி >

=====================

இச்சொல்லை வைத்து ஒரு நாடகக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்:

-------------
காட்சி 1:
அவள் : எங்கய்யா, வீட்டுக்கா போயிட்டு வர?
அவன்: எங்கையா வீட்டுக்கு போயிட்டு வரேன்.
அவள்: எங்கே போயிட்டு வர???
அவன்: அதான் சொல்றேனே. எங்கையா வீட்டுக்கு.
அவள்: எடு அந்த தொ.. கட்டையை..

அவன் ஓட, அவள் துரத்த, காட்சி முடிகிறது.
-------------

:-)

Saturday, July 15, 2017

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை
சிறு வயதில் நாம் படித்த இலக்கணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கொஞ்சம் நினைவு கூறலாம்.
நான் எட்டாவது படித்துக்கொண்டு இருக்கும்போது தமிழாசிரியர் இலக்கணக் குறிப்பு என்று பலகையில் எழுதித் தள்ளுவார். ஆனால் அது பாடத் திட்டத்தில் கிடையாது. தேர்வில் கேள்விகள் ஒன்பதாம் வகுப்பில் மாத்திரமே வரும். அதனால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

தமிழ் போல நுணுக்கமாக இலக்கணக் குறிப்புகள் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கும் ஒரு இலக்கண குறிப்போடு விளக்கும்போது அந்த வார்த்தைகளின் அர்த்தம் மேலும் மெருகு கூடுகிறது.

எளிதாக ஆரம்பிக்கலாம். எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

"ஊறுகாய்" : வினைத்தொகை. ஊறுகாயை "ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊரும் காய்" என்று எந்த காலத்துக்கும் ஒவ்வுமாறு கூற முடிவதால், வினை மறைந்திருக்கிறது. எனவே வினைத்தொகை.

மேலும் சில எளிய இலக்கணக் குறிப்புகள்
  • எல்லோருக்கும் தெரிந்த மறக்க முடியாத ஒன்று "ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம்" - உதாரணம் - அணையா விளக்கு. அணையாத விளக்கில் "" -வை நாம் ஒதுக்கி விடுவதால் இந்த பெயர்.
  • வாழ்க , வருக - இவற்றை "வியங்கோள் வினைமுற்று" என்பார்கள்.
  • வந்தவன் சென்றான் - இந்த "வந்தவனை" வினையாலணையும் பெயர் என்று கூறுவார்கள்.
அடுத்து சில உயர்வு , தாழ்வு சிறப்புகள். சில இடங்களில் "உம்" அல்லது "ஏ" இவை உயர்வு அல்லது தாழ்வைக் குறிக்கும். நான் சாத்தூரில் 11 -ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது, ஆசிரியர் ஒரு மன்னர் போர் செய்த கதையை விளக்கும்போது அதில் "மன்னனும் தோற்றான்" என்ற வாக்கியம் வந்தது. அவர் அதை "தோற்கக் கூடாத மன்னனே தோற்று விட்டான், இந்த உம்மை "தாழ்வுச் சிறப்பும்மை" என்று கூறினார். நான் உடனே எழுந்து "இந்த இடத்தில் தோற்க மாட்டான் என்று எதிர் பார்க்கப்பட்ட மன்னனே தோற்று விட்டான், அந்த உம்மையில் மன்னனின் உயர்ச்சி வெளிப்படுகிறது, அதனால் இது "உயர்வுச் சிறப்பும்மை" என்று கூறினேன். அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அந்த வகுப்பில் நான் புதிய மாணவனும் கூட. நல்ல வேளையாக அவர் தவறாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் வகுப்பில் அவர் நுழைந்த உடன், என்னை எழுப்பி உன் பெயர் என்ன அன்று கேட்டு விட்டு, இந்த "மன்னனும்" பற்றி நான் மற்ற இரண்டு தமிழ் ஆசிரியர்களிடம் விவாதித்திருந்தேன். அது உயர்வுச் சிறப்பும்மை - தான் அன்று பெருந்தன்மையாக தன தவறை திருத்திக் கொண்டார்.

தாழ்வு சிறப்பும்மை - ஹர்பஜன் சிங்கும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். இந்த இடத்தில் "உம்" ஹர்பஜன் சிங் ஒரு நல்ல மட்டையாளர் அல்ல என்று உணர்த்துகிறது. எனவே தாழ்வு சிறப்பும்மை.

இது போல ஏகாரம். ஸ்ரீதர் நல்ல கேரம் வீரர். நான் உப்புச் சப்பிலாமல் ஆடி அவரை எப்படியோ வென்று விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். அவர் கூறுகிறார் "இவன் என்னையே ஜெயித்து விட்டான்". இது ஸ்ரீதரின் திறமையை உயர்வாகக் குறிப்பிடும் "உயர்வுச் சிறப்பு ஏகாரம்". நான் கூறுகிறேன். "நானே ஸ்ரீதரை ஜெயித்து விட்டேன்" இது என்னுடைய திறமையின்மையைக் குறிக்கும் தாழ்வுச் சிறப்பு ஏகாரம்"

இன்னொரு வித்தியாசமான "உம்மை". வகுப்பறைக்கு ஆசிரியரும் வந்து விட்டார் என்ற தொடரில் உள்ள "உம்", மாணவர்கள் ஏற்கனவே வந்து விட்ட ஒரு விஷயத்தை தெரிவிக்கிறது. இது "இறந்தது தழுவிய எச்ச உம்மை" என்று கூறப் படுகிறது.

அன்மொழித் தொகை - இது சற்று புதிரானது.

செங்கொடி வந்தாள் - இதில் செங்கொடி என்பது "செம்மையான கொடி". செம்மை என்பது ஒரு பண்பு. அது மறைந்து வருவதால் இது ஒரு பண்புத்தொகை. ஆனால் இங்கு செங்கொடி என்பது செம்மையான கொடி போன்ற ஒரு பெண்ணைக் குறிக்கிறது. அதனால் இது " பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படுகிறது.

இது போல் தேன்மொழி வந்தாள் என்ற தொடரில் தேன்மொழி "உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படும். (தேன் போல மொழி பேசும் பெண் வந்தாள்)

ஓடு -
இந்த சிறிய வார்த்தையின் இலக்கணக் குறிப்பு கொஞ்சம் நீளமானது. செய் எனும் வாய்பாட்டு ஏவல் ஒருமை வினைமுற்று.

தமிழ் இலக்கணம் பற்றி பேச ஆரம்பித்தால் அது ஒரு கடல், நாம் கொஞ்சம் கையில்
அள்ள முடிந்தால் நம்முடைய பாக்கியம்.

நன்றி.






Sunday, July 09, 2017

இரண்டு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருமா, எப்படி? (ஞா.போ)


ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது மேலே உள்ள கேள்வி வந்தது.

மகிழ்ச்சி. பார்த்திடுவோம்.
 
தலைப்பிற்குள் போகும் முன் இன்னொரு குறிப்பு:
அமெரிக்கச் சாலைகளின் 1 U turn = 2 left turns என்று தனித்தனியாகக் கருதும் விதியைப் போல தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் மெய் + உயிர் என்று தனித்தனியாகவே கருதப்படுகிறது. அசை பிரிக்க மெனக்கெட வேண்டியதில்லை.
 
எ.கா:
அம்மா = அ + ம் + ம் + ஆ

இப்படி, இரு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவதை வெகு இயல்பாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோல வரும் மெய்யெழுத்து பயன்பாட்டிற்கு ஒரு கலைச்சொல் (Technical term) இருக்கிறது.

மெய் மயக்கம்.

அதில் உட்பிரிவுகள் உண்டு. என்னென்ன எழுத்துக்கள் எதனை தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு. தமிழ் கற்போரை மிரட்ட அல்ல; கவிதைகளின் (பாடல்/பா/செய்யுள்) ஓசை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விதிகள்.

மெய்ம்மயக்கத்தில் ஒரு வகை உடனிலை.
அம்மா = ம் என்ற மெய், தன்னுடன் இன்னொரு முறை தானே வரும் நிலை.
உடன் + நிலை.

அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை (தொ.கா)
இது போல் எளிய வகைகளும் அதனைக் குறிக்க விதிகளும் உள்ளன.

இப்போதைக்கு முதல் வரியில் கேட்ட கேள்விக்கு பதில்:
மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும். அதற்கு பெயர் மெய்மயக்கம் (மெய்ம்மயக்கம் என்றும் சொல்வதுண்டு).

மெய் எழுத்தைத் தொடர்ந்து உயிர்மெய்யாக இல்லாது straight-ஆக இன்னொரு மெய் எழுத்து வருவது ஈரொற்று மயக்கம்.
பெரிசா ஒன்னும் இல்லை.
இரண்டு ஒற்று மயக்கம் = ஈரொற்று மயக்கம். அவ்வளவுதான்.

மூன்று மெய்கள் கூட மயங்கி (சேர்ந்து) வரும்: வாழ்த்து = வா + ழ் + த் + த் + உ

Btw, மயக்கம் என்றால் சேர்ந்து வருதல். தலை சுற்றல் மட்டுமில்லை.
தமிழ் படிக்கையில் தலைசுற்றல் இருக்கக் கூடாது. :)

என் பங்குக்கு இரு சொற்களை இரண்டாம் வரியில் சொல்லி இருக்கிறேன். 
(மகிழ்ச்சி, பார்த்(த்+இ)டுவோம் = பார்த்திடுவோம்)
படிப்பவர்களும் உங்கள் பங்குக்கு முயன்று பாருங்கள்
​இனிய, எளிய தமிழ்.
வாழ்க.​