Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Sunday, May 01, 2022

பண்ருட்டி பலாச்சுளைகள் - 1

 

பண்ருட்டியில் எங்கள் வீட்டைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் எழுதியதில் இருந்து ஒரு யோசனை. நண்பர்களைப் பற்றி எழுதினால் என்ன? தேவதைகள் என்ற தலைப்பில் ஒரு ஶ்ரீரங்கத்துக்காரர் எழுதிவிட்டார். அங்கு கோவில்கள் அதிகம் என்பதால் இருக்கலாம். எனக்கு பண்ருட்டியில் பலா, முந்திரியைத் தாண்டி வேறு என்ன தோன்றப் போகிறது. "பண்ருட்டி பலாச்சுளைகள்" என்கிற தலைப்பில் பண்ருட்டி நண்பர்களைக் குறித்து தொடரப் போகிறேன்!


குலாம்!


இந்தப் பெயரைக் கேட்டாலே என் நண்பர்கள் அனைவர்கள் முகத்திலும் ஒரு புன்சிரிப்பாவது வராமல் இருக்காது. அந்த அளவுக்கு அனைவருக்கும் நண்பன், சிரிக்க வைப்பவன். எப்போதும் முகத்தில் சிரிப்புதான். வகுப்பின் கோமாளி! அவனை கோபமாகவோ, வருத்தமாகவோ பார்த்ததாக நினைவே இல்லை. 


எல்லா ஆசிரியர்களையும் வம்புக்கிழுப்பான். சட்டையின் மேல் பித்தான்கள் போட்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்திய ஒரு ஆசிரியர் பித்தான்களை திறந்து போட்டிருக்கும் மாணவர்களை அடித்து பித்தான்களை போடச் சொல்லுவார். அவரே இவனை அருகில் அழைத்து பித்தான்களை போட்டுவிட்டிருக்கிறார். ஆங்கில வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்கள் தமிழ் பாடம் வராமல் ததிங்கணத்தோம் போடுவது சகஜம். ஆனால் இவன் ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியரிடம் ஏழாவது எட்டாவது வகுப்பிற்குமேல் தமிழ் பாடம் தேவையில்லை என்று ஒரு நாள் வாதம் செய்தான். எங்களுக்குத்தான் தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமே இனிமேல் எதற்கு என்று. ஆசிரியரும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். கடைசியில் உனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்தானே. ஞமலி என்றால் என்ன என்று கேட்டார். இவன் தெரியாது சார், அப்படி என்றால் என்ன என்றான். நாய் என்றார். இவன் - நான் நாய் என்று சொல்லிவிட்டுப் போகிறேன், எதற்கு ஞமலி, கிமலி எல்லாம் என்றான். வகுப்பே அதிர்ந்தது. ஆசிரியருக்கு என்ன சொல்வதே என்று தெரியவில்லை.


ஒன்பதாவது படிக்கும்போது ஒரு நாள் ஆங்கில ஆசிரியரை ரொம்பவே சீண்டிவிட்டான். கோபம் வந்து வேப்ப மரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இவனை போட்டு விளாசி விட்டார். இவனுக்கு நீண்ட காது - புத்தர் காதன் என்று ஒரு பெயர்கூட உண்டு - அதை பிடித்து இழுத்து அடித்ததால், காதே கொஞ்சம் பிய்ந்தமாதிரி ரத்தம் வேறு. பையை எடுத்துக் கொண்டு உங்களை பாத்துக்கறேன் சார் என்று சவால்விட்டு கிளம்பி போய்விட்டான். ஆசிரியர் சினம் தணிந்து உட்கார்ந்தார். குலாம் என்ன பண்ணப் போகிறானோ என்று கொஞ்சம் பயந்துவிட்டார். பையன்கள் வேறு - சார், அவனுக்கு பனங்காட்டுத் தெருவில் நிறைய நண்பர்கள் உண்டு என்று அவர் பீதியை இன்னும் கொஞ்சம் கிளப்பிவிட்டார்கள். "வீரர்கள்" நிறைந்த தெரு, அவன் வீட்டருகில் இருக்கும் பனங்காட்டுத் தெரு. அவர் அமைதியாக பாடம் நடத்தத் தொடங்கினாலும், புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்கிக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் என்ன ஆகப் போகிறதோ என்று காத்திருந்தோம். மதிய உணவு இடைவேளைப் பிறகு அழகாக மாப்பிள்ளை மாதிரி முகம் கழுவி பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தான். எங்கடா போனே என்று கேட்டோம். நான் வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போட்டு, மதியம் சாப்பிட்டு வந்தேன் என்று சிரித்தான். சும்மா உதார் விட்டிருக்கிறான்.  


பத்தாவது படிக்கும்போது தமிழ் ஆசிரியரை படாத பாடு படுத்தினான். இவனை ஏதோ கேள்வி கேட்டு இவன் பதில் தப்பாகச் சொன்னான். இவன் அருகில் வரலாம் என்று இருக்கையில் இருந்து ஆசிரியர் எழுந்தார். கிட்ட வராதீங்க சார், வந்தா அடிப்பீங்க என்றான். இல்லடா, நான் வந்து நீசொன்னதை திருத்தி சொல்லித் தறேன் என்றார். அதற்கு குலாமின் பதில்: அங்கிருந்தே திருத்துங்க சார்! மேஜை மேல் ஏறி தாவித் தாவி அடிக்கு தப்புவதெல்லாம் சகஜமாக நடக்கும். பத்தாவது பரீட்சையில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தான். ஒவ்வொரு நாளும் வரும் கண்காணிப்பாளரிடம் எங்களுக்கு இந்தப் பாடம் நடத்த ஆசிரியரே இல்லை, அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று தயங்காமல் ரீல் விடுவான். கொஞ்சம் சம்மதம் மாதிரி தெரிந்த அன்றெல்லாம் அவ்வளவுதான் - அப்படியே என் பதில்களை ஜெராக்ஸ் எடுத்தான். ஒரே சிரிப்பும், கும்மாளமும். பத்தாவது பரீட்சை மாதிரியே இருந்ததில்லை இவன் செய்த கலாட்டாவினால்.


பள்ளியில் இவ்வளவு வால்தனம் பண்ணுகிறவனை அவர்கள் கடையில் பார்த்தால் நம்பவே முடியாது. அண்ணனுக்கு பயந்தவன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவி போல் பவ்யமாக உட்கார்ந்திருப்பான். மாலையில் மளிகை பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப் போவான். எதாவது ஒரு சினிமாவில் நுழைந்து கொஞ்சம் நேரம் படம் பார்ப்பான். "அலைகள் ஓய்வதில்லை" ஓடும்போது இது தினம் நடந்தது.  எங்கள் வீட்டுப் பக்கம் வசூலிக்க வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவான். என்னவோ என் ஒரு அண்ணன் மேல் அதீத பாசம். அவனை அடித்துக் கொண்டோ கிள்ளிக்கொண்டேதான் இருப்பான். அண்ணனும் பொறுத்துக் கொள்வான். இவனை கோபித்து அடிக்கக்கூட மனம் வராது. செய்வதை எல்லாம் சிரித்துக் கொண்டே செய்பவன்.  இவன் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ரொம்பவே அதிர்பவர் எங்கள் அப்பாதான். ஏனென்றால் அவனை அவர்கள் கடையில் எப்படி இருப்பான் என்று பார்த்தவர். 


இவன் பயன்படுத்தும் சில பல சொற்றொடர்கள் என் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம். இன்றும் பள்ளி நண்பர்களுடன் பேசினால், குலாமின் சொற்கள் இல்லாமல் பேச்சு முடியாது.


அப்படி இருந்த குலாம் எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுத்தான். "குலாம் போயிட்டாண்டா" என்று சிங்கப்பூரில் இருந்து அழைத்து  ரஃபி அழுதுகொண்டே சொன்னதை என்றும் மறக்க முடியாது. 

Sunday, January 29, 2012

சங்கத் தமிழ் மூன்றும் தா!

மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் கலாசார, மொழி பாரம்பரியங்களை போற்றிக் காப்பது என்னை எப்பொழுதும் வியக்க வைக்கும். இங்கு ரிச்மண்டில் எனக்கு  இலங்கை, மலேசியா, சிங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் கயானா நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என்னை மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள். உதாரணமாக எனது மலேசிய நண்பர் சேகரின் மூலம்தான் 'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும்' என்ற பழமொழியின் அர்த்தம் தெரிந்தது.  ஆமை புகுந்தால் வீட்டுக்கென்ன ஆகும்? அந்த ஆமை வெறும் ஆமையல்ல. பொறாமை!

கயானா நண்பர்களின் வீட்டு பஜனைக் கூட்டத்தில் அவர்கள் வாசித்த டன்டால்  எனும் கருவியின் பிண்ணனியும் சுவாரசியமானது. கரும்புத் தோட்டத்து மாட்டு வண்டியின் அச்சை இசைக்கருவியாக பயன்படுத்தி தங்கள் கலாசாரத்தை காத்திருக்கிறார்கள்.

இன்னும் இது போல பல சொல்லிக் கொண்டு போகலாம். இன்றைய நிகழ்வுக்கு வருகிறேன்.  நேற்று  ஒரு நண்பரின் மகளின் நிச்சயதார்த்தத்துக்கு போய்விட்டு அதற்குப் பிறகு எங்கள் மலேசிய நண்பர்களின் வீட்டுக்குப் போய் ஓய்வாகக் கதை பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் அன்றாடம்  தமிழ் மிகக் குறைவாகப் பேசும் சராசரி இந்தியத் தமிழகக் குடும்பங்கள் போன்ற குடும்பம்தான் இவர்களும் :-).  பேச்சு நமது பழக்கவழக்கங்களில் இருந்து பிரார்த்தனை, பூஜை, பாடல்கள் என்று போய்க் கொண்டிருந்தது. சிறு வயதில் கற்ற இறைவாழ்த்து பாடல்கள் பல இருந்தும் நிறைய மறந்துவிட்டது என்று  இரண்டு மலேசியக் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.  இன்னும் எதெல்லாம் நினைவிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டு இல்லத்தரசி தன் இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

இந்தப் பாடல் சத்தியமாக எனக்குத் தெரியாது.  தமிழகத்தில் வளர்ந்த எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  சற்று இந்தப் பாடலைப் பார்ப்போம். ஔவையின் நல்வழியில் வரும் கடவுள் வாழ்த்து இது.


பிள்ளையாரிடம் முத்தமிழ் அறிவைக் கேட்பது போல் அமைந்திருக்கிறது இப்பாடல். ஆனால் அவருடைய பதிவில் இப்பாடலுக்கு  மேலும் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்கிறார் சுந்தர வடிவேல்.

*நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரது வீடியோவை நீக்கிவிட்டேன்.

Thursday, May 21, 2009

நண்பர்களைக் குறைப்பது எப்படி?

முதலில் அந்த விளம்பரத்தைப் படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. "நிறைய நண்பர்கள் தொந்தரவா? ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்கிறோம். அல்லது உங்கள் கட்டணம் வாபஸ்!" அந்த மாதிரி ஒரு விளம்பரத்தை நான் பார்த்ததே இல்லை. எனக்கு வெகு சிலரே நண்பர்கள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரை கழட்டிவிடலாம்தான். ஆனாலும் ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்யும் வழி என்ன என்பதை பார்க்க மிக ஆவலாக இருந்தது. பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன்.

விளம்பரத்தில் இருந்த முகவரியில் போய் நின்றால், அது ஒரு வீடு. சிரித்த முகத்துடன் வந்து என்னை உள்ளே வரவேற்றார் மைக்கேல். இப்படி இனிய சுபாவம் கொண்ட மனிதரா நண்பர்களைத் தொலைக்க வழி சொல்லப் போகிறார் என்ற கேள்வியோடு உள்ளே போனேன். மைக்கேல் அவருடைய நண்பர்கள் குறைக்கும் முறையை விளக்க ஆரம்பித்தார். முதலில் அந்த முறையை எப்படி கண்டுபிடித்தார் என்று சொன்னார். பல மாதங்களுக்கு முன்னால் மைக்கேல் பல்பொருள் அங்காடியில் பண்டம் வாங்கும்போது ஒரு நபரை சந்தித்தாராம். அந்த ஆள் மைக்கேலுக்கு நிறைய சம்பாதிக்கும் ஒரு வியாபாரத்தை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனானாம். அந்த வியாபாரத்தை சில வருடங்கள் செய்தாலே போதும், நிறைய பணம் சம்பாதித்து வேலையெல்லாம் விட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாமாம். இப்படியாக ஆரம்பித்து மெக்டோனால்ட் நிறுவனர் உதாரணம், ரெசிடுவல் இன்கம், உங்கள் கீழே உங்களை பணக்காரர் ஆக்குவதே குறிக்கோளாய் ஒரு கூட்டம், உங்கள் உள்ளே தூங்கிக்கிடக்கும் உங்கள் ஆற்றல், தன்னம்பிக்கை, ஊக்கம், என்று நீட்டி முழக்க, மைக்கேல் எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடினாராம்.

அப்படி தப்பிக்குமுன்னால் மைக்கேலிடம் இரண்டு வீடியோ டேப்புகள் வேறு - இந்த வியாபாரத்தை மேலும் விளக்குவதற்கு. அந்த டேப்புகளில் மேலும் ஒரு விஷயமும் இல்லை என்றார் மைக்கேல். நிறைய தம்பதிகள் இந்த வியாபாரத்தை செய்ததனால் பெரிய மாளிகையில் வாழ்ந்துகொண்டு விடுமுறைக்கு பல ஊர்கள் சுற்றுவது போன்ற படங்கள்தானாம் அந்த வீடியோ முழுக்க. அதிலிருந்து ஆரம்பித்தது மைக்கேலின் ஓடி ஒளியும் ஆட்டம். முதலில் யார் தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள் என்று காண்பிக்கும் சாதனம் வாங்கினார் மைக்கேல். பிறகு பல்பொருள் அங்காடிகளிலோ உணவகங்களிலோ அந்த நபர் தெரிகிறாரா என்று சுற்றுமுற்றும் பார்ப்பாராம். எங்கேயாவது அந்த ஆள் தெரிந்தால் 'கப்'பென்று பதுங்குவாராம். அவருடைய வாழ்க்கையே அந்த நபரால் மாறிவிட்டதாம். தொலைபேசி ஒலித்தால் நடுங்குவது, பக்கத்து ஊருக்குப் போய் பண்டங்கள் வாங்குவது என்று போலீஸில் தப்பித்த கைதி மாதிரி வாழ்ந்தேன் என்றார். ஒரு முறை வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது தொலைபேசி மணியடித்தது. அந்த நபரின் எண் என்று தெரிந்து எடுக்காமல் விட்டுவிட்டாராம். அந்த மணி நாராசமாய் ஒலித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு இந்த மாதிரி யோசனை வந்தது.

அவருடைய இந்த அனுபவங்களை விருப்பு,வெறுப்பின்றி ஆராய்ந்தாராம். அந்த நபரின் உத்திகள், அதனால் இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாவற்றையும் அலசியவுடன் அவருடைய யோசனை கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்தது. மறுநாள் அவருடைய நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்து விரைவில் பணக்காரர் ஆவது எப்படி என்று விளக்க ஆரம்பித்தாராம். அவருடைய பிரசங்கத்தில்
அந்த நபரைவிட ஒரு சில படி மேலே போய் கழுத்தில் ரத்தம் கொட்டுமளவு மனிதர் ராவு ராவு என்று ராவினாராம்.

மறுநாளில் இருந்து ஆரம்பித்தது அவருடைய பரிசோதனையின் விளைவு. அவருடைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள தினமும் முயன்றாராம். ஒருவர் கூட சிக்கவில்லை. அவருடைய ஐடியா வேலை செய்ய ஆரம்பித்ததில் அவருக்கு கொள்ளை மகிழ்ச்சி. உள்ளூர் போன் கம்பெனி அவருக்கு ஒரு பரிசு அனுப்பியதாம். இவரால் தொலைபேசி எண் காண்பிக்கும் சாதனம் அமோக விற்பனையாம் ஊரில்.

அப்படியே படிப்படியாக அவரது செயல்முறையை மேம்படுத்தி ஆட்களையே காணாமல் போவது வரை கொண்டு வந்திருக்கிறேன் இப்போது என்றார் மைக்கேல். என்னால் நம்ப முடியவில்லை. சரி வா, நீயே உன் கண்களால் பார்த்துக் கொள் என்று வீட்டுக்கு பின்புறம் அழைத்துக் கொண்டு போனார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்தில் ஏதோ வேலையாக இருந்தார். மைக்கேல் அவரை பெயர் சொல்லி அழைத்ததுதான். அடுத்த விநாடி அந்த ஆள் மாயமாய் மறைந்தார். நிஜமாகவே காணோம். சினிமாவில் வருவதுபோல் ஒரு 'உஷ்' இல்லை, ஒரு 'ஜிங்' இல்லை. ஒரு விநாடி இருந்தார். மறுவிநாடி காணோம். அவ்வளவுதான்.

எனக்கு அப்படியும் சந்தேகம், இது ஏதோ மனோவசியமா என்ன என்று. இன்னும் சிலமுறை செய்து காண்பியுங்கள் என்றேன். மைக்கேல் என்னை ஜேம்ஸ் நதிப்பக்கம் அழைத்துக் கொண்டு போனார். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடியில் நிறைய செய்து காண்பிக்கலாம். ஆனால் இப்பொதெல்லாம் அவரை உள்ளே விடுவதில்லையாம். நதிக்கறையில் நிறைய பேர் நடப்பதும், ஓட்டமுமாக இருந்தார்கள். சிலர் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். யாராவது தெரிந்தவர்கள் இருக்கிரார்களா என்று நோட்டம் விட்டுக்கொண்டே போனார் மைக்கேல். அவருடைய சக ஊழியர் ஒருவர் கயாக் படகில் வந்து கொண்டிருந்தார். மைக்கேல் கூப்பிட்டு கையை அசைத்தார். அவ்வளவுதான். மறுவிநாடி வெறும் கயாக் மட்டும் தண்ணீரில் ஆடிக் கொண்டிருந்தது.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் எனக்கு ஒரு சந்தேகம். அப்படி மாயமாய் மறையும் மனிதர்கள் திரும்ப வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டேன். மைக்கேல் சிரித்துக் கொண்டே சொன்னார், "யாருக்குத் தெரியும்....."