Friday, July 14, 2023

நம்ம ஊர் பேரைக் காப்பாற்ற

 

நம்ம பேரை யாராவது பிழையா எழுதினா எம்புட்டு கடுப்பாவோம்?

பள்ளி, கல்லுாரி, வேலை செய்யும் இடம் என எங்கேயாவது நம்ம பேரை யாராவது எழுத்துப்பிழையோட எழுதினா சட்டுன்னு அது மட்டும் கண்ணுல படும்தானே? அதே மாதிரி நம்ம ஊர் பெயருக்கும் ஒரு சிக்கல் இருக்கு. நம்ம ஊரோட பேரை சிலர் தமிழ்ல எழுதும் போது, தெரியாம தப்பா எழுதிடறாங்க. நம்ம ஊர் பேரைக் காப்பாற்ற நாம தானே சண்ட செய்யணும்? செஞ்சிடுவோம். :)

எங்க வாத்தியார் ஒரு சூட்சமம் சொல்லிக் கொடுத்திருக்கார். ஏதாவது கதை சொல்லும் போது அலுங்காம ஒரு இலக்கண குறிப்பையும் சேர்த்து சொல்லிடணும். ஒரே கல்லுல இரண்டு மாங்கா-ன்னு ஆகிடும். நாம குட்டியா வெகு எளிதா ஒன்னு பார்ப்போம்.

தமிழ்ப் பெயர்கள் எந்த எழுத்தில் தொடங்கணும், எதுல தொடங்க கூடாது, எதுல முடியணும், முடியக்கூடாது என்பதற்கு விதிகள் இருக்கு.

அதுல எதெல்லாம் கூடாதுங்கறத மட்டும் பிழிஞ்சு எடுத்து இரண்டே வரில சொன்னா, இப்படிச் சொல்லிடலாம்:

1. இந்த 8 எழுத்துகள்ல தொடங்கக் கூடாது:
ட, ணன, ரற, லழள

2. இந்த 8 எழுத்துகள்ல முடியக் கூடாது:
க்ச்ட்த்ப்ற், ங்

அவ்வளவுதான். அவ்வளவேதான்.

அப்போ, அது மாதிரி அமைந்த புதிய பெயர்களை எழுதும் போது என்ன செய்ய? மீசைக்குப் பழுது இல்லாமலே கூழ் குடிக்க ஒரு வழி இருக்கு. "டக்"குனு மனசுல வெச்சுக்கற மாதிரி அதையும் ஒரு கை பார்த்திடலாம்.

தூரமா இருக்கறதை காட்டும் போது "அதை" என்று சொல்றோம், அதே பக்கமா இருந்தா "இதை" என சுட்டிக்காட்டி சொல்றோம் இல்லையா? அந்த அ, இ என்னும் எழுத்துக்கள்தான் நம்ம கதாநாயகர்கள். (இன்னொரு எழுத்து "உண்டு". அது பொறவு).

அ அல்லது இ இந்த 2ல ஒன்றை முதல் எழுத்தா வெச்சி எழுதிடுங்க. வாய் விட்டு படிக்கும்போது அதை விட்டுட்டு படிச்சிடலாம். ஆங்கில சைலன்ட் எழுத்துக்கள் முதலில் வருவது போல என்னு வெச்சுகுங்களேன் (Knife, Write, Psychology).

அப்படின்னா, நம்ம ஊர் becomes

இரிச்மண்...

கடைசி எழுத்தை என்ன செய்ய?
அங்கே "உ" தான் கதாநாயகி. மெய் எழுத்தோடு உகரம் சேர்த்து எழுதிட வேண்டியதுதான்.

ட் + உ = டு

டடா..

"இரிச்மண்டு".

ஆச்சா?
இப்போ, வழக்கமான ஒரு கேள்வி வரும்.
இந்த "அமைதிப் புறாவை" (Silent letter) தெரியாதவங்க E-Richmond-u என்று வாசிக்க மாட்டாங்களா?

வாசிப்பாங்கதான். ஒன்னு, அவங்க வெளியூர்காரர்களாக இருப்பாங்க, இல்லைன்னா கிண்டலுக்காக அப்படி வாசிப்பாங்க. விபரம் தெரிஞ்சவங்க சரியா வாசிச்சுடுவாங்க.

நம்ம ஊர் பெயரைக் காப்பாற்ற நாமதானே சண்டை செய்யணும்? செய்வோம். என்னாங்கறீங்க? இனியும் யாராச்சும் தப்பா எழுதட்டும், உண்மையிலேயே சண்டைக்குப் போவோம். சரிதானே? :)

வாழ்க இரிச்மண்டு, வளர்க தமிழ்.


ஆங், இன்னொன்னு.
உங்க சொந்தப் பெயரைக் கூட இதே விதிகளின்படி பட்டி- டிங்கரிங் செய்து கொள்க. உங்களோடு சேர்ந்து தமிழன்னையும் மகிழ்வாள்.
(தினப்படி வாழ்வில், தமிழில் உங்கள் பெயர் எழுதும்போது பயன்படுத்துங்கள். உங்கள் சான்றிதழ்கள் இருக்கறபடியே இருக்கட்டும்)

 

Sunday, July 02, 2023

கலகத்தலைவன்

 

உலகில் நாம வந்த நாள் முதல் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து நம்மை எச்சரிக்கவும் கலகக்காரர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக மக்கள் உணர்ச்சித் திலகங்கள். ஏமாற்றுவது எளிது. பரிதாபமாக மூஞ்சி வெச்சுட்டு பச்சைப் பொய் சொன்னா கூட நம்மாளுகள்ல பாதி பேராவது நம்பிடறாங்க. சாமி சமாச்சாரம்னா அவ்ளோதான், பேச்சே கிடையாது. சரக்குக்கும் சாமிக்கும் தான் கூட்டமே நம்மிடையே. கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் களவாணிகளுக்கு வேலை பட்டென முடிகிறது எப்போதும்.

கலகக்காரர்களும் சமூகப் போராளிகளும் எச்சரிக்கை மணி அடிச்சுட்டே தான் இருக்காங்க, நமக்குத்தான் அவ்வப்போது காது, மூளை எல்லாம் தூங்கப் போய் விடுகிறது.

நம்மாளு வள்ளுவர் அப்படியான ஒரு கலகத்தலைவர். துறவு கொள்ளப் போகிறேன் என்பவனிடம் பேசுவது போல ஆரம்பிச்சு நமக்கு பல எச்சரிக்கைகளைக் காட்டுகிறார் துறவறம் என்ற பகுதியில்.

பதிமூன்று அதிகாரங்கள் அதில் எழுதுகிறார். துறவி ஆகப்போகிறேன் என்பவரிடம் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்று பட்டியல் போடுகிறார்.

திருடாதே, பொய் பேசாதே, சிடுமூஞ்சியாட்டம் இருக்காதே, கெடுதல் செய்யாதே அப்படின்னு போய்டே இருக்கு. அதில் பலமா யோசிக்கற மாதிரி ஒரு அதிகாரம். "கறி திங்காதே" என்று. என்னடா, சாமியாரா போறேங்கறவன்ட இதச் சொல்றாரேன்னு யோசிக்க ஆரம்பிச்சா, "யோவ் வள்ளுவரு செம ஆளுய்யா நீ" என சொல்லத் தோன்றும். கறி தின்றதும் திங்காததும் அவனவன் விருப்பம்; பெரிசா "அறிவுரை" சொல்ல யாரும் வரவேண்டாம், ஆனா நான் "முற்றும் துறக்கப் போகிறேன்" அப்படிங்கறவன்ட, "மொதோ பிரியாணி குண்டான கீழ வை" என்பதில் தப்பில்லை என்று நினைத்திருக்கிறார். சரியாத்தான் படுது. யோசிக்க யோசிக்க ஆளு உண்மையிலேயே கன்னியாகுமரில நிக்கிற மாதிரி பெரிசா மனசுல தெரியறார்.

"வேண்டாத வேலை"* அப்படின்னு ஒரு பத்து குறள் சாமியாரா போறவனுக்கு சொல்ற மாதிரி.

மனசுல வஞ்சம் வெச்சுகிட்டு சாமியாரா போறேன்னு சொன்னா வேற யாரும் வேண்டாம் உன் உடம்பே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனச ஒழுங்கா வெச்சுக்காம பெரிய ஆளாட்டம் படம் போட்டாய்னா ஒரு பயனும் இல்லை தெரிஞ்சுக்கோ என்று திட்டுகிறார் இன்னொரு குறளில். வெள்ளையும் சொள்ளையுமா வேசம் போட்டுகிட்டு வேண்டாத வேலை எதும் செய்யறது, புதர்க்குள்ள ஒளிஞ்சி அப்பாவிப் பறவைகளைப் பிடிக்கும் வேடன் செய்யும் செயல் போல தரங்கெட்டது என கடுமையாகத் திட்டுகிறார்.

இப்படி சாமியார் பயலுகளைத் திட்டிகிட்டே வர்றவர் மெதுவாக நம்மை நோக்கி பேசத் துவங்குகிறார்.

மனசுக்குள்ள அழுக்கை வெச்சுட்டு எவ்ளோ தண்ணில முங்குனாலும் அழுக்கு போகாது. அழுக்கு மனசோட பல பேர் சாமியார்னு திரியறான் கவனம் என்கிறார். ஆளப்பார்த்து எதையும் முடிவு செய்யாதே. நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைஞ்சு வளைஞ்சு இருக்கும் யாழ் அருமையான இசை கொடுக்கிறது. செய்யும் செயலைக் கொண்டே ஒருவர் எப்படியானவர் என்பதை உணர வேண்டும், புரியுதா? என்கிறார்.

எல்லாம் சொல்லிட்டு, கடைசியா
"இவனுக ஏன் ஒன்னு மொட்டையடிச்சுட்டு திரியறானுக, இல்லைன்னா கசாமுசான்னு முடி வளர்த்திட்டு திரியறானுக, உலகத்தார் முகம் சுழிக்கற மாதிரி நடந்துக்கறத நிறுத்தினாலே போதும்" என முடிக்கிறார்.

அப்போது இருந்தே இவனுகளால ஏதோ நடந்துகிட்டு இருக்கு. கடுப்பாகி திட்டித் தள்ளி இருக்கார்.

முழு அதிகாமுமே நையாண்டியும் திட்டுகளும்தான். கூடவே கலகக் குரல். சமயம் எனும் மனதை மயங்கச் செய்யும் கருவியைப் பற்றி எச்சரிக்கைகள், கிண்டல்கள் எப்போதும் பெரியோர் செய்துதான் வருகிறார்கள்.

நாமதான்...

மேலே கடைசியாகக் குறிப்பிட்ட குறள்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

மழித்தல் = மொட்டை அடித்தல்
நீட்டல் = நீண்ட முடி வளர்த்தல்

படித்தவுடன் அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசமான குறள்.

-------
* "வேண்டாத வேலை" = கூடா ஒழுக்கம்

 

Saturday, July 01, 2023

அவள் என்றைக்கடா பேசினாள்?

 உலகில் நாம் தோன்றிய நாள் முதலாக கலகக்காரர்கள் ஏமாற்றுவோரை நோக்கி சுடு கேள்விகளையும் பகுத்தறிந்த ஆழ்ந்த சொற்களையும் வீசியபடியே தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

பொதுவாக மக்கள் உணர்வு மயமானவர்கள். எளிதில் ஏமாற்றி விட முடியும். அதிலும் அறிவை வேகமாக மழுங்கடிக்கும் சமயம் எனும் கருவி ஏமாற்றுக்காரர்களுக்கு மிகப் பிடித்தமானது. தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம், போக்குவரத்து, பொது அறிவு வளர்ந்திருக்கும் இன்றைய உலகிலேயே இன்னமும் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கும் போது வள்ளுவர் காலத்தில் பாமர மக்கள் எவ்வளவு ஏய்க்கப்பட்டிருப்பார்கள்?

மின்சார விளக்கு வந்த பின் பேய்கள் ஒழிந்துவிட்டன என்பார்கள். பாதி ஏமாற்றுக்காரர்களும் கூடவே ஒழிந்து போனார்கள். மீதிப் பாதியை ஒழிக்க ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வரும் வரை கலக்காரர்களின் தேவை கண்டிப்பாகத் தேவை.

இப்போது நம் கலகக்காரர் வள்ளுவரின் கலகக் குரலில் ஒன்றைப் பார்ப்போம். துறவற இயல் எனும் பிரிவில் பதிமூன்று அதிகாரங்கள் எழுதுகிறார். துறவியாகும் எண்ணம் கொண்டோருக்கு கைவிளக்காக செய்ய வேண்டியவற்றை, வேண்டாதவற்றைப் பட்டியலிடுகிறார்.

கள்ளாமை, வாய்மை, வெகுளாமை (சினம் கொள்ளாத தன்மை), இன்னாசெய்யாமை என பட்டியல் நீள்கிறது. மிகவும் யோசிக்கும்படியாக "புலால் மறுத்தல்" என்பதை துறவற இயலில் வைத்திருக்கிறார்.
ஆம். இல்லறவாசிகளுக்கு சொல்லவில்லை - ஊண் உண்பதும், மரக்கறி மட்டும் போதும் என்பது அவரவர் விருப்பம். எவரும் "அறிவுரை" சொல்லக்கூடாது; ஆனால் துறவிக்கு புலால் மறுத்தல் கண்டிப்பான ஒன்று என நினைத்திருப்பார் போல.

அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் திருக்குறள்.

கூடா ஒழுக்கம் என்ற தலைப்பில் துறவியாக மாற எண்ணுபவரின் வேண்டாத ஒழுக்கம் பற்றி நக்கலும் நையாண்டியுமாக எழுதுகிறார்.

மனதில் வஞ்சம் வைத்துக்கொண்டு, துறவி என்பாயானால் உன் உடம்பு கொண்டுள்ள ஐம்பூதங்களே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனதுக்குள் குற்றம் வைத்துக்குக் கொண்டு வானுயர்ந்த தோற்றம் கொண்டவர் போல காட்டிக் கொண்டால் அந்தத் தோற்றத்தால் ஒரு பயனும் இல்லை. உயர்ந்த தோற்றத்தில் மறைந்து கொண்டு வேண்டாத வேலைகளைச் செய்வது, புதருக்குள் மறைந்து இருந்து அப்பாவிப் பறவைகளை ஏமாற்றிப் பிடிக்கும் வேடனின் செயலைப் போன்றது.

என்றெல்லாம் துறவு பூண எண்ணுபவருக்குச் சொல்லிக் கொண்டே வந்தவர் குரல், மெதுவாக நம்மை நோக்கி பேசுவது போல மாறுகிறது அந்த அதிகாரம்.

மனதுக்குள் அழுக்கை வைத்துக் கொண்டு எவ்வளவு குளித்தாலும் பயனில்லை, அழுக்கு மனதோடு துறவி வேடத்தில் பலர் உள்ளனர். கவனம். என்கிறார். அடுத்ததாக‌, ஆளைப் பார்த்து முடிவு செய்திடாதே - துறவி வேடம் போட்டு இருப்பவர் நல்லவராக இருக்க வேண்டும் என்பது இல்லை. வளையாமல் நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைந்து இருக்கும் யாழ் நல்லிசை தருகிறது. செயலைக் கொண்டே அவர் பண்பை உணர வேண்டும்; கவனம். என்கிறார்.

முத்தாய்ப்பாக,
மொட்டையடித்துக் கொண்டு அல்லது நீண்ட முடி வளர்த்து இவனுக எதுக்கு இப்படித் திரியணும்? உலகத்தார் முகம் சுழிக்கும்படி நடக்காது இருந்தாலே போதும், இந்த பம்மாத்துகள் தேவையில்லை என்கிறார்.

முழு அதிகாரமுமே ஒரே எள்ளலும் ஏச்சும்தான். கூடவே கலகக் குரல். அப்போது இருந்தே சமயம் எனும் மனம் தடுமாறச் செய்யும் கருவியை எதிர்த்து, முழுதாக எதிர்க்க முடியாத போது குறைந்தது கிண்டலடலடித்தாவது வந்திருக்கிறோம். இன்றைக்கும், "அவள் என்றைக்கடா பேசினாள்" என கேட்பதாக அது நீள்கிறது. "சமயக்காரர்களிம்" நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நமக்காக நாம் தான் கலகக் குரல் எழுப்ப வேண்டும். அவள் என்றைக்கும் பேச மாட்டாள்.

மேலே சொன்ன குறள்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்


மழித்தல் = முகம் தலை சிரைத்தல்
நீட்டல் = முகம் தலை எங்கும் முடி நீட்டலாக வளர்த்தல்

அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசக் குறள்.

------------------------------------

கட்டுரையைத் தமிழாசிரியர்கள் தாண்டி மற்றவர்களும் படிக்கறமாதிரி கொஞ்சம் மொழிநடையை மாற்றி எழுதித் தா என "அன்போடு" வந்த கட்டளையின் படி கொஞ்சம் மாற்றிய நடையில் இதே கட்டுரை இங்கே

~~~~~~~~~~~~~~~~~~~~~