Showing posts with label இலக்கணம். Show all posts
Showing posts with label இலக்கணம். Show all posts

Friday, July 14, 2023

நம்ம ஊர் பேரைக் காப்பாற்ற

 

நம்ம பேரை யாராவது பிழையா எழுதினா எம்புட்டு கடுப்பாவோம்?

பள்ளி, கல்லுாரி, வேலை செய்யும் இடம் என எங்கேயாவது நம்ம பேரை யாராவது எழுத்துப்பிழையோட எழுதினா சட்டுன்னு அது மட்டும் கண்ணுல படும்தானே? அதே மாதிரி நம்ம ஊர் பெயருக்கும் ஒரு சிக்கல் இருக்கு. நம்ம ஊரோட பேரை சிலர் தமிழ்ல எழுதும் போது, தெரியாம தப்பா எழுதிடறாங்க. நம்ம ஊர் பேரைக் காப்பாற்ற நாம தானே சண்ட செய்யணும்? செஞ்சிடுவோம். :)

எங்க வாத்தியார் ஒரு சூட்சமம் சொல்லிக் கொடுத்திருக்கார். ஏதாவது கதை சொல்லும் போது அலுங்காம ஒரு இலக்கண குறிப்பையும் சேர்த்து சொல்லிடணும். ஒரே கல்லுல இரண்டு மாங்கா-ன்னு ஆகிடும். நாம குட்டியா வெகு எளிதா ஒன்னு பார்ப்போம்.

தமிழ்ப் பெயர்கள் எந்த எழுத்தில் தொடங்கணும், எதுல தொடங்க கூடாது, எதுல முடியணும், முடியக்கூடாது என்பதற்கு விதிகள் இருக்கு.

அதுல எதெல்லாம் கூடாதுங்கறத மட்டும் பிழிஞ்சு எடுத்து இரண்டே வரில சொன்னா, இப்படிச் சொல்லிடலாம்:

1. இந்த 8 எழுத்துகள்ல தொடங்கக் கூடாது:
ட, ணன, ரற, லழள

2. இந்த 8 எழுத்துகள்ல முடியக் கூடாது:
க்ச்ட்த்ப்ற், ங்

அவ்வளவுதான். அவ்வளவேதான்.

அப்போ, அது மாதிரி அமைந்த புதிய பெயர்களை எழுதும் போது என்ன செய்ய? மீசைக்குப் பழுது இல்லாமலே கூழ் குடிக்க ஒரு வழி இருக்கு. "டக்"குனு மனசுல வெச்சுக்கற மாதிரி அதையும் ஒரு கை பார்த்திடலாம்.

தூரமா இருக்கறதை காட்டும் போது "அதை" என்று சொல்றோம், அதே பக்கமா இருந்தா "இதை" என சுட்டிக்காட்டி சொல்றோம் இல்லையா? அந்த அ, இ என்னும் எழுத்துக்கள்தான் நம்ம கதாநாயகர்கள். (இன்னொரு எழுத்து "உண்டு". அது பொறவு).

அ அல்லது இ இந்த 2ல ஒன்றை முதல் எழுத்தா வெச்சி எழுதிடுங்க. வாய் விட்டு படிக்கும்போது அதை விட்டுட்டு படிச்சிடலாம். ஆங்கில சைலன்ட் எழுத்துக்கள் முதலில் வருவது போல என்னு வெச்சுகுங்களேன் (Knife, Write, Psychology).

அப்படின்னா, நம்ம ஊர் becomes

இரிச்மண்...

கடைசி எழுத்தை என்ன செய்ய?
அங்கே "உ" தான் கதாநாயகி. மெய் எழுத்தோடு உகரம் சேர்த்து எழுதிட வேண்டியதுதான்.

ட் + உ = டு

டடா..

"இரிச்மண்டு".

ஆச்சா?
இப்போ, வழக்கமான ஒரு கேள்வி வரும்.
இந்த "அமைதிப் புறாவை" (Silent letter) தெரியாதவங்க E-Richmond-u என்று வாசிக்க மாட்டாங்களா?

வாசிப்பாங்கதான். ஒன்னு, அவங்க வெளியூர்காரர்களாக இருப்பாங்க, இல்லைன்னா கிண்டலுக்காக அப்படி வாசிப்பாங்க. விபரம் தெரிஞ்சவங்க சரியா வாசிச்சுடுவாங்க.

நம்ம ஊர் பெயரைக் காப்பாற்ற நாமதானே சண்டை செய்யணும்? செய்வோம். என்னாங்கறீங்க? இனியும் யாராச்சும் தப்பா எழுதட்டும், உண்மையிலேயே சண்டைக்குப் போவோம். சரிதானே? :)

வாழ்க இரிச்மண்டு, வளர்க தமிழ்.


ஆங், இன்னொன்னு.
உங்க சொந்தப் பெயரைக் கூட இதே விதிகளின்படி பட்டி- டிங்கரிங் செய்து கொள்க. உங்களோடு சேர்ந்து தமிழன்னையும் மகிழ்வாள்.
(தினப்படி வாழ்வில், தமிழில் உங்கள் பெயர் எழுதும்போது பயன்படுத்துங்கள். உங்கள் சான்றிதழ்கள் இருக்கறபடியே இருக்கட்டும்)

 

Saturday, October 05, 2019

கடன் தா Vs கொடு

இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

வேறுபாடு இருந்தா என்ன,  இல்லாட்டா என்ன? கேட்ட கடன் கிடைச்சா போதும். சரிதானே?

ஆனா, இந்தச் சொற்களுக்குள் ஒரு சின்ன வேறுபாடு இருக்கு.  என்னன்னு பார்த்திடுவோம்.

சூட்டோட சூடா முதல்ல கொஞ்சம் இலக்கணம் படிச்சிடலாம்;  கடனுக்கு அப்பால வருவோம்.

கொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.

மூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.
'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில் வேறுபாட்டை விளக்கறார். (2,3,4)

* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவன் அவனுக்கும் உயர் நிலையில் இருப்பவனிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று -  புறநானூறு)
* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.
* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது. 

கொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.

இப்போ, கடனுக்கு வருவோம்.

கடன் கேட்பதே கொஞ்சம் நெளிஞ்சுக்கிட்டு கேட்பதுதான். இருந்தாலும் நம்ம நண்பர்களிடம் ஒரு சிறு கை மாற்று, கேட்கிறோம் என்று வையுங்கள்.
"உன் கைபேசியைத் தா, வீட்டுக்கு ஒரு கால் பண்ணிட்டு தர்றேன், என்னுதுல பேட்டரி போய்டுச்சு" எனும் போது இருவரில் யாரும் உயர்/தாழ் நிலையில் இல்லை. எனவே, கொஞ்சம் உரிமையோடு தா என கேட்கிறோம்.

இதே, நீங்கள் ஒருவருக்கு பணம் கடன் கொடுத்திருக்கிறீர்கள் என வைப்போம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது "ஏம்பா, அடுத்த வாரம் குடுத்திடறதா சொன்னியே, ஞாயிற்றுக் கிழமை வீட்லதான் இருப்பேன், பணம் கொண்டு வந்து கொடு" என சற்றே உயர் நிலையில் இருந்து கேட்பது.

வேறுபாடு தெரியுதில்ல?

முதல் வகையான ஈ என்பது கெஞ்சிக் கேட்பது - இரப்பது. 
நீதிபதியிடம் குற்றவாளி, "இனி திருட மாட்டேன், தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுடுங்க" எனக் கெஞ்சுதல் - ஈ என இரத்தல் வகை. இழிந்த நிலையில் இருப்போன் கெஞ்சுவது. அவனுக்குக் கருணையோடு கொடுப்பது - ஈவது.

எனவே,
தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.
சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது
உயர் நிலையில் நாம் இருந்து வழங்குவது - கொடுப்பது.

பேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.

இதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1

அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4

இதே கட்டுரை கொஞ்சம் கிளுகிளு வடிவில் இங்கே: முத்தம் குடு  Vs  முத்தம் தா


---------------
#ஞாயிறு போற்றுதும்.   

Sunday, April 08, 2018

ஒரு கதை சொல்லட்டுமா..



பெரியவர்களுக்கான பொதுவான மாத்திரையை சிறியவர்களுக்கு கொடுக்கும்படி வந்தால் என்ன சொல்வாங்க? முழு மாத்திரை தேவை இல்லைங்க, பாதியா உடைச்சு அரை மாத்திரை குடுங்க போதும்-ன்னு நம்ம ஊர்ல சொல்லிக் கேட்டிருப்போம், இல்லையா? அதாவது, தேவையைப் பொறுத்து அளவை மாற்றிக் கொள்வோம்.

அது மாதிரியே பாதியா வெட்டி அரை மாத்திரை எடுத்துக் கொள்ளும் எழுத்து வகை தமிழில் உண்டு.

குற்றியலுகரம்.

மேலே சொன்ன மாத்திரைக் கதை ஒரு புரிதலுக்காக. உண்மையில் தமிழில் மாத்திரை என்பது கால அளவு. ஒரு எழுத்து, ஒலிக்கும் நேரத்தைக் குறிக்க பயன்படுத்துவது. தோராயமாக, கண் இமைக்கும் நேரம், கை சொடுக்கும் நேரம் எல்லாம் ஒரு மாத்திரை என்பார்கள். இன்றைய அளவுப் படி கிட்டத்தட்ட அரை நொடி.
ஆச்சா?

தமிழின் குறில் எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள், மெய்யெழுத்துக்களுக்கு அரை மாத்திரை அளவு என்பது விதி.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

ஒரு கதை சொல்லட்டா?
உங்க மேல ஒருத்தி/ஒருவன் கிறுக்கா இருக்கறதா வைப்போம்.

ஒரு நாள், உங்க கிட்ட வந்து "உம்மேலே கிறுக்கு" அப்படின்னு சொல்றாள்/ன்.
நீங்களும் சொக்கிப் போயிடறீங்க.
அப்புறம்?

மேலே என்ன ஆச்சுன்னு ஆராயலாம் தான், ஆனா இப்போ நம்ம ஆர்வம் இருக்க வேண்டியது இலக்கணத்தின் மீது.

"உம்மேலே கிறுக்கு"
அந்தச் சொற்களில் உள்ள இரண்டு "உ" க்களையும் சொல்லிப் பாருங்கள். முதல் உ-வை முழுசாச் சொல்வோம். கிறுக்கு-ல் (கு=க்+உ) உள்ள "உ" பாதில நின்னுடும்.  சொல்லித்தான் பாருங்களேன். "கிறுக்உ" என்று ஒலிக்காது.

உங்க ஆளு சொன்னதுல, வெட்கத்தில குறுகிப் போய் நீங்க நிக்கறீங்களோ இல்லையோ, அந்த "உ" குறுகி நின்னுடும். இப்படிக் குறுகி, முழு மாத்திரை அளவுக்கு ஒலிக்காகாமல் அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம், குறுகிய + உகரம் = குற்றியலுகரம்.
அம்புட்டுதான்.

கதை சொல்லறேன்னு உங்க காதை வாங்கி இலக்கணம் சொல்வது தப்பா?
தெரியாது. ஆனா இன்னொரு குறிப்பு சொல்ல தெரியும்.

தெரியாது ->  இந்தத் "து"வில் உள்ள "உ" (து=த்+உ) முழுசா ஒலிக்குது. அதனால இது முற்றிய + உகரம் = முற்றியலுகரம்.

அவ்வளவுதான் குற்றிய/முற்றிய உகரங்கள்.

ஒரே கல்லுல இரண்டு மங்கா:
ஒரே கதையில குற்றியலுகரம் மற்றும் முற்றியலுகரம்.

 ​#ஞாயிறு போற்றுதும்.