Showing posts with label காளமேகம். Show all posts
Showing posts with label காளமேகம். Show all posts

Sunday, September 17, 2006

சைவமா? வைஷ்ணவமா?

Sept. 16, 2006
நடராஜமூர்த்தி சுப்ரமணியம்

காளமேகம் என்று ஒரு புலவர் இருந்தார். சிறந்த சிவபக்தர். ஊர் ஊராகச் சென்று அவ்வூர்க் கோவிலுள்ள இறைவனைத் துதித்துப் பாடுவது அவர் வழக்கம்.

ஒரு சமயம் அவர் திருக்கண்ணபுரம் என்ற ஊரின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். உச்சி வேளை. நல்ல பசி அவருக்கு. சாப்பாடு கிடைக்கும் என்று கோவிலுக்குச் சென்றார்.

அந்தக் கோவில் பெருமாள் கோவில். வைஷ்ணவர்களால் நடத்தப் படுவது. அங்கிருந்தவர்கள் இவர் பட்டை பட்டையாக விபூதி அணிந்திருப்பதைப் பார்த்து முதலில் முகம் சுளித்தாலும், ஆள் யாரென்று தெரிந்ததும், “பெருமாளின் பேரில் ஒரு பாட்டுப் பாடு, பிறகு தான் சாப்பாடு”, என்றனர்.

காளமேகமோ, “ஆஹா, அதனாலென்ன, கட்டாயம் பாடுகிறேன், எனக்கு ஹரியும் சிவனும் ஒன்று தான், ஆனால் பாடி முடித்தபின் நீங்கள் சாப்பாடு போட மறுத்து விட்டால்? அதனால் பாதி பாட்டு பாடுகிறேன், சாப்பாடு போடுங்கள், பிறகு மீதி பாட்டு பாடுகிறேன்.” என்றார்.

“சரி, பாட்டை ஆரம்பி”.

காளமேகம் பாட ஆரம்பித்தார்.

“கண்ணபுரத்து மாலே, கடவுளில் நீ அதிகம் …”

“பசி அதிகமாக இருக்கிறது ஸ்வாமி”.

கடவுளில் நீ அதிகம் , பெருமாளை உயர்த்தித்தான் பாடுகிறான் என்று நல்ல புளியோதரை, திருக்கண்ணமுது, ததியமுது என்று அருமையான சாப்பாடு கிடைத்தது.

“சரி, மேலே பாடு”.

“கண்ணபுரத்து மாலே, கடவுளில் நீ அதிகம்,
உன்னிலும் நான் அதிகம் ….”

“என்ன, திமிரா ?”

“இருங்கள், பாடி முடிக்கவில்லையே, அவசரப்பட்டால் எப்படி?”

“மேலே பாடு”.

“கண்ணபுரத்து மாலே, கடவுளில் நீ அதிகம்,
உன்னிலும் நான் அதிகம் ,
உயர் சிவனுக்கோர் பிறப்பில்லை,
உன் பிறப்போ பத்து,
என் பிறப்போ எண்ணித் தொலையாது.”

“இந்து மதத்தில் சிவபெருமான் பிறவியெடுப்பதாகப் புராணம் கிடையாது. திருமாலுக்கோ பத்து பிறவிகள். ஆனால் நானோ எத்தனை பிறவி எடுத்தேனோ, இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ, தெரியாது. இதைத்தான் கடவுளில் நீ அதிகம், உன்னிலும் நான் அதிகம் என்று பாடினேன்.” என்று சொல்லி ஏப்பம் விட்டுக்கொண்டே நடந்தார் காளமேகம்.

-------------