Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Friday, June 17, 2011

நம்மைக் கவர்ந்த தமிழ் திரையுலகம்

நம்மைக் கவர்ந்த தமிழ் திரையுலகம்.

எழுபதுகளின் கடைசியில் தொடங்கி தொண்ணூறுகளின் ஆரம்பங்களில் வந்த சில தமிழ் படங்களின் கதைகளை மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். பல படங்கள் இப்போது செயற்கையாகவும் , சிறு பிள்ளைத்தனமாக தோன்றினாலும், நன்றாக யோசித்து பார்த்தால், ஏறக்குறைய எல்லா திரை படங்களும் அந்தந்த காலத்து ரசிகர்களின் ரசனைக்குத் தகுந்தவாறே எடுக்கப்பட்டு இருக்கும் என்று விளங்கும்.

எண்பதுகளில் மன்னர் கால கதைகளில் நாயகர்கள் தூய தமிழில் பேசுவது கேலிக்கூத்தாக மாறி, படங்கள் மக்களின் சராசரி வாழ்க்கையை பிரதிபலிக்குமாறு எடுக்கப்பட்டன. பாடல்களும், சண்டைகளும் சராசரி வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்பது எல்லா கால கட்டத்துக்கும் பொருந்தும். எண்பதுகளில், பழி வாங்குதல், சந்தர்ப்ப வாதம், குடும்ப சுமைகளை தாங்குதல், ஓரளவு காதல் போன்ற விஷயங்களை மையமாக வைத்து படங்கள் வந்தன.

இந்த தொடர் வரிசையில், நாம் இந்த கால கட்டத்தில் வந்த திரைப்படங்களை அலசவும், மக்கள் ரசனை மற்றும் திரை துறையில் வந்த பல் வேறு மாற்றங்களையும் அசை போடலாம்.

முதலாவதாக நாம் அலசப் போகும் திரைப்படம் "பதினாறு வயதினிலே". நாம் பாரதி ராஜாவை அலசினாலே போதும், தமிழ் திரை உலகை எளிதாக பின் தொடரலாம்.

பதினாறு வயதினிலே

ஸ்டுடியோக்களின் உள்ளே மட்டும் இருந்த தமிழ் படங்களை வெளி உலகத்துக்கு அழைத்து வந்து கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் பாரதி ராஜா. தமிழ் திரை உலகத்துக்கு ஒரு ஆலமரம் போல இருந்த படம் பதினாறு வயதினிலே. இந்த திரை படத்தில் பங்கு பெற்ற பெரும்பாலான கலைஞர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள். (கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கௌண்டமணி, இளையராஜா, பாரதி ராஜா, பாக்யராஜ், காந்திமதி, மலேசியா வாசுதேவன்)

கதா பாத்திரங்கள்

ஸ்ரீதேவி - மயிலு, காந்திமதியோட 16 வயது மகள். பருவ வயது உணர்ச்சிகளில் தவிக்கின்றவள். அந்த கிராமத்திலே பத்து படித்த ஒரே பெண். அழகுச் சிலை.

கமல் - சப்பாணி - சிறு வயதிலேயே காந்திமதியுடன் வசிக்கும் அனாதை இளைஞன். மயிலு மேல் ஆசை உண்டு. கூட உள்ளவர்கள் இவன் தான் மயிலை கட்ட போகிறான் என்று விளையாட்டுக்கு சொல்லும்போது, அதை உண்மை என்று நினைத்து புளகாங்கிதம் அடையும் ஒரு வெகுளி.

ரஜினி - பரட்டை. ஊரில் வேலை வெட்டி இல்லாத ஒரு முரடன். கூட கௌண்டமணி மற்றும் சில கைத்தடிகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை நையாண்டி செய்வதே தொழில்.

கதை

சப்பாணி பல்வேறு வழிகளில் மயிலின் மேலுள்ள பிரியத்தைக் காண்பிக்கிறான். அனால் அவளோ அவனை உதாசீனப் படுத்துகிறாள். சப்பாணி அவமானங்களைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு இருக்கிறான்.

பரட்டை அவ்வப்போது மயிலை வம்புக்கு இழுக்கிறான். சப்பாணி அவ்வப்போது பரட்டைக்கு எண்ணை தேய்த்து விடுவது போன்ற சிறு வேலைகள் செய்து காசு வாங்குவது வழக்கம்.

பத்தாவது பாஸ் செய்தவுடன் டீச்சர் ஆவது போல கனவு காண்கிறாள் மயிலு. அப்போது அந்த ஊருக்கு விலங்குகளுக்கு மருத்துவம் செய்ய ஒரு புதிய மருத்துவர் நல்ல டிப்-டாப் - ஆக வருகிறார். மயிலுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு. அடிக்கடி அவர்கள் சந்திக்கிறார்கள். மயிலுக்கு அவர் அவளை கல்யாணம் செய்து கொள்வார் என்ற ஒரு எதிர் பார்ப்பு. ஆனால் அந்த ஆளோ, மயிலுடன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்கிறான். மயிலு சுதாரித்து தப்பித்து விடுகிறாள்.

தன்னை கல்யாணம் செய்யுமாறு அவனைக் கேட்கும்போது, அவன் கேலியோடு சிரித்து, எனக்கு பிடித்தது எல்லாம் உன் பதினாறு வயதுதான், உன்னை கல்யாணம் பண்ணுவதா என்று ஏளனம் செய்கிறான். மயிலு துவண்டு விடுகிறாள். பக்கத்துக்கு வீட்டில் உள்ள சில பெண்கள் இவர்களது தொடர்பை அறிந்து கொண்டு, மயிலைப் பற்றி ஊரில் கட்டு கதைகள் கட்டி விடுகிறார்கள்.

இந்த சமயம், காந்திமதி மயிலின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறாள். பெண் பார்க்க வரும் குடும்பத்தினரை பரட்டை வழி மறித்து, மருத்துவருக்கும் மயிலுக்கும் தொடர்புள்ளதாக கூறி அவர்களின் மனதை மாற்றி விடுகிறான். பெண் பார்க்க வந்த கும்பல், காந்திமதியை அவமானப்படுத்தி விட்டு போகிறார்கள். காந்திமதி தற்கொலை செய்து கொள்கிறார். மயில் அநாதை போல ஆகி, சப்பாணி மட்டுமே துணை ஆகிறான். சப்பாணி கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனதில் இடம் பிடிக்கிறான்.

மயில் சப்பாணியோடு - அவனை யாரும் சப்பாணி-ன்னு சொன்ன கன்னத்தில் பளார்-ன்னு அடிக்குமாறு கூறுகிறாள். சப்பாணி வெளியே போகும்போது பரட்டை அவனை சப்பாணி என்று கூப்பிடுகிறான். சப்பாணி அவன் கன்னத்தில் பளார் என்று அறைகிறான். அருகில் இருக்கும் மருத்துவருக்கும் அடி விழுகிறது. பரட்டை பழி வாங்க ஒருநாள் சப்பாணியை அடித்து விடுகிறான். மயில் அப்போது ஒரு அப்பிராணியை அடிக்க வெட்கமாக இல்லையா என்று கேட்டு பரட்டை மேலே காரித் துப்புகிறாள். அவன் அடி பட்ட பாம்பாக வன்மத்தோடு செல்கிறான்.

ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில், பரட்டை மயிலை கற்பழித்து விடுகிறான். சப்பாணி பரட்டையை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறான். மயில் அவனுக்காக காத்து இருக்கிறாள்.

படத்தின் சிறப்புகள்

ஸ்டுடியோக்களுக்கு உள்ளே செயற்கையாக இருந்த சினிமா வசனங்களை விட்டு விலகி வந்து, யதார்த்தத்தை நம் முன் கொண்டு வந்த சிறப்பு பாரதி ராஜாவை சாரும். கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அவர்களின் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி பாரதி ராஜா உடனடியாக ரசிகர்களின் மனதை பிடித்து டிரெண்ட் செட்டர் என்ற பெயரையும் பெற்றார்.

இசையில் இந்த படத்தில் இளையராஜா சரித்திரம் படைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. "செந்தூரப் பூவே" பாடல் தமிழ் நாட்டு மக்கள் மனதில் அழியாத ஒரு இடத்தை பிடித்தது. கங்கை அமரனும், ஜானகியும் தேசிய விருது பெற்றார்கள். பின்னணி இசை படத்தின் உயிர் நாடியாக அமைந்தது. மலேசியா வாசுதேவன் "செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா" பாடலில் அறிமுகம் ஆனார்.

ரஜினிகாந்த் தன்னுடைய வித்தியாசமான ஸ்டைல் மூலம் முத்திரையை பதித்து எல்லோருடைய வரவேற்பையும் பெற்றார். அவருடைய "இது எப்படி இருக்கு" வசனம் புகழ் பெற்று இன்றும் அவரின் அடையாளமாக அறியப்படுகிறது.

கமலஹாசன் பல்வேறு காட்சிகளில் தன நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

உதவி இயக்குனரான பாக்யராஜ் "மஞ்ச குளிச்சு" பாடலில் தலை காட்டுகிறார்.

மொத்தத்தில் பதினாறு வயதினிலே படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல் கல்.

மீண்டும் இன்னொரு திரைப் பட விமர்சனத்தோடு சந்திப்போம்.

Sunday, June 28, 2009

பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம்: விமர்சனம்




ஏழு வயதான சாங்-வூ-வின் தாய் சியோல் நகரத்தில் வேலை தேடவிருப்பதால் அவனை சிறு கிராமத்தில் வசிக்கும் வயதான தாயாரிடம் சில நாட்கள் விட்டுச் செல்கிறாள். மிக பின் தங்கிய கிராமத்தில் சிறுவன் சாங்-வூ-விற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அவனது வீடியோ கேம் மட்டுமே. பாட்டிக்கு பேச முடியாது, நியாபக மறதி வேறு. கிராமத்தில் விளைவிக்கும் காய்கறிகளை அருகில் இருக்கும் சிறு நகர் புறத்தில் விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறாள். ஆரம்பத்தில் பாட்டியை பிடிக்காமல் உதாசின படுத்துகிறான் சாங். ஆனாலும் பாட்டி அவனிடம் தனது நெஞ்சின் மேல் கையால் வட்டமிட்டு சைகையில் மன்னிப்பு கேட்கிறாள். பாட்டி தனது பழைய செருப்பினை தைக்க ஊசி நூல் கோர்த்து கொடுக்குமாறு, பையன் சலிப்புடன் சில முறை கோர்த்து கொடுக்கிறான்.



ஒரு சில நாட்களில் அவனது வீடியோ கேம் பாட்டரி தீர்ந்துவிடுகிறது. பாட்டியிடம் பாட்டரி வாங்க காசு கேட்டு அழுகிறான் சிறுவன். அவளிடம் காசு இல்லாததால் கோபத்தில் அவளது கூந்தல் முடிய வைத்துள்ள பழங்கால பொருளை விற்று விடுகிறான். அவளது ஒரே பழைய செருப்பினை தூக்கி எரிந்துவிடுகிறான். அவன் கொண்டுவந்த டின்னில் அடைத்த உணவுகள் தீர்ந்து விடுகிறது. பாட்டி கொடுக்கும் சாதம் அவனுக்கு பிடிக்கவில்லை. பசியால் வாடும் பேரனை பார்த்த பாட்டி அவனிடம் சைகையில் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கிறாள். அவன் தனது புத்தகத்தில் இருக்கும் கோழியை காட்டி கெண்டகி சிக்கன் வேண்டும் என்று கூறுகிறான். பாட்டியும் தனது விளைபொருட்களை எடுத்துக்கொண்டு சிறு நகருக்கு சென்று ஒரு கோழி வாங்கி வந்து நீரில் வேக வைத்து தருகிறாள். ஆனால் சிறுவனோ தனக்கு வறுத்த கோழி வேண்டும் என அழுகிறான்.




சிறுவனை அழைத்து கொண்டு சிறு நகருக்கு விளை பொருட்களை விற்க செல்கிறாள் பாட்டி. அவள் கஷ்டப்பட்டு சைகையில் விற்பதை பார்த்த சிறுவனின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது. அதில் வந்த பணத்தில் அவனுக்கு நல்ல ஷூ வாங்கி தருகிறாள். அவன் கேட்ட சாக்லேட் வாங்கி தருகிறாள். வீடு திரும்ப பஸ்சுக்கு காசு போதததால், சிறுவனை மட்டும் அருகில் வசிக்கும் ஒரு பையனிடம் பத்திரமாக பஸ்சில் கொண்டு விடும்படி சொல்கிறாள். வீடு திரும்பிய சிறுவன் வெகு நேரமாக பாட்டி வராததால் திரும்ப ரோட்டில் வந்து காத்திருக்கிறான். பாட்டி மாலையில் நடந்தே கிராமத்திற்கு வருவதை பார்த்த பையன் மனம் மிகவும் வருத்தமடைகிறது. பாட்டி தனக்கென மகள் கொடுத்த முதியவர் சாப்பிடும் மருந்துகளை அருகில் வசிக்கும் நோயுற்ற ஒரு முதியவருக்கு அளிக்கிறாள். அதை பார்த்த சிறுவன் மேலும் பாட்டியை மதிக்க ஆரம்பிக்கிறான்.


அவன் தாய் எழுதிய கடிதத்தில் இன்னும் சில நாளில் வந்து அவனை திரும்ப கூடிக்கொண்டு போவதாக சொன்னவுடன் பையன் வருத்தமடைகிறான். பாட்டியை விட்டு சென்றவுடன் எப்படி அவளால் தனக்கு கடிதம் எழுத முடியும் என்று எண்ணி தனது கையால் சில அட்டைகளில் "நலமாய் இருக்கிறேன்", "உடல் நலமில்லை", "உன்னை பார்க்க வேண்டும்" என எழுதி அதை படிக்க வசதியாக சிரிக்கும் படம், சோகமான படம் என வரைந்து தருகிறான். அவனது தாய் வந்து அழைத்து போகும் நாளில் பாட்டியிடம் சைகையில் நெஞ்சின் மேல் வட்டம் வரைந்து மன்னிப்பு கேட்கிறான்.

இந்த படம் நான் நேற்று பார்த்த கொரிய மொழியில் வெளியான "தி வே ஹோம்" படத்தின் கதை. இந்த காலத்து சிறுவர்கள் பார்த்து கற்று கொள்ள வேண்டிய படம் என தோன்றியது. பாட்டியாக நடித்த கிம் இந்த படத்தில் தான் முதன்முதலாக நடிக்கிறார் - இது வரை அவர் சினிமாவே பார்த்ததில்லை என்பது என்னும் ஒரு ஆச்சர்யம்!

ப்லோக்பஸ்டரில் இது வாடகைக்கு கிடைக்கும்.