Sunday, June 28, 2009

தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே...


சென்ற வாரம் போயிருந்த முகாமில் ஒரு நாள் சூரிய உதயத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஐந்து மணிக்கு வரச்சொல்லியிருந்தார்கள். நான் கைக்கடிகாரத்தில் அலாரம் நேரத்தை சரியாக வைத்துவிட்டு அலாரம் ஆன் செய்ய மறந்துவிட்டேன். ஆனால் விப்பூர்வில் பறவைகள் மறக்காமல் எழுப்பிவிட்டன. அலறி அடித்துக்கொண்டு ஓடினால் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்ற பயத்தால் சத்தம் போடாமல் ஓடினேன்.
எல்லோரும் தூக்கத்தில் நடந்து வந்ததுபோல் இருந்தார்கள். ஒரு இருபது நிமிட நடையில் முகாமுக்கு நேர் மேலே ஒரு உச்சியை அடைந்தோம். அங்கிருந்து பார்த்ததில் தெரிந்த காட்சிதான் மேலே இருக்கும் படம்.

மூங்கில் இலை மீது தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே

இனி நான் குறுக்கே பேசவில்லை. சூரியன் உதிப்பதற்கு முன்னும், பின்னும் எடுத்த படங்களைப் பாருங்கள்.
மலையேற அஞ்சும் எங்கள் தலைக்காக அவர் நகர்ந்து உட்கார்ந்த நாற்காலியில் இருந்து சூரிய உதயத்தைப் பார்க்க கடேசியில் ஒரு வீடியோவும் உண்டு...

சூரிய உதயத்துக்கு முன்னால் வீடியோ...








சூரிய உதயம்...


இந்த வீடியோவில் வேகமாற்றம் ஏதும் இல்லை. நிகழ்ந்த மாதிரியேதான். சூரியன் உதிக்கும் முன் மாறும் நிறங்களைப் பாருங்கள். இது என் டிஜிட்டல் கேமராவின் வீடியோ வசதியில் எடுத்தது. நல்ல கனமான வீடியோ யாராவது தூக்கிக்கொண்டு வந்து கொடுத்திருந்தால் உங்களுக்கு இன்னும் அற்புதமான படம் கிடைத்திருக்கும். உங்களுக்கு வாய்த்தது இவ்வளவுதான்...

படம் பாரு கடி கேளு - 32


சே! என்னதான் பேண்டா (Panda) மேல் பிரியம் இருந்தாலும் இந்த zoo வில் நமக்கு பேண்டா வேஷம் போட்டுட்டாங்களே!. மரத்துல வேற ஏறச்சொல்லுவாங்களோ!

பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம்: விமர்சனம்




ஏழு வயதான சாங்-வூ-வின் தாய் சியோல் நகரத்தில் வேலை தேடவிருப்பதால் அவனை சிறு கிராமத்தில் வசிக்கும் வயதான தாயாரிடம் சில நாட்கள் விட்டுச் செல்கிறாள். மிக பின் தங்கிய கிராமத்தில் சிறுவன் சாங்-வூ-விற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அவனது வீடியோ கேம் மட்டுமே. பாட்டிக்கு பேச முடியாது, நியாபக மறதி வேறு. கிராமத்தில் விளைவிக்கும் காய்கறிகளை அருகில் இருக்கும் சிறு நகர் புறத்தில் விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறாள். ஆரம்பத்தில் பாட்டியை பிடிக்காமல் உதாசின படுத்துகிறான் சாங். ஆனாலும் பாட்டி அவனிடம் தனது நெஞ்சின் மேல் கையால் வட்டமிட்டு சைகையில் மன்னிப்பு கேட்கிறாள். பாட்டி தனது பழைய செருப்பினை தைக்க ஊசி நூல் கோர்த்து கொடுக்குமாறு, பையன் சலிப்புடன் சில முறை கோர்த்து கொடுக்கிறான்.



ஒரு சில நாட்களில் அவனது வீடியோ கேம் பாட்டரி தீர்ந்துவிடுகிறது. பாட்டியிடம் பாட்டரி வாங்க காசு கேட்டு அழுகிறான் சிறுவன். அவளிடம் காசு இல்லாததால் கோபத்தில் அவளது கூந்தல் முடிய வைத்துள்ள பழங்கால பொருளை விற்று விடுகிறான். அவளது ஒரே பழைய செருப்பினை தூக்கி எரிந்துவிடுகிறான். அவன் கொண்டுவந்த டின்னில் அடைத்த உணவுகள் தீர்ந்து விடுகிறது. பாட்டி கொடுக்கும் சாதம் அவனுக்கு பிடிக்கவில்லை. பசியால் வாடும் பேரனை பார்த்த பாட்டி அவனிடம் சைகையில் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கிறாள். அவன் தனது புத்தகத்தில் இருக்கும் கோழியை காட்டி கெண்டகி சிக்கன் வேண்டும் என்று கூறுகிறான். பாட்டியும் தனது விளைபொருட்களை எடுத்துக்கொண்டு சிறு நகருக்கு சென்று ஒரு கோழி வாங்கி வந்து நீரில் வேக வைத்து தருகிறாள். ஆனால் சிறுவனோ தனக்கு வறுத்த கோழி வேண்டும் என அழுகிறான்.




சிறுவனை அழைத்து கொண்டு சிறு நகருக்கு விளை பொருட்களை விற்க செல்கிறாள் பாட்டி. அவள் கஷ்டப்பட்டு சைகையில் விற்பதை பார்த்த சிறுவனின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது. அதில் வந்த பணத்தில் அவனுக்கு நல்ல ஷூ வாங்கி தருகிறாள். அவன் கேட்ட சாக்லேட் வாங்கி தருகிறாள். வீடு திரும்ப பஸ்சுக்கு காசு போதததால், சிறுவனை மட்டும் அருகில் வசிக்கும் ஒரு பையனிடம் பத்திரமாக பஸ்சில் கொண்டு விடும்படி சொல்கிறாள். வீடு திரும்பிய சிறுவன் வெகு நேரமாக பாட்டி வராததால் திரும்ப ரோட்டில் வந்து காத்திருக்கிறான். பாட்டி மாலையில் நடந்தே கிராமத்திற்கு வருவதை பார்த்த பையன் மனம் மிகவும் வருத்தமடைகிறது. பாட்டி தனக்கென மகள் கொடுத்த முதியவர் சாப்பிடும் மருந்துகளை அருகில் வசிக்கும் நோயுற்ற ஒரு முதியவருக்கு அளிக்கிறாள். அதை பார்த்த சிறுவன் மேலும் பாட்டியை மதிக்க ஆரம்பிக்கிறான்.


அவன் தாய் எழுதிய கடிதத்தில் இன்னும் சில நாளில் வந்து அவனை திரும்ப கூடிக்கொண்டு போவதாக சொன்னவுடன் பையன் வருத்தமடைகிறான். பாட்டியை விட்டு சென்றவுடன் எப்படி அவளால் தனக்கு கடிதம் எழுத முடியும் என்று எண்ணி தனது கையால் சில அட்டைகளில் "நலமாய் இருக்கிறேன்", "உடல் நலமில்லை", "உன்னை பார்க்க வேண்டும்" என எழுதி அதை படிக்க வசதியாக சிரிக்கும் படம், சோகமான படம் என வரைந்து தருகிறான். அவனது தாய் வந்து அழைத்து போகும் நாளில் பாட்டியிடம் சைகையில் நெஞ்சின் மேல் வட்டம் வரைந்து மன்னிப்பு கேட்கிறான்.

இந்த படம் நான் நேற்று பார்த்த கொரிய மொழியில் வெளியான "தி வே ஹோம்" படத்தின் கதை. இந்த காலத்து சிறுவர்கள் பார்த்து கற்று கொள்ள வேண்டிய படம் என தோன்றியது. பாட்டியாக நடித்த கிம் இந்த படத்தில் தான் முதன்முதலாக நடிக்கிறார் - இது வரை அவர் சினிமாவே பார்த்ததில்லை என்பது என்னும் ஒரு ஆச்சர்யம்!

ப்லோக்பஸ்டரில் இது வாடகைக்கு கிடைக்கும்.

Saturday, June 27, 2009

மீனாவுடன் மிக்சர் - 6 {பாம்பு செவியா? எனக்கா?}


எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னாங்க. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம். மனசுக்குள்ளே நான் சிரிச்சுண்டேன். ஒரு இருபது வருஷத்துக்கு முன் என் காது அடிச்ச கூத்து இவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை. சரியா சொல்லணும்னா என் காதை வச்சுண்டு என் அம்மாவும், ஒரு காது மூக்கு தொண்டை வைத்தியரும் அடிச்ச கூத்துன்னு சொல்லணும். எனக்கு காது சரியா கேக்கும்னு நம்பிக்கை போய் வீட்டுல எல்லோரும் Charades விளையாட்டு ஆடி சைகை செய்ய பழக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாருங்களேன். சுருக்கமா சொல்லணும்னா.......அனாவசியமா எதுக்கு சுருக்கணும்? அப்புறம் பதிவை நான் எப்படி ஜவ்வாட்டம் இழுக்கறது? முழுசாவே சொல்லறேன். கேளுங்க.

----------------------------------------------

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே எனக்கு முணுமுணுன்னு ஒரே காது வலி அன்னிக்கு. பையை வீசி விட்டு நேரா அம்மாகிட்ட போய் சொன்னேன். அம்மியில் ஏதோ துவையல் அரைச்சிண்டு இருந்த அம்மா நொடியில் டாக்டரா மாறி "மார்கழி மாச குளுரில் ஜில்லுனு தண்ணியில் காலங்கார்த்தால தலைக்கு குளிக்காதேன்னு நான் சொன்னா யார் கேக்கறா? அதான் சளி பிடிச்சு காது வலிக்கறது" அப்படீன்னு பளிச்சுன்னு டியாக்னோசிஸ் கொடுத்தா. "அதெல்லாம் இல்லைம்மா. காதுக்குள்ள ஒரு கட்டி இருக்குன்னு நினைக்கிறேன்" ன்னு நான் சொன்னவுடன் அம்மா மட மடன்னு வீட்டுக்குள்ளே போய் டார்ச் எடுத்துண்டு வந்தா .

இதை டார்சுன்னு சொல்லறதை விட பீமனோட கதைன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அத்தனை பெருசா இருக்கும். இந்த டார்ச் கூடிய சீக்கிரத்தில் மைகல் ஜாக்சனை விட பிரபலமாக போகுதுன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. சொர்கலோகத்து கதவு திறந்தால் என்ன மாதிரி ஒளி வரும்னு எங்க வீட்டு டார்ச் லைட் அடிச்சு பார்த்தா உங்களுக்கு புரிஞ்சுடும். டார்ச்சை என் காதுக்குள் அடித்து பார்த்த அம்மா அதிர்ந்து போனாள். "என்னடி இது, பிள்ளையார் சதுர்த்தி வெல்ல கொழுக்கட்டை சைசுக்கு இருக்கு இந்த கட்டி" அப்படீன்னு கவலையில் ஆழ்ந்தாள். இதை தொடர்ந்து நாலு நாட்கள் மஞ்சளும், உப்பும் அரைத்து கை வைத்தியம் செய்து பார்த்து தோற்ற அம்மா இனி டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

எங்க குடும்ப வைத்தியரை பத்தி தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. விடிகாலை சூரியன் உதிக்கும் முன் அவர் க்ளினிக்குக்குள்ளே போய் டென்ட் கட்டி கயித்து கட்டில் போட்டு படுக்க தயாரா இருந்தா தான் அங்கே போகணும். அதுக்கு நேரமோ பொறுமையோ இல்லாமல் நானும் என் அம்மாவும் நாலு தெரு தள்ளி புதுசா திறந்திருந்த ஒரு காது, மூக்கு, தொண்டை வைத்தியரிடம் போக தீர்மானித்தோம். "கோடியாத்து மாமி நேத்தி என் கிட்ட சொன்னா...இந்த டாக்டர் ரொம்ப படிச்சவராம். அதுவும் காதை பத்தி மட்டுமே ரெண்டு வருஷம் தனியா படிச்சிருக்காராம். நிச்சயம் சரி பண்ணிடுவார்." அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த டாக்டரிடம் நேரம் குறித்து கொண்டு ஒரு வழியாக செக்கப்புக்கு போனோம்.

என் அம்மாவை பத்தி ஒரு விஷயம் இங்கே சொல்லணும். கொடுக்குற காசு வீணாகாம டாக்டர்கிட்ட நிறைய கேள்வி கேட்பா. நிறைய விஷயம் சொல்லுவா. இந்த காது டாக்டர் முன் போய் உட்கார்ந்ததும் அம்மா பேச்சை துவங்கினாள். "வணக்கம் டாக்டர். என் பொண்ணுக்கு நாலு நாளா காதுல கட்டி. புதன்கிழமை அன்னிக்கு ஆரம்பிச்சது. அன்னிக்கி கார்த்தால ரசம் சாதம் சாப்டுட்டு போனா ஸ்கூலுக்கு. கொஞ்சம் மாம்பழம் நறுக்கி கொடுத்தேன். அதனால சூடு ஜாஸ்தியாகி இந்த கட்டி வந்ததோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை ஜாஸ்தி டாக்டர். இவள் காதை நன்னா செக் பண்ணி உள்ளுக்கு சாப்பிட நாலு மாத்திரையும், வெளியே தடவ ஒரு களிம்பும் எழுதி குடுத்திடுங்கோ. அடிக்கடி வந்துட்டு போறது கொஞ்சம் சிரமம். ஆனா பாவம் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அதனால பாத்து நல்ல மாத்திரையா எழுதுங்கோ." அம்மா மூச்செடுத்து மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ளே டாக்டர் புகுந்தார். "முதல்ல செக் பண்ணலாம் அம்மா. அப்புறம் எப்படி ட்ரீட் பண்ணனும்னு நான் சொல்லறேன்." என்னை பக்கத்து நாற்காலியில் உக்கார சொல்லி வாயை திறந்து நாக்கை நீட்ட சொன்னார். அவ்வளவு தீவிரமா அவர் என் வாய்க்குள்ளே டார்ச் அடித்து பார்ப்பதை பார்த்தால் கோகுல கிருஷ்ணன் வாய்க்குள் தெரிந்த உலகம் என் வாய்க்குள்ளேயும் தெரியுதோன்னு எனக்கு பயங்கர சந்தேகம். அப்படியே திறந்த வாக்கில் உறைஞ்சு போயிடுமோன்னு பயந்திருந்த என் வாயை ஒரு வழியா மூடிய போது, டாக்டர் டார்ச்சை மூக்கின் பக்கம் திருப்பினார். மூக்கை செக் செய்து விட்டு மருந்து சீட்டு எழுதி அம்மா கையில் கொடுத்தார். "இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு பத்து நாளைக்கப்புறம் வாங்க" ன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சுட்டார். வெளியே வந்த நாங்க குழம்பி போய் நின்னோம். கிளினிக் வாசலில் இருந்த பெரிய போர்டை மறுபடி படித்து பார்த்தால் "காது" டாக்டர்னு தான் போட்டிருந்தது. ஹ்ம்ம்...காதை தவிர மத்ததை தானே இவர் செக் பண்ணினார்? நிஜமாவே பெரிய டாக்டர் தான் போல இருக்கு. கட்டியை பாக்காமலே மாத்திரை குடுத்துட்டாரே?

அடுத்த பத்து நாளும் வீடு ஒரே சர்க்கஸ் தான். மாத்திரை சாப்பிட்டு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது கட்டி சௌபாக்யமா இருந்தது. ஒரு நாளைக்கு நாலு தரம் அம்மா என் காதுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து புலம்புவா. அதோட நிக்காமல் வாசல் கதவை திறந்து உள்ளே வரும் ஒருவரையும் விட்டு வைக்காமல் கூப்பிட்டு "கொஞ்சம் இப்படி வாங்கோளேன். எங்க மீனா காதுல கட்டி. பெரிய காது டாக்டரிடம் காமிச்சும் ஒண்ணும் சரியா போற மாதிரி இல்லை. இதோ டார்ச். மீனாவை கூப்பிடறேன். நீங்க கொஞ்சம் செக் பண்ணுங்கோ, சரியா? மீனா.....இங்க வந்து உன் காதை கொஞ்சம் காமிம்மா." என்னவோ பெருமையா ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து காமின்னு சொல்லரா மாதிரி அம்மா என்னை கூப்பிடுவா. ஒரு நாள் எங்க தெரு கீரைக்காரி கஷ்டப்பட்டு தலையில் இருந்த கூடையை இறக்கி வச்சுட்டு என் காதை டார்ச் அடிச்சு பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நாலு கை வைத்தியத்தை சொல்லிட்டு போனாள். வாசக்கதவு பக்கமா டார்ச் வைக்க ஸ்பெஷல் தட்டு ஒண்ணு கட்டலாமான்னு கூட வீட்டில் பேச்சு நடந்தது. ஒரு வாரம் அம்மா கூப்பிடவுடன் வந்து டார்ச் வெளிச்சத்தில் காதை காமித்து பழகி போய் அப்புறம் நானே வாசக்கதவு திறக்குற சத்தம் கேட்டால் டக்குனு போய் டார்ச் எடுத்துண்டு நின்னுடுவேன்னா பாருங்களேன்.

ஒரு வழியா பத்து நாள் மாத்திரை சாப்பிட்டு முடித்து விட்டு கட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது டாக்டரிடன் மறுபடியும் போனோம். இந்த முறை அவரிடம் காதை எப்படியாவது காட்டி விடணும் அப்படீங்கற தீர்மானத்தோடு போனோம். போய் நாற்காலியில் உட்காரும் போதே திரும்பி காது அவர் கண்ணுக்கு தெரியும் படி உட்கார்ந்தேன். இப்ப அவராலே எப்படி மிஸ் பண்ண முடியும்? ஆனால் அவர் "நேரா உட்கார்ந்து வாயை திறந்து நாக்கை நீட்டும்மா" ன்னாரு. வேறு வழியில்லாமல் அவர் சொன்ன படி உட்கார்ந்தால் பழைய படி தொண்டையையும், மூக்கையும் செக் செய்து விட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சார். நொந்து போய் "டாக்டர், எனக்கு கட்டி காதுல" ன்னு மெதுவா சொன்னேன். "ம்ம் தெரியும்மா. இந்த மாத்திரையை ஒரு அஞ்சு நாள் சாப்பிட்டுட்டு வா. கட்டி கரயலைனா கீறி எடுத்துடலாம்." என்னவோ மைசூர் பாகை கீறல் போடற மாதிரின்னாவது சொல்லறார். அங்கே நாங்க எடுத்த ஓட்டம் எங்க குடும்ப வைத்தியர் கிளினிக் வாசல்ல தான் நின்னுது. என் காது கூத்தை கேட்டு சிரிச்சுண்டே ஒரு களிம்பு எழுதி கொடுத்த எங்க வைத்தியர் "உனக்கு காசு ரொம்ப இருந்தா போய் அட்மிட் ஆகி ஆபரேஷன் எல்லாம் பண்ணிக்கோ. இல்லைன்னா இதை தடவிப்பாரு" அப்படீன்னாரு. ரெண்டே நாளுல கட்டி இருந்த இடம் தெரியாமல் போயிடுத்து. டார்ச்சை நல்லா துடைச்சு உள்ளே வச்சோம். அதுக்கும் தான் பாவம் ஓய்வு வேண்டாமா?

-மீனா சங்கரன்

நலமாய் வாழ பத்து வழிகள்


#அ: நல்ல மருத்துவரை அனுகவும்:
முதலில் அமெரிக்கன் மெடிக்கல் அசொசியோசன் மூலம் நல்ல மருத்துவரை தேர்ந்தெடுங்கள். அவரது அலுவலகம் உங்களுக்கு அருகாமையில் உள்ளதா, நண்பர்கள் பரிந்துரை, போர்டு அங்கீகாரம் பெற்றவரா என பார்த்து தேர்ந்தெடுக்கவும். ஒரு நல்ல மருத்துவர் ஒரு நல்ல வாத்தியாருக்கு இணை. நல்ல மருத்துவரை தேர்ந்தெடுப்பது நல்ல உடல் வளத்துக்கு வழிவகுக்கும்.

#ஆ: கேடு விளைவிக்கும் உணவுகள் தவிர்க்க வேண்டும்:
முதலில் உடலுக்கு கேடு  விளைவிக்கும் ஐந்து உப பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:
காரன் சிரப்:
இது பொதுவாக எல்லா சோடா குளிர் பானங்களிலும் சுவைக்காக சேர்க்கப்படும். இது நமக்கு தேவையில்லாத சர்க்கரையை உடலுக்கு சேர்த்து கேடு விழைவிக்கும்.

சர்க்கரை:
பொதுவாக சர்க்கரை சேர்த்த இனிப்புகளை உண்டவுடன் உங்கள் மூளை "எனக்கு கலோரிகளை கொடுத்துவிட்டாய், ஆனால் ஊட்டப்பொருள் (nutrients) எதுவும் இன்னமும் அனுப்பவில்லை என மேலும் உணவுக்காக ஏங்க ஆரம்பிக்கும்.

பதப்படுத்தப்பட்டவை ("Enriched"):
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (உ.தா. : மேன்படுத்தப்பட்ட கோதுமை ரொட்டி) அதிலுள்ள ஊட்டசத்துகள் இழப்பதால் அதில் செயற்கையான ஊட்டசத்துகள் சேர்க்கின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல.

கொழுப்பு வகை Trans fat:
பொதுவாக உணவுகளை நீண்ட நாட்கள் கெடாமல் வைக்க ஹைட்ரஜன் சேர்த்த கொழுப்பை உபயோகிப்பார்கள். இது முற்றிலும் கேடான பொருள்.

கொழுப்பு வகை Saturated fats:
இந்த வகை கொழுப்புகள் மாட்டு/பன்றி இறைச்சி, பால் உணவுவகைகளில் காணப்படும். இதுவும் நமக்கு நல்லதில்லை.

#இ: உடல் நலனுக்கு உகந்தவை:

அன்டிஆக்சிடன்ட்ஸ் / Antioxidants
தக்காளி, ப்ரக்கலீ, ராஜ்மா கடலை, நீல பெர்ரி, ஆர்ட்டிசொக், ப்ருன் போன்ற பழங்களில் அதிகமாக காணப்படும். இவை ஒரு நாளுக்கு ஐந்து முதல் ஏழு அளவைகள் (serving) சேர்க்க வேண்டும்.
ஒமேகா மூன்று வகை கொழுப்புகள் / Omega-3 Fats
ஒமேகா மூன்று வகை கொழுப்புகள் ப்ளக்ஸ் விதை , வால்நட், சாலமன் மீன், சோயா, ஸ்குவாஷ் காய்கள் முதிலானவற்றில் காணப்படும் நல்ல வகை கொழுப்புகள்.

நார் வகை:
ஒட் மீல், முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், பட்டாணி, பல காய்கறிகள் நார் சத்து நிறைந்தது.

ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் உடலுக்கு மிக உகந்தது.

#ஈ: மல்டி-வைட்டமின்:
மருத்துவரை கலந்தாலோசனை செய்தபின் உங்களுக்கு உகந்த வைட்டமின் மாத்திரைகள் உண்பது நலம். இங்கு எந்த வயதிற்கு என்ன சாப்பிடலாம் என சில ஆலோசனைகள் காணலாம்.

#உ: முக்கியமான எண்கள்:
இடுப்பளவு (பி எம் ஐ), ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், சக்கரை, வைட்டமின் டி, தைராயிட் போன்ற முக்கிய அளவுகோல்கள் உங்களுக்கு உடலில் நடக்கும் மாற்றங்களை உடனே காட்டிவிடும். பெரிய ஆபத்து வருமுன் காத்திடலாம்! நான் இவற்றை கூகிள் https://www.google.com/health - என்ற தளத்தில் இணையத்தில் (பாதுகாப்பாக) சேமித்து வைத்துள்ளேன்.

#ஊ: உடல நல ஆலோசகர்:
உங்கள் மனைவி/கணவர், மகன்/மகள் அல்லது நண்பர் இப்படி யாரவது ஒருவரை உங்கள் நல ஆலோசகராக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை ஊக்கப்படுதுவதுடன் மருத்துவரை தகுந்த கேள்விகள் கேட்டு உங்களுக்கு உதவ முடியும்.

#எ: மருத்துவ கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைக்கவும்
மருத்துவரை பார்த்து வெளிவருமுன் அந்த நாளைய குறிப்புகளை ஒரு பிரதி எடுத்து தருமாறு கேட்கவும். வேறு ஒரு மருத்துவரை இரண்டாம் கருத்து கேட்கவோ அல்லது உங்கள் குடும்ப நல வரலாறு அறிய இந்து உதவும். தற்போது கூகிள் https://www.google.com/health - என்ற தளத்தில் இணையத்தில் சேமிக்கும் வசதியை தந்துள்ளார்கள். சில மருத்துவமனைகள், பார்மசி கூகிள் உடன் நேரடி தொடர்பு கொண்டு உங்கள் நல வரலாற்றினை பரிமாறிக்கொள்ள வழி செய்திருக்கின்றனர்.

#ஏ: மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்யவும்:
வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை, இரு முறை பல் பரிசோதனை, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்தல் நலம். அது தவிர வயதிற்கு ஏற்ப ஆண்/பெண் இன்னும் பல மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். இது குறித்து மேலும் விபரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறியவும்.

#ஐ: உடற்பயிற்சி:
தற்கால கணினி பொறியாளர்கள் "எலியை" நகர்த்துவது தவிர வேறு வேலை எதுவும் உடலுக்கு கொடுப்பதில்லை. நல்ல உணவுடன், தினமும் முப்பது நிமிடம் நடக்க வேண்டும். முடிந்தால் முப்பது நிமிடம் மேல் உடல், கீழ் உடல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலை பலப்படுத்தி தசைகளுக்கு வலுவூட்டும். யோகா போன்ற தியான பயிற்சிகள் செய்தல் மனதை வளமாக வைக்க உதவும்.

#ஒ: தூக்கம்:

மனிதனுக்கு ஒரு நாளைக்கு எழு முதல் எட்டு மணி நேர தூக்கம் மிக அவசியம். #அ முதல் #ஐ வரை இருப்பவை சரியாக பின்பற்றினாலும் தூக்கம் இல்லையென்றால் இவை அனைத்தும் வீணாகிவிடும்.

நன்றி: டாக்டர் ஒஸ். இந்த பகுதி சமிபத்தில் "ஒபரா" வழங்கிய நிகழ்ச்சியிலிருந்து தமிழ் படுத்தப்பட்டது.

Thursday, June 25, 2009

இந்த வார சொர்க்கம்

சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நான் ஒரு சாரண முகாமில் இருக்கிறேன். வர்ஜினியாவின் ப்ளூரிட்ஜ் மலைத் தொடரில் இருக்கும் ஒரு பெரிய சாரண முகாம். புலஸ்கி கவுண்டியில் ஹிவாஸ்ஸி என்ற கிராமத்துக்கு அருகில். மலைகளும் சிறு நதிகளும் நிறைந்த இந்த இடம் இன்னொரு சொர்க்கபுரி.

இணையத்தொடர்பும் அலைபேசி தொடர்பும் வேலை செய்யாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  சொர்க்கத்தை அனுபவிக்காமல் இங்கே என்னய்யா செய்கிறீர்கள் என்பவர்களுக்கு - எல்லாம் உங்கள் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ளத்தான். சொர்க்கத்தின் ஒரு உதாரணம்...


இது என்ன என்கிறீர்களா?

எனது ஊஞ்சலில்(ஹம்மாக்) இருந்து எனக்கு தெரிவதெல்லாம் இதுதான்! போய் இன்னும் இன்றைக்கும் இந்த வாரம் மீதமிருக்கும் வேலைகளை எல்லாம் முடியுங்கள் சரியா? நான் கொஞ்சம் தூங்க வேண்டும்.

அடுத்த வாரம் விவரமாக...


விவரமாக அடுத்த வாரம்.

Wednesday, June 24, 2009

sorry. kozuppu konjam over

சாரி கொழுப்பு கொஞ்சம் ஓவர்
(இந்த கதைக்கும் மீனாவுக்கும் சம்பந்தம் இல்லை. கதையில் வருவன யாவும் கற்பனையே. மீனாவின் அனுபவம் எங்களது கற்பனயில் )
மனைவி மற்றும் குழ்ந்தைகள் அனைவரையும் இந்தியா அனுப்பி விட்டு அடுத்த நாள் கோவிலுக்கு சென்றேன். அங்கு அன்னபூரணியில் மீனாவை சந்தித்த போது அவர்கள் இந்தியா செல்ல இருப்பதாகவும், அவர்களின் சாம்பார் வடை சபதம் பற்றியும் சொன்னார்கள். நானும் அதே நாளில் அதே விமானத்தில் பயணம் செய்கிறேன் என்று சொன்னதும் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனால் சாம்பார் வடை சபதம் மட்டும் எனக்கு உறுத்தி கொண்டு இருந்தது. மனதுக்குள் அதனை சவாலாக எடுத்து கொண்டு, மீனாவை முந்தி விட வேண்டும் என்று நினைத்தவாறே கோவிலை விட்டு வெளியே வந்தேன். எல்லாம் இறைவனின் திருவிளையாடல்.
அது படியே நான் சவாலில் ஜெயித்து விட்டேன். எப்படி என்று தானே கேட்கிறீங்க. அதுக்கு தானே இந்த கற்பனையே.
என் கதையை படிச்சுட்டு நாகு இன்னொரு பஜ்ஜி ன்னு கமென்ட் அடிக்க போறாரு. அவருக்கு கொஞ்சம் லொள்ளு ஓவர் தான். இப்பவே அவருக்காக பஜ்ஜி ஆர்டர் பண்ணி வச்சுட்டேன், கூடவே கொஞ்சம் அல்வாவும், ஏன்னா அவர் வாயையும் திறக்க கூடாதுன்னு தான். தமிழனுக்கு ரொம்ப நல்ல எண்ணம்.
எங்கள் குடும்பம் பாசம் மிகுந்த பெரிய கூட்டு குடும்பம். அதுனால என் அண்ணனிடம் சாம்பார் வடை சவால் பற்றி சொன்னேன். அவர் கவலை படாதேன்னு சொல்லி விமான நிலையத்திற்கு வரும் போதே வாங்கி வந்து விடுகிறேன்னுட்டார். பயண நாளும் வந்தது, சாம்பார் வாடையும கிடைக்க போகுது.
அண்ணன் சொன்ன மாதிரியே வடை வாங்கி வந்து விட்டார். உடனே மீனாவை தேடினேன், அவரை காணவில்லை. சரி என்று நானே சாப்பிட்டு விட்டேன். மீனாவுக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும் என்று தான் ஆசை, அனால் அவர் வீட்டிற்கு போனவுடன் தான் பேச முடியும். மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.
என் முகத்தில் எதையோ சாதித்தது போல ஒரு பெருமை.
காரில் ஏறி வீட்டிற்கு வந்தால் அங்கு ஏக கூட்டம். எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு, ஒரு குளியல் போட்டு வந்து உட்கார்ந்தால், அங்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. என் அம்மாவிற்கு எப்படியோ வடை ரகசியம் தெரிந்து என் மனைவியை திட்டி கொண்டே ஒரு வடை கூட செஞ்சு கொடுக்க கூடாதான்னு சொல்லி கொண்டே வடை சுட்டு வைத்து இருந்தார்கள். பத்து வடையை (சும்மா ஒரு கணக்கு தான்) சாப்பிட்டு விட்டு கூடவே சுட சுட மதுர மல்லிகைப்பூ இட்லி, மல்லி சட்னியுடன் இட்லி பொடியும் சேரவே நாக்குல தண்ணி கொட்ட கொட்ட சாப்பிட்டு எழுந்தேன். சொந்த கதை எல்லாம் பேசி முடிக்க நைட் 2 1/2 மணி ஆயிடுச்சு. அதுக்கப்புறம் தூங்க போய் விட்டேன். காலை முழிச்சு பார்த்தால் மணி 12. வீட்டுல எல்லோரும் பயண களைப்பு என்று சும்மா கண்டுக்காம விட்டு விட்டாங்க. நைட் பட்ட வேதனை எனக்கு தான் தெரியும். எத்தனை தடவ தான் போறது. எனக்கோ யாரோ அமுக்குவது போல ஒரு வேதனை. சத்தம் போட்டு கூப்பிடலாமுன்னு பார்த்ததால் யாரும் வந்த மாதிரி தெரியலை. சிரிக்காதீங்கப்பா, எவ்வளவு வேதனை தெரியுமா.
ஒரு வழியாக என் அம்மா வந்து பார்த்தார்கள். என் நெலமையை பார்த்தட்வுன்ஒரே அழுகை. என்னவோ ஏதோ என்று மற்றவர்களும் மேல வந்தவுடன் சாம்பார் வடையின் விபரீதம் அவர்களுக்கு தெரிந்தது.
என் தங்கையோ ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து, கொஞ்சமா சாப்பிடனும், எதோ காஞ்ச மாடு கம்பம் கொல்லைல பாஞ்ச மாதிரி சாப்பிட்ட இப்படித் தான்.
என் அப்பாவோ, அது என்ன வந்ததும் வராததுமா சாம்பார் வடை. இவனை சொல்லி குத்தமில்ல, இவனுக்கு வடையை வாங்கி கொடுத்தவன தான் சொல்லனும்ன்னு என் அண்ணனுக்கு ஒரு குட்டு வைத்தார். என் அண்ணன் அங்கிருந்தால் வம்புன்னுட்டு உடனே எஸ் ஆயிட்டான்.
இதுக்கு அப்புறம் தான் ரகளையே.
என் அப்பா உடனே காரில் ஏற்றி அவருக்கு தெரிந்த நர்சிங் ஹோம் என்று ஒரு புது ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார். அங்கு அதே அனுபவம் தான். ஆனா ஒரு வித்தியாசம். டாக்டருக்கு தான் அனுபவம் பத்தலை. நம்ம உடம்ப பார்க்காம வேகம் அதிகமா இருக்குற மாத்திரையை கொடுக்க, அது தன வேலையை காட்டிடுச்சு. அலர்ஜி ஆகி, வேற மாத்திரை கொடுக்குறதுக்குள்ள மீனாவோட எல்லா அனுபவமும் அனுபவிச்சுட்டேன்.
நம்மள சமாதான் படுத்த டாக்டரும், நீங்கள் லோக்கல்ல இருந்தா ஒன்னு இரண்டு மாத்திரை கொடுத்து இருப்பேன். ஆனா நீங்கள் வெளி நாடுல இருந்து வந்து இருக்கீங்க, எப்பவாவது தானே வருவீங்க, அதுனால தான் இந்த கம்ப்ளீட் சிகிச்சைன்னு ஒரு சமாளிப்பு. அடுத்து கிரெடிட் கார்டு நம்பர் கேட்டாரு, அது எல்லாம் எடுத்து வரலைன்னு நானும் பதிலுக்கு ஒரு சமாளிப்பு ( எப்படி நம்ம திறமை) சமாளிச்சுட்டு வந்துட்டேன்.
ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தா, என் அம்மா கையில ஆரத்தி தட்டும் எலுமிச்சம் பழமும் நின்னு கிட்டு யாரையோ திட்டி கொண்டே இருந்தாங்க. எந்த பாவி கண்ணு பட்டுதோ, வந்ததும் வராததுமா இப்படி ஆயிடுச்சே.
ஆரத்தி எடுத்த கையோட, திருப்பதிக்கு மொட்டை போடனும்னு வேண்டிகிட்டங்க.
அடுத்த நாள் என் அண்ணனோ அவன் ஒரு ஹோமியோபதியை கூட்டி வந்து இருந்தார். அவரும் கை பிடித்து பார்த்து விட்டு சில மாத்திரைகளை கொடுத்தது விட்டு சாப்பாட்டில கவனமா இருக்க சொல்லிட்டு போய்ட்டாரு.
இது இப்படி இருக்க என் சித்தி விஷயம் அறிந்து ஒரு பச்சிலை வைத்தியரை கூடி வந்து விட்டார்கள். அவரும் கதையை எல்லாம் கேட்டு விட்டு, ஒரு தொக்கு எடுத்தால் சரி ஆகிவிடும் என்று வயிற்றை சுற்றி சாம்பல் தடவி தொக்கு எடுத்து சென்றார். ( இந்த வழி இன்னும் போக வில்லை)
என் அப்பவோ ஒரு படி மேல போய் ஜோசியரை கூடி வந்து விட்டார். ஆயுள் பலம் பற்றி கேட்டு விட்டு ஏதாவது பரிகாரம் உண்டான்னு கேட்க, ஜோசியரும் குசியாக தண்ணீரில் கண்டம் இருக்கு, வெறும் பிஸ்லேரி தண்ணி மட்டும் குடிக்க சொல்லி விட்டு அவர் பையை நிரப்பி விட்டு சென்றார்.
அடுத்த நாள் என்ன நடக்கும் என்று யோசிப்பதற்குள் காலையிலேயே உடுக்கை சத்தம் கேட்டது. என்னடாவென்றால் என் பாட்டி அவர் பங்கிற்கு ஒரு மாந்த்ரிகரை கூட்டி வந்து இருந்தார்கள்.
அவன் இது ஒரு செய்வன, நான் சாப்பிட்ட வடையை எடுத்து விட்டால் சரி ஆகி விடும் என்றான். சாப்பிட்டு மூணு நாளாச்சு, இப்ப எடுக்க போறாரா? நம்ம பேச்சை யார் கேட்க போகிறார்கள்? என்னால் ஒன்றும் பேச விடாமல் தண்ணீரை எடுத்து என் மேல் தெளித்தான்.
எப்படி என் வாயில் வடையை திணித்தான் என்று யோசிப்பதற்குள் வடையை வாயில் இருந்து எடுத்து எல்லோரிடமும் காட்டினான். என் பாட்டிக்கோ ஓர் சந்தோசம். செய்வன வடையை எடுத்தாச்சு என்று.
நல்ல வேளை, நான் 10+2 வடை சாப்பிட்டத சொல்லலை. சொன்ன இன்னும் 11 வடையை எடுக்கணும்ன்னு சொல்லி கொடுமை படுத்தி விடுவான். எப்படி நம்ம அறிவு. என் அண்ணனோ இது வேற வடை மாதிரி இல்ல இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருந்தான்.
இதுக்கு மேல் இங்க இருந்தா பைத்தியம் பிடித்து விடும் என்று மாமனார் வீட்டிற்கு வந்தேன். அங்கு வந்தால் மனைவியும், குழந்தையும் ஓர் அழுகை. எனக்கு ஒன்றும் இல்லை என்று சமாதானப் படுத்தும் போது, என் மனைவி சொன்னாள். அதுக்கெல்லாம் நாங்க அழவில்லை. நான் இப்படி இருக்கறதால அவர்களால் எங்கும் செல்ல முடிய வில்லையாம். இந்தியா வந்ததே வேஷ்ட்டுனு சொல்லி மீண்டும் ஓர் அழுகை.நம்ம என்ன செய்யறது, அவரவர் கவலை அவரவர்க்கு.
உள்ளே சென்ற மனைவி கையில் ஒரு லிஸ்டுடன் வந்தால். உங்கள் இரண்டு வார லீவு முடிய போகுது, அங்க இங்க சுத்தாம இதுல இருக்குறதா வாங்கி பேக் பண்ணுங்க. மறந்துறாம அமெரிக்க எடுத்துட்டு போங்கன்னு ஒரு அட்வைஸ்.
சரின்னு தலையை ஆட்டி விட்டு வீட்டுக்கு வந்தேன். என் அம்மா வேண்டுதலை நிறைவேத்தாம ஊருக்கு போக கூடாதுன்னுட்டு திருப்பதிக்கு டிக்கெட் புக் வேற பண்ணி வச்சுட்டாங்க. எனக்கோ முடி கொஞ்சம் கூட இல்லை. இதுல எங்க போய் மொட்டை போடறது. இறைவா இது எல்லாம் உன் திருவிளையாடல் தானே. அடுத்த தடவையாவது நல்ல சாப்பாடு கிடைக்க வழி செய்யப்பா என்று வேண்டி கொண்டே பேக் பண்ண ஆரம்பித்து விட்டேன்.
இன்று வரை உடம்பு சரி இல்லாததால் மீனா கூட கால் பண்ணி பேச கூட முடியவில்லை.
கொழுப்பு கொஞ்சம் ஓவர் தான்னு மீனாவோட புலம்பல் கேட்குது. அதுனால கற்பனையை இப்படியே ஓரம் கட்டி வச்சுட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமாயிட்டேன்.
- வேதாந்தி

Saturday, June 20, 2009

மீனாவுடன் மிக்சர் - 5 {வைத்தியரே! என்னைய வச்சு காமடி கீமடி பண்ணிறாதீங்க ஐயா)

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன். அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம். விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம். இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க. இது ஒரு சோக கதை. இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க. ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான்.

பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன். விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு. என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள். அது என்ன நகைக்கடை? அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு. அவளுக்கென்ன தெரியும்? இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன். இருந்தா முடிய மாட்டேனா? வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்? சரி அது போகட்டும். சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன். என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன். இது வரையில் என் சபதம் வெற்றி தான். அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.

என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன். திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம். எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். என் போறாத நேரம், என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு. சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45. கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது.

இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும். இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு. வைத்தியரை பார்க்கும் அறை. ஊசி போடும் அறை. மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள். ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள். மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன். இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார். அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார். பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும். ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி. பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?

என் விஷயத்துக்கு வருவோம். நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை. சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று. பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது. உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள். நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு. அசந்தே போனேன் நான். இவரென்ன தீர்கதரிசியா? நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை. அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை. அதுக்குள்ள அட்மிஷனா? அரை நொடியில் வீல் சேர் வந்தது. நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள். அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது. சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை. திடுக்கிட்டு போனேன். என்ன செய்யறது? சரி நம்ம குடும்ப பாட்டை பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது. நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா.

அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம். கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள். பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பயங்கர சந்தேகம். இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு. கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு வாய் திறக்காமல் படுத்திருந்தேன். குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா? உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார். கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன். உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு. இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சொகுசா தங்கிட்டு போக. "அதெல்லாம் வேணாம் டாக்டர். நாலு மாத்திரை எழுதி குடுங்க. நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன். ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர். "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்? நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான் கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது. அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி. திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு. நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு. அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க. எது எப்படியோ வைத்தியர் நல்லவர். மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

---------------------------------------

அவ்வளவு தாங்க என் சோக கதை. கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.

-மீனா சங்கரன்

அப்பாக்கள் தினம்

அப்பாவின் பேச்சுக்கள் எல்லாம் அனத்தல் என்று தான் தெரியும் ஆனால் அது அவரது ஏக்கம் என்று யாருக்கும் புரியாது. இன்றைக்கு அப்பாக்கள் தினம். எல்லோருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் அவர்களது பெற்றோர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தான். அப்பாக்கள் தினத்தன்று உன் அப்பாவிற்கு எதாவது செய் என்று கூறினேன். அவனோ என்னை ஒரு வித்தியாசமாக பார்த்தான். அது எல்லாம் அமெரிக்கர்களுக்கு தான் பொருந்தும் நமக்கு ஒன்றும் இல்லை.
நானும் யோசித்தேன், நாம் அப்பாவிற்கு சிறப்பாக என்ன செய்தோம் என்று. பணம் அனுப்புவதைத தவிர அவருடைய அன்றாட தேவைகளைப் பற்றி நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நண்பர்களே இந்த நாளில் ஒரு வாழ்த்து சொன்னால் கண்டிப்பாக அவரின் மனம் குளிரும். இதில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என்று பேதம் பார்க்க வேண்டாம்.
இந்த உண்மை நிகழ்ச்சியை கேட்டால் நீங்கள் அப்பாவின் அனத்தலை புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். ஆனால் வந்த இரண்டாவது மாதமே மிக சோகமாக இருந்தான். காரணம் கேட்ட போது அவன் தந்தை தவறி விட்டார் என்று தெரிய வந்தது. அவனை ஆறுதல் தேற்ற எப்படி இறந்தார் என்று கேட்க அவன் குமுறி குமுறி அழுக ஆரம்பித்து விட்டான். இறுதியில் அவன் அமெரிக்கா வந்ததால் தான் இறந்து விட்டார் என்றான். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. மகன் அமெரிக்கா வந்தால் அப்பாக்கள் சந்தோசம் தானே படுவார்கள். இவனோ இப்படி சொல்லுகிறான் என்று குழ்ப்பம்.
மீண்டும் அவனை விசாரித்தேன்.
நீண்ட நாள் முயற்சியில் ஒரு நாள் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் மிக்க சந்தோசம். பையன் முதன் முதலாக வெளிநாடு செல்லுகிறான் என்று பெருமிதம். அவனுக்கும் அது தான் முதல் பயணம். வீட்டை விட்டு வெளியில் செல்லாத ஒருவனுக்கு விமானம் ஏறி வெளிநாடு செல்லப்போகிறான், அவன் அப்பாவிற்கு ஒரு வித பயம் கலந்த சந்தோசம். பயத்தை வெளிக்காட்டாமல் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மிக்க ஆர்வமாயிருந்தார். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். அவனுடன் அவன் அப்பாவும் வழியனுப்ப சென்னை வந்தார். விமான நிலையத்திற்கு மிக முன்னதாகவே வந்து விட்டார்கள். டிக்கெட்டை செக் இன் பண்ணும் போது அதிகாரிகள் அன்று பயணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். அவனுக்கோ தலை சுற்றியது. கரணம் விசாரித்தால் டிக்கெட் ரீ கன்பர்ம் பண்ண வில்லை என்று சொல்லி விட்டனர், மேலும் 48 மணி நேரம் கழித்து தான் பயணம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர்.
அவனும் அவனது தந்தையும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வழியாக அதிகாரிகள் நண்பனுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இவனும் அப்பாவை ஊருக்கு போக சொல்லி விட்டு இரு நாட்கள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரத்தில் அவனுடைய அப்பாவிற்கு இதய வலி. காரணம் அவன் முதற் பயணம் தடை பட்டு விட்ட கவலையிலும், மகனை பிரிந்த கவலையிலும் இதய வலி வந்து விட்டது. அது நாளடைவில் அவரை நிரந்தரமாக பிரித்து விட்டது.
ஒரு வேளை நண்பன் இங்கு வராமல் இருந்தால் அவனது தந்தை உயிரோடு இருந்திருப்பாரோ?

வேதாந்தி

அரசியல்வாதி

தினசரி பத்திரிக்கையில் ஒரே பரபரப்பு. அன்றைய தலைப்பு செய்தி இது தான். ஒரு மந்திரியின் மகன் தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கிறான். மந்திரியிடம் பேட்டி. பேட்டியில் மந்திரி தன மகனை ஒரு சாதரண ஏழை குடிமகனாக வளர்ப்பேன் என்று சொல்லிவிட்டார். கட்சியிலும் மற்றும் மக்கள் மத்தியில் மந்திரியின் செல்வாக்கு கூடியது. சில வருடங்கள் கழித்து அதே பரபரப்பு மகனை சாதரண ஒரு ஏழைப பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
மக்கள் மத்தியில் அவர் ஒரு அவதார புருசனாக சித்தரிக்கப் பட்டார். அவர் மகனுக்கோ ஒன்றும் விளங்க வில்லை. என்ன ஆச்சு அப்பாவிற்கு. தன்னை ஏன் இப்படி நடத்துகிறார். ஒரு நாள் அவரிடம் தனியாக சென்று விசாரித்தான். உங்களின் விளம்பரத்திற்கு என்னை ஏன் பலிகடா ஆக்குகிறிர்கள்?
அவரோ பலமாக சிரித்து விட்டு கிறுக்கா உனக்கு ஒன்றும் புரியாது. ஒரு மந்திரியின் மகன் என்றால் அவன் ஒரு இளவரசனுக்கு சமம். அனால் நீயோ ஒரு அனாதைப் பயல். உன்னை நான் தத்து தான் எடுத்தேன். இப்பொழுது புரிகிறதா உன் பிறவிப் பயன். உன் பிறவியால் நான் பயன் பெற வேண்டும் என்று உன் தலைவிதி
அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவர் அப்பா இல்லை ஒரு அரசியல்வாதி என்று.
வேதாந்தி

Friday, June 19, 2009

படம் பாரு கடி கேளூ - 31


சிவப்பு பனியன்: டேய் உயிரை பணயம் வெச்சு வித்தை காட்டறோம்னு தெருவுக்கு வந்து கூட்டம் சேர்த்துட்டோம். ப்ரேக் எல்லாம் செக் பண்ணினியா? பிடிக்குமில்லே?

Thursday, June 18, 2009

பழமொழி வலைமொழி

நம்ம சதங்கா பழமொழி வலைமொழின்னு ஒரு தொடர் ஆரம்பித்து அழைத்திருந்தார். நாம பல பழமொழி தெரிஞ்சவங்களாச்சே,

சான் ஹோசே போனாலும் சன் டிவி விடாது... மாதிரி நிறைய விடலாம்னு பாத்தேன். ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு. இது வலையைச் சார்ந்திருக்கனுமாம். அட தேவுடா.... கொஞ்சம் சுதந்திரமாக விடமாட்டேங்கறாங்கப்பா... சரி கொஞ்சம் எடுத்து விடுவோம்...

புதிய தளத்தில் மீள் பதிவு...
தொடரிருக்கும்போதே தூற்றிக் கொள்.
பதிவு தேய்ந்து டிவிட்டர் ஆன கதை.
பதிவே எழுதாதவன் தமிழ்மண வார நட்சத்திரம் ஆன மாதிரி.
தனிப் பதிவு தொடராகுமா...
வாரமும் ஆச்சு, மாதமும் ஆச்சு, தொடரப் போட்றா சோமாறி (புரியாதவர்களுக்கு - எங்களூரில் மாட்டுப் பொங்கல் அன்று சிறுவர்கள் லாரியில் ஏறி போடும் கோஷங்களில் ஒன்று - போகியும் போச்சு, பொங்கலும் போச்சு. பொண்ண குட்றா பேமானி - ஊருக்கு வெளியே பேமானி கன்னாபின்னா என்று மாறும்)

தமிழ்லயே பதிவு போட வக்கில்லாதவன், காசு கொடுத்து தளம் வைத்து பீட்டர் பதிவு போட்டானாம்.

பதிவு கால்பணம், மக்களைப் படிக்க வைக்க முக்கால் பணம்.

சிறு துரும்பும் பதிவு எழுத உதவும்.

பாஸ்டன் பாலாவ பாத்து டோண்டு சூடு போட்டுக்கிட்டாராம்(பழமொழி சொன்னா கேட்டுக்கனும். சும்மா அர்த்தம்லாம் பாக்கக்கூடாது - ஏதோ தெரிஞ்ச ரெண்டு பேரு - இத வெச்சு காமெடி கீமெடி ஆரம்பிக்க வாணாம்...)

தமிழ் சொல்லிக்குடுக்கறவங்கல்லாம் துளசியல்ல...

செந்தழல் வழி தனி வழி... (தலைவர் சொன்னதெல்லாம் பழமொழிதான்)

அவனே பதிவு எழுதி பின்னூட்டமும் போட்டுக்கிட்ட மாதிரி...

பின்னூட்டம் போட்டு வாங்கி டிராபிக்கில் உய்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் பதிவு ஊசிப்போய் சாவார்.

ஊரான் வீட்டுப் பதிவே, சுட்டியப் போட்டு கலக்கே..

பதிவு எழுத தெரியாதவனுக்கு தமிழில் தட்டச்ச தெரியலன்னு சாக்கு.

ஊரார் பதிவைப் பின்னூட்டம் போட்டு வளர்த்தால், தன் பதிவு தானே வளரும்.

பதிவு செல்லும் பாதை எல்லாம் பின்னூட்டத்துக்கு கால்கள் உண்டு.

தமிழ்மணத்தில் மொக்கைப் பதிவன். (திருப்பதியில்...)

மொக்கைப் பின்னூட்டம் போட்டாலும் அளந்து போடு...

கடைசியாக....

இந்தப் பதிவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா.....!

நன்றி சதங்கா....

Monday, June 15, 2009

சேமிப்பிற்கு சில உபயோகமான வழிகள்!


அமெரிக்க பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போகிறது. இந்த காலத்தில் நம் வாழ்கையில் சில தேவையில்லாத செலவுகளை குறைத்திடவும், சேமிப்பினை அதிகரிக்கவும் சில வழிகளை இங்கு பார்ப்போமா! இது போல உங்களுக்கு தெரிந்த, முயன்ற வழிகளை பின்னூட்டமிட்டால் படிக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

உபயோகமில்லாத பொருட்களை வெளியேற்றுங்கள்:
"கராஜ் சேல்", கிரைக்ஸ் லிஸ்ட் , ஈ-பே போன்ற பல வழிகளில் நீங்கள் உபயோகிக்காத பொருட்களை விற்று காசாக்கலாம். சிலவற்றை உங்கள் அருகிலிருக்கும் குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம். உதாரணத்திற்கு கணினிகள், மின் கருவிகள் போன்றவை சில வருடங்கள் கழித்து அவற்றின் மதிப்பு குறைந்துவிடும். இவற்றை தேவையில்லாமல் வீட்டில் வைத்து குப்பை சேர்ப்பதை விட விற்று காசாக்கலாம் அல்லது குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம்.

பொது வளம்:
பொது நூலகம் ஒரு சிறந்த உபயோகமான "இலவச" வளம்! புத்தகங்கள், ஒளி குறுந்தகடுகள், இலவச வலை உபயோகம், குறைந்த செலவில் அச்சு மற்றும் நகல் எடுக்க வசதி, தனியாக படிக்க அறைகள் மற்றும் பல இலவச சேவைகள் உள்ளன. நீங்கள் கிங்கொஸ் சென்று பிரிண்ட் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு ஐம்பது சென்ட் செலவாகும்! ஆனால் நூலகத்தில் பத்து சென்ட் மட்டுமே!

தொலைகாட்சி மற்றும் டிஷ்:
நாம் தினமும் பார்க்கும் மிக முக்கியமான செய்திகள் மற்றும் நிகழ்சசிகள் (அமெரிக்காவில் மட்டுமே!!) பெசிக் கேபிள் எனப்படும் உள்ளூர் சேனலிலேயே வந்துவிடும். ஆனால் எக்ஸ்-டென்டேட் கேபிள் தேவையில்லாத பல சேனல்கள் கூட்டி விலை மூன்று மடங்காக்கிவிடுவர்கள். தேவையில்லாத டி-வி-ஆர் எனப்படும் கருவிக்கு மாதம் ஐந்து டாலர் வேறு! இப்போது பல சேனல்களின் நிகழ்சசிகள் இணையத்தில் இலவசமாக பார்க்கும் வசதி வந்துவிட்டது. http://www.hulu.com தளத்தில் டிவி நிகழ்சசிகள், சில திரைப்படங்கள் கூட உள்ளன. அதற்கு தேவை ஒரு கணினி (இணைய வசதியுடன்), மற்றும் ஒரு எஸ்-வீடியோ கேபிள். இந்த தளத்தில் கேபிள் டிவி'க்கு மாற்றாக ஆறு வழிகள் தந்துள்ளார்கள், முயன்று பாருங்கள். இதன் மூலம் வருடத்திற்கு முந்நூறு டாலர் வரை சேமிப்பு!

இரண்டாம் கை பொருட்கள்:
கார்கள் மட்டுமின்றி, வீட்டுக்கு தேவையான மேஜை போன்றவை சில சமயம் மிக குறைவான விலையில் craigslist.com போன்ற தளத்தில் பார்த்து வாங்கலாம். பல நல்ல பொருட்களுடன் சில சமயம் தரம் குறைந்தவையும் வருவதால் மிக கவனமாக சோதித்து பார்த்து வாங்குதல் நலம். எங்கள் தமிழ் சங்கத்திற்கு வாங்கிய முநநூறு டாலர் மதிப்புள்ள கம்பியில்லா ஒலி வாங்கி (wireless lapel mic) வெறும் எழுபத்தி ஐந்து டாலர் மட்டுமே!

அலைபேசி:
கர்ணனுக்கு கவச குண்டலம் போல மனிதனுக்கு அலைபேசி மிக அத்யாவசியமானதாகிவிட்டது. நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் சில சமயம் அலைபேசி நிறுவனங்களுடன் தள்ளுபடி விலையில் வழங்க வகை செய்திருக்கலாம். அப்படியில்லையேன்றால், http://www.freelancersunion.org/ என்ற தளத்தில் நிங்கள் ஒரு "சுதந்திரமாக தொழில் செய்பவர்" என பதிவு செய்து T-Mobile அலைபேசி மாத சந்தாவில் பத்து சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். (பிற அலைபேசிகளுக்கு இது போல இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டமிடவும்). இந்த தளத்தில் இன்னும் பல நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தங்கள் சேவையை வழங்குகிறது. என்னுடைய அலைபேசி சந்தாவில் இதனால் மாதத்திற்கு ஆறு டாலர் சேமிப்பு!

கிரெடிட் யூனியன்:
உங்கள் அருகில் இருக்கும் credit union வங்கிகளில் பல நல்ல சேவைகள் இலவசமாக கிடைக்கும். இதில் சேர ஒரு அறிமுக உறுப்பினர் அல்லது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தார் அந்த வங்கியுடன் இவ்வகை ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நான் https://www.penfed.org/ என்ற வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். அவர்களது கடன் அட்டை மூலம் உங்கள் அலைபேசி மாத சந்தாவை கட்டினால், உங்கள் அலைபேசிக்கு இலவச காப்பீடு தருகிறார்கள். இதன் மூலம் அலைபேசி தொலைந்தாலோ, உடைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ உங்களுக்கு பகுதி பணம் திரும்ப கிடைக்கும்! (மேலும் விபரங்களுக்கு https://www.penfed.org/pdf/accountsforms/CellPhoneProtectDisc.pdf). இதே கடன் அட்டையின் மூலம் வாகன எரிவாயுவிற்கு பணம் கட்டினால், ஐந்து சதவிகிதம் கட்டண தள்ளுபடி அந்த மாத இறுதியில் திருப்பி கொடுக்கிறார்கள்! இந்த கடன் அட்டைக்கு மாத சந்தா எதுவும் இல்லை.

ஆக்டேன் ரேடிங்:
வாகன எரிவாயு நிரப்பும் பொது மூன்று விதமான ஆக்டேன் ரேடிங் இருப்பதை பார்க்கலாம். பொதுவாக விலை அதிகமாக இருப்பதுதான் நல்ல எரிவாயு என சிலர் நம்பி அதிக விலை கொடுத்து நிரப்புவர். உங்கள் வாகனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குறைவான ஆக்டேன் ரேடிங் எரிவாயு நிரப்பினால் போதுமானது! பல வாகனங்களுக்கு ஆக்டேன் ரேடிங் 87 போதுமானது! அது தவிர சக்கரங்களில் சரியான அளவு காற்று நிரப்புதல் எரிவாயு சேமிப்பிற்கு உதவும்!

மாத சந்தாவா அல்லது வருட சந்தாவா!:
சில சமயம் வருட சந்தா கட்டினால் பல நிறுவனங்கள் கட்டணத்தில் தள்ளுபடி செய்வார்கள்! உதாரணத்திற்கு, வாகன காப்பீடு ஆறு மாதம் ஒரு முறை கட்டினால் மாதத்திற்கு பத்து டாலர் வரை சேமிக்கலாம்! அது தவிர வருடத்திற்கு ஒரு முறை உங்கள் வாகன காப்பீடிற்கு மற்ற நிறுவனங்கள் குறைவாக கொடுகின்றர்களா என பார்த்து கொண்டிருக்கவும். பல சமயம் புது வாடிக்கையாளர்களை கவர பல தள்ளுபடிகள் கொடுக்கலாம். கய்கோ நிறுவனத்தின் காப்பீடில் நான் penfed.org credit union உறுப்பினராக இருப்பதால் மாதம் பத்து டாலர் வரை தள்ளுபடி கொடுத்தார்கள்! அது தவிர நீங்கள் வருடத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சந்தா அமையும். அதனால், ஆரம்பத்தில் நீங்கள் சற்று குறைவான தூரம் கொடுப்பதனால் கட்டணத்தில் சேமிக்கலாம்.

தண்ணீர் தண்ணீர்:
அமெரிக்காவில் ஒரு காலத்தில் தண்ணீரும் எரிவாயுவும் ஒரே விலை இருந்தது! இப்போதும் தண்ணீரை பலர் காசு கொடுத்து பாட்டில்களில் வாங்குகின்றனர். அந்த பாட்டில்களில் நீர் எங்கு பிடிக்கப்பட்டது என எழுதியிருப்பதை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். பல நிறுவனங்கள் நகரின் குடிநீரை மேலும் சுத்தப்படுத்தி பாட்டில் அடைத்து விற்கின்றனர்! இதற்கு நம் வீட்டு குழாயில் வரும் நீரை பில்டர் செய்து குடிக்கலாம். அல்லது அருகாமையில் இருக்கும் கடைகளில் குறைவான விலையில் உடனடி பில்டர் செய்த நீரை விலைக்கு வாங்கலாம். அது தவிர உணவகங்களில் கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் வாங்காமல் நீரை பருகினால் உடலுக்கும் நல்லது, நம் பர்சுக்கும் நல்லது!

முயன்று பாருங்கள்!

Saturday, June 13, 2009

படம் பாரு கடி கேளு - 30


சார், ஆனியன் ஊத்தப்பமா வெஜிடபிள் ஊத்தப்பமா?

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

Thursday, June 11, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஆறு)

சார்ஜர்களும் கேபுள்களும் (Chargers and Cables)

ஒரு பிரயாணம்னு வந்தா, நமக்கு வேண்டிய சாமான்களை பாக்கிங் செய்வதை விட ஒரு கொடுமை என்ன தெரியுமா? இந்த சார்ஜர்களும் கேபுள்களும் தாங்க. இதில் தான் எத்தனை விதம். எத்தனை ரகம். இதோ எங்களது பெட்டிகளில் குமிந்திருப்பதன் பட்டியல்.

சார்ஜர்கள்:

  1. செல் போன் (2)
  2. காம்கார்டர் (1)
  3. டிஜிட்டல் கேமரா (1)
  4. எனது MP3 பிளேயர்
  5. மனைவியின் MP3 பிளேயர்
  6. மகனின் MP3 பிளேயர் 
  7. கணினி
கேபிள்கள்
  1. USB கேபிள் (2)
  2. செல் போன் சிங்க்-அப் கேபிள் (1)
  3. ஆடியோ வீடியோ கேபிள் (காம்கார்டர்) (1)
  4. ஒவ்வொரு MP3 ப்ளேயருக்கும் ஒரு காதொலி (head set) ( 3 )
  5. கணினிக்கு தேவையானவை.
என்று அடிக்கிக்கொண்டே போகலாம்....


இன்னும் சற்று முடி கொட்டிய நிலையில்,

நாராயணன்.

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஐந்து)

பயணத்துக்கு தயார்

உஸ்ஸ்ஸ் அப்பாடா....

ஒரு வழியாக ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுது. பாக்கிங்கும் ஒரு 99% முடிஞ்சாச்சு. இனிமே போர்டர் வேல பாக்க கொஞ்சம் பளு தூக்கி தயார் பண்ணிக்கணும். Immigration check, customs, security check எல்லாம் நினைத்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.

இதுல என்ன விசேஷம்னா, எங்களோட ஒரு சபதம் நிறைவேறும் போல இருக்கு. ஆனா இன்னும் இங்கிருந்து கிளம்புகிற வரையில் நிச்சயம் இல்லை. அதனால் மார் தட்டி கொள்ள கொஞ்சம் பயமாக இருக்குகிறது. கட்டயில குட்ட (knock on wood). பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்ற சபதத்தில் படு தோல்வி ஒப்பு கொள்கிறோம். பெட்டிகளில் ஒன்று, சிறியதாக அமைந்து விட்டது. 16.67% வெற்றி பெற்றோம். பெட்டிகளின் எடை, அதிலும் தோல்வியே. கையில் எடுத்து செல்லும் பெட்டிகளில் மட்டும் சற்று நம்பிக்கை வைத்திருக்கிறோம். பாப்போம்.

ரிச்மண்டிலிரிந்து பல குடும்பங்கள் சேர்ந்து, உடன் பயணம் செய்யபோகிறோம். மீனா நினைவு கூர்ந்த வாஷிங்டனில் திருமணத்திற்கு சென்னையிலிருந்து வண்டி பூட்டின கல்யாண குழு போல, சென்னையில் நடக்க விருக்கும் திருமணத்திற்கு நம்ம ஊர்லேந்து ஒரு பெரிய குழு போவது போல் ஒரு உணர்வு. அந்த விதத்தில் இந்த பிரயாணத்தை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

நாராயணன்

இனி வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.


Wednesday, June 10, 2009

தோட்டக்கலை - சில கேள்விகள் - 1

ரிச்மண்ட் பட்டினத்தார் அல்லது கிராமத்தான் வசந்தம் அவர்களுக்கு,

உங்களுடைய தோட்டக்கலை பற்றிய பதிவில், ஆர்வம் இருப்பவர்களுக்கு உத்திகள் கற்றுத் தருவதாகக் கூறியிருந்தீர்கள். நாகு கூட உங்க தோட்டம் பற்றி சிலாகித்து, பதிவிலும் எழுதி, தொலைபேசியிலும் புகழ்ந்து தள்ளிவிட்டார். உங்கள் உதவி எங்களுக்கு, இல்லை இல்லை நாட்டுக்குத் தேவை.

தோட்டக்கலை பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், யு.எஸ். மண்ணுக்கு ஏற்ற‌ சில பொதுவான கேள்விகளை இப்போதைக்கு முன் வைக்கிறேன்.

நம்ம ஊரு ரேடியோ அதிகாலையில் ஆன் செய்திருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள். அப்பதான் ஒரு எஃபெக்டிவ்வா இருக்கும் :))

1. நிலத்து மண் களிமண் ஆகையால், எங்கள் ஊரில் ஒரு அரை அடிக்குத் தோண்டி, மண் நிறப்பி தான் நண்பர்கள் தோட்டம் போடுகிறார்கள். கடைகளில் ஏராள மண்வகைகள் கிடைக்கின்றன. எந்த நிறுவன மண் சிறந்ததென நீங்கள் நினைக்கிறீர்கள் ?

2. கடையில் இருக்கும் வரை செடிகளில் இருந்த பசுமை, வீட்டில் நட்டவுடன் சிலநாட்களில் மஞ்சளாகி விடுகிறதே ! பசுமையைக் காக்க என்ன செய்ய வேண்டும் ?

3. இரண்டு இலை விட்ட கத்தரிக்காய் செடி, பூச்சிகளின் புண்ணியத்தால், இலைகள் சல்லடையாக ... பூச்சிக்கொள்ளி மருந்துக்குப் பின் வாடவும் இல்லை, வளரவும் இல்லை. என்ன செய்ய வேண்டும் ?

4. செடிகளுக்கு பூச்சிக் கொள்ளி, தாவர உணவு, தண்ணீர் விட‌ காலை நேரம் சிறந்ததா, மாலை நேரம் சிறந்ததா ?

5. இயற்கை உரம் தயாரித்திருக்கிறீர்களா ? இங்கு சாத்தியமா ?

ம‌ண்வெட்டிய‌ அப்டீக்கா க‌டாசீட்டு, எங்க‌ளுக்கு ப‌தில‌ விளாசீட்டு போங்க‌ வ‌ச‌ந்த‌மே !!!

உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி !!!

Tuesday, June 09, 2009

பட்டாம்பூச்சி


நான் என்ன பதிவு போடலாம்னு யோசிச்சி யோசிச்சி கண்ல பட்டாம்பூச்சி பறக்கற அளவு வந்ததை யாரோ கவிநயாகிட்ட சொல்லிட்டாங்க போல இருக்கு. கண்ல மட்டும் ஏன் பூச்சி பறக்கனும். பதிவு பதிவா பறக்கட்டும்னு எந்த புண்ணியவானோ ஆரம்பிச்ச தொடரில் சேர்ந்து அவங்க பறக்கவிட்ட பட்டாம்பூச்சி விருதுல என்னையும் சேத்துக்கிட்டாங்க. விருதுக்கு நன்றி கவிநயா! கவிநயா எந்த தலைப்பு எடுத்தாலும் கலக்கறவங்க. பதிவும் சரி, கவிதையும் சரி, பாடுகிறதுக்கு வசதியா பாடுறதும் சரி, நாட்டியத்திலும் சரி, பக்தியிலும் சரி - அவங்களுக்கு நிகர் அவங்கதான். அதனாலதான் அவங்களுக்கு ரெண்டு பேர் இந்தப் பட்டாம்பூச்சி விருதை கொடுத்திருக்காங்க....

நமக்கு அவங்க ரேஞ்சுக்கு எழுத முடியாட்டியும் கொஞ்சம் படம் காமிப்பமேன்னுதான் மேலே இருக்கற படம்.   வர்ஜினியா ட்வின் லேக் பார்க்கில் நானே எடுத்தது. டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி. அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் காணப்படும் இந்தப் பட்டாம்பூச்சி வர்ஜினியா மற்றும் நான்கு மாநிலங்களுக்கு மாநிலப் பூச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நான் இந்தப் பட்டாம்பூச்சி விருதை இந்த மூனு பேருக்கு வழங்குகிறேன். முதலாவதாக எங்க கட்சியில் இருந்து போய் தனிக்கட்சி ஆரம்பிச்சி அப்பப்போ கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் சதங்கா!சுவையாக கவிதை, கதை எழுதுவதுஓவியம் வரைவது, வீட்டில் சமையலறை எந்த திசையில் இருக்கிறது என்று கூடதெரியாமல் சமையல் குறிப்பு எழுதுவது(சும்மானாச்சியும் சொன்னேன்) என்று பல கட்சிகள் நடத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார். மனுஷன் பல சுவையான சின்ன விஷயங்களை அவருடைய கவிதை மூலம் அப்படியே நம் கண் முன்னால் நிறுத்துவார். சுந்தரத் தெலுங்கினில் அவருடன் ஆணி பிடுங்கும் பெண்டிராகட்டும், நம்ம ஊர் டீக்கடை ஆகட்டும், ஓட்டு வீட்டு முற்றமாகட்டும், நம்ம ஊர் டவுன் பஸ்ஸாகட்டும்- இவருடைய எளிய, இனிய தமிழ் அப்படியே நம்முன் வந்து நிறுத்தும். நான் எழுதும் தமிழ் தாங்காமல் வேறு ஊருக்கு ஓடிவிட்டார். உங்க ஊர் 'பட்டாம்பூச்சி' குறித்து எழுதுங்க சதங்கா!

அடுத்தது செல்வராஜ்! அவருடைய கொங்குநாட்டுத் தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய எழுதிக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய எழுதும் செலுத்தலுக்கு ஏதோ கட்டுப்பாடு வந்திருக்கிறது :-) அதாங்க இவர் வேதிப் பொறியியலில் செலுத்தக் கட்டுறுத்தல் (Process Control) துறையில் பணி புரிபவர். தமிழ்மணத்தின் நிர்வாகத்தில் இவருடைய தொண்டும் உண்டு.  வேதிப் பொறியியலை விளக்கும் பதிவுகளும், அவருடைய மகள்கள் கேட்கும் கேள்விகள் குறித்த பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடித்தவை. இவருடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது மகள்களின் துவக்கப் பள்ளியில் இந்தியா குறித்து அவர் செய்த ஒரு வீடியோ. மழலையுடன் பெண்கள் இந்தியாவின் அருமை, பெருமைகளை விளக்க அழகாக இந்தியாவைப் படம் பிடித்திருந்தார். சுட்டி கிடைக்கவில்லை. நீங்கள் திரும்ப உங்க பதிவில் பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடவேண்டும், செல்வராஜ்.

மூன்றாவதாக கானாப்பிரபா! "ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" - அவரைப் பற்றிய அவரது விளக்கமே நெஞ்சில் ஒரு வலியைத் தரும்! எனக்கு இங்கே பல ஈழத்தோழர்கள் மூலமாக கொஞ்சம் ஈழப்பாரம்பரியம் குறித்துத் தெரிந்திருந்த போதிலும் ஈழத் தமிழரின் பாரம்பரியத்தை எனக்கு நிறைய அறிமுகப் படுத்தியவர் பிரபா. இணுவில், யாழில் வளர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். இவருடைய மடத்து வாசல் பிள்ளையாரடியும், றேடியோஸ்பதி பதிவும் மிகவும் பிரசித்தம்.

ஒருமுறை இவருடைய நல்லூர் கோவில் பதிவை எனது ஈழ நண்பர் வீட்டில் காண்பித்தேன். கண்கலங்க அப்படியே கணினி முன் சேவிக்கவிருந்தார்கள். நல்லூர் ஈழ மக்கள் வாழ்வில் எப்படி பிணைந்திருக்கிறது என்று எனக்கு உணர்த்தியது. அவருடைய பிள்ளையாரடி பதிவுகளில் எனக்கு ரொம்பவும் பிடித்தது கல்லடி வேலர் பதிவு.  சென்ற வாரம் பல ஈழப்பதிவர்களுடன் ஈழத்து முற்றம் ஆரம்பித்திருக்கிறார். ஈழத் தமிழின் இனிமையும், தூய்மையும் அனைவரும் அறிந்ததே. ஈழத்து பேச்சு வழக்குகளை நமக்கெல்லாம் விளக்குவதற்கான இந்த சேவையின் ஆரம்பமே முசுப்பாத்தியாக இருந்தது. ஈழத்து பட்டாம்பூச்சிகளைத் தொடர்ந்து பறக்கவிடவேண்டும், பிரபா!

மூவருக்கும் வாழ்த்துகள்!
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Monday, June 08, 2009

நமட்டுச் சிரிப்பு

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கையில் வேலை, சம்பாத்தியம் என்பது பற்றி பேச்சு வந்தது. எதற்காக சம்பாதிக்கிறோம்? என்று பொதுவாக கேள்வி எழ, நானும் முந்திக்கொண்டு செலவழிக்கத்தான்! என்றேன். அந்த பெரியவரும் விடாமல் எதற்கு செலவழிக்கனும்? என்று கொக்கி போட, நானும் உடனே வாழத்தான்! என்றேன். பெரியவர் சிறிது நேரம் மௌனித்து ஒரு நமட்டுச் சிரிப்பு உதிர்த்து விட்டு வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றினார்.

அன்று இரவு படுக்கையில் அந்தப் பெரியவரிடம் பெசியனவற்றை மனது லேசாக அசை போட.. ஏதோ ஒன்று மனதுக்கு புலப்படாமல் தொல்லை தந்தது. அந்த பெரியவரின் நமட்டுச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? பதில் காண முயன்றும் முடியாமல் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு எப்படியோ தூங்கிப்போனேன்.

மறுநாள் காலையில் வீட்டின் அருகில் இருந்த காபிக் கடைக்கு வாகனத்தில் சென்று சூடாக ஒரு காபி வாங்கி 5 வெள்ளி மொழி எழுதி விட்டு காபியை சுவைத்துக்கொண்டு இருக்கையில்..அந்தப் பெரியவரின் நமட்டுச்சிரிப்பு திரும்பவும் நினைவில் வந்து தொல்லை தந்தது. பதில் தெரியாமல், ஏன்டா அந்தப் பெரியவரிடம் பேசினோம் என்று நொந்து கொண்டு, வேக வேகமாக காபியை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். சமையல் அறையிலிருந்து "பால் தீர்ந்துவிட்டது. தயிர் போட பால் வேண்டும். கொஞ்சம் சீகிரமாய் போய் வாங்கிட்டு வாங்க" என்று மனைவி அறைய, உடனே வாகனத்தை கிளப்பி Costco விற்கு விட்டேன்.

கடைக்கு உள்ளே நுழைந்ததும், பள பளவென மின்னிக்கொண்டு 64 அங்குல HDTV என்னை பார் என்றது. ஆஹா.. நம்ப வீட்ல இருக்கிற 2 தொலைக்காட்சி பெட்டிகளும் வாங்கி 2 வருடம் ஆகிவிட்டதே, மேலும் நமது மூன்றாவது படுக்கை அறையில் தொலைக்காட்சி பெட்டி இல்லையே.. 200 வெள்ளி குறைத்து வேறு போட்டிருக்கான்.. சரி வாங்கு என்று மூளை உத்திரவு போட, முதுகு வலிக்க எப்படியோ அந்த தொல்லைபெட்டியை கூடையில் கிடத்தினேன். அடுத்த சந்தில் நுழைந்தால்.. அங்கு ஒரு நீல நிற சட்டை வா! வா! வசந்தமே என்று கூப்பிட, நானும் நம்பகிட்ட இந்த நிறத்தில் சட்டை இல்லையே என்று யோசித்து, ஒரு சட்டையை எடுத்து கூடையில் வைத்தேன். இப்படி ஒரு வழியாக கடையை ஒரு வலம் வந்து காசாளரிடம் 1200 வெள்ளியை சிரித்துக்கொண்டே கடன் அட்டையில் கொடுத்துவிட்டு வாங்கினவற்றை முதுகு வலிக்க வாகனத்தில் முக்கி முனகி ஏற்றிக் கொண்டிருக்கையில். சிரிப்பு மணிபோல் செல்போன் அடிக்கவே, எடுத்து Hallo கூட சொல்லி முடிக்கலை. அடுத்த முனையில் இருந்து "ஏங்க.. பால் வாங்க போய் ஒன்றரை மணியாச்சி..எங்க இருக்கீங்க?" என்று மனைவி குரல் கேட்டதும் நினைவிற்கு வந்தேன். சிறிது யோசித்து "நண்பர் ஒருவரை சந்தித்தேன். அதான் கொஞ்ச நேரமாகிவிட்டது. இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்" என்று ஒருவழியாக "உண்மை" சொல்லி மூச்சு விட்டதும் பால் வாங்க மறந்தது மூளையை எட்டியது. உடனே அடித்து பிடித்து திரும்பவும் ஓடி ஒரு பால் புட்டியை எடுத்துக்கொண்டு costco வின் திருப்பதி வரிசையில் திரும்பவும் நின்று வாங்கி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். பிற்பகலில் மனைவி எங்கோ போக வேண்டும் என்று சொன்னது நினைவில் வரவே.. வெறும் பால் புட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு வாங்கிய மற்றனவற்றை வாகனத்திலேயே விட்டு விட்டு உள்ளே சென்றேன்.

மதிய உணவு அருந்திவிட்டு மனைவி வெளியே கிளம்பிவிட.. நான் புதிய தொலைகாட்சி பெட்டியை எடுத்துவந்து 1 மணி நேரமாய் மாட்டி விட்டு களைப்பில் சிறிது அசந்து படுக்கையில் சாய்ந்தேன். ஒரு அரை மணி நேரம் தூங்கியிருப்பேன். ஏதோ கெட்ட கனவு வந்து எழுப்பி விட்டது. இரண்டங்கெட்ட நிலையில் உட்கார்ந்திருந்த போது திரும்பவும் அந்த பெரியவரின் நமட்டு சிரிப்பு வந்து எரிச்சலூட்டியது. இதற்கு எப்படியாவது இன்று அர்த்தம் கண்டாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். திரும்பவும் அவருடன் பேசியவற்றை நினைவு கூர்ந்தேன். சம்பாத்யம், செலவழித்தல், வாழ்வதற்கு.. ஒரு வேளை நாம் செலவழிப்பன எல்லாம் வாழ்வதற்காக என்பதில் அந்த பெரியவருக்கு உடன்பாடு இல்லையோ? வாழ்வதற்கு அவசியம் உணவு, உடை, உறையுள்.,,, ஏதோ கொஞ்சம் புரிந்தார் போல் தோன்ற, வேகமாக எனது அலுவலக அறைக்கு சென்று கடந்த இரண்டு மாத வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை அறிக்கையும் எடுத்து ஒவொன்றாக ஆராய்ந்தேன். வீட்டு கடன், வாகன கடன், மளிகை செலவு, துணி செலவு இப்படி நீண்டு கொண்டே போனது. அனால் எல்லாம் இந்த உணவு, உடை, உறையுள் என்னும் வாழ்க்கைகு அவசியம் என்ற கோட்டிற்கு உள்ளேயே இருந்தது. ஆஹா. நாம் ஏதும் அனாவசியமாக செலவு செய்வதில்லை என்று மகிழ்ந்து.. ஒருவேளை அந்தப் பெரியவர் நாம் அளந்து செலவு செய்பவன் என்று தெரியாமல் அப்படி சிரித்திருக்கலாம் என்று நினைத்து.. அந்த புரியாத நமட்டு சிரிப்புக்கு அர்த்தம் தெளிந்ததாக எண்ணி ஒருவழியாக நிம்மதியானேன்.

மாலையில் சிறிது நடந்துவிட்டு திரும்புகையில் புதிதாய் வாங்கியுள்ள தொலைகாட்சி பெட்டியை மனைவி வந்ததும் காட்டி அசத்தனும் என்ற நினைப்புடன் வீடு திரும்பினேன். களைப்பு போக நன்கு குளித்து விட்டு புது பொலிவுடன், ஒரு காபி போட்டு கையில் எடுத்துக்கொண்டு புதிய தொலைகாட்சி முன் அமர்ந்தேன். அன்று இந்திய குடியரசு தினம். முன்னாள் ஜனாதிபதி திரு ஆ பி ஜே அப்துல் கலாம் அவர்களை நகைச்சுவை நடிகர் விவேக் எடுக்கும் நேர்முக பேட்டி ஓடிக்கொண்டு இருந்தது. விவேக் கேட்ட நகைச்சுவை கலந்த சுவையான கேள்விகளுக்கு ஜனாதிபதி சுவையாக பதிலளித்தார். "நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போதும் 4 சட்டை மட்டுமே வைத்து இருந்ததாக கேள்விபட்டேன். உண்மையா? ஏன் இந்த எளிமை?" என்று விவேக் அடுத்த கேள்வி கேட்க, அப்துல் கலாம் அவர்கள் "எனக்கு அவசியமானது அவ்வளவுதான்!" என்று கச்சிதமாக பதில் கூறி நன்கு சிரித்தார். அந்த சிரிப்பு கேட்டதும் எனக்கு யாரோ தலையில் சுத்தி வைத்து ஓங்கி அடித்து போல தோன்றியது. எல்லாம் தெளிந்ததாக இருந்த நிலை போய் பலபலவற்றை எண்ணி மனம் குழம்பியது. சிறிது சிறிதாக உண்மை புலப்பட அந்த நமட்டு சிரிப்பிற்கு உண்மையில் அர்த்தம் விளங்கியது.

வாழ்கை வாழ 10 சட்டை அவசியம். 100 சட்டை அனாவசியம். கிராமத்தில் மிரசுதாராக இருந்த தத்தா, உடுத்திருந்த துணியை குளிக்கும் பொது துவைத்து காயவைத்துவிட்டு நேற்று துவைத்து வைத்திருந்த துணியை எடுத்து உடுத்திக்கொண்டு வயலுக்கு செல்லும் காட்சி நினைவுக்கு வந்தது. ஒரு தொலைகாட்சி பெட்டி அவசியம். மூன்று அனாவசியம். ஒரு கைகடிகாரம் அவசியம். ஒன்பது அனாவசியம். ஒன்றோ இரண்டோ காலணி அவசியமாகலாம். பத்து அனாவசியம். வீட்டில் வாங்கி வைத்துள்ள german காபி போட்டு குடிப்பது அவசியமாகலாம். அருகில் இருக்கும் காபி கடைக்கு வாகனத்தில் சென்று 5 வெள்ளி கொடுத்து காபி குடிப்பது அனாவசியம். இப்படி எண்ண அலைகள் எங்கெங்கோ ஓட வீட்டை சுற்றி பாத்தேன். தலை சுற்றியது.

புதிதாக வாங்கிய தொலைகாட்சி பெட்டியை அதன் பெட்டியில் போட்டு வாகனத்தில் வைத்தேன். ஒரு படுக்கை அறை முழுக்க வெகு நாட்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த துணிகளை ஒரு பையில் போட்டு வாகனத்தில் ஏற்றினேன். உடுத்தாமல் வருடங்களாக தொங்கிகொண்டிருந்த துணிகள் மற்றும் தேவையில்லாத பல சாமான்களை வாகனத்தில் ஏற்றினேன். எட்டு பேர் அமரும் அந்த வாகனம் அவசியமில்லாத விஷயங்களால் நிரம்பி வழிந்தது. வாகனத்தை நேரே Costco விற்கு விட்டேன். தொலைகாட்சி பெட்டியை திரும்பக் கொடுத்தேன். அடுத்து நேராக Goodwill கு செலுத்தினேன். எல்லா அனாவசியங்களையும் தானம் செய்துவிட்டு திரும்புகையில் அங்கிருந்த வயதான பெரியவர் ஒருவர் நன்றிப் புன்னகையோடு கையசைத்து வழி அனுப்பினார். இந்தப் புன்னகையின் அர்த்தம் உடனே விளங்கியது.

வாகனத்தில் ஏறி கிளப்பியதும் ஒலி நாடாவிலிருந்து பாமா விஜயம் படத்திலிருந்து " வரவு எட்டணா.. செலவு பத்தணா" என்று பாட்டு வாகனத்தை நிறைத்தது. எனக்குள் சிரித்துவிட்டு, அந்தப் பெரியவரின் நமட்டுச் சிரிப்பையும் இந்தப் பெரியவரின் நன்றிச் சிரிப்பையும் அசை போட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்!!

Sunday, June 07, 2009

மீனாவுடன் மிக்சர் - 3 {வெள்ளிக்கிழமையா? பூசாரியை கூப்பிடுங்க.}

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

என் உச்சி மீது வான் இடிஞ்சால்லாம் நான் பயப்பட மாட்டேங்க. அது பாட்டுக்கு விழுந்திட்டு போகட்டும்னு விட்டுடுவேன். நான் பயத்துல நடுங்கறது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான். அது தான் வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தாலே நான் 'உலக மகா கோழை' அப்படீங்கற பட்டத்தை வாங்க தயாராயிடுவேன். ஊர் உலகத்துல எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா "அப்பாடா, இனி ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டாம், ஸ்கூல் போக வேண்டாம்"னு சந்தோஷமா இருப்பாங்க. நான் மட்டும் அம்மன் கோவில் பூசாரியை வேப்பிலை அடிக்க கூப்பிடும் நிலையுல இருப்பேன். என்னோட இந்த பயத்துக்கு என்ன காரணம்னு சொல்லறேன் கேளுங்க.

என் குழந்தைகளுக்கு 102 டிகிரி ஜுரம் வந்தா, அது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் வரும்னு ஒரு தீர்கதரிசியோட தீர்மானத்தோட என்னால சொல்ல முடியும். திங்கள் லேந்து வெள்ளி சாயந்திரம் வரை ஒரு பூச்சி பொட்டு கூட கடிக்காம மிகச்சிறந்த உடல் நிலையில் இருக்கும் என் குழந்தைங்களுக்கு வெள்ளிகிழமை ராத்திரிக்குள் ஜுரம், வாந்தி, பேதி, தலை வலி, வயித்த வலி, பல் வலி மற்றும் இதர பல உடல் உபாதைகள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம். ஐந்து மணிக்கு குழந்தை வைத்தியர் ஆபீஸ் இழுத்து மூடியாச்சா என்று உறுதிப்படுத்திண்டு தான் எல்லா உபாதைகளும் ஆரம்பிப்பது போல இருக்கும்.

அது மட்டும் இல்லைங்க. வாழ்க்கைக்கு எங்களுக்கு அதி அவசியமா தேவைப்படும் எல்லா இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா சொல்லி வச்சா மாதிரி பட்டுன்னு உயிர் விட்டுடும். வெய்யில் காலத்தில் குளிர் சாதன பெட்டி வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான் விறைத்து போய் நிற்கும். குளிர் காலத்தில் வெப்ப நிலை பெட்டி பொசுங்கி சாம்பலாவது வெள்ளி அன்று தான். பாத்ரூம் பைப்பெல்லாம் உடைஞ்சு வீட்டை வெள்ளத்துல ஆழ்த்துவது சர்வநிச்சயமா வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான். ரிப்பேர் செய்பவர்கள் இனி இரண்டு நாள் கழித்து திங்களன்று தான் வேலைக்கு வருவார்கள் அப்படீன்னு உறுதிப்படுத்திண்ட பின்பு தான் எங்கள் வீட்டு துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்வதை நிறுத்தும். உயிரில்லாத இந்த இயந்திரங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு புத்திசாலித்தனம் வருதுன்னு எவ்வளவு யோசனை பண்ணியும் எனக்கு புரியலைங்க.

என் கணவரின் புத்தம் புது நூறு டாலர் சூட்டில் அரை கப் சாம்பாரை நான் கொட்டினால் அது சர்வ நிச்சயமா வெள்ளி இரவாய் தான் இருக்கும். Dry Cleaners கடை திறந்திருக்கும் போது ஏன் இப்படி நடக்கமட்டேங்கறது அப்படீங்கற என் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கலைங்க. மொத்ததுல என்னை கதறடிக்க கூடிய திறன் வெள்ளிக்கிழமையிடம் தான் இருக்கு.

அய்யய்யோ மறந்தே போயிட்டேனே....இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பக்கத்து அம்மன் கோவில் பூசாரி இன்னும் கொஞ்ச நேரத்துல வேப்பிலைய எடுத்துண்டு வந்துடுவாருங்க.

போகறத்துக்கு முன்னாடி இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டுண்டே போங்க.

-மீனா சங்கரன்

Friday, June 05, 2009

கில்லாடி பசங்க...

இந்த டென்னிஸ் போட்டியின் முடிவைப் பாருங்க...

Doubles: Arjun Karthikeyan-David Caravati (MG) d. Jayanth Shekhar-Barani Sankar 6-4, 6-0.

பார்த்தவுடன் தோணிச்சி இப்ப வர வர தமிழ்ச் சங்க டென்னிஸ் போட்டிங்கள்ள மத்தவங்களும் விளையாடறாங்கன்னு...  இது எந்தப் போட்டின்னு சொல்லுங்க பாக்கலாம்?

டட்டடாய்ங்........


வர்ஜினியா மாநில உயர்நிலைப்பள்ளி டென்னிஸ் பந்தயம்!  இறுதிப் போட்டியில் மோதியது நம்ம பேட்டையில் இருக்கும் மில்ஸ் காட்வின் உயர்நிலைப் பள்ளியும், டீப் ரன் உயர்நிலைப் பள்ளியும். அதில் இரட்டையர் குழுவில் எல்லாம் நம்ம தமிழ்ச் சங்கப் பசங்கதான். மாநில இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அர்ஜுன் கார்த்திகேயன், ஜெயந்த் சேகர் மற்றும் பரணி சங்கர் அனைவருக்கும் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள். வெற்றிவாகை சூடிய அர்ஜுனுக்கு ஒரு ஷொட்டு!


 செய்தித்தாளில் வந்ததை இங்கே படிக்கலாம்!

பதிவு இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

மின்சாரம் அது சம்சாரம்

முந்திய பதிவைப் படித்து, பாராட்டியும் ஊக்கமும் தந்து மறுமொழிகள் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி கூறி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். உண்மையில், அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் இருந்த மகிழ்வை விட மறுமொழிகளை படிக்கும் போது மேலும் மகிழ்வை உணர்ந்தேன். நன்றி!

தொடர் பதிவு என்று சொல்லிட்டோமே. அடுத்து என்ன எழுதுவது என்ற கவலை. எனது பட்டியலை தேடி எடுத்துப் பார்த்தேன். ஆ.. மாட்டிகொண்டது தலைப்பு!

பாகம் இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

முதலில் மின்சாரம் அது சமாச்சாரம் என்று தான் தலைப்பு வைக்க எண்ணினேன். பிறகு மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் ஏதோ ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது. மின்சாரம் தொட்டால் அதிர்ச்சிதரும். சம்சாரம் தொடாமலே அதிர்ச்சி தரும். மின்சாரம் அறிவியல். சம்சாரம் அறியாவியல். என்னடா தலைப்பிலேயே பிரச்னை பண்ண ஆரம்பித்து விட்டானே என்று யோசிக்காதீர்கள். எல்லாம் கடைசியில் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கையில்...

15 வருடமாக உடனிருந்தும் என்னை கொஞ்சமாவது புரிந்து வச்சிருக்கிங்களா என்று சம்சாரம் ஒரு புறம் முனகிக் கொண்டு இருக்க.. மாதா மாதம் ஏறிக்கொண்டே செல்லும் மின்சார செலவு ஒரு புறம்.. இதெல்லாம் புரியாத புதிர் என்று இவ்வளவு நாட்கள் விட்டுவிட்டேன். பொறு பொறு! சம்சாரத்தை 15 வருடமாகத்தானே தெரியும். மின்சாரத்தை 40 வருடமாக தெரியுமே. மேலும் மின்சாரம் அறிவியல் ஆயிற்றே. சரி. கொஞ்சம் அலசினால் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கினேன்.

பல இணைய பக்கங்கள் சென்று மின்சார செலவை குறைப்பது எப்படி என்று படித்தேன். எந்தெந்த மின்சார கருவிகள் எவ்வளவு மின்சாரம் குடிக்கிறது என்று ஆராய்ந்தேன். வீட்டில் ஒவ்வொருவரின் மின்சார உபயோக பழக்கங்களை நோட்டமிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மின்சார புதிர் விளங்க ஆரம்பித்தது.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.. ஆனால் எனக்கு பல விஷயங்கள் புதிதாக இருந்தது.
வீட்டுக்கு முன் தானாக எரியும் இரவு விளக்கிற்கு மாத செலவு 2 வெள்ளி. ஒரு முறை துணி உலர்த்தும் இயந்திரத்தை உபயோகித்தால் 35 காசு. ஒரு மணி நேரம் காற்று குளிர்விப்பான் உபயோகித்தால் 42 காசு. சாதாரண மின் விளக்கிற்கு பதில் கச்சிதமான மின்குழல் விளக்கு உபயோகித்தால் 75% மின்சாரம் மிச்சம்.

சரி இதெல்லாம் தெரிந்து என்ன லாபம். செயலாக்க வேண்டுமே. வீட்டில் முடிந்த அறைகளில் மின்விசிறி மாட்டினேன். வசந்த காலங்களில் சூரியன் தாழ்ந்ததும் சன்னல்களை திறந்தும் பகல் நேரங்களில் சன்னல் திரைகளை மூடியும் காற்று குளிர்விப்பான் உபயோகப் படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க முடிந்தது. மாலை வேளைகளில் இயற்கை காற்றும் சுவாசிக்க முடிந்தது. குளிர்பதனப்பெட்டியில் தேவையான அளவு பனிக்கட்டி சேர்ந்ததும் பனிக்கட்டி செய்வானை நிறுத்தலாம். கொத்து விளக்கில் சில விளக்குகளை அகற்றினேன். முடிந்தவரை துணி உலரும் இயந்திரம் உபயோகிப்பதை குறைத்து சில துணிகளை கொடியில் உலர்த்தினோம். துணியும் பொலிவுடன் இருந்தது. வீட்டின் சீதோஷண நிலையும் மேம்பட்டது. இது போன்ற மேலும் பல முன்னேற்றங்கள் செய்த பின் வழக்கமாக 100 முதல் 180 வெள்ளி வரை ஆகும் மாதாந்திர மின்சார செலவு இப்போது 50 வெள்ளிக்குள் அடக்க முடிந்தது. அப்பாடா ஒருவழியாக மின்சாரத்தை புரிந்து கொள்ள முடிந்ததே என்ற கூடுதல் சந்தோஷம். எல்லாவற்றிற்கும் மேலே இயற்கையை காக்கும் போராட்டத்தில் நம்மால் ஓர் சிறு பணியாவது செய்ய முடிந்ததே என்ற மன நிறைவு.

மேலும் விவரங்களுக்கு கீழிருக்கும் இணைய முகவரிகளை சொடுக்கவும்.
http://michaelbluejay.com/electricity/
http://dom.com/

உங்களில் இந்த சமாச்சாரத்தில் மேலும் புது அனுபவங்களும் வழிகளும் தெரிந்து இருப்பின், தயவு செய்து தெரிவிக்கவும். கேட்டு தெரிந்து கொள்ள எப்போதும் நான் தயார்!

Thursday, June 04, 2009

மீனாவுடன் மிக்சர் - 2 {ராக்பெல்லர் மாமி எங்கே? நரிக்கொரவாஸ் எங்கே?}

சில வருஷங்களுக்கு முன்னாடி நான் கலிபொர்னியாவில் வசித்த போது ஒரு தோழியின் தங்கைக்கு கல்யாணம் நிச்சயித்து பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலிலேயே செய்வதா சொன்னாங்க. ஒரு மாதம் முன்பே கல்யாண பத்திரிகை குடுத்து எங்களை அவசியம் வர வேண்டும் அப்படீன்னு சொல்லிட்டு போனாங்க.

உங்களைப் பத்தி எனக்கு தெரியாதுங்க. எனக்கு நம்மூர் கல்யாணம்னாலே ஒரு தனி குஷி. அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்க போற முதல் இந்திய கல்யாணம் இது தான். சின்ன வயசில் எழுத்தாளர் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ங்கர புத்தகத்தை நான் படிச்சு படிச்சு கிழிச்சதுல என் தொல்லை தாங்காம ஒரு நாள் அந்த புத்தகம் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு சந்நியாசம் வாங்கிண்டு போயிடுத்துங்க.

அமெரிக்காவுல கல்யாணம்னா சும்மாவா? பெண் வீட்டுக்காரங்களுக்கு தான் எத்தனை வேலை இருக்கும்? இந்தியாலேந்து வண்டி(விமானத்த தான் சொல்லறேங்க) வச்சு எத்தனை சாமான் கொண்டு வரணும்? எத்தனை பேரை கூட்டிண்டு வரணும்? அதான் நம்ம எழுத்தாளர் சாவி அமெரிக்காவில் கல்யாணம் செய்தா என்னென்ன பண்ணனும்னு அவர் புத்தகத்துல பிட்டு பிட்டு வச்சிருக்காரே.

* தட்டானை வரவழைச்சு கல்யாண பெண்ணுக்கு வேண்டிய ஒட்டியாணம், வங்கி, வளையல்கள், ஹாரம், திருமாங்கல்யம் போன்ற நகைகளை செய்தாகணும்.
* வயசான பல பாட்டிகளை கூட்டி கொண்டு வந்து அப்பளம் இட்டு காய வைத்து கல்யாண விருந்துக்கு தயார் பண்ணியாகணும்.
* இட்ட அப்பளங்களை காய வைக்க பெரிய கட்டடங்களோட மொட்டை மாடியை வாடகைக்கு எடுத்தாகணும்.
* மடிசார் கட்டிக்க ஆசைப்படற பெண்களுக்கு, (ராக்பெல்லர் மாமி உட்பட) அதை சொல்லித்தர பாட்டிகளை ஏற்பாடு செய்தாகணும்.
* புரோகிதர்களை வரவழைத்து அவங்க தங்கரத்துக்கு இட வசதிகள் செய்து கொடுத்தாகணும்.
* வைதீக காரியங்களுக்கு மடியா தண்ணி வேணும்னு சொல்லற புரோகிதர்களுக்கு புதுசா கிணறு வெட்ட ஆட்களை வரவழைக்கணும்.
* மாப்பிளையை கார்ல ஊர்வலமா அழைச்சுண்டு போற ஜானவாச ரூட்டுக்கு கவர்மென்ட் பர்மிட் வாங்கணும்.
* ஜான்வசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.
* நலங்கில் பெண்ணும், மாப்பிள்ளையும் உருட்டி விளையாட தேங்காய் வரவழைக்கணும்.
* கல்யாண சத்திரம் வாசல்ல கட்ட வாழை மரம் வரவழைக்கணும்.
* பந்தியில் பரிமாற வாழை இலை வரவழைக்கணும். வடு மாங்காய் வரவழைக்கணும். வெள்ளைக்காரர்கள் பந்தியில் உட்கார்ந்து வடு மாங்காய் சாப்பிட்டு விரலை கடித்து கொண்டால் அவங்க கைக்கு பேண்ட் ஐட் போட தேவையான first aid boxes வரவழைக்கணும்.

நினைக்கவே எனக்கு மலைப்பா இருந்தது. என் தோழி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண ஏற்பாடுகள் பண்ண எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க செய்யறேன் அப்படீன்னு சொன்னதுக்கு எல்லாம் 'under control' அப்படீன்னு சொன்னாங்க. சரி தான். நிறைய ஆள்பலம் இருக்கும் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

கல்யாண நாள் கிட்ட நெருங்க நெருங்க எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எனக்கு ஒரே பரபரப்பு. தினமும் நான் அலமாரியை திறந்து நாலு தரம் கட்ட வேண்டிய பட்டு புடவைகளையும் நகைகளையும் சரி பார்த்து வைப்பதை பார்த்து என் கணவருக்கு ஒரே குழப்பம். அமெரிக்காவில் பட்டுப் புடவை கட்டிண்டு ஜானவாச கார் பின்னாடி நடக்கவும், நலங்கு போது கலாட்டா பண்ணி பாட்டு பாடவும், வாழை இலை கட்டி மாக்கோலம் போட்டிருப்பதை பாக்கவும் ஒரு குடுப்பினை வேண்டாமா? 'வாஷிங்டனில் திருமணம்' கதை போல நடக்கவிருக்கும் கலிபோர்னியா கல்யாணத்தை பாக்க எனக்கிருந்த ஆர்வம் அவருக்கு புரியலை.

கல்யாணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டுக்காரங்களை விட அதிக கவனத்தோட நான் ஜானவசத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த போது எதேச்சையா என் வீட்டுக்கு வந்த இன்னொரு தோழி என்னை பாத்து குழம்பி போய் நின்றாள். விசாரிச்சா கல்யாணத்துல ஜானவாசமே கிடையாதாம். அது மட்டுமில்லை. அடுத்த நாள் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தாலி மட்டும் கட்டி அரை மணியில முடிஞ்சுடுமாம். அப்புறம் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் buffet சாப்பாடு சாப்பிட்டு போகணுமாம்.

என்ன அக்கிரமம்க இது? ஒரு ஜானவாச கார் கிடையாதாம். கார் பின்னாடி நடக்கற ஊர்வலம் கிடையாதாம். ஊர்வலத்துக்கு காஸ் விளக்கு தூக்கிண்டு நடக்கும் நரிக்குரவங்க கிடையாதாம். மடிசார் கட்டிய ராக்பெல்லர் மாமி கிடையாதாம். உட்கார வச்சு வாழை இலைல பரிமாரற விருந்து கிடையாதாம். ரொம்ப ஏமாத்தமா இருந்துதுங்க. எனக்கு இருந்த கோவத்துல ஆசை காமிச்சு மோசம் பண்ணினதுக்கு திருவாளர் சாவி மேல கேஸ் போடலாமான்னு கூட யோசனை பண்ணினேன். நல்ல காலம் அப்படியெல்லாம் செய்யாமல் விட்டேன். இல்லேன்னா இப்போ அவர் பேரை சொல்லி ப்ளாக் எழுதினத்துக்கு என் பேர்ல கேஸ் போடுவாங்களே.

-மீனா சங்கரன்






Wednesday, June 03, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (நான்காம் பாகம்)

பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)

அய்யோடா சாமி. இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு. சரி இன்னிக்காவது பெட்டிகளெல்லாம் எடுத்து பரத்துவோம்னு பார்த்தோம். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பெரிய, முக்கியமான, வேலைய மறந்துட்டோமே. திடீர்னு ஒவ்வொரு பட்டியலையும்   ஒவ்வொருத்தர் கையில எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமா போய் ஷாப்பிங் ஆரம்பிச்சோம். போன weekend முழு நேரமும் இதுலேயே ஓடி போச்சு. இதுல சில சாமான்கள் ஸ்டாக் வேற இல்ல. எப்படி இருக்கும். இந்த மாதிரி எவ்வளவு பேர் கிளம்பி/கிளம்பி கொண்டு  இருக்கோம்? எல்லாரும் அதே பொருட்கள். அதே கடைகளில் தானே ரவுண்டு கட்டி வாங்குகிறோம். எப்படி கிடைக்கும்ங்கரேன்? எங்கள மாதிரி சோம்பேறியா இல்லாம, ஒரு படை எங்களுக்கு ஒரு வாரம் முன்னாடியே கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்கய்யா ! (வடிவேலு ஸ்டைல்).

ஷாப்பிங் எல்லாம் ஓரளவிற்கு முடிஞ்சு ஒரு வழியா பொருட்களையும் பெட்டிகளையும் சேர்த்து வெச்சு பார்த்தோம். இப்போ தான் எங்களோட சபதங்களுக்கெல்லாம் வெச்சாங்கடா ஆப்பு! ஒரு எண்ணம் ஸ்திரமாக நிர்ணயமானது.

முதல் ரவுண்டு பாக்கிங்லியே பெட்டிகள் எண்ணிக்கை சும்மா அசால்டா ஐந்தை தொட்டது. ஒவ்வொன்றிலும் எடையாவது குறைச்சல் என்கிறீர்களா? ம்ம் ஹ்ம்ம். எல்லாம் வெகு எளிதில் 50lbs தொட்டாச்சு. இப்போ தான் எங்களுக்கு ஆறாவது பெட்டியே இல்லை என்கின்றன  ஞானோதயம் வந்தது. இனி பெட்டி ஒண்ணு வாங்கி அதுல இன்னும் கொஞ்சம் சாமான்களை அடைக்கணும். கையில் எடுத்து செல்லும் பெட்டிகளுக்கும் ததும்பி வழிகின்றன.

இனி ஸ்டாக் வந்தப்பறம் கடைசி நிமிஷத்துல இன்னொரு முறை முயற்சி செய்யணும். அதுகளுக்கு வேற எடம் வெச்சுக்கணும் பெட்டிகள்ல. இது என்ன சோதனை.

ஈஸ்வரோ ரக்ஷது.

ஏர்லைன் கம்பெனிகள் 70 பவுண்ட்டிலிருந்து 50 பவுண்டிற்கு மாற்றியும் இந்நிலை. தலைக்கு ஒரு பேக் என்ற நிலைமை வந்தாலும் வந்துவிடும் போல, வெகு விரைவில். நாங்களாவது 50lbs ல நிறுத்திட்டோம். சிலர் அதுல கூட கொசுருக்கென்று  கொஞ்சம்  கூடுதலா  அடைக்கறாங்கபா.

நாராயணன்

இனிவரும் பாகங்கள்:
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார்.
அதற்குப் பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

Tuesday, June 02, 2009

மீனாவுடன் மிக்சர் - 1

தொலைக்காட்சியில் 'அனுவுடன் காப்பி' (அதாங்க Koffee with Anu) என்று ஒரு தொடர் வருகிறதாமே? கேள்விப்பட்டேன். அனுவோட காப்பி குடிக்கரச்ச மீனாவோட மிக்சர் சாப்பிட கூடாதா? அப்படி நினைச்சு தான் இப்படி ஒரு பேர் வச்சிருக்கேன். ர்ய்மிங்கா வேற இருக்கு.

இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டு கொண்டே மேற்க்கொண்டு படிங்க.

---------------------------------------------------------------------------------------------
சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

எல்லாருக்கும் கனவுகளும் ஆசைகளும் உண்டு. கண் மூடி கனவுகளில் திளைக்கையில் சிலருக்கு வைர வைடூரியங்கள் தெரியலாம். சிலருக்கு எழுபது இன்ச் தொலைக்காட்சிப் பெட்டி தெரியலாம். சிலருக்கு சமீபத்தில் வெளி வந்த புது மாடல் செல் போன் தெரியலாம். இன்னும் சிலருக்கு ஐரோப்பாவில் விடுமுறை நாட்களை கழிப்பது போல தெரியலாம். எல்லாமே வெளியே சொல்லி கொள்ளும்படியான அழகான கனவுகள்.

எனக்கு கனவில் தெரிவதெல்லாம் ஒரு கிண்ணத்தில் சாம்பார் வடை தான். அதுவும் சரவண பவன் ஹோட்டல் சாம்பார் வடை. சின்ன வெங்காயம் வாசனை மூக்கை துளைக்க (சத்தியமாக எனக்கு கனவில் வாசனை வருதுங்க), மின்னும் எவர்சில்வெர் கிண்ணத்தில் மேலே பொடிப்பொடியா நறுக்கின வெங்காயமும் கொத்தமல்லியும் மிதக்க சரவண பவனோட சாம்பார் வடை சமீப காலமாக என் கனவில் வந்து என்னை ரொம்ப தொல்லை செய்கிறது. யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? "ஐயோ பாவம், பல வருடங்களாக பட்டினி போல இருக்கு" என்று நினைக்க மாட்டார்களா? இந்த கனவை எப்படியாவது மாற்றி ஆக வேண்டும் என்று நேற்று இரவு படுக்க போவதற்கு முன் மனக்கண்ணில் அழகான பட்டு புடவைகளும் ஜொலிக்கும் நகைகளையும் கொண்டு வந்து பார்த்து விட்டு படுத்தேன். நாலு பேரிடம் சொல்லி கொள்வது போல் ஒரு கனவு வர வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணி விட்டு தூங்கினால் என்ன கனவு வந்தது சொல்லுங்கள்? அதே கிண்ணம், அதே வடை, அதே சாம்பார்.

இன்னும் பதிமூன்றே நாட்களில் இந்தியாவில் இருப்பேன். இன்றிலிருந்து இரண்டாவது திங்கள் விடிகாலை மூன்று மணியளவில் விமானம் சிங்காரச் சென்னையில் இறங்குகிறது. விமானத்தளத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சரவணபவன் ஹோட்டலில் இறங்கி சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்று நான் கேட்டதற்கு வீட்டில் கீழ்ப்பாக்கத்தில் வேண்டுமானால் நிறுத்தி விட்டு செல்லலாம் என்று சொல்கிறார்கள். என் மூளை மிகப்பெரியது இல்லை தான். ஒத்துக்கொள்கிறேன். அதற்காக மூளைக் கோளாறு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையா? இது கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை?

ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இவர்களை எல்லாம் நம்பினால் என் சரவண பவன் சாம்பார் வடை ஆசை படு குழியில் தான் விழப்போகிறது. என் காலே எனக்குதவி என்று ஊருக்கு சென்ற மறுநாள் ஒரு ஆட்டோ பிடித்து சரவணபவனுக்கு போய் சாம்பார் வடைக்கு ஒரு சலாம் போட்ட பிறகு தான் தங்கமாளிகை பக்கம் நகை வாங்க செல்லுவேன். சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

சப்தம் வரும் நேரம் (அரைப் ப‌க்க‌க் க‌தை)

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

"ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?" என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, "எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு" என்று அனுப்பினான்.

'எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்... காத்தாவது கருப்பாவது ...' மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

'காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து' ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு ... சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

"ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்" என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன்.

ஹையா(யோ) இந்தியா போறோம் (மூன்றாம் பாகம்)

பயண நாள் நெருங்கி விட்டது (ஒரு மாதமே உள்ளது)

ஒரு காலத்துல இந்த நாள் வருவதற்கு முன்னமே பெட்டிகள் எல்லாம் தூசு தட்டி பரத்தி வைத்து, ஒவ்வொன்றிலும் ஒரு 15% பாக்கிங் முடிந்திருக்கும். அப்போதெல்லாம் ஹையா இந்தியா போறோம் என்கின்ற உணர்ச்சி. இப்போ என்னடான்னா இன்னும் அந்த உணர்வு கூட இல்லை, நாள் நெருங்குகின்றதே என்று.

ஆனால் இந்தியாவிற்கு வாங்கி செல்ல வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையும், அந்தப் பட்டியல்களும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஒரு யூகம் செய்தாலே நம்முடைய பெட்டிகளின் எண்ணிக்கை கூடுகின்றதை உணர முடிகிறது. எங்களது சபதம் #1, #2, #3 நிறைவேற்ற முடியாது என்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட துவங்கியுள்ளது. இதன் கூடவே இன்னும் ஒரு பட்டியலும் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதாங்க, நாம் இந்தியாவில் இருந்து வாங்கி வர வேண்டிய பொருட்கள்.

இங்கிருந்து போகும் பொருட்களில் பல விதம். (நான் அவசியம், அனாவசியம் என்ற வாதத்திற்குள் நுழைய போவதில்லை). எல்லாமே ஒவ்வொரு விதத்தில் நியாயம்தான்.
  1. இந்தியவில் இருந்து வரும் பட்டியலில் உள்ள பொருட்கள்.
  2. நாம், அங்கிருப்பவர்களுக்கு தேவையுள்ளதாக இருக்கும் என்றோ, அன்பளிப்பாகவோ, தயாரிக்கும் பட்டியலில் உள்ளது. இந்த வகை தான் என்னை குழப்பத்தில் ஆழ்த்தும் . மீண்டும் மீண்டும் அதே பொருட்கள்தான். பாதாம், ஜிப் லாக், சோப்பு, சீரியல், ஓட்மீல், ரெய்சின்....இதெல்லாம் நுகரும் பொருட்கள். ஓரிரு மாதங்களில் தீர்ந்ததும், இந்தியாவில் இருப்பவர்கள் அங்கு கிடைக்கும் பொருட்களுக்கு திரும்பி போய்விடுவார்கள். ஏன் தான் எடுத்து செல்கிரோமொன்னு தோணும். அங்கு கிடைக்காத பொருட்களை எடுத்து சென்றாலாவது பயன் உண்டு. அனால் நம்ம திருந்தவே மாட்டோம்.
  3. நாம் அங்கிருக்கும் பொழுது நம்முடைய உபயோகத்திற்கென்று எடுத்து செல்வது.
  4. இங்கிருக்கும் நமது நண்பர்கள் அவர்களது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நம் மூலம் குடுத்தனுப்பும் பொருட்கள்
இந்த பட்டியல்கள் குவிந்த வண்ணம் இருக்க, இன்னும் ஷாப்பிங் பண்ண தொடங்கவில்லை என்று நினைத்தால் தலை சுற்றுகிறது. இத்தொடரின் நாலாம் பாகத்திலாவது இந்நிலை மாறியிருக்குமா?

பொறுத்திருந்து பாருங்கள் வேடிக்கையை.
நாராயணன்

இனிவரும் பாகங்கள்:
நான்காம் பாகம்: பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார்.
அதற்குப் பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

Monday, June 01, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (இரண்டாம் பாகம்)


டிக்கெட் வாங்கும் படலம்:


இந்திய போவதென்பது உறுதி ஆகிவிட்ட நிலையில் அடுத்து வரும் தலை வலி, பயண டிக்கெட் வாங்குவது. இதிலென்ன சார் பெரிய கஷ்டம் இருக்க முடியும்னு நீங்க நினைக்கலாம். அது அவ்வளவு சுலபமா என்ன? எங்கள் வீட்டில் என்றுமே இது எளிதில் சாதித்த ஒரு விஷயம் அல்ல.


பயணம் செய்யும் தேதி ஓரளவிற்கு யூகம் வந்த உடன், எங்களுக்கு தெரிந்த டிராவல் எஜன்ட் நம்பர் எல்லாம் தூசு தட்டி எடுத்து ஒரு பட்டியல் போட்டோம். எமக்கு தெரிந்தவர்களுக்கு தெரிந்த ஏஜன்ட் நம்பர்களையும் அதில் சேர்த்து ஒவ்வொரு ஏஜண்டாக கூப்பிட்டு எல்லோரிடமும் எங்களுடைய பயண திட்டத்தை அறிவித்து டிக்கெட் தேடும் பணியை அவர்களுக்கு குடுத்தோம். அனால் குழ்ப்பம் என்னவென்றால் ஒவ்வொரு ஏஜண்டும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். தலையே சுற்றுகிறது.


ஒரு வழியாக முடிவுக்கு வந்து டிக்கெட் வாங்கியதும் இந்த தலை வலி முடிந்தது என்கிறீர்களா? இல்லை. இப்போ தான் நமக்கு தெரிந்தவர்கள் பலர் அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ கிடைத்த விலையை சொல்லி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவர்.


போனால் போகட்டும் போடா என்ற பாடலை நினைவிற்கு கொண்டு வந்து தேர்த்திக்கொள்ள வேண்டியது தான்.


இந்தியாவிலே இருக்கும் உறவினர் எல்லோருக்கும் நமது பயணத்தை பற்றிய விவரங்கள் அறிவித்த உடன் அதோட நிற்காமல் அவர்களுக்கு இங்கிருந்து வாங்கி வர வேண்டிய பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதன் பட்டியல் போட்டு அனுப்ப சொல்கிறோம்.


ஆஹா..இப்போ தான் காமெடி ஆரம்பம்.


மேலும் அடுத்த பாகத்தில்...

நாராயணன்