அடுத்த பள்ளியில் நிறைய தூங்குமூஞ்சி மரங்களும், வேப்பமரங்களும் ஒரு பெரிய ஆலமரமும். தூங்குமூஞ்சிமரத்தின் காய்ந்துபோன காய்களை வைத்து கத்திச்சண்டை போடுவோம். அந்த மரத்தடியில் உட்கார்ந்தால் தூக்கம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரே ஒரு டீச்சர்தான் தூங்குவார்கள். அவங்க பெயரே தூங்குமூஞ்சி டீச்சர். (ஆசிரியர்களின் பட்டப்பெயர் வைத்து நிறைய பதிவு எழுதலாம்). வேப்பமரம் எனக்குப் பிடித்த மரங்களில் ஒன்று. தூரத்தில் இருந்து பார்த்தால் மற்ற மரங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான வெளிர்ப் பச்சையில் பந்து பந்தாக தெரியும். நிறைய வேப்பம்பழங்களையும் துளிர்இலைகளையும் தின்றிருக்கிறேன் பள்ளிநாட்களில். ராஜபுதனத்து வறண்ட பிரதேசத்திலும் எங்கள் கல்லூரி ஒரு பாலைவனச்சோலையாக இருந்ததற்கும் காரணம் வேப்பமரங்கள்தாம். பள்ளியில் நாங்கள் நட்டுவைத்த சில அலங்காரக் கொன்னை மரங்கள் இன்று பெரிதாக வளர்ந்து பிரேயர் க்ரௌண்டிற்கு நிழல் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி.
வீட்டுப் பின்னாலிருந்த ஒரு வீட்டில் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களில் ஒன்று பார்க்க கம்பீரமாக ராஜதோரணையுடன் இருக்கும். தென்னைக்கென்ன ராஜ தோரணை என்றெல்லாம் கேட்காதீர்கள். சுற்றி கொஞ்சம் குட்டையான தென்னைகளுக்கு நடுவே உயரமாக அந்த தென்னைகளுக்கெல்லாம் ராஜா மாதிரி நிற்கும். வீட்டருகில் விளையாடும் மைதானத்தில் பூவரச மரங்களும், புளிய மரங்களும், புளியமரத்தைப்போலவே தோன்றும் வாதநாராயண மரங்களும் இருக்கும். வாதநாராயண மரத்தை ரொம்ப நாள் வாழ்நார் மரம் என்றுதான் தெரியும்.

இளம் புளியங்காய்களையும் புளியங்கொழுந்துகளையும் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டாம்.
அமெரிக்கா வந்த பிறகு எனக்கு என்ன குறை என்றால், இங்கு நிறைய மரங்களின் இலைகள் முழுவதாகவே இல்லை. மேபிள் மரங்களும், ஓக் மரங்களும்தான் இங்கு நிறைய. அவற்றின் இலைகள் முழுமையாகவே இல்லை. ஒரு பூவரச இலைப்போலவோ ஆல, அரச இலை போலவோ முழுமையில்லை. அதனாலேயே எனக்கு அரச இலையை போல தோன்றும் ப்ராட்ஃபோர்ட் பியர் மரத்தைப் பிடிக்கும்.
அது சரி. முழுமையாக இல்லாமலே இலையுதிர்காலத்தில் இவ்வளவு இலை அள்ளும் வேலை. முழுதாக இருந்தால் என்னாவது என்கிறீர்களா?
இந்த ஊர் மரங்களிலும் சில வித்தியாசமான இலைகள் கொண்டவை இருக்கின்றன. ட்யூலிப் பாப்லரின் இலை சீராக கத்திரிகோல் கொண்டு வெட்டியது போலிருக்கும்.
ஒரே மரத்தில் மூன்று விதமான இலைகள் கொண்ட மரம் ஸாஸ்ஸஃப்ராஸ் மரம். இதைப்பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை கண்ணில் படவில்லை.
சென்ற வருடம் சென்ற நியுயார்க் மிருகக்காட்சிசாலையில் நம்ப ஊர் தட்பவெப்பநிலையில் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதில் ஒரு பெரிய வேப்பமரம்! நைஸாக ஒரு வேப்பிலையை பிய்த்து தின்றுகூட பார்த்தேன் உறுதிப்படுத்திக்கொள்ள. கண்ணில் நீர் கலங்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு இங்கே ரிச்மண்டில் வேப்பமரம் வளர்க்க வேண்டும் என்று ஒரு ஆசையில் ஆரம்பித்து வெறியாகியது. வலையில் மேய்ந்து பார்த்ததில் தெரிந்தது, அமெரிக்காவில் தென் ஃப்ளோரிடாவில் மட்டும்தான் வேப்பமரம் வெளியே வளர்க்கமுடியுமாம். அந்த ஆசையில் மண். அப்புறம் வீட்டுக்கு உள்ளே வளர்த்தால் என்ன என்று ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பித்தேன். இங்கே ஃளோரிடாவில் டாம்பா நகருக்கு அருகே ஒரு வேப்பம்பண்ணையே வைத்திருக்கிறார்கள். வேப்ப மரங்களை எப்படி வளர்ப்பது என்று சொல்லித் தருகிறார்கள். உங்களுக்கு வளர்க்க முடியாவிட்டால், அவர்களிடமிருந்து வேப்பங்குச்சி முதல் கொண்டு வேப்ப எண்ணெய், வேப்பங்கன்று எல்லாம் வாங்கலாம். வேப்பங்கொட்டைக்கு முப்பது நாள்தான் ஆயுளாம். அதைப் படித்ததிலிருந்து கோடையில் ஊருக்குப் போகும் சிலரிடம் மரத்திலிருந்து பறித்த வேப்பங்கொட்டை கொண்டு வாருங்களென்றேன். சிலர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். சிலர் ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆனால் இன்னும் சிலர் கொண்டுவந்து கொடுத்து அவர்களும் வளர்த்து வருகிறார்கள். போன வருடம் ஆரம்பித்தது, குளிர்காலத்தில் உள்ளே வைத்திருந்து நிறைய போய் இப்போது ஒரு நான்கைந்து பிழைத்திருக்கின்றன. படம் போட்டால் நீங்கள் கண் போட்டு விடுவீர்கள் என்பதால் போடவில்லை. படத்தில் பார்த்தாலும் தெரியாது. அவ்வளவு சிறிசு. நம்ம ஊர் மரங்கள் பட்டியல் பார்க்கவேண்டுமா? இதோ!
ரிச்மண்டில் சில வருடங்களுக்கு முன்னால் சூறாவளி வீசியதில் நிறைய மரங்கள் விழுந்தன. அப்போது பார்த்தால் பெரிய பெரிய ஓக் மரங்களுக்கும் ஆணிவேரே இல்லை. கொஞ்சம் பரந்துவிரிந்த வேர்கொத்துதான் இருந்தது. ஒருசில வகைமரங்களுக்கு ஆணிவேர் கிடையாதாம். அதுதான் காற்றில் சுலபமாக விழுந்துவிட்டன. அப்படி விழுந்த மரத்தை தூக்கி நட்டுவைத்து என்னை ஆச்சரியப்படுத்தினார் நம் சேகர் வீரப்பன்.