Showing posts with label பாதயாத்திரை. Show all posts
Showing posts with label பாதயாத்திரை. Show all posts

Tuesday, October 14, 2014

பாதயாத்திரைப் பயணம்

சனிக்கிழமை காலை ...

'எல்லாம் எடுத்திக்கிட்டாச்சா'னு ஒருமுறை பார்த்துக்கங்க என்ற அன்பான தங்கமணியின் அக்கறையில், தண்ணீர் குடுவை, சிலபல கொறிக்கும் பதார்த்தங்கள், குளிருக்கு ஒரு மென்கம்பளிச் சட்டை (fleece), ஐ.டி.கார்டு, பணப்பை (wallet), கைத் தொலைபேசி, எல்லாம் ரெடி.  கெளம்ப வேண்டியது தான்.  சரி, போய்ட்டு வருகிறேன் என்று, 'மேப் மை வாக்'ஐ கிளிக்கி ...

நான் ஒரு வழியாகப் போகலாம் என்றிருந்தால், 'அந்த வழிகள் பெரிய பெரிய சாலைகள், உயிருக்கு உத்திரவாதமில்லை.  அதனால், குறுக்கு சாலையிலயா (லிஸ்ட் அடுக்கப்படுகிறது) போயிட்டு மரியாதையா வாங்க.  எங்காவது மட்டையாயிட்டா உடனே கூப்பிடுங்க.  (மட்டையாயிட்டு எப்படிக் கூப்பிடமுடியும் ! :))  அப்பப்ப தண்ணி குடிச்சுங்கங்க, மறக்காம ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு எங்க இருக்கேனு இற்றைப்படுத்துங்க‌ (update).  எவ்வளவு நாள் வெயிலடிச்சுது அப்பலாம் கிளம்பாம, குளிர‌ ஆரம்பிக்கும் போது அப்படி என்ன நடைப் பயணம் வேண்டிக்கிடக்கு' என்று தங்கமணியின் குரல் மெல்லத் தேய்ந்து (fade) குறைய‌, வீட்டை விட்டு ஒருசில நூறு அடிகள் கடந்து அடியேனது பாதயாத்திரை துவங்கியது.  இலக்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கலாம் என்று!

அதிகாலைக் குளிரில், கதிரவனின் ஒளியில் நடக்க ஆனந்தமாக இருந்தது.  சர்சர்னு சிற்றுந்தில் கடந்த சாலைகளில், ரொம்ப நேரமா நடக்கற மாதிரி தோன்றியது.  இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னும் இந்த சாலையிலேயேவா இருக்கிறோம் என்று தோன்றியது.  வழியில் ஆங்காங்கே நகர சபை(city council)க்கு என்னைத் தேர்ந்தெடுப்பீர் எனும் பதாகைகள் பல வீடுகளின் முன்பு அறிவித்திருந்த‌ன.  வருகிற நவம்பரில் தேர்தல்.  பெரிய சாலைகளில் நடப்பதற்கு தனிச் சாலையும், மறுபுறம் கடப்பதற்கு பொத்தானும்  இருந்தன.  சிறிய சாலைகள் தான் எதுவுமே இல்லாமல், கொஞ்சம் அச்சம் விளைவிப்பதாய் இருந்தன.  ஒரு குறுஞ்சாலையில், ஆளரவமின்றி இருக்க, திடீரென எதிரில் தூரத்தே இரு ஆண்கள்.  மனதில் கொஞ்சம் பீதி ஏற்படத்தான் செய்தது.  வெள்ளைக்காரர்களா இருந்தா (பொய் சொல்லமாட்டங்க எனும் நகைச்சுவை எண்ணம் மறந்து), பரவாயில்லை, வேறு எவராவதா இருந்து நம்ம ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று மனம் சிறிது யோசித்தது.  அந்த அளவிற்கு எல்லாம் போகவில்லை.  சற்றே நெருங்கி அவர்களைக் கடக்கையில், 'ஹவ் ஆர் யூ'  என்று அசோகன் பாணியில் அடிவயிற்றில் இருந்து கேட்டுவிட்டு கடந்து விட்டன‌ர்.  அப்பாடா என்றிருந்தது.


இந்த மாதிரி ஆட்கள் சிலநேரம் வழிமறிந்து கையில் எவ்ளோ வச்சிருக்கேனு கேட்டு, நம்மிடம் இருக்கத புடுங்கிட்டுப் பற‌ந்துடுவாங்கனு எல்லாம் கேள்விப்பட்டதினால, பையில் எப்பவும் ஒருசில பச்சை நோட்டுக‌ள் மேலாப்பல வைத்திருப்பேன்.  பின் பாக்கெட்ட்ல இருந்து எடுக்கக் கூடாதாம் .. ஏன்னா துப்பாக்கி தான் நாம் எடுக்கறோம்னு அவன் சுட்டுட்டு போய்டுவான் என்றெல்லாம் எனது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.

சிறிது தூரம் நடந்து சிலபல பொத்தான்கள் அமுக்கி சாலைகள் கடந்து நகரப் பூங்கா அருகில் இருந்தேன்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் வந்து செல்லும் இடம்.  (கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறதா?:))  சனிக்கிழமை ஆதலால், பல்வேறு விளையாட்டுக்கள், பிறந்த பிஞ்சுக்களில் இருந்து பதின்ம வயது இளைஞர்கள் வரை.  ஸாஃப்ட் பால், பேஸ் பால், ஸாக்கர், இன்னும் பல பெயர் தெரியாத விளையாட்டுப் போட்டிகள் பல வண்ணங்களில் ந‌டந்து கொண்டிருந்தன.  நடைமேடையில் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்கள் இழுத்துச் செல்ல, அவைகளைத் தொடர்ந்திருந்தனர்.  எப்படித் தான் வளர்க்கிறார்களோ?  ஒரு நாய் கூட குரைக்கவில்லை, சண்டித்தனம் செய்யவில்லை, எப்படி என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்தது என்னுள்.

போட்டி நடக்கும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் பலர்.  தங்கள் தாத்தா பாட்டி, சொந்தங்கள், என அனைவரையும் கூட்டி வருகிறது இளைய தலைமுறை.  பூங்காவே ஒரு திருவிழா போல திகழ்கிறது.  காணக் கண் கொள்ளா ஆனந்தம்.  நம்மூரில் இது சாத்தியமா ?  எளிதாகச் சொல்லிவிடுவோம், 'வயசான காலத்துல இதெல்லாம் தேவையா' என ...

பூங்காவை சுற்றி வருகையில், விளையாட்டுத் தவிர குடும்பங்களாகப் பலர் அன்றைய மதிய உணவை கரி அடுப்புகளில் சுட்டுக் கொண்டும், அத்தோடு பல கேளிக்கைகளில் திளைத்தும் இருந்தனர்.  பூங்காவினுள் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் மென் நீர்த்தூவல்.  பல வண்ணங்களில் படபடத்துச் செல்லும் மீன்குஞ்சுகள்.  நீரோரங்களில் ஒற்றைவால் தவளைக்குஞ்சுகள்.  ஒருசில வாத்துக்கள்.  இவை எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் வைக்கும் விதமாக ஒரு பெரிய பூந்தோட்டம்.  குளிர் ஆரம்பித்திருப்பதால், பூக்களின் விளைச்சல் குறைய ஆரம்பித்திருந்தது.

பூங்காவைக் கடந்து, மற்றொரு பெருஞ்சாலயில் நடையைக் கட்டிய போது தூரத்தே ஒருவர் ஓடி வருவது தெரிந்தது.  ஆணா?, பெண்ணா?, என்று அனுமானிக்கமுடியவில்லை.  சற்றே பெருஞ்சாலை ஆதலால் சர்சர் என்று சிற்றுந்துகளின் உறுமல்.  கிட்டே நெருங்க நெருங்க பதின்ம வயதுப் பெண் அவர்.  இழுத்துப் போர்த்திய மேலாடையும், அரை நிஜாரும், கையில் தண்ணீர் குடுவையும், காதுகளில் இசைக்குழாயும் சொருகி மெய்மறந்து, சற்றும் ஒரு ஜீவன் தன்னை எதிர்கொண்டு செல்கிறது என்ற எண்ணமில்லாமல் என்னை கடந்து விட்டிருந்தார்.

இதன் நடுவே அலைபேசி அழைப்பில் தங்கமணி.  சொல்றத கேளுங்க, அங்கே இருங்க, வண்டிய எடுத்துட்டு வர்றேன்.  எதுக்கு வீராப்பு என்று அடுக்க, வழக்கம் போல அவர்களது அன்பான எண்ணத்திற்கு வளையாமல், சிறிது இடைவெளி எடுத்து, நீர் அருந்தி, தின்பண்டங்கள் கொரித்து, வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.  குளிரிலும் வந்த சூரியனின் கதிர்கள் கண்களைக் கூசின.  மதியம் ஆகி இருந்தது.  மேப் மை வாக்கை பார்த்தால், பன்னிரெண்டு மைல்கள் காட்டியது.  சந்தோஷத்தில் கை கால் புரியவில்லை.  துள்ளிக் குதிக்கலாம் என்றால் அப்போது தான் கால்களில் லேசாக வலி எடுக்க ஆரம்பித்திருந்தது.  இன்னும் ஒன்னரை மைல்கள் நடக்க வேண்டும் வீட்டிற்கு.  நடந்து, ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நாள் நடைபயணத்தை முடித்துக் கொண்டாயிற்று!

நடப்பது சுகம் ! தொடரும் ...