Friday, May 11, 2018

நாம் எங்கே போகிறோம்?


   இந்தியா  ஒரு நாடு என்ற முறையில் அல்லது இந்திய சமூகம் என்ற முறையில் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வி பல சமயங்களில் என் மனத்தில் உதித்தது உண்டு. இதே கேள்வியை நல்லெண்னம் மிகுந்த பலரும் கேட்டுவிட்டு ஓய்ந்து போகின்றனர். செய்தித்தாளில் மோசமான பல செய்திகளை படிக்கும்போது,. அல்லது பல விபரீதமான சம்பவங்களை நேரடியாக பார்க்க நேரும் போது இப்படி கேட்டு விட்டு ,சில நாட்களில் மறந்து விடுகிறோம்.  நடக்கும் சம்பவத்தின் கடுமை,சம்பவம் நடைபெற்ற இடம், நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது,, சம்மந்தப்பட்ட நபர்களுடன் நமக்கு இருக்கும் உறவு இவற்றைப்  பொறுத்து நம்முடைய மனத்தில் ஏற்படும் கிள்ர்ச்சியின் கடுமை இருக்கும்.சில நாட்களில் அல்லது சில  வாரங்களில் அதை மறந்து விடுவோம். ஆனால் சமீப கால நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அபாயத்தை நம் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தக் கூடிய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது..
சில வருடங்களுக்கு முன் ஒரு பிரபல எழுத்தாளர் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்.  யூ.ஆர் ஆனந்த மூர்த்தி என்பது அவருடைய பெயர். கன்னட எழுத்தாளரான அவருடைய பல நூல்கள் பல இந்திய மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது,  அந்த அளவுக்கு பிரபலமான அவர் நிச்சயமாக பலருக்கு வேண்டாதவராகக் கூட இருக்கலாம். அவருடைய கதைகளில் சமூக அக்கரையும் புதிய எண்ணங்களும் பழமையை சாடுவதும் இருக்கத்தான் செய்யும். நான் அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்ததில்லை. தமிழ் மொழி பெயர்ப்பில் சில கதைகளையும் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன் . அவருடைய கதை ஒன்று திரைப்படமாக்கப்பட்டு தேசீய அவார்டு பெற்றது. அந்த கன்னட படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
கூட்டிக் கழித்து சொன்னால் யு.ஆர் ஆனந்தமூர்த்தி கன்னட மொழிக்கு பெருமை சேர்த்த ஒரு எழுத்தாளர். ஆனால் அவர் இறந்த தினத்தில்  நடந்ததான் மிகப் பெரிய துயரம்.
அவர் இறந்த செய்தி வெளியானவுடன் அவரை எதிரியாகக் கருதும் சிலர் அவர் வீட்டின் முன் நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். தெருவில் போவோர்க்கும்.,வருவோர்க்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் ,ஆனந்த மூர்த்திக்கு எதிரான கோஷம் என்று நினைத்து பல  கோஷங்களை  போட்டார்கள். அவர்கள் ஆனந்த மூர்த்தி வீட்டுக்கு எதிரில் நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதையும் இனிப்பு வழங்கியதையும் வீடியோ படம் எடுத்து பத்திரிகைகளில் போட்டார்கள்..பல நாட்கள் இந்த செய்தி பெங்களூர் நகரத்தில் கார சாரமான விவாதத்துக்கு காரணமானது. பெங்களுர் நகரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குறிப்பாக இலக்கிய வட்டாரத்தில் விவாதம் நடந்தது.
காவல் துறையினர் கடைசி நேரத்தில் வந்து கூட்டத்தை கலைந்து போகச் செய்தார்களே யொழிய யாரும் கைது செய்யப்படவில்லை.
இது போன்ற சம்பவங்கள் நடந்தது பற்றி நானும் கேள்விப்பட்டிருகிறேன். காந்தியடிகள் இறந்த போது  பல வடநாட்டு நகரஙகளில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்ற செய்தியை கேள்விப் பட்டிருக்கிறேன். இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டபோது  என் கண் முன்னால்  ஸ்ரீரங்கத்தில் இனிப்பு வழங்கப்பட்டதும் அதையொட்டி கலகம் நடந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
நமக்கு வேண்டாதவர்கள் நோய் காரணமாக இறந்தாலும் கொலை செய்யப்பட்டு இறந்தாலும் நாம் அனுதாப்படாமல் இருக்கலாம்,உள் மனத்தில் மகிழ்ச்சி கூட சிலர் அடைவதுண்டு..ஆனால் வெளிப்படையாக அதை பகிரங்கமாகக் களிப்புடன் கொண்டாடுவது எத்தகைய மன  நிலையைக் குறிக்கிறது என்பது பற்றி சிந்திக்கும் போது  நான் கவலைப்படுகிறேன். நம் சமூகம் முழுவதற்கும் ஏதோ மனநோய் பீடித்திருக்கிறது என்று கவலைப்படுகிறேன்.இது ஒரு வகையான பழி வாங்கும் மனநிலையை வளர்த்து விட்டிருக்கிறோம் என்று நினைக்கச் செய்கிறது.எதிரி என்று கருதுபவனை எப்படியாவது தீர்த்துக் கட்டுவது என்ற மனநிலையை பொதுமைப்படுத்தினால் அது சமூகத்துக்கு எவ்வளவு பெரிய கேட்டை விளைவிக்கும் என்பது பற்றி புரியாமல் பொதுவாழ்க்கை இந்த நாட்டில் கறை பட்டுக் கிடக்கிறது. சமூகம் முழுவதும் வக்கிரம் கொண்டதாக மாறினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.
சம்பவம் நடந்து முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதைப் பற்றி பேசி எழுதி என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கலாம்.. ஆனால் அதே போன்ற அல்லது அதை நினைவு படுத்துகின்ற சம்பவங்கள் இப்பொழுது அடிக்கடி நடக்கத் தொடங்கி விட்டது. அத்தகைய சம்பவங்கள் இயல்பானதாக ஆகி விடும் அபாயம் தொடர்கிறது சம்பவத்தையொட்டி தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சமூகத்தை பீடித்துள்ள நோய் எவ்வளவு பரவலாக எல்லோரையும் பாதித்திருக்கிறது என்ற உண்மையையும் வெளிக் கொணர்கிறது..  .
சென்ற பிப்ரவரி மாதத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது சென்னை கிரிமினல் கோர்ட்  ஒன்றில் ஒரு இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்க;பட்டவுடன் அங்கே கூடியிருந்த பலர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.தமிழ்நாட்டு அரசியல் கூட்டங்களில் முழங்குவது போல நீதிபதியின் பெயரைச் சொல்லி அவருக்கு ஜே போட்டு முழங்கினார்கள் ,.அருகில் இருந்த பலருக்கு இனிப்பும் வழங்கப்பட்டது என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.ஆனால் இந்த வழக்கின்  தன்மையே வேறு.
சென்னை நகரத்தில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்த ஒரு மத்ய தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அந்த இளைஞன்..ஒரே மகன் இஞ்சினீரிங் படித்தவன். அவன் அதே அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயதுப் பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டு அவனை ஜாமீனில் எடுத்து வந்த தந்தையையும்., தாயையும் அவன் விட்டு வைக்கவில்லை. வீட்டில் தாய் தனியாக இருந்த போது அவளை கொலை செய்து விட்டு அவள் அணிந்திருந்த நகைகளுடன் ஓடிப்போய் விட்டான். போலிஸ் அவனை வலை வீசி தேடி கடைசியில் மொம்பை நகரத்தில் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். மூன்று மாத காலத்துக்குள் இரண்டு பெண்களை கொலை செய்தவனுக்கு இதை விட தகுதியான தண்டனை யாரும் கொடுக்க முடியாது சென்னை நகரத்தையே ஒரு கலக்கு கலக்கிய வழக்கு இது ..தீர்ப்பு வழங்கிய நாளில் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் குடியிருக்கும் பலர் குடும்பத்துடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர் என்பது மற்றொரு செய்தி இந்த மரண தண்டனை செய்திக்கு இனிப்பு வழங்கியதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணம் தொடர்பான செய்திகளை நாம் கேள்விப்படும் போது எந்த உணர்ச்சியையும் நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டுமென்ற  நடைமுறை இதிலும் சற்று மீறப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன் இங்கிதம் இல்லாத முறையில் ஆனந்த மூர்த்தி மரணத்தை கொண்டாடியவர்களை விட இவர்கள் தரக் குறைவானவர்கள் அல்ல. .
சில நாட்களாக பத்திரிகையிலும்,, தொலைக் காட்சியிலும் ஒரு செய்தி அதிகமாக பேசப்படுகிறது அதுதான் காஷ்மீரில் காத்துவா என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை. இந்த வழக்கிலும் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு எட்டு வயதுதான் ஆகிறது.அந்த பெண்ண்ணை ஒரு கோயிலுக்குள் எட்டு நாட்கள் வைத்திருந்து பலர் கற்பழித்து கடைசியில் கொலை செய்து விட்டதாகச் செய்தி..இறந்த பெண்ணின் உடலில் எழுபதுக்கு மேற்பட்ட காயங்களிருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
.இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களுக்கு செவி சாய்க்காத காவல் துறையினர் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் செயல்பட்டனர். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் பல பெரிய இடத்துக்காரர்கள் தொடர்பு இருப்பது தெரியவந்தது .இறுதியாக காவல் துறையைச் சேர்ந்த சிலர் உள்ப்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்
பிரச்னை இத்துடன் முடிந்து விடவில்லை இப்பொழுது புதிய பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது..கைது செய்யப்பட்டவர்கள் ஆறு பேரும் அப்பாவிகள்.காவல்துறையினர் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க ஒரு பொய் வழக்கு. என்பது அந்த பகுதியில் இருக்கும் சிலருடைய வாதம் இத்தகைய நிலைபாட்டுக்கு முக்கிய காரணம் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் ஒரு முஸ்லீம் கைது செய்யப்படவர்கள் ஆறு பேரும் இந்துக்கள்.. இதுதான் அவர்களுடைய வாதம்
·       உண்மை தெரிய வேண்டும் என்றால் வழக்கை மத்ய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. .எங்கோ ஒரு மூலையில்  நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு டெல்லி நகரத்தில் பலர்  கூட்டம் நடத்தி  போராடும் நிலை வந்து விட்டது  நாடு முழுவதும் பல பத்திரிகைகளில் விவாதிக்கப்படுகிறது. காரணம் இந்த வழக்கில் இரு வேறு மதத்தினர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்.பெண்ணின் தந்தை தங்குமிடம் கூட  இல்லாத ஒரு நாடோடிக் குடுமபத்தைச் சேர்ந்தவர்.
·       குற்றவாளிகளைக் காப்பாற்ற பெரிய படை திரண்டு போராடிக் கொண்டிருக்கிறது இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் நடத்தும் போராடத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஊர்வலத்தில் தேசீயக் கொடி பயன்படுத்த்ப் படுகிறது,. தங்களுடைய மதத்துக்கு பெரிய ஆபத்து வந்து விட்டதாகக் கூக்குரல் எழுப்புகிறார்கள். ஊர்வலத்தில் அமைச்சர்களும் பங்கு கொண்டு பேசுவது இதில்
·        பெரிய வேடிக்கை மட்டுமல்ல. விபரீதம்
·       காவல்துறையினர்  நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்ய விடாமல்
·       வழக்கறிஞர்கள் தடுத்தனர். எல்லாவற்றையும் மீறி கடைசியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இப்பொழுது உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழக்கை அடுத்த மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில் நடத்த உத்தரவிட்டிருக்கிறது.
·       இன்று நாடு உள்ள நிலைமையில் குற்றம் சாட்டப்பட்டவரின் அல்லது பாதிக்கப்பட்டவரின் மதத்தைப் பார்த்து கட்சி பேசத் தொடங்கினால் விபரீதம் அதிகமாகும்.  உதாரணத்துக்கு நாட்டில் பெரிய குற்றமாக இன்று நடப்பது பெண் குழந்தைகள் கொலையும் கற்பழிப்பும்தான்.
·        பத்து அல்லது பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண்கள் சீரழிக்கப்படுவது கொலை செய்யப்படுவது பற்றிய பத்திரிகைச் செய்தி இல்லாத நாளே இல்லை.. ஒரிஸ்ஸா மாநிலத்தில் மட்டும் சென்ற 2017 ஆம் ஆண்டில் 5000 க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழு  பாராளூமன்ற உறுப்பினர்கள் இந்த வகையான  குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி, அவர்கள் மீதான வழக்குகள் சென்ற சில மாதங்களில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது இப்பொழுது சொல்லுங்கள் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா?  இல்லையா?
  - மு.கோபாலகிருஷ்ணன்