Showing posts with label சங்கீதம். Show all posts
Showing posts with label சங்கீதம். Show all posts

Sunday, November 09, 2014

அவையடக்கம்


நண்பர் ஒருவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள ஒரு சிறுவன் சேர்ந்தான். ஒரு வருடம் கழித்து அந்தச் சிறுவனின் தந்தையும் சங்கீதம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு நண்பரிடம் கேட்டிருக்கிறார். அந்த உரையாடலை கீழே தருகிறேன்.

நிஜமாவே உங்களுக்கு கத்துக்க ஆசையா?
ஆமாம்.

சரி வாங்க.  பேசிட்டு, நீங்க எப்படி பாடுறீங்கன்னு பாத்துட்டு டிசைட் பண்ணலாம்.

தந்தை வந்து பேசுகிறார். பாடிக் காட்டுகிறார். நண்பரும் தந்தைக்கு கற்றுத் தருவதாக சொல்லி விட்டபின் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க இதுக்கு முன்னாடி  பாட்டு கத்துக்கிட்டிங்களா?

இல்லைங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன் தான். இன்ட்ரெஸ்ட் இருக்கு, அவ்வளவுதான். கொஞ்சம் முறையா கத்துக்கலாமுன்னு ஆசை அதனால்தான்...

சந்தோஷம். எப்படி உங்களுக்கு பாட்டு கத்துக்கனும்னு ஆசை வந்தது? உங்க குடும்பத்துல யாராவது பாடுவாங்களா?

எங்க வீட்டுல யாரும் பாட மாட்டாங்க. ஆன எங்க தாத்தா ஒரு பாடகர். அவர் நிறைய சங்கீதம் பாடியிருக்கார்.  கச்சேரி எல்லாம் பண்ணியிருக்கிறார். சினிமாவுல கூட பாடியிருக்கார்.

அப்படின்னா  நான் கேள்விப் பட்டிருக்கலாம்.  உங்க தாத்தா பேரு?

டி. எம். சௌந்தர ராஜன்....

நண்பர் மயங்கி விழுகிறார்.

Tuesday, November 10, 2009

சங்கீதத் துறை மாற்றங்கள்

தமிழ் நாட்டில் நல்ல் இசை நிகழ்ச்சியை கேட்பதெல்லாம் அரிதாகிவிட்டது. சென்னை நகரத்தில் ஆண்டு இறுதியில் ஒரே காலத்தில் பல மன்றங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. மற்ற நகரங்களில் இத்தகைய மன்றங்கள் சரியாக செயல்படவில்லை. முன்பெல்லாம் திருவிழா காலங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சிகள் கூட வேறு வகையாக போய்விட்டது.

நகரங்களில் பல விழா காலங்களில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் திரைப்படப் பாடல்களே இடம் பெறும் இந்த மெல்லிசை நிகச்சிகளில் இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

20ம் நூற்றாண்டுக்கு முன்பு கர்நாடக சங்கீதத்திற்கு என்று தனியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. ஹரிகதா பாணியில் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு இடையில் கர்நாடக பாணியில் கீர்த்தனைகள் பாடப்பட்டன. முழுவதுமாக கீர்த்தனைகளை பக்கவாத்தியங்களுடன் பாடும் வகையில் நிகழ்ச்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கின.

மெல்லிசை வகையில் சேரக்கூடிய ஜனரஞ்சகமான பாடல்கள், தெருக்கூத்து, நாடகம் ஆகிய மேடைகளில் பாடப்பட்டன. திரைப்பட வளர்ச்சி பெரிய அளவில் நிகழ்ந்த பிறகு மெல்லிசைக்கான தனி மேடை அமைந்தது. பெரும்பாலும் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் அந்த மேடைகளில் பாடினார்கள்.

மேடைகள் தனியாக அமைந்து நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்பட்டது போலவே பக்க வாத்தியங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மெல்லிசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்களின் ஆதிக்கம் அதிகம்.

கர்நாடக சங்கீத மேடையின் நிலைமை வேறு. அதிகமான எண்ணிக்கையில் பக்க வாத்தியங்கள் கொண்ட கச்சேரிகள் இப்பொழுதெல்லாம் அநேகமாக நடைபெறுவதில்லை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் இப்படி எல்லா பக்க வாத்தியக் கலஞர்களுக்கும் தொகை கொடுப்பது சற்று கடினமானதாகப் போய்விட்டது முக்கிய காரணம்.

இப்பொழுது பெரும்பாலும் இரண்டே பக்க வாத்தியங்களுடன் நிகழ்ச்சி அமைவது வாடிக்கையாகி விட்டது. சிக்கனமான நிகழ்ச்சிக்கு வயலின் மிருதங்கம் இவை இரண்டும்தான் பிரதான இசைக் கருவிகள் என்ற நிலை வந்து விட்டது.

ஒரு காலத்தில் ஹார்மோனியம் என்ற இசைக் கருவி கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இன்று அந்த இசைக் கருவி கர்நாடக இசை மேடையை விட்டு இறங்கி விட்டது.

சங்கீதம் கற்றுக் கொடுக்கும் பாட்டு வாத்தியார் ஹார்மோனியத்துடன்தான் முதல் பாட்டைத் தொடங்குவார். ஆலந்தூர் விசுவநாதய்யர் என்ற சங்கீத வித்வானுடைய ஹார்மோனியம் வாய்திறந்து பேசுவது போல இருக்கும்.

மெல்லிசை நிகழ்ச்சி மேடைகளில் ஹார்மோனியம் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. நாடக மேடைகளிலும் இன்றும் அது உண்டு.

1930, 1940 களில் உறையூர் காதர் பாட்சா என்ற ஹார்மோனிய இசைக் கலைஞர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்தார். விளம்பர நோட்டீஸ்களில் நாடகத்தின் பெயரை எந்த அளவில் அச்சடிக்கிறார்களோ அந்த அளவில் பெரிதாக காதர்பாட்சாவின் பெயரை அச்சிட்டு விளம்பரம் செய்வார்கள். இரண்டு காட்சிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அவருடைய ஹார்மோனியம் தன் இசையால் ரசிகர்களை கட்டிப் போடும்.
ஆனால் என்ன காரணமோ, பல சங்கீத வித்வான்கள் ஹார்மோனியத்தை கை கழுவி விட்டார்கள். பாரதியார்கூட ஹார்மோனியத்தை நல்ல சங்கீதத்தின் விரோதி என்று எழுதியிருக்கிறார். வானொலி நிலையங்களில் ஹார்மோனியம் அனுமதிக்கப் படுவதில்லை.

வயலின் ஒரு ஐரோப்பிய இசைக் கருவி. இன்று கர்நாடக இசை மேடையில் வயலின் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்து விட்டது. மிகக் குறைந்த பக்க வாத்தியம் கொண்ட நிகழ்ச்சிகளிலும் ஒரு இடம் வயலினுக்கு நிச்சயமாக உண்டு.

சமீபத்தில் காலமான திரு. குன்னக்குடி வைத்தியநாதனுடைய வயலின் இசையை இந்த தலைமுறையினர் கேட்டிருக்கலாம். அவருடைய வயலின் வாய் திற்ந்து பேசும், பாடும், அழும், சிரிக்கும், அவர் மட்டும்தான் அசுர வாத்தியமான தவில் மேளத்தை பக்க வாத்தியமாக வைத்துக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

ஆனால் சில சுத்த கர்நாடக சங்கீத ரசிகர்கள் குன்னக்குடியின் இசையை கர்நாடக பாணியாக ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படி எல்லா துறையிலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் ஏற்படும் மாற்றங்களை யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் கடந்த பத்தாண்டுகளில் பல புதிய அம்சங்கள் தலையெடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களெல்லாம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மொழி தொடர்பான விஷயம் கர்நாடக சங்கீத உலகில் பெரிய விவாதத்தை தொடங்கி வைத்து அது இன்றளவும் முழுமையாக முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.

அந்த விவாதம் தான் தமிழ் இசை தொடர்பான விவாதம்.
19ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் கர்நாடக இசையில் பெரிய எழுச்சி ஏற்பட்டது அதுதான் தியாகராஜ சுவாமிகளின் பிரவேசம். அவருடைய கீர்த்தனைகள் சங்கீத உலகத்துக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான அவருடைய சாகித்யங்கள் தெலுங்கு மொழியின் அழகோடும் சங்கீத இலக்கணம் முழுவதுமாக பொருந்தி பாவத்தோடும் நெஞ்சைத் தொடும் பக்திப் பரவசத்தோடும் பாடுவதை எல்லோரும் ஈடுபாட்டோடு கேட்கத் தொடங்கினார்கள்.

அவருடைய கீர்த்தனைக்ள் பெருமளவில் பாடத் தொடங்கிய பிறகுதான் இசை நிகழ்ச்சிக்கு என்று தனி மேடை அமைந்தது என்று கூட சொல்லலாம். காலப்போக்கில் தியாகைய்யரின் கீர்த்தனைகளே இசை மேடையின் முழு நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டன. மற்றபடி தீட்சிதர், புரந்தரதாசர் பாடல்கள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடம் பெற்றன. தெலுங்கு, வடமொழி கீர்த்தனைகளுக்கு இடையில் இசைக் கலஞர்கள் தமிழ் மொழி கீர்த்தனைகளை மறந்தே போய் விட்டார்கள். தமிழ் மொழியில் அருணாசல கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் ஆகியோர் பாடிய, இயற்றிய கீர்த்தனைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.

தியாகைய்யருடைய மேன்மையான கீர்த்தனைகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழ்நாட்டிலேயே தமிழ் இசை பாடல்களை பின்னுக்குத் தள்ளும் நிலை ஏற்பட்டது. கர்நாடக இசை மேடையில் தமிழ் மொழிப்பாடல்களுக்கு இடம் கொடுக்காத நிலை பற்றி நியாயமான வருத்தம் பலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய சங்கீதத்துக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு மாநாடு பரோடா நகரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இசைக் கலைஞர்களும், இசைத் துறை ஆய்வாளார்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தைத் தெரிவித்தனர்.

1916ம் ஆண்டு நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் செர்ந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் கலந்து கொண்டார். ஆபிரகாம் பண்டிதர் ஏற்கனவே கர்நாடக இசை, தமிழ் இசை, பண் வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகள் எழுதியிருந்தார். அவர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூல் பழங்காலத்திய பண் வகைகளைப் பற்றி தெளிவான விளக்கம் கொண்டதாக உள்ளது. தன்னுடைய கருத்துக்களை எடுத்து சொல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகா ஜன சங்கம் என்ற சங்கத்தை நிறுவினார். அந்த அமைப்பு மூலம் பல தமிழ் கீர்த்தனைகளை எழுதி இசை அமைத்து கர்நாடக பாணியில் பாடும் முறைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

நாட்டு விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை இந்தியாவில் பல கலைகள் புத்துயிர்ச்சி பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது. குறிப்பாக இந்தியாவின் இசை பாரம்பரியம் காக்கப்படுவது பற்றி பலர் ஆர்வம் காட்டினார்கள். 1927ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபை வருடாந்திர கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு மாநாட்டுச் செலவு போக மீதம் இருந்த தொகையை நிதி உதவியாக கொடுத்தது. அதை மூலதனமாக கொண்டு மியூசிக் அகாடெமி என்ற அமைப்பை உருவாக்கினர். மியூசிக் அகாடெமி ஆண்டு தோறும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் இசைத் துறை தொடர்பான ஆராய்ச்சி நடக்கவும், இசைப் பயிற்சி கொடுத்து இளைய தலைமுறை இசைக் கலைஞர்களை உருவாக்குவதிலும் செயல் பட்டு வருகிறது. ஆனால் தமிழ் மொழியில் உள்ள கீர்த்தனைகளை பாடவேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் நிறைவேறவில்லை. பலர் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

உ.வே. சாமிநாதய்யர் தமிழர்கள் இசையும், இசைக் கருவிகளும் என்ற தலைப்பில் சென்னையில் ஒரு ஆராய்ச்சி சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த சொற்பொழிவில் பழைய தமிழ் பண்களுக்கு சமமான கர்நாடக இசை ராகங்களை எடுத்து விளக்கி அவற்றில் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

சி.ஆர். சீனிவாச அய்யங்கார் என்ற அறிஞர் மியூசிக் அகாடெமி ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கான கோடைக்கால இசைப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்துப் பேசினார். தன் உரையில் தமிழில் கீர்த்தனைகள் இல்லை என்ற வாதத்தை மறுத்து தன் இளமைப் பருவ காலத்தில் மேடைகளில் பாடப்பட்ட அருணாசல கவிராயர், கவி. குஞ்சர பாரதி பாடல்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேன்மையை விளக்கினார்.

செட்டிநாட்டரசர் ராஜா அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரம் கல்லூரியில் சங்கீதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.

சங்கீதத்திற்கு மொழி கிடையாது. சங்கீதமே ஒரு தனி மொழி. ஆகையால், கர்நாடக சங்கீதத்தில் மொழிப் பிரட்சினையை எழுப்பக் கூடாது என்று சிலர் வாதம் செய்தனர். சில சமயங்களில் தமிழ் இசைக் கோரிக்கைகளுக்கு ஜாதி வர்ணம் பூசும் முயற்சியும் நடந்தது. ஆனால் பல முன்னணி இசைக் கலைஞர்களும், கல்கி போன்ற பத்திரிகையாளர்களும் தமிழிசை வளர்ச்சியின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்தினார்கள். கல்கி தன்னுடைய பத்திரிகையில் தமிழிசை பற்றி தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார். நாமக்கல் கவிஞர் போன்ற இலக்கியத்துறை சார்ந்தோரும் வலியுறுத்தினர்.

பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் ஆகியோர் புதியதாக பல நல்ல தமிழ் கீர்த்தனைகளை எழுதினர். பாபநாசம் சிவன் எழுதிய சில திரைப் படப் பாடல்களும் தமிழ் இசை நிகழ்ச்சி மேடைகளில் பாடத்தக்க அளவில் தகுதியானவையாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் தமிழிசைக்கு சரியான அளவில் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழிசை சங்கங்கள் வைத்தது. தமிழ் மொழி ஆர்வலர்களும், இசை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தியதால் இன்று கர்நாடக இசை மேடையில் தமிழிசை ஓரளவுக்கு இடம் பெறத் தொடங்கி விட்டது. கர்நாடக இசைத் துறையில் கடந்த பல ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இசைக் கருவிகளில் மாற்றம், ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் மென்மையான செல்வாக்கு, இப்படி எவ்வளவோ மாற்றங்களும் ஏற்படுத்தாத சலசலப்பை சங்கீத உலகில் தமிழ் இசை பற்றிய விவாதம் ஏற்படுத்தி விட்டது.

இதற்கு முக்கியமான காரணம் சங்கீத உலகத்திற்கு அப்பாற்பட்ட சமூக காரணங்கள். அந்த பிரச்சனையில் நுழைவது நம்முடைய நோக்கமல்ல, அதற்கான நேரமும் இல்லை.

மு. கோபாலகிருஷ்ணன்.

Saturday, May 23, 2009

தமிழர் காது எதனால் ஆனது?

தமிழர்களின் காது எதனால் ஆனது என நீங்கள் நினைக்கிறீர்கள்? காது இரும்பால் ஆனதாம். அதனால்தான் தெரியாத மொழிகளில் இவ்வளவு காலம் பாடித் தள்ளிக் கொண்டிருக்கிறார்களாம். தெரிந்த மொழியில் பாட்டு கேட்கிறவர்கள்தான் தோல்செவி படைத்தவர்கள் என்கிறான் பாரதி. இசைக்கு மொழியில்லை என்கிறவர்கள் ஒரு நல்ல புரிந்த மொழியில் பாடல் கேளுங்கள். அப்புறம் நீங்கள் அன்றாடம் கேட்கும் புரியாத மொழிப் பாடலைக் கேளுங்கள். வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றால் மேலே படிக்காதீர்கள்.

அண்மையில் ரிச்மண்டில் சௌம்யா அவர்களின் கச்சேரி நடந்தது. அற்புதமான குரலில் அனைவரையும் மகிழ்வித்த அவரது கச்சேரியில் எனக்கு மிகவும் பிடித்தவை தமிழ்ப் பாடல்கள். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' பாடல் தேவகானமாய் இருந்தது. அர்த்தமும் தெரிந்து இசையும் உயர்வாக இருந்தால் அந்த அனுபவமே வேறு.

இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் தமிழ்ச் சங்கத்தில் தமிழிசை விழா நடத்தினோம். அது என்ன அற்புதமாக அமைந்தது தெரியுமா? நீங்களே இங்கு சென்று பாருங்கள். என் மனதில் இன்னும் நிற்கும் பாடல்களில் சில - வருவாய் வருவாய் கண்ணா, சாந்தி நிலவ வேண்டும், முருகா முருகா... அதுவும் குறிப்பாக சாந்தி நிலவவேண்டும் பாடல். நிகழ்ச்சிக்கு முதல்நாள் ஒரு நூலகத்தில் ஒத்திகை நடந்தது. அந்த ஒத்திகையில் எந்த ஒலிப்பெருக்கியும் இல்லாமல் குழந்தைகள் பாடிய சாந்தி நிலவ வேண்டும் பாடல் தேவகானமாக இருந்தது. கேட்கும் மனதில் எல்லாம் நிஜமாகவே சாந்தி பரவும்விதமான அற்புதம். இங்கு ரிச்மண்ட் வாசிகளுக்கு வருவாய் வருவாய் கண்ணா என்று மனமுருகி அந்தக் குழந்தை பாடுவதை இன்று பார்த்தால் கண்ணீர் வராமல் இருக்க முடியாது. உடல்நலம் குன்றி இருக்கும் அவளை பார்த்துக் கொள்ள கண்டிப்பாக வருவான் கண்ணன். மேலே இருக்கும் சுட்டியில் நீங்கள் அவசியம் கேட்க வேண்டிய இன்னொரு பாடல் காற்றின் மொழி! மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்று வலியுறுத்தும் பாடல் :-) என்னமாய் அனுபவித்து, சந்தோஷமாய் பாடுகிறாள் பாருங்கள்.....

இனிமேல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையேனும் தமிழ்ச் சங்கம் தமிழிசை விழா நடத்தவேண்டும் என்பது என் விருப்பம். பார்ப்போம். தமிழ்ச் சங்கம் மூன்று விழா, ஒரு பிக்னிக்கோடு நிற்கிறதா அல்லது வளர்கிறதா என்று பார்ப்போம் ;-) ;-)

சங்கீத உலகில் எனக்குப் பிடிக்காத மற்றொரு விஷயம் வார்த்தைகளின் இறுதியைக் கொல்வது. கர்நாடக உலகில் பயன்படுத்தும் வார்த்தைகள் - ராகா, தாளா, பாவா எல்லாம் எந்த மொழி? எனக்குத் தெரிந்தவரை - தமிழும், தெலுங்கும், மலையாளமும் ஹிந்தியும் அல்ல. கன்னடத்தில் மட்டும்தான். நம்மவர்களுக்கு கன்னடர்கள் மீது அவ்வளவு பயமரியாதையா என்ன? எனக்கு என்னவோ இது ஆங்கிலப்பைத்தியத்தினால் வந்தது என்று தோன்றுகிறது. ராகா என்று சொல்லிவிட்டால் அது தமிழல்லாத மொழி மாதிரி இருப்பதால் வடக்கிந்தியர்களுக்கும், ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்ற அறியாமையோ?

சென்ற மாதம் இங்கே ஒரு மூன்று உயர்நிலைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அதில் வீட்டில் ஹிந்தி பேசும் பெண் அவளுடை ய பாட்டை அறிவிக்கும்போது அழகாக ராகம் என்று சொன்னாள். அவளுக்கு இருக்கும் மரியாதை நம்மூர் சங்கீதக்காரர்களுக்கு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.

தோல்செவி உடைய மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மொழிப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எட்டுத் திக்கும் சென்று இசைச் செல்வங்கள் கொண்டுவந்து எட்டுத் திக்கு மொழிகளிலேயே பாடுவதுதான் இரும்புச்செவி கொண்டோர் செய்வது. புரிந்த மொழியில் பாடுவது மெல்லிசையைச் சேர்ந்த ரகம் என்றும் பஜனைகள் என்றும் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரிகிறதாம். என்னைக் கேட்டால் ஒரு சில பாடல்கள் தவிர கர்நாடக சங்கீதத்தில் எல்லாமே இறைவழிபாடுதான், பஜனைதான். அதை புரிந்த மொழியில் பாடினால் மோட்சமாவது கிட்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தமிழ் கர்நாடக வித்வானுக்கு நடந்த விழாவில் ஒரு தமிழ் எழுத்தாளர் அந்த வித்வானின் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார். தமிழனின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுக்குமளவு நிலமை இருக்கிறது. அதில் அந்த வித்வான் பேசும்போது ஒரு மலையாளப் பாடகர் ஒரு தமிழ் பாடலை கொலை செய்தார் என்று பேசினார். தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த.... என்று பாடினாராம். கண்ணாடி மாளிகையில் இருந்து கல்விட்ட கதை இது. இந்தப் பாடகரின் மற்ற மொழிப் பாடல்கள் - குறிப்பாக மீரா பஜன் - கேட்டால் அவரது பரம விசிறிகளே பத்து மைல்ஓடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இடையில் எதற்கோ வெளியே சென்று திரும்பும்போது ஒரு பாடகி பாடிக் கொண்டிருந்தார். சம்மா நம்மா கும்மா என்று போய்க்கொண்டிருந்தது பாடல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடா இது என்று என் நண்பனைக் கேட்டேன். அந்த பாடல் எது தெரியுமா? சௌம்யா பாடிய தேவகானம்தான் அது. இசைக்காக வார்த்தைகளை சிதைத்து பாடினால் இப்படித்தான். அதுவே பொருள் தெரிந்தால் அப்படி சிதைக்க மனம் வராது. பொருள் தெரிந்தால், எங்கோ மணம்தான் பறக்கும். வேறு எதுவும் பறக்காது. நீங்கள் அடுத்த முறை எந்தரோ மகானுபாவுலு யாராவது பாடினால் கவனியுங்கள். நிறைய பேர் 'எந்தரோ'வையே ஒரு கை பார்ப்பார்கள். entha ro என்பார்கள் அது போகட்டும். நான் சொல்வது கடைசி லு. வார்த்தைகளை ஒலியில் பொருத்தும்போது லு அடுத்த வரிக்கு தள்ளப்படுகிறது. பொருள் தெரிந்தவர்கள் அதை சேர்த்து சிதைக்காமல் பாடுவார்கள். மற்றவர்கள்

எந்தரோ மஹானுபாவு
லூஊஊ அந்தரிகி

என்று மாற்றி விடுவார்கள்.

இன்னொரு தமிழ்ப்பற்று கொண்ட கூட்டம் இருக்கிறது. ஒரு பாடகி இப்படி பாடினார்...

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்கு ( nambaavaikku) ஷாற்றி நிராடினாள்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் ஷென்னேல் உடுக்கையருகல
பூங்குவலை போதில் பொரிவண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கு இருந்து ஷீற்ற முலை பற்றி வாங்க கடும் நிறைகள்
வண்ணப் பரும் பஷுக்கள் நீங்காத ஷெல்வம் நிரைந்தேலொரெம்பாவாய்......

கல்கியே வந்து யாரும் தமிழில் பாடவேண்டாம் என்று தடையுத்திரவு போடுமளவுக்கு இருக்கிறது டமிலிசை.

ஒரு பாடலுக்கு இசை வடிவம் கொடுக்கும்போது கவனமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உ.வே.சா.வுக்கு ஒரு கிராமக் கூத்தில் நடந்தமாதிரிதான் இருக்கும். ஒரு கிராமத்தில் உ.வே.சா. போகும்போது கூத்து நடந்து கொண்டிருந்ததாம். இவர் போய் உட்காரும்போது பாடகன் இப்படி பாடிக் கொண்டிருந்தானாம்.

மரத்தேப்பூ மரத்தேப்பூ
டிங்கினானே டிங்கினானே

என்ன பாடுகிறான் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்?