Sunday, June 25, 2017

நமக்கு எதுக்கு 'ப்ரச்ன' ? (ஞாயிறு போற்றுதும்)

சில நாட்களுக்கு முன் 'அறிவோம் நம் மொழியை' என்னும் பகுதியில் ஒரு நாளிதழில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து:

"இந்தப் 'ப்ரச்ன'யை எப்படித் தீர்ப்பது?" என்பது தான் அதன் தலைப்பு (https://goo.gl/BdMVjI)

"ப்ரச்ன" எனும் இந்த சமற்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதற்கு முன், அந்தச் சொல் தமிழுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பார்ப்போம்.

----------------------------------
ஒரு மொழியில் ஒவ்வொரு செயலின்/பொருளின் மெல்லிய வேறுபாட்டையும் குறிக்க சொற்கள் இருப்பது அதன் அழகு, சிறப்பு.
சரியான சொற்களைப் பயன்படுத்துவது குழப்பமில்லாமல் செய்தியைத் தெரிவிக்கும். இல்லையா?
இப்போ "பிரச்சினை"க்கு வருவோம். 
எந்த ஒரு எதிர்மறை நிகழ்வைச் சொல்லவும் "பிரச்சினை" என்கிறோம். யோசிச்சு பாருங்க, பொருத்தமான சொற்கள் தமிழில் பல இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாது "பிரச்சினை"யைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

நம்மிடம் ஏற்கனவே இருக்கும் எதிர்மறைச் சொற்கள் சில:
சிக்கல், தகராறு, மனவருத்தம், சண்டை, கோளாறு, பற்றாக்குறை, குறைபாடு, இடைஞ்சல், வம்பு, குழப்பம், குளறுபடி, தவறு, பழுது...
மேலே சொன்ன எல்லாச் சொல்லுக்கும் இப்போது நமக்கு புழக்கத்தில் உள்ளது ஒரே "பிரச்சினை" தான்.
கோபுரத்துக்கெல்லாம் அடி அடின்னு சுண்ணாம்பு அடிச்சு வைக்கிறோமே அது போல. எல்லாமே பிரச்சினை தான். வண்ணப் பூச்சே கிடையாது. வெறும் வெள்ளையடித்தல் மட்டுமே.

"அங்கே ஏதோ பிரச்சினை". அவ்வளவுதான்.
அது சண்டையாகவும் இருக்கலாம், பற்றாக்குறையாகவும் இருக்கலாம், குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம், என்ன வேணா இருக்கலாம். ஆனால் ஒரே "பிரச்சினை" தான். அது என்னன்னு சொல்ல கூடுதல் விளக்கம் தேவைப்படும்.

அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே இதுல உங்களுக்கு என்னங்க பிரச்சினை-ன்னு யாரவது கேட்டால், ​எங்களுக்கு எப்பவுமே பிரச்சினை வேண்டாங்க, இது என் ஆதங்கம்-ன்னு சொல்லலாம். :)

Vocabulary-யை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுவே மொழிக்கும் பேசுபவருக்கும் அழகு & பலம்.

வேறு சில "பிரச்சினை" சொற்களை பட்டியலிடுங்கள்.

Tuesday, June 20, 2017

தாயுமான என் தாய்மாமன் வெ.பாலன்.




பிறந்த நொடி முதல் என்னை தன் மகளாய் பாசத்தை கொட்டி வளர்த்தீர் - எனது வாழ்க்கையை மிக அழகாக செதுக்கியதற்கு கோடி நன்றி!
தங்கை மகளுக்கு இன்னொரு தகப்பனாய் என் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கினீர் - நீர் எமக்கு செய்தவை எண்ணில் அடங்கா!
வாயார 'அம்மா' என்று அழைக்கும் அந்த பாசக் குரலையும், கம்பீர சிரிப்பை கேட்கவும், வாரா வாரம் கிடைக்கும் அந்த அன்பு முத்தமும் இனி நான் அழுது புரண்டாலும் கிட்டாது!
மடிமீது அமர்த்தி காது குத்தியது முதல், என் முதல் வாகன பூஜை வரை அனைத்தும் முன்னின்று செய்தீர்கள்.
என் நலத்தில் என்னைவிட அதிக அக்கறை கொள்வீர் - நீர் எமக்கு என்றுமே கடவுளின் அன்புப் பரிசு!

பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் முதல்நாள் அரிசியில் 'அ' என எழுதி, என் கல்வி வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது தொடங்கி, நான் பல்கலைக்கழக பட்டம் பெறும் வரை எனக்கு தூண்டுகோலாய் விளங்கினீர் - எனது ஒவ்வொரு வெற்றிக்கும் தாங்களே முதன்மை காரணம்.

என் முதல் ஆசானாய், ஆலோசகராய், நண்பராய், நல்ல மனிதராய், எழுத்தாளராய், சிறந்த தலைவராய், சமுதாய நலன்விரும்பியாய் பல பரிணாமங்களில் திகழ்ந்தீர் - உங்களின் மறைவு நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சமூதாயத்திற்கே பேரிழப்பு!

இந்நேரம் சொர்க்கமும் தங்கள் வரவால் மகிழ்ந்திருக்கும்!
தாய் மாமன் எனும் உறவிற்கு தங்களைவிட வேறு எவராலும் பெருமை சேர்த்திருக்க முடியாது!

நீர் எமக்கு செய்த அனைத்திற்கும் நன்றி நவில வார்த்தைகள் போதாது மாமா.
எனது முதல் கவியையும் கண்ணீரையும் சமர்பிக்கின்றேன்!
நீர் எமக்கு தாய் மாமன் மட்டுமல்ல - தாயுமானவர்!

 - பா.பவித்ரா

(மலேசியாவில் பிறந்து வளர்ந்த பவித்ரா, அண்மையில் மறைந்த தாய்மாமனுக்காக எழுதிய தந்தையர் தின கவிதை. புகைப்படமும் அவர்களுடையதுதான்...)

Monday, June 12, 2017

மீனாவுடன் மிக்சர் 30 - தில்லாலங்கிடி மோகனாம்பாள்: ஒரு அலசல்

ரிச்மண்ட் நகருக்கு  எங்க குடும்பம் குடி வந்து இதோட பத்து வருஷம் ஆகப் போகுது.  ஒரு சராசரி NRI தமிழச்சி தன் வாழ்க்கையில் கொட்டற குப்பைக்கு எந்த விதத்துலயும்  குறையாம அதே இத்துப்போன  பக்கெட்ல நானும் கொட்டறேன்னு மிதப்பா நினைச்சிட்டிருந்த  என் வாழ்க்கைல நேத்து ஒரு ஆச்சரிய குறி போடும் புது அனுபவம்.

இது நாள் வரைக்கும் தமிழ்ச்சங்கம் தொகுத்து வழங்கியிருக்கும் பல கலை நிகழ்ச்சிகளை சமோசா டீ சகிதம் பல முறை ரசிச்சிருக்கேன் நான்.   சங்கீதம், நாட்டியம், பட்டிமன்றம் எல்லாம் எங்க ரிச்மண்ட் மக்களுக்கு தண்ணி பட்ட பாடு.  ஒரு சிலருக்கு இளையராஜா  ஒண்ணு விட்ட சித்தப்பா முறைனா பலருக்கு  தியாகராஜ ஸ்வாமிகள் வருஷா வருஷம் பொங்கலிட்டு தீ மிதிக்கும் குலதெய்வம்.  இது குயில் பறக்கும் ஊர் அப்படீன்னு  யாரைக் கேட்டாலும் உங்க தலைலயே நச்சுனு அடிச்சு சொல்லுவாங்க.

சரி பாட்டை விடுங்க. வீட்டுக்கு ஒரு மரம்  வளர்த்து நீங்க நிச்சயம் பாத்திருப்பீங்க.  ஆனா தெருவுக்கு ஒரு பெண் குழந்தையை நாட்டியப் பேரொளியாய் வளர்க்கும் ஊரை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?  பரதம், குச்சிப்புடி,  கோலிவுட், ஹாலிவுட் அப்படீன்னு முழுசா நாங்க நாட்டிய சாஸ்த்திரத்தை  குத்தகைக்கு எடுத்து ரொம்ப நாளாச்சு.  பட்டிமன்றமா? ஹா! நாங்கள் வாய்ச்சொல்லிலும் வீரரடி. வீட்டுக்குள்ளயும் அடிச்சுக்குவோம் அப்புறம் டக்குனு குதிச்சு மேடை ஏறி ஊரறியவும் அடிச்சுக்குவோம்.  கூச்ச நாச்சமெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. சொற்போரில் எங்களை வெல்ல இன்னொரு பாப்பையா பிறந்து தான் வரணும்னு பரவலா ஒரு கருத்து இருப்பது உண்மை.

எதுக்கு இத்தனை பெரிய முகவுரைன்னு குழப்பமா இருக்கா?  ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாம்னு சொன்ன அதே தமிழ் மரபு,  ஒரு பக்கப் பதிவை எழுத முடியாம முழி பிதுங்கி  தவிக்கும் ஒரு அப்பாவி தமிழ் பெண் (நாந்தேன்) நாற்பது வார்த்தையை கூட்டி எழுதினா கோவிச்சுக்கவா போறது?  சரி சரி, நீங்க நெற்றிக்கண்ணை மூடுங்க. விஷயத்துக்கு வந்துட்டேன்.

இந்தியாவிலிருந்து வந்து Y.G. மதுவந்தியின் தலைமையில் நடக்கும் மஹம் கலைக்குழு நேத்து சாயந்திரம் ரிச்மண்ட் இந்துக்  கோவிலில் 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' அப்படீன்னு ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம் போட்டு அசத்தினாங்க.  ரெண்டு மணி நேரம் சிரிப்பலையில் அந்த அரங்கமே ஆட்டம் கண்டு போச்சு.  வாய் விட்டு சிரிப்பது ஒரு வரம்.  ஒரு சில மணி நேரம் எல்லாக் கவலையையும் மறந்து ஒரு ஊரையே சிரிக்க வச்ச புண்ணியம் தில்லாலங்கிடி குழுவினருக்கு தான் சேரும்.

மேடை நாடகம் எப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான கலைன்னு நேத்து வரைக்கும் எனக்கு தெரிஞ்சதில்லை. நடிகர்கள் அவங்க வரிகளை மறந்தா இதுல  take 2 கிடையாது. பார்வையாளர்கள் டீ குடிக்கற ஜோர்ல ஜோக்கை கோட்டை விட்டாங்கன்னா நிறுத்தி அவங்களுக்கு மறுபடியும் எடுத்துச் சொல்ல pause பட்டனும் கிடையாது.  ஒவ்வொரு ஸீனுக்கு நடுவிலும் backdrop மாத்துவதிலிருந்து, லைட்ஸ் சவுண்ட் set பண்ணுவது வரை பல விதத்திலும் கடினமான கலையாக தெரியும் மேடை நாடகத்தை அசால்ட்டாக நேற்று செய்தனர் மஹம் கலைக்குழுவினர்.

சரி இவங்களாவது நாடகம் மேடை ஏத்தறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்கன்னு சொல்லலாம்.  தினந்தோறும் கணினியோட வேலையில் மாரடிக்கும்  சில ரிச்மண்ட் வாசிகளும் இதில் பங்கேற்று மிக அருமையாக நடித்து பார்வையாளர்களை அசத்தியது தான் இன்னும் சிறப்பான அம்சம்.

இதுக்கு முன்னாடி வாயை குவித்து எத்தனையோ முறை விசிலடிக்க பாத்து தோத்து போயிருக்கிற  நான் நேத்து எங்க ஊர் ரிச்மண்ட் மக்களை நாடக மேடையில் பார்த்த சந்தோஷத்துல உணர்ச்சி வசப்பட்டு  ஊதிய வேகத்துல எனக்கு முன்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவரோட அழுந்த வாரிய தலைமுடி கலைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்.  அவர் திரும்பி பார்த்து முறைச்சதும் இனி இப்படி பாசப்பறவையை அடிக்கடி பறக்க விடமாட்டேன்னு அவருக்கு வாக்கு வேற கொடுத்திருக்கேன்.

மஹம் குழுவிற்கும், அவர்களை இங்கு வரவழைத்து 'தில்லாலங்கிடி மோகனாம்பாள்' நாடகத்தை எங்களுக்கு அளித்த ரிச்மண்ட் executive committee குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

- மீனா சங்கரன்

Sunday, June 11, 2017

வல்லினம் @ இருபெயரொட்டுப் பண்புத்தொகை (ஞாயிறு போற்றுதும்)

அடிக்கடி கண்ணில் படும் ஒரு ஒற்றுப் பிழையை குறித்து இன்றைய குறிப்பு.

தமிழில் எங்கு வலி மிகும்/மிகாது என்று வகுக்க விதிகள் இருப்பது தெரியும். அதில் ஒன்று இது.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரண்டு தனிப் பெயர்கள் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைக் குறித்தல் இரு பெயரொட்டு பண்புத்தொகை.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை = இரு பெயர்கள் ஒட்டி வந்து பண்புத்தொகை ஆதல்.
அவ்வளவுதான்.

அப்படி இரண்டு பெயர்ச் சொற்கள்* அடுத்தடுத்து வரும் போது நடுவுல பசை (ஒட்டு/ஒற்று) போட்டுட வேண்டியதுதான்.
*இரண்டாவது சொல் வல்லினத்தில் (க,ச,ட,த,ப,ற) துவங்கினால்.
எ.கா:
தமிழ். சங்கம்.
இரண்டும் தனித்தனி பெயர்ச் சொற்கள். ஒன்றைச் சார்ந்து மற்றோன்று இல்லை. ஆனால் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைச் சொல்லிவிடுகிறது. அந்த சங்கம் கன்னட/தெலுங்கு சங்கமெல்லாம் இல்லை, அது தமிழ் தொடர்பான சங்கம்-ன்னு அதன் பண்பைச் சொல்லிவிடுகிறது.

இப்போ,
என்ன சங்கம்? தமிழ்ச் சங்கம். 

சொற்களை மாற்றிப் போட்டாலும் விதி அதே.
என்ன தமிழ்? சங்கத் தமிழ்.
சங்கத் தமிழ் மட்டுமில்லை, சென்னைத் தமிழுக்கும் அங்ஙனமே.
சென்னை + தமிழ் = சென்னைத் தமிழ்.

மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள:
எப்போதும் பண்பைச் சொல்கையில் அழுத்திச் சொல்லணும். 
 
[தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் பள்ளியில் என் செல்ல குட்டி படிக்குது-ன்னு யாரவது "மேலாக" எழுதினா அவர்களை என்ன செய்யணும்ன்னு யோசிச்சு வையுங்க. செய்திடுவோம். :) ]

மேலும் சில எ.கா:
பட்டு + குட்டி
உயிர் + தோழி/ழன்.
தமிழ் + பள்ளி
 
வேறு சில சொற்களை முயன்று பாருங்கள்.

Sunday, June 04, 2017

ஞாயிறு போற்றுதும் - முயற்சி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த 'முயற்சி' என்ற சொல் தொடர்பாக இன்று ஒரு குறிப்பு.

I am trying என்பதை எப்படிச் சொல்வோம்?
முயல்கிறேன் என்பது சரியான பயன்பாடு. முயற்சிக்கிறேன் என்பது? தப்புதாங்க.

பயிற்சி என்பதை சொல்லிப் பாருங்கள். செய்து கொண்டிருக்கும் பயிற்சியை "பயிற்சி செய்கிறேன்" என்றோ, பயில்கிறேன் என்றோதான் சொல்கிறோம். பயிற்சிக்கிறேன், பயிற்சித்தான் என்றெல்லாம் கொத்து பரோட்டா போடுவதில்லை. ஆனால் பாவம், முயற்சி மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டது.

சரி,
முயற்சிக்கிறேன், முயற்சித்தான்/ள்/ர் எல்லாம் தப்புன்னு ஆகிடுச்சு.
ஆனால், யோசிச்சிச்சு பார்த்தால் இந்த மாதிரி சொற்களை நாம எல்லா நேரங்களிலும் தவறாகப் பயன்படுத்துவதில்லை.
"பண்ணி" போட்டு ஒரு மாதிரி சமாளிச்சுடுறோம்.
முயற்சி பண்ணினேன் / முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் /முயற்சி பண்ணுவேன்.
இது ஒரு மாதிரி தவறில்லாத பயன்பாடு. பண்ணியை தொறத்திட்டு "செய்" என்ற கட்டளைச் சொல்லை பயன்படுத்தினால் இன்னும் கொஞ்சம் சரியாகிடும். முழுமையாக இல்லைன்னாலும் just pass-ஆவது செய்திடும்.
முயற்சி செய்தேன் / முயற்சி செய்கிறேன் / முயற்சி செய்வேன்.
ஏன் just-pass என்றால், முயற்சி என்பது பெயர்ச்சொல். முயல் என்பதே வினைச்சொல். ஆனாலும் "முயற்சி செய்வதில்" இலக்கணப் பிழை இல்லாததால் கருணை-பாஸ்.

எழுதும் போது இப்படிச்
​சரியாக ​
எழுதலாம்:
முயன்றேன் / முயல்கிறேன் / முயல்வேன்

கவனிக்க: பெயர்ச்சொல்லில் காலம் அறிய முடியாது. ஆனால் வினைச் சொல்லில் காலம் அறியலாம். அந்த வினை முற்றிற்றா இல்லையா என்பதை அச்சொல் தெரிவிக்கும். (காலமொடு வரூஉம் வினைச்சொல் - (தொ.கா))

சொற்சிக்கனம் கூடுதல் சலுகை/நன்மை.

"பண்ணி" suffixed சொற்கள் எல்லாம் இப்படி கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவையே.

இப்போ என்னென்ன சொற்களை* இப்படி "பண்ணி" வெச்சிருக்கோம்-ன்னு யோசிச்சு பாருங்க.

* இந்த, "திங்க் பண்ணி", "லேட் பண்ணி" எல்லாம் விட்டுடலாம். அதெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.

Thursday, June 01, 2017

ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு இலக்கணக் குறிப்பு


உள்ளுர்க்காரர் ஒருவர் வாரந்தோறும் ஏதாவது ஒரு சிறு தமிழ் இலக்கணக் குறிப்பினை ஒரு உரையாடல் குழுவிற்காக எழுதி வருகிறார். அதை நம் வலைப் பக்கத்திலும் பதியுங்கள் என்று கேட்டிருக்கிறோம். அடி விழாது என்ற உறுதியின் பேரில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். நாங்க எல்லாரும் ரெம்ம்ம்ப நல்லவிங்க பயப்பட வேண்டாம்-ன்னு சொல்லியிருக்கோம். முடிஞ்ச அளவு வன்முறையை தவிர்ப்போம். என்ன, சரியா? :)

ஞாயிறுதோறும் ஒரு குறிப்பினை பார்ப்பதால் (போற்றுவதால்), இளங்கோ அடிகளிடம் இருந்து "ஞாயிறு போற்றுதும்"-ங்கறதை கடன் வாங்கி அந்தத் தலைப்பில் எழுதுகிறார். அதே தலைப்பில் நம் வலைப் பக்கத்திலும் பதியச் சொல்லலாம். படிக்கிறவங்க என்ன கிழமையில படிச்சாலும், புரிஞ்சா சரிதானே?