Sunday, November 30, 2014

நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு பகுதி 2

சென்ற செப்டெம்பர் மாதம் 27 ம் தேதி பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பற்றி காரசாரமான விவாதங்களும், பரபரப்பான சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன. திரும்பவும் தொடர்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.
      ஆனால் எந்த பின்னணியில் இந்த தீர்ப்பு வந்தது என்பதை கவனத்தில் கொண்டால்தான், படித்த மக்கள்,நாட்டின் பொதுவாழ்வு, மற்றும் நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பின் பாதுகாப்பு பற்றி அக்கறை கொண்டவர்கள் அறிந்து அதை கவனத்தில் கொண்டால்தான் நாட்டுக்கு நல்லது. அதனால் இந்த வழக்கு தொடர்பான பல ருசிகர சம்பவங்களை, தகவல்களை காலம் கடந்தாவது எழுத வேண்டியது அவசியமாகிவிட்டது.
 இந்த வழக்கு 1996 முதல் தொடங்கி 18 ஆண்டுகள் நடைபெற்றது. 200 முறை ஒத்திவைக்கப்பட்டது. 130 முறை குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் ) நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பல மனுக்கள் கொடுத்தார்கள். அந்த மனுக்கள்  மீது கொடுத்த தீர்ப்பை எதிர்த்து பலமுறை உயர்நீதி மன்றத்துக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் போனார்கள்.
 பலநாட்களில் விசாரணைக்கு வராமல் வாய்தா கேட்டார்கள் சாதாரணமாக மற்ற வழக்குகளில் ஒப்புக் கொள்ளப்படாத காரணங்களூக்காக வழக்கை ஒத்தி வைக்கக் கோரி மனு கொடுத்தார்கள். ஆஙகிலம் தெரியாது ஆகையால் சில ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்கள். தமிழில் மொழி பெயர்க்க வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதில் இடஒதுக்கீடுக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்று புகார் கூறி ஆட்சேபனை மனு கொடுத்தார்கள்.
நீதிமன்றத்துக்கு வராமல் வாய்தாவும் கேட்காமல் பல நாட்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு நீதிபதி அழாத குறையாக சொல்லியிருக்கிறார். இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாத காலமாக எந்த விசாரணையும் நடத்த முடியவில்லை. நான் கடந்த ஆறு மாத காலமாக நீதி மன்றத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.தனிச் சிறையில் தண்டனை அனுபவிப்பது போல் உணருகிறேன் என்று கூறி அந்த நீதிபதி புலம்பியிருக்கிறார்.
   பத்து நீதிபதிகள் மாறியிருக்கிறார்கள். வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. 64 சாட்சிகள் முன்னால் சொன்ன விவரங்களை மாற்றி பேசினார்கள். அவர்களை எந்த குறுக்கு விசாரணையும் இல்லாமல் அவர்கள் கூறியது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்கப்பட்டார்கள் ஜெயலலிதா சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் சிலர் அரசாங்க வழக்கறி ஞர்களாக நியமிக்கப்பட்டனர்  சிலருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தது.
. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்ய்பட்டார்.நீதிபதி வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிப்போனார். கஞ்சா கடத்தல் வழக்கு கைவிடப்பட்டது.
   கர்நாடக அரசாங்கம் நியமித்த அரசாங்க வழக்கறிஞர் ஆச்சார்யா மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து அவரை வழக்கை விட்டுவிலகச் செய்ய முயற்சி நடந்தது. மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த சதானந்த கொடாவும் ஆச்சர்யாவை பதவியிலிருந்து மாற்ற முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. இனம் இனத்தோடு சேரும் என்ற பழமொழி இங்கே நினைவுக்கு வரும்.
கடைசியாக வழக்கறிஞர் ஆச்சார்யாவே சலித்துப்போய் பதவியை ராஜினாமா செய்தார்.
  இந்த அனுபவத்தைப்பற்றி ஆச்சார்யா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் அந்த புத்தகத்தில் 15 பக்கங்களீல் பல விவரங்களை கூறியிருக்கிறார், ஜெயலலிதா வழக்கைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம் அதற்கு வாய்தா புராணம் என்று பெயர் வைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்
   சொத்துக்கள் வாங்கிக் குவித்த விவரங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை
32 பினாமிக் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த 32 கம்பெனிகளீல் 9 கம்பெனிகள் ஒரே நாளில் பதிவு செய்யபட்டிருக்கிறது
இந்த நிறுவனங்கள் எந்த பொருளையும் உற்பத்தி செய்யவில்லை.எந்த பொருளையும் வாங்கவில்லை, விற்கவில்லை. ஆனால் அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் அவ்வப்போது பணம் செலுத்தப்பட்டது.ஜெயலலிதா பெயரில் ஏற்கெனவே இருந்த 12 வங்கிக் கணக்குகளோடு இந்த 32 நிறுவனங்களும் 52 கணக்குகளை தொடங்கின.
   இந்த நிறுவனங்கள் பெயரிலும் தனிப்பட்ட நபர்கள் (ஜெயலலிதா மற்ற மூவர் ) பெயரிலும் வங்கியில் பணம் செலுத்தப்பட்டது.29-11-1994 முதல்-     12-1-1995 முடிய 35 நாட்களில் 1 கோடி 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டி ருக்கிறது.
இந்த நிறுவனங்களைப் பதிவு செய்த அதிகாரி தன்னுடைய மேலதிகாரி உத்திரவின் பேரில் தன் வேலையைச் செய்ததாகக் கூறியிருக்கிறார் அவர்.  குறிப்பிட்ட அந்த மேலதிகாரி தற்போது பதவி உயர்வு பெற்று மாநில தேர்தல் ஆணையராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பதிவு செய்யப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் இந்த 4 பேர் மட்டுமே பங்குதாரர்கள்.தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடைய பங்குத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் இல்லை.
 இந்த நிறுவனங்கள் தொடங்கிய காலத்திலிருந்து எந்த வருமான வரிக் கணக்கையும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததில்லை. வருமானவரி கட்டியதில்லை.
 இந்த நிறுவனங்கள் பெயரிலும் நான்கு தனிநபர்கள் பெயரிலும் சென்னை நகரத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் 300000 (மூன்று லட்சம் )சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள்,வணிக  நிறுவனங்கள் நிலம் வாங்கப்பட்டது
மொத்தமாக மாநிலத்தின் பல பகுதிகளில் 3000 (மூவாயிரம் ) ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது, வாங்கும் போது எந்த சரியான வழிமுறைகளும்  அனுசரிக்கப்படவில்லை
   இந்த சொத்துக்களை பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் போயஸ் கார்டன் வீட்டுக்குப்போய் பதிவு செய்தார்.  ஸ்டாம்ப் சட்ட விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. வாங்குபவர்கள் குறிப்பிட்ட தொகைக்கே பதிவு செய்யப்பட்டது. 6 பத்திரங்களில் சொத்து வாங்கியவர் பெயர் கூட எழுதப்படவில்லை.  .
  900 ஏக்கர் கொண்ட கொடநாடு எஸ்டேட் 7.6 கோடிரூபாய்க்கு (ஏழு கோடி 60 லட்சம் )வாங்கப்பட்டதாக பத்திரம் பதிவாகியிருக்கிறது.
   கல்யாண வைபோகமே
தத்துப்பிள்ளை சுதாகரன் திருமணத்துக்கு ஏற்க்குறைய 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா வாக்குமூலத்தில் பெண் வீட்டார்தான் எல்லா செலவுகளையும் செய்ததாகக் கூறியிருக்கிறார்.
   ஆனால் பல செலவினங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்ட காசோலைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும் மைதானத்தில் நடைபெற்ற அந்த திருமணத்துக்காக பெரியதும் மிகப் பெரியதுமான 5 பந்தல்கள் போடப்பட்டன. மிகப் பெரிய பந்தலின் பரப்பளவு மட்டும் 60000 சதுர அடி (அறுபதினாயிரம்) அடுத்த பந்தல்கள் 35000, 27000 இப்படி யாக கடைசி பந்தலின் பரப்பளவு 12000 சதுர அடி.நீர் கொண்டு செல்ல 10.கிலோவாட்ஜெனெரேட்டர்கள் பல பயன்படுத்தப்பட்டன. 1  கிலோமீட்டர் பாதைக்கு சாலை அமைக்கப்பட்டது. அரசு யந்திரம் பயன்படுத்தப்பட்டது. பல அரசாங்க ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்தார்கள்.
  நமது எம்.ஜி.ஆர்.பத்திரிகை சந்தாதாரர்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் 2 ஆண்டுகளூக்குப் பிறகு தொலைந்ததாகச் சொல்லப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். எல்லா ஆவணங்களும் பழையது என்று தோற்றம் கொடுப்பதற்காக புகையில் காட்டியும் கசங்கியும் இருந்த நிலையில் கொடுத்தார்கள்.ஆனால் அந்த ஆவணங்களில் காணப்பட்ட கையெழுத்துக்கள் பளிச்சென்று புதியதாக தோற்றம் கொடுத்தன. மேலோட்டமாகப் பார்க்கும்போதே செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று தெரிந்துவிடும்.
  சிறுபிள்ளை கூட ஏமாறாத அளவுக்கு முரண்பாடாக இருந்த அந்த ஆவனங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களை முட்டாளாக்கும் முயற்சி நடந்தேறியிருக்கிறது.
   இவ்வளவு விவரங்களும் 1300 பக்க தீர்ப்பில் உள்ள செய்திகள். கற்பனை அல்ல. காழ்ப்பு உணர்ச்சியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல
 ஜெயலலிதா வீட்டிலிருந்து 23 கிலோ தங்கம்,இதர வெள்ளி, சாமான்கள் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.இதை தவிர 42 நகைப் பெட்டிகளீல்  140 வகையான நகைகளூம் பல கைக்கடியாரங்களூம் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இந்த நகைகள் வாங்கிய நேரம் காலம் செலவு செய்த தொகை அதற்கான வருவாய் பற்றி திருப்திகரமான பதில் கொடுக்க முடியவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு இல்லை, தெரியாது. நினைவு இல்லை என்ற  பதில்தான் வந்தது
    தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி திரும்பவும் வந்த பிறகு விசாரணை இங்கே சரியாக நடக்கவில்லை அரசாங்க வழக்கறிஞர்கள் குற்றவாளிகளோடு ஒத்துழைத்தார்கள் என்ற புகாரின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது. பல நிர்ப்பந்தங்களூக்கு இடையில் வழக்கு தொடர்ந்து நடந்து ஒரு வகையாக முடிவுக்கு வந்தது. உச்சநீதி மன்ற உத்திரவின்படி கர்நாடக அரசாங்கம் வழக்கை நடத்த தேவையான சகல உதவிகளையும் செய்தது
  அந்த பாவத்துக்காக இன்றைய கர்நாடக அரசாங்கத்தின் மீது பழி கூறி போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை செய்வது, தீர்ப்பு எழுதிய நீதிபதியை கொச்சைப்படுத்துவதெல்லாம் நடந்தேறியிருக்கிறது.அதோடு விடவில்லை.ஒரு போஸ்டரில் தமிழர்கள் படையெடுத்துவருவார்கள்,சிறையிலிருந்து அம்மாவை மீட்டு வருவார்கள் என்ற வாசகத்தை படிப்பதற்கு வேதனையாக இருக்கிறது. சிரிப்பும் வருகிற்து தேச ஒற்றுமையைச் சீர் குலைக்கும் சக்திகளை மக்கள் சரியாக இனம் கண்டு கொள்ள வேண்டும் .  இவ்வளவுக்கும் பிறகு  அம்மாவுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று யாராவது பூசி மெழுகி பேசி  பிரச்னையை திசை திருப்ப முயற்சித்தால் அவர்களுக்கு  ஒரே பதில்தான் சொல்லியாக வேண்டும். ஹிட்லர் கூட பெரும்பான்மை மக்கள் ஆதரவோடுதான் பதவியில் அமர்ந்தான்.  இதுதான் பதில்.
                                       - மு.கோபாலகிருஷ்ணன்.

Sunday, November 23, 2014

நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு - விளக்கம்

என்னுடைய செய்திக்கட்டுரைக்கு மறுமொழியாக ஒரு மறுப்புக் கட்டுரையே எழுதித் தள்ளிவிட்டார் நண்பர் முரளி. சோ பற்றிய என்னுடைய கருத்துதான் அவரை இப்படி வேகமாக எழுத வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
    நான் சொன்ன செய்தி தேர்தல் நேரத்தில் பல கட்சியினரால் பேசப்பட்டசெய்திதான். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி கருத்தரங்கத்தில்  கூட ஒரு பேச்சாளர் சோ பற்றிய இந்த செய்தியைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் எந்த ஊடகத்தின் வழி இந்த செய்தியை மறுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நான் துக்ளக் பத்திரிகையின் வாசகன் அல்ல…நண்பர் முரளி எழுதிய செய்தி உண்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
 அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மட்டுமன்றி எல்லா மாநிலங்களிலும் பிற மாநிலத்தினர் மீது வெறுப்பு இருப்பதாக அவர் கூறியிருப்பது சரியென்று எனக்குத் தோன்றவில்லை. இரு மாநிலத்தையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை கிளம்பினால், அதையொட்டி சில நாட்கள் கிளர்ச்சிகள் இருக்கலாம். அடுத்த மாநிலத்தவரைப் பற்றி அவதூறாகப் பேசலாம். ஆனால் அது நிரந்தரமான கருத்தாக சதாரண மக்களீடம் நிலை பெறுவதில்லை.
சமீபத்திய ஆந்திரா தெலிங்கானா பிரிவினைக்குப் பிறகு அரசியல்வாதிகள் பேச்சு இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையை நினைவுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலை சமீப காலத்தில் எல்லா மாநிலங்களூக்கும் பரவி வருகிறது என்றுதான் குறிப்பிட்டேன்.
.   தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்தான் மொழி அடிப்படையில் அரசியல் நடத்துகிறார்கள். ஒரு வகையான தமிழ்ப் பேரின வாதத்தை தூண்டி விட்டு அரசியலில் குளிர் காய்ந்து  கொண்டிருக்கிறார்கள். ஈழப்பிரச்னை, காவிரிப் பிரச்னை, நதிநீர்ப் பங்கிட்டுப் பிரச்னை இவையெல்லாம் இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகிறது. இது திராவிட இயக்கம் வளர்த்து விட்ட வியாதி.
 கர்நாடகாவை பொறுத்தவரையில் அந்தக் குற்றச்சாட்டைச் சொல்ல முடியாது. மற்ற மொழியினரை கீழானவராக நினைக்கும் பலவீனம் அங்கே இல்லை. பெங்களுரு நகரத்தில் 30 சதவிகித மக்கள் கன்னடம் அல்லாத மொழி பேசும் மக்கள் தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழி பேசுவோர் என்பது உண்மை. என்னுடைய உத்தியோக வாழ்க்கையில் 14 ஆண்டு காலம் கர்நாடகாவில் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். இந்த மாநிலத்திற்கு அந்நியமானவன் என்று நான் நினைக்கும்படி எந்த கன்னட மொழிக்காரனும் என்னிடம் நடந்து கொள்ளவில்லை. அந்த வாழ்க்கையை நினைவில் கொள்ளூம் வகையில் என்னுடைய வீட்டுக்கு ஹுப்ளீ ஹவுஸ்  (Hubli House ) என்று பெயர் வைத்தேன். ஆகையால் இது தொடர்பான முரளீயின் கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். அலைபோல எழுந்து ஓய்ந்துவிடும் அரசியல் சம்பவங்கள் ஏற்படுத்தும் தற்காலிகமான நிலையையும் அதையொட்டிய பேச்சுக்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம்
 பிரச்னையை திசை திருப்பும் வகையில் பதில் அளித்தவர்களைப் பற்றித்தான் நான் கேலி செய்திருக்கிறேன். நடுநிலையாகப் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு தன்னுடைய அரசியல் சார்பை நேரடியாகச் சொல்ல வெட்கப்படுபவர்கள் மீது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  வழக்கு தீர்ப்பு பற்றி என்னுடைய கட்டுரை பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. முரளியும் உடனடியாக மனமுவந்து பாராட்டியிருக்கிறார். நாகுவுக்கு  நன்றி. பட்டுக்கோட்டையார் பாடலை சரியான நேரத்தில் பயன்படுத்தியிருக்கிறார். வேதாந்திக்கும் நன்றி.
  நேரம் கிடைத்தால் இந்த வழக்கு பற்றி பல சுவாரசியமான தகவல்கள் தொடரும் அரசியல்வாதிகள் வழக்கு என்றால் இந்த நாட்டில் நீதிமன்றங்களும் நீதிபதிகளூம் படும் பாட்டை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
                                         - மு.கோபாலகிருஷ்ணன்.

Tuesday, November 18, 2014

செல்போன் கிறள்...

மின்னஞ்சலில் வந்தது.... செல் டவர்ல ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

குங்குமம்' இதழில் ஆல்தோட்ட பூபதி புனைந்துள்ள 'கிறள்' கள் இதோ:

செல்போனில் சூப்பெர்போன் ஸ்மார்ட்போன், அப்போன் 
செல்போனில் எல்லாம் தலை 
 
தந்தை மகற்காற்றும் நன்றி சாம்சங்கில் 
ஸ்மார்ட் போன் தந்துவிடல் 
 
மகன் தந்தைக்காற்றும் உதவி அப்பாமுன் 
போனை நோண்டாதிருக்கும் செயல் 
 
2G யினால் ஸ்லோவாகும் மொபைல்டேட்டா ஆகாதே 
3G யினால் போட்ட டேட்டா 
 
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே 
இடுக்கண் களைவதாம் சார்ஜர் 
 
பட்டனைத் தடவும் மணற்கேணி மாந்தர்க்கு  
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு 
 
முகநக நட்பது நட்பன்று வாட்ஸப்பில் 
அகநக நட்பது நட்பு 
 
மிஸ்ட்கால் செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
கால்செய்து பேசிவிடல் 
 
ரேட்கட்டரோடு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
 பில் கட்டியே சாவார் 
 
8மெகாபிக்சல் கேமெராவோடு வாங்குக அ.:திலார் 
வாங்குதலின் வாங்காமை நன்று 
 
ஆப்பிள் இனிது ஐபோன் இனிது என்பதம் மக்கள் 
ஆன்ட்ராய்ட் புகழ் கேளாதவர் 
 
என்பிலதனை வெயில்போலக்காயுமே 
சிக்னல் இல்லதனை நெட்வொர்க் 
 
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்பாட்டெரி 
fullcharge எனக்கேட்ட மொபைல் 
 
வாட்ஸப்நாடி வைபர் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல் 
 
wireநீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் சார்ஜ் இல்லாவிடில் 
 
சிக்னலுக்கும் உண்டோ அடைக்குந்தாழ் நாட் ரீச்சபில் 
புன் கணீர் பூசல் தரும் 
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
மிஸ்ட்கால் மறந்த மகற்கு 
 
கீபெட்லாக் போட்டவர் தமக்குரியர் அன்லாக்குடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, November 16, 2014

நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு

சென்ற செப்டெம்பர் மாதக் கடைசியில் கர்நாடக நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பால் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவி இழந்தார். அதையொட்டி நடந்த அரசியல் சம்பவங்கள் இதர கலவரங்கள் பற்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அதிகம் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.தாங்கள் பிறந்த நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பொது வாழ்வு எப்படி சீரழிந்து இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த செய்திக் கட்டுரை அனுப்பப்டுகிறது.முடிந்தவரை சுருக்கமாக எழுதிய பிறகு சில தயக்கத்துடன் அனுப்புவதால் சற்று காலதாமதமாகிவிட்டது.தாமதம் செய்தியின் சுவையைக் குறைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
சமீபத்தில் தொலைக்காட்சிச் செய்தியில் தமிழ்நாட்டு மந்திரி.சபைக் கூட்டத்தைக் காண்பித்தார்கள். நான் வாய் விட்டுச் சிரித்தேன் காரணம் இதுதான். மந்திரிகளில் பாதிப்பேர் மொட்டை அடித்திருந்தார்கள் மற்ற பாதிப்பேர் முடி வளர்த்திருந்தார்கள். இதற்கான காரணம் சமீபத்திய அரசியல் நிலைதான்,
  தமிழக முன்னாள் முதல்வர்,தற்போதைய மக்கள் முதல்வர் சென்ற செப்டம்பர் மாதம் 27,ம்தேதி 4 ஆண்டு தண்டனை பெற்றவுடன் தமிழ்நாடே குதித்து (கொதித்து) எழுந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் பிரார்த்தனை. அந்த பிரார்த்தனை நிறைவேற பாதி மந்திரிகள் கோயிலுக்குப் போய் மொட்டையடித்து  முடி செலுத்திவிட்டார்கள். மீதமுள்ள பாதி பேர் வருகின்ற சில நாட்களில் நிறைவேற்றுவார்கள்.
  எப்படியோ எல்லாக் கடவுள்களையும் அழைத்து கூக்குரல் போட்டு அம்மாவுக்கு விடுதலை வாங்கியாகிவிட்டது. (ஜாமீனில்தான்)
மக்கள் கூட்டம் கூட்டமாக கால்நடையாக (காலால் நடந்து) சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் போய் அம்மன் சந்நிதானத்தில் உருண்டு மண்சோறு தின்று, அம்மாவின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்ததைப் பார்த்தால் யாரும் நெஞ்சு உருகாமல் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்க அம்மன் மனசு என்ன கல்லா? டெல்லி கோர்ட் வரை சென்று விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டாள் அம்மன். (திரும்பவும் ஜாமீனில்தான் என்று
எழுதித்தான் ஆகவேண்டும்)
பாமர மக்கள்,அடித்தட்டு மக்கள் பெண்கள் கூ.ட்டம் கூட்டமாக தெருவில் நின்று கதறி அழ,வேறு சில தொண்டர்கள் தெருவில் உள்ள கடைகளைச் சூறையாடி தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். வேறு சிலர் வழியில் வரும் லாரி, பேருந்து, கார்கள் இப்படி எல்லா வாகனங்களையும் அடித்து நொறுக்கி தங்கள் அம்மா விசுவாசத்தைக் காட்டினார்கள். சென்னை நகரத்தில் மட்டும் சிறியதும் பெரியதுமான 15 உடுப்பி ஹோட்டல்கள் சூறையாடபட்டன.
  கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரர்த்தனை.அன்னை மேரியும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவும் மனம் இறங்கி அம்மாவின் விடுதலைக்கு அருள் புரிய வேண்டி பாதிரிமார்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள்.
    அல்லாவையும் விட்டு வைக்கவில்லை. எல்லா மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை செய்து முல்லாக்கள் அம்மா விடுதலை கோரி  அல்லாவிடம் மனுப் போட்டார்கள்.
   ஸ்ரீரங்கத்தில் (அம்மா தொகுதியாயிற்றே) ஏகப்பட்ட அமர்க்களம். எல்லா சாஸ்திர விற்பன்னர்களூம் கூடி ஸத்ரு ஸம்ஹார ஹோமம் செய்தார்கள். லிட்டர் லிட்டராக பாலும் நெய்யும் தேனும் ஊற்றி ஹோமம் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த ஹோமம் பலன் கொடுக்கத் தொடங்கினால் அம்மாவின் எல்லா எதிரிகளும் சாம்பலாகிப் போய்விடுவார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்
  இப்பொழுது அம்மாவின் விரோதிகள் சோனியா காந்தி, கர்நாடக        முதல் அமைச்சர் சித்தராமைய்யா, அம்மா வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா - இந்த மூன்று பேர்தான். இவர்களுடைய கூட்டுச் சதியால்தான் அம்மா உள்ளே போனார் என்று மக்கள் சொல்கிறார்கள். இந்த மூன்று பேர் ஆட்டமும் சீக்கிரமே குளோஸ்தான் என்கிறார் .தி.மு. தொண்டர் ஒருவர். சென்னை நகரத் தெருக்களில்  விதவிதமான வால்போஸ்டர்களைப் பார்க்கலாம். அம்மாவின் வழக்கில் தீர்ப்புக்குப் பின் பெரிய அரசியல் சதி.காவிரி பிரச்னையில் அம்மா உச்சநீதிமன்றம் வரை போய் விடாப் பிடியாகப் போராடி நியாயம் பெற்றார். அதனால் கர்நாடகா அரசியல் கட்சி (ஆளும் கட்சி) செய்த சதிதான் இந்த தீர்ப்பு என்ற பொருளில் பல போஸ்டர்கள் சென்னை நகரத் தெருக்களை அலங்காரம் செய்கின்/றன. இந்த போஸ்டர்களில் முக்கியமாக ஒரு போஸ்டரைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.
       ஒரு குழந்தை கதறி அழுவது போல சித்திரம். அம்மா வேணும் அம்மா வேணும்,காவிரியை நீயே எடுத்துக்கோ, அம்மாவை கொடு இதுதான் அந்த போஸ்டரில் உள்ள வாசகம்.
  இந்த போஸ்டருக்காகவே அம்மாவை விடுதலை செய்யலாம் என்கிறார்கள்.  இந்த போஸ்டரைத் தயாரித்தவரின் கற்பனையை நிச்சயமாகப் பாராட்டத்தான் வேண்டும். சென்னை நகர மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்த போஸ்டர் இதுதான். சில தினசரிகள் கூட இந்த  போஸ்டரைப் பற்றி குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தன.
   ஏறக்குறைய 220 .தி.மு. தொண்டர்கள் இறந்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. அந்த சில நாட்களில் மாரடைப்பால் இறந்தவர்கள், அதிக குடிபோதையில் இறந்தவர்கள், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் இப்படி பல பேர். இவர்களெல்லாம் அம்மாவுக்குக் கிடைத்த தண்டனை பற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தார்கள் என்று பேச்சு.
  இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் கொடுத்ததாக செய்தித்தாளில் செய்தி. தொலைக் காட்சியில் குமுறிக் குமுறி அழும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் காட்சியும் தொடர்ந்து ஒளி பரப்பப் படுகிறது.
  ஆனால் வேறொரு பணப்பட்டுவாடா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படவில்லை என்கிறார்கள் மற்ற கட்சிக்காரர்கள். அதாவது மொட்டை போட்டுக் கொண்டவர்களூக்கு தலா 500 ருபாய். பாதயாத்திரை போனவர்களுக்கு தலா 500 ரூபாய். உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு
தலா 1000 ரூபாய். ஹோமம் நடத்தியவர்களூக்கு 5000 ரூபாய் மற்றும் செலவுத் தொகை இப்படியாக அவரவர்கள் உழைப்புக்குத் தக்கபடி செய்யப்பட்ட பணப்பட்டுவாடா தொலைக்காட்சிச் செய்தியில் இடம் பெறவில்லையாம்.
  அந்த ஒரு மாதத்தில் காவல்துறையினர் படாதபாடு பட்டார்கள்  கல்லெறிந்து கண்டதையெல்லாம் உடைத்து, வாகனங்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் தொண்டர்களை, கையில் உள்ள தடியால் அடித்து விரட்ட முடியாமல் அண்ணே, கொஞசம் நகருங்க, அண்ணே, சும்மா போங்க, அண்ணே என்று காவல்துறையினர் கெஞ்சிய காட்சி பார்ப்பவர்களுக்கு  நல்ல வேடிக்கைதான். ஆளும் கட்சித் தொண்டர்கள், பல கவுன்சிலர்கள், வட்டங்கள், மாவட்டங்கள் மீது தடி பட்டுவிட்டால் ஒரு வாரத்தில் தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றல் கிடைக்குமே,  நாம ஏன் வம்பை விலைக்கு வாங்க வேண்டும்?
  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்பொழுது கர்நாடகா ஒரு எதிரி நாடு. 20 நாட்களுக்கு மேல் கர்நாடக அரசுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கர்நாடகா ரிஜிஸ்டிரேஷன் கொண்ட தனியார் கார்கள், டிரக்குகள் இதர மோட்டார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களூக்கு அடி, உதை, டிரக்குகளில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன
   அண்டை மாநிலங்களை எதிரி நாடாக சித்தரித்து அரசியல் நடத்துவது தமிழ்நாட்டில் ரொம்ப நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது அந்த அரசியலின் கோர வடிவத்தை இப்பொழுது பார்க்க முடிந்தது. டெல்லி உச்சநீதி மன்றம் இது குறித்து கவலை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது
   இந்த வியாதி மற்ற மாநிலங்களூக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ போகட்டும்.இப்பொழுது அம்மா பற்றித்தான் தமிழ்நாட்டு மக்களுக்குக் கவலை….
    அம்மா வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பற்றி அரசியல் பிரமுகர்கள் ,தலைவர்கள்,பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக் கிறார்கள். 18 ஆண்டு காலம், 200க்கு மேற்பட்ட ஒத்திவைப்புகள் கணக்கில்லாத இழுத்தடிப்புகள், பல பயமுறுத்தல்கள், சாட்சிகள் மரணம் நீதிபதிகள் மாற்றம் இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த வழக்கு ஒரு வகையாக முடிவுக்கு வந்தது பற்றி திருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
  புரட்சிக் கலஞர் விஜயகாந்த்கூட (தே.மு.தி..தலைவர்) இப்பொழுதெல்லாம் புத்திசாலித்தனமாகப் பேசத் தொடங்கிவிட்டார். அவர் சொன்ன ஒரே வாக்கியம் இதுதான், உப்பைத் தின்னவன் தண்ணீ குடித்துத்தான் ஆகவேண்டும்.   .
   எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையாக பதில் கொடுத்து சமாளிக்கும் சாமர்த்தியசாலியான சோ ராமசாமி (துக்ளக் ஆசிரியர்) பத்திரிகை நிருபர்களின் கேள்விக்கு சொன்ன பதிலில் நகைச்சுவையைத் தேடித்தான் பார்க்க வேண்டும்
  சோ சொன்ன பதில் இதுதான் “.ஆனால் அம்மாவுக்கு மக்கள் ஆதரவு நிறைய இருக்கிறதுஎன்பதுதான்.
  இந்த பதிலில் இருக்கும் நகைச்சுவை அவ்வளவு சுலபமாக எல்லோருக்கும் தெரியாது. அம்மாவோடு தண்டனை பெற்ற தோழி சசிகலாவின் 9 கமபெனிகளுக்கு சோ ராமசாமி டைரக்டராக இருக்கும் உண்மை தெரிந்தவர்கள் மட்டும் நமுட்டுச் சிரிப்பு சிரித்திருப்பார்கள்
   பாரதி கவிதைகளில் எத்தனையோ வரிகள் வைரம் போன்றவை மகாவாக்கியம் என்று சில சொல்லாடல்களைக் குறிப்பிடுவது உண்டு. அத்தகைய மணியான வரிகள் பாரதியார் பாடல்களில் நிறையவே உண்டு
  அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்  அச்சமில்லை
   அச்சமென்பதில்லையே என்று தொடரும் வரிகளை உதாரணமாகச் சொல்லலாம் நடைபெற்ற அமர்க்களத்தில் பாரதியார் பாடலில் ஒரு வரியை அதிகமாகவே பயன்படுத்தினார்கள். எனக்கு பாரதியார் மீது கோபம் கோபமாய் வந்தது.இந்த மனுஷன் இப்படியெல்லாம் பாடி வைத்து விட்டுப் போய்விட்டாரே என்று சில சமயம் சலித்துக் கொண்டேன்.அப்படி என்னை நினைக்கச் செய்த பாரதி பாடல் வரிகள் போஸ்டர்களில் அதிகமாகப் பயன்படுத்திய வரிகள் இதுதான்
தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும்
.தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதுதான்.
சில நாட்களூக்குப் பிறகு என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். தர்மம் எது என்பதிலேயே குழம்பிப் போனவர்கள், தெளிவு இல்லாதவர்கள் தவறான காரியங்களுக்கு பாரதியார் பாடல்களைப் பயன்படுத்தினால் அவர் என்ன செய்வார் பாவம், என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். திரும்பவும் ஒரு பாரதியார் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. என்னை அறியாமல் முணுமுணுத்தேன்.
  நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
-    மு.கோபாலகிருஷ்ணன்