Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Saturday, August 27, 2011

ரிச்மண்ட் மகாத்மியம் - 1

ரிச்மண்டா? எங்கேயிருக்கிறது அது??

தொலைபேசியில் நடந்த வேலைக்கான தேர்வில் நான் கேட்ட முதல் கேள்வி. அதுவும் சற்று வடக்கே மேரிலண்ட் மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு... அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு சிரிப்பு.

மேரிலண்டில் இருந்து தெற்கே எங்காவது போயிருக்கிறாயா?
போயிருக்கிறேனே. வட கரோலைனா சாபல் ஹில்லுக்கு.
அப்படியானால் நீ ரிச்மண்ட் வழியாகத்தான் போயிருப்பாய்.
மெய்யாலுமா?

அதுதான் ரிச்மண்ட், வர்ஜினியா குறித்து நான் முதலில் கேள்விப்பட்ட விதம். ரிச்மண்டில் இருக்கிறேன்  என்று சொன்னவுடன் மற்றவர்கள் கேட்டவை:

"அப்படியா. மைக்ரோசாப்டிலா வேலை உனக்கு".
"அது ரெட்மண்ட்யா, ரிச்மண்ட் இல்லை"

கொஞ்சம் விவரம் தெரிந்த கலிபோர்னியா வளைகுடா மக்கள்:
"பரவாயில்லையே, இங்க ஈஸ்ட் பே-ல தான் இருக்கியா இப்போ"
"இது ரிச்மண்ட், வர்ஜினியாப்பா, ரிச்மண்ட கலிபோர்னியா இல்லை"

ரிச்மண்ட்,வர்ஜினியா!

இந்த ஊரிலிருக்கும் இந்தியர்கள் தவிர மற்ற இந்தியர்களுக்கு தெரியாத ஊர். ஜனத்தொகையிலோ, நிலப்பரப்பிலோ அமெரிக்க பெரிய நகரங்கள் பட்டியலில் வராத ஊர்.  வேறு ஊரிலிருக்கும் நண்பர்களும், சுற்றமும் ஊரைச் சுற்றிப் பார்க்க வராத ஊர். வந்தால் எங்களைப் பார்க்கத்தான் வரவேண்டும். ஆனால் அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெரும் பங்கு வகித்திருக்கின்றன ரிச்மண்டும் அருகில் இருக்கும் இடங்களும்.

நான் ரிச்மண்ட் பற்றி ஒன்றும் கேள்விப்படாமல், எந்த மடமும் சொந்த மடம் என்று வாழ்ந்த நாட்களில் இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். வந்த சில நாட்களில் அலுவலகத்தில் சக ஊழியனுடன் பேச்சு இப்படி போனது.

என்னய்யா, இந்த ஊர்ல என்ன ஃபேமஸ்?

என்ன அப்படி கேட்டு விட்டாய்? இரண்டு போர்களிலும் ரிச்மண்ட் எரிந்தது தெரியுமா?

அப்படியா? முதல் போரைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டாவது போரில் இந்த நாட்டில் ஹவாயில் மட்டும்தானே குண்டு போட்டார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்குதே?

ஹவாயா? நீ எந்தப் போர்களைப் பற்றி சொல்கிறாய்?

உலகப்போர்களைத்தானே சொல்கிறாய் நீ?

இல்லையப்பா. சுதந்திரப் புரட்சிப் போர், உள்நாட்டுப் போர் (civil war) இரண்டையும் பற்றித்தான் நான் சொன்னேன்.

சுதந்திரப் போர், உள்நாட்டுப் போர் - யாரவர்?

நான் சமச்சீர் கல்வி வராத நாட்களில் தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் படித்தவன். எனக்கு மூவேந்தர்களும்,  சாளுக்கியர்கள், அசோகர், ஹர்ஷர், மௌரியர்கள் தவிர வேறு எந்த சரித்திரமும் தெரியாது. அப்படியாக ஆரம்பித்தது எனது ரிச்மண்ட் வரலாறு குறித்த ஆர்வம்.

அப்படி இருந்தவனிடம் பாண்டிச்சேரியில் ஒரு முதியவர் கேட்டார்: ரிச்மண்டா - வர்ஜினியா டொபாக்கோ! என்னையும் என் பிள்ளைகளையும் அப்படித்தான் அழைக்கிறார் அவர் இன்றும். அமெரிக்க மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் மாநில சுயாட்சிகளை காற்றில் பறக்கவிட்டு லூசியானாவை வாங்கிய கதையெல்லாம் புட்டு புட்டு வைத்தார்.  வெட்கமாகப் போய்விட்டது.

மேலும் தொடரும் என்று போட ரொம்ப யோசனையாக இருக்கிறது. நம்முடைய பதிவுகளுக்கும் தொடர்களுக்கும் பொருத்தமில்லையே? :-)

சமீபத்தில் நடந்த தமிழ்ச் சங்க வனபோஜனத்தில்(அதாங்க பிக்னிக்) தலைவர் முத்து ரிச்மண்ட் குறித்து எழுதுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.  அதற்கான எனது ஆரம்பம் இது.  நான் மேலே எழுதுவதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். அனைவரையும் தங்கள் ரிச்மண்ட் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இந்த ஊரைப் பற்றியோ, அருகில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியோ, இந்த ஊர் வாழ் தமிழர், இந்தியர் சமூக அனுபவங்களையோ எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.  வெளியே ஐரீன் அம்மா வெளுத்து வாங்குகிறார். உங்களுக்கு வேறு என்ன வேலை. எழுதுங்கள்.



Tuesday, November 10, 2009

சங்கீதத் துறை மாற்றங்கள்

தமிழ் நாட்டில் நல்ல் இசை நிகழ்ச்சியை கேட்பதெல்லாம் அரிதாகிவிட்டது. சென்னை நகரத்தில் ஆண்டு இறுதியில் ஒரே காலத்தில் பல மன்றங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. மற்ற நகரங்களில் இத்தகைய மன்றங்கள் சரியாக செயல்படவில்லை. முன்பெல்லாம் திருவிழா காலங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சிகள் கூட வேறு வகையாக போய்விட்டது.

நகரங்களில் பல விழா காலங்களில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் திரைப்படப் பாடல்களே இடம் பெறும் இந்த மெல்லிசை நிகச்சிகளில் இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

20ம் நூற்றாண்டுக்கு முன்பு கர்நாடக சங்கீதத்திற்கு என்று தனியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. ஹரிகதா பாணியில் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு இடையில் கர்நாடக பாணியில் கீர்த்தனைகள் பாடப்பட்டன. முழுவதுமாக கீர்த்தனைகளை பக்கவாத்தியங்களுடன் பாடும் வகையில் நிகழ்ச்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கின.

மெல்லிசை வகையில் சேரக்கூடிய ஜனரஞ்சகமான பாடல்கள், தெருக்கூத்து, நாடகம் ஆகிய மேடைகளில் பாடப்பட்டன. திரைப்பட வளர்ச்சி பெரிய அளவில் நிகழ்ந்த பிறகு மெல்லிசைக்கான தனி மேடை அமைந்தது. பெரும்பாலும் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் அந்த மேடைகளில் பாடினார்கள்.

மேடைகள் தனியாக அமைந்து நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்பட்டது போலவே பக்க வாத்தியங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மெல்லிசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்களின் ஆதிக்கம் அதிகம்.

கர்நாடக சங்கீத மேடையின் நிலைமை வேறு. அதிகமான எண்ணிக்கையில் பக்க வாத்தியங்கள் கொண்ட கச்சேரிகள் இப்பொழுதெல்லாம் அநேகமாக நடைபெறுவதில்லை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் இப்படி எல்லா பக்க வாத்தியக் கலஞர்களுக்கும் தொகை கொடுப்பது சற்று கடினமானதாகப் போய்விட்டது முக்கிய காரணம்.

இப்பொழுது பெரும்பாலும் இரண்டே பக்க வாத்தியங்களுடன் நிகழ்ச்சி அமைவது வாடிக்கையாகி விட்டது. சிக்கனமான நிகழ்ச்சிக்கு வயலின் மிருதங்கம் இவை இரண்டும்தான் பிரதான இசைக் கருவிகள் என்ற நிலை வந்து விட்டது.

ஒரு காலத்தில் ஹார்மோனியம் என்ற இசைக் கருவி கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இன்று அந்த இசைக் கருவி கர்நாடக இசை மேடையை விட்டு இறங்கி விட்டது.

சங்கீதம் கற்றுக் கொடுக்கும் பாட்டு வாத்தியார் ஹார்மோனியத்துடன்தான் முதல் பாட்டைத் தொடங்குவார். ஆலந்தூர் விசுவநாதய்யர் என்ற சங்கீத வித்வானுடைய ஹார்மோனியம் வாய்திறந்து பேசுவது போல இருக்கும்.

மெல்லிசை நிகழ்ச்சி மேடைகளில் ஹார்மோனியம் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. நாடக மேடைகளிலும் இன்றும் அது உண்டு.

1930, 1940 களில் உறையூர் காதர் பாட்சா என்ற ஹார்மோனிய இசைக் கலைஞர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்தார். விளம்பர நோட்டீஸ்களில் நாடகத்தின் பெயரை எந்த அளவில் அச்சடிக்கிறார்களோ அந்த அளவில் பெரிதாக காதர்பாட்சாவின் பெயரை அச்சிட்டு விளம்பரம் செய்வார்கள். இரண்டு காட்சிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அவருடைய ஹார்மோனியம் தன் இசையால் ரசிகர்களை கட்டிப் போடும்.
ஆனால் என்ன காரணமோ, பல சங்கீத வித்வான்கள் ஹார்மோனியத்தை கை கழுவி விட்டார்கள். பாரதியார்கூட ஹார்மோனியத்தை நல்ல சங்கீதத்தின் விரோதி என்று எழுதியிருக்கிறார். வானொலி நிலையங்களில் ஹார்மோனியம் அனுமதிக்கப் படுவதில்லை.

வயலின் ஒரு ஐரோப்பிய இசைக் கருவி. இன்று கர்நாடக இசை மேடையில் வயலின் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்து விட்டது. மிகக் குறைந்த பக்க வாத்தியம் கொண்ட நிகழ்ச்சிகளிலும் ஒரு இடம் வயலினுக்கு நிச்சயமாக உண்டு.

சமீபத்தில் காலமான திரு. குன்னக்குடி வைத்தியநாதனுடைய வயலின் இசையை இந்த தலைமுறையினர் கேட்டிருக்கலாம். அவருடைய வயலின் வாய் திற்ந்து பேசும், பாடும், அழும், சிரிக்கும், அவர் மட்டும்தான் அசுர வாத்தியமான தவில் மேளத்தை பக்க வாத்தியமாக வைத்துக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

ஆனால் சில சுத்த கர்நாடக சங்கீத ரசிகர்கள் குன்னக்குடியின் இசையை கர்நாடக பாணியாக ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படி எல்லா துறையிலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் ஏற்படும் மாற்றங்களை யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் கடந்த பத்தாண்டுகளில் பல புதிய அம்சங்கள் தலையெடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களெல்லாம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மொழி தொடர்பான விஷயம் கர்நாடக சங்கீத உலகில் பெரிய விவாதத்தை தொடங்கி வைத்து அது இன்றளவும் முழுமையாக முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.

அந்த விவாதம் தான் தமிழ் இசை தொடர்பான விவாதம்.
19ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் கர்நாடக இசையில் பெரிய எழுச்சி ஏற்பட்டது அதுதான் தியாகராஜ சுவாமிகளின் பிரவேசம். அவருடைய கீர்த்தனைகள் சங்கீத உலகத்துக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான அவருடைய சாகித்யங்கள் தெலுங்கு மொழியின் அழகோடும் சங்கீத இலக்கணம் முழுவதுமாக பொருந்தி பாவத்தோடும் நெஞ்சைத் தொடும் பக்திப் பரவசத்தோடும் பாடுவதை எல்லோரும் ஈடுபாட்டோடு கேட்கத் தொடங்கினார்கள்.

அவருடைய கீர்த்தனைக்ள் பெருமளவில் பாடத் தொடங்கிய பிறகுதான் இசை நிகழ்ச்சிக்கு என்று தனி மேடை அமைந்தது என்று கூட சொல்லலாம். காலப்போக்கில் தியாகைய்யரின் கீர்த்தனைகளே இசை மேடையின் முழு நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டன. மற்றபடி தீட்சிதர், புரந்தரதாசர் பாடல்கள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடம் பெற்றன. தெலுங்கு, வடமொழி கீர்த்தனைகளுக்கு இடையில் இசைக் கலஞர்கள் தமிழ் மொழி கீர்த்தனைகளை மறந்தே போய் விட்டார்கள். தமிழ் மொழியில் அருணாசல கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் ஆகியோர் பாடிய, இயற்றிய கீர்த்தனைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.

தியாகைய்யருடைய மேன்மையான கீர்த்தனைகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழ்நாட்டிலேயே தமிழ் இசை பாடல்களை பின்னுக்குத் தள்ளும் நிலை ஏற்பட்டது. கர்நாடக இசை மேடையில் தமிழ் மொழிப்பாடல்களுக்கு இடம் கொடுக்காத நிலை பற்றி நியாயமான வருத்தம் பலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய சங்கீதத்துக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு மாநாடு பரோடா நகரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இசைக் கலைஞர்களும், இசைத் துறை ஆய்வாளார்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தைத் தெரிவித்தனர்.

1916ம் ஆண்டு நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் செர்ந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் கலந்து கொண்டார். ஆபிரகாம் பண்டிதர் ஏற்கனவே கர்நாடக இசை, தமிழ் இசை, பண் வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகள் எழுதியிருந்தார். அவர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூல் பழங்காலத்திய பண் வகைகளைப் பற்றி தெளிவான விளக்கம் கொண்டதாக உள்ளது. தன்னுடைய கருத்துக்களை எடுத்து சொல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகா ஜன சங்கம் என்ற சங்கத்தை நிறுவினார். அந்த அமைப்பு மூலம் பல தமிழ் கீர்த்தனைகளை எழுதி இசை அமைத்து கர்நாடக பாணியில் பாடும் முறைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

நாட்டு விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை இந்தியாவில் பல கலைகள் புத்துயிர்ச்சி பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது. குறிப்பாக இந்தியாவின் இசை பாரம்பரியம் காக்கப்படுவது பற்றி பலர் ஆர்வம் காட்டினார்கள். 1927ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபை வருடாந்திர கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு மாநாட்டுச் செலவு போக மீதம் இருந்த தொகையை நிதி உதவியாக கொடுத்தது. அதை மூலதனமாக கொண்டு மியூசிக் அகாடெமி என்ற அமைப்பை உருவாக்கினர். மியூசிக் அகாடெமி ஆண்டு தோறும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் இசைத் துறை தொடர்பான ஆராய்ச்சி நடக்கவும், இசைப் பயிற்சி கொடுத்து இளைய தலைமுறை இசைக் கலைஞர்களை உருவாக்குவதிலும் செயல் பட்டு வருகிறது. ஆனால் தமிழ் மொழியில் உள்ள கீர்த்தனைகளை பாடவேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் நிறைவேறவில்லை. பலர் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

உ.வே. சாமிநாதய்யர் தமிழர்கள் இசையும், இசைக் கருவிகளும் என்ற தலைப்பில் சென்னையில் ஒரு ஆராய்ச்சி சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த சொற்பொழிவில் பழைய தமிழ் பண்களுக்கு சமமான கர்நாடக இசை ராகங்களை எடுத்து விளக்கி அவற்றில் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

சி.ஆர். சீனிவாச அய்யங்கார் என்ற அறிஞர் மியூசிக் அகாடெமி ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கான கோடைக்கால இசைப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்துப் பேசினார். தன் உரையில் தமிழில் கீர்த்தனைகள் இல்லை என்ற வாதத்தை மறுத்து தன் இளமைப் பருவ காலத்தில் மேடைகளில் பாடப்பட்ட அருணாசல கவிராயர், கவி. குஞ்சர பாரதி பாடல்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேன்மையை விளக்கினார்.

செட்டிநாட்டரசர் ராஜா அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரம் கல்லூரியில் சங்கீதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.

சங்கீதத்திற்கு மொழி கிடையாது. சங்கீதமே ஒரு தனி மொழி. ஆகையால், கர்நாடக சங்கீதத்தில் மொழிப் பிரட்சினையை எழுப்பக் கூடாது என்று சிலர் வாதம் செய்தனர். சில சமயங்களில் தமிழ் இசைக் கோரிக்கைகளுக்கு ஜாதி வர்ணம் பூசும் முயற்சியும் நடந்தது. ஆனால் பல முன்னணி இசைக் கலைஞர்களும், கல்கி போன்ற பத்திரிகையாளர்களும் தமிழிசை வளர்ச்சியின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்தினார்கள். கல்கி தன்னுடைய பத்திரிகையில் தமிழிசை பற்றி தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார். நாமக்கல் கவிஞர் போன்ற இலக்கியத்துறை சார்ந்தோரும் வலியுறுத்தினர்.

பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் ஆகியோர் புதியதாக பல நல்ல தமிழ் கீர்த்தனைகளை எழுதினர். பாபநாசம் சிவன் எழுதிய சில திரைப் படப் பாடல்களும் தமிழ் இசை நிகழ்ச்சி மேடைகளில் பாடத்தக்க அளவில் தகுதியானவையாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் தமிழிசைக்கு சரியான அளவில் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழிசை சங்கங்கள் வைத்தது. தமிழ் மொழி ஆர்வலர்களும், இசை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தியதால் இன்று கர்நாடக இசை மேடையில் தமிழிசை ஓரளவுக்கு இடம் பெறத் தொடங்கி விட்டது. கர்நாடக இசைத் துறையில் கடந்த பல ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இசைக் கருவிகளில் மாற்றம், ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் மென்மையான செல்வாக்கு, இப்படி எவ்வளவோ மாற்றங்களும் ஏற்படுத்தாத சலசலப்பை சங்கீத உலகில் தமிழ் இசை பற்றிய விவாதம் ஏற்படுத்தி விட்டது.

இதற்கு முக்கியமான காரணம் சங்கீத உலகத்திற்கு அப்பாற்பட்ட சமூக காரணங்கள். அந்த பிரச்சனையில் நுழைவது நம்முடைய நோக்கமல்ல, அதற்கான நேரமும் இல்லை.

மு. கோபாலகிருஷ்ணன்.