Showing posts with label கொலு. Show all posts
Showing posts with label கொலு. Show all posts

Monday, October 26, 2015

மீனாவுடன் மிக்சர் 25: சுண்டலோ சுண்டல்!

உங்க ஊரை பத்தி எனக்கு தெரியாது ஆனா எங்க ஊர்ல வர வர நவராத்திரி பண்டிகை கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் ஓட்ட பந்தயம் மாதிரி ரொம்பவே விறுவிறுப்பா தான் நடக்குது.  வருஷா வருஷம் மேலும் பல பல வீடுகள் ல  கொலு வைத்து எல்லோரையும் கூப்பிட்டு அசத்தறாங்க.  கூகிள் காலேண் டரே  எங்க கொலு schedule லை பார்த்து கதி கலங்கி போய் browser tab  ஐ இழுத்து மூடி படுத்துக்குதுன்னா பாருங்க.     

நவராத்திரி ஆரம்பிக்கருதுக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடியிலேர்ந்து வந்து குவிய ஆரம்பிக்கற கொலு பத்திரிகைளை சரி பார்த்து Excel spreadsheet ல போடறது தான் முதல் ஜோலி.   ஒரு ஏழு வருஷத்துக்கு முன் பத்து பேர் கூப்பிட்டுட்டு இருந்த நிலைமை மாறி இன்னிக்கு குறைஞ்சது ஒரு ஐம்பது பேர் வீட்டிலாவது கூப்பிடறாங்க.   துண்டு பேப்பர்ல எழுதி வச்சிண்ட காலமெல்லாம் மலை ஏறியாச்சு.  முன்னாடி மின்னஞ்சல்ல மட்டும் தான் பத்திரிகை அனுப்புவாங்க எங்க பெண்கள்.  ஆனா இப்பல்லாம் Evite , whatsapp மூலமா கூட அனுப்பறாங்க.  இது போறாதுன்னு  Kumon சென்டர் மற்றும் Kohls வாசல்ல எல்லாம் குங்குமச்சிமிழ் வச்சு நின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்கன்னு வேற பேசிக்கறாங்க.   Spreadsheet உதவி மட்டும் இல்லைன்னா எத்தனையோ சுண்டல் பாக்கெட்டுகள் பல வீடுகள்ல சீந்துவார் இன்றி அனாதையா கிடக்கும். 

Spreadsheet ல நாள் வாரியா, zone வாரியா, நேரம் வாரியா  பிரிச்சு பிரிண்ட் ஔட் எடுத்து நிமிர்றதுக்குள்ள நாக்கு  வறண்டு ஒரு பன்னீர் சோடா கிடைக்காதான்னு ஏங்கி போய் நான் ஒரு சுத்து இளைச்ச மாதிரி இருக்கும் எனக்கு.  ஆனா பாருங்க முதல் நாள் புடவை கட்டறச்ச பாதி கை மட்டும் ஏறி வேலை நிறுத்தம் செய்யற  என் blouse அந்த நினைப்புக்கு  மிகப் பெரிய ஆப்பு ஒண்ண  சத்தமில்லாம வைக்கும்.   ஆனால் அதுக்கெல்லாம் அசர்ரதுக்கு நீங்க வேற ஆளை பார்க்கணும்.  

விக்ரமாதித்யன் கதைல வர்ற மாதிரி என் உயிர் நவராத்திரியின்  போது மட்டும் ஏழு தெரு தாண்டி, ஆறு மாடி ஏறி, அஞ்சு வீட்டுக்குள்ள இருக்கிற நாலு விதமான சுண்டல் ல தான் மறைஞ்சு இருக்கும். ஒன்பது நாளும் சுண்டல் பாக்கெட் வாங்குவதில்  எந்த ஒரு தடங்கல் வந்தாலும் இந்த மீனா பொங்கி எழுந்திடுவாங்கற உண்மை ஊர்ல பல பேருக்கு தெரியும்.   அஞ்சா நெஞ்சத்தோடு பாரதியின் புதுமை பெண் மாதிரி நிமிர்ந்து நின்னு எல்லாத் தடங்கல்களையும்  எதிர் நோக்கி வீர நடை போட்டு எனக்கு வர வேண்டிய சுண்டல் பாக்கெட்டுகளை கைபற்றர வரைக்கும்  நான் ஓயவே மாட்டேன்.   என்னை பெத்தவங்களுக்கு கூட இந்த விஷயத்துல என்னை நினைச்சு ரொம்ப பெருமை. 

நவராத்திரி ஒன்பது நாளும் மாலை மூணு மணிக்கு ஆரம்பிச்சா எங்க ஓட்டம் ஒரு பத்து மணிக்கு தான் நிக்கும்.  இந்த சீசன்ல எல்லா தெருக்களிலும் பட்டு புடவை கட்டி, நகை நட்டு போட்டு மங்களகரமா இருக்கற பெண்களால தான் அதிக டிராபிக் ஜாம்.   பல சமயம் 2 அல்லது 3 பேரா சேர்ந்து கூட கொலு ரௌண்ட்ஸ் போவாங்க.  நான் பார்த்த வரைக்கும் முக்கியமான ஒரு விஷயம் பாட்டு பாடலைன்னா எங்க ஊர் மக்கள் சுண்டல் கொடுக்கரதில்லை.  இதனால பாட தெரியாதவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து மூளைபுயல் மூலமா (அதான் brainstorming) இதுக்கு ஒரு தீர்வு கண்டிருக்காங்கன்னு கேள்வி.  அதி புத்திசாலியான இந்திய பெண்கள் இப்ப பாடறதை கூட outsource பண்ணிடறாங்களாம் .  

இதை நானே போன வாரம் கண் கூடா பாத்தேன்.  ஒரு தோழி அவங்க வயதான அம்மாவை கூட கூட்டிகிட்டு தெரு தெருவா ஏறி எறங்கிட்டிருந்தாங்க.  ஒரு கொலு வீட்டுல நுழைஞ்சு 5 நிமிஷத்துல இந்த தோழி அவங்க அம்மாவை பாத்து, விவேக் பாஷைல சொல்லனும்னா, cute ஆ கண்ணடிச்சாங்க.  உடனே அவங்க அம்மா தொண்டைய செருமிகிட்டு டக்குனு பாடி கலக்கிட்டாங்க.  நான் அசந்தே போயிட்டேன்.  என்ன ஒரு மாஸ்டர் பிளான்!  கொலுவுக்கு பாடறது நீங்க நினைக்கறா மாதிரி ஈசியான வேலை இல்லை.  ஒரே ஒரு பாட்டை வச்சு தேய்க்க முடியாது.  நம்ம போற வீட்டுக்கெல்லாம் நம்ம பின்னாடியே ஒரு கும்பல் வருவாங்க.  ஒரே பாட்டை எல்லா இடத்துலயும் பாடினா நம்ம வண்டவாளம் ஊர் தண்டவாளத்துல அன்னிக்கு ராத்திரிக்குள்ளயே அமோகமா வளைய வரும்.  

நவராத்திரி முதல் நாளைக்கப்புறம் எங்க closet பக்கம் போகாம இருப்பது உங்க இருதயத்துக்கு தான் நல்லது.  வரிசையா தினமும் நாங்க உருவி போடற புடவைங்க வழிஞ்சு ஒரு மினி சுனாமியை ஞாபகப்படுத்தும்.  ஆயிரக்கணக்கில் குடுத்து வாங்கின பட்டு புடவைகளை நாங்க கூசாம ஒரு ஓரமா விட்டெறிவோம் இந்த ஒன்பது நாட்களும்.  பொதுவா கணவர்களுக்கு ரத்த கொதிப்பு அதிகமாவது இந்த சீசனில் தான்னு ஆராய்ச்சி பண்ணினால் யாராவது கண்டு பிடிக்கலாம்.  கொலு பொம்மைகளை கட்டி மேலே போட்டு  மூச்சு விட்டப்புறம் தான் நாங்க புடவை கடையை கவனிக்கவே  வருவோம்.   

இந்த வருஷம் நவராத்திரி முடிஞ்சு நாலு நாள் ஆச்சு.  வீடு புயல் அடிச்சு ஓய்ந்தாப்பல இருக்கு.  வீடு  வீடா ஏறி ஏறி கால் கழண்டு போச்சு.  சர்வ வியாதி நிவாரணியான Tylenol துணையோட என்னை மாதிரி பல பெண்களின் வாழ்க்கை மெதுவா அவங்களோட அன்றாட பாதைக்கு திரும்பிண்டிருக்கு.  வேர்கடலை, கொண்டைகடலை, பட்டாணி, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, காராமணி, பச்சை பயறு இப்படி பலவிதமான சுண்டலை ஒன்பது நாளா மாத்தி மாத்தி சாப்பிட்ட திருப்தியில்(?), இனி ஒரு வருஷத்துக்கு சுண்டல் பேரையே யாரும் சொல்ல கூடாதுன்னு பல வீடுகளில் ஒரு புது விரதம் எடுத்திருக்காங்களாம்.


இதுக்கு மேல மொக்கை போட்டு உங்க பொறுமையை சோதிக்காம இந்த வருஷ நவராத்திரியின் இனிமையான நினைவுகளோடு உங்களிடமிருந்து விடை பெறுவது:

-மீனா சங்கரன். 

  இந்த ஆண்டு கொலுப் படங்களை பார்க்க இங்கே செல்லவும்.

Tuesday, November 13, 2012

ரிச்மண்டில் கொலு வலம் - 2012

ரிச்மண்டில் 2012 - கொலு வலம்

போன வருஷம் கொலுவுக்கு போகலைன்னு இந்த வருஷம் சூப்பரா ஒரு ரவுண்ட் போய் கொலு பார்த்துட்டு சுண்டல் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.  ஏங்க ஒரு ஆளு குடும்பத்தையே கூட்டிண்டு வரானேன்னு ஒருத்தர் வீட்லயும் எனக்கு goodie bag அதாங்க வெத்தலை பாக்கு பை, கொடுக்கலீங்க.  சரி சரி உனக்கு சுண்டல் ஸ்வீட்டே ஜாஸ்தின்னு யாரோ கொரல் விடரது கேக்குது.  இதெல்லாம் சகஜமப்பா....

எல்லார் வீட்டு கொலு ஃபோட்டோவும் இங்க போடலை, சாஸ்திரத்துக்கு ஒரு வீட்டு கொலுவுக்கு ஒரு ஃபோட்டோ போட்டுட்டு மீச்சம் இருக்கர ஃபோட்டோக்களை பிக்காசாவுல போட்டு ஒரு லிங்க் இந்த பதிவோட கடைசீல போட்டு இருக்கேன்.  அது மட்டும் இல்லாம, ரிச்மண்டில் கொலு வெச்சிருக்கர எல்லார் வீட்டுக்கும் நான் போகலை.  காரணம் அவங்கள எனக்கு தெரியாது இல்லைன்னா மாலதி மட்டும் தனியா போயிட்டு வந்திருப்பாங்க.  நான் போயிருந்த கொலுவைப் பத்தி மட்டும்தான் எழுதியிருக்கேன்.   நாகு கிட்ட சொல்லி அப்படி விட்டுப் போயிருக்கர கொலுவைப் பத்தி அவரை ஒரு பதிவு எழுதச் சொல்லிக் கேக்கரேன்.

மொதல்ல எங்க வீட்டு கொலுல இருந்து ஆரம்பிக்கரேன்.


ரெண்டே ரெண்டு பொம்மைதான் சேர்த்திருக்கோம்.  மொதல்ல, எங்க குருஜி எங்க வீட்டு கொலுவுல இருக்கார் அடுத்து, சஞ்சீவி மலையை கைல வெச்சிருக்கர ஆஞ்சநேயர் பொம்மை.  இந்த பொம்மையை, எனக்கு சுமா நவமி அரங்கேற்றதுக்கு வீடியோ எடுத்ததற்கு அவங்க அம்மாக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பரிசு கொடுத்தாங்க.  வழக்கம்போல இருக்கர சாண்டா க்ளாஸ் டிரெயின் செட் மிஸ்ஸிங்.  சொல்லப்போனால் பார்க் மிஸ்ஸிங்.  அடுத்த வருஷம் என்ன பண்றதுன்னு ஜனவரிலயே ப்ளான் ஸ்டார்ட் பண்ணனும் போல இருக்கு.


சுகந்தி ஆனந்த் வீட்டு கொலு

சுகந்தி வீட்டு கொலுல நிறைய சேஞ்சஸ் இருக்கு, சூப்பரா படி செஞ்சிருக்காங்க, ஸ்நோ இருக்கர மாதிரி பார்க் கட்டியிருக்காங்க, தரைல ரங்கோலி பூவால பண்ணியிருக்காங்க.  நிறைய புது பொம்மை சேர்த்திருக்காங்க.  ராமர் பட்டாபிஷேகம் அழகு வார்த்தைகள்ல சொல்ல முடியாது அவ்வளவு திருத்தம்.


வித்யா முரளி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு முதல் தடவையா போயிருந்தேன்.  குட்டியான அருமையான கொலு.  ஆலிலை க்ருஷ்ணரும், ப்ளூட் (இல்லாமல்) நின்ற கோலத்தில் க்ருஷ்ணரும் அருமை.

இந்து ஐயர் வீட்டு கொலு

கச்சிதமான காவி நிற கொலு, அருமையான பார்க்கும் கட்டியிருக்காங்க  4-5 வருஷங்களுக்கு முன்னாடி அவங்க வீட்டு கொலு பார்த்த ஞாபகம் லேசா இருக்கு.  வரலஷ்மி அம்மன் கொலுவுல இருந்து நான் முதல் தடவை பாக்கரேன்.  அம்மன் அழகோ அழகு.  குழலூதும் க்ருஷ்ணர், ஆண்டாள் அவதாரம்னு அழகா இருந்தது.




காயத்ரி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் நான் முதல் தடவையா பாக்கரேன்.  காயத்ரி சூப்பரா ஒரு சரஸ்வதி பொம்மையை பண்ணியிருக்காங்க.  ஒரு முழு புடைவையை மடிச்சு மடிச்சு கட்டி பண்ணியிருக்காங்க.  அதுக்கு அவங்களுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சாம்.  ஹூம். எனக்கு வீட்டுல தோச்சு காயவெச்ச என் துணியை அடுக்கவே ரெண்டு மணி நேரம் பத்தாது, இவங்க இப்படி அழகா ஒரு பொம்மையை செய்ய ரெண்டு மணிதான் ஆச்சுன்னு சொல்றாங்க.  பரமாச்சார்யாரின் படம் வெச்சிருக்காங்க. ஒரு சின்ன பார்க் மேசை மேல வெச்சிருக்காங்க, கலர் கலர் அரிசில அருமையா ஒரு ரங்கோலி போட்டிருக்காங்க.  



பார்கவி கணேஷ் வீட்டு கொலு


பார்கவி வீட்டு கொலுதான் எங்க வீட்டு கொலுவுக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லனும்.  இவங்க வீட்டு கொலுவை பத்தி சொன்னா புரியாது ஒரு தடவை போய் பார்த்தா தான் அனுபவிச்சு கொலு வெக்கரது எப்படி புரியும்.  படிகள்ல கொலு வெக்கரதை கொஞ்சம் மாத்தி இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு எல்லா எடத்திலயும் கொலு வெச்சுட்டு 4-5 பொட்டி பொம்மைகளை இன்னும் ஸ்டாக்ல வெச்சிருக்கரவங்க இவங்க.  கல்யாண செட், வித விதமா பிள்ளையார்கள், வசுதேவர் க்ருஷணரை கோகுலத்துல கொண்டு விட போற பொம்மை, பள்ளி கொண்ட பெருமாள், வெண்ணை திருடும் கண்ணன், ராச லீலை, காலிங்க நர்தனம், ஷீர்டி பாப, சுவாமி விவேகாநந்தர், மூஞ்சூரு இழுக்கும் ரதத்தில் பிள்ளையார் என சொல்லிலடங்கா கொலு.

லஷ்மி ஶ்ரீதர் வீட்டு கொலு

கொஞ்சம் கொஞ்சமா பெரிசாயிண்டே வர கொலு இவங்க வீட்டு கொலு.  கல்யாண செட், பீங்கான் பொம்மை செட்னு நேர்த்தியான கொலு.


ப்ருந்தா ஷங்கர் வீட்டு கொலு


கன கச்சிதமான கொலு.  தசாவதாரம் அழகோ அழகு.


சந்திரிகா சத்யநாரயணன் வீட்டு கொலு


பிங்க் கொலு.  ரெண்டு விதமான தசாவதார செட் வெச்சிருக்கர கொலு.  ஆதிசேஷன் மேல பெருமாள் லஷ்மியுடன் இருக்கர பொம்மை சூப்பர்.

ஷீலா கார்த்திக் வீட்டு கொலு


சத்யநாராயண பூஜை செட் முதல் தடவையா கொலுவுல பாக்கரேன். பெரிய புத்தர் பொம்மை, வழக்கம் போல கார்த்திக்கின் கை வண்ணத்துல ஒரு அருமையான கோலம். வாரகஸ்வாமியை கொலுவுல முதல் தடவையா பாக்கரேன்.  முருகர் மயில் மற்றும் சேவலோடு இருக்கார்.


வேதா சேகர் வீட்டு கொலு


வேதா வீட்டு கொலுவும் நாம் முதல் தடவை பாக்கரேன்.  பெரிய கொலு.  நல்ல செலக்‌ஷன்.  கல்யாண செட், பாட்டு கச்சேரி செட், குழல் ஊதர க்ருஷ்ணர், பூரி ஜகன்னாதர் எல்லோரும் இருக்கர கொலு.


சிவகாமி சுபாஷ் வீட்டு பூ சமர்பணம் 

சிவகாமி வீட்டுல பார்த்தது கொலு இல்லை, அரவிந்தர் ஆசிரமத்தின் அம்மாவின் பூ வழிபாடு.  ரொம்ப ரொம்ப அருமையான ஏற்பாடு.

சங்கீதா வாஞ்சி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் முதல் தடவையா பாக்கரேன்.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க, குருவாயூரப்பன், பஞ்ச முக ஆஞ்சநேயர், லஷ்மி நரசிம்மர், ராம ஆஞ்சநேய ஆலிங்கணம், ராகவேந்திரர், கைலாசத்துல சிவ பெருமான், பள்ளி கொண்ட பெருமாள், ப்ரம்மா விஷ்ணுவின் சிவ பூஜை, வராகஸ்வாமி, சத்ய நாராயண பூஜை செட்இப்படி சொல்லிட்டே போலாம்.

விஜி வேதகிரி வீட்டு கொலு



இவங்க வீட்டு கொலுவுல இருந்து போன தடவை ஒரு பார்க் கட்டர ஐடியாவை சுட்டுண்டு வந்தேன் அது சுத்தமா மறந்து போச்சு, இந்த தடவை ஒரு படமே புடிச்சிண்டு வந்துட்டேன்.  நல்லா ஒரு ப்ராஜெக்ட் மாதிரி போட்டுண்டு கொலு வெக்கராங்கன்னு நினைக்கரேன்.  பிள்ளையாரோடு இருக்கர சிவன் பார்வதி அழகோ அழகு.  குருவாயூரப்பன், அழகான மீரா ந்னு சூப்பர் கொலு. 3-டி ப்ரிண்டர்ல பண்ணின கோவில் வெச்சிருக்காங்க.  அடுத்து 3-டி ல பொம்மை வருமான்னு கேட்டு வரும்னா ஒரு 3-டி ப்ரிண்டர் வாங்கிடனும்.


சுஜாதா ரமேஷ் வீட்டு கொலு


கொலுவை வருஷா வருஷம் நல்லா அழகாக்கிட்டே வராங்க.  ராமர் பட்டாபிஷேகம் அருமையோ அருமை.  ராமர் சிம்மசனத்துல இருக்கரமாதிரி பொம்மையை நான் இவங்க வீட்டுலதான் பாக்கரேன். சத்ய நாராயண பூஜை செட்.  சின்ன டேபிள்ல ஒரு கல்யாண செட், மீரான்னு கலக்கிட்டாங்க.


வித்யா சுப்ரமணியம் வீட்டு கொலு

இவங்களை இப்ப சமீப காலமாத்தான் தெரியும்.  இதுதான் முதல் தடவை இவங்க வீட்டு கொலுவுக்கு போனது.  டிவி வெக்கர பிட் ல கச்சிதமா கொலு வெச்சிருக்காங்க.  பாண்டுரங்கனோட அழகுக்கு ஈடு சொல்லவே முடியாது.  பொம்மையெல்லாம் குட்டி குட்டியா இருந்தாலும் ரொம்ப நேர்த்தி.  இவங்க பொம்மை எங்க வாங்கினாங்கன்னு கேட்டுண்டு வந்து இருக்கேன்.  அடுத்த தடவை சென்னை போகும் போது கண்டிப்பா நிறைய பொம்மை வாங்கனும்.  எனக்கு தெரிஞ்சு வெள்ளிப் பாத்திரக் கடை வெச்சிருக்கர செட்டியாரம்மாவை மொதல் தடவையா இவங்க வீட்டு கொலுலதான் பார்த்தேன்.  ஒரு கொசுறு செய்தி வித்யா படம் வரையரதுலயும் கில்லாடி, சாம்பிளுக்கு இதோ ஒரு படம்.




ரேணுகா பாலசுப்ரமணியன் வீட்டு கொலு

ராசலீலை க்ருஷ்ணர், வாத்யம் வாசிக்கர பிள்ளையார், காய்கறி விக்கர வயதானவர்ன்னு நிறைவான கொலு.

சந்தியா ப்ரசாத் வீட்டு கொலு:

சந்தியா ப்ராசாத் வீட்டு குட்டி கொலு.  குழந்தைங்களுக்கு பிடிச்ச மாதிரி சின்னதா ஒரு பார்க்கும் கட்டியிருக்காங்க.  வெண்ணைப் பானைல கை விட்டு கை ஃபுல்லா வெண்ணையா இருக்கர க்ருஷ்ணர் சூப்பரோ சூப்பர்.


பவானி கண்ணன் வீட்டு கொலு


குட்டியா இருந்த கொலு இன்னிக்கு 7 படில இருக்கு.  புதுசு புதுசா பொம்மைகள் வெச்சு அசத்தியிருக்காங்க.  இவங்க அடுத்து பார்க் ஒன்னு கட்டி கொலு வெக்கரதுக்குள்ள நான் ஒரு பார்க் அடுத்த வருஷம் கட்டிடனும்.


வேதுக் குட்டியின் குட்டி கொலு

வேதுக் குட்டிக்கு எவ்வளவு பெருமை பாருங்க அவளோட குட்டி கொலுவுக்கு பக்கத்துல நிக்கும் போது.


ப்ரியா ராஜேஷ் வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு மாலதி தனியா போயிட்டு வந்துட்டாங்க.  இவங்க எங்க வீட்டு கொலுவுக்கு வந்த போது உரிமையா ஏன் வரலைன்னு கோவிச்சுக்கர அளவுக்கு போயிட்டாங்க.  அதனால ஒரு ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் போட்டு ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து நேர இவங்க வீட்டுக்கு போய் கொலு பார்த்துட்டு வந்தேன்.  ஆழ்வார்கள் பொம்மைகளை பூஜைல வெச்சிருக்கரத பார்த்தேன்.  அருமையோ அருமை.  அதே ஆழ்வார்களை கொலுவுலயும் வெச்சிருக்காங்க.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க. கல்யாண செட், குருவாயூரப்பன்,  ஆஞ்சநேயர் நின்ற கோலம், பக்கத்துல ஒரு ஷெல்ஃப்ல க்ருஷ்ணனின் விளையாடல்கள்னு பின்னிட்டாங்க.

இப்படி நான் பார்த்த பல கொலுவை இங்க தொகுத்து கொடுத்துட்டேன்.  அடுத்து கொலுவோட மொத்த படங்களும் இந்த லிங்க்ல இருக்கு.

அன்புடன்,

முரளி இராமச்சந்திரன்.

Sunday, October 21, 2012

எங்க வீட்டு கொலு...


புதுசு புதுசாக வரும் தொழில் நுட்பங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பிறகு பயன்படுத்த ஆரம்பித்தால் நல்லது. இந்தப் பாடத்தை கடந்த இரண்டு நாட்களில் நன்றாகக் கற்றுக் கொண்டேன்.

கூகுள் ப்ளஸ்ஸில் ஈவண்ட்ஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை அங்கே போட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது ஒரு ஹேங்க் அவுட் ஆரம்பித்து வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அண்மையில் ஒரு நண்பன் வீட்டு பூஜையில் ஹேங்க் - அவுட் மூலம் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் பூஜை, ஹோமம் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தார்கள். மதுரையில் உட்கார்ந்து கொண்டு நியுஜெர்ஸி பூஜையில் ஐயரை ஓட்டினார் என் நண்பனின் தந்தை!

அதிலிருந்து எனக்கு ஈவண்ட்ஸ் ரொம்ப பிடித்து விட்டது. இங்கே ரிச்மண்டில் கொலுவுக்காக நண்பர்களிடம் இருந்து ஈவைட் மூலம் அழைப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு யோசனை. நவராத்திரி கொலுக்காக ஈவண்ட் ஆரம்பித்தால் அதில் உலகெங்கிலும் இருந்து அவரவர் கொலு படங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே?  அனைவரும் பார்க்கும்படியாக ஒரு பொது நிகழ்ச்சி(பப்ளிக் ஈவண்ட்) ஆரம்பித்து அனைத்து நண்பர்களையும் சேர்த்து விட்டு மற்ற வேலைகளில் மும்முரமாகிவிட்டேன்.

அரைமணி கழித்துப் பார்த்தால், அதில் ஒரு நண்பர் அழைப்புக்கு நன்றி, நாளை மாலை சந்திக்கலாம் என்று எழுதியிருந்தார். சரி யார் வீட்டு கொலுவிலாவது சந்திப்போம் என்று எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சில மணி நேரம் கழித்து திடீரென்று தோன்றியது - மனிதர் நம் வீட்டில் கொலு என்று நினைத்துவிட்டாரா என்று. உடனே  அவருக்கு பதில் போட்டேன். ஐயா - என் வீட்டில் கொலு இல்லை. நீங்கள் கொலு போகும்போது படம் எடுத்தால் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ஈவண்ட். அவரும் விளக்கத்துக்கு நன்றி என்று எழுதினார்.

மறுநாள் தொடர்ந்தது வேடிக்கை. காலையில் ஒருவர் மின்னஞ்சலில் என் முகவரி கேட்டிருந்தார். தொலைபேசியில் இருவர் அதே மாதிரி கேட்டிருந்தார்கள். தங்கமணி வேறு போன வாரம்தான் கிளம்பி இந்தியா போயிருக்கிறார். அது தெரிந்த சிலர், வீட்டில் அம்மணி வேறு இல்லையே, புதுசாக கொலு வேறு வைத்திருக்கிறாயா என்றார்கள்.  நானும் என் பிள்ளைகளும் கொலுவிருக்கிறோம், நீங்களெல்லாம் சுண்டல் கொண்டு வாருங்கள் என்றேன்.

ஒரு சிலர் விஷயத்தைப் புரிந்து கொண்டு தொலைபேசியில் இதோ வந்து கொண்டிருக்கிறோம், அதோ வந்து கொண்டிருக்கிறோம் என்று கிண்டலாக மெசேஜ் விட்டார்கள் (வாய்ஸ் மெயிலுக்கு தமிழில் என்ன?) இது ஏதடா வம்பாகி விட்டது என்று நேற்று நாலு மணியில் இருந்து கொலு பார்க்கும் சாக்கில் வீட்டிலிருந்து ஜூட்.

இன்னொரு நண்பர், என்னடா தங்கமணி வேறு இல்லாமல் நீ கொலு வைத்திருக்கிறாய்.  'எந்த மாதிரி' கொலு என்று கடுப்பேத்தினார்.

நியுசிலாந்தில் இருந்து துளசி டீச்சர் ரிட்மண்ட் சற்று தொலைவில் இருப்பதால் வரமுடியவில்லை, எங்கள் கொலுவுக்கு வேண்டுமானால் வாருங்கள் என்று கிண்டலடித்தார்.

ஒரு ஈவண்ட் மற்றவர்களிடம் பகிர்ந்த் கொள்ளும்போது, அந்தப் பகிர்வு ஒரு அழைப்பாகப் போகிறது -  அதுதான் குழப்பத்தின் காரணம். ஆகவே மக்களே - எங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலு பற்றிய கூகுள் ஈவண்ட்  இங்கே பார்க்கலாம். இதுவரை ரிச்மண்ட், ப்ரிட்ஜ்வாட்டர்-நியுஜெர்ஸி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் வைத்திருக்கும் கொலு படங்கள் பகிரப் பட்டிருக்கின்றன. நான் பார்த்த கொலுக்கள் பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

Tuesday, January 18, 2011

கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!! – 2

(கைப்பிள்ளை (வடிவேலு) மற்றும் அவருடைய இரண்டு அள்ளக் கைகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு சிறிய உரையாடல். இதை வின்னர் திரைப்படத்தில் தேடவேண்டாம். ஆனால் கைப்பிள்ளை வடிவேலுவின் குரலில் படித்து பார்க்கவும்.)

கைப்பிள்ளை கை கால்கள் கோணிக்கொண்டு தடுமாறி தடுமாறி நடந்து வந்து ஸ்டார்பக் கடை ஒன்றின் உட்புறம் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்கிறார். அவருடைய அள்ளக் கைகள் இருவர் தயங்கி தயங்கி அவர் அருகில் வருகின்றனர்.

கை.பி: “அம்ம அம்ம, யப்பா, எப்பிடி அடிக்கராங்க, ஹும் ஒரு பச்ச புள்ளையாச்சே, இத இப்படி அடிக்கரமேன்னு ஒருத்தருக்கும் தெரியலையே”
பேசியபடியே திரும்பி பார்க்கிறார், அள்ளக் கைகள் வருவது தெரிகிறது. “என்ன, எப்படி அடி பட்டு இருக்குதுன்னு பாக்கரீங்களா?”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அவிங்க நீங்க ஒரு பச்ச புள்ளைன்னு அடிக்கல”

கை.பி: “பொறவு”

அ.கை-1: “கைப்புள்ளன்னு அடிக்கராங்கண்ணே”
அவர்களை பார்த்து கோபமாக கையை ஓங்கி அடிக்க வருகிறார், வலி தாங்காமல் கையை இழுத்துக் கொள்கிறார்.

கை.பி: “எனக்கு வர கோவத்துக்கு உங்களையெல்லாம் மர்டர் பண்ணிடுவேன் பீ கேர்புல், இடியட் ஆஃப் த ஸ்டுபிட் ஆஃப் தி நான்சென்ஸ்”

அ.கை-2: (ரகசியகுரலில்) “ஏய் இது பேசரது ஏதாச்சும் புரியுதா”

அ.கை-1: (அதே ரகசியக் குரலில்) “நமக்கு அடுத்து ஒரு குடாக்கு கிடைக்கர வரை இதோடதான் காலந்தள்ளனும், அதனால வாய மூடிகிட்டு இரு”

கை.பி: “ஏய்ய்ய் அங்க என்ன குசு குசுன்னு பேச்சு”

அ.கை-1: “அது ஒன்னும் இல்லை அண்ணே, கொலு பத்தி நீங்க எழுதின பதிவுக்கு மூமூமூனு பேர் பதில் எழுதியிருக்காங்கன்னு சொல்லிகிட்டு இருந்தேன், அவ்வளவுதான்”.

கை.பி: “மூமூமூனு பேரா, சொல்லவேயில்ல, எப்பவும் நாகு மட்டும் தான படிப்பாரு, என்ன ஆச்சு மக்களுக்கு, சரி சரி படிங்க”

அ.கை-1: சலித்தபடி “என்னத்த படிக்கரது”

கை.பி: “ஏய்ய், என்ன வாய்ஸ் டவுன் ஆகுது”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அதையெல்லாம் வெறும படிக்கக்கூடாது, அனுபவிச்சு படிக்கனும்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “சரி சரி ரொம்ப மொக்கை போடாம படி”

அ.கை-1: “முதல் பதில் நம்ம மீனா வீரப்பன் எழுதியிருக்காங்க”

கை.பி: “அப்படியா!, அப்படி போடு அருவாள, படி படி கேக்கலாம்”

அ.கை-2: ‘உங்க வீட்டு கொலு போலவே உங்க பதிவும் நல்லா இருக்காம்”

கை.பி: (அ.கை-1 சொன்னதை கேட்டவுடன் ஒரு மயக்க நிலையில்) “ரியலி, போதுண்டா போதுண்டா ரொம்ப புகழராங்க”

அ.கை-1: ‘ஆமாம் அண்ணே அதுதான் நானும் நினைச்சேன்”

கை.பி: (அவன் சொல்வதை கவனிக்காது) “ம் மேல படி”

அ.கை-2: “அடுத்து நம்ம மு.கோ. இந்தியாவில இருந்து எழுதியிருக்காரு”

கை.பி: (பரபரப்பாக) “மு.கோ வா!, படி படி”

அ.கை-1: “உங்க பதிவு ப்ரமாண்டமாம், உங்க வீட்டு கொலுவைப்போலவே, அதோட ....” என்று இழுக்கிறான்

கை.பி: (எரிச்சலாக) “என்னடா, அதோட ன்னு இழுக்கர”

அ.கை-1: “அதில்ல உங்க மனசும் உங்க பதிவும் கொலுவும் போல ப்ரமாண்டமாம்”

கை.பி: “ஏண்டா நிஜமாவே அப்படியா எழுதியிருக்காரு”

அ.கை-2: “ஆமாண்ணே, வேனா நீயே படிச்சு பாரு”

கை.பி: “அதில்லடா, இந்த ஊரு இன்னமுமா நம்மள நம்பிகிட்டு இருக்கு”

அ.கை-1: “அத விடுங்க அண்ணே, அடுத்தது யார் எழுதியிருக்காங்க தெரியுமா”

கை.பி: “அது தெரியாதா நம்ம நாகுவா இருக்கும், எப்ப்புடி!”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே”

கை.பி: “போதும் மூடிக்கிட்டு மேல படி”

அ.கை-1: “உங்க தலைவர் பதவி பாரம் இப்ப இல்லைங்கரதுன்னால நிறைய எழுதுவீங்கன்னு எதிர் பாக்கரார்”

கை.பி: (சலிப்பாக ) “அது சரி”

அ.கை-1/2: (கோரஸ்ஸாக) “என்ன அண்ணே சலிச்சுக்கரீங்க”

கை.பி: “பின்ன என்னடா, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடராங்க, வெளில வாசல்ல பாத்தா சொல்லி சொல்லி அடிக்கராங்க”

அ.கை-1: "அப்படின்னா ஏன் எழுதறீங்க"

கை.பி: "டேய், ஒரு எழுத்தாளரா இருக்கரது என்ன பெரிய பதவி தெரியுமா, அது உங்கள மாதிரி அள்ளக் கைகளுக்கு எங்க தெரியப் போவுது"
அ.கை-1: “அது சரி அண்ணே, ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி தடயம்ன்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சீங்களே....” என்று இழுக்கிறான்.

கை.பி: “ஏய்ய், எவனாவது தடயம் பத்தி பேசினா, பிச்சுபுடுவேன் பிச்சு, என்ன்ன்னது இது சின்னபுள்ளத்தனமா இருக்கு”

அ.கை-1: “அதில்லண்ணே, இத்தனை வருஷமா ஒரு தடயம் கூடவா கிடைக்கலைன்னு, ஊர்ல நாட்ல பேச்சு இருக்குன்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “அத ஏண்டா என்கிட்ட சொல்ற”

அ.கை-1: “அண்ணே நான் என்ன சொல்ல வந்தேன்னா ...”

கை.பி: “ஒன்னும் சொல்ல வேண்டாம், வாய மூடு”

அ.கை-1: “இருந்தாலும் .....”

கை.பி: “எனக்கு ஒன்னும் கேக்க வேண்டாம்” என்று நொண்டி நொண்டி ஓடுகிறார்.

அ.கை-2: “ஏம்பா அது என்னப்பா தடயம்”

அ.கை-1: “இது தடயம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சு, முடிக்காம ரெண்டு மூனு வருஷமா இழுத்துக்கிட்டு இருக்கு, இத தொரத்தனும்னா இந்த மாட்டர எடுத்தா போதும் ஓடிடும்”

அ.கை-1: “சரி சரி நம்ம ரெண்டு பேருக்கும் சூப்பரா காபி சொல்லு”

அ.கை-2: “காசு”

அ.கை-1: “அது ஒடர அவசரத்துல வாலட்டை விட்டுட்டு போயிருக்கு பார், வா பெரிய பொங்கலே கொண்டாடிடலாம்”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுன்னே, உங்க சகவாசம் கெடச்சது நான் செஞ்ச புண்ணியம்”

அ.கை-1: “இது மட்டுமா, எங்கிட்ட வந்திட்ட இல்லை இனி இந்த அண்ணனை பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுப்ப, வா முதல்ல காபி சாப்பிடலாம்”

முரளி இராமச்சந்திரன்.

Saturday, December 11, 2010

கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!!

என் மனைவி ஏறக்குறைய ஒரு பத்து வருடம் முன்பு “நம்ப வீட்டுல இந்த வருஷம் கொலு வெக்கலாமா”ன்னு கேட்ட உடனே, வடிவேலுவின் பல குரலில் ஒரு குரல் என் மண்டைக்குள் இந்தப் பதிவின் தலைப்பு போல “கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!!” என்று பதறித் துடித்தது.

முதலில் நாங்கள் இருந்தது ஒரு வாடகைக் குடியிருப்பு, அதிலும் சமையல் அறையின் சிங்க்கில் கொஞ்சம் வேகமாக தண்ணீரைத் திறந்தாலும் கீழ்வீட்டுக்காரர்கள் ஒரு கட்டையால் “டொம் டொம்” இடித்து “யோவ் சத்தம் போடாத” என்று சத்த்த்த்தமாக சொல்லும் இடம். இதில் கொலு என்றால் குறைந்தது 10-15 நண்பர்களின் குடும்பத்தையாவது கூப்பிடனும். “எப்புபுபுடி” ன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது நாங்கள் அமெரிக்கா வந்து ஏறக்குறைய ஒரு 8-9 மாதங்கள்தான் ஆயிருந்தது. எங்க நண்பர்கள் குழாமே ஒரு 5-6 குடும்பங்கள்தான். அலுவலகத்திலும் அப்படி ஒன்றும் சிலாக்கியமாகச் சொல்லக்கூடிய நண்பர்களும் இல்லை என்ன செய்யலாம் என்று தலையை பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

என் மனைவிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சரியாகச் சொல்லனும்னா, அவளுக்கு எல்லா விஷயமும் சின்ன விஷயம்தான். “வா மரியாதையா வந்து வண்டியை எடு, டாலர் ஷாப் போகனும்”னு சொல்லி அங்கிருந்து ஒரு 30 பொம்மைகள் வாங்கி வந்தாள்.

“இதை வெச்சு எப்படி கொலு வெப்பே, எல்லாம் நம்மூர் பொம்மை மாதிரியே இல்லை, எங்கம்மா கொலு வெச்சா அதெல்லாம் ஸ்வாமி பொம்மையா இருக்கும். இப்படி மாடர்ன் பொம்மைகள் இல்லை” என்று என் பங்கிற்கு மறுபடியும் ஒரு பிட்டை போட்டேன்.

“ஹும் உங்கம்மா நம்ம கல்யாணத்தும் போதே சொன்னா, என் பையனுக்கு சமர்த்து பத்தாது, அவனை நீதான் பார்த்துக்கனும்னு, அதை இத்தனை வருஷம் கழித்தும் கரெக்ட்டா ப்ரூவ் பண்றேள். எல்லார் வீட்டு கொலுவிலும் ஒரு செட்டியார், செட்டிச்சி, ஒரு போலீஸ்காரன், ஒரு கல்யாண செட், ஒரு காய்கறிக்காரன், ஒரு செட் நாய், பூனை, யானை ன்னு இருக்குமே அது மாதிரி நம்ம வீட்டு கொலு ஒரு அமெரிக்கா பொம்மை கொலுன்னு சொல்லிட்டு போறேன். இதைகூட சமாளிக்கத் தெரியலை உங்களுக்கெல்லம் எவன் வேலை போட்டு கொடுத்தானோ அவனைச் சொல்லனும்” என்று என்னை சொல்லும் சாக்கில் என் கம்பெனிக்காரனுக்கும் ஒரு ஃப்ரீ அர்ச்சனை நடந்தது. சரி இதுக்கு மேல ஏதாவது சொன்னா பிறகு சாப்பாட்டிற்கு நண்பர்கள் வீட்டிற்குத்தான் “நான் மாது வந்திருக்கேன்” ரேஞ்சில் கையேந்தனும்னு தெரிந்தது.

“அதுக்கில்லம்மா, யாராவது கேட்டா நான் ஒன்னு சொல்லி நீ ஒன்னு சொல்லிடக்கூடாதில்லையா அதுக்குதான் கேட்டேன். அதோட மாடர்ன் கொலுவா இருந்தாலும், கொலுங்கரது நம்ம ஊர் விஷயம் அதான் நெருடுது, வேணா ஒன்னு செய்யலாம், கலிஃபோர்னியாவில mail-bag.com ன்னு ஒரு கடை இருக்கு அங்க பொம்மைகள் விக்கராங்கன்னு கேள்வி, வேணும்னா 100-150 டாலர்ல நம்மூர் பொம்மைகள வாங்கிடலாமா”ன்னு இரண்டாவது பிட்டை போட்டேன்.

“ப்பூ இது பெரிய விஷயமா, எல்லா பொம்மைக்கும் சாந்து பொட்டு வெச்சுட்டாப் போச்சு” என்று செலவே இல்லாமல் ஒரு 30 பொம்மைகளை மத மாற்றம்/தேச மாற்றம் செய்து நம்மூர் பொம்மைகளாக்கினாள்.

அடுத்தது படி கட்ட என்ன வழி என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் முழுக்க யோசித்த பிறகும், சுலபமான வழி ஒன்றும் புலப்படாமல் ஒரு 50 டாலர் செலவில் ஒரு 3 (அ) 5 படி செய்ய ப்ளான் போட்டுவிட்டு, பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் போல பெருமையுடன் மனைவியிடம் “படிக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சியா, யோசிச்சு இருக்க மாட்டியே, நான் யோசிச்சுட்டேன், இதோ பார் என் ப்ளான்” என்றேன்.

“ப்ளான் இருக்கட்டும் செலவு என்ன ஆகும், அதை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்”

“ஒரு 50-60 டாலர் ஆகும், ஒரு 8-10 மணி நேரத்துல செஞ்சுடலாம்.”

“அதெல்லாம் வேண்டாம், நாம சிகாகோவில இருந்து கொண்டு வந்த அட்டை டப்பா எல்லாம் சும்மாதான கிடக்கு அதை வெச்சு 3 படி பண்ணினா போச்சு” என்று 10 விநாடிகளில் ஒரு தீர்வைச் சொன்னாள்.

இந்த இடத்தில் வாரியார் ஸ்வாமிகள் சொன்ன ஒன்று ஞாபகம் வருது. அவருடைய எல்லா கதைகளிலும் ஒன்றைச் சொல்லுவார், “பெண்ணறிவு நுண்ணறிவு” என்று அதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பவர்கள் நம் இல்லத்துப் பெண்கள். தேவையில்லாமல் ஒரு விஷயத்திற்கு செலவு செய்ய யோசிப்பவர்கள், ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் (ROI) என்பதை ஒரு பெரிய பாடமாக பல பல்கலைகழகங்களில் பயிலுவதை, நம் இல்லத்து பெண்மணிகள் சர்வ சாதாரணமாக செயலில் காட்டக் கூடியவர்கள். ஒரு 40-50 டாலர் செலவு செய்து கொலுப் படி செய்ய நான் ப்ளான் போடும் போது ஒரு 10 விநாடிகளில் 10 செண்ட் செலவில்லாமல் படி செய்ய தூண்டி அதை செயலிலும் காட்டினாள் என் மனைவி. 100-150 டாலர் செலவு செய்ய தயாராக இருக்கும் போது அதை ஒரு சின்ன சாந்து டப்பா மூலம் தடுத்தவள். ஒளவையார் ஒரு பாடலில் இல்லாள் என்பதைப் பற்றி மிக அருமையாக பாடியுள்ளார்.


இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

என்ன புரிஞ்சுதா, புரியலையா ஒன்னும் கவலைப் படாதீங்க, எனக்கும்தான் புரியலை, நான் கவலைப் பட்டேனா பாருங்க, நம்மூர் தமிழ் பண்டிதர்களிடம் அதுவும் ‘வளையாபதி, குண்டலகேசி’ எல்லாம் தெரிஞ்ச பண்டிதர்களிடம் கேளுங்க அர்த்தம் சொன்னாலும் சொல்லலாம்.

ஒரு வழியாக படி செய்ததும், அருமையான என்னுடைய இரண்டு பாம்பே வேஷ்டிகளை கொலுவுக்கு தாரை வார்த்ததும் காலத்தில் அழியாத நினைவுகள்.

படியில் மாதிரிக்கு ஒரு சில பொம்மைகளை வைத்ததும் காலி அட்டை பெட்டிகள் சற்று ஆட்டம் காண ஆரம்பித்த்து. “இது என்னடா புது கதை, யாராவது வரும்போது இப்படி ‘டப்பா’ டான்ஸ் ஆடினா, இது பொம்மை கொலுவா இல்லை டான்ஸிங் கொலுவா” ன்னு கேள்வி வருமே என்ற கவலை வந்தது. உடனடி சொல்லுஷன், என்னுடைய படிக்காத (படிக்காத என்ன, பிரித்துக்கூட பார்க்கப் படாத) கம்ப்யூட்டர் புத்தகங்கள், பழைய பேப்பர், துணிகள் என்று பலவற்றை ஒவ்வோரு டப்பாவிலும் திணித்து ஒருவழியாக ஆடாத கொலுவை அரங்கேற்றினோம்.
அடுத்தது செட்யூல், “ஏம்மா எல்லா நாட்களும் எல்லோரும் வரலாமா, இல்லை சில நாட்களுக்கு சில சிலராக வரச்சொல்லலாமா”
“தெரியாமதான் கேக்கறேன், உங்களுக்கு புத்தின்னு ஏதாவது இருக்கா”
“என்ன நான் கேட்டுட்டேன்னு இப்படி கத்தற?”
“பின்ன என்ன, எல்லா நாளும் வரலாம்ன்னு சொன்னா, நாம நாலுபேர் வீட்டுக்கு போகவேண்டாமா? அப்படி போனாதானே 4-5 பேர் சகவாசம் நமக்கு கிடைக்கும்.”
“சரி சரி புரிஞ்சுது, ஒரு ப்ளான் போட்டு சொல்லு அன்னிக்கு நான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்துடறேன், நீ கார்லயே போய்ட்டு வந்துடு”
"என்னது! நான் கார்ல போய்ட்டு வரதா, அப்ப நீங்க வரலையா, நாலு பேர் வீட்டுக்கு போய் கொலு பார்த்தாதானே நம்ம வீட்டு கொலுவை எப்படி மெருகேத்தலாம்ன்னு தெரிஞ்சுக்கலாம்”
எனக்குத் தெரிந்து நகைக்குதான் மெருகேத்துவார்கள்ன்னு சொல்ல எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது, மெருகுன்னா நிஜ மெருகு இல்லைங்க ஆங்கிலத்தில improvise-ன்னு சொல்வாங்களே அதுன்னு நீங்க புரிஞ்சுக்கனும்.
முதலில் இப்படி கொலுவுக்கு என்று போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு, ஒன்று, அவர்கள் வீட்டு கொலு எப்படி வைத்திருக்கிறார்கள் என்று அளவிடுவது, ரெண்டு, என்ன மாதிரி பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், எங்கிருந்து வாங்கி வருகிறார்கள், என்ன விலை, எப்படி எடுத்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்வது, மூனு மற்றும் நாலு, என் மனைவி சொன்னது போல அவர்கள் வீட்டு கொலுவிலிருந்து நம்ம வீட்டு கொலுவிற்கு என்று சில பல புதிய யோசனைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே கடத்திக் கொண்டு வருவது, மற்றும் அவர்கள் வீட்டிற்கு வரும் பலரை நமது நண்பர்களாக்கிகொள்ள ஒரு வாய்ப்பு, இதையெல்லாம் தாண்டி நமது நாட்டு பண்டிகை, காலாச்சாரம் இவற்றை இங்கும் பின்பற்றுவதில் இருக்கும் ஒரு அலாதி திருப்தி.
எனது பள்ளிப் பருவத்தில் 10வது படிக்கும் வரை என் அக்காவுடன் எங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு தினமும் போய் ‘ரார வேணு கோப பாலாஆஆஆஆஆ அல்லது ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதா அம்பிகேஏஏ’ என்று நீட்டி முழக்கி ஒரு பாட்டை இருவரும் பாடி விட்டு அவர்கள் தரும் சுண்டல் பொட்டலமும், சின்ன கண்ணாடி, சீப்பு, குங்கும டப்பா, வெத்திலை பாக்கு எல்லாம் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்ததும் யார் வீட்டில் என்ன சுண்டல், என்ன மாதிரி கொலு, நாங்கள் போயிருந்த போது யார் யாரெல்லாம் வந்தார்கள், அவர்கள் பாடியதை விட நாங்கள் பாடியது எப்படி சூப்பர் என்றெல்லாம் அனுபவித்து கதை விட்டிருக்கிறேன். அதிலும் எனக்கு ஏன் சீப்பு கண்ணாடி, குங்கும டப்பா தரலைன்னும் அதை பெண்களுக்கு மட்டும் தரதுக்கு என்ன காரணம்னும் என் அம்மா கிட்ட கேட்டதுக்கு இது வரைக்கும் சரியான பதிலில்லை. அதுக்கு பிறகு இந்த இனிய கொலுவுக்கு நகர் வலம் செய்யும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக +1, +2 படிக்கும் காலத்தில் 10-15 வீடுகளாக குறைந்து போய், கல்லூரி படிக்கும் காலத்தில் (அதாவது சும்மா போய் வந்த காலத்தில்) 1-2 வீடுகளாகி, என் அக்கா கல்யாணம் பண்ணிக் கொண்டு பம்பாய் போனதும் சுத்தமாக நின்னு போச்சு. அடுத்த சில ஆண்டுகளில் அடிமையாக சென்னையை விட்டு புலம் பெயர்ந்ததும் கொலு என்பது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தது. மீண்டும் சென்னை வந்த போதும் பெரிய ஆர்வமில்லாமல் அம்மாவிற்கு உதவி செய்து கொலு வைத்தாலும், அக்காவோடு பல வீடுகளுக்கு அவளுக்கு துணையென்று (பல நேரங்களில் அவள்தான் எங்களுக்குத் துணை, அவளை என் இரண்டாவது அம்மா என்றே சொல்வேன்) போய் வந்ததும் அந்த இனிய நிகழ்வுகளை இழந்த சோகம் மனதின் ஓரத்தில் சற்று நெருடத்தான் செய்கிறது. நாம் இழந்த சந்தோஷங்கள் என்று கணக்கிட்டால் இப்படி நம் மனதை பாதித்த பல விஷயங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக வெளிவரும்ன்னு நினைக்கிறேன்.
கொலுன்னா முதலில் எங்க வீட்டு கொலுதான் எனக்கு நினைவுக்கு வரும். எங்க வீட்டு கொலுவில் பொம்மைகளை எடுத்து அழகாக பிரித்து கொலுவைப்பதும், கொலு முடிந்ததும் மறுபடி பாதுகாப்பாக கட்டி வைக்கும் பொறுமை என் அப்பாகிட்டதான் கத்துக்கிட்டேன். அவரோட லாஜிக் சூப்பர் லாஜிக். “ஒரு நாள் கஷ்டப் பட்டு பிரிச்சு வெக்கனும், ஒரு நாள் ரொம்ப கஷ்டப் பட்டு கட்டி வெக்கனும் அப்படி செஞ்சா, வருஷா வருஷம் சூப்பரா கொலு வெக்கலாம். ஒரு பத்து நாள் விழாவுக்கு ரெண்டு நாள் கஷ்டப் பட்டா என்ன குறைச்சல்”. படிகளுக்கு சீரியல் செட் போட்டு கொலு வைப்பது, பார்க் கட்டி நடுவில் தெப்பகுளம் வைத்து அழகு படுத்துவது, சுவர் ஓரம் மண் கொட்டி அதை ஒரு மலை போல செய்து அதன் மேல் ஒரு வாரம் முன்பே கடுகு, தனியா தெளித்து செடிகளை வளர்த்து மலை மேல் சின்ன ஒரு கோபுரம் வைத்து கோவில் எழுப்புவது என்று அப்பாவும் அம்மாவும் தூள் கிளப்புவாங்க. 9 நாட்களில் என்னிக்கு என்ன சுண்டல் என்று பட்டியல் போட்டு அதுக்கு தேவையானதை அப்பா ‘பாரதி மளிகை’ ல இருந்து வாங்கிண்டு வருவார். அம்மா, சுண்டலை எப்படி பேப்பரில் கிழியாமல் மடிப்பது, வருபவர்களுக்கு எப்படி, எந்த பக்கம் நின்றபடி கொடுப்பது என்பதை எங்களுக்குச் சொல்லித் தருவா. அந்த 9 நாட்களும் வீடு ஜே ஜேன்னிருக்கும். நவராத்திரி வெள்ளிக் கிழமை கண்டிப்பாக அரிசி வெல்ல புட்டு செய்து அம்மா, ஊரையே மயக்கிடுவா. இப்படி பலவிதமான கொண்டாட்டங்களுக்கு இடையில் 9 படியில வெச்ச கொலு “இந்த வாட்டி 3 படிதான் வெச்சேன்டா”ன்னு அம்மா சொல்லும் போது சற்று கஷ்டமாக இருக்கிறது.
என் சென்னை வீட்டு கொலுவின் ஞாபகமாக சில பொம்மைகளை இங்கும் வைச்சிருக்கேன். அவை ஒரு 50-60 வருடத்திற்கு முன்பு செய்யப் பட்டவை. அவைகளின் நேர்த்தி, திருத்தம் இன்றைய பொம்மைகளில் இல்லை.
அடுத்து என்னை அசத்திய கொலு எனது தந்தையின் உறவினர் தனது ராஜாஅண்ணாமலைபுரத்து வீடான ‘நவசுஜா’ வில் வைத்த கொலு, படிகளில் வைத்த கொலுவை பார்த்தே பரவசப் பட்ட எனக்கு வீடு முழுவதும் அங்கங்கே வைக்கப் பட்ட கொலுவை ஒரு கண்காட்சி திடலை சுற்றி பாக்கர மாதிரி பார்த்ததும் “கொலுன்னா இது கொலு” என்று தோன்றியது.
சரி சரி ஆரம்பிச்ச விஷயத்துக்கு வரேன். இப்படியெல்லாம் கொலு வெச்ச குடுமபத்தில இருந்து வந்தும் நம்ம வீட்டில கொலுன்னதும் ஏன் யோசிச்சேன்னுதானே யோசிக்கிரீங்க, யோசிக்கலன்னாலும், யோசிக்கரமாதிரி நடிங்க. அது தூங்கர சிங்கத்தை பிடரில தட்டி எழுப்பர மாதிரி. கொலு வெக்கனும்னு யோசிக்கரது ஒரு சின்ன விஷயம்தான் ஆனா, அதோட துடிப்பு பிடி பட்டுடுத்துன்னா, அதுக்கு பிறகு அதை நகாசு பண்ண யோசிக்கரத நிறுத்தரது ரொம்ப கஷ்டம். எப்படி பெரிய படி செய்யலாம், எப்படி பார்க் வெக்கலாம், என்ன தீம்ல கொலு வெக்கலாம், என்ன மாதிரி லைட்டிங் செட்டப் செய்யலாம் என்று மண்டை குடைய ஆரம்பித்துவிடும். இது ஒரு மகா அவஸ்த்தை ஆனால் பிடித்திருந்தால் மட்டுமே ஈடுபட முடியும். தீபாவளி பிடிக்காது ஆனால் பட்டாசு மட்டும் பிடிக்கும் என்றோ, அல்லது பட்டாசு சத்தமே இல்லாத தீபாவளி மட்டும் பிடிக்கும் என்றோ இருக்க முடியாது இல்லையா அது போல ஈடுபாடில்லாமல் கொலு வெக்க முடியாது வெச்சாலும் அது ஒட்டு போட்ட ப்ளாஸ்டிக் பக்கெட் போல பல்லை இளிக்கும்.
கொலுன்னா என்ன அர்த்தம், எதுக்காக கொலு வெக்கனும், என்ன ப்ரயோசனம் என்றெல்லாம் யோசிச்சா பொங்கல் பண்டிகையைத் தவிர வேறு எந்த பண்டிகையையும் கொண்டாட முடியாது.
இப்படி அமெரிக்காவில் எங்கள் வீட்டு கொலு ஒரு சின்ன கொலுவாக ஆரம்பித்தது. டப்பா கொலுவில் ஒரு அவஸ்த்தை என்னவென்றால், முன் வருடம் வைத்த்து போலவே இந்த வருடமும் கொலு வைக்க முடியாது காரணம் டப்பா லொகேஷன் மாறிவிடும் அபாயம்தான். நம்ம மூளைதான் இது மாதிரி வெத்து சமாசாரத்துக்கு ரெடியா இருக்குமே, “எடு காமெராவை ஒரு படம் பிடித்து ப்ரிண்ட் போட்டு வெச்சுட்டா போச்சுன்னு” சொல்ல, கர்ம சிரத்தையா அதை கடைபிடித்தோம். முதல் இரண்டு வருடங்கள் 3 படியாக இருந்த கொலு மூன்றாவது வருடம் 5 படிக்கு பரிணாம வளர்ச்சியடைந்தது. அந்த 5 படி கொலுவுக்கும் வழக்கம் போல் பழைய டப்பா, கம்யூட்டர் டேபிள் என்று ஒரு மாதிரி ஒப்பேற்றி கொலு வைத்திருந்தோம்.
நான்காவது வருடம் புது வீடு வாங்கி அங்கு கொலு வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்து, கொலு வைக்க வேண்டிய நாள் அன்று மனைவி அதிகம் யோசிப்பதற்குள் ‘Lowes‘ போய் தேவையான மரக்கட்டைகளை வாங்கி வந்து 4-5 மணி நேரத்திற்குள் 5 படி செய்து அரங்கேற்றினேன்.
கொலுப் படி செய்ததை பத்தி அம்மாவுக்கு சொல்லி பெருமைப் படும் போது “ஏண்டா வெறும கொலு மட்டும் வெச்சா போதுமா, பார்க் எதுவும் இல்லையா”ன்னு தன் பங்கிற்கு அம்மா ஒரு பிட் போட, அடுத்த வருஷம் ஒரு மின்சாரத்தில் இயங்கும் ரெயில் வண்டி செட் வாங்கி, ஒரு சில நகாசுகள் செய்து ஒரு சிறிய கிராமம் தயாரித்தோம்.
இதற்குப் பிறகு வருஷா வருஷம் சில சில பொம்மைகளாக சேர்த்து சேர்த்து, போன டிசம்பரில் சென்னை போன போது உச்ச கட்டமாக 4 பெரிய பெட்டி நிறைய பொம்மைகளை அடுக்கிக் கொண்டு வந்தோம்.
இதற்கு இடையில் நான் பார்த்து பார்த்து செய்த 5 படி கொலு 7 வருடங்கள் தாக்கு பிடித்து இந்த வருடம் வளைந்து நெளிந்து “போடா நீயும் உன் கொலுவும்” என்று சற்று முரண்டு பிடிக்க, “இனி வழியே இல்லை என்று ரிச்மண்டின் தென் திசையில் இருக்கும் பார்கவி கணேஷின் வீட்டின் கொலுப் படி செய்த திரு. அனந்தராமன் என்ற பெரியவரை 8 அடி நீளத்தில் 7 படிகள் செய்யச் சொல்லி இந்த வருடம் அதையும் அரங்கேற்றியாயிற்று.
இவரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் பல படங்கள் தரப் பட்டுள்ளது. இவரை பார்த்து பேசிய போது ஒன்னு தெளிவா தெரியுது, கற்றது கையளவு, கல்லாதது உலகளவு-ன்னு. 1952-ல் சென்னை – கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் படிச்சு, படிப்பில் புலின்னு பேர் எடுத்து பல வருடஷங்கள் வட மாநிலத்தில் சிறந்த தொழிலகங்களில் வேலை பார்த்து, 1972-ல் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, விமான நிலயத்திலேயே நிரந்தரக் குடியுரிமை (அதாங்க பச்சை அட்டை) தரப்பட்டு, நியூ ஜெர்சியில் வசிக்கிறார். இவரது வீட்டின் – தப்பு தப்பு தப்பு அது ஒரு கலைக் கோயில் உள்ளே நுழைஞ்சா, ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ ன்னு பாரதி பாடியது போல ‘எங்கெங்கு காணினும் மண்டபமடா’ ங்கர மாதிரி சின்னதும் பெரியதுமா மண்டபங்கள், எல்லாமே இவரது கை வண்ணத்தில் உருவானவை. அது மட்டும் இல்லாமல் படங்களுக்கு செய்யப் பட்டுள்ள ஃப்ரேம்கள், ஸ்டூல்கள் பென்சுகள் என்று பலதிலும் இவரது திறமை பளிச்சிடுகிறது.
வீட்டின் பின்புறம் ஒரு பெரிய இடம் முழுவதும் மழை வெயில் தாக்காமல் பெரிய கொட்டகை – நம்மூர் கீத்துக் கொட்டகை போல வெள்ளை தார்ப் (Tarp) மூலம் மூடி நம்மை கிறங்கடிக்கிறது. அருகில் ஒரு பெரிய தொழிலகமும் அவருடைய கார் நிறுத்துமிடமும் – (இந்த ‘கராஜில்’ ஒரு நாள் கூட தனது காரை இவர் பார்க் செய்ததில்லையாம்.) இவருடைய தொழில் தொடர்பு கருவிகளின் ஆக்ரமிப்பினால் திணறுகிறது. தொழிலகத்தில் சின்ன சின்ன டப்பாக்களில் சைஸ் வாரியாக நட் போல்ட் என்று நேர்த்தியாக வைக்கப் பட்டிருக்கிறது. எதையும் யாரும் தேட வேண்டிய அவசியமே இல்லை.
தினமும் குறைந்தது ஒரு கொலு படி செட்டாவது செய்து விற்பனை செய்கிறார். சில நாட்கள் 2 செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறதாம். கொலுப் படிகளும் சைஸ் வாரியாக செய்கிறார். கேட்ட ‘படி’, கேட்ட படி இவரிடம் கிடைக்கிறது. இவர் பகுதி நேர DJ வாகவும் பணியாற்றுகிறார். இதற்குத் தேவையான ஒலி பெருக்கி சாதனங்கள் ஒரு பெரிய ‘வேன்’ முழுவதும் பக்காவாக நிரம்பியிருக்கிறது.
இவர் தனது கைத்தொழிலை நேசித்து செய்வதாகத் தெரியவில்லை, இவர் அதை சுவாசித்து வாழ்வது போல் இருக்கிறது. இவர்கிட்ட “ஒரு சம்மர் கேம்ப் மாதிரி ஆரம்பித்து உங்க திறமையை ஏன் அடுத்த தலைமுறைக்கு மாத்தி விடக்கூடாது” ன்னு ஒரு பிட் போட்டு பார்த்தேன். அதுக்கு அவர், “செஞ்சுட்டா போச்சு, ஒரு வாரம் வெச்சுக்கலாமா, இல்லை ரெண்டு வாரமா” ன்னு கேட்க, “நான் இதைப் பத்தி எங்க வலைப்பூவில் எழுதிடறேன். அதைப் பார்த்துட்டு யாராவது கேட்டா நானும் ஒரு வாரமோ அல்லது ரெண்டுவாரமோ லீவ் போட்டுட்டு உங்களுக்கு உதவியா இருக்கேன்”ன்னு வாக்கு கொடுத்துட்டு வந்திருக்கேன். அதனால நல்லா யோசிச்சு சொல்லுங்க யாரெல்லாம் ரெடின்னு. அடுத்த வருடம் ஜூலை – ஆகஸ்டில ஏற்பாடு செய்வோம்.
மறுபடி தொடங்கிய தலைப்புக்கு வரேன்.
இப்படியாக எங்க வீட்டு கொலு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று நாகுவின் பதிவிலும் இடம் பிடித்திருக்கிறது.
இந்த முறை கொலுவுக்கு வந்தவங்கள்ள சிலர், “வெறும ரெயில் செட்டை பார்த்து பார்த்து போர் அடிக்குது, வேற ஏதாவது செய்”ன்னு அன்பாக கண்டிச்சுட்டு போயிருக்காங்க. அதனால அடுத்த வருஷ கொலுவில் ஒரு சின்ன தெப்பக் குளம், ஒரு சிறிய பார்க் என்று சில பல நகாசுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில இருக்கேன். யாருக்காவது அதை செய்யரதுக்கான யோசனை தோணித்துனா, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க. இந்த முறை நண்பர் அருண் நடராஜன் - விஜி நடராஜன் வீட்டு கொலுவில சூப்பரா ஒரு பார்க் கட்டியிருந்தார்கள் அதன் செய்முறையை கொஞ்சம் அவர்களுக்கே தெரியாமல் கடத்திக் கொண்டு வந்திருக்கிறேன். எவ்வளவு தூரம் அதன் செய்முறை நான் செய்யும் போது ஞாபகத்தில் இருக்குமோ தெரியாது.சரி

அடுத்த வருடம் கொலுவில் சந்திப்போம்.

-முரளி இராமச்சந்திரன்.

Sunday, October 17, 2010

கொலு 2010

கடந்த சில ஆண்டுகளாக கொலு சுற்றுலா போக முடியவில்லை. இந்த ஆண்டுதான் எந்த சாரண முகாமும் போகாமல் ஊரில் இருந்ததால், சுண்டல் வேட்டைக்கு கிளம்பினேன். ஆரம்பித்தது பார்கவி-கணேஷ் தம்பதியினர் வீட்டில்.கொலு என்றால் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற மனப்பான்மை ஒன்று நிலவுகிறது. அதற்காக கொலுவுக்கு நிஜமாக வேலை செய்தவர்களை வைத்து படம் பிடிக்கவேண்டும் என்று ஒரு திட்டம். அதனால் நம் நண்பர் ஆனைமுகனை நிற்க வைத்து ஒரு படம். என்ன பெருமையாக நிற்கிறார் பாருங்க...


கணேஷை மட்டும் ஏன் என்று அவர் மகனுடன்...
 பச்சை யந்திரன் தனியாக... இந்த கொலுவில் எனக்கு மிகவும் பிடித்த பொம்மை கருடனின் தோள்களில் அமர்ந்திருக்கும் மஹாவிஷ்ணு.
 இந்த திருமண காட்சியும் அருமை.
 நம் ஊரில் கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், டென்னிஸ் ஆடும் பிள்ளையார் பொம்ம்மை பார்த்திருப்பீர்கள். இவர்கள் வீட்டில் சீனத்து பிள்ளையார் பொம்ம்மைகள் பார்த்தேன். இந்தப் படங்களில் தேடாதீர்கள். படம் பிடிக்கவில்லை :-)


 அடுத்ததாக திருவாசகம் மீனா சங்கரன் வீட்டு கொலு. உடல் சரியில்லாவிட்டாலும் அழகாக சிரிக்கும் அவர்கள் மகளுடன் மீனா.

 ரிச்மண்டில் இதுவரை காணாத கிரிக்கெட் மைதான அமைப்பு. ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி. ஆனால் மட்டையை காலுக்குப் பின்னால் ஒளித்து வைத்து விளையாடி பார்த்ததில்லை.


 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது தூணைப் பிளந்து வெளியே வரும் நரசிம்மர். பிளந்திருக்கும் தூணைப் பார்த்தால் எனக்கு என்னவோ நினைவுக்கு வருவது பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளச்செங்கூர் வாய் நாரைதான் :-)
 மேல்தட்டில் கஜேந்திர மோட்சமும் உண்டு.

 அடுத்ததாக சித்ரா-ரவி வீட்டு கொலு. வேறு எந்த வீட்டிலும் பார்க்காத காட்சி இங்கே - வேஷ்டியில் ரவி!

 கொலு பொம்மைகள் அழகா, இந்தப் பெண்கள் அழகா...
 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தவை அஷ்டலஷ்மிகளும் பிள்ளையார் வாத்தியக் கோஷ்டியும்.




 அடுத்த வீடும் சித்ரா-ரவி வீடுதான் :-) ஒரு சிறிய அழகான கொலு!
இந்த கொலுவி எனக்குப் பிடித்தது கொலுவின் முன்னே சித்ரா வரைந்திருந்த பெருமாள் ரங்கோலி.



 அடுததது லாவண்யா ராம்கி வீட்டு கொலு.






 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது பால்குடத்தைக் கவிழ்க்கும் கண்ணன். மற்றவர்களைக் கவர்ந்தது ஒளிரும் நீலமயில்கள்.
 அடுத்ததாக மாலதி என்கின்ற சாவித்ரி - முரளி  வீட்டு பிரம்மாண்டமான கொலு.




 நான் வீட்டுக்குள் நுழையும்போது ஓடிக்கொண்டிருந்த ரயில்.

 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது மரத்தால் செய்த யானை அம்பாரி.
 கடைசியாக பவானி-கண்ணன் வீட்டுக் கொலு.


 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது தசாவதார பொம்மைகள்.

இவ்வளவு கொலு படம் காட்டிவிட்டு, பாட்டில்லாவிட்டால் எப்படி? கடைசியாக ஒரு பாட்டு...

இவ்வளவு பொம்மைகள் பார்த்துவிட்டு எனக்கு ஊர் ஞாபகம் வந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் இப்போது பண்ருட்டியென்றால் பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் பொம்மைகளுக்கு பெயர் போனது பண்ருட்டி. முத்தையர் பள்ளியில் படிக்கும்போது சுற்றுவட்டார வீதிகளில் நிறைய பொம்மைகள் செய்து வெளியே காயவைத்திருப்பார்கள். சப்பாணி செட்டி தெரு முழுக்க பொம்மைகள் நிற்கும். தெருவில் ஜாதிப்பெயர்கள் நீங்கி பொம்மைகளும் அகன்று இப்போது வெறும் சப்பாணி ஆகிவிட்டது அந்தத் தெரு.

பல வீடுகள் இந்தப் பட்டியலில் நீங்கிவிட்டன. இந்த வாரம் பிள்ளையாண்டான்களுக்கு சாரதித்துவம் செய்ததால் சில வீடுகளுக்கு என்னால் போகமுடியவில்லை. போனவள் காமிரா கொண்டுபோகவில்லை. அதனால் விட்டுப்போன கொலுக்களுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.