Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

Tuesday, October 02, 2007

நியுயார்க்கின் சிறந்த தெருவோர உணவகம் - NY Dosas

நியுயார்க் நகரத்தின் தெருவோர உணவகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அதில் சிறந்த கடைகளை தேர்ந்தெடுத்து வெண்டி அவார்ட்ஸ் என்ற பரிசை அளிக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் திரு குமார். தோசா மேன் என்று அழைக்கப்படும் கந்தசாமி திருகுமார் ஈழத்தில் இருந்து வந்தவர். வேகன் முறையில் நெய், வெண்ணெய் இல்லாமல் இவர் சுடச்சுட சமைக்கும் தோசைகள் பறக்கின்றன. பல நியுயார்க் சுற்றுலா இதழ்களில்(Tour Guide), நியுயார்க் நகரில் அவசியம் பார்க்கவேண்டிய இடங்கள் பட்டியலில் இவருடைய தோசைக்கடையையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் வெண்டி அவார்ட்ஸ்க்கு கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களை கீழே காணலாம்



தெருவோர கடையாய் இருந்தால் தரங்குறைவான எண்ணெய், காய்கறிகள் உபயோகிப்பார்கள் என்ற பரவலான கருத்தை பொய்ப்பிப்பதே என் நோக்கம் என்கிறார் திரு குமார்.

Friday, June 08, 2007

கவிநயாவின் பரிசுப் பெற்ற காட்சிக்கவிதை

அன்புடன் கவிதைப் போட்டியில் கவிநயாவின் காட்சிக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. கவிநயாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!


அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
===========================================================

ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1
காட்சி வடிவம் இறுதியில் தரப்பட்டுள்ளது

அருவி

உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!

அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!

கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!

வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!

- கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா

Saturday, April 14, 2007

பித்தனின் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சர்வஜித் வருடத்தில் எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று இனிது வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

பித்தன்.