Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Friday, September 28, 2018

மறதி



கடந்த மாதம் துபாயில் வசிக்கும் என் கல்லூரித் தோழன் ராஜேஷ் ரிச்மண்ட் வந்திருந்தான். ரிச்மண்ட் நண்பர்கள் பலர் அவன் குறித்து அறிந்திருப்பீர்கள். இங்கே ஒரு நாள் தங்கி மற்ற தோழர்களை சந்தித்துவிட்டு வாஷிங்டன் வழியாக ஊர் திரும்ப இருந்தான். அவனுக்கு வாஷிங்டன் நகரத்தை சுற்றிக் காண்பித்துவிட்டு வழியனுப்பி வைக்கலாம் என்று கிளம்பினேன்.

போய்க்கொண்டிருக்கும்போது வாஷிங்டன் அருகில் வசிக்கும் நண்பன் ராஜாஜியின் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது. அதுவும் விமானநிலையம் அருகில் இருக்கும் மருத்துவமனை. ராஜாஜியும் ராஜேஷும் சந்தித்து கால் நூற்றாண்டு ஆகியிருந்தது. கடைசியாக இருவரும் சந்தித்தது ராஜாஜியின் திருமணத்தில்தான். அந்த திருமணத்துக்குக்கூட நானும், ராஜேஷும்தான் பெங்களுரில் இருந்து சென்னை சென்றிருந்தோம். ராஜாஜி மருத்துவமனை பார்க்கிங் லாட்டில் காத்துக் கொண்டிருந்தான். அவனுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு  உள்ளே சென்றோம். அப்பா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருடைய ஞாபக சக்தி மிகவும் குறைந்திருப்பதாகவும், இரவு நர்ஸ்கள் கூட அப்பா கத்தி சண்டை போட இருந்ததாகவும் ராஜாஜி கதை விட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் கற்பனைவளம் கொஞ்சம் அதிகம்.

ராஜாஜியின் அப்பா அறைக்குப் போனோம். அவரைப் பார்த்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆயிற்று. மிகவும் மெலிந்திருந்தார். அறையில் நுழைந்ததும் என்னையும் ராஜேஷையும் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார் அவர். எப்படி இருக்கிறீர்கள் மாமா என்றேன். உன்னைப் பார்த்ததும் எனக்கு பலம் இரண்டு மடங்காகிவிட்டது என்றார் மாமா மகிழ்ச்சியுடன். ராஜேஷை பெயர் சொல்லி அழைக்கிறாரே என்று ராஜாஜியிடம் விசாரித்தேன். நீங்கள் இருவரும் வருகிறீர்கள் என்று சொல்லியிருந்தேன். மற்றபடி அவருக்கு அவனை நினைவில்லை என்றான் ராஜாஜி.

உனக்கு ரெண்டு பசங்கதானே ராஜேஷ், என்றார் மாமா. என்னடா என்றேன் ராஜாஜியிடம். அது எல்லாம் சும்மா அடிச்சி விடறார்டா என்றான்.

கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கோபாலகிருஷ்ணன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார் மாமா. ராஜாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் கொஞ்சம் யோசித்தேன், யாரை சொல்கிறார் என்று. நாங்கள் முழிப்பதைப் பார்த்து அவரே சொன்னார். அந்த காலத்து நினைவுகளை எல்லாம் எவ்வளவு அழகாக எழுதுகிறார், சமீபத்தில் ஏதாவது எழுதினாரா என்றார் மாமா. ஆடிப் போய் விட்டேன். கண்கலங்கி விட்டது எனக்கு.

சேதி என்னவென்றால், ரிச்மண்ட் வலைப்பதிவில் திரு. மு. கோபாலகிருஷ்ணன் எழுதும்போதெல்லாம் அவற்றை நான் மின்னஞ்சலில் மாமாவுக்கு அனுப்பி வந்தேன். இவருக்கு கடைசியாக அவற்றை அனுப்பி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். இவருக்கு மட்டும் அல்ல. தமிழார்வம் கொண்ட என் கல்லூரித் தோழர்கள் தந்தைகள் சிலருக்கும் அனுப்புவது என் வழக்கம். மு.கோ. அவர்கள் அண்மையில் சற்று உடல்நலம் குன்றியிருந்ததாலும், ஓரிரு புத்தகங்கள் எழுதுவதில் மும்முரமாக இருந்ததாலும் அவர் நம் பதிவுக்கு எழுதுவது குறைந்திருந்ததை சொன்னேன். முடியும்போது எழுதச் சொல்லு என்றார் மாமா.

மு.கோ. அவர்களே – யார் படிக்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பீர்களே? பாருங்கள் உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். என்ன ஒன்று – யாரும் பின்னூட்டம் இடுவதில்லை, நேரில் பார்க்கும்போதுதான் விசாரிக்கிறார்கள். ஆகவே முடியும்போதெல்லாம் எழுதுங்கள். அந்த காலத்து அரசியலும், வாழ்க்கை அனுபவங்களும், அந்தப் பார்வையில் இந்த காலத்து அரசியல், அனுபவங்களை அலச உங்களால்தான் முடியும்.
-->

Sunday, February 20, 2011

குற்றுயிரும் குலையுயிருமாய்...


நேற்று சும்மா முயற்சி செய்து பார்க்கலாம் என்று நம் வலைப்பதிவில் வலது பக்கம் 'அந்த நாள் ஞாபகம்' என்று ஒரு பகுதியைச் சேர்த்தேன்.  அந்தப் பகுதியில் நம் பதிவுகளில் இருந்து சீட்டு குலுக்கல் முறையில் (randomக்கு தமிழில் என்ன) ஒரு ஐந்து பதிவுகளைப் பொறுக்கி காண்பிக்கப்படும். ஏன் என் பதிவு தெரியவில்லை என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். அந்த ராண்டம் பகவானிடம் முறையிடுங்கள். பல பழைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹூம்... ஆஹா ஓஹோ என்று இருந்த பதிவு இப்படி கேட்பாரற்று கிடக்கிறது என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்ய? எழுதிக்கொண்டிருந்த ஒரு சிலரும் தனிக்கட்சி பிடித்துப் போய்விட்டார்கள். எழுதுங்கள், எழுதுங்கள் என்று நான் தொந்திரவு செய்வதால் நீர்வைமகள் பார்க்குமிடங்களில் எல்லாம் ஓடி ஒளிகிறார்.  ஏதோ அந்த கோபாலகிருஷ்ணர் தயவிலும், மீனா, முரளி தயவிலும் கொஞ்சம் உயிர் காட்டுகிறது. பரதேசியை வேண்டுமென்றே விட்டிருக்கிறேன். என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் :-)

படிப்பவர்களும் தங்களுக்கு முடிந்த மொழிகளில் - ஆங்கிலமோ, உருதுவோ, அரபியோ, ஹிந்தியோ - பின்னூட்டம் இட்டால் - எழுதுபவர்களுக்கும் எழுதுபவர்களைத் தேடும் எனக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும். அதுவும் மு.கோ.விடம் தென்னிந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் கோபால் பல்பொடிக்கு அடுத்ததாக பாவிப்பது நம் பதிவுத்தளம்தான் என்று ஜல்லியடித்து வைத்திருக்கிறேன். அனலிடிக்ஸ் கிராபிக்ஸ் காட்டு என்று அவர் கேட்காமலிருக்கும்வரை அந்த பஜனை நடக்கும். ஆனாலும் மனிதர் கலக்குகிறார். தமிழ் இசை, இலக்கிய உலகின் நடமாடும் சைக்ளோபிடியாவாக இருக்கிறார் அவர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் இணையத்தில் இன்னும் பிரபலமாக இருக்கிறது. சில புண்ணியவான்கள் அந்த புத்தகத்தை இந்த காலக் கருவிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். உங்கள் ஆப்பிள் கருவிகளில் நிறுவிக் கொள்ள இந்த தளத்தில் பாருங்கள். ஆன்ராய்ட் கைப்பேசியில் வேண்டுமானால் இக்கட சூடு. படங்களும் உண்டா என்று நொட்டைக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. படங்கள் புத்தக வடிவிலேயே இல்லை. வேண்டுமானால் திருச்சி நெல்லித் தோப்பில் பாருங்கள். யாராவது கல்கியில் வந்த தொடரை பைண்ட் பண்ணி வைத்திருக்கலாம். முக்கியமான விஷயம். இந்தக் கதை ஆரம்பிப்பது நான் வளர்ந்த திருமுனைப்பாடி நாட்டினில். அதுவும் ஊழல் ஓங்கி வளர்ந்த வீராண ஏரிக்கரையில் :-)

ஆப்பிள் கருவிகளில் திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கிடைக்கிறது. நம் பதிவுகள் போல படிக்கத்தான் ஆளில்லை. :-)