Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Saturday, February 23, 2008

உயிர் காக்க உதவுங்கள்

ராஜேஷ் அவர்கள் பற்றி ஒரு கட்டுரையும், கவிதையும் எழுதி எண்ணாலான மிகச் சிறிய உதவியாக எனது வலைத்தளைத்தில் பதிந்திருக்கிறேன். வாருங்கள், வாசியுங்கள், ராஜேஷ் குடும்பத்தாருக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_23.html

Thursday, June 21, 2007

வைராக்கியம் - இருநூறாவது பதிவு!

தஞ்சைப் பெரிய கோவிலின் மணி டாங், டாங், டாங்கென அடித்து அன்றைய சாயங்கால பூசையை ஊருக்கு உரைத்தது.

விபூதிப் பிரசாதம் வாங்கி அணிந்து கொண்டு வெளியில் வந்தார் பரமசிவம். சிலு சிலுவென வீசிய காற்றில் சுற்றுப் பிரகாரத்தில் இருந்த மரங்களின் இலைகள் சிற்றருவியென சலசலத்தன. தென்றலின் தீண்டலில் கோவிலுள் இருந்த புழுக்கம் குறைந்து ஒருவித வேதியல் மாற்றம் நிகழ்ந்து தேகத்தில் குளுமையை உணர்ந்தார் பரமசிவம்.

பெரிய வளாகம் என்பதால், ஓரளவுக்கு மக்கள் இருந்தும் கூட்டமாகத் தெரியவில்லை.



வெளிச்சம் மெல்ல விடைபெற துவங்கியது. வலக்கையை மேல்தூக்கி மலைமுகடாய்ப் புருவங்களின் அருகில் வைத்து நந்தி மண்டபத்தைப் பார்த்தார். 'நாவன்னா' நேரத்துக்கு வந்திட்டானே என வியந்து, அத்திசையை நோக்கி நடையை சற்று துரிதப்படுத்தினார். சக வயதுடையோர் வட்டத்தில், நாராயணபிள்ளையை நாவன்னா என்று தான் அழைப்பார்கள். எனக்கென்ன அவ்வளவு வயதா ஆகிவிட்டது, அந்தக்காலத்து ஆளுக மாதிரி கூப்பிடறீங்களே என்று அன்பாய்க் கடிந்து கொள்வார். அப்படி ஒன்றும் வயோதிகர் இல்லை நாவன்னா, வருகிற ஆவணியில் அவருக்கு வயது 65.

தெய்வ நம்பிக்கை கொண்டவர்தான் நாவன்னா. ஆனால் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு யாரும் பார்த்ததில்லை. வெளிப்பிரகாரத்தோடு சரி. சாமியை வெறும் கல் என்று நினைத்தாரோ, இல்லை அர்ச்சகர்களை வெறுத்தாரோ தெரியவில்லை.

நாவன்னாவை நெருங்கிய பரமசிவம், "என்ன ஓய், மேல்சட்டையில அங்கங்கே அழுக்கு படிந்து இருக்கு" என்றார்.

ஒன்னுமில்லவோய், இன்னிக்கு வேலையில சுந்தரபாண்டி பயல காணோம். வெஷம் குடிச்சிக் கெடக்கானாம். அவன் ஆத்தா செல்லம்மா வந்து சொல்லி அழுதுட்டுப் போறா. இன்னிகுனு பாத்து ஒரு கல்யாண ஆர்டர். அதான் வெறகு மண்டில நானே வெறகு அள்ளி போடவேண்டியதாப் போச்சு. குனிஞ்சு நிமிந்ததில முதுகு தான் கொஞ்சம் வலிக்குது.

துள்ளிக்குதிக்கிற வயசுனு நெனைப்பாய்யா உமக்கு. இன்னோரு ஆளப் போட்டு வேலையப் பாக்கவேண்டியது தானே. என்ன வெறகு மண்டி வச்சு நடத்தறே ? ஊரோட இலவசமா கேஸ் அடுப்பு வேற கவுருமெண்டு கொடுக்குது. வெறகு விக்கிறாராம் வெறகு. நாவன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் பரமசிவம் புலம்பும் புலம்பல் தானிது.

வந்திட்டாரு சிவம். சிவய்யா, நீயும் சொல்லிகிட்டே தான் இருக்கே. நானும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். கையக் கால மடக்கி, ஒடம்ப வளச்சி, வேல பாத்து சாப்பிட்ட உடம்புய்யா. சும்மா உக்காந்து சாப்பிட மனம் வரமாட்டேங்குது.

மேல்துண்டை உதறி படிக்கல்லில் போட்டு நாவன்னாவின் அருகில் பரமசிவமும் அமர்ந்தார். இப்பவாவது சொல்லுமய்யா, ஸ்ரீவிமானத்தின் உச்சியில் இருக்கும் 80 டன் கல், ஒரே கல்லா ? நமக்குத் தெரிஞ்சு அது ஒரே கல்லுனு தான் படிச்சிருக்கோம். ஆனா அது இரு கற்கள் என்றும், ஆரஞ்சுச் சுளையென ஆறேழு கற்கள்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களே என்றார்.

உம்ம குசும்பு உம்ம விட்டுப் போகுமாய்யா. என் தம்பி மக கற்பகம் புகுந்த வீடு மூலமா, கணபதி ஸ்தபதி சொந்தக்காரன்னு சொன்னதில இருந்து கோவிலப் பத்தி ஏதாவுது கேட்டுக்கிட்டே இருக்கியே. ஸ்தபதி அவர்களயே ஓரிரு முறைதான் பாத்துருக்கேன். அவுக பாட்டன் பூட்டன் கட்டுன கோவில் பத்தி எனக்கு என்னய்யா தெரியும் என்று சீறித்தள்ளினார் நாவன்னா.

சரி விடுமய்யா. என்னத்த சொல்லிப்புட்டேன். இம்புட்டுக் கோபம் வருது இந்த வயோதிக வாலிபருக்கு என்று மீண்டும் சீண்டினார் பரமசிவம்.

என்னவிட நீர் ரெண்டு வருசம் மூப்புன்றத மறக்காம இருந்தாச்சரி என்றார் நாவன்னா புன்முறுவல் பூத்தபடி.

வட்ட பல்புகளும், நீள ட்யூப்லைட்டுகளும் மினுக்கி கோவில் வளாகம் முழுதும் ஒளி பரவியது. கம்பீரமாகக் காட்சி அளித்தது ஸ்ரீவிமானம். நந்தியின் மேல் தடவிய எண்ணையின் பளபளப்பில் மேலும் மின்னியது நந்தி மண்டபம். கோவிலிருந்து ஓரிருவராக வெளியேறத் துவங்கினர்.

நம்ம நக்கல் பேச்சு கெடக்கட்டும். என்னவாம் அந்த பயலுக்கு, எதுக்கு வெஷம் குடிச்சானாம் என்று நாவன்னாவைக் கேட்டார்.

வா நடந்துகிட்டே பேசிக்கிட்டு போகலாம் என்று நாவன்னா எழுந்தார். பரமசிவமும் அவரைத் தொடர்ந்தார். மண்டபத்தை விட்டு இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

மராத்தியர் கட்டிய கோட்டைச் சுவர் வாயிலில் சுந்தரபாண்டியனின் தாய் நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொண்ட நாவன்னா, என்னம்மா பய எப்படி இருக்கான் இப்போ என்றார். அழுத அவளின் கண்களால் வீங்கியிருந்தது ஒட்டிப்போன கன்னங்கள்.

நைந்துபோன முந்தானையை வாயில் வைத்தபடி
, கண்களில் நீர் பெருக்கெடுக்க "அப்படியே தான் கெடக்கான். சோறு தண்ணி எறங்க மாட்டேங்குதுய்யா". நெலக்குத்தின தேர் மாதிரி விட்டத்தை வெறித்த படி கெடக்கான்யா என்று தாங்கமுடியாத அழுகையை அடக்கிக் கொண்டாள்.

சுப்ரமணிக்குச் சேதி தெரியுமா என்று கேட்டார் பரமசிவம்.

ஊர் ஊரா போற பொளப்பு அவருக்கு. எப்ப வருவாருனு தெரியல. இப்ப எந்த ஊர்ல இருக்காருன்னும் தெரியல. எப்பவாவுது பக்கத்து வீட்டு போன்ல கூப்பிட்டு பேசுவாரு. அவரா கூப்புட்டாத்தான்யா என்று விம்மினாள்.

ஏதாவுது பேசறானா ? நான் என்ன செய்யட்டும் என்றார் நாவன்னா.

படிக்கனும், படிக்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கான்யா. ஆயிரத்துக்கு மேல மார்க் எடுத்து என்னய்யா ப்ரயோசனம். மேலே படிக்க வைக்க முடியாத வசதியற்ற என் வயிற்றில் பொறந்து இப்படிக் கஷ்டப்படுறானே என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

படிக்கும்போதே உங்க வெறகு மண்டில வேலை செஞ்சுகிட்டே தானய்யா படிச்சான். அதையே முழுசா செய்யிடானு சொன்னாலும் கேக்க மாட்டேன்கிறான்யா என்று தளுதளுத்தாள்.

சரி சரி கண்ண தொடச்சுக்கவே. பெத்தவ கஷ்டம் எங்களுக்கும் புரியுது. நாங்க நாளைக்கு அவன வந்து பாக்குறோம் என்று சொல்லி, கையில் தொங்கிய மஞ்சப் பையில் கையைவிட்டு, சில நூறு ரூபாய்த்தாள்களை உருவி, செல்லம்மாளிடம் நீட்டினார் நாவன்னா. மேல்படிப்புக்கு நாங்க உதவி பண்றோம்னு சுந்தரபாண்டி கிட்ட சொல்லு. வேற ஏதாவுது உதவி தேவைனா சொல்லு என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தனர் பரமசிவமும் நாவன்னாவும்.

சோகம் அப்பிய செல்லம்மாளின் விழிகள் வியப்பில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது முதல் முறையாய். கைகூப்பி இருவரையும் வணங்கி வீடு நோக்கி விறைந்தாள்.

சிறிது தூரம் நடந்து, யாரும் அவர்கள் அருகில் இல்லை என்று அறிந்து, "ஏய்யா நாவன்னா, புத்தி மழுங்கிப் போச்சாய்யா உமக்கு. நல்லாப் படிக்கிற பையனையா வேலைக்கு வெச்சிருந்தே ?" கையக் கால மடக்கி வேல செஞ்சு சாப்பிட்டா மட்டும் போதுமா ? அந்த வைராக்கியம் செய்யற செயல்லயும் இருக்க வேணாமா ? ஒன்னுமில்லாத பயலெல்லாம் ஓகோனு இருக்க இந்தக் காலத்தில படிக்கிற ஒரு பய அழியலாமா ? அதுக்கு நாமலும் உடந்தையா இருக்கலாமா ? என எண்ணையிலிட்ட எள்ளாய்ப் பொறிந்து தள்ளினார் பரமசிவம்.

படிப்புச் செலவுக்கு எங்க வருமானம் பத்தல. நீங்க உதவி பண்ணி அவனுக்கு வேல போட்டுக் கொடுங்க. அந்த சம்பளத்தில அவன் படிச்சிக்கிருவான் என்று ஆத்தாளும், அப்பனும் விழுந்து கெஞ்சினதுக்கு நான் பண்ணின காரியம் அது. என்ன பண்ணச் சொல்றே இப்போ என்று சீறினார் நாவன்னா.

கோவிலைச் சுற்றி வந்து தற்போது சிவகங்கைக் குளத்தருகே இருந்தனர் இருவரும். குப்பையும், முட்புதர்களும் அண்டி இருந்தது. ஒருகாலத்தில் அரண்மனைக்கு இணையாக பராமரிக்கப் பட்ட இடமாக இருக்கலாம் ! குப்பையில் தான் மாணிக்கம் இருக்கும் என்பதால் குளமெங்கும் குப்பையோ என்னவோ !

நாளைக் காலை நேரா சுப்ரமணி வீட்ல சந்திப்போம் என்று சொல்லி இருவரும் விடைபெற்றனர்.

குடியானவர் தெரு, வெறித்த கண்கள் விலகாமல் மேல் பார்த்துக் கிடந்த சுந்தரபாண்டியனின் அருகில் செல்லம்மாள் விரித்த கிழிந்த பாயில் அமர்ந்திருந்தனர் பரமசிவமும், நாவன்னாவும்.

முட்டாப்பய மவனே, இப்படிப் பண்ணிப்புட்டியேடா. மார்க் எடுக்கத் தெரிஞ்ச உனக்கு மத்த விசயம் தெரியலையேடா. படிச்சா மட்டும் போதுமா? உன்கிட்ட வசதியில்லேன்ற காரணத்துக்காக உசிரக்குடுக்கத் துணிஞ்ச நீ, அந்த வைராக்கியத்தை உங்க ஆத்தா சொல்ற மாதிரி முழுநேரம் வேலை செஞ்சு நாளப்பின்ன ஒரு பெரிய ஆளா ஆகிக் காமிக்க வேண்டாமா ?

தமிழ் நாட்டையே ஆண்ட காமராசர் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சாருனு தெரியுமா உனக்கு. பள்ளிக்கூடத்தில் மழையைப் பார்த்துக்கொண்டு படிக்காமல் போன கி.ரா. ஒரு பல்கலைகழகத்துல சிறப்புப் பேராசிரியரா இருந்திருக்கார். கண்ணதாசன் படிச்சாரா என்ன ? எத்தனையோ கவிஞர்கள் இன்னிக்கு இருந்தாலும் உலகம் பூரா அவரத் தான இன்னும் கவியரசர்னு சொல்லுது. இப்படியே சொல்லிகிட்டே போகலாம் படிக்காத மேதைகளைப் பத்தி. வைராக்கியத்துல வேகமா இருக்கத விட விவேகமா இருக்கனும். பாடத்தவிட இதையல்லவா நீ படிச்சிருக்கனும் மொதல்ல. யோசிக்கறதே இல்ல, இந்தக் காலப் பசங்க சட்டுபுட்டுனு முடிவெடுக்கறீங்க. வாழ்ந்து காட்டணும், அது தான் வைராக்கியம்.

செல்லம்மாள் கொடுத்த நீர்க்காபியை அருந்திக் கொண்டே பரமசிவம் சொன்ன சொற்கள் காபியைவிடச் சூடாய் இருந்தது.

நாவன்னா கிட்ட பேசி உன்னோட படிப்புச் செலவுக்கு உதவி பண்ணச் சொல்லியிருக்கேன். நடந்தத மறந்துட்டு நல்லாப் படிச்சு, வேலைக்குப் போய்ட்டு பிற்பாடு நாவன்னாவுக்கு settle பண்ணிடு. என்ன நாஞ்சொல்றது என்று கேட்டார் பரமசிவம்.

கண்கள் மெல்லத் துடிக்க, உடலை சற்று நெளித்து எழுந்து அமர்ந்தான் சுந்தரபாண்டி. நாவன்னாவிடம், எப்ப வரணும்னு சொல்லுங்கய்யா வேலைக்கு என்றான் !

நாற்பது வருடம் முன்பு இவ்வுலகைவிட்டுப் பிரிந்த தன் தமையன் வேலுச்சாமியின் எண்ணம் பரமசிவத்தின் கண்களில் முத்துக்களாய் உதிர்ந்தது.

மார்ச் 30, 2009 யூத்ஃபுல் விகடனில்

-------------

இது எங்க சங்கத்து இருநூறாவது (200) பதிவு. அத பதியறதுல முதல்ல பெருமைப்படறேன். இந்த எண்ணிக்கைகு உழைத்த எங்க சங்கத்து மக்கள் அனைவருக்கும் என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.

இதுவரைக்கும் படித்து, பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இனிமேலும் படிக்கப் போகிறவர்களுக்கு நன்றிகள் பல.

தஞ்சைப் படம், நம்ம தமிழ் ப்ளாக்ல இருந்து எடுத்து போட்டிருக்கேன். அதன் உரிமையாளருக்கு என் நன்றி.

கதை பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

Monday, May 21, 2007

வரப்பு உயர்ந்த வீடு

காலக்கோட்டை புளியமரம் எறங்கு என்று சவுண்டு விட்ட கண்டக்டர், தொடந்து விசிலடிக்கவும், நாளுக்கு சில முறை சாய்ந்தே வரும், ஒரே அரசுப் பேருந்து தள்ளாடி நின்றது. சிலர் இறங்கவும், பலர் ஏறவும், சிறு புழுதி பரப்பிக் கிளம்பியது. இறங்கியவர்களில் பாலுவும் ஒருவன்.

விடுமுறை என்றால் அது கண்டிப்பாக நண்பன் பாண்டியின் வயல் கிணற்றில் குளிக்காமல்க் கழிந்ததில்லை. பாண்டியின் வயலைக் கடந்து தான் அப்பேருந்து வந்தது. கேணி நிறம்பி வழிந்ததைக் கண்டு சந்தோசப்பட்டான் பாலு. ஆனால், அரையாண்டு விடுமுறைக்கு வரும்போது கூட அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை. இப்போது வயல்வெளிகளைச் சுற்றி ஏதோ பெரிய மாற்றம் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை.

சுற்றிப்பார்த்தால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு குன்றுகள். சின்ன அருவி கூட உண்டு எங்க ஊர்ல. மதுரயச் சுத்தி, திண்டுக்கல்லுக்கு அப்புறம் எங்க ஊர் தான் குளுகுளுனு இருக்கும்னு இந்தப் பக்கத்து ஆளுகளுக்குத் தெரியும் என்ற நினைவுகளுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடக்க ஆரம்பித்தான் பாலு. அக்ரகாரம் தாண்டி, பெருமாள் கோனார் வீடு தாண்டி, காமராஜ் தெருவில் நுழைந்தான். வலப்பக்கம் நாலு வீடு தள்ளியிருந்த அவனது வீட்டின் கதவு, சாத்தியிருந்தாலும் தாழிடாமல் இருந்தது. கதவைத் தள்ளித் திறக்கையில் கேட்ட க்ரீச்சில், உள்ளிருந்து "யாரதுதுதுதுதுது" என்றது அவன் அம்மாவின் குரல்.

நாந்தாம்மா என்றான்.

வா ராசா .... பஸ் ஹாரன் சத்தம் கேட்டுச்சு, நீதா-னு நெனச்சேன். எப்படிப்பா இருக்கே, பரீச்சே எப்படி எழுதிருக்கே. வழக்கமான கேள்விகள் தானேயென்று தாயின் பரிவு அவ்வயதில் புரியவில்லை.

சரிம்மா நாங்கெளம்பறேன்.

என்னப்பா வந்ததும் வராததுமா வெளிய கெளம்பிட்ட. ஏதாவுது சாப்பிடறிய ?

ஒன்னும் வேணாம்மா ...

நீ இன்னிக்கு வர்ரேனு சொன்னேன். லெச்சுமி அத்தே உனக்காக நாட்டுக்கோழி கொழம்பு வச்சி எடுத்தாரேனு சொல்லியிருக்காக. சீக்கிரம் வந்துரு ராசா. கைலி மாற்றி, சரிம்மா என்றான். தந்தையின் மிதிவண்டி பக்காவாக இருந்தது. நன்றாகத் துடைத்து பளபளவென்று வைத்திருந்தார். stand எடுத்து விட்டு, வீட்டினுள்ளிருந்து அப்படியே மிதிவண்டியைத் தூக்கி, வாசல் படிகள் கடந்து, தெருவில் இறக்கிப் பாண்டி வீடு நோக்கி மிதித்தான்.

வாடா பாலு. எப்படி இருக்கே ? பாத்து எவ்ளோ நாளாச்சு டா என்றான் பாண்டி. கை குலுக்கிக் கொண்டனர் இருவரும். துண்டு, சோப்பு டப்பா எல்லாம் கொண்டாந்திட்டியா மறக்காம ? சத்த இரு, இந்தா வந்திர்ரேன் என்று வீட்டினுள் சென்றான் பாண்டி. பரபரவென்று தன் தந்தையின் சட்டைப் பாக்கெட்டைத் துளாவினான்.

கூடத்தில் படுத்திருந்த அவனது பாட்டி, என்னடா பாண்டி சத்தம் என்றதும், "இது மட்டும் எப்படித்தான் அது காதுல கேக்குமோ", "அதும் கண்ணும் கரெக்டா தெரியுமோ" என்று முனுமுனுத்தான். ஏ கெழவி பேசாம படு, நான் note-அ தேடிக்கிட்டிருக்கேன் என்றான்.

அவன் சொன்னது எந்த note-u என்று அவனது பாட்டிக்குத் தெரியாமலில்லை. ஒங்கப்பன் செஞ்சத தானடா நீயும் செய்யறே, போடா போக்கத்தவனே என்று செல்லமாகக் கடிந்து, வழக்கம் போலத் தன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.

மச்சி எரநூறு தேரியிருக்கு டா. பணம் கிடைத்த சந்தோசத்தில் இருவரும் உற்சாகமானார்கள். எவ்ளோ நாளாச்சிடா மச்சி நாம சந்திச்சு. குமார் வந்திருப்பானா டா என்றான் பாலு.

அவன் நேத்தே வந்திட்டன். நீ தான் லேட்டு ...

நீ இன்னிக்கு வர்ர சேதி சொல்லிட்டேன் எல்லாருக்கும். இப்ப வந்திருவாய்ங்க பாரு எல்லோரும்.

இருவரும் வெளித் தின்னையில் வந்து அமர்ந்து, அனைவரின் வரவுக்கும் காத்திருந்தனர்.

உச்சி வெயில். படுத்திருந்த பாட்டி, 'யப்பா, முருகா' என்று ஆரம்பித்து அனைத்து சாமிகளையும் ஒருமுறை அழைத்து, தனது மஞ்சளாகிப் போன வெள்ளைப் புடவையை சரிசெய்து கொண்டு எழுந்தாள். பின்கட்டுக் க்தவைத் திறந்து வெளியே வந்தாள். கூசிய இரு கண்களையும் மெல்லக் கசக்கிக் கொண்டு அவள் வருவதைப் பார்த்து, கட்டிக் கிடந்த காங்கேயம் காளைகள் இரண்டும் எழுந்து நின்றன.

இந்த ஆடு, கோழி எல்லாம் எப்படி அதுங்க இஷ்டத்துக்கு திரியுது. நம்மை மட்டும் ஏன் கட்டிப்போட்றாய்ங்க என்று மாடுகளுக்குத் தோன்றியிருக்குமா ? உழைப்பாளி எங்கே விட்டுட்டுப் போய்ருவியோன்னு மனிதனுக்குப் பயம், என்றும் அதுகளுக்குத் தெரியுமா ?

காற்று தென்றலாக வருடியது வேப்பமரத்தினடியில். வெயிலின் வெக்கைத் துளியுமில்லை. களனியைக் களைந்து, பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு ஊரலைத் திறந்து விட்டாள். அவிழ்த்து விட்ட காளைகள் இரண்டும் மூக்குப் பிடிக்கக் குடித்தன.

பக் பக் என்று சுற்றி சுற்றி வந்த கோழிகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் குருனை அரிசியைத் தூவினாள். அந்த நேரத்திலும் சேவல் ஓட்டின் மேல் நிழலோரமாய் நின்று கொண்டிருந்தது.

வைக்கபடப்பினருகில் சுருண்டு படுத்திருந்த நாய், காதுகளைக் கூராக்கி, லேசாகக் கண் திறந்து பார்த்து, வாலை அங்கும் இங்கும் ஆட்டிவிட்டு மீண்டும் கண் மூடிக் கொண்டது.

தூரத்தில் நாலைந்து சைக்கிள் வருவதைப் பார்த்துத் துள்ளி எழுந்தனர் பாண்டியும், பாலுவும். வருவது ரவி, ஆறுமுகம், கணேசன், மாரி, கோடி, மணி என்பது தெளிவாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் அனைவரும் பாண்டியின் வீட்டை அடைந்தனர்.

எல்லாரும் பரீட்சை எப்படிடா எழுதிருக்கீங்க என்று பாண்டி கேட்க, அதற்கு ஆறுமுகம், அது கெடக்கு, வழக்கம் போல பெயில் தான். அத எதுக்கு ஞாபகப்படுத்தறே, அதான் லீவு விட்டாய்ங்கள்ல, "அனுபவிக்கனும், ஆராயக்கூடாது" என்றதும் அனைவரும் சிரித்தனர்.

சரி சரி நேரமாச்சு கெளம்புங்கடா என்று அவசரப்படுத்திய பாண்டி, இந்தா மாரி ரூவா, நம்ம ராஜா புரோட்டா ஸ்டால்ல போய், சிக்கன் சாப்ஸ், எறா பொரியல், மட்டன் குருமா, அப்புறம் ... புரோட்டா கொஞ்சமா போதும், வாங்கிட்டு நேரா நம்ம வயலுக்கு வந்திடு என்று அவனை அனுப்பினான்.

பிரபல நண்பர்கள் குழுவின் ஆஸ்த்தான பாடகர் கானா கணேசனின் கணீர் முழக்கத்துடன் கிளம்பினர் அனைவரும். பாட்டு அலுப்புத் தட்டியவுடன், சில மாத காலப் பிரிவில் தங்களுக்கு ஏற்பட்ட அவரவரின் பல கதைகள் பேசி கல கலவென களைப்பு மறந்து பல கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துச் சென்றனர். ரெட்டைப் பாலம் தாண்டி, ரயில்வே கிராஸிங் அப்புறம் வயல் வெளி ஆரம்பம்.

அதுவரை தெரியவில்லை, பின்பு வழி நெடுக அவ் வித்தியாசத்தை மீண்டும் பாலுவால் உணர முடிந்தது. என்ன ஒரு வெக்கை, போன விடுமுறைக்கு இப்படி இல்லியே என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களைத் தொடர்ந்தான்.

சற்று தூரம் சென்றவுடன், கருவேல மர நிழலில் அமர்ந்திருந்தாள் கல்யாணப் பருவத்தைத் தாண்டிய பொன்னழகு. ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்தன. என்ன பொன்னழகு, எப்போ கல்யாணம், புள்ள குட்டி எல்லாம் பாக்கப் போறே என்றான் ஆறுமுகம் விசமத்தனமாய்.

"மவராசா, நீங்க எப்ப வருவீகனுதேன் காத்திருக்கேன், நீங்க கட்டிகிறது, இந்தச் சிறுக்கி மவள !" என்று பொன்னழகு சொல்லவும், மீண்டும் சிரிப்பொலி சிதறியது. டேய் டைனமோ தலயா, பேசாம வாடா என்று ரவி சத்தம் போடவும், அமைதியானான் ஆறுமுகம்.

தார் ரோட்டிலிருந்து பிரிந்து தாழ்வாய்க் கீழிறங்கிய வண்டிப் பாதையில், சிறிதும் தயக்கமின்றி சர் சர்ரென்று ஒருவர் பின் ஒருவராய் இறங்கினர். சிறிது தொலைவில் ஒத்தயடிப் பாதையில் பயணித்துப் பாண்டியின் வயலை அடைந்தனர்.

வயலைச் சுற்றி வெகு தொலைவு வரை நெடுகிலும் அரையடி வெளியில் தெரியும் படி கல் நடப்பட்டிருந்தது. பாலு பாண்டியிடம் கேட்டான், என்ன மாப்ளே போன தடவை இங்க வந்ததுக்கும் இப்போ வர்றதுக்கும் நெறைய மாற்றம் தெரியுது. எவ்ளோ மரங்கள் இருந்திச்சு. கடலை, கரும்பு, நெல்லுனு எதாவுது இருக்குமே டா. பொட்டல் காடா கெடக்கு இப்ப எல்லாம் என்றான்.

விசயம் தெரியாதா உனக்கு ?! நம்ம வயலையும், செல்லத் தொர சித்தப்பு வயலையும் தவிர்த்து எல்லாம் வெல போய்ருச்சு என்றான்.

எதுக்கு ? புரியும் படி வெளக்கமா சொல்லுடா மாம்ஸ் என்றான் பாலு ஆச்சரியத்துடன்.

கொஞ்ச நாள் முன்னாடி மதுரயில இருந்து ஒரு சேட்டு நம்ம நாட்டாம வீட்டுக்கு வந்தாரு. ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாங்க. கடைசில தான் தெரிஞ்சது அவரு நம்ம வயக்காட்ட வாங்க தான் வந்திருக்காருனு. நம்மாளுக முக்காவாசி பேருகிட்ட பேசி, ஐநூறு ஏக்கர வளைச்சி வாங்கிட்டாரு.

மதுர என்ன மதுர, நம்ம ஊர் பங்களூரூ மாதிரி ஆகிடும் பாருங்க என்றான் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்த மாரி. சென்னை கூட சென்றறியாத மாரி பங்களூரைச் சொன்னவுடன் அனைவருக்கும் ஆச்சரியம். ஆச்சரியப்படாதீங்கண்ணே, சென்னை வெய்யிலு கொளுத்தும்னும், பங்களூரில் வெய்யில் இருந்தாலும் கொஞ்சம் குளுகுளுனு இருக்கும்னும் கேள்விப்பட்டிருக்கேன். எல்லாம் போனாத் தான் தெரியுமா ? இந்தா இப்ப பாலண்ணே வந்திருக்காரு, திருச்சியப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியதுதேன் என்றான்.

வயல வித்துட்டுப் பொழப்புக்கு என்ன செய்யப் போறாங்க எல்லாரும் என்றான் பாலு. அவங்களே அதப்பத்திக் கவலப்படல. உனக்கேன்டா கஷ்டம் என்றான் பாண்டி. எல்லாம் டபுல் மடங்கு வெல செய்யும் மாயம். கேட்டா "வெளச்சலே இல்ல, என்ன தம்பி பண்றதுனு" சொல்றாரு சாமிக்கண்ணு அண்ணே.

போன வருசம் கூட ஒரு செய்தி படிச்சேன், மதுரையில Tidel Park ஒன்னு வர்றதா ! அதுக்கும் நம்ம ஆளுக வயக்காட்ட வித்ததுக்கும் தொடர்பிருக்குமோ என்றான் பாலு.

கரெக்டா புடிச்சடா பாலு. நீ லா படிக்கப் போகலாம்டா என்றான் குமார். இந்த எடத்த வாங்கின சேட்டு, இங்க தர வாரியா வீடுகள கட்டப் போராறாம். பங்களா போன்ற தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதற்கு ஏற்ற வசதிகள் கொண்ட மற்ற கட்டிடங்கள் எல்லாம் கட்டி ஒரு சொகுசுபுரியா ஆகப்போகுது நம்ம ஊரு, மாரி சொன்னதப் போல என்றான் குமார்.

இங்க வீடு கட்டினா வாங்குறதுக்கு யாரு இருக்கா என்றான் பாலு.

என்னண்ணே இப்படிக் கேட்டுட்டிங்க. இங்க தெக்கால இருந்து ஒரு ரோடு போடப் போறாய்ங்களாம். அந்த ரோடு போட்டுட்டா நம்ம ஊருல இருந்து மதுரைக்கு பத்து நிமிஷம்தேன். ஏதோ ஒரு பார்க் சொன்னிகளே, அதுக்கு இந்தியா முழுக்க இருந்து ஆளுக வருவாகளாம்ல வேலைக்கு. அவுகள கணக்குப் பண்ணித்தேன் இந்த சேட்டு எல்லாம் செட்டப்பா பண்றாரு. இப்பல்லாம் வாடகைக்கு இருக்கத விட சொந்தமா வாங்குறதுதேன் அவுகளுக்கு சவுகரியமாம்ல என்றான் மாரி.

நாமெல்லாம் பள்ளிக்கூடம் முடிச்சி B.A., M.A.,னு படிக்கப்போவோம். அவுகள்லாம் computer படிச்சவகளாம். மாசத்துக்கே லச்சக்கணக்குல சம்பளமாம்ல என்று வியந்தான் ரவி. ஆனா ஒன்னுடா, நம்ம ஆறுமுகம் இப்படியே பெயிலாயிகிட்டே இருந்தான்னா, மாடு மேய்க்க ஒரு வயல் கூட அவனுக்கு இருக்காது பாத்துக்குங்க என்று ரவி சொல்லவும், எட்டுத் திக்கும் விட்டுத் தெரித்து வானை முட்டியது சிரிப்பலை.

நாமும் இவர்களுடன் சேர்ந்து சிரிக்கலாமா ?! இல்லை சிந்திப்போமா ?!

Saturday, May 05, 2007

மாறினால் மறக்க முடியுமா ?

"சைலூ, இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் கெளம்பிடு. ஞாபகம் இருக்குல்ல ?" என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

"எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.

கைப்பைகளில் மதிய உணவைத் தினித்துக் கொண்டு மாடிப் படியிறங்கினர் இருவரும்.

இவர்கள் அறை தள்ளி இடப்புறம் வினோதினி, வலப்புறம் எதிர் அறையில் ராஜி. அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அதுவரை அமைதியாய் இருந்த அந்த இருண்ட படிக்கட்டு டக், டக், டக் என்று ஜட்கா வண்டிப் பாதையானது. மெல்லப் போங்கடீ என்று சன்னமாய்க் கத்தினாள் சொர்ணா.

இந்த ஓட்டப் படிக்கட்டு என்னமோ நம்ம ஹைஹீல்ஸ்ல தான் ஒடையற மாதிரி திட்டும் அந்த 'பிங்க் பேந்த்தர்'. வார்டனின் அறை தாண்டும் போது சற்றே எட்டிப் பார்த்துச் சொன்னாள் ராஜி. சூப்பர் பேருக்கா. பாரு தூங்கும் போது கூட ரோஸ் பவுடர் அடிச்சிருக்கறத.

ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தும், ஹே, இந்த பொட்டு எங்கே வாங்கினே ? இந்த துப்பட்டா சூப்பரா இருக்கே ? அவ நெயில் பாலிஸ் பாருங்கடீ, கலர் different-ஆ இருக்கே ? என்று நித்தம் எழும் பல்லாயிரம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர் அனைவரும். சைலு, சிரிப்பை வெளியிலும், இருக்கத்தை உள்ளிலும் தாங்கி அவர்களைத் தொடர்ந்தாள்.

காரை ஸ்டார்ட் செய்தாள் ராஜி. சைலு, நீ நேத்து முன்னாடி ஒக்காந்தே, இன்னிக்கு அது முடியாது. மரியாதயா பின்னாடி வா என்று கடிந்தாள் வினோதினி.

பாவம் விடுடி. அவ ஒக்காந்திட்டுப் போறா. சின்னக் கொழந்த மாதிரி அடிச்சிக்கறீங்களே என்று அங்களாய்த்தாள் சொர்ணா. பரவாயில்ல, இந்தா ஒக்காந்துக்கோ என்று சினுங்கலுடன் பின் சீட்டுக்கு வந்துவிட்டாள் சைலு.

பழைய மஹாபலிபுரம் கடற்கரை சாலையில் பயணித்து, பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்தனர். ராஜி, இன்னிக்கு நாங்க சீக்கிரம் கெளம்பிடுவோம். " சாயந்திரம் எங்களுக்கு காத்திருக்காத சரியா" என்ற சொர்ணாவிற்கு தலையசைத்து அவரவர் கட்டிடங்களுக்குச் சென்றனர்.

வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைப்பிலேயே வீண் என்று தெரிந்த மின்னஞ்சல்கள் சிலவற்றை திறக்காமலே அழித்தாள். மணி பதினொன்றாகும் போது, டீ குடிக்கப் போலாம் வரியாடா என்ற ஜெமிமாவுடன் சென்றாள். ஜெமிமா கேட்டாள், ஒரு மாதிரியா இருக்கியே ஏதும் பிரச்சினையா ? உங்க TL பரந்தாமன் கூட லீவுலல இருக்காருனு கேள்விப்பட்டேன் !

அவரு எப்பவுமே பிரச்சினை இல்லடி. மாட்யூல் நேரத்துக்கு முடிச்சி டாகுமெண்ட் அடிச்சிட்டாப் போதும். சூப்பர் type.

எனக்கும் வாச்சிருக்கே ஒரு சிடுமூஞ்சி. பேரப் பாரு "சுந்தர வடிவேல்". பேருக்கும் ஆளுக்கும், ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது. ரெண்டு நிமிஷம் எங்கேயும் போய்டக்கூடாது. இப்பக் கூட என்னத் தேடிட்டு இருக்கும். ஜெமிமாவின் ஹிம்ம்ம்ம்மில் அத்தனை அழுத்தம் தெரித்தது.

இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் சைலு. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை, மேசைத் தொலைபேசி மிதமாய்க் களைத்தது. அழைப்பானில் ராஜியின் பெயர்.

சொல்லுடா ராஜி.

இல்லே ... சொர்ணாக்கா கால் பண்ணிருந்தாங்க. உனக்கும் கொஞ்சம் முன்னால செல்-ல கால் பண்ணாங்களாமே. எங்கேடீ போய்ட்டே ?

செல்லை மேசையிலேயே விட்டுவிட்டு ஜெமிமாவுடன் டீ குடிக்கச் சென்றது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

அவங்களால இன்னிக்கு சாயந்திரம் வரமுடியாதாம். ஏதோ அவங்க ப்ராஜக்ட்-ல மேஜர் டிபெக்ட்டாம். இப்ப ஆன்-சைட் கூட கான்பரன்ஸ் கால்ல இருக்காங்க. எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாதாம்.

அக்கா 4 மணிக்கா கெளம்ப்பிடச் சொன்னாங்க. நீ ரெடியானவுடன் சொல்லு. காலையில் பார்க்கிங் பண்ண இடத்துல சந்திப்போம்.

TTK சாலை, பார்க் ஷெரட்டனில் நுழைந்தது, ராஜியின் கார். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, கப்பூச்சினோ நோக்கிச் சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து, லேசாய்ப் புன்னகை சிந்தி வரவேற்றான் ரமேஷ். இருவரும் மவுனமாய் அமர்ந்தனர். காபி என்றான். இல்லை வேண்டாம் என்றனர்.

ஆறு மணிக்கு உங்களுக்கு மும்பை flightனு சொர்ணாக்கா சொன்னாங்களே என்று கேட்ட சைலு, அதான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டிங்கள்ல, இன்னும் எதுக்கு நேர்ல வரச்சொல்லிப் படுத்தறிங்க. பாவம் அவங்க ரொம்ப நொந்து போய்ருக்காங்க.

டிக்கெட் cancel பண்ணிட்டேன். ஆமா, சொர்ணா வல்ல ? என்ற ரமேஷ், எனக்குத் தெரியும் அவ வர மாட்டானு என்று மெதுவே முனகினான்.

விஷயம் என்னன்னா, என்னைக் கட்டிக்கரதா இருந்த அந்த மும்பைக்கார U.S. பொண்ணு, ஏற்கனவே ரெண்டு, மூனு கல்யாணம் பண்ணி divorce வாங்கினவனு இப்பத்தான் தெரிஞ்சது.

கேவலமா இல்ல, நீ எல்லாம் படிச்சவன் தானே. எல்லாம் easyயா வேணும் உனக்கு. நாலு வருஷம். எப்படிப் பழகினாங்க உன்கூட. கொஞ்சமாவது யோசிச்சியா ? ரெண்டு மாசம் மும்பையில அவ கூடப் பழகிட்டு எப்படித் தான் அக்காவ கழட்டி விட மனசு வந்துச்சோ ?

உன் கோபத்திலயும், சொர்ணாவின் கோபத்திலயும் ஆயிரம் அர்த்தம் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லல. நான் இப்ப மாறிட்டேன். ஒரு முடிவு செஞ்சிருக்கேன். எங்க வீட்டுல ஏற்கனவே சொர்ணாவுக்கு ஓகே சொன்ன மாதிரி, அவளையே கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன். இத மறக்காம சொர்ணாகிட்ட சொல்லிடுங்க. நான் அவள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்லுங்க என்று கெஞ்சினான் ரமேஷ்.

நீங்க சொல்லிட்டிங்க. அவ்ள சீக்கிரம் அக்காவல மறக்க முடியுமானு தெரியல. ஆனா ஒன்னு, அவங்க மனசு மாறுகிற நிலையில இல்ல. அதுக்கு இந்த சான்றே போதும் என்று ரமேஷ், சொர்ணாவிற்கு அளித்த அன்பளிப்புக்கள், வாழ்த்து அட்டைகள், .... கடிதங்கள் அனைத்தும் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு ராஜியும், சைலுவும் அங்கிருந்து கிளம்பினர்.