Saturday, May 05, 2007

மாறினால் மறக்க முடியுமா ?

"சைலூ, இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் கெளம்பிடு. ஞாபகம் இருக்குல்ல ?" என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

"எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.

கைப்பைகளில் மதிய உணவைத் தினித்துக் கொண்டு மாடிப் படியிறங்கினர் இருவரும்.

இவர்கள் அறை தள்ளி இடப்புறம் வினோதினி, வலப்புறம் எதிர் அறையில் ராஜி. அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அதுவரை அமைதியாய் இருந்த அந்த இருண்ட படிக்கட்டு டக், டக், டக் என்று ஜட்கா வண்டிப் பாதையானது. மெல்லப் போங்கடீ என்று சன்னமாய்க் கத்தினாள் சொர்ணா.

இந்த ஓட்டப் படிக்கட்டு என்னமோ நம்ம ஹைஹீல்ஸ்ல தான் ஒடையற மாதிரி திட்டும் அந்த 'பிங்க் பேந்த்தர்'. வார்டனின் அறை தாண்டும் போது சற்றே எட்டிப் பார்த்துச் சொன்னாள் ராஜி. சூப்பர் பேருக்கா. பாரு தூங்கும் போது கூட ரோஸ் பவுடர் அடிச்சிருக்கறத.

ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தும், ஹே, இந்த பொட்டு எங்கே வாங்கினே ? இந்த துப்பட்டா சூப்பரா இருக்கே ? அவ நெயில் பாலிஸ் பாருங்கடீ, கலர் different-ஆ இருக்கே ? என்று நித்தம் எழும் பல்லாயிரம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர் அனைவரும். சைலு, சிரிப்பை வெளியிலும், இருக்கத்தை உள்ளிலும் தாங்கி அவர்களைத் தொடர்ந்தாள்.

காரை ஸ்டார்ட் செய்தாள் ராஜி. சைலு, நீ நேத்து முன்னாடி ஒக்காந்தே, இன்னிக்கு அது முடியாது. மரியாதயா பின்னாடி வா என்று கடிந்தாள் வினோதினி.

பாவம் விடுடி. அவ ஒக்காந்திட்டுப் போறா. சின்னக் கொழந்த மாதிரி அடிச்சிக்கறீங்களே என்று அங்களாய்த்தாள் சொர்ணா. பரவாயில்ல, இந்தா ஒக்காந்துக்கோ என்று சினுங்கலுடன் பின் சீட்டுக்கு வந்துவிட்டாள் சைலு.

பழைய மஹாபலிபுரம் கடற்கரை சாலையில் பயணித்து, பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்தனர். ராஜி, இன்னிக்கு நாங்க சீக்கிரம் கெளம்பிடுவோம். " சாயந்திரம் எங்களுக்கு காத்திருக்காத சரியா" என்ற சொர்ணாவிற்கு தலையசைத்து அவரவர் கட்டிடங்களுக்குச் சென்றனர்.

வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைப்பிலேயே வீண் என்று தெரிந்த மின்னஞ்சல்கள் சிலவற்றை திறக்காமலே அழித்தாள். மணி பதினொன்றாகும் போது, டீ குடிக்கப் போலாம் வரியாடா என்ற ஜெமிமாவுடன் சென்றாள். ஜெமிமா கேட்டாள், ஒரு மாதிரியா இருக்கியே ஏதும் பிரச்சினையா ? உங்க TL பரந்தாமன் கூட லீவுலல இருக்காருனு கேள்விப்பட்டேன் !

அவரு எப்பவுமே பிரச்சினை இல்லடி. மாட்யூல் நேரத்துக்கு முடிச்சி டாகுமெண்ட் அடிச்சிட்டாப் போதும். சூப்பர் type.

எனக்கும் வாச்சிருக்கே ஒரு சிடுமூஞ்சி. பேரப் பாரு "சுந்தர வடிவேல்". பேருக்கும் ஆளுக்கும், ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது. ரெண்டு நிமிஷம் எங்கேயும் போய்டக்கூடாது. இப்பக் கூட என்னத் தேடிட்டு இருக்கும். ஜெமிமாவின் ஹிம்ம்ம்ம்மில் அத்தனை அழுத்தம் தெரித்தது.

இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் சைலு. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை, மேசைத் தொலைபேசி மிதமாய்க் களைத்தது. அழைப்பானில் ராஜியின் பெயர்.

சொல்லுடா ராஜி.

இல்லே ... சொர்ணாக்கா கால் பண்ணிருந்தாங்க. உனக்கும் கொஞ்சம் முன்னால செல்-ல கால் பண்ணாங்களாமே. எங்கேடீ போய்ட்டே ?

செல்லை மேசையிலேயே விட்டுவிட்டு ஜெமிமாவுடன் டீ குடிக்கச் சென்றது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

அவங்களால இன்னிக்கு சாயந்திரம் வரமுடியாதாம். ஏதோ அவங்க ப்ராஜக்ட்-ல மேஜர் டிபெக்ட்டாம். இப்ப ஆன்-சைட் கூட கான்பரன்ஸ் கால்ல இருக்காங்க. எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாதாம்.

அக்கா 4 மணிக்கா கெளம்ப்பிடச் சொன்னாங்க. நீ ரெடியானவுடன் சொல்லு. காலையில் பார்க்கிங் பண்ண இடத்துல சந்திப்போம்.

TTK சாலை, பார்க் ஷெரட்டனில் நுழைந்தது, ராஜியின் கார். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, கப்பூச்சினோ நோக்கிச் சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து, லேசாய்ப் புன்னகை சிந்தி வரவேற்றான் ரமேஷ். இருவரும் மவுனமாய் அமர்ந்தனர். காபி என்றான். இல்லை வேண்டாம் என்றனர்.

ஆறு மணிக்கு உங்களுக்கு மும்பை flightனு சொர்ணாக்கா சொன்னாங்களே என்று கேட்ட சைலு, அதான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டிங்கள்ல, இன்னும் எதுக்கு நேர்ல வரச்சொல்லிப் படுத்தறிங்க. பாவம் அவங்க ரொம்ப நொந்து போய்ருக்காங்க.

டிக்கெட் cancel பண்ணிட்டேன். ஆமா, சொர்ணா வல்ல ? என்ற ரமேஷ், எனக்குத் தெரியும் அவ வர மாட்டானு என்று மெதுவே முனகினான்.

விஷயம் என்னன்னா, என்னைக் கட்டிக்கரதா இருந்த அந்த மும்பைக்கார U.S. பொண்ணு, ஏற்கனவே ரெண்டு, மூனு கல்யாணம் பண்ணி divorce வாங்கினவனு இப்பத்தான் தெரிஞ்சது.

கேவலமா இல்ல, நீ எல்லாம் படிச்சவன் தானே. எல்லாம் easyயா வேணும் உனக்கு. நாலு வருஷம். எப்படிப் பழகினாங்க உன்கூட. கொஞ்சமாவது யோசிச்சியா ? ரெண்டு மாசம் மும்பையில அவ கூடப் பழகிட்டு எப்படித் தான் அக்காவ கழட்டி விட மனசு வந்துச்சோ ?

உன் கோபத்திலயும், சொர்ணாவின் கோபத்திலயும் ஆயிரம் அர்த்தம் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லல. நான் இப்ப மாறிட்டேன். ஒரு முடிவு செஞ்சிருக்கேன். எங்க வீட்டுல ஏற்கனவே சொர்ணாவுக்கு ஓகே சொன்ன மாதிரி, அவளையே கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன். இத மறக்காம சொர்ணாகிட்ட சொல்லிடுங்க. நான் அவள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்லுங்க என்று கெஞ்சினான் ரமேஷ்.

நீங்க சொல்லிட்டிங்க. அவ்ள சீக்கிரம் அக்காவல மறக்க முடியுமானு தெரியல. ஆனா ஒன்னு, அவங்க மனசு மாறுகிற நிலையில இல்ல. அதுக்கு இந்த சான்றே போதும் என்று ரமேஷ், சொர்ணாவிற்கு அளித்த அன்பளிப்புக்கள், வாழ்த்து அட்டைகள், .... கடிதங்கள் அனைத்தும் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு ராஜியும், சைலுவும் அங்கிருந்து கிளம்பினர்.

13 comments:

  1. என் சந்தேகம் எல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.

    //என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

    "எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

    சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை
    மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.//


    எந்த ஹாஸ்டலில் நாமே சமைச்சுக்கணும்?

    ReplyDelete
  2. நல்ல நடை, புதிய தமிழ்சொற்கள். வாழ்க்கையை பிரதிபலிக்கும் சம்பவங்கள்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  3. tulsi,

    அவங்க pack தானே பண்ணின மாதிரி கதை ஆரம்பிக்குது. சமைக்கிற மாதிரி கதைல இல்லியே !

    சந்தேகம் தீர்ந்திருக்கும்னு நெனைக்கறேன் !!

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  4. மா சிவக்குமார்,

    கதையை வாசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

    உங்களுடைய blog சிலவற்றைப் நுனிப்புல் மேய்ந்தேன். நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் போது விரிவாகப் படிக்க எண்ணியிருக்கிறேன்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  5. //அவங்க pack தானே பண்ணின மாதிரி கதை ஆரம்பிக்குது. சமைக்கிற மாதிரி கதைல இல்லியே !//

    ஆஹா, விழுந்தாலும் புல் தரையில விழுந்தாரய்யா!!! மண் ஒட்டவில்லை, முகத்தில் புல் ஒட்டியிருக்குதே.

    நல்ல கதை. முரளி - சதங்காவின் லேடீஸ் ஹாஸ்டல் அனுபவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? திரும்பி நாகு கோடி காட்டியிருக்கிறான் என்று கதை பண்ண வேண்டாம். நான் முகத்தில் புல் என்றுதான் சொல்லியிருக்கிறேன்!

    ReplyDelete
  6. அடடா, ஒரு ஆள, ஆர அமர ஆணி புடுங்க விட மாட்டேங்கராங்க,

    நாகு சதங்கா ஒரு ஆண் என்பது அவருடைய வளைதளத்தில இருந்து தெரிந்து விட்டது.
    நான் கொலைக் கதை எழுதும் போது சதங்கா ஒரு லேடீஸ் ஹாஸ்டல் கதை எழுத முடியாதா. மேலும் அவருக்கு நல்லா எழுதவும் வருகிறது.

    சதங்கா, இனி உங்கள் கதையைய் பற்றிய என்னுடைய கருத்து, இது உங்கள் கதையைய் படிக்கும் எல்லோருடைய கருத்து என்று நினைக்க வேண்டாம்.
    சொல்ல வந்ததை நறுக்கென சொல்ல முயற்சித்தமைக்கு பாராட்டுகள்.
    1. கதை யாருடைய பார்வையில் செல்கிறது - சைலஜா என்பது சிறிது நேரத்திற்கு பிறகுதான் தெரிகிறது.
    கதை ஆரம்பித்த போது பொதுவில் ஆரம்பித்து விட்டு, அதை ஒருவருடைய பார்வையில் செலுத்தும் போது குழப்பம் வந்து விட்டது.
    2. ஜெமிமா கதா பாத்திரம் தேவையில்லாத ஒன்று, அதை சைலஜாவைக் கொண்டு சொல்ல வைத்திருக்கலாம் ஆங்கிலத்தில் 'stipulate' என்பது போல்.
    3. ஒரு கனமான விஷயத்தை சற்று அலட்சியமாக சொல்லி இருப்பது மிக நல்ல முயற்சி ஆனால் அதற்கு முன் வாசகர்களுக்கு ஒரு துப்பு தந்திருந்தால்,
    அதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.

    என் கருத்துக்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாம், நீங்கள் கதை சொல்லும் நடை நன்றாக இருக்கிறது, கதைக் களம் நல்ல தேர்வு, நிறைய எழுதவும்,
    முடிந்தவரை விமர்சிக்காமல் படிக்கிறேன்.

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  7. நாகு,

    நீளளளள ... கதையை வாசித்துப் பின்னூட்டமைக்கு மிக்க நன்றி.

    நீங்க என்ன தான் built-up கொடுத்தாலும், முரளி அவராவே கண்டுபிடிச்சி கில்லாடினு நிரூபிச்சிட்டார் ;-)

    என்றும் அன்புடன்
    சதங்கா.

    ReplyDelete
  8. சதங்கா,

    என்ன 'Mark Antony' டைலாக்! அதாங்க 'வஞ்சப் புகழ்ச்சி அணி' போட்டு தாக்கரீங்க.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  9. முரளி,

    உள்ள(த்)தைச் சொல்கிறேன். மிகத் துல்லியமான விமர்சனம்.

    //நாகு சதங்கா ஒரு ஆண் என்பது அவருடைய வளைதளத்தில இருந்து தெரிந்து விட்டது.//

    எப்பவோ எதிர் பார்த்தேன். Not too late. ;-)

    //சொல்ல வந்ததை நறுக்கென சொல்ல முயற்சித்தமைக்கு பாராட்டுகள். //

    மிக்க நன்றி.

    விமர்சனம் # 1 : ரொம்பச் சரி. எங்கேடா தப்புனு, ரெண்டு மூனு முறை படித்துப் பார்த்த போது தான் புரிந்தது யாரை முதன்மைப் படுத்தி சொல்றோம்னு. சில நேரம் சிந்தனையில் இருக்கும், வார்த்தையில் வராது போகும். Good catch !

    விமர்சனம் # 2 : நாயகியின் இருக்கத்தைத் தளர்த்து கதையை நகர்த்த ஒரு நட்பைக் காட்ட எண்ணியதன் விளைவு 'ஜெமிமா' கதாபாத்திரம்.

    விமர்சனம் # 3.
    //ஒரு கனமான விஷயத்தை சற்று அலட்சியமாக சொல்லி இருப்பது மிக நல்ல முயற்சி //

    This is also a good catch. அலட்சியத்தைக் கண்டு பாராட்டியதற்கு நன்றி.

    //ஆனால் அதற்கு முன் வாசகர்களுக்கு ஒரு துப்பு தந்திருந்தால்,
    அதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.//

    துப்பு கொடுத்தா கண்டுபிடிச்சுருவீங்களே !!!! :))

    //என் கருத்துக்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாம், நீங்கள் கதை சொல்லும் நடை நன்றாக இருக்கிறது, கதைக் களம் நல்ல தேர்வு, நிறைய எழுதவும்,
    முடிந்தவரை விமர்சிக்காமல் படிக்கிறேன்//

    உண்மையாய் ஒன்று சொல்கிறேன். முடிந்த வரை விமர்சனம் செய்யவும்.

    இந்த இடத்தில கொஞ்சம் selfish-ஆ சொல்றேன். உங்க விமர்சனம் கண்டிப்பா, வரும் எழுத்துக்களுக்கு மெருகு சேர்க்கும்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  10. ஆஹா - தனிக்கட்சி ஆரம்பிச்சிட்டாருய்யா!

    வர வர இந்தக் கட்சி ஒரிஜினல் காங்கிரஸ், ஜனதா, தி.க. மாதிரி ஆகிக்கிட்டு வருது. எல்லாரும் தனிக்கட்சி ஆரம்பிச்சி நம்ப கூட கூட்டு வெச்சிக்கிறாங்க. அதுவரை சந்தோஷம்.

    ஆனா எப்போ 'கொள்கை' வித்தியாச அடிப்படையில் ஆட்சி கவுந்துருமோன்னு கவலையாயிருக்கு. சொல்லுங்கப்பா. உங்க ஆளுங்களுக்கெல்லாம் பிளாக்ல சீட் கெடைக்கும்.

    வாழ்க, வளர்க என்று வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  11. நாகு,

    ஒன்னும் புரியலயே !

    ரொம்ப நொந்து போய் எழுதிருக்கீங்க !!!

    ஏதாவுது தப்பா எழுதிட்டேனா ?

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  12. நாகு,

    தனிக் கட்சி, சீட்டு குடுக்குறோம் னு வாக்கை அள்ளி வீசினவுடன், நாம தான் ஏதோ தப்புப் பண்ணிடோமோனு தோனிச்சு.

    "தனிக்கட்சி, மெயின் கூட கூட்டு"

    இப்படிப் பார்க்காதீங்க ...

    "கட்சி, கட்சிக்குள்ள கூட்டு"

    இப்படிப் பாருங்க ;-)

    சமாளிச்சிட்டேன்-னு நெனைக்கறேன் ?!!!

    ஆமா, அதென்ன

    //ஆனா எப்போ 'கொள்கை' வித்தியாச அடிப்படையில் ஆட்சி கவுந்துருமோன்னு கவலையாயிருக்கு. சொல்லுங்கப்பா. உங்க ஆளுங்களுக்கெல்லாம் பிளாக்ல சீட் கெடைக்கும்.//

    எந்த கொள்கை ??

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!