Monday, May 21, 2007

வரப்பு உயர்ந்த வீடு

காலக்கோட்டை புளியமரம் எறங்கு என்று சவுண்டு விட்ட கண்டக்டர், தொடந்து விசிலடிக்கவும், நாளுக்கு சில முறை சாய்ந்தே வரும், ஒரே அரசுப் பேருந்து தள்ளாடி நின்றது. சிலர் இறங்கவும், பலர் ஏறவும், சிறு புழுதி பரப்பிக் கிளம்பியது. இறங்கியவர்களில் பாலுவும் ஒருவன்.

விடுமுறை என்றால் அது கண்டிப்பாக நண்பன் பாண்டியின் வயல் கிணற்றில் குளிக்காமல்க் கழிந்ததில்லை. பாண்டியின் வயலைக் கடந்து தான் அப்பேருந்து வந்தது. கேணி நிறம்பி வழிந்ததைக் கண்டு சந்தோசப்பட்டான் பாலு. ஆனால், அரையாண்டு விடுமுறைக்கு வரும்போது கூட அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை. இப்போது வயல்வெளிகளைச் சுற்றி ஏதோ பெரிய மாற்றம் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை.

சுற்றிப்பார்த்தால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு குன்றுகள். சின்ன அருவி கூட உண்டு எங்க ஊர்ல. மதுரயச் சுத்தி, திண்டுக்கல்லுக்கு அப்புறம் எங்க ஊர் தான் குளுகுளுனு இருக்கும்னு இந்தப் பக்கத்து ஆளுகளுக்குத் தெரியும் என்ற நினைவுகளுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடக்க ஆரம்பித்தான் பாலு. அக்ரகாரம் தாண்டி, பெருமாள் கோனார் வீடு தாண்டி, காமராஜ் தெருவில் நுழைந்தான். வலப்பக்கம் நாலு வீடு தள்ளியிருந்த அவனது வீட்டின் கதவு, சாத்தியிருந்தாலும் தாழிடாமல் இருந்தது. கதவைத் தள்ளித் திறக்கையில் கேட்ட க்ரீச்சில், உள்ளிருந்து "யாரதுதுதுதுதுது" என்றது அவன் அம்மாவின் குரல்.

நாந்தாம்மா என்றான்.

வா ராசா .... பஸ் ஹாரன் சத்தம் கேட்டுச்சு, நீதா-னு நெனச்சேன். எப்படிப்பா இருக்கே, பரீச்சே எப்படி எழுதிருக்கே. வழக்கமான கேள்விகள் தானேயென்று தாயின் பரிவு அவ்வயதில் புரியவில்லை.

சரிம்மா நாங்கெளம்பறேன்.

என்னப்பா வந்ததும் வராததுமா வெளிய கெளம்பிட்ட. ஏதாவுது சாப்பிடறிய ?

ஒன்னும் வேணாம்மா ...

நீ இன்னிக்கு வர்ரேனு சொன்னேன். லெச்சுமி அத்தே உனக்காக நாட்டுக்கோழி கொழம்பு வச்சி எடுத்தாரேனு சொல்லியிருக்காக. சீக்கிரம் வந்துரு ராசா. கைலி மாற்றி, சரிம்மா என்றான். தந்தையின் மிதிவண்டி பக்காவாக இருந்தது. நன்றாகத் துடைத்து பளபளவென்று வைத்திருந்தார். stand எடுத்து விட்டு, வீட்டினுள்ளிருந்து அப்படியே மிதிவண்டியைத் தூக்கி, வாசல் படிகள் கடந்து, தெருவில் இறக்கிப் பாண்டி வீடு நோக்கி மிதித்தான்.

வாடா பாலு. எப்படி இருக்கே ? பாத்து எவ்ளோ நாளாச்சு டா என்றான் பாண்டி. கை குலுக்கிக் கொண்டனர் இருவரும். துண்டு, சோப்பு டப்பா எல்லாம் கொண்டாந்திட்டியா மறக்காம ? சத்த இரு, இந்தா வந்திர்ரேன் என்று வீட்டினுள் சென்றான் பாண்டி. பரபரவென்று தன் தந்தையின் சட்டைப் பாக்கெட்டைத் துளாவினான்.

கூடத்தில் படுத்திருந்த அவனது பாட்டி, என்னடா பாண்டி சத்தம் என்றதும், "இது மட்டும் எப்படித்தான் அது காதுல கேக்குமோ", "அதும் கண்ணும் கரெக்டா தெரியுமோ" என்று முனுமுனுத்தான். ஏ கெழவி பேசாம படு, நான் note-அ தேடிக்கிட்டிருக்கேன் என்றான்.

அவன் சொன்னது எந்த note-u என்று அவனது பாட்டிக்குத் தெரியாமலில்லை. ஒங்கப்பன் செஞ்சத தானடா நீயும் செய்யறே, போடா போக்கத்தவனே என்று செல்லமாகக் கடிந்து, வழக்கம் போலத் தன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.

மச்சி எரநூறு தேரியிருக்கு டா. பணம் கிடைத்த சந்தோசத்தில் இருவரும் உற்சாகமானார்கள். எவ்ளோ நாளாச்சிடா மச்சி நாம சந்திச்சு. குமார் வந்திருப்பானா டா என்றான் பாலு.

அவன் நேத்தே வந்திட்டன். நீ தான் லேட்டு ...

நீ இன்னிக்கு வர்ர சேதி சொல்லிட்டேன் எல்லாருக்கும். இப்ப வந்திருவாய்ங்க பாரு எல்லோரும்.

இருவரும் வெளித் தின்னையில் வந்து அமர்ந்து, அனைவரின் வரவுக்கும் காத்திருந்தனர்.

உச்சி வெயில். படுத்திருந்த பாட்டி, 'யப்பா, முருகா' என்று ஆரம்பித்து அனைத்து சாமிகளையும் ஒருமுறை அழைத்து, தனது மஞ்சளாகிப் போன வெள்ளைப் புடவையை சரிசெய்து கொண்டு எழுந்தாள். பின்கட்டுக் க்தவைத் திறந்து வெளியே வந்தாள். கூசிய இரு கண்களையும் மெல்லக் கசக்கிக் கொண்டு அவள் வருவதைப் பார்த்து, கட்டிக் கிடந்த காங்கேயம் காளைகள் இரண்டும் எழுந்து நின்றன.

இந்த ஆடு, கோழி எல்லாம் எப்படி அதுங்க இஷ்டத்துக்கு திரியுது. நம்மை மட்டும் ஏன் கட்டிப்போட்றாய்ங்க என்று மாடுகளுக்குத் தோன்றியிருக்குமா ? உழைப்பாளி எங்கே விட்டுட்டுப் போய்ருவியோன்னு மனிதனுக்குப் பயம், என்றும் அதுகளுக்குத் தெரியுமா ?

காற்று தென்றலாக வருடியது வேப்பமரத்தினடியில். வெயிலின் வெக்கைத் துளியுமில்லை. களனியைக் களைந்து, பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு ஊரலைத் திறந்து விட்டாள். அவிழ்த்து விட்ட காளைகள் இரண்டும் மூக்குப் பிடிக்கக் குடித்தன.

பக் பக் என்று சுற்றி சுற்றி வந்த கோழிகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் குருனை அரிசியைத் தூவினாள். அந்த நேரத்திலும் சேவல் ஓட்டின் மேல் நிழலோரமாய் நின்று கொண்டிருந்தது.

வைக்கபடப்பினருகில் சுருண்டு படுத்திருந்த நாய், காதுகளைக் கூராக்கி, லேசாகக் கண் திறந்து பார்த்து, வாலை அங்கும் இங்கும் ஆட்டிவிட்டு மீண்டும் கண் மூடிக் கொண்டது.

தூரத்தில் நாலைந்து சைக்கிள் வருவதைப் பார்த்துத் துள்ளி எழுந்தனர் பாண்டியும், பாலுவும். வருவது ரவி, ஆறுமுகம், கணேசன், மாரி, கோடி, மணி என்பது தெளிவாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் அனைவரும் பாண்டியின் வீட்டை அடைந்தனர்.

எல்லாரும் பரீட்சை எப்படிடா எழுதிருக்கீங்க என்று பாண்டி கேட்க, அதற்கு ஆறுமுகம், அது கெடக்கு, வழக்கம் போல பெயில் தான். அத எதுக்கு ஞாபகப்படுத்தறே, அதான் லீவு விட்டாய்ங்கள்ல, "அனுபவிக்கனும், ஆராயக்கூடாது" என்றதும் அனைவரும் சிரித்தனர்.

சரி சரி நேரமாச்சு கெளம்புங்கடா என்று அவசரப்படுத்திய பாண்டி, இந்தா மாரி ரூவா, நம்ம ராஜா புரோட்டா ஸ்டால்ல போய், சிக்கன் சாப்ஸ், எறா பொரியல், மட்டன் குருமா, அப்புறம் ... புரோட்டா கொஞ்சமா போதும், வாங்கிட்டு நேரா நம்ம வயலுக்கு வந்திடு என்று அவனை அனுப்பினான்.

பிரபல நண்பர்கள் குழுவின் ஆஸ்த்தான பாடகர் கானா கணேசனின் கணீர் முழக்கத்துடன் கிளம்பினர் அனைவரும். பாட்டு அலுப்புத் தட்டியவுடன், சில மாத காலப் பிரிவில் தங்களுக்கு ஏற்பட்ட அவரவரின் பல கதைகள் பேசி கல கலவென களைப்பு மறந்து பல கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துச் சென்றனர். ரெட்டைப் பாலம் தாண்டி, ரயில்வே கிராஸிங் அப்புறம் வயல் வெளி ஆரம்பம்.

அதுவரை தெரியவில்லை, பின்பு வழி நெடுக அவ் வித்தியாசத்தை மீண்டும் பாலுவால் உணர முடிந்தது. என்ன ஒரு வெக்கை, போன விடுமுறைக்கு இப்படி இல்லியே என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களைத் தொடர்ந்தான்.

சற்று தூரம் சென்றவுடன், கருவேல மர நிழலில் அமர்ந்திருந்தாள் கல்யாணப் பருவத்தைத் தாண்டிய பொன்னழகு. ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்தன. என்ன பொன்னழகு, எப்போ கல்யாணம், புள்ள குட்டி எல்லாம் பாக்கப் போறே என்றான் ஆறுமுகம் விசமத்தனமாய்.

"மவராசா, நீங்க எப்ப வருவீகனுதேன் காத்திருக்கேன், நீங்க கட்டிகிறது, இந்தச் சிறுக்கி மவள !" என்று பொன்னழகு சொல்லவும், மீண்டும் சிரிப்பொலி சிதறியது. டேய் டைனமோ தலயா, பேசாம வாடா என்று ரவி சத்தம் போடவும், அமைதியானான் ஆறுமுகம்.

தார் ரோட்டிலிருந்து பிரிந்து தாழ்வாய்க் கீழிறங்கிய வண்டிப் பாதையில், சிறிதும் தயக்கமின்றி சர் சர்ரென்று ஒருவர் பின் ஒருவராய் இறங்கினர். சிறிது தொலைவில் ஒத்தயடிப் பாதையில் பயணித்துப் பாண்டியின் வயலை அடைந்தனர்.

வயலைச் சுற்றி வெகு தொலைவு வரை நெடுகிலும் அரையடி வெளியில் தெரியும் படி கல் நடப்பட்டிருந்தது. பாலு பாண்டியிடம் கேட்டான், என்ன மாப்ளே போன தடவை இங்க வந்ததுக்கும் இப்போ வர்றதுக்கும் நெறைய மாற்றம் தெரியுது. எவ்ளோ மரங்கள் இருந்திச்சு. கடலை, கரும்பு, நெல்லுனு எதாவுது இருக்குமே டா. பொட்டல் காடா கெடக்கு இப்ப எல்லாம் என்றான்.

விசயம் தெரியாதா உனக்கு ?! நம்ம வயலையும், செல்லத் தொர சித்தப்பு வயலையும் தவிர்த்து எல்லாம் வெல போய்ருச்சு என்றான்.

எதுக்கு ? புரியும் படி வெளக்கமா சொல்லுடா மாம்ஸ் என்றான் பாலு ஆச்சரியத்துடன்.

கொஞ்ச நாள் முன்னாடி மதுரயில இருந்து ஒரு சேட்டு நம்ம நாட்டாம வீட்டுக்கு வந்தாரு. ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாங்க. கடைசில தான் தெரிஞ்சது அவரு நம்ம வயக்காட்ட வாங்க தான் வந்திருக்காருனு. நம்மாளுக முக்காவாசி பேருகிட்ட பேசி, ஐநூறு ஏக்கர வளைச்சி வாங்கிட்டாரு.

மதுர என்ன மதுர, நம்ம ஊர் பங்களூரூ மாதிரி ஆகிடும் பாருங்க என்றான் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்த மாரி. சென்னை கூட சென்றறியாத மாரி பங்களூரைச் சொன்னவுடன் அனைவருக்கும் ஆச்சரியம். ஆச்சரியப்படாதீங்கண்ணே, சென்னை வெய்யிலு கொளுத்தும்னும், பங்களூரில் வெய்யில் இருந்தாலும் கொஞ்சம் குளுகுளுனு இருக்கும்னும் கேள்விப்பட்டிருக்கேன். எல்லாம் போனாத் தான் தெரியுமா ? இந்தா இப்ப பாலண்ணே வந்திருக்காரு, திருச்சியப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியதுதேன் என்றான்.

வயல வித்துட்டுப் பொழப்புக்கு என்ன செய்யப் போறாங்க எல்லாரும் என்றான் பாலு. அவங்களே அதப்பத்திக் கவலப்படல. உனக்கேன்டா கஷ்டம் என்றான் பாண்டி. எல்லாம் டபுல் மடங்கு வெல செய்யும் மாயம். கேட்டா "வெளச்சலே இல்ல, என்ன தம்பி பண்றதுனு" சொல்றாரு சாமிக்கண்ணு அண்ணே.

போன வருசம் கூட ஒரு செய்தி படிச்சேன், மதுரையில Tidel Park ஒன்னு வர்றதா ! அதுக்கும் நம்ம ஆளுக வயக்காட்ட வித்ததுக்கும் தொடர்பிருக்குமோ என்றான் பாலு.

கரெக்டா புடிச்சடா பாலு. நீ லா படிக்கப் போகலாம்டா என்றான் குமார். இந்த எடத்த வாங்கின சேட்டு, இங்க தர வாரியா வீடுகள கட்டப் போராறாம். பங்களா போன்ற தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதற்கு ஏற்ற வசதிகள் கொண்ட மற்ற கட்டிடங்கள் எல்லாம் கட்டி ஒரு சொகுசுபுரியா ஆகப்போகுது நம்ம ஊரு, மாரி சொன்னதப் போல என்றான் குமார்.

இங்க வீடு கட்டினா வாங்குறதுக்கு யாரு இருக்கா என்றான் பாலு.

என்னண்ணே இப்படிக் கேட்டுட்டிங்க. இங்க தெக்கால இருந்து ஒரு ரோடு போடப் போறாய்ங்களாம். அந்த ரோடு போட்டுட்டா நம்ம ஊருல இருந்து மதுரைக்கு பத்து நிமிஷம்தேன். ஏதோ ஒரு பார்க் சொன்னிகளே, அதுக்கு இந்தியா முழுக்க இருந்து ஆளுக வருவாகளாம்ல வேலைக்கு. அவுகள கணக்குப் பண்ணித்தேன் இந்த சேட்டு எல்லாம் செட்டப்பா பண்றாரு. இப்பல்லாம் வாடகைக்கு இருக்கத விட சொந்தமா வாங்குறதுதேன் அவுகளுக்கு சவுகரியமாம்ல என்றான் மாரி.

நாமெல்லாம் பள்ளிக்கூடம் முடிச்சி B.A., M.A.,னு படிக்கப்போவோம். அவுகள்லாம் computer படிச்சவகளாம். மாசத்துக்கே லச்சக்கணக்குல சம்பளமாம்ல என்று வியந்தான் ரவி. ஆனா ஒன்னுடா, நம்ம ஆறுமுகம் இப்படியே பெயிலாயிகிட்டே இருந்தான்னா, மாடு மேய்க்க ஒரு வயல் கூட அவனுக்கு இருக்காது பாத்துக்குங்க என்று ரவி சொல்லவும், எட்டுத் திக்கும் விட்டுத் தெரித்து வானை முட்டியது சிரிப்பலை.

நாமும் இவர்களுடன் சேர்ந்து சிரிக்கலாமா ?! இல்லை சிந்திப்போமா ?!

10 comments:

  1. அருமையான கதை. எது வளர்ச்சி, எது தேக்கம்? என்ன செய்வது. வாழ்க்கையில் ஒன்றை அடையவேண்டுமென்றால், ஏதாவது ஒன்றை இழக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. பல சமயங்களில் அந்த விலை என்ன என்று கூட தெரிவதில்லை(எதை இழக்கிறோம் என்று).

    வயல்/தோப்பு/பண்ணைகளை கட்டிடங்களுக்கு இழப்பதை நாம் இந்த ரிச்மண்டிலேயே காண்கிறோம். வால்மார்ட்டிற்கு அருகே 64-Broad St. பொட்டல்வெளியாகி கட்டிட வனமாகப் போகிறது. அங்கு கட்டிடமெல்லாம் வந்து விட்டால், இந்த ஊரை விட்டுப் போவதாக என் மகன் சொல்லிக்கொண்டு இருக்கிறான் :-)

    ReplyDelete
  2. ரிச்மண்டில் நான் சொன்ன இடத்தில் நடக்கும் கட்டிட வேலைகளைப் பார்த்துதான் தோன்றியதா இந்தக் கதை? இல்லை ஊர்ல நிலத்த வித்துட்டாங்களா?

    ReplyDelete
  3. நாகு,

    மிக்க நன்றி.

    //ரிச்மண்டில் நான் சொன்ன இடத்தில் நடக்கும் கட்டிட வேலைகளைப் பார்த்துதான் தோன்றியதா இந்தக் கதை? //

    முரளி தூசி தட்டி எடுத்துப் பதிவு போடற மாதிரி, நானும் அங்கங்கே நம்ம கணிப்பொறியில விஷயங்கள தேக்கி வச்சிக்கறது உண்டு. எப்பவாவது தோணும் போது எடுத்துக் கோர்த்து பதிவ போட்ற வேண்டியது தான் :-)

    //இல்லை ஊர்ல நிலத்த வித்துட்டாங்களா? //

    இருந்தால்ல விக்கறதுக்கு ;-) அப்படியில்லை ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் ஏற்படும் மாற்றங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. குறிப்பா வயல்களில் பயிர்களுக்குப் பதில் கட்டிடங்கள் வளர்வது. அந்த அசுர வளர்ச்சி நம் எல்லோருக்கும் தெரியும். அதைப் பதிய எண்ணியதன் விளைவே இக் கதை.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  4. சதங்கா,

    ஒரு அருமையான நாவலுக்குண்டான கருவை ஒரு சிறிய பதிவில் வெளியிட்டு என்னை சற்று ஏமாற்றி விட்டீர்கள்.

    கீ. ராஜநாராயணனின் கரிசல் காட்டு கடுதாசியின் பல இடங்களைத் தொட்டு உங்கள் பதிவு இருந்தது. இதை சிறு கதை என்றோ அல்லது கதை என்றோ என்னால் கூற முடியவில்லை. இது ஒரு பதிவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
    இது என் கருத்து மட்டுமே, வளைதளத்தில் உள்ள அனைவருடைய கருத்தும் இப்படியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

    எடுத்துக் கொண்ட கருத்து ஒரு நிஜம் என்பதால் அது நம் முகத்தில் அறைவதைத் தாங்க முடியவில்லை. மாற்றம் என்பது மட்டுமே, என்றும் மாறி வருவது, அதனால், அதன் தாக்கம், இந்தியா போன்ற கிராமங்களைச் சார்ந்த நாடுகளை சற்று அதிகமாகவே பாதிக்கிறது. இத்தகைய மாற்றங்களால், விவசாயம் பாதிக்கப் படுகிறது என்பதை உணர்ந்து விவசாய நிலங்களை வணிக வளாகங்களாகவோ அல்லது குடியிருப்பு பகுதியாகவோ மாற்ற வேண்டும் என்றால் அவை 5-10 வருடங்கள் தரிசாக இருக்கின்றன என்ற சான்றும், அங்கு விவசாயம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்கின்ற சான்றும் ஒரு விவசாய ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பெற்று பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை வரவேண்டும் இதைச் செய்ய நமக்குத் தேவை சுயநலம் கருதாத ஒரு நல்ல தலைவர். அது சாத்தியம் இல்லை என்ற போது, இந்த விளைவுகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.

    நாகு: Broad Street-ல் வணிக வளாகம் வருகிற இடம் ஒரு விவசாய நிலமா? சமீபத்தில் அங்கு ஏதும் விவசாயம் நடந்ததாக எனக்கு நினைவு இல்லை. நீங்கள் எனக்கு முன்பே இந்த நகரில் குடியேறியவர், நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  5. அந்த இடத்தில் விவசாயம் நடந்ததாக எனக்கு நினைவில்லை. அது ஒரு பண்ணை - மாட்டுப் பண்ணை.

    :-) நிறைய மாடுகள் மேய்வதற்கான புல்நிலம் மற்றும் மரங்களடர்ந்த பகுதி. என் நண்பர் ஒருவர் அங்கே தோட்டத்திற்கு எருவாக சாணி திருடியிருப்பதாக சொல்லியிருக்கிறார் :-)

    ReplyDelete
  6. முரளி,

    திடுதிப்புனு காணாமப் போய்ட்டிங்க ... ஆளுகள காணமேனு பதறிப் போய்ட்டோம். நாகு தான் care எடுத்திக்கிட்டாரு.

    //ஒரு அருமையான நாவலுக்குண்டான கருவை ஒரு சிறிய பதிவில் வெளியிட்டு என்னை சற்று ஏமாற்றி விட்டீர்கள்.
    //

    அச்சச்சோ ... மிஸ் பண்ணிட்டனா ...

    //இதை சிறு கதை என்றோ அல்லது கதை என்றோ என்னால் கூற முடியவில்லை.//

    நல்லா இந்தக் 'கதை' எழுதிட்டோம்னு கொஞ்சம் சந்தோசப் பட்டேன். முரளி, இதக் கதயே இல்ல சொல்றாரேனு வருத்தமும் பட்டேன். ஆனால் நீங்கள் கூறியதில் தவறேதுமில்லை. நாவல் சாயலில் இருந்தது முழுக்க உண்மை.

    நேரம் கருதி நாவலைக் கதையா சின்னதா எழுதுவோமேனு நெனச்சு எழுதினது.

    //நமக்குத் தேவை சுயநலம் கருதாத ஒரு நல்ல தலைவர். அது சாத்தியம் இல்லை என்ற போது, இந்த விளைவுகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.
    //

    சரியாகச் சொன்னீர்கள்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  7. சதங்கா,

    அருமையான சக்கரைப் பொங்கல் சாப்பிடலாம் என்று உட்கார்ந்தால், நிறைய பேர் சாப்பிட வந்துட்டாங்க அதனால பிரசாதம் மாதிரி ஒரு ஸ்பூன் பொங்கல்தான் போடுவோம்னா ஏமாத்தமா இருக்காதா? அப்படித்தான் இருந்தது, அந்த ஆதங்கத்தில உடனே எழுதிட்டேன். மன்னிச்சுக்கங்க.

    காணாம போக எங்கே போக்கிடம் இருக்குது சொல்லுங்க. வேலை பளு ரொம்ப அதிகமா போச்சு, ஒரு பய புள்ளய ஆர அமர ஒரு ப்ளாக் படிக்க விட்ரானுங்களா, சட், இதுக்குதான் பேசாம ஊரைப் பாக்க போலாம்னு சொல்றேன், லாட்டரில 100 மில்லியன் விழுந்தா யோசிக்கறேன்னு ஊட்டுகாரம்மா சொல்றாங்க, அது எப்ப விழரது, எப்ப நாம ஊரப் பாக்கப் போரது சொல்லுங்க?

    நான் பின்னூட்டம் போடலேன்னு தயவு செய்து கவலைப் படாதீங்க, நிஜமாவே நீங்க ரொம்ப நல்லா எழுதரீங்க.

    பி.கு. நான் தூசி தட்டி போட்ட பதிவுகள் எல்லாம், பிற வளைதளங்களில் நிராகரிக்கப் பட்டவை, நாகு, நான் என்ன எழுதினாலும், இப்போதைக்கு ஆதரவு தரதால, தைரியமா இங்க பதிவிடறேன். எப்ப நீங்க, சண்முகா, கவிநயா, பரதேசி எல்லாம் இடைவெளி விடாம எழுதறீங்களோ, அப்ப எனக்கு ஆப்பு தான்.


    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  8. முரளி,

    //பிரசாதம் மாதிரி ஒரு ஸ்பூன் பொங்கல்தான் போடுவோம்னா ஏமாத்தமா இருக்காதா? அப்படித்தான் இருந்தது//

    இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது என் தவறு தான். ஒரு விசயம், நான் எழுத்துலகிற்கு வந்து சில மாதங்களே (Sun TV மாதிரி இல்ல), உண்மையிலேயே சில மாதங்கள் தான் ஆகிறது. என்னோட எழுத்துக்களே அதற்கு சாட்சி. But quality இருக்கற மாதிரி பார்த்துக்கறேன். அவ்வளவே.

    //லாட்டரில 100 மில்லியன் விழுந்தா யோசிக்கறேன்னு ஊட்டுகாரம்மா சொல்றாங்க//

    அவங்க நினைக்கறதில தப்பே இல்ல. இன்னும் கொஞ்ச நாள்ல, கைச்செலவுக்கே, இந்தியாவில் பணத்தை briefcase-ல் தான் எடுத்துச் செல்லனும். இதை அவங்க practical-ஆ யோசிச்சிருக்காங்க. Wait பண்ணுங்க ;-) ஒரு Deal. நானும் கடவுளை வேண்டுகிறேன், உங்களுக்கு lottery அடிக்கனும்னு. fifty - fifty ஒகேவா ?

    //பி.கு. நான் தூசி தட்டி போட்ட பதிவுகள் எல்லாம், பிற வளைதளங்களில் நிராகரிக்கப் பட்டவை//

    கேக்கனும்னு நெனச்சேன். 'வளை'யா அல்லது 'வலை'யா ?

    //நாகு, நான் என்ன எழுதினாலும், இப்போதைக்கு ஆதரவு தரதால, தைரியமா இங்க பதிவிடறேன்.//

    அதே தைரியம் தான் எனக்கும். நான் சொல்றதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டிங்க.

    //எப்ப நீங்க, சண்முகா, கவிநயா, பரதேசி எல்லாம் இடைவெளி விடாம எழுதறீங்களோ, அப்ப எனக்கு ஆப்பு தான்.//

    இதைவிட ஒரு excuse கண்டுபுடிக்கறது கஷ்டம். உங்களுடைய விமர்சனங்கள் அனைத்தும் துல்லியம். என்னைக் கேட்டால், படைப்பதை விட விமர்சிப்பது தான் கடினம். உ.ம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, சாம்பார் எப்படி இருக்கு, பொறியல் ? என்றும் கேட்கும் மனைவிக்கு பதில் சொல்லத் தடுமாறும் சராசரிக் கணவன் ;-) இந்த logic வச்சு, கணவர் taste மட்டும் பண்றதில்லை, சமைக்கவும் (நன்றாக) செய்கிறார். அதே போல விமர்சிக்கும் தாங்கள் எழுதவும் செய்யலாமே !

    நாகு, முரளிய எப்டி மடக்கிட்டேன் பாருங்க ...

    ReplyDelete
  9. //எப்ப நீங்க, சண்முகா, கவிநயா, பரதேசி எல்லாம் இடைவெளி விடாம எழுதறீங்களோ, அப்ப எனக்கு ஆப்பு தான்.//

    நம்ப எழுத்தாளர் லிஸ்ட்ல என்னிய காணோமே? இருக்கட்டும். அப்பறம் கவனிச்சிக்கிரேன் முரளிய...

    கி.ரா. காடுன்னவுடனே - கி.ரா. மரம் வளத்து கவன்மெண்டுகிட்ட காசு வாங்க நடந்த கததான் ஞாபகம் வருது...

    ReplyDelete
  10. நன்றி வெட்டி.

    காலத்துக்கு ஏற்ப எல்லாமே தானே மாறிக்கொள்ளும், அனுமதி இல்லாமலே எல்லாருக்குள்ளயும் நுழையும் மாற்றம் ஒன்றுதான். பல பேர போட்டு பாத்துட்டு போகும் சில பேர பாத்துட்டு தூக்கி வைக்கும்.

    நல்ல கதை.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!