Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Sunday, February 20, 2011

குற்றுயிரும் குலையுயிருமாய்...


நேற்று சும்மா முயற்சி செய்து பார்க்கலாம் என்று நம் வலைப்பதிவில் வலது பக்கம் 'அந்த நாள் ஞாபகம்' என்று ஒரு பகுதியைச் சேர்த்தேன்.  அந்தப் பகுதியில் நம் பதிவுகளில் இருந்து சீட்டு குலுக்கல் முறையில் (randomக்கு தமிழில் என்ன) ஒரு ஐந்து பதிவுகளைப் பொறுக்கி காண்பிக்கப்படும். ஏன் என் பதிவு தெரியவில்லை என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். அந்த ராண்டம் பகவானிடம் முறையிடுங்கள். பல பழைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹூம்... ஆஹா ஓஹோ என்று இருந்த பதிவு இப்படி கேட்பாரற்று கிடக்கிறது என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்ய? எழுதிக்கொண்டிருந்த ஒரு சிலரும் தனிக்கட்சி பிடித்துப் போய்விட்டார்கள். எழுதுங்கள், எழுதுங்கள் என்று நான் தொந்திரவு செய்வதால் நீர்வைமகள் பார்க்குமிடங்களில் எல்லாம் ஓடி ஒளிகிறார்.  ஏதோ அந்த கோபாலகிருஷ்ணர் தயவிலும், மீனா, முரளி தயவிலும் கொஞ்சம் உயிர் காட்டுகிறது. பரதேசியை வேண்டுமென்றே விட்டிருக்கிறேன். என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் :-)

படிப்பவர்களும் தங்களுக்கு முடிந்த மொழிகளில் - ஆங்கிலமோ, உருதுவோ, அரபியோ, ஹிந்தியோ - பின்னூட்டம் இட்டால் - எழுதுபவர்களுக்கும் எழுதுபவர்களைத் தேடும் எனக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும். அதுவும் மு.கோ.விடம் தென்னிந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் கோபால் பல்பொடிக்கு அடுத்ததாக பாவிப்பது நம் பதிவுத்தளம்தான் என்று ஜல்லியடித்து வைத்திருக்கிறேன். அனலிடிக்ஸ் கிராபிக்ஸ் காட்டு என்று அவர் கேட்காமலிருக்கும்வரை அந்த பஜனை நடக்கும். ஆனாலும் மனிதர் கலக்குகிறார். தமிழ் இசை, இலக்கிய உலகின் நடமாடும் சைக்ளோபிடியாவாக இருக்கிறார் அவர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் இணையத்தில் இன்னும் பிரபலமாக இருக்கிறது. சில புண்ணியவான்கள் அந்த புத்தகத்தை இந்த காலக் கருவிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். உங்கள் ஆப்பிள் கருவிகளில் நிறுவிக் கொள்ள இந்த தளத்தில் பாருங்கள். ஆன்ராய்ட் கைப்பேசியில் வேண்டுமானால் இக்கட சூடு. படங்களும் உண்டா என்று நொட்டைக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. படங்கள் புத்தக வடிவிலேயே இல்லை. வேண்டுமானால் திருச்சி நெல்லித் தோப்பில் பாருங்கள். யாராவது கல்கியில் வந்த தொடரை பைண்ட் பண்ணி வைத்திருக்கலாம். முக்கியமான விஷயம். இந்தக் கதை ஆரம்பிப்பது நான் வளர்ந்த திருமுனைப்பாடி நாட்டினில். அதுவும் ஊழல் ஓங்கி வளர்ந்த வீராண ஏரிக்கரையில் :-)

ஆப்பிள் கருவிகளில் திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கிடைக்கிறது. நம் பதிவுகள் போல படிக்கத்தான் ஆளில்லை. :-)