Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

Tuesday, March 16, 2010

மீனாவுடன் மிக்சர் - 19 {முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி?}

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க அருமையான கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எங்க ஊர் பக்கம் வர்றதா இருந்தீங்கன்னா, அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி மாண்டலின் சகோதரர்கள் (ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜேஷ்) கச்சேரிக்கு கண்டிப்பா வந்துட்டு போங்க. டிக்கட் விலை தலா இருபதே டாலர் தான். மேலும் விவரங்களுக்கு இங்கு சொடக்கவும் - www.richmondrasikas.org.

அப்புறம் எங்க ஊர் கோவில் கட்டி முடிச்சப்புரமா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா இங்கே சொடக்குங்க - http://www.hinducenterofvirginia.org. நீங்களா ஆசைப்பட்டு இந்த கோவிலின் விரிவுபடுத்தும் பணிக்கு நிதி உதவி செய்ய விரும்பினீங்கன்னா நான் உங்களை தடுக்கவே மாட்டேன். உங்க சவுகரியம் எப்படியோ பார்த்து செய்யுங்க (பாத்து மேல போட்டு குடுப்பான்னு யாரோ எங்கயோ சொல்லி கேட்ட மாதிரி இல்லை??).

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


-மீனா சங்கரன்

Monday, June 08, 2009

நமட்டுச் சிரிப்பு

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கையில் வேலை, சம்பாத்தியம் என்பது பற்றி பேச்சு வந்தது. எதற்காக சம்பாதிக்கிறோம்? என்று பொதுவாக கேள்வி எழ, நானும் முந்திக்கொண்டு செலவழிக்கத்தான்! என்றேன். அந்த பெரியவரும் விடாமல் எதற்கு செலவழிக்கனும்? என்று கொக்கி போட, நானும் உடனே வாழத்தான்! என்றேன். பெரியவர் சிறிது நேரம் மௌனித்து ஒரு நமட்டுச் சிரிப்பு உதிர்த்து விட்டு வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றினார்.

அன்று இரவு படுக்கையில் அந்தப் பெரியவரிடம் பெசியனவற்றை மனது லேசாக அசை போட.. ஏதோ ஒன்று மனதுக்கு புலப்படாமல் தொல்லை தந்தது. அந்த பெரியவரின் நமட்டுச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? பதில் காண முயன்றும் முடியாமல் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு எப்படியோ தூங்கிப்போனேன்.

மறுநாள் காலையில் வீட்டின் அருகில் இருந்த காபிக் கடைக்கு வாகனத்தில் சென்று சூடாக ஒரு காபி வாங்கி 5 வெள்ளி மொழி எழுதி விட்டு காபியை சுவைத்துக்கொண்டு இருக்கையில்..அந்தப் பெரியவரின் நமட்டுச்சிரிப்பு திரும்பவும் நினைவில் வந்து தொல்லை தந்தது. பதில் தெரியாமல், ஏன்டா அந்தப் பெரியவரிடம் பேசினோம் என்று நொந்து கொண்டு, வேக வேகமாக காபியை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். சமையல் அறையிலிருந்து "பால் தீர்ந்துவிட்டது. தயிர் போட பால் வேண்டும். கொஞ்சம் சீகிரமாய் போய் வாங்கிட்டு வாங்க" என்று மனைவி அறைய, உடனே வாகனத்தை கிளப்பி Costco விற்கு விட்டேன்.

கடைக்கு உள்ளே நுழைந்ததும், பள பளவென மின்னிக்கொண்டு 64 அங்குல HDTV என்னை பார் என்றது. ஆஹா.. நம்ப வீட்ல இருக்கிற 2 தொலைக்காட்சி பெட்டிகளும் வாங்கி 2 வருடம் ஆகிவிட்டதே, மேலும் நமது மூன்றாவது படுக்கை அறையில் தொலைக்காட்சி பெட்டி இல்லையே.. 200 வெள்ளி குறைத்து வேறு போட்டிருக்கான்.. சரி வாங்கு என்று மூளை உத்திரவு போட, முதுகு வலிக்க எப்படியோ அந்த தொல்லைபெட்டியை கூடையில் கிடத்தினேன். அடுத்த சந்தில் நுழைந்தால்.. அங்கு ஒரு நீல நிற சட்டை வா! வா! வசந்தமே என்று கூப்பிட, நானும் நம்பகிட்ட இந்த நிறத்தில் சட்டை இல்லையே என்று யோசித்து, ஒரு சட்டையை எடுத்து கூடையில் வைத்தேன். இப்படி ஒரு வழியாக கடையை ஒரு வலம் வந்து காசாளரிடம் 1200 வெள்ளியை சிரித்துக்கொண்டே கடன் அட்டையில் கொடுத்துவிட்டு வாங்கினவற்றை முதுகு வலிக்க வாகனத்தில் முக்கி முனகி ஏற்றிக் கொண்டிருக்கையில். சிரிப்பு மணிபோல் செல்போன் அடிக்கவே, எடுத்து Hallo கூட சொல்லி முடிக்கலை. அடுத்த முனையில் இருந்து "ஏங்க.. பால் வாங்க போய் ஒன்றரை மணியாச்சி..எங்க இருக்கீங்க?" என்று மனைவி குரல் கேட்டதும் நினைவிற்கு வந்தேன். சிறிது யோசித்து "நண்பர் ஒருவரை சந்தித்தேன். அதான் கொஞ்ச நேரமாகிவிட்டது. இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்" என்று ஒருவழியாக "உண்மை" சொல்லி மூச்சு விட்டதும் பால் வாங்க மறந்தது மூளையை எட்டியது. உடனே அடித்து பிடித்து திரும்பவும் ஓடி ஒரு பால் புட்டியை எடுத்துக்கொண்டு costco வின் திருப்பதி வரிசையில் திரும்பவும் நின்று வாங்கி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். பிற்பகலில் மனைவி எங்கோ போக வேண்டும் என்று சொன்னது நினைவில் வரவே.. வெறும் பால் புட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு வாங்கிய மற்றனவற்றை வாகனத்திலேயே விட்டு விட்டு உள்ளே சென்றேன்.

மதிய உணவு அருந்திவிட்டு மனைவி வெளியே கிளம்பிவிட.. நான் புதிய தொலைகாட்சி பெட்டியை எடுத்துவந்து 1 மணி நேரமாய் மாட்டி விட்டு களைப்பில் சிறிது அசந்து படுக்கையில் சாய்ந்தேன். ஒரு அரை மணி நேரம் தூங்கியிருப்பேன். ஏதோ கெட்ட கனவு வந்து எழுப்பி விட்டது. இரண்டங்கெட்ட நிலையில் உட்கார்ந்திருந்த போது திரும்பவும் அந்த பெரியவரின் நமட்டு சிரிப்பு வந்து எரிச்சலூட்டியது. இதற்கு எப்படியாவது இன்று அர்த்தம் கண்டாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். திரும்பவும் அவருடன் பேசியவற்றை நினைவு கூர்ந்தேன். சம்பாத்யம், செலவழித்தல், வாழ்வதற்கு.. ஒரு வேளை நாம் செலவழிப்பன எல்லாம் வாழ்வதற்காக என்பதில் அந்த பெரியவருக்கு உடன்பாடு இல்லையோ? வாழ்வதற்கு அவசியம் உணவு, உடை, உறையுள்.,,, ஏதோ கொஞ்சம் புரிந்தார் போல் தோன்ற, வேகமாக எனது அலுவலக அறைக்கு சென்று கடந்த இரண்டு மாத வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை அறிக்கையும் எடுத்து ஒவொன்றாக ஆராய்ந்தேன். வீட்டு கடன், வாகன கடன், மளிகை செலவு, துணி செலவு இப்படி நீண்டு கொண்டே போனது. அனால் எல்லாம் இந்த உணவு, உடை, உறையுள் என்னும் வாழ்க்கைகு அவசியம் என்ற கோட்டிற்கு உள்ளேயே இருந்தது. ஆஹா. நாம் ஏதும் அனாவசியமாக செலவு செய்வதில்லை என்று மகிழ்ந்து.. ஒருவேளை அந்தப் பெரியவர் நாம் அளந்து செலவு செய்பவன் என்று தெரியாமல் அப்படி சிரித்திருக்கலாம் என்று நினைத்து.. அந்த புரியாத நமட்டு சிரிப்புக்கு அர்த்தம் தெளிந்ததாக எண்ணி ஒருவழியாக நிம்மதியானேன்.

மாலையில் சிறிது நடந்துவிட்டு திரும்புகையில் புதிதாய் வாங்கியுள்ள தொலைகாட்சி பெட்டியை மனைவி வந்ததும் காட்டி அசத்தனும் என்ற நினைப்புடன் வீடு திரும்பினேன். களைப்பு போக நன்கு குளித்து விட்டு புது பொலிவுடன், ஒரு காபி போட்டு கையில் எடுத்துக்கொண்டு புதிய தொலைகாட்சி முன் அமர்ந்தேன். அன்று இந்திய குடியரசு தினம். முன்னாள் ஜனாதிபதி திரு ஆ பி ஜே அப்துல் கலாம் அவர்களை நகைச்சுவை நடிகர் விவேக் எடுக்கும் நேர்முக பேட்டி ஓடிக்கொண்டு இருந்தது. விவேக் கேட்ட நகைச்சுவை கலந்த சுவையான கேள்விகளுக்கு ஜனாதிபதி சுவையாக பதிலளித்தார். "நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போதும் 4 சட்டை மட்டுமே வைத்து இருந்ததாக கேள்விபட்டேன். உண்மையா? ஏன் இந்த எளிமை?" என்று விவேக் அடுத்த கேள்வி கேட்க, அப்துல் கலாம் அவர்கள் "எனக்கு அவசியமானது அவ்வளவுதான்!" என்று கச்சிதமாக பதில் கூறி நன்கு சிரித்தார். அந்த சிரிப்பு கேட்டதும் எனக்கு யாரோ தலையில் சுத்தி வைத்து ஓங்கி அடித்து போல தோன்றியது. எல்லாம் தெளிந்ததாக இருந்த நிலை போய் பலபலவற்றை எண்ணி மனம் குழம்பியது. சிறிது சிறிதாக உண்மை புலப்பட அந்த நமட்டு சிரிப்பிற்கு உண்மையில் அர்த்தம் விளங்கியது.

வாழ்கை வாழ 10 சட்டை அவசியம். 100 சட்டை அனாவசியம். கிராமத்தில் மிரசுதாராக இருந்த தத்தா, உடுத்திருந்த துணியை குளிக்கும் பொது துவைத்து காயவைத்துவிட்டு நேற்று துவைத்து வைத்திருந்த துணியை எடுத்து உடுத்திக்கொண்டு வயலுக்கு செல்லும் காட்சி நினைவுக்கு வந்தது. ஒரு தொலைகாட்சி பெட்டி அவசியம். மூன்று அனாவசியம். ஒரு கைகடிகாரம் அவசியம். ஒன்பது அனாவசியம். ஒன்றோ இரண்டோ காலணி அவசியமாகலாம். பத்து அனாவசியம். வீட்டில் வாங்கி வைத்துள்ள german காபி போட்டு குடிப்பது அவசியமாகலாம். அருகில் இருக்கும் காபி கடைக்கு வாகனத்தில் சென்று 5 வெள்ளி கொடுத்து காபி குடிப்பது அனாவசியம். இப்படி எண்ண அலைகள் எங்கெங்கோ ஓட வீட்டை சுற்றி பாத்தேன். தலை சுற்றியது.

புதிதாக வாங்கிய தொலைகாட்சி பெட்டியை அதன் பெட்டியில் போட்டு வாகனத்தில் வைத்தேன். ஒரு படுக்கை அறை முழுக்க வெகு நாட்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த துணிகளை ஒரு பையில் போட்டு வாகனத்தில் ஏற்றினேன். உடுத்தாமல் வருடங்களாக தொங்கிகொண்டிருந்த துணிகள் மற்றும் தேவையில்லாத பல சாமான்களை வாகனத்தில் ஏற்றினேன். எட்டு பேர் அமரும் அந்த வாகனம் அவசியமில்லாத விஷயங்களால் நிரம்பி வழிந்தது. வாகனத்தை நேரே Costco விற்கு விட்டேன். தொலைகாட்சி பெட்டியை திரும்பக் கொடுத்தேன். அடுத்து நேராக Goodwill கு செலுத்தினேன். எல்லா அனாவசியங்களையும் தானம் செய்துவிட்டு திரும்புகையில் அங்கிருந்த வயதான பெரியவர் ஒருவர் நன்றிப் புன்னகையோடு கையசைத்து வழி அனுப்பினார். இந்தப் புன்னகையின் அர்த்தம் உடனே விளங்கியது.

வாகனத்தில் ஏறி கிளப்பியதும் ஒலி நாடாவிலிருந்து பாமா விஜயம் படத்திலிருந்து " வரவு எட்டணா.. செலவு பத்தணா" என்று பாட்டு வாகனத்தை நிறைத்தது. எனக்குள் சிரித்துவிட்டு, அந்தப் பெரியவரின் நமட்டுச் சிரிப்பையும் இந்தப் பெரியவரின் நன்றிச் சிரிப்பையும் அசை போட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்!!