Showing posts with label இமேஜ். Show all posts
Showing posts with label இமேஜ். Show all posts

Tuesday, July 10, 2007

இமேஜை வென்ற கதாபாத்திரங்கள் - மாயன்

சமீபத்தில் வெளியான ஒரு ப்ரமாண்ட திரைப்படம், திரைத்துறை வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பெரிய தலைகளும் அவர்களது இமேஜும் தான். சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தும் புகைச்சலோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்தத் (தொடர் ?) கட்டுரையின் நோக்கம் சினிமாவில் தங்கள் இமேஜை மறைத்து அந்தக் கதாபாத்திரங்களாகவே நம் கண்முன்னே வலம் வந்தவர்களைப் பற்றியது அன்றி விவாதம் பண்ண அல்ல.

1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர்மகன்'. இதில் கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரோடு மாயனும் நடித்தது நம்மில் பலருக்குத் தெரியும். ஆமாங்க, படத்தில் வில்லனான 'மாயன்' நாசர் தான் இங்க நமக்கு ஹீரோ !

கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் இவர்கள் மூவரும் எவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அதற்காக மாயனும் சளைத்தவர் அல்ல. இவர்களுக்கும் மேல் தேவர்மகனில் மாயனின் ஆளுமை நிறைந்திருந்தது எனலாம். கமலும், சிவாஜியும் அவர்களாகவே தான் தோன்றினார்கள். அவர்களால் அவர்களது இமேஜை மறைக்க முடியவில்லை. ஆனால் மாயன் ...

கொத்து மீசையும், பொட்டிட்ட அகன்ற நெற்றியும், வெள்ளை உடுப்பும், உறுமும் குரலும் அப்படியே ஒரு கிராமத்துக் கோபக்காரராய் மாயன் இன்றும் நம் நினைவில் நிற்பவர்.

கீழே உள்ள youtube-ல் பஞ்சாயத்துக் காட்சியில் மாயனைக் காணுங்கள்.



சமீபத்தில் சலசலத்த திறமைமிக்கவர்களுள் ஒருவர் என்பது தான் இந்த நேரத்தில் நாசரைப் பற்றி சிந்திக்க வைத்தது.

நாம் என்ன தான் திட்டினாலும், விலக்கினாலும் சினிமாவைத் தவிர்க்க முடியாது தான் வாழ்கிறோம். நம்ம blogலேயே சிலர் அங்கலாய்த்திருந்தார்கள். ஒரு நான்கு பேர் சேர்ந்தால், என்ன தான் வேறு வேறு தலைப்புகளில் அரட்டை அடித்தாலும் கண்டிப்பாக சினிமாவைப் பற்றிய பேச்சு இருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது என் எண்ணம்.

காலத்தால் வெற்றி பெறுவது கதையின் கதாபாத்திரமே அன்றி, எட்டும் இமேஜோ, கொட்டும் கோடிகளோ அல்ல. இதை உணர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை சிருஷ்டிக்க, சிந்திப்பார்களா நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்!

Tuesday, August 29, 2006

இது எப்படியிருக்கு?

புதன் கிழமை மாலை. பீட்டர் வீட்டில் ஒரே பரபரப்பு. பீட்டரின் அப்பா தாமஸ் லிவிங் ரூமில் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருக்கிறார். நடு நடுவே வாசல் கதவைத்திறந்து பார்க்கிறார். ஏதாவது கார் சப்தம் வாசலில் கேட்டாலே ஓடிச்சென்று கதவைத்திறந்து பார்க்கிறார். இதன் நடுவில் பீட்டரின் அம்மா எலிசபெத் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து "என்ன பீட்டர் இன்னும் வரவில்லையா?" என்கிறாள். 'வரும் நேரம் தான்' என்கிறார் தாமஸ்.

வாசலில் ஏதோ சப்தம் கேட்கவே தாமஸ் ஓடிச்சென்று பார்க்கிறார். பீட்டரின் தாத்தா ஜான் வாக்கிங் ஸ்டிக்கை சுழற்றியபடியே வந்து கொண்டிருக்கிறார். தாமஸ் கதவைத்திறக்க ஜான் உள்ளே வந்து "என்ன பீட்டர் இன்னும் வரவில்லையா? அவன் வருவதற்குள் என் வாக்கிங்கை முடிக்கவேண்டுமென்று வேகமாக நடந்தேன் இன்று" என்கிறார் ஜான். பீட்டரின் பாட்டி மேரி மாடியிலிருந்து மெதுவாக இறங்கி வந்து 'பீட்டர் வந்த மாதிரி இருந்ததே. மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்தேன். வந்தது நீங்கதானா?" என்று கூறி ஜானைப்பார்த்து முகத்தை சுளிக்கிறார்.

வாசலில் மறுபடியும் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது. எல்லோரும் வாசலுக்கு சென்று பார்க்கின்றனர். "பீட்டர் வந்து விட்டான் பீட்டர் வந்து விட்டான்" என்று தாமஸ் கத்துகிறார். எல்லோரும் வாசலில் காத்திருக்கின்றனர். பீட்டர் காரிலிருந்து இறங்கி வலது கை கட்டை விரலைத்தூக்கி "தம்ப்ஸ் அப்" சைகை காட்டிக்கொண்டே உள்ளே வருகிறான்.

எல்லோருக்கும் முகத்தில் மகிழ்ச்சி. "என்ன பீட்டர் இண்டர்வியூ எப்படி?" என்று தாமஸ் கேட்கிறார். "Success Daddy" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறான் பீட்டர். "என்ன interview வில் select ஆகி விட்டாயா?" என்கிறார் தாத்தா ஜான். "அவங்க ரொம்ப impress ஆகி எனக்கு வேலையும் கொடுத்து விட்டார்கள். "அப்பாடா, இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு படித்த படிப்பெல்லாம் வீண் போகவில்லை" என்றார் தாமஸ். "நான் ஆரம்பத்திலிருந்தே சொன்னேனே பீட்டரை Computer Engineering படிக்க வை டாக்டர் வக்கீல் என்று நினைக்காதே என்று. பார்த்தியா இன்று பீட்டருக்கு வேலையும் கிடைத்து விட்டது" என்று தாத்தா ஜான் கூறுகிறார். "சரி மட மடவென்று அடுத்து நடக்க வேண்டியதைப்பார்க்கவேண்டும்" என்கிறார் தாமஸ். "சரி பீட்டர், இண்டர்வியூவில் பாஸாகி செலெக்ட் ஆகி வேலையும் கிடைத்து விட்டது. ஆனால் எப்போ ஜாயின் பண்ண வேண்டும்?" என்று கேட்கிறார் தாத்தா ஜான். "தாத்தா அவர்களுக்கு immediate requirement இருக்கிறதாம். உடனே ஜாயின் பண்ணவேண்டுமாம்." என்கிறான் பீட்டர். "சரி, வெளி நாட்டுக்குப்போக டிக்கட் எல்லாம் எப்போ கிடைக்கும்?" என்கிறார் தாமஸ். "Consulate க்கு சென்று விசா வாங்க எல்லா பேப்பர்களும் கொடுத்து விட்டார்கள். நாளைக்கு விசாவுக்கு சென்று விசா வாங்கி விட்டால் உடனே ப்ளேன் டிக்கட்டுக்கு அரேஞ் பண்ணுவார்கள். உடனே ஒரு வாரத்தில் கிளம்பவேண்டும்" என்கிறான் பீட்டர். "சரி consulate ல் கும்பல் அலை மோதும். காலையில் 4 மணிக்கெல்லாம் போய் queue வில் நிற்கணும். எல்லோரும் படுக்கப்போகலாம் இப்போ" என்று கூறுகிறார் தாத்தா ஜான்.

வெள்ளிக்கிழமை காலை. பீட்டர் லிவிங் ரூமில் உட்கார்ந்திருக்கிறான். அவனைச்சுற்றி பெட்டிகள், துணிகள். அவசர அவசரமாக பாக்கிங் செய்து கொண்டிருக்கிறான். "இது என்ன டப்பா?" என்று கேட்டுக்கொண்டே ஒரு டப்பாவைத்திறந்து பார்க்கிறான். வாசனை மூக்கைப்பிளக்கிறது. "அம்மா, என்னம்மா இவ்வளவு sweets பண்ணி வெச்சிருக்கே? Customs ல பார்த்தா பிடிச்சு வீசிப்போட்டு விடுவான். கொஞ்சம் குறைவாக வை." என்கிறான் பீட்டர். "அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டார்கள். பீட்டர், ரொம்ப தூரம் போகப்போகிறாய். அதுவும் வேறு நாட்டுக்கு. ஏதோ என்னால் முடிந்தது செய்திருக்கிறேன்" என்று குரல் கொடுக்கிறாள் பாட்டி மேரி. "ரொம்ப thanks பாட்டி. 2 நாளில் முடித்து விடுகிறேன்." என்கிறான் பீட்டர். "பீட்டர், பாஸ்போர்ட், டிக்கட் எல்லாம் செக் பண்ணிக்கோ" என்கிறார் தாமஸ். "எல்லாம் OK Daddy" என்கிறான் பீட்டர். பாக்கிங்கும் முடிந்தது. "நாளை காலை எத்தனை மணிக்கு flight உனக்கு?" என்கிறார் தாத்தா ஜான். "10 மணிக்கு. 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் சரியாக இருக்கும்" என்கிறார் தாமஸ்.

சனிக்கிழமை காலை. பீட்டர் செக் இன் எல்லாம் முடித்து எல்லோருக்கும் விடை சொல்கிறான். "பீட்டர், ஜாக்கிரதையாகப்போ. புது இடம். கவலையாக இருக்கிறது. அடிக்கடி E-Mail செய்." என்கிறாள் அம்மா எலிசபெத். "Web Cam ல் என்னுடன் chat செய்வாயா பீட்டர்" என்று கேட்கிறாள் பாட்டி மேரி. பாட்டிக்கு பீட்டரிடம் மிகுந்த பிரியம். "கட்டாயம் chat செய்கிறேன் பாட்டி" என்கிறான் பீட்டர். "Telephone அடிக்கடி செய்யாதே. முக்கியமாக prime-time ல் செய்யாதே. Off-time ல் செய். ஆனால் போய் சேர்ந்தவுடன் போன் பண்ணு. அங்கே Guest House ல் தானே இருப்பாய்?" என்கிறார் தாமஸ். "Apartment வாடகைக்குப்பார்த்தவுடன், address, phone number எல்லாம் உடனே தெரியப்படுத்து" என்கிறாள் அம்மா எலிசபெத்.

"பீட்டர் ஊருக்கு சென்று 1 வருடம் ஆகி விட்டது. அடிக்கடி E-Mail செய்கிறான். நல்ல apartment, எல்லா வசதியும் இருப்பதாக எழுதியிக்கிறான். வேலையும் பிடித்திருக்கிறதாம்." என்கிறார் தாமஸ். "அடுத்தது பீட்டருக்கு கல்யாணம் தான்" என்கிறாள் பாட்டி மேரி. "அதைப்பற்றி தான் உங்களிடம் பேச இருக்கிறேன்" என்று ஜானிடமும் மேரியிடமும் கூறுகிறார் தாமஸ். "என்ன, அவனே பெண் பார்த்து விட்டானா?" என்று கேட்கிறார் தாத்தா ஜான். "அதெல்லாம் இல்லை. அவனுக்கு நாம் பார்க்கும் பெண் தான் சரிப்படுமாம். கல்யாணம் செய்தால் arranged marriage தான் செய்வானாம்." என்றாள் எலிசபெத். என் நண்பன் ஜோசப்பை இன்று பார்த்தேன். அவன் பெண்ணை உங்களுக்கு நினைவிருக்கிறதோ?" என்றார் தாம்ஸ். "லீசா சின்ன பெண்ணாக இருந்தாள் அப்போது. இப்போ வளர்ந்து பெரியவளாகி இருப்பாளே". "ஆமாம் நம் பீட்டருக்கு ஏற்ற ஜோடி" என்றாள் எலிசபெத். "அப்போ மடமடவென்று பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியது தானே" என்கிறார் ஜான்.

பீட்டர் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. "பீட்டர் 2 வார லீவில் வருகிறான். அவன் வருவதற்குள் இவ்வளவு வேலைகள் நடந்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பெண் பார்த்தல் கூட நாம் தான் செய்தோம்" என்றார் தாமஸ். பீட்டர்-லீசா கல்யாணமும் முடிந்து பீட்டரும் ஊர் திரும்ப கிளம்பி விட்டான். "லீசாவின் விசா கிடைக்க இன்னும் ஒரு மாதம் ஆகுமா?" என்றார் தாத்தா ஜான். "ஆமாம், ஆபிஸிலிருந்து லெட்டர், bank statement, affidavit of support, டிக்கட் எல்லாம் அனுப்ப 1 மாதம் ஆகுமாம்" என்கிறாள் எலிசபெத். "பீட்டர், உனக்கு permanent residence application எந்த stage ல் இருக்கிறது?" என்கிறார் தாமஸ். "இப்பொழுது தான் regional labor முடிந்து national labor stageல் இருக்கு" என்கிறான் பீட்டர். "லீசா labor வருவதற்கு முன் உன் labor முடிந்து விடுமல்லவா" என்கிறார் தாத்தா ஜான். இதைக்கேட்டு பீட்டரை ஓரக்கண்ணால் பார்த்து புன்முறுவல் செய்கிறாள் லீசா.
பீட்டர் ஊருக்கு சென்று விட்டான். ஒரு மாதமும் முடிந்து விடுகிறது. லீசாவுக்கும் விசா கிடைத்து விட்டது. அவளும் கிளம்பி விட்டாள் கணவனைச்சேர.

Plane ல் இருந்து வெளியில் வந்து customs, immigration எல்லாம் முடிந்து வெளியில் வருகிறாள் லீசா. Airportல் நசநசவென்று ஒரே கும்பல். Placardல் பெயரை எழுதி மேலே துக்கி அங்கேயும் இங்கேயும் ஆட்டிக்கொண்டு முன் பின் தெரியாதவர்கள் வருகைக்காக காத்திருக்கிறார்கள் சிலர். Vacation முடிந்து குழந்தைகளுடன் திரும்பி வரும் மனைவிகளை வரவேற்க சோகத்துடன் காத்திருக்கும் சிலர். இந்த கும்பலில் பீட்டரின் உருவத்தைத்தேடுகிறது லீசாவின் கண்கள். வெளியே வந்து நின்று வருவான் வருவான் என்று காத்திருந்து 45 நிமிடங்கள் ஆகிவிட்டன. புதிய ஊர் வேறு. பீட்டரைக்காணவில்லை. லீசாவிடம் செல் போன் இல்லை. யாரிடமாவது பேசி செல்போனில் பீட்டரை கூப்பிடலாம் என்று நினக்கும் பொழுது பீட்டர் வேகமாக ஓடி வருவது தெரிகிறது. பீட்டர் ஓடி வந்து லீசாவைக்கட்டித்தழுவுகிறான். "Immigration ல் எவ்வளவு மாதம் stamp கொடுத்தான்" என்கிறான். "ஆறு மாதம்" என்கிறாள் லீசா. "பரவாயில்லை extend பண்ணிக்கலாம். அதற்குள் permanent residency கிடைத்துவிடும்" என்கிறான் பீட்டர். "அது சரி நீங்கள் ஏன் லேட்? நான் பயந்து விட்டேன்" என்கிறாள் லீசா.

"சாரி லீசா. என்ன செய்வது. கிண்டி ப்ளை ஓவர், சைதாப்பேட்டை டன்னல் எல்லா இடத்திலும் பயங்கர ட்ராபிக் ஜாம். எப்படியோ சந்து பொந்தெல்லாம் பூந்து வந்து விட்டேன்." என்கிறான் பீட்டர். லீசாவுக்கு பீட்டருடன் சேர்ந்ததில் இருந்த கவலையெல்லாம் மறந்து விட்டது. காரில் ஏறி ஏர்போர்ட் பார்க்கிங் லாட்டை விட்டு வெளியே வருகின்றனர். 'சென்னை உங்களை வரவேற்கிறது" என்ற போர்ட் அவர்களை வரவேற்கிறது. என் ஆர் ஏ (நான் ரெஸிடெண்ட் அமெரிக்கன்) க்களான பீட்டரும் லீசாவும் புது வாழ்க்கை துவக்க வந்து விட்டார்கள்.

இது எப்படியிருக்கு? இது தான் இந்த கதையின் 'கால்ப்பு'

இந்த கதைக்கு தலைப்பு எங்கே என்று கேட்கிறீர்களா?

காலம் மாறிவிட்டதால் கதைக்கு 'தலைப்பு' கிடையாது. 'கால்ப்பு' தான் உண்டு.