Showing posts with label ஜோக். Show all posts
Showing posts with label ஜோக். Show all posts

Thursday, February 03, 2011

மீனாவுடன் மிக்சர் 23 - {ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம்}

முதல் பாகம்: விளையாட சொப்பு வேணும்னா வாங்கித்தரேன், என் கையை திருப்பி கொடு!


கல்யாணம் ஆகி சரியா முப்பதாவது நாள் ஒரு புது மணத்தம்பதி அவங்க வீட்டு தினமலர் காலெண்டர்ல தேதியை கிழிச்சு முடிச்சு திரும்பரத்துக்குள்ள ஊரில் சுத்தி உள்ள மக்கள் எல்லாரும் அவங்க வீட்டு வாசக்கதவை தட்டி 'என்ன, ஏதாவது விசேஷம் உண்டா?' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன்? இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது! எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். பகல் போய் இரவு வரா மாதிரி பலருக்கும் இது ஒரு 'இயல்பான' கேள்வியாப் போச்சு நம்ம ஊருல.

இதே மாதிரி இன்னொரு 'இயல்பான' கேள்வியை அமெரிக்காவில் அடிக்கடி நான் கேட்டிருக்கேன். சேர்ந்தா மாதிரி நாலு தடவை உங்களை ஒரு சக இந்தியர் கடைத்தெருவுல பார்த்தார்னா அடுத்த முறை பல நாள் பழகின உணர்வோடு கிட்ட வந்து கை குலுக்கி 'ஹலோ, எப்படி இருக்கீங்க? கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு? பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா?' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா? எப்போ?' ன்னு படு ஸ்ரத்தையாக விசாரிப்பார். இந்த கேள்விக்கான உங்களோட பதில் அவரோட வாழ்க்கையில் எந்த ஒரு வளமும் கொடுக்காதுன்னு தெரிஞ்சாலும் நிச்சயம் கேட்பார். இரவு போய் பகல் மாதிரி இதுவும் இன்னொரு 'இயல்பான' கேள்வி இங்க.

'நீங்க அமெரிக்க பிரஜையா' ங்கற கேள்விக்கு கடந்த சில வருஷங்களா பல முறை நான் 'இல்லை'ன்னு பதில் சொல்லி சொல்லி ஏதோ பரீட்சையில் பெயிலான உணர்வு எனக்கு. இனியொரு முறை இந்த அவமானம் பட என்னால முடியாதுன்னு என் கணவர்கிட்ட சில மாதங்களுக்கு முன்னால கண்டிப்பா சொல்லிட்டேன். முதலில் அவ்வளவா கண்டுக்காத அவர் நான் சவுதி இளவரசி (பின்ன வயசானவங்களை தானே ராணின்னு சொல்லணும்?)மாதிரி நீள கருப்பு அங்கியும், முகத்திரையும் போட்டுண்டு தான் இனி காய்கறி வாங்கவே வெளியே போவேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சதும் தான் பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுண்டு உடனடியா நாங்க அமெரிக்க பிரஜையாக தேவையான டஜன் forms ஐ தயார் பண்ணி அனுப்பி வைத்தார்.

இமிக்ரேஷன் ஆபீசில் இருந்து முதல் கடிதம் ஒரு வழியா வந்து சேர்ந்தது. ஆனா என்ன ஒரு அக்கிரமம்? எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு! "என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன்? கை நாட்டு போடவா கூப்பிடறாங்க? என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க?" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி தான் என் கணவர்கிட்ட அன்னிக்கு நான் பொரிஞ்சு தள்ளினேன். 'டாய்....எவன்டா அவன்' ன்னு சத்யராஜ் பாணியில லுங்கியை தூக்கி சொருகிண்டு இமிக்ரேஷன் ஆபீசை பார்த்து போர்க்கொடி பிடிச்சு ஒரு நடை போடாத குறை மட்டும் தான்.

சரியான சமயத்தில் என் கணவர் மட்டும் சமயோஜிதமா என் கிட்ட 'அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு நம்ம ரஜினி சொன்னதை மறந்துடாதே மீனா' ன்னு சொல்லி என் கோபத்தை கட்டுப்படுத்தலைன்னா என்ன ஆயிருக்குமோ சொல்லவே முடியாது. படையப்பா திரைப்படம் என் வாழ்க்கையில இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. தலைவர்னா சும்மாவா பின்ன!

ஒரு வழியா எதுக்கு எங்களோட கைரேகையை பதிவு செய்ய கூப்பிடறாங்கன்னு என் கணவர் விளக்கி சொன்னதும் சரி தான்னு தலை ஆட்டிட்டு நான் சாதுவா (ஆமாம் நானே தான்...அதென்ன அவ்வளவு நக்கல் உங்களுக்கு?) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம்? அப்படியே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் ஆபீஸ் ஒண்ணுக்குள்ள நுழையறா மாதிரியே இருந்தது.

இதை எங்கேயோ நிச்சயம் பார்த்திருக்கோமேன்னு நினைக்க வைக்க கூடிய அதே அழுக்கு நாற்காலி. அதே அழுது வடியற சுவர். Terminator படத்து வில்லன் மாதிரி அதே உணர்ச்சியை காட்டாத முகங்கள். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. இருக்காதா பின்ன? ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே! ஒரு வழியா என் டோக்கன் எண்ணை (ஆமாம், இங்கயும் அதே டோக்கன் தான்) கூப்பிட்டதும் என் கணவருக்கு பிரியா விடை கொடுத்துட்டு ஒரு அழுக்கு ரூமிலேர்ந்து இன்னொரு அழுக்கு ரூமுக்கு ஒரு அம்மணி பின்னாலேயே போனேன்.

என் கையை தூக்கி பார்த்த அந்த அம்மணி ஏமாற்றத்தில் சோர்ந்து போய் நின்னது சில நொடிகள் தான். உடனே சமாளிச்சிண்டு பிளாஸ்டிக் டப்பியில இருந்த ஒரு துர்நாற்ற தீர்த்தத்தை சர் சர்ன்னு என் கைல அடிச்சு ஒரு துணியினால என் விரல்களை ஆவேசமா தேய்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும் இவ்வளவு நல்லா என் கையை தேச்சு அலம்பி விடுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் காலையில் கொஞ்சம் சோப்பை குறைவாவே உபயோகிச்சிருப்பேன். செலவாவது மிச்சமாயிருக்குமே!

இனி தேச்சா எலும்பு தான்னு உறுதியானதும் தேய்ப்பதை நிறுத்திட்டு என் விரல்களை கைல தூக்கி பிடிச்சு அவங்க அவ்வளவு உன்னிப்பா ஆராயறதை பார்த்து எனக்கு கொஞ்சம் உதறல். என்ன பிரச்சனை? இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல்? ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ? அதான் இந்தம்மா இப்படி குழம்பி போய் நிக்கறான்களோ அப்படீன்னு எல்லாம் எனக்கு ஒரே யோசனை. ஒருவழியா என் விரல்களோட அழகில் திருப்தியான அந்த அம்மா ஒவ்வொரு விரலா எடுத்து ஒரு கண்ணாடி scanner மேல வச்சு இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி விளையாட ஆரம்பிச்சாங்க.

பூமா தேவி மாதிரி இல்லைன்னாலும் நானும் பொதுவா பொறுமைசாலி தாங்க. ஆனா எத்தனை நேரம் தான் கையை இன்னொருவர் கிட்ட கொடுத்துட்டு பேக்கு மாதிரி நிக்கறது? நான் மட்டும் Barbie பொம்மை மாதிரி இருந்திருந்தேன்னா என் விரல்களை கழட்டி அவங்க கைல கொடுத்து 'ஆசை தீர விளையாடிட்டு திரும்பி கொடும்மா ராசாத்தி'ன்னு சொல்லிட்டு நிம்மதியா ஒரு ஓரமா உக்காந்திருப்பேன்.

ஒரு வழியா பல கோணங்களில் என் விரல்களை படம் பிடிச்சுட்டு கொசுறுக்கு என் முகத்தையும் சின்னதா படம் பிடிச்சுட்டு அவங்க வேலையை முடிச்சாங்க அந்த அம்மா. 'கிளம்பட்டா தாயீ' ன்னு பையை தூக்கிண்டு வெளியே போக நான் திரும்பினா என் கைல ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து உக்கார வச்சிட்டாங்க மறுபடியும். என்ன விஷயம்னு பார்த்தா அந்தம்மா இன்முகமா என்னை வரவேற்று நல்லபடியா என் விரல்களை கவனிச்சுகிட்டு மொத்தத்துல எனக்கு இனிமையான அனுபவம் ஒண்ணை கொடுத்தாங்களான்னு கேள்வி கேட்டிருந்தாங்க. ஹ்ம்ம்..........நம்ம எழுதறதை எழுதி அந்தம்மா கைலயே வேற அதையும் கொடுக்கணுமாம். இதென்ன வம்பு! நான் பாட்டுக்கு எசகுபிசகா ஏதாவது எழுதி அவங்க கைல கொடுத்தா அவங்க கோச்சுகிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பாம உக்கார வச்சு என் விரலை எடுத்து இன்னும் நாலு மணி நேரம் திருகினா நான் என்ன ஆறது?

இப்ப என்ன? பகவத்கீதை புஸ்தகத்து மேல சத்தியமா பண்ண சொல்லறாங்க? அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா? இப்படி தீர்மானம் பண்ணி அவசரமா பேனாவை எடுத்தேன். உன்னைப் போல உண்டாம்மா ராசாத்தி, என் ஒட்டு நிச்சயம் உனக்கு தான்னு அடிச்சு தள்ளி எழுதி குடுத்துட்டு என் விரல்களை பேன்ட் பாக்கெட்குள்ள ஜாக்கிரதையா மறைச்சு வச்சு நல்லபடியா வெளிய கொண்டு வந்து சேர்த்தேன்.

-- ஒரு பிரஜையின் பிரயாணம் தொடரும்

-மீனா சங்கரன்

Thursday, April 08, 2010

மீனாவுடன் மிக்சர் - 20 {வா வா வசந்தமே}

அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது.

நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன்.

வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான்.

ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு.

இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great.

உடல் எடை குறைப்பை பத்தி நான் இன்னிக்கு அதிகம் ஒண்ணும் சொல்லரத்துக்கு இல்லை. ஏன்னா அது ஒரு சோகக் கதை.(மேல சொன்ன பார்முலாவை படிச்சீங்க தானே?) அது மட்டும் இல்லை. அடுத்த மாதம் நடக்க இருக்கும் தமிழ்புது வருஷ கலை நிகழ்ச்சிகளிலே 'stand up comedy' பண்ணறேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி நான் கையை வேற தூக்கிட்டேன். என்னோட இந்த சோகக்கதையை பத்தி அங்கே பேச நாலு பாய்ன்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் இங்க போட்டு ஓடைச்சிட்டேன்னா அப்புறம் மேடைல ஏறி ''வந்தே மாதரம்' ன்னு உரக்க சொல்லிட்டு அழுகின தக்காளி மழையில் நனைய ரெடியாக வேண்டியது தான். சொதப்பினா ஊர் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்திட மாட்டாங்களா?

சரி அதை விடுங்க. வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம்.

அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது.

Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க?

-மீனா சங்கரன்

Friday, June 29, 2007

டயலாக்ஸ்.. ரிலாக்ஸ்..

லைப்ரரியில்..


"சார்.. இந்த புத்தகத்துல கதைய காணோம்.. ஆனா எல்லா பாத்திரங்க பெயர் மட்டும் இருக்கு?"

"யோவ்.. நீ தான் அந்த டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனவனா?"
-------------------------------------------------------------------------

பார்க் அருகில்.

"ஏண்டா டிரைவிங் லைசன்ஸ புதைச்சுட்டிருக்க?"


"அது expire ஆயிடுச்சுடா"


-------------------------------------------------------------------------

ATM முன்.


"டேய்.. நான் உன்னோட பாஸ்வோர்ட்'ஐ பார்த்துட்டேன்.. அது ***** தானெ?"


"போடா முட்டாள்.. என்னோட பாஸ்வோர்ட் 12345"

-------------------------------------------------------------------------


[-- சுட்ட பழமானாலும், சுவைதானே!]