Showing posts with label திருமந்திரம். Show all posts
Showing posts with label திருமந்திரம். Show all posts

Wednesday, August 27, 2014

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதைத் தைத்தது.  எவரெஸ்ட் ஏறிய டென்சிங்கிடம், 'இந்த மலையில் ஏறி என்ன கண்டீர்கள் ?' என்று கேட்டதற்கு, 'மனிதன் மலைச் சிகரத்தைக் கைப்பற்றுவதைவிட, தன்னைத் தானே உணர்வது முக்கியம் என்று புரிந்து கொண்டேன்! இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள நான் எவரெஸ்ட் மீது ஏற வேண்டி இருந்தது!!" என்றாராம்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்று கணியன் பூங்குன்றன் சொல்லிச் சென்றதைப் போல பல யோகிகள், மகான்கள், பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டு வந்திருக்கிறோம்.  இது எத்துணை சத்தியம் என்று நம்மை நாம் அறிந்தால் மட்டுமே சாத்தியம்!!

'தன்னை உணர்வது' என்றால் என்ன என்று அறிய முதலில், நம்மை நாம் அறிய வேண்டும்!  நான் அறிந்த‌ வ‌ரையில் திருமூல‌ரின் இர‌ண்டு பாட‌ல்க‌ள் இவ‌ற்றை அழுத்த‌மாக‌ உண‌ர்த்துகின்ற‌ன‌.  அவ‌ற்றிலிருந்து தான் க‌ணிய‌ன் பூங்குன்ற‌ன் தம‌து 'தீதும் ந‌ன்றும்'ஐ எளிமைப்ப‌டுத்தியிருக்க‌க்கூடும்.

கீழே உள்ள திருமூல‌ரின் இரு திருமந்திரப் பாடல்கள், சாதார‌ண‌ வ‌ரிக‌ள் போல‌த் தோன்றினாலும்,  உள்ளார்ந்து பய‌ணிக்க‌ ஒரு பேருண்மை புல‌னாகும் என்ப‌து திண்ண‌ம்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!

மனித இனத்தில் இரண்டே ஜாதி தான்.  ஒன்று, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போதும் என்ற மனம்.  மற்றொன்று, எவ்வளவு தான் கிடைத்தாலும் போதாதென்ற மனம்.

தந்தையும், தாயும், குழந்தை மகளும் நகைக்கடைக்குள் நுழைந்தால், பளபளக்கும் நகைகளைவிட, அங்கே பளபளப்பாக இருக்கும் தாயின் மனம்.  ஆனால், குழந்தைக்கோ அங்கிருக்கும் பலூன்களிலோ, பொம்மைகளிலோ பதிந்திருக்கும் மனம்.  த‌ந்தையின் ம‌ன‌ம் ... சொல்ல‌வே வேண்டாம் :)

எல்லாவற்றிற்கும் காரணம் நாம் தான்.  அது ... நம்மை ஆட்டுவிக்கும் மனம் தான்.  இந்த பாழாய்போன மனது இருக்கிறதே, அது, கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் துள்ளித் திரிவது.  இலக்கின்றித் துள்ளிக் குதிப்பது.  ஓரிடம் பற்றாது, முட்டி மோதி வீழ்ந்தெழுந்து ... மீண்டும் அங்குமிங்கும் துள்ளி ஓடுவது.  மனதினை அடக்கிய மனிதன் மகான் ஆகின்றான்.

நம்மை அறிவதை விடுத்து பிறரை அறிவதில் அதிக‌ நாட்டம் செலுத்துகிறோம்.  பிறரை அறிவதுகூட ஒரு கட்டத்தில் சுலபம் என்றாகிவிடும், நம்மை நாமே அறிய முற்படுகையில்.

நம்மை அறிய‌, மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.  காலையில் எழுந்ததில் இருந்து, மாலை வரை உடலாலும் மனதாலும் அலுத்துத் திரியும் நாம், 'ஓரிடம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது சாத்தியமா ?'  என்றால், ஆம் ... ஆனால், உடனே இல்லை எனலாம்.  மனதை ஒருமுகப்படுத்தி, தன்னை அறிய, நமது சுவாசத்தைக் கவனிக்க மற்றும் சரி செய்யச் சொல்கிறார் திருமூலர் ப‌ல‌ பாட‌ல்க‌ளில்.  அவ‌ற்றைப் பிரிதொரு ப‌திவினில் பார்க்க‌லாம்.

***

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது சங்ககால‌ புறநானூற்றுப் பாடல்.   திருமந்திரம், திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வருகிறது.  இது ஐந்தாம் நூற்றாண்டு படைப்பு என்கின்றனர் பலர்.  ஆனால், திருமுறைகள் காலத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படவில்லை என்பதையும் நாமறிய வேண்டும்.  தென்நாட்டில் வாழும் தலைச்சங்கத்தின் தலைவராக இருந்த அகத்தியரை சந்திக்க வடக்கில் இருந்து வந்ததாக திருமூலரின் வரலாறு சொல்கிறது.  அதுவுமன்றி  ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் பாடல்கள் பாடியாதாகவும் நாம் படிக்கின்றோம்.  இது 'எந்த ஆண்டு' என்றும் ஆராய வேண்டும்.  கண்டிப்பாக சூரியனைச் சுற்றும் பூமி சுழற்சி ஆண்டாக இருக்கமுடியாது.

Thursday, August 07, 2014

நாயோட்டு மந்திரம் ...


அனைத்தும் மறந்த‌ அவ‌ச‌ர‌ உல‌கில், ஒரு ந‌ண்ப‌ருக்குத் தொலைபேசி, க‌தைக்க‌லாம் என்றால் கூட‌ முடிவ‌தில்லை.  ஒன்று ந‌ம‌க்கு நேர‌மிருப்ப‌தில்லை, அப்படியே அழைத்தாலும் ம‌றுமுனையில் ந‌ண்ப‌ருக்கு நேர‌மிருப்ப‌தில்லை.  எங்கூருப் ப‌க்க‌ம் கிழ‌விக‌ள் கூறும் ஒரு ப‌ழ‌மொழி தான் நினைவிற்கு வ‌ருகிற‌து.  'நாய்க்கு நிற்க நேரமில்லை உட்கார இடமில்லை', என்ப‌து போன்ற‌ ஒன்று!  இன்றைய‌ வாழ்விற்கு இது எத்துனை பொருத்த‌ம்.  சமீபத்தில், வெகு நாள் க‌ழித்து அழைத்த‌ ந‌ண்ப‌ர், ரிச்ம‌ண்ட் மிடில் ஏஜ் மார்க‌ண்டேய‌ரிட‌ம் இது ப‌ற்றி பேசிய‌போது, 'அத‌ ஏன் ஓய் ஞாப‌க‌ப்ப‌டுத்தரீர், இதோ, இப்ப‌க் கூட‌ அங்க‌ இங்க‌னு ஓடிகிட்டு இருக்கேன், எதுவும் உருப்ப‌டியா இல்ல'னு அங்க‌லாய்த்துக் கொண்டார் :)

இது இப்ப‌டி இருக்க‌, இவ்வ‌ச‌ர‌த்தில் ந‌ம‌து ர‌சிப்புத் திற‌னும், சிந்தனைத் திற‌னும் எப்ப‌டித் தாக்குப் பிடித்து நீடிக்கும்?  ப‌த்தாத‌ற்கு, சித்த‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டுக்க‌ளில், 'இலை ம‌றை காய் மறை'யாக‌ப் பாடிச்சென்ற‌ க‌ருத்துக்க‌ள் தான் எத்த‌னை ?!  அவ‌ற்றை எல்லாம் ஆய்ந்து ப‌டித்து இன்புற‌ ந‌ம‌க்கெல்லாம் நேர‌மெங்கே ?  ந‌ம்ம‌ அவ‌ச‌ர‌ம் அவ‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல் போன‌தே, ப‌டித்த‌வுட‌ன் புரிய‌ற‌மாதிரி எழுத‌ வேண்டாம் :)

ச‌மீப‌ கால‌மாக‌க் கேட்டுத் திளைக்கும் அரும‌ருந்து, திருமூல‌ரின் திரும‌ந்திர‌ம்.  'த‌ண்ணீர் வாளிக்குள் த‌லையைக் க‌விழ்த்து' பின்னாளில் ந‌ட‌க்க‌ப் போவதை முன்னாளில் க‌ண்ட‌தாக‌ நாஸ்ட்ர‌டாம‌ஸைச் சொல்வ‌ர் சில‌ர்.  அதுபோல‌ திருமூல‌ரும் ஏதாவ‌து டெக்னிக் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பாரோ ?  சாதார‌ண‌ ம‌னித‌ன் எழுதும் பாட‌ல்க‌ள் அன்று அவை.  மேலோட்ட‌மாக‌ ஒரு க‌ருத்தும், ஆழ்ந்து உட்செல்லச் செல்ல‌ ... இன்றைய அறிவிய‌ல் விய‌க்கும் வ‌ண்ண‌ம் அன்றே எழுதி அருளிய‌வ‌ர்.

நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே.

என்ற பாட‌லை ப‌ல‌முறை கேட்டிருந்தாலும், 'நாயோட்டு ம‌ந்திர‌ம்' என்றால் என்ன‌ ?  இப்ப‌டி ஒரு திருமுறைப் பாட‌லில், கேவ‌ல‌ம் நாயின் ம‌ந்திர‌ம் என்று சொல்லியிருக்கிறாரே என்று விய‌ந்த‌துண்டு.  அது என்ன‌வென்று அறிந்து கொள்ள‌ நேர‌மின்றி, ப‌ல‌ நாட்க‌ள் சென்று, எப்ப‌டியோ நேர‌ம் ஒதுக்கி, இணைய‌க் க‌ட‌வுளிட‌ம் முறையிட்ட‌தில், இத‌ன் பொருள் கிட்டிய‌து.  அது,

"நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும்."

இன்னும் சற்றே ஆழ்ந்து பொருள் கொள்ள மற்றொரு வலைத்தளம் தரும் தகவல்,



"மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது."

இது போல‌ ப‌ல‌ நுண் க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கி ந‌ம்மை என்றும் வ‌சீக‌ரிக்கும் திரும‌ந்திர‌ம்.  நேர‌ம் விளைகையில், மேலும் சில பாடல்கள் பார்க்கலாம்!