Thursday, September 01, 2022

துட்டு கொடுத்தாவது அந்தத் துன்பத்தை வாங்கிக்கோ - வள்ளுவர்

 

உலகத்துல யாராச்சும் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டு இருக்கியா?


டேய், ஒரேடியா கதை விடாதே. அப்படியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அட, உண்மையாத்தான் சொல்றேன். வள்ளுவர் ஒரு so called "துன்பத்தை" ("கேடு" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்) அடைய பொருள் (காசு, பணம், துட்டு, மணி மணி) கொடுக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை; பொருள் கொடுத்தாகிலும் அதைப் பெறு என்கிறார். அது என்னவாக இருக்கும்? யோசிச்சுப் பாரேன்.

எவ்ளோ யோசிச்சாலும் தோணலைடா. நீயே சொல்லிடு.

சரி. சொல்றேன்.
ஐயன் மனிதர்கள் எல்லோரையும் நேசித்தவர். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவணும், நமக்குத் தீங்கிழைத்தவருக்கும் அவர் நாண நல்லதே செய்யணும் என்ற பெரிய மனசுக்காரர். சமூகம் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் வேண்டும் என்கிறார். நாம் சம்பாதித்த அறிவு, பொருள் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறார். தன்னலம் இன்றி பொதுநலனுக்காக செய்வதை இன்றைய பேச்சுவழக்கில் 'தொண்டு செய்வது' என்கிறோம் இல்லையா? அதைச் சொல்கிறார்.

தொண்டு-ன்னு பொதுவா சொல்லிடறோம். எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் அறிவு, நேரம், உழைப்பு என தொடர்ச்சியாக பொது நோக்கத்துக்காகக் கொடுப்பது என்பது அவ்ளோ எளிதானது அல்ல. சொல்லிடலாம்; செஞ்சு பார்த்தா தான் அதில் உள்ள சிக்கல்கள் தெரியும். பல நேரங்களில் எப்படா முடியும் என்று "துன்பமாக" தோன்றும்.

கொஞ்சம் அப்படி-இப்படி இடைஞ்சலாக, துன்பமாக இருந்தாலும் நீ செய்யும் செயல் பொது நலனுக்காக. கைமாறு எதிர்பாரா சேவை செய்கிறாய். நீ செய்யும் செயலால் சில-பலர் நன்மை அடையப் போகிறார்கள். இப்படியான செயலைச் செய்ய ஒரு வேளை, உன் கைப்பொருளை செலவழிக்க வேண்டி இருந்தாலும் தயங்காதே. தொண்டு செய்யும் ஒருவனுக்கு இதனால் கேடு வந்தாலும் பரவாயில்லை, செலவழித்தாகிலும் அந்தத் "துன்பத்தை" அடைந்திட வேண்டும் என்கிறார்.

உண்மையில், பொது நலனுக்குப் பாடுபடுவது இன்பமான ஒன்று; அப்படிச் செயல்படும் போது வரும் சிக்கல்களும் இடைஞ்சல்களும் கூட துன்பம் கிடையாது என்ற மறைபொருள் (hidden message) கொண்ட குறள் அது.

எங்கள் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்: "திருக்குறள் சந்தன மரம் போல. தேய்க்கத் தேய்க்க மணக்கும்" என்று.

யோசிச்சுப் பாரேன். ஏழே சொற்களில் இவ்வளவு அடர்த்தி.
வாவ்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து

'ஒப்புரவு அறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள ஒரு குறள் இது. ஒப்புரவு என்ற சொல்லே வியப்புக்குரிய ஒன்று.

ஒப்பு = சமம்.
ஒப்புரவு = பிறரையும் தனக்குச் சமமாகக் கருதி உதவுதல்.

குறளை எளிமையாகப் படித்தால்,

ஒப்புரவால் ஒருவனுக்கு கேடு வரும் என்றால்,
அந்த "கேடு" விலை கொடுத்து கூட பெறும் தகுதி படைத்தது.

இந்த முழு அதிகாரமுமே இப்படித்தான் இருக்கும். படித்துப்பார் சொக்கிப் போவாய். இதில் இருக்கும் பத்து குறள்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல எழுதியிருப்பார்.

கைமாறு (பதில் உதவி) எதிர்பார்த்தா மழை பெய்யுது? அது போல எதையும் எதிர்பாராது செய்; உன்னிடம் உள்ள பொருள் எல்லாம் தொண்டாற்றவே, தயங்காமல் செய்; தொண்டாற்றவது போன்ற நல்ல செயல் எந்த உலகிலும் இல்லை.
நாம் உயிரோடு இருப்பதே எதையும் எதிர்பாராது பொதுச் சேவை செய்யவே. நல்ல உள்ளம் கொண்ட உன்னிடம் சேர்ந்திருக்கும் செல்வம், ஊர் நடுவில் எல்லோருக்கும் பயன்படும் கிணறு நீர் நிரம்பியது போன்ற நன்மை செய்யக்கூடியது எனவே தாராளமாக எல்லோருக்கும் உதவு. மருந்துக்காக தன்னையே தரும் மருத்துவ மரம் போல உன்னிடம் உள்ள எதையும் பொது நலனுக்காகக் கொடு. தப்பில்லை.

Difficult days என்பது போல கொஞ்சம் இடறு நேரும் காலங்கள் ஆனாலும் உன் தொண்டாற்றும் மனதைத் தளரவிடாதே.

என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக மேலே சொன்ன குறளைச் சொல்கிறார் ஐயன்.

தொண்டாற்றுவதால் கேடு வருவது போல் இருந்தால் விலை கொடுத்து கூட அந்த அந்தத் துன்பத்தைப் பெறலாம் என்று முடிக்கிறார்.

-----

தன்னலமின்றி தமிழுக்காக தங்கள் நேரம், உழைப்பு, அறிவு என இயன்றதையெல்லாம் கொடுக்கும் தமிழ்ச் சங்கத்தாருக்கும் தமிழாசிரியர்களுக்கும் இக்குறளை மேற்கோளிட்டு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
உங்களது இந்தத் "துன்பம்" பெரிதும் மதிக்கப்படும் ஒன்று.

வாழ்க தமிழ். 
வாழிய தமிழுக்கு உழைக்கும் உங்கள் நல்லுள்ளம், தொண்டுள்ளம்.