Sunday, July 02, 2023

கலகத்தலைவன்

 

உலகில் நாம வந்த நாள் முதல் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து நம்மை எச்சரிக்கவும் கலகக்காரர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக மக்கள் உணர்ச்சித் திலகங்கள். ஏமாற்றுவது எளிது. பரிதாபமாக மூஞ்சி வெச்சுட்டு பச்சைப் பொய் சொன்னா கூட நம்மாளுகள்ல பாதி பேராவது நம்பிடறாங்க. சாமி சமாச்சாரம்னா அவ்ளோதான், பேச்சே கிடையாது. சரக்குக்கும் சாமிக்கும் தான் கூட்டமே நம்மிடையே. கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் களவாணிகளுக்கு வேலை பட்டென முடிகிறது எப்போதும்.

கலகக்காரர்களும் சமூகப் போராளிகளும் எச்சரிக்கை மணி அடிச்சுட்டே தான் இருக்காங்க, நமக்குத்தான் அவ்வப்போது காது, மூளை எல்லாம் தூங்கப் போய் விடுகிறது.

நம்மாளு வள்ளுவர் அப்படியான ஒரு கலகத்தலைவர். துறவு கொள்ளப் போகிறேன் என்பவனிடம் பேசுவது போல ஆரம்பிச்சு நமக்கு பல எச்சரிக்கைகளைக் காட்டுகிறார் துறவறம் என்ற பகுதியில்.

பதிமூன்று அதிகாரங்கள் அதில் எழுதுகிறார். துறவி ஆகப்போகிறேன் என்பவரிடம் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்று பட்டியல் போடுகிறார்.

திருடாதே, பொய் பேசாதே, சிடுமூஞ்சியாட்டம் இருக்காதே, கெடுதல் செய்யாதே அப்படின்னு போய்டே இருக்கு. அதில் பலமா யோசிக்கற மாதிரி ஒரு அதிகாரம். "கறி திங்காதே" என்று. என்னடா, சாமியாரா போறேங்கறவன்ட இதச் சொல்றாரேன்னு யோசிக்க ஆரம்பிச்சா, "யோவ் வள்ளுவரு செம ஆளுய்யா நீ" என சொல்லத் தோன்றும். கறி தின்றதும் திங்காததும் அவனவன் விருப்பம்; பெரிசா "அறிவுரை" சொல்ல யாரும் வரவேண்டாம், ஆனா நான் "முற்றும் துறக்கப் போகிறேன்" அப்படிங்கறவன்ட, "மொதோ பிரியாணி குண்டான கீழ வை" என்பதில் தப்பில்லை என்று நினைத்திருக்கிறார். சரியாத்தான் படுது. யோசிக்க யோசிக்க ஆளு உண்மையிலேயே கன்னியாகுமரில நிக்கிற மாதிரி பெரிசா மனசுல தெரியறார்.

"வேண்டாத வேலை"* அப்படின்னு ஒரு பத்து குறள் சாமியாரா போறவனுக்கு சொல்ற மாதிரி.

மனசுல வஞ்சம் வெச்சுகிட்டு சாமியாரா போறேன்னு சொன்னா வேற யாரும் வேண்டாம் உன் உடம்பே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனச ஒழுங்கா வெச்சுக்காம பெரிய ஆளாட்டம் படம் போட்டாய்னா ஒரு பயனும் இல்லை தெரிஞ்சுக்கோ என்று திட்டுகிறார் இன்னொரு குறளில். வெள்ளையும் சொள்ளையுமா வேசம் போட்டுகிட்டு வேண்டாத வேலை எதும் செய்யறது, புதர்க்குள்ள ஒளிஞ்சி அப்பாவிப் பறவைகளைப் பிடிக்கும் வேடன் செய்யும் செயல் போல தரங்கெட்டது என கடுமையாகத் திட்டுகிறார்.

இப்படி சாமியார் பயலுகளைத் திட்டிகிட்டே வர்றவர் மெதுவாக நம்மை நோக்கி பேசத் துவங்குகிறார்.

மனசுக்குள்ள அழுக்கை வெச்சுட்டு எவ்ளோ தண்ணில முங்குனாலும் அழுக்கு போகாது. அழுக்கு மனசோட பல பேர் சாமியார்னு திரியறான் கவனம் என்கிறார். ஆளப்பார்த்து எதையும் முடிவு செய்யாதே. நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைஞ்சு வளைஞ்சு இருக்கும் யாழ் அருமையான இசை கொடுக்கிறது. செய்யும் செயலைக் கொண்டே ஒருவர் எப்படியானவர் என்பதை உணர வேண்டும், புரியுதா? என்கிறார்.

எல்லாம் சொல்லிட்டு, கடைசியா
"இவனுக ஏன் ஒன்னு மொட்டையடிச்சுட்டு திரியறானுக, இல்லைன்னா கசாமுசான்னு முடி வளர்த்திட்டு திரியறானுக, உலகத்தார் முகம் சுழிக்கற மாதிரி நடந்துக்கறத நிறுத்தினாலே போதும்" என முடிக்கிறார்.

அப்போது இருந்தே இவனுகளால ஏதோ நடந்துகிட்டு இருக்கு. கடுப்பாகி திட்டித் தள்ளி இருக்கார்.

முழு அதிகாமுமே நையாண்டியும் திட்டுகளும்தான். கூடவே கலகக் குரல். சமயம் எனும் மனதை மயங்கச் செய்யும் கருவியைப் பற்றி எச்சரிக்கைகள், கிண்டல்கள் எப்போதும் பெரியோர் செய்துதான் வருகிறார்கள்.

நாமதான்...

மேலே கடைசியாகக் குறிப்பிட்ட குறள்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

மழித்தல் = மொட்டை அடித்தல்
நீட்டல் = நீண்ட முடி வளர்த்தல்

படித்தவுடன் அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசமான குறள்.

-------
* "வேண்டாத வேலை" = கூடா ஒழுக்கம்

 

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!