Sunday, June 25, 2017

நமக்கு எதுக்கு 'ப்ரச்ன' ? (ஞாயிறு போற்றுதும்)

சில நாட்களுக்கு முன் 'அறிவோம் நம் மொழியை' என்னும் பகுதியில் ஒரு நாளிதழில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து:

"இந்தப் 'ப்ரச்ன'யை எப்படித் தீர்ப்பது?" என்பது தான் அதன் தலைப்பு (https://goo.gl/BdMVjI)

"ப்ரச்ன" எனும் இந்த சமற்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதற்கு முன், அந்தச் சொல் தமிழுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பார்ப்போம்.

----------------------------------
ஒரு மொழியில் ஒவ்வொரு செயலின்/பொருளின் மெல்லிய வேறுபாட்டையும் குறிக்க சொற்கள் இருப்பது அதன் அழகு, சிறப்பு.
சரியான சொற்களைப் பயன்படுத்துவது குழப்பமில்லாமல் செய்தியைத் தெரிவிக்கும். இல்லையா?
இப்போ "பிரச்சினை"க்கு வருவோம். 
எந்த ஒரு எதிர்மறை நிகழ்வைச் சொல்லவும் "பிரச்சினை" என்கிறோம். யோசிச்சு பாருங்க, பொருத்தமான சொற்கள் தமிழில் பல இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாது "பிரச்சினை"யைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

நம்மிடம் ஏற்கனவே இருக்கும் எதிர்மறைச் சொற்கள் சில:
சிக்கல், தகராறு, மனவருத்தம், சண்டை, கோளாறு, பற்றாக்குறை, குறைபாடு, இடைஞ்சல், வம்பு, குழப்பம், குளறுபடி, தவறு, பழுது...
மேலே சொன்ன எல்லாச் சொல்லுக்கும் இப்போது நமக்கு புழக்கத்தில் உள்ளது ஒரே "பிரச்சினை" தான்.
கோபுரத்துக்கெல்லாம் அடி அடின்னு சுண்ணாம்பு அடிச்சு வைக்கிறோமே அது போல. எல்லாமே பிரச்சினை தான். வண்ணப் பூச்சே கிடையாது. வெறும் வெள்ளையடித்தல் மட்டுமே.

"அங்கே ஏதோ பிரச்சினை". அவ்வளவுதான்.
அது சண்டையாகவும் இருக்கலாம், பற்றாக்குறையாகவும் இருக்கலாம், குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம், என்ன வேணா இருக்கலாம். ஆனால் ஒரே "பிரச்சினை" தான். அது என்னன்னு சொல்ல கூடுதல் விளக்கம் தேவைப்படும்.

அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே இதுல உங்களுக்கு என்னங்க பிரச்சினை-ன்னு யாரவது கேட்டால், ​எங்களுக்கு எப்பவுமே பிரச்சினை வேண்டாங்க, இது என் ஆதங்கம்-ன்னு சொல்லலாம். :)

Vocabulary-யை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுவே மொழிக்கும் பேசுபவருக்கும் அழகு & பலம்.

வேறு சில "பிரச்சினை" சொற்களை பட்டியலிடுங்கள்.

Tuesday, June 20, 2017

தாயுமான என் தாய்மாமன் வெ.பாலன்.




பிறந்த நொடி முதல் என்னை தன் மகளாய் பாசத்தை கொட்டி வளர்த்தீர் - எனது வாழ்க்கையை மிக அழகாக செதுக்கியதற்கு கோடி நன்றி!
தங்கை மகளுக்கு இன்னொரு தகப்பனாய் என் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கினீர் - நீர் எமக்கு செய்தவை எண்ணில் அடங்கா!
வாயார 'அம்மா' என்று அழைக்கும் அந்த பாசக் குரலையும், கம்பீர சிரிப்பை கேட்கவும், வாரா வாரம் கிடைக்கும் அந்த அன்பு முத்தமும் இனி நான் அழுது புரண்டாலும் கிட்டாது!
மடிமீது அமர்த்தி காது குத்தியது முதல், என் முதல் வாகன பூஜை வரை அனைத்தும் முன்னின்று செய்தீர்கள்.
என் நலத்தில் என்னைவிட அதிக அக்கறை கொள்வீர் - நீர் எமக்கு என்றுமே கடவுளின் அன்புப் பரிசு!

பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் முதல்நாள் அரிசியில் 'அ' என எழுதி, என் கல்வி வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது தொடங்கி, நான் பல்கலைக்கழக பட்டம் பெறும் வரை எனக்கு தூண்டுகோலாய் விளங்கினீர் - எனது ஒவ்வொரு வெற்றிக்கும் தாங்களே முதன்மை காரணம்.

என் முதல் ஆசானாய், ஆலோசகராய், நண்பராய், நல்ல மனிதராய், எழுத்தாளராய், சிறந்த தலைவராய், சமுதாய நலன்விரும்பியாய் பல பரிணாமங்களில் திகழ்ந்தீர் - உங்களின் மறைவு நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சமூதாயத்திற்கே பேரிழப்பு!

இந்நேரம் சொர்க்கமும் தங்கள் வரவால் மகிழ்ந்திருக்கும்!
தாய் மாமன் எனும் உறவிற்கு தங்களைவிட வேறு எவராலும் பெருமை சேர்த்திருக்க முடியாது!

நீர் எமக்கு செய்த அனைத்திற்கும் நன்றி நவில வார்த்தைகள் போதாது மாமா.
எனது முதல் கவியையும் கண்ணீரையும் சமர்பிக்கின்றேன்!
நீர் எமக்கு தாய் மாமன் மட்டுமல்ல - தாயுமானவர்!

 - பா.பவித்ரா

(மலேசியாவில் பிறந்து வளர்ந்த பவித்ரா, அண்மையில் மறைந்த தாய்மாமனுக்காக எழுதிய தந்தையர் தின கவிதை. புகைப்படமும் அவர்களுடையதுதான்...)

Monday, June 12, 2017

மீனாவுடன் மிக்சர் 30 - தில்லாலங்கிடி மோகனாம்பாள்: ஒரு அலசல்

ரிச்மண்ட் நகருக்கு  எங்க குடும்பம் குடி வந்து இதோட பத்து வருஷம் ஆகப் போகுது.  ஒரு சராசரி NRI தமிழச்சி தன் வாழ்க்கையில் கொட்டற குப்பைக்கு எந்த விதத்துலயும்  குறையாம அதே இத்துப்போன  பக்கெட்ல நானும் கொட்டறேன்னு மிதப்பா நினைச்சிட்டிருந்த  என் வாழ்க்கைல நேத்து ஒரு ஆச்சரிய குறி போடும் புது அனுபவம்.

இது நாள் வரைக்கும் தமிழ்ச்சங்கம் தொகுத்து வழங்கியிருக்கும் பல கலை நிகழ்ச்சிகளை சமோசா டீ சகிதம் பல முறை ரசிச்சிருக்கேன் நான்.   சங்கீதம், நாட்டியம், பட்டிமன்றம் எல்லாம் எங்க ரிச்மண்ட் மக்களுக்கு தண்ணி பட்ட பாடு.  ஒரு சிலருக்கு இளையராஜா  ஒண்ணு விட்ட சித்தப்பா முறைனா பலருக்கு  தியாகராஜ ஸ்வாமிகள் வருஷா வருஷம் பொங்கலிட்டு தீ மிதிக்கும் குலதெய்வம்.  இது குயில் பறக்கும் ஊர் அப்படீன்னு  யாரைக் கேட்டாலும் உங்க தலைலயே நச்சுனு அடிச்சு சொல்லுவாங்க.

சரி பாட்டை விடுங்க. வீட்டுக்கு ஒரு மரம்  வளர்த்து நீங்க நிச்சயம் பாத்திருப்பீங்க.  ஆனா தெருவுக்கு ஒரு பெண் குழந்தையை நாட்டியப் பேரொளியாய் வளர்க்கும் ஊரை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?  பரதம், குச்சிப்புடி,  கோலிவுட், ஹாலிவுட் அப்படீன்னு முழுசா நாங்க நாட்டிய சாஸ்த்திரத்தை  குத்தகைக்கு எடுத்து ரொம்ப நாளாச்சு.  பட்டிமன்றமா? ஹா! நாங்கள் வாய்ச்சொல்லிலும் வீரரடி. வீட்டுக்குள்ளயும் அடிச்சுக்குவோம் அப்புறம் டக்குனு குதிச்சு மேடை ஏறி ஊரறியவும் அடிச்சுக்குவோம்.  கூச்ச நாச்சமெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. சொற்போரில் எங்களை வெல்ல இன்னொரு பாப்பையா பிறந்து தான் வரணும்னு பரவலா ஒரு கருத்து இருப்பது உண்மை.

எதுக்கு இத்தனை பெரிய முகவுரைன்னு குழப்பமா இருக்கா?  ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாம்னு சொன்ன அதே தமிழ் மரபு,  ஒரு பக்கப் பதிவை எழுத முடியாம முழி பிதுங்கி  தவிக்கும் ஒரு அப்பாவி தமிழ் பெண் (நாந்தேன்) நாற்பது வார்த்தையை கூட்டி எழுதினா கோவிச்சுக்கவா போறது?  சரி சரி, நீங்க நெற்றிக்கண்ணை மூடுங்க. விஷயத்துக்கு வந்துட்டேன்.

இந்தியாவிலிருந்து வந்து Y.G. மதுவந்தியின் தலைமையில் நடக்கும் மஹம் கலைக்குழு நேத்து சாயந்திரம் ரிச்மண்ட் இந்துக்  கோவிலில் 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' அப்படீன்னு ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம் போட்டு அசத்தினாங்க.  ரெண்டு மணி நேரம் சிரிப்பலையில் அந்த அரங்கமே ஆட்டம் கண்டு போச்சு.  வாய் விட்டு சிரிப்பது ஒரு வரம்.  ஒரு சில மணி நேரம் எல்லாக் கவலையையும் மறந்து ஒரு ஊரையே சிரிக்க வச்ச புண்ணியம் தில்லாலங்கிடி குழுவினருக்கு தான் சேரும்.

மேடை நாடகம் எப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான கலைன்னு நேத்து வரைக்கும் எனக்கு தெரிஞ்சதில்லை. நடிகர்கள் அவங்க வரிகளை மறந்தா இதுல  take 2 கிடையாது. பார்வையாளர்கள் டீ குடிக்கற ஜோர்ல ஜோக்கை கோட்டை விட்டாங்கன்னா நிறுத்தி அவங்களுக்கு மறுபடியும் எடுத்துச் சொல்ல pause பட்டனும் கிடையாது.  ஒவ்வொரு ஸீனுக்கு நடுவிலும் backdrop மாத்துவதிலிருந்து, லைட்ஸ் சவுண்ட் set பண்ணுவது வரை பல விதத்திலும் கடினமான கலையாக தெரியும் மேடை நாடகத்தை அசால்ட்டாக நேற்று செய்தனர் மஹம் கலைக்குழுவினர்.

சரி இவங்களாவது நாடகம் மேடை ஏத்தறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்கன்னு சொல்லலாம்.  தினந்தோறும் கணினியோட வேலையில் மாரடிக்கும்  சில ரிச்மண்ட் வாசிகளும் இதில் பங்கேற்று மிக அருமையாக நடித்து பார்வையாளர்களை அசத்தியது தான் இன்னும் சிறப்பான அம்சம்.

இதுக்கு முன்னாடி வாயை குவித்து எத்தனையோ முறை விசிலடிக்க பாத்து தோத்து போயிருக்கிற  நான் நேத்து எங்க ஊர் ரிச்மண்ட் மக்களை நாடக மேடையில் பார்த்த சந்தோஷத்துல உணர்ச்சி வசப்பட்டு  ஊதிய வேகத்துல எனக்கு முன்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவரோட அழுந்த வாரிய தலைமுடி கலைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்.  அவர் திரும்பி பார்த்து முறைச்சதும் இனி இப்படி பாசப்பறவையை அடிக்கடி பறக்க விடமாட்டேன்னு அவருக்கு வாக்கு வேற கொடுத்திருக்கேன்.

மஹம் குழுவிற்கும், அவர்களை இங்கு வரவழைத்து 'தில்லாலங்கிடி மோகனாம்பாள்' நாடகத்தை எங்களுக்கு அளித்த ரிச்மண்ட் executive committee குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

- மீனா சங்கரன்

Sunday, June 11, 2017

வல்லினம் @ இருபெயரொட்டுப் பண்புத்தொகை (ஞாயிறு போற்றுதும்)

அடிக்கடி கண்ணில் படும் ஒரு ஒற்றுப் பிழையை குறித்து இன்றைய குறிப்பு.

தமிழில் எங்கு வலி மிகும்/மிகாது என்று வகுக்க விதிகள் இருப்பது தெரியும். அதில் ஒன்று இது.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரண்டு தனிப் பெயர்கள் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைக் குறித்தல் இரு பெயரொட்டு பண்புத்தொகை.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை = இரு பெயர்கள் ஒட்டி வந்து பண்புத்தொகை ஆதல்.
அவ்வளவுதான்.

அப்படி இரண்டு பெயர்ச் சொற்கள்* அடுத்தடுத்து வரும் போது நடுவுல பசை (ஒட்டு/ஒற்று) போட்டுட வேண்டியதுதான்.
*இரண்டாவது சொல் வல்லினத்தில் (க,ச,ட,த,ப,ற) துவங்கினால்.
எ.கா:
தமிழ். சங்கம்.
இரண்டும் தனித்தனி பெயர்ச் சொற்கள். ஒன்றைச் சார்ந்து மற்றோன்று இல்லை. ஆனால் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைச் சொல்லிவிடுகிறது. அந்த சங்கம் கன்னட/தெலுங்கு சங்கமெல்லாம் இல்லை, அது தமிழ் தொடர்பான சங்கம்-ன்னு அதன் பண்பைச் சொல்லிவிடுகிறது.

இப்போ,
என்ன சங்கம்? தமிழ்ச் சங்கம். 

சொற்களை மாற்றிப் போட்டாலும் விதி அதே.
என்ன தமிழ்? சங்கத் தமிழ்.
சங்கத் தமிழ் மட்டுமில்லை, சென்னைத் தமிழுக்கும் அங்ஙனமே.
சென்னை + தமிழ் = சென்னைத் தமிழ்.

மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள:
எப்போதும் பண்பைச் சொல்கையில் அழுத்திச் சொல்லணும். 
 
[தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் பள்ளியில் என் செல்ல குட்டி படிக்குது-ன்னு யாரவது "மேலாக" எழுதினா அவர்களை என்ன செய்யணும்ன்னு யோசிச்சு வையுங்க. செய்திடுவோம். :) ]

மேலும் சில எ.கா:
பட்டு + குட்டி
உயிர் + தோழி/ழன்.
தமிழ் + பள்ளி
 
வேறு சில சொற்களை முயன்று பாருங்கள்.

Sunday, June 04, 2017

ஞாயிறு போற்றுதும் - முயற்சி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த 'முயற்சி' என்ற சொல் தொடர்பாக இன்று ஒரு குறிப்பு.

I am trying என்பதை எப்படிச் சொல்வோம்?
முயல்கிறேன் என்பது சரியான பயன்பாடு. முயற்சிக்கிறேன் என்பது? தப்புதாங்க.

பயிற்சி என்பதை சொல்லிப் பாருங்கள். செய்து கொண்டிருக்கும் பயிற்சியை "பயிற்சி செய்கிறேன்" என்றோ, பயில்கிறேன் என்றோதான் சொல்கிறோம். பயிற்சிக்கிறேன், பயிற்சித்தான் என்றெல்லாம் கொத்து பரோட்டா போடுவதில்லை. ஆனால் பாவம், முயற்சி மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டது.

சரி,
முயற்சிக்கிறேன், முயற்சித்தான்/ள்/ர் எல்லாம் தப்புன்னு ஆகிடுச்சு.
ஆனால், யோசிச்சிச்சு பார்த்தால் இந்த மாதிரி சொற்களை நாம எல்லா நேரங்களிலும் தவறாகப் பயன்படுத்துவதில்லை.
"பண்ணி" போட்டு ஒரு மாதிரி சமாளிச்சுடுறோம்.
முயற்சி பண்ணினேன் / முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் /முயற்சி பண்ணுவேன்.
இது ஒரு மாதிரி தவறில்லாத பயன்பாடு. பண்ணியை தொறத்திட்டு "செய்" என்ற கட்டளைச் சொல்லை பயன்படுத்தினால் இன்னும் கொஞ்சம் சரியாகிடும். முழுமையாக இல்லைன்னாலும் just pass-ஆவது செய்திடும்.
முயற்சி செய்தேன் / முயற்சி செய்கிறேன் / முயற்சி செய்வேன்.
ஏன் just-pass என்றால், முயற்சி என்பது பெயர்ச்சொல். முயல் என்பதே வினைச்சொல். ஆனாலும் "முயற்சி செய்வதில்" இலக்கணப் பிழை இல்லாததால் கருணை-பாஸ்.

எழுதும் போது இப்படிச்
​சரியாக ​
எழுதலாம்:
முயன்றேன் / முயல்கிறேன் / முயல்வேன்

கவனிக்க: பெயர்ச்சொல்லில் காலம் அறிய முடியாது. ஆனால் வினைச் சொல்லில் காலம் அறியலாம். அந்த வினை முற்றிற்றா இல்லையா என்பதை அச்சொல் தெரிவிக்கும். (காலமொடு வரூஉம் வினைச்சொல் - (தொ.கா))

சொற்சிக்கனம் கூடுதல் சலுகை/நன்மை.

"பண்ணி" suffixed சொற்கள் எல்லாம் இப்படி கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவையே.

இப்போ என்னென்ன சொற்களை* இப்படி "பண்ணி" வெச்சிருக்கோம்-ன்னு யோசிச்சு பாருங்க.

* இந்த, "திங்க் பண்ணி", "லேட் பண்ணி" எல்லாம் விட்டுடலாம். அதெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.

Thursday, June 01, 2017

ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு இலக்கணக் குறிப்பு


உள்ளுர்க்காரர் ஒருவர் வாரந்தோறும் ஏதாவது ஒரு சிறு தமிழ் இலக்கணக் குறிப்பினை ஒரு உரையாடல் குழுவிற்காக எழுதி வருகிறார். அதை நம் வலைப் பக்கத்திலும் பதியுங்கள் என்று கேட்டிருக்கிறோம். அடி விழாது என்ற உறுதியின் பேரில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். நாங்க எல்லாரும் ரெம்ம்ம்ப நல்லவிங்க பயப்பட வேண்டாம்-ன்னு சொல்லியிருக்கோம். முடிஞ்ச அளவு வன்முறையை தவிர்ப்போம். என்ன, சரியா? :)

ஞாயிறுதோறும் ஒரு குறிப்பினை பார்ப்பதால் (போற்றுவதால்), இளங்கோ அடிகளிடம் இருந்து "ஞாயிறு போற்றுதும்"-ங்கறதை கடன் வாங்கி அந்தத் தலைப்பில் எழுதுகிறார். அதே தலைப்பில் நம் வலைப் பக்கத்திலும் பதியச் சொல்லலாம். படிக்கிறவங்க என்ன கிழமையில படிச்சாலும், புரிஞ்சா சரிதானே?


Friday, May 26, 2017

தமிழ் நாட்டின் இன்றைய பரிதாப நிலை


தமிழ்நாட்டு அரசியல் பற்றி எழுத வேண்டாம் என்று பல நாட்களுக்கு முன்  உறுதி எடுத்துக் கொண்டிருந்தேன் .ஆனால் நடக்கும் தொடர் சம்பவங்கள் என் உறுதியை குலைத்து விட்டது.தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடக்கும் சம்பவங்கள் இந்திய அரசியலை திசை மாறி பயணிக்க செய்துவிடுமோ என்ற கவலை எல்லோரையும் பேச வைத்திருக்கிறது.

பொதுவாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சென்ற சில ஆண்டுகளாக இந்திய அரசியலை உற்சாகத்துடன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.அவர்களுடைய கனவுகள் பற்றி பேச இப்பொழுது தயாராக இல்லை அந்த கனவு கலையும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  ஆனால் படித்த மத்திய தர வர்க்க மக்கள் தமிழ்நாட்டு அரசியலை கலைஞர் எதிர்ப்பு உணர்வுடன் பார்த்து வந்ததை கவனித்துக் கொண்டிருக்கிறேன் அந்த காரணத்துக்காகவே அவர்கள் ஜெயலலிதாவின் அரசியலை ஆதரித்துப் பேசி வந்ததும் தெரியும் எதிரிக்கு எதிரி நண்பன்  என்ற அந்த தவறான கருத்து தமிழ்நாட்டிலும்  பரவலாக  அரங்கேறிக் கொண்டிருந்த காலம் உண்டு.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அரசியல் சார்பு இல்லாமல் நாட்டு நலன் கருதி சிந்திக்கும், பேசும் மக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.  அவர் இருக்கும்போது எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று இதற்கு அர்த்தம் அல்ல.  ஆர்.  கே நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதன் பிண்ணனியை அறிந்தவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக பட்டப் பகலில் ஒரு வாக்குக்கு ருபாய் 4000 கொடுக்கும் காட்சி தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கமுடியும்,என்ற மோசமான நிலைமை .  உருவாகியிருக்கிறது.  ஆளும் கட்சியின் இரண்டு அணிகளும் மத்திய அரசாங்கத்தின் தயவைப் பெறுவதற்கு போட்டி  போட்டுக் கொண்டிருக்கின்றன.ஆளும் கட்சியின் சட்டசபை உறுப்பினர்களுக்கு :ள்ள ஒரே நோக்கம் எப்படியாவது ஐந்தாண்டு சட்டசபை உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.  அதற்காக அவர்கள் கூண்டோடு விலை போகத் தயாராக இருக்கிறார்கள் சில்லரையாகப் போனால் சபை கலைக்கப்படும் அபாயம் இருக்கிறது.  எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை சட்டசபை கலைக்கப்படாது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.  இடையில் பல உறுப்பினர்கள் கோஷ்டியாகப் பிரிந்து கிடைத்தவரை சுருட்ட பேரம் செய்கிறார்கள்.  சாதி வாரியாகவும் மாவட்ட வாரியாகவும் இது நடக்கிறது
 கொடநாடு பங்களாவின் ரகசியம் முழுவதும் இன்னும் வெளியாகவில்லை .அங்கே உள்ள பெரிய மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடிக்க உள்விஷயம் தெரிந்தவர்கள் நடத்திய நாடகம்தான் அது என்று மக்கள் சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது அதையொட்டி  இது வரை  4 அல்லது 5 கொலைகள் நடந்திருக்கிறது.  சந்தேப்படும்படியான சில விபத்துகளில் சம்பந்தபட்ட சிலர் இறந்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டு காவல்     துறை இது பற்றி நியாயமான, உண்மையான விசாரனை நடத்த வாய்ப்பில்லை.  மத்திய அரசாங்கம் இதில் தனக்கு ஏதாவது அரசியல் லாபம் இருக்குமா என்றுதான் நினைப்பதாகத் தெரிகிறது.

 ஏற்கெனவே இரு கோஷ்டிகளில் எது தன் பக்கம் சாயும் என்று மத்திய அரசாங்கம் கணக்கு போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது தங்கள் பலவீனத்தை சரியாகத் தெரிந்து இரு அணிகளும் மத்திய அரசாங்கத்தின் கருணைக்கு மணு போட்டுக் கொண்டிருக்கின்றன.  இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் மாற்றி மாற்றி பிரதமரை சந்தித்து பேசுகிறார்கள் விவசாயிகளை சந்திக்க.நேரம் இல்லாத பிரதமர் இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க முடிகிறது.  கொள்ளைக்காரர்களில் வல்லமை படைத்தவனை ஆதரித்து சிம்மாசனத்தில் உறுதியாக அமர்த்த மத்திய அரசாங்கம் நியாயம் தேடிக் கொண்டிருக்கிறது.  மற்றபடி இந்த நாடகத்தில் தர்மம் நியாயம்  சமூக அக்கரை எதைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை.ஒரு தொகுதியில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு 89 கோடி ருபாய் செலவிட ஒருகட்சி தயாராக இருந்தால் அந்த கட்சியின் தரமும்,பணபலமும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தால் நம்முடைய ஜனநாயகம் போன கதி தெரியும் .  
தினம் தினம் நடக்கும் குழப்பத்துக்கு இடையில் மேலும் ஒரு பெரிய குழப்பம் வர வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. அதுதான் ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசம். ஒவ்வொரு படத்தின் வெற்றிக்குப் பிறகும் ரஜனி அரசியலுக்கு வருகிறார் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது இந்த முறை தீவிரமாகப் பேசப்படுவதன் உள்நோக்கம் எல்லோருக்கும் புரிகிறது .  திரைப்படங்களில் மகாராஜா வருவதற்கு முன் பராக் பராக் என்று காவலாளி கூறிக் கொண்டு வருவது போல ஏகப்பட்ட அமர்க்களம்.காலம் கூடி வருவதாகவும் ஆண்டவனே நேரம் பார்த்து கொடுத்து விட்டதாகவும் சொல்லுகிறார்கள்.மத்திய அமைச்சர்கள் ரஜனியோடு தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் என்ற செய்தியும் உண்டு.அவர் தனிக் கட்சி தொடங்காமல் தன்னுடன் இணைந்து அரசியல் செய்தால் பாரத தேசத்தின் புனிதத்தையும் பழம்பெருமையையும் காப்பாற்றலாம் என்று மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சி நினைக்கிறது சிவாஜிகணேசன் விஜய காந்த் போன்றவர்கள்  அரசியலுக்கு வந்து பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும் இப்பொழுது விஜகாந்த் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை சாராய நெடி வரும் திசையைத் தேடிப் போனால் ஒருவேளை அவரைக் கண்டு பிடிக்கலாம்.
 
ரஜனி அரசியலுக்கு வந்தால் ஒரே லாபம்  சி.  பி.  .  ரெய்டு வருமான வரித் துறை ரெய்டு என்று அவருக்கு எதுவும் இருக்காது
ஒரு  நூற்றாண்டு காலம் தமிழ்நாடு கூத்தாடிகள் கையில் அகப்பட்டு சீரழிய வேண்டும் என்று ஒரு சாபம் இருப்பதாக நாலும் தெரிந்த ஒரு ஜோசியர் கூறுகிறார் எனக்கு தனிப்பட்ட முறையில், அவருடைய ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை ஆனாலும் ஒரு ஜாக்கிரதைக்காக இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்டறிய வேண்டும் வடநாட்டில் மதத்தையும்  சாமியார்களையும் வைத்து அரசியல் செய்வதைப் போல தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களை வைத்து அரசியல் நடத்தினால் தான் பிழைப்பு ஓடும் என்று தெரிந்து கொண்டிருக்கிறர்கள். 
மாநிலத்தின் மிகப்பெரிய நதியான காவிரியில் நீர் இல்லை வறண்டு கிடக்கிறது.வளமான தஞ்சை மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழில் தேடி நகரங்ளில் கூலிவேலை செய்து பிழைக்க வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலான அணைக்கட்டுகளில் அடிமண் மட்டுமே தெரிகிறது ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அரசாங்கத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளத்தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது மற்ற கட்சிகளூம் ரஜனியின் அரசியல் வருகை ஏதோ ஒரு யுகப்;பரட்சி போல அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  பொறுப்பான தினசரிகளில் கூட இது பற்றி செய்தி கட்டுரையும் தலையங்கமும் வருகிறது
சில சமயங்களில் நம்பிக்கை தரும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது அதுதான் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் செய்யும் கலகம்.

உச்ச நீதி மன்ற்ம் கொடுத்த தீர்ப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.  உடனே தேசிய நெடுஞ்சாலைகளின் விளக்கத்தையே மாற்றி விட்டது மாநில  அரசாங்கம்  பல தேசிய நெடுஞ்சாலைகள் மாநில சாலைகளாக அவதாரம் எடுத்தன. எல்லாம் மத்திய அரசாங்கத்தின் உடன்பாட்டோடுதான் செய்தார்கள்.அதே நெடுஞ்சாலைகளில் அதே மதுக்கடைகள் வழக்கம் போலச் செயல்பட்டன. அதன் பிறகு தொடங்கியது பெண்கள் எழுச்சி .  நூற்றுக்கணக்கான இடங்களில் பல்லாயிரக்கண்க்கான பெண்கள் கூடி மதுக்கடைகளை முற்றுகையிடத் தொடங்கினார்கள் ஒரு மாதத்துக்கு முன் தொடங்கிய இந்த போராட்டம் முடிவு இல்லாமல் நடக்கிறது எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியும் இதில் முனைப்பு காட்டவில்லை .  நகரங்கள் கிராமங்கள் என்ற வேற்றுமை இல்லாமல் எல்லா பகுதிகளிலும் மறியல் தொடர்கிறது தொடக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு எதிராக ஆரம்பமான இயக்கம் எல்லா பகுதிக் கடைகளுக்கும் எதிராகத் திரும்பிவிட்டது.இதற்கு முக்கிய காரணம் தேசிய நெடுஞ்ச்சாலைக்கான விளக்கத்தை அரசாங்கம் மாற்றியதுதான்.கூட்டுசதியை மக்கள் புரிந்து கொண்டதுதான். 
வெறும் மறியலில் தொடங்கிய இயக்கம் படிப்ப்படியாக எல்லா மதுக்கடைகளுக்கும் எதிராகத்  திரும்பியது மறியலோடு மட்டுமல்லாமல்  கடைகளில் புகுந்து பாட்டில்களை எடுத்து உடைத்து வீதியில் எறிகிறார்கள்.  எல்லாம் பெண்கள்தான்.எந்த காவல்துறையும் அவர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையால் எந்த பயனும் இல்லை.  கலகம் அதிகமானது மட்டுமல்லாமல் பல புதிய பகுதிகளுக்கும் பரவியது
எல்லா தொலைக்காட்சிகளும் தொடர்ந்து நடக்கும் கலகத்தை ஒளி ;பரப்பிக் கொண்டிருக்கின்றன. திருப்பூரில் ஒரு தெருவில் மறியல் செய்த ஒரு பெண்ணை கன்னத்தில் ஒரு அறை விட்டார் ஒரு காவல்துறை அதிகாரி.அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தன் கன்னத்தை தடவிக் கொண்டார்கள். அந்த அளவுக்கு பலமான அடி அந்த பெண்ணுக்கு காது செவிடு ஆகிவிட்டது என்று செய்தி.  ஆனால் அதைக் கண்டு எந்த பெண்ணும் பயந்து போராட்டத்தில் ஈடுபட தயக்கம் காட்டவில்லை.  பெரும்பலும் குடித்து வீணாகும் இளைஞர்களின் தாயார், னைவி, குழந்தைகள் இப்படி குடும்பம்.குடும்பமாக பலர் வீதிக்கு வந்துவிட்டனர். தன்னெழுச்சியாகத் தொடங்கிய இந்த போராட்ட்த்தைப் பார்த்து அரசாங்கம் ஆடிப் போய் விட்டது.எந்த அமைச்சருக்கும் மக்களை சந்திக்கும் துணிவு இல்லை. பெண்களின் இந்த போராட்டம் தொடர்கிறது.
இப்படி எல்லாமே குறைகள் நிறைந்த அறிக்கையாக இந்த கட்டுரை அமைந்து விட்டதாக யாரும் குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம். படிப்பவர்கள் சிரிக்க ஒரு செய்தியோடு முடிக்கலாமென்று நினைக்கிறேன்.அந்த செய்திகூட நடிகர் கட்சி மாறியது தொடர்பான செய்திதான். ராதாரவி என்ற சினிமா நடிகர் சமீபத்தில் .  தி.  மு.கவிலிருந்து விலகி தி.மு..வில் சேர்ந்தார், அதற்கு அவர் பத்திரிகை நிருபர்களிடம் கொடுத்த காரணம். அவருடைய தாயார் இறந்த போது எந்த .  தி.  மு.  தலைவரும் இவரை சந்தித்து ஆறுதல் கூறவில்லையாம்.  ஸ்டாலின் ஒருவர் மட்டுமே  துக்கம் விசாரித்து இவருடைய கண்ணீரை துடைத்து விட்டாராம். அதனால்தான் திமுவில் இப்பொழுது சேர்ந்தாராம்.  அந்த தாயில்லா பிள்ளை கொடுத்த   கொடுத்த விளக்கம் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ராதா ரவியின் தாயார் இறந்து 9 வருடம் ஆகி விட்டது.