Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - ஒரு கிராமத்து மென்பொறியாளன்

காலேஜ் வாழ்கையில கண்ணடிச்சப்போ தெரியல....
அவ கண்ணாடி அழுததுல காரணம் கொஞ்சம் வெளங்கிச்சு...
வேலை வெட்டி தேடும்போது வெவரம் ஏதும் பத்தல..
வாங்குன வேலைய பார்க்கையிலே வெட்டியாவே இருந்து இருக்கலாம்னு தோணுது ..

எங்க வீட்டு பொறியாலன்னு என்னைய படிக்க வெச்சாங்க..
மங்கலாக நானும் படிச்சு மதுரைல இருந்து கெளம்புனேன்.....
பட்டைய போட்டு படிச்சுகிட்டு போனாலும் நெட்டையா ஒருத்தன் வந்து உனக்கு இங்க வேலை இல்லேம்பான்...

போட்ட சட்டையும் தாகத்துல ஒரு நாளைக்கு தாங்காது...
குட்டையில கூட தண்ணீ இங்க தேங்காது.....
சென்னைன்னு அது பேரு இருந்தாலும் தொன்னையில தான் சோறு திங்கணும்....

வேண்டி வேண்டி வேலை தேட போனாலும் ஆண்டி கோலம் தான் திரும்பும் போது அதிகம்....
அந்த ஆண்டிய என் ஆத்தா அதிகமா வேண்டுனதுனாலவோ என்னவோ கடைசில ஒரு வேலைய கொடுத்தான்...
கழுத்து காலர் மேல மாட்டு கயிற கொடுத்தான்.....

செக்கு மாடு வட்டம் கூட ஆரம் மாறும்.....
பத்து வருஷம் ஆனாலும் பட்டன் மட்டும் தான்....

பக்கத்துல பொண்ணாச்சேன்னு பயத்தோட நான் இருப்பேன்..
கக்கத்துல நெருப்பெடுத்து கல கலன்னு அவ பொகைக்கிரா.....

சத்தியமா புரியலப்பா சனி ஞாயிறு என்ன பண்ணணு...
குப்புறவே படுத்து கெடப்பேன் ஹோட்டல் சாப்பாடு வேணாமுன்னு...
சத்தம் இல்லாம மாமி வீட்டு சட்டி வாசம் கொடுக்கையில
சுத்தம் பண்ணாத தொண்டை சங்கு லேசா ஊதும்....

எந்த பக்கம் போனாலும் எவனோ ஒருத்தன் குடிக்கிறான் ...
எமகாதகனா பார்த்து தான் எல்லாருக்கும் மேனேஜர் ஒருத்தன் இருக்கிறான்...
நொட்ட சொல்லி நொட்ட சொல்லியே நோக வைச்சாலும்..
பார்ட்டின்னு ஒன்னு வெச்சா பல்லுல மொகம் காட்டுறான்...

நட்டு வச்ச செடி கூட நல்ல பெரிய மரம் ஆயாச்சு
பொட்டு பணம் சேரலையே என் வீட்டு பொட்டியில
நாளைக்குன்னு ஒரு நாள் விடியும்னு நம்பிக்கைல தூங்குனாலும்
காலர் மேல கட்டுன கயிற மட்டும் கடைசி வர கழட்ட
தைரியம் இன்னைக்கும் இல்ல.....

கடைசியா ஒண்ணு மட்டும் புரியுது.....
இதுக்கு எங்கப்பன் கையில புடிச்ச மாட்டு கயிறே மேல  தான்டோய்....

அருண் பக்கங்கள் - நட்பு


அறியாத வயதினில் அவன் எறிந்த கல்லின் கரையாத காய தழும்பு நட்பு....
.
அரைக்கால் டிராயரை அவிழ்த்து விளையாட்டு காட்டினாலும்
 அழும் நீரினில் முகம் சுருங்குவதும்
கரை ஏறி கண்மாய் ஏறி நுரை பொங்க நீச்சலடித்ததும்
மழையின் கூதல் போக்க மண் பூசி விட்டதும்
பட்டாசு வெடிக்க காசில்லாத பொழுதுகளில் பாலிதின் பைகளிலே தீபாவளி காட்டியதும் நட்பு.....

தோற்றுப்போன தேர்வுகளின் முடிவுகளை நீர்த்து போக செய்யும்
நீயும் என் பக்கம் தான் நிற்கிறாய் என்ற எண்ணம்...
படிப்பதற்காக கூடிய பல இரவுகளில் நாம் படக்கதைகள் பேசியது தான் அதிகம்....

எவனோ ஒருவன் மணக்கும் பெண்ணிற்காக என் நண்பனுடன் சேர்ந்து நானும் வாங்கிய அடி
இன்னும் சிரிக்க வைக்கிறது என் இதழ்களை.......

பார்த்த பொழுதுகளில் எல்லாம் பரவசமாக பாட்டில்களை தேர்ந்து எடுத்தாலும்
என் பாதி நோயையையும்  பகிர்ந்து கொண்டவன் என் நண்பன் ......

சில நேரங்களில் சிரிக்க விட்டு, பல நேரங்களில் அழ வைக்கும் காதல் நோய்க்கான கடவுளின் மருந்து நட்பு...
எதற்காக பேசுகின்றான் என்ற எண்ணம் துளியும் எழாமல் எனக்காக நீ ஆட்டிய தலை அதன் பெருமை சொல்லும்....

திருமண சந்தையில் எடை போகும் நாட்களிலும் விடை பெற போகும் வேதனை நொடிகளிலும்
விளையாட்டாய் எனை பார்த்து நீ உரைப்பாய் ."விடுடா எல்லாமே வாழ்க்கைல வர தானே செய்யும்"....

சொட்டு சொட்டாய் சேர்த்து வைத்த நட்புதனை பட்டு நூல் முள்ளாய் கிழித்து எரிந்தது காலம்...
எட்டு வைத்து நாம் முன்னேறும் எல்லா பொழுதுகளிலும் விட்டு விட்டே செல்கின்றோம் சில நட்புகளை....

உன் துக்கத்தினை உறவுகள் இரு மடங்காக்கும்....
உன் மனைவியின் உடல் நலம் உன்னை யோசிக்க வைக்கும்...
தள்ளாத வயதினில் தாய் தந்தையிடமும் பகிர முடியாமல் நிற்கையிலே
தோளுக்கு பின் கேட்கும் ஒரு குரல் உன் உயிர் காக்கும் "என்ன ஆச்சு மாப்ள?"...........

உதிரத்தில் உறவு கொண்டாட முடியாத இந்த அதிசயத்தை சேர்த்து வைக்கும் தெருமுனை தேநீர் கடைகளுக்கு நன்றி........

அருண் பக்கங்கள் - கம்பம்


அன்றொரு நாள் மாலையிலே
அந்த மாமரத்தின் கிளையின் பின்னே ஒளிந்து விளையாடியது...

பல நேரங்களில் பசுமையாக காட்சி அளிக்கும்....
பல முகத்தினில் சிரிப்பை வரவழைக்கும்....

சில நொடி பொழுதில் மட்டும் அதன் கண்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 ...பூ விழுந்து விட்டது என எண்ணி கொள்வேன்....

அடர்ந்த வாகனங்களால் பாவம் அதன் கண்கள் அதிக நேரம் சிவந்தே காணப்படும்.....

முன்னர் பெய்த கடும் மழையினில்
அதன் உடல் சரிந்து கிடந்தது
கண்கள் திறக்கவில்லை நெடுநேரமாய்...

எல்லோரும் முண்டியடித்து சென்று கொண்டே இருந்தனர்....
நின்று நெடுநேரம் பார்த்து கொண்டே இருந்தேன்
என்னை பார்த்து கண்ணடிக்காத அந்த சிக்னல் கம்பத்தினை.....

அருண் பக்கங்கள் - அப்பா



மொதோ தரம் முழிக்கையிலே மூச்சு கொஞ்சம் விட்டீங்க...
மூணாவதா பெத்தாலும் மொளைக்க வெச்சு ரசிச்சீக ...
காலெடுத்து வைக்கையிலே கரம் புடிச்சு நின்னீங்க...
மேலெடுத்து தூக்கி வாரி மேய்ச்சு என்ன வளர்த்தீக...
பயலுக்கு சுடு கஞ்சீனு பழைய சோத்த ருசிச்சீக...
பச்சை மொளகா போதுமுன்னு கடை பல்ல சிரிச்சீக....
காசுன்னு கேக்கும் முன்னே கைக்குள்ள ஆயிடுமே....
காய்ச்சல்ல கொதிக்கையிலே கட்டி புடிச்சா போயிடுமே...
முத்தமுன்னு கொடுத்ததில்ல மொத்தத்தையும்  கொடுத்தீக...
பெத்த புள்ளைய படிக்க வெச்சு சொத்தெதுவும் சேர்க்கலையே...
ஒன்னாம் தேதி ஆகி போனது  ரெண்டாம் நாளும் கூட மறந்து போகும்...
ஆனா ஒரு மாசமும் தவறாம உங்க சைக்கிள் முன்னாடி சக்தி ஸ்வீட்ஸ் பை ஆடும்....
பொங்கல் தீபாவளி வந்தா எத்தனை காசு கேட்டு அரிச்சிறுப்போம்....
எங்களுக்குன்னு எல்லாத்தையும் கொடுத்து புட்டு  திரி பிரிச்சு சிரிச்சு நிப்பே....
மொதோ மொறையா உன் கருப்பு முடி நரைக்கையிலே
மொத்த சத்தியும் விட்டு போச்சு....
நரச்ச முடி இருந்த இடம் நாளடைவில கொட்டி போச்சு...
இரும்பு தேகம் கொஞ்சம் இப்போ இளகி தான் போயிடுச்சே...
கரும்பு உடச்ச கரம் ரெண்டும் நரம்பு மட்டும் காட்டிடுச்சே....
தள்ளாட நா நடந்தப்போ தாங்கி தான் நின்னீக..
தாங்கி தாங்கி நீ நடக்கும் காலமுன்னு நான் காண வந்ததும் ஏன்?...
கள்ளழகர் காட்ட சொமந்த வைர தோளுக்கு என்னாச்சு
காலம் என்னும் கயிறு இறுக்கி காய்ஞ்சு போன மண்ணாச்சு....
பண பாரம் கொறைக்க நான் உன்ன விட்டு வெகு தூரம் வந்தாலும்
என் மன ஆரம் என்னவோ உன் வட்ட முகம் மட்டும் சுத்துதேப்பா.....
உன் கூட ஊரு சுத்தி ரொம்பவும் தான் நாளாச்சு...
பன்னாட வயசு ஆகி இப்போ ரொம்ப பாழ் ஆச்சே....
வயித்தில மட்டும் தான் நீ சொமக்கல....
ஆனா உன் வயசு முட்டும் சொமந்தியே....
ஒழுங்கா நீ  நடக்கையிலேயே நான் ஊரு வந்து சேரணுமே.....

நான் அப்பனாவே ஆனாலும் என் அப்பா போல மாறணுமே!!......

அருண் பக்கங்கள் - காலம்


சனிக்கிழமை காலையில் எண்ணெய் தேய்க்க வரும் அம்மாவிடம் இருந்து தப்பி ஓடுவேன் என் பம்பரத்தை எடுத்து கொண்டு........
குமார் அண்ணன் வந்த உடனேயே சில்லாக்கு ஆரம்பமாகும்....
நிழலுக்கும் வேர்க்கும் கோடை வெயிலில் தான் எங்கள் கில்லி தாண்டு உச்சமெடுக்கும்...........
பச்சை குதிரை தாண்டியே பாதி காயம் பட்டிருக்கும்........
பல்லாங்குழி ஆட பாசமாக என் அக்காள் காத்திருக்கும்.....
உள்ளங்கை வேர்த்துவிடும் கம்பு தள்ளி......
கை முட்டி தேய்ந்தது சொட்டாங்கல்லில்.....
இருட்டும் பொழுது ஒளிய தொடங்குவோம் ஒருவனை கண்டு பிடிக்க சொல்லி......
இரவின் முன்னே விளையாடுவோம் ராஜா ராணி........
வெள்ளி கிழமை மட்டுமே வரும் கோயில் யானை.....
புகை கக்கி பின்னாலே இழுத்து செல்லும் கொசு வண்டி....
மின்சாரம் தடைபட்டால் எங்கள் தெரு மெழுகின் சொர்க்கம்...
இமை மூடாமல் தானாகவே தூக்கம் சொக்கும்.....
இத்தனையும் தோன்றும் கதை போல் என் மகனுக்கு !!.....

கதையாவது கேட்க பிடிக்குமோ அவன் பிள்ளைக்கு ??.......

Thursday, November 16, 2017

தெய்வக் குற்றம்

திடீர் காப்பிப் பொடியை
வென்னீரில் கலந்து தந்தாள் பணிப்பெண்
கும்பகோணத்துக்கு மேலே பறந்து கொண்டு இருந்த
விமானத்தில்.

Tuesday, September 26, 2017

மீனாவுடன் மிக்சர் 31 - {நவராத்திரி நினைவலைகள் - 2017}

வழக்கம் போல ரிச்மண்டில் இந்த வருஷமும் கொலு சீசன் களை கட்ட ஆரம்பித்து இன்னியோட நாள் ஆறு.  வாசல்  கதவை திறந்து வெளியே வந்தாலே  தாளித்த சுண்டல் வாசனைல ஊரே மணக்குது.  அடுத்தடுத்து வடையும், கேசரியும், சு ண்டலும், சர்க்கரைப் பொங்கலுமா வீட்டுல மணத்ததுல எங்க வீட்டு நாய்கள் திடீர் உண்ணாவிரதம். இந்த அச்சுபிச்சு pedigree உணவு அவங்களுக்கு இனி வேண்டாமாம். எங்களுக்கு மட்டும் இதென்ன நாய் பொழப்புன்னு அவங்க வருத்தப் படறதுலயும் ஒரு நியாயம் இருப்பதை மறுக்க முடியலை.

எங்க ஊரை பத்தி இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்.  பத்து வருஷத்துக்கு முன்னாடி,  கல்யாண வீட்டு வாசல்ல சும்மா பாவ்லா காட்டி தெளிப்பாங்களே, அந்த பன்னீர் துளி மாதிரி இங்கொண்ணு அங்கொண்ணுன்னு  தான் இருந்தது இந்திய குடும்பங்கள்.   தெரியாம ரெண்டு கூமான்  (Kumon) சென்டர் திறந்தாலும் திறந்தாங்க, அவ்வளவு தான் அமெரிக்காவுல கூமான் இல்லாத ஊரிலிருந்து நம்ம மக்கள் எல்லோரும் அடிச்சு பிடிச்சு ரிச்மண்டுக்கு ஓடி வந்துட்டாங்க.  களை எடுக்காம விட்டத் தோட்டத்துல கட்டுக்கடங்காம வளருமே காட்டுச்செடி அந்த மாதிரி இந்திய மக்கள் தொகை இன்னிக்கு ரிச்மண்டில் பெருகிட்டு வருது. 

ஊர்ல எந்த வீடு விலைக்கு வந்தாலும் அத வாங்கறது ஒரு இந்தியக் குடும்பம் தான்னு bet வைக்கலாம் வரியான்னு கூப்பிட்டா  ஒரு சின்னக் குழந்தை கூட அந்த ஆட்டத்துக்கு வர மாட்டேங்குது. இவ்வளவு புத்திசாலியா நானும் சின்ன வயசுல இருந்திருக்கேனாம்மான்னு  எங்க அம்மா கிட்ட கேட்டா  சந்தோஷத்துல (?) எங்க அம்மாவுக்கு தொண்டை அடைச்சு பேச்சே வர மாட்டேங்குது. 

இந்த பெருகி வரும் இந்திய குடும்பங்களை பார்த்து யார் அதிகமா சந்தோஷப்படறாங்கன்னா அது அமெரிக்க வியாபாரிகள் தான்.   நவராத்திரி சீசன்ல தூக்கி விட்டெரியும் உணவு தட்டுக்கள் மற்றும் டம்பளர்களை   வண்டியோட அள்ளிக்கொண்டு போகும் இந்திய பெண்களை குலதெய்வமாவே  இவங்க கொண்டாடறாங்கன்னு  ஊர்ல பேசிக்கறாங்க. .  நாயகன் ஸ்டைல்ல சொல்லணும்னா நாலு பேருக்கு உதவும்னா இன்னும் நாலு தட்டை எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டெறிய  ஒரு இந்தியன் என்னைக்குமே தயங்க மாட்டான். புல்லரிக்க வைக்கக்கூடிய புள்ளி விவரங்களில் இதுவும் ஒன்று.

ஆனா உதவிக்கரம் நீட்டறதுல துளி கூட பாரபட்சம் பார்க்காதவங்க நம்ப இந்திய பெண்கள்.   Racial  discrimination அப்படிங்கற வார்த்தையை இந்த ஊர்ல அடிக்கடி கேட்டு காது புளிச்சு போய் தான் அவங்க இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது என்னோட அனுமானம்.  இந்திய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் எங்க அருள் உண்டு அப்படீன்னு இந்த மாசம் இந்திய  மளிகை கடைல உள்ள பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, வேர்க்கடலை போன்ற தானியங்களை ஒரு பாக்கெட் விடாம வழிச்செடுத்து  வாங்கி வந்து சுண்டலுக்கு ஊற வச்சிட்டாங்க ன்னு நினைக்கறச்ச பெருமை படாம இருக்க முடியலை.

அதென்னவோ இந்த வருஷம் சொல்லி வெச்சா மாதிரி பெண்கள் எல்லோரும்  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் புடவைகளை தான் விரும்பி இந்த சீசனுக்கு உடுத்தியிருக்காங்க.  புடவைக் கலர்ல தான் மாற்றம் இருக்கே தவிர அவங்க போடும் அகல ஜன்னல் போட்ட  காத்தோட்டமான ஜாக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லைங்கறது விசேஷம்.

ஒரு பெண் எவ்வளவு வீட்டு கொலுவுக்கு போகிறாள் அப்படிங்கறதை அவ சுண்டல் கலெக்ஷனுக்காக எடுத்துப் போகும் பையை வைத்தே சுலபமா சொல்லிடலாம்.  IIT காலேஜ் பசங்க தூக்கிட்டு போற ஜோல்னா பை மாதிரி இருந்தா, அவள்  ஒரு ஐந்தாறு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறாள்னு அர்த்தம்.  நம்மூர் வண்ணாத்தி சைக்கிளுக்கு பின்னாடி கட்டியிருக்கும்  சலவை துணி பை  சைசில் இருந்தால் அவளுக்கு ஒரு பத்து வீட்டில் அழைப்பு இருக்குன்னு அர்த்தம்.  கோயம்பேடு காய்கறி சந்தைல வந்திறங்கும் கோணிப் பை ரேஞ்சுல பார்த்தீங்கன்னா சர்வ நிச்சயமா அவள் அன்று  நடுராத்திரி வரைக்கும் தெருத்தெருவா சுண்டலுக்கு சுத்தப் போகிறாள் அப்படீங்கறதுல சந்தேகம் இல்லை. 

போன வருஷம் நவராத்திரி blog ல நான் புலம்பினதை ஞாபகம் வச்சிருந்த சில நல்ல மனங்கள் சுண்டலோட இந்த முறை பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் அருமையான டீ போட்டு கொடுத்து என் மனசை குளிர வச்சிட்டாங்க.  தெருத்தெருவா சுத்தறதுக்கும் ஒரு தெம்பு வேண்டாமா? நன்றி தோழிகளே. 

இந்த கணவர்கள் சங்கம் தான் என் குரலுக்கு இன்னும் செவி சாய்க்க மாட்டேங்கறாங்க.  மனைவிகள் கஷ்டப்பட்டு வீடு வீடா போய் வாங்கி வர்ற சுண்டல்ல சரி பாதி பங்குக்கு மட்டும் கேக்காமயே வர்றவங்க கொலு அழைப்புக்களை வரிசைப்படுத்தி கொடுக்க ஒரு app  எழுதிக் கொடுக்க கூடாதா?  தெரியாம தான் கேக்கறேன்.  இந்த உலகத்துல கருணை கபடி ஆட போயிருக்கா?  இல்ல நியாயம் தான் கிரிக்கெட் விளையாட போயிருக்கா?  

காலம் இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சொல்லும்னு நம்பிக்கையோட  எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

Monday, September 25, 2017

கொடுந்தமிழ். ​அப்படின்னா?

​செந்தமிழ் தெரியும், பைந்தமிழ் கூட தெரியும், அதென்ன கொடுந்தமிழ்?
கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்ததா எனப் பார்த்து விடுவோம்.

Spoiler: அது எதிர்மறைச் (negative) சொல் அல்ல.

இலக்கண விதிகள் வழுவாமல் சொற்கள் அப்படியே இருத்தல் நலமே. ஆனால் மக்கள் பல திசைகளுக்கு பணி நிமித்தமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் போய் வரும்போது அந்தந்த வட்டாரங்களின் தன்மைக்கேற்ப தமிழையும் வளைத்து பேசுவர். அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்கத் தேவை இல்லாததும் கூட.

மேலே  உள்ள பத்தியில் 2 விசைச் சொற்கள் (keywords) உள்ளன. திசை, வளைத்து ஆகியன. வேண்டுமென்றேதான் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. எதற்காக என பார்ப்போம்.

தமிழ் பேசப்பட்ட நிலம் செந்தமிழ்-நிலம் (Mainland). அதைச் சுற்றி அமைந்த மற்ற நாடுகளில் இருந்து வந்து போகும் மக்கள் மூலமாக தமிழுக்குள் வரும் சொற்களை திசைச்சொற்கள் என்கிறார் தொல்காப்பியர். அதாவது, ஒரு பொருளைக் குறிக்க வழக்கமான சொல்லைத் தவிர்த்து வேறு புதிய ஒரு சொல்லை பயன்படுத்துவது. எகா: சிறுகுளம் என்பதை கேணி என்று ஆற்காடு பக்கம் சொல்வது.

இப்படி மொழியை வளைத்து, ஒரு பொருளை வேறு ஒரு திசையில் இருந்து வந்த சொல்லின் வழியாக குறிக்கும் போது அந்தச் சொல் "திசைச்சொல்".

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொ.கா)


ஆச்சா..
இப்போ, ஏன் "கொடுந்தமிழ்"?
கொடு என்றால் வளைதல்.

எகா:
கொடுவாள் (வளைந்த வாள்), கொடுங்கோல் (வளைந்த அரசு - அறத்தில் இருந்து வளைந்த அரசு), கொடுக்காப்புளி, கொடுக்கு..

அதன்படியே, வளைந்த தமிழ் = கொடுந்தமிழ்.

​நன்னூல் வரை திசைச்சொல் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள். நன்னூலுக்கு உரை எழுதும்போது தான் "வளைந்திருக்கிறது".​

​இப்போது அதையே நாம் வட்டார வழக்கு என்று சொல்கிறோம்.​

​வீட்டுப்பாடம்:
உங்களுக்கு தெரிந்த கொடுந்தமிழ்/திசைச்சொல்/வட்டார வழக்குகளை குறிப்பிடுங்கள்.​

Monday, September 18, 2017

​தமிழின் மிக நீண்ட சொல்


ஆங்கிலத்தில் மிகப் பெரிய (நீண்ட) சொல் எது எனக் கேட்டால் நம்மில் சிலர் கூகுளை கேட்காமலேகூட சொன்னாலும் சொல்லி விடுவோம்.

தமிழில்?

தமிழின் எளிமை அப்படி நீண்ட தனிச் சொற்களை ஊக்குவிப்பதில்லை. எது "சொல்" என்பதற்கே நாம் தெளிவான வரைமுறை வைத்திருக்கிறோம்.
பெயர், வினை. அவ்வளவுதான் வகைகள்.
இடைச்சொல், உரிச்சொல் எல்லாம் பெயர், வினைச் சொற்களைச் சார்ந்தது.

இதிலும்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொ.கா) 
என்ற கட்டுப்பாடு வேறு ​உண்டு.

இப்படி அமையும் சொற்களைப் பிரிக்க (பகுக்க) முடிந்தால் அவை தனிச் சொற்கள் அல்ல. கூட்டுச் சொற்கள்.

அதன் Grammatical terms: பகுபதம், பகாபதம்.
பகும் (பிரியும்) சொற்கள் (பதம்) - பகுபதம்.
பகாச் சொற்கள் - பகாபதம்.

எகா:
படித்தான் = படி + ஆன். இது பகுபதம் (பிரியும் சொல்).
படி என்பதை மேலும் பகுக்க முடியாது​. எனவே பகாபதம். (பிரியாச் சொல்)

ஆச்சா?
இப்போ வருது நன்னூல் உதவி:
பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் 
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

அதன்படி உயர் அளவாக,
பகாபதம்: 7 எழுத்துக்கள்.
பகுபதம் : 9 எழுத்துக்கள்.

ஆக, technically உயர்ந்த அளவாக 9 எழுத்துக்களே இந்தச் சொல்லிலும் வர முடியும். இதைக் காட்டிலும் நீண்ட சொற்கள் எல்லாம் பல சொற்களை நாமாக சேர்த்து எழுதியதாகத்தான் இருக்கும் என்கிறார்கள். மறுப்போரும் உண்டு. ஆனால் நன்னூல் சொல்வது மேலே குறிப்பிட்டது போலத்தான்.

எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகள்?
புதிய சொற்களை ஆக்கும் போது அவை பயனுள்ளதாக மட்டுமின்றி எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

Wednesday, September 06, 2017

இது உனக்கான பயணம்...!!!

இது உனக்கான பயணம்...!!!

பயணம் தொடர நேரம் வந்தாயிற்று
எத்தனை நேரம்  என் கைகளுக்குள் 
உனது கைகளைப் பொதித்து 
கொள்வது!!

சத்தியமாக உனக்கான பிடி
இங்கு இல்லை அதோ
அங்குள்ளது!
அதைப் பிடித்துக்கொள்வாயாக...!!

நான் உன் ஒரு கையைப் 
பிடித்து இருந்தாலும் 
நீ உன் இன்னொரு கையால் இந்த 
உலகத்தின் கைகளை பற்று!!

உனக்கான நேரத்தில் 
உன் கால்கள் உலகத்தின் மடியில் பட்ட  
மறுநொடி உனக்கான தேடல் ஆரம்பிக்கும்...
உனக்கான பாதுகாப்பை  
நீயே விரைந்து
உறுதி செய்துகொள்....!!

உன் கரம் பிடிக்க நாங்கள் இருந்தாலும் 
சுற்றி உன்னை அறியா பலர் 
உன்பால் அறிந்து அன்பால் உன்னை
மறிக்க கூடும் ...
நீ உன் தேவையறிந்து
இருகப்பற்று 
உனக்கான வாய்ப்பை !!

பல இன்ப துன்பங்கள் கடக்க 
இருக்கும் நீ...
எந்த நிலையிலும் உனை நீயே 
நலம் காக்க கற்றுக்கொள்!!

இவ்வுலகு உனக்கு எதை தர காத்திருக்கிறதோ...
அதை துணிவுடன் எதிர்கொள்!!

அச்சம் உன்னை பின்னுக்கு தள்ளும் 
தைரியம் துணிவுடன் உன்னை 
வெற்றி மேடை ஏற்றும் ...!!

அரசே கூட உனக்கெதிராக சட்டம் 
அமைக்க கூடும்....
அநீ(ட்)திக்கு எதிராக போராடு 
பதில் வரும் வரை...!!

பூக்கள் தேவைப்படாது ஆனால் 
சாட்டை தேவைப்படும்
சில நேரத்தில்...!!

வா உன்னை வரவேற்க 
காத்திருக்கிறது 
சவாலான பயணம்...!!!
  • ப்ரியன்