Friday, April 10, 2026

தமிழ்ச்சங்கம் எனும் ஊர்க்கிணறு

 உலகின் எந்த மூலையில் தன் வாழ்க்கை அமையப் போகிறது என அறிந்திடாத காலம். தமிழ்நாட்டில் பிறந்து, நல்ல முறையில் படித்து தேறி, இந்திய ஒன்றிய அரசு, "எங்க வேணா ஓடிப்போ" என கொடுத்த கடவுச் சீட்டை கையில் வைத்துக் கொண்டு அலைந்து கிடந்த காலம்.

அமெரிக்கா போகலாம் எனும் வாய்ப்பு வருகிறது. இரிச்மண்டு என்று ஒரு ஊர் இருப்பதோ, கேப்பிடல் ஒன், ஏந்தம் போன்ற நிறுவனங்கள் இருப்பதோ தெரிந்திருக்கவில்லை. அலுவலகத்தில் மேலதிகாரிகள் கூப்பிட்டு, ஆன்சைட்டு போக வேண்டி இருக்கும், ஏற்பாடுகளைச் செஞ்சுக்கோ என்ற போது, காலம் என்ற மலையருவி வாழ்க்கை எனும் பாறையை இரிச்மண்டு நோக்கி உருட்டி விடப் போகிறது என்று அறிந்திருக்கவில்லை. அப்படித்தான் நடந்தது. உருண்டு வந்து சேர்ந்தோம்.

20-25 ஆண்டுகளுக்கு முன் இரிச்மண்டு வந்து இறங்கிய பெரும்பாலான தமிழர்களின் வாழ்க்கை-வரலாற்றின் பொதுப் பகுதி மேலே உள்ள பத்திகள். சில சிறு மாற்றங்கள் இருக்கலாம். வேறு ஊருக்கு போய் கொஞ்ச நாள் இருந்து பின் இங்கு வந்து சேர்ந்திருக்கலாம், இங்கே வந்து பின் வேறு இடத்துக்கு போய் மீண்டும் திரும்பிய பலர் உண்டு. எதுவாகினும், அடிப்படைச் சட்டகம் (template) மேலே உள்ள பத்திகள் தான்.

வந்துவிட்டோம். புது ஊர், குளிர் இதுவரை காணாதது, இணையம் அதன் மழலைப் பருவத்தில் இருந்தது (ஊருக்கு தொலைபேசியில் பேச பல வேலைகள் செய்ய வேண்டும், அது பற்றி பிற்பாடு). எல்லோரும் புதுசு. எங்காவது தமிழ் போன்ற முகங்களைக் கண்டால், அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கம். நம்மைப் போலவே தயக்கத்தோடு உள்ளவரிடம் சிறு புன்னகை புரிந்து நெருங்கிப் போனால் "மீரு தெலுகா" எனக் கேட்டு இல்லை என்றதும் அவர் U-turn அடித்ததில் வாங்கிய மொக்கை என திருவிழாவில் காணாமல் போன குழந்தையென நின்றிருந்த காலங்கள் உண்டு. இளையராசாவும் யாகூ மெசஞ்சரும் மட்டுமே துணையிருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக, தமிழும் பேசும் நண்பர் குழு அமைத்துக் கொண்டு, ஆற்றில் மிதந்து ஓடும் பரிசலாக வாழ்க்கையின் போக்கில் அப்படியே ஓடிக்கொண்டிந்தோம். தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கின. ஊர் நடுவே உள்ள பொதுக் கிணற்றில் நீர் நிரம்பியது போல ஆனது. நட்புறவை நாடி தாகத்தோடு காத்திருந்தவர்கள் கூடும் இடம் ஆனது தமிழ்ச்சங்கம். இன்றுவரை, பழைய தமிழ்ப்பட நாயகன் பேருந்தில் இருந்து புதிய ஊருக்கு திருதிருவென முழித்தபடி இறங்குவது போல இரிச்மண்டில் வந்திறங்கும் தமிழர்களுக்கு ஊர்க்கிணறு தமிழ்ச்சங்கம்தான். புதியவர்களுக்கு மட்டுமல்ல; பலருக்கு நட்புகள் அரும்பியது இங்கே தான். நம் பிள்ளைகள் தமிழ் படிப்பது இங்கே தான். தமிழ்நாட்டுக்கு இயற்கையால் துன்பம் நேர்கையில் பொருளுதவி செய்திட ஓடி வந்து நாம் நிற்பதும் இங்கேதான். உள்ளூரில் ஏழை மக்கள் குளிர் போக்க போகனாக கம்பளி கொடுக்க அணுகியதும் இங்கேதான்.

விளையாட்டு நிகழ்ச்சிகளாகட்டும், கலைநிகழ்ச்சிகளாகட்டும், இலைபோட்டு பொங்கல் விருந்து படைப்பதாகட்டும் இரிச்மண்டு தமிழரிடையே நட்புறவுப் பாலத்தைக் கட்டியதில் பெரும்பங்கு ஐயம் திரிபற தமிழ்ச்சங்கத்துக்கேதான்.

யாதும் நம் ஊரேதான், 'கட்றா பொட்டிய' -ன்னு முரட்டுத் துணிச்சலில் வந்தவரை, இரிச்மண்டில் உள்ளவர் யாவரும் கேளிரே என நட்பியல் எழுதிக் கொண்டிருப்பது தமிழ்ச்சங்கம்.

ஒப்புறவு எனில் Social Service என்று பொருள்.
"எம்புள்ளைக்கு வெந்நீர் போடக்கூடத் தெரியாது, வீட்ல ஒரு வேலை செய்ய மாட்டான்/ள்" என்று ஒரு காலத்தில் உயரிய பட்டம் வாங்கியவர்கள் சட்டையை மடித்துக் கொண்டும் முந்தானையை வரிந்து கொண்டும் செய்யும் பொது வேலைகளை பார்க்க வேண்டுமே.

விடிய விடிய வேலை செய்து காட்டுக்குள் கூடாரம் அடித்து மக்களை தங்க வைத்ததாகட்டும், கைமாறு வேண்டா கடமையாளர்களாக ஆண்டு முழுதும் ஞாயிறுதோறும் தமிழ் கற்பிக்கும் தமிழாசிரியர்களாகட்டும், காலில் சக்கரம் இல்லாமலே சுழன்றடிக்கும் நிருவாகக் குழுவினராகட்டும், எங்காவது இடர் நேரும் போது பொருள் திரட்டிட உள்ளூர் இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிக் கொடுப்பதாகட்டும் எவ்வளவு வேலைகள் சேர்ந்தாலும் கொஞ்சம் கூட சலித்துக் கொள்வதில்லை மேலே குறிப்பிட்ட "பட்டத்து இளவரசர்கள்/ இளவரசிகள்". பிடிச்ச வேலையைச் செய்வதில் ஏதுடா/டீ துன்பம்? வேலைதானே, இன்னொரு லோடு இருந்தால் அதையும் கொண்டு வா என அசராது செய்கிறார்கள்.

ஆம், பொதுச் சேவை செய்வதால் துன்பம் வரும் எனில் காசு கொடுத்துனாலும் அந்த "துன்பத்தை" வாங்கிக்கறேன் கொண்டு வாங்கடான்னு வரிசைல தமிழ்ச்சங்கமாக நிற்கிறார்கள் உள்ளூர்காரர்கள்.

மிகச் சுவையான பழங்களைக் கொடுக்கும் ஒரு பெருமரம் காய்த்துக் குலுங்கி ஊர்க்கிணற்றின் அருகே பொதுமக்களுக்காக இருப்பது போல இரிச்மண்டில் நட்பையும் உறவையும் மகிழ்ச்சியையும் வழங்கி 25 ஆண்டுகளாக தமிழ் வளர்த்து வரும் தமிழ்ச்சங்கம் வாழிய வாழிய வாழியவே.

----

கட்டுரையில் உள்ள உவமைகள் அனைத்தும் வள்ளுவரும் பூங்குன்றனாரும் சொல்லியவை. நடுநடுவே மானே தேனே பொன்மானே சேர்த்து Remix மட்டுமே புதுசு.

-
தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு மலருக்காக எழுதி கட்டுரை.

எழுதியவர்: தவமணி 

 

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!