Tuesday, May 29, 2007

படம் பாரு கடி கேளு - 8


சிவப்பு முட்டாக்கு: என்னடீ இது சைதாப்பேட்டை மாதிரியே இல்லையே! கடை பேரெல்லாம் தெலுங்கில் எழுதியிருக்கே.
ரோஸ் முட்டாக்கு: நான் அப்போவே நினைச்சேன். ரொம்ப நேரம் ஓட்டுறாளேன்னு. இவ தான் "சைதாப்பேட்டை எனக்கு தண்ணி பட்ட பாடு கண்ணை மூடிக்கிட்டே ஓட்டுவேன்" னு சரடு விட்டா.

படம் பாரு கடி கேளு - 7


யோவ்! என் மேலிருந்து எறங்குய்யா. உன்னை நாய் துரத்துச்சுன்னா நான் என்னய்யா பண்றது? நானே இந்த ஊர்வலம் எப்போ முடியும் ஆணி படுக்கையிலிருந்து எப்போ எந்திரிக்கலாம்னு இருக்கேன். நாய் துரத்துதாம் நாயி.

Friday, May 25, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 1

இந்த வீடு வாங்கி, அது ஆச்சு அம்பது வருசம். கல்யாணம் முடிஞ்சு வாங்கின வீடு. எவ்வளவோ இடங்களுக்குப் போனாலும் என் வீடப் போல வராது. என்ன தான் பணம் வச்சிருந்து பங்களாக்கள் இருந்தாலும் நான் இன்னும் இந்த வீட்டில தான் வசிக்கிறேன்.

வீட்டுப்பக்கத்தில கொஞ்ச நிலம் வாங்கி அதை வாடகைக்கு விட்டுட்டேன். அதில கொஞ்ச வருமானம் வர ஆரம்பிச்சது. பங்குச் சந்தையில இறங்கினேன். எனக்கு இந்த கைத்தொலைபேசி, மடிக் கணிணி கச்சடாவெல்லாம் வச்சிக்கனும்னு இஷ்டமே இல்லை. (இந்தக் காலத்து பசங்கள நினைத்து சொன்னாரா என்று தெரியவில்லை !)

வேலைக்குப் போய்ட்டு, கார ஓட்டிகிட்டு நேரா வீட்டுக்கு வந்தன்னா, பாப் கார்ன் வச்சிக்கிட்டு தொலைக்காட்சியில மூழ்கிடுவேன்.

எனக்கு இந்த பர்ட்டிகெல்லாம் போய் சோசியலைஸ் பண்றதுல விருப்பம் இல்லை.



இப்படிச் சொல்பவர் திரு. Warren Buffet அவர்கள் [Greatest Stock Market Investor of the Modern World].


இவரைப் பற்றிய பிரமிப்புகள்:

  • முதல் பங்கு வாங்கிய வயது பதினொன்று. பின்னாளில் அதுவே தாமதம் என்று நினைத்தாராம்.

  • பதின்மூன்று வயதில் வருமான வரி கட்டியது.

  • பதினாலு வயதில் ஒரு சிறு பண்ணையை (செய்தித் தாள் விற்ற காசில்) வாங்கி வாடகைக்கு விட்டது.

  • பதினைந்து வயதில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து pinball game machine வாங்கி புழக்கத்தில் விட்டு, சில மாதங்களில் மேலும் இரண்டு மெசின்கள் வாங்கியது.

  • பல வருடங்கள், நலிந்த / நலிவுறும் பல நிறுவங்களை வாங்கி வெற்றிகரமாக செயல்படுத்தியது. உதாரணம் Berkshire Hathaway, GEICO.

  • இவரது Berkshire Hathaway நிறுவனத்தின் கீழ் தற்போது 63 நிறுவங்கள் செயல்படுகின்றன.

  • உலகில் இரண்டாவது பணக்காரர் என்ற பெருமை பெற்றது.

  • சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர்களில் 80% (37 பில்லியன் டாலர்கள்) charity க்கு கொடுப்பதாக அறிவித்தது.

  • இவரது ஆஸ்தான சீடர் திரு. Bill Gates அவர்கள்.

  • இன்னும் பல பிரமிப்புக்கள் ...

  • கடைசியா, இவரது ஆண்டு சம்பளம் 100,000 டாலர்கள் மட்டுமே. இவரை ஒத்த மற்றவர்கள் வாங்கும் சம்பளம் 9 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இவரைப் பற்றி மேலும் பிரமிக்க இங்கே க்ளிக்கவும்.


    ------------------------

    அனைவருக்கும் வணக்கம் !

    முதல் முயற்சியா இதப் பண்றேன். இந்த மாதிரி எல்லாரும் பண்றது தான். என்ன, ஒரு சின்ன வித்தியாசம் தலைவர்களின் படங்களை வரைந்து பதியலாம் என்று ஒரு எண்ணம். உங்க கருத்துக்களை வரவேற்கிறேன்.

    சண்முகா.

    Monday, May 21, 2007

    வரப்பு உயர்ந்த வீடு

    காலக்கோட்டை புளியமரம் எறங்கு என்று சவுண்டு விட்ட கண்டக்டர், தொடந்து விசிலடிக்கவும், நாளுக்கு சில முறை சாய்ந்தே வரும், ஒரே அரசுப் பேருந்து தள்ளாடி நின்றது. சிலர் இறங்கவும், பலர் ஏறவும், சிறு புழுதி பரப்பிக் கிளம்பியது. இறங்கியவர்களில் பாலுவும் ஒருவன்.

    விடுமுறை என்றால் அது கண்டிப்பாக நண்பன் பாண்டியின் வயல் கிணற்றில் குளிக்காமல்க் கழிந்ததில்லை. பாண்டியின் வயலைக் கடந்து தான் அப்பேருந்து வந்தது. கேணி நிறம்பி வழிந்ததைக் கண்டு சந்தோசப்பட்டான் பாலு. ஆனால், அரையாண்டு விடுமுறைக்கு வரும்போது கூட அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை. இப்போது வயல்வெளிகளைச் சுற்றி ஏதோ பெரிய மாற்றம் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை.

    சுற்றிப்பார்த்தால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு குன்றுகள். சின்ன அருவி கூட உண்டு எங்க ஊர்ல. மதுரயச் சுத்தி, திண்டுக்கல்லுக்கு அப்புறம் எங்க ஊர் தான் குளுகுளுனு இருக்கும்னு இந்தப் பக்கத்து ஆளுகளுக்குத் தெரியும் என்ற நினைவுகளுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடக்க ஆரம்பித்தான் பாலு. அக்ரகாரம் தாண்டி, பெருமாள் கோனார் வீடு தாண்டி, காமராஜ் தெருவில் நுழைந்தான். வலப்பக்கம் நாலு வீடு தள்ளியிருந்த அவனது வீட்டின் கதவு, சாத்தியிருந்தாலும் தாழிடாமல் இருந்தது. கதவைத் தள்ளித் திறக்கையில் கேட்ட க்ரீச்சில், உள்ளிருந்து "யாரதுதுதுதுதுது" என்றது அவன் அம்மாவின் குரல்.

    நாந்தாம்மா என்றான்.

    வா ராசா .... பஸ் ஹாரன் சத்தம் கேட்டுச்சு, நீதா-னு நெனச்சேன். எப்படிப்பா இருக்கே, பரீச்சே எப்படி எழுதிருக்கே. வழக்கமான கேள்விகள் தானேயென்று தாயின் பரிவு அவ்வயதில் புரியவில்லை.

    சரிம்மா நாங்கெளம்பறேன்.

    என்னப்பா வந்ததும் வராததுமா வெளிய கெளம்பிட்ட. ஏதாவுது சாப்பிடறிய ?

    ஒன்னும் வேணாம்மா ...

    நீ இன்னிக்கு வர்ரேனு சொன்னேன். லெச்சுமி அத்தே உனக்காக நாட்டுக்கோழி கொழம்பு வச்சி எடுத்தாரேனு சொல்லியிருக்காக. சீக்கிரம் வந்துரு ராசா. கைலி மாற்றி, சரிம்மா என்றான். தந்தையின் மிதிவண்டி பக்காவாக இருந்தது. நன்றாகத் துடைத்து பளபளவென்று வைத்திருந்தார். stand எடுத்து விட்டு, வீட்டினுள்ளிருந்து அப்படியே மிதிவண்டியைத் தூக்கி, வாசல் படிகள் கடந்து, தெருவில் இறக்கிப் பாண்டி வீடு நோக்கி மிதித்தான்.

    வாடா பாலு. எப்படி இருக்கே ? பாத்து எவ்ளோ நாளாச்சு டா என்றான் பாண்டி. கை குலுக்கிக் கொண்டனர் இருவரும். துண்டு, சோப்பு டப்பா எல்லாம் கொண்டாந்திட்டியா மறக்காம ? சத்த இரு, இந்தா வந்திர்ரேன் என்று வீட்டினுள் சென்றான் பாண்டி. பரபரவென்று தன் தந்தையின் சட்டைப் பாக்கெட்டைத் துளாவினான்.

    கூடத்தில் படுத்திருந்த அவனது பாட்டி, என்னடா பாண்டி சத்தம் என்றதும், "இது மட்டும் எப்படித்தான் அது காதுல கேக்குமோ", "அதும் கண்ணும் கரெக்டா தெரியுமோ" என்று முனுமுனுத்தான். ஏ கெழவி பேசாம படு, நான் note-அ தேடிக்கிட்டிருக்கேன் என்றான்.

    அவன் சொன்னது எந்த note-u என்று அவனது பாட்டிக்குத் தெரியாமலில்லை. ஒங்கப்பன் செஞ்சத தானடா நீயும் செய்யறே, போடா போக்கத்தவனே என்று செல்லமாகக் கடிந்து, வழக்கம் போலத் தன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.

    மச்சி எரநூறு தேரியிருக்கு டா. பணம் கிடைத்த சந்தோசத்தில் இருவரும் உற்சாகமானார்கள். எவ்ளோ நாளாச்சிடா மச்சி நாம சந்திச்சு. குமார் வந்திருப்பானா டா என்றான் பாலு.

    அவன் நேத்தே வந்திட்டன். நீ தான் லேட்டு ...

    நீ இன்னிக்கு வர்ர சேதி சொல்லிட்டேன் எல்லாருக்கும். இப்ப வந்திருவாய்ங்க பாரு எல்லோரும்.

    இருவரும் வெளித் தின்னையில் வந்து அமர்ந்து, அனைவரின் வரவுக்கும் காத்திருந்தனர்.

    உச்சி வெயில். படுத்திருந்த பாட்டி, 'யப்பா, முருகா' என்று ஆரம்பித்து அனைத்து சாமிகளையும் ஒருமுறை அழைத்து, தனது மஞ்சளாகிப் போன வெள்ளைப் புடவையை சரிசெய்து கொண்டு எழுந்தாள். பின்கட்டுக் க்தவைத் திறந்து வெளியே வந்தாள். கூசிய இரு கண்களையும் மெல்லக் கசக்கிக் கொண்டு அவள் வருவதைப் பார்த்து, கட்டிக் கிடந்த காங்கேயம் காளைகள் இரண்டும் எழுந்து நின்றன.

    இந்த ஆடு, கோழி எல்லாம் எப்படி அதுங்க இஷ்டத்துக்கு திரியுது. நம்மை மட்டும் ஏன் கட்டிப்போட்றாய்ங்க என்று மாடுகளுக்குத் தோன்றியிருக்குமா ? உழைப்பாளி எங்கே விட்டுட்டுப் போய்ருவியோன்னு மனிதனுக்குப் பயம், என்றும் அதுகளுக்குத் தெரியுமா ?

    காற்று தென்றலாக வருடியது வேப்பமரத்தினடியில். வெயிலின் வெக்கைத் துளியுமில்லை. களனியைக் களைந்து, பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு ஊரலைத் திறந்து விட்டாள். அவிழ்த்து விட்ட காளைகள் இரண்டும் மூக்குப் பிடிக்கக் குடித்தன.

    பக் பக் என்று சுற்றி சுற்றி வந்த கோழிகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் குருனை அரிசியைத் தூவினாள். அந்த நேரத்திலும் சேவல் ஓட்டின் மேல் நிழலோரமாய் நின்று கொண்டிருந்தது.

    வைக்கபடப்பினருகில் சுருண்டு படுத்திருந்த நாய், காதுகளைக் கூராக்கி, லேசாகக் கண் திறந்து பார்த்து, வாலை அங்கும் இங்கும் ஆட்டிவிட்டு மீண்டும் கண் மூடிக் கொண்டது.

    தூரத்தில் நாலைந்து சைக்கிள் வருவதைப் பார்த்துத் துள்ளி எழுந்தனர் பாண்டியும், பாலுவும். வருவது ரவி, ஆறுமுகம், கணேசன், மாரி, கோடி, மணி என்பது தெளிவாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் அனைவரும் பாண்டியின் வீட்டை அடைந்தனர்.

    எல்லாரும் பரீட்சை எப்படிடா எழுதிருக்கீங்க என்று பாண்டி கேட்க, அதற்கு ஆறுமுகம், அது கெடக்கு, வழக்கம் போல பெயில் தான். அத எதுக்கு ஞாபகப்படுத்தறே, அதான் லீவு விட்டாய்ங்கள்ல, "அனுபவிக்கனும், ஆராயக்கூடாது" என்றதும் அனைவரும் சிரித்தனர்.

    சரி சரி நேரமாச்சு கெளம்புங்கடா என்று அவசரப்படுத்திய பாண்டி, இந்தா மாரி ரூவா, நம்ம ராஜா புரோட்டா ஸ்டால்ல போய், சிக்கன் சாப்ஸ், எறா பொரியல், மட்டன் குருமா, அப்புறம் ... புரோட்டா கொஞ்சமா போதும், வாங்கிட்டு நேரா நம்ம வயலுக்கு வந்திடு என்று அவனை அனுப்பினான்.

    பிரபல நண்பர்கள் குழுவின் ஆஸ்த்தான பாடகர் கானா கணேசனின் கணீர் முழக்கத்துடன் கிளம்பினர் அனைவரும். பாட்டு அலுப்புத் தட்டியவுடன், சில மாத காலப் பிரிவில் தங்களுக்கு ஏற்பட்ட அவரவரின் பல கதைகள் பேசி கல கலவென களைப்பு மறந்து பல கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துச் சென்றனர். ரெட்டைப் பாலம் தாண்டி, ரயில்வே கிராஸிங் அப்புறம் வயல் வெளி ஆரம்பம்.

    அதுவரை தெரியவில்லை, பின்பு வழி நெடுக அவ் வித்தியாசத்தை மீண்டும் பாலுவால் உணர முடிந்தது. என்ன ஒரு வெக்கை, போன விடுமுறைக்கு இப்படி இல்லியே என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களைத் தொடர்ந்தான்.

    சற்று தூரம் சென்றவுடன், கருவேல மர நிழலில் அமர்ந்திருந்தாள் கல்யாணப் பருவத்தைத் தாண்டிய பொன்னழகு. ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்தன. என்ன பொன்னழகு, எப்போ கல்யாணம், புள்ள குட்டி எல்லாம் பாக்கப் போறே என்றான் ஆறுமுகம் விசமத்தனமாய்.

    "மவராசா, நீங்க எப்ப வருவீகனுதேன் காத்திருக்கேன், நீங்க கட்டிகிறது, இந்தச் சிறுக்கி மவள !" என்று பொன்னழகு சொல்லவும், மீண்டும் சிரிப்பொலி சிதறியது. டேய் டைனமோ தலயா, பேசாம வாடா என்று ரவி சத்தம் போடவும், அமைதியானான் ஆறுமுகம்.

    தார் ரோட்டிலிருந்து பிரிந்து தாழ்வாய்க் கீழிறங்கிய வண்டிப் பாதையில், சிறிதும் தயக்கமின்றி சர் சர்ரென்று ஒருவர் பின் ஒருவராய் இறங்கினர். சிறிது தொலைவில் ஒத்தயடிப் பாதையில் பயணித்துப் பாண்டியின் வயலை அடைந்தனர்.

    வயலைச் சுற்றி வெகு தொலைவு வரை நெடுகிலும் அரையடி வெளியில் தெரியும் படி கல் நடப்பட்டிருந்தது. பாலு பாண்டியிடம் கேட்டான், என்ன மாப்ளே போன தடவை இங்க வந்ததுக்கும் இப்போ வர்றதுக்கும் நெறைய மாற்றம் தெரியுது. எவ்ளோ மரங்கள் இருந்திச்சு. கடலை, கரும்பு, நெல்லுனு எதாவுது இருக்குமே டா. பொட்டல் காடா கெடக்கு இப்ப எல்லாம் என்றான்.

    விசயம் தெரியாதா உனக்கு ?! நம்ம வயலையும், செல்லத் தொர சித்தப்பு வயலையும் தவிர்த்து எல்லாம் வெல போய்ருச்சு என்றான்.

    எதுக்கு ? புரியும் படி வெளக்கமா சொல்லுடா மாம்ஸ் என்றான் பாலு ஆச்சரியத்துடன்.

    கொஞ்ச நாள் முன்னாடி மதுரயில இருந்து ஒரு சேட்டு நம்ம நாட்டாம வீட்டுக்கு வந்தாரு. ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாங்க. கடைசில தான் தெரிஞ்சது அவரு நம்ம வயக்காட்ட வாங்க தான் வந்திருக்காருனு. நம்மாளுக முக்காவாசி பேருகிட்ட பேசி, ஐநூறு ஏக்கர வளைச்சி வாங்கிட்டாரு.

    மதுர என்ன மதுர, நம்ம ஊர் பங்களூரூ மாதிரி ஆகிடும் பாருங்க என்றான் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்த மாரி. சென்னை கூட சென்றறியாத மாரி பங்களூரைச் சொன்னவுடன் அனைவருக்கும் ஆச்சரியம். ஆச்சரியப்படாதீங்கண்ணே, சென்னை வெய்யிலு கொளுத்தும்னும், பங்களூரில் வெய்யில் இருந்தாலும் கொஞ்சம் குளுகுளுனு இருக்கும்னும் கேள்விப்பட்டிருக்கேன். எல்லாம் போனாத் தான் தெரியுமா ? இந்தா இப்ப பாலண்ணே வந்திருக்காரு, திருச்சியப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியதுதேன் என்றான்.

    வயல வித்துட்டுப் பொழப்புக்கு என்ன செய்யப் போறாங்க எல்லாரும் என்றான் பாலு. அவங்களே அதப்பத்திக் கவலப்படல. உனக்கேன்டா கஷ்டம் என்றான் பாண்டி. எல்லாம் டபுல் மடங்கு வெல செய்யும் மாயம். கேட்டா "வெளச்சலே இல்ல, என்ன தம்பி பண்றதுனு" சொல்றாரு சாமிக்கண்ணு அண்ணே.

    போன வருசம் கூட ஒரு செய்தி படிச்சேன், மதுரையில Tidel Park ஒன்னு வர்றதா ! அதுக்கும் நம்ம ஆளுக வயக்காட்ட வித்ததுக்கும் தொடர்பிருக்குமோ என்றான் பாலு.

    கரெக்டா புடிச்சடா பாலு. நீ லா படிக்கப் போகலாம்டா என்றான் குமார். இந்த எடத்த வாங்கின சேட்டு, இங்க தர வாரியா வீடுகள கட்டப் போராறாம். பங்களா போன்ற தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதற்கு ஏற்ற வசதிகள் கொண்ட மற்ற கட்டிடங்கள் எல்லாம் கட்டி ஒரு சொகுசுபுரியா ஆகப்போகுது நம்ம ஊரு, மாரி சொன்னதப் போல என்றான் குமார்.

    இங்க வீடு கட்டினா வாங்குறதுக்கு யாரு இருக்கா என்றான் பாலு.

    என்னண்ணே இப்படிக் கேட்டுட்டிங்க. இங்க தெக்கால இருந்து ஒரு ரோடு போடப் போறாய்ங்களாம். அந்த ரோடு போட்டுட்டா நம்ம ஊருல இருந்து மதுரைக்கு பத்து நிமிஷம்தேன். ஏதோ ஒரு பார்க் சொன்னிகளே, அதுக்கு இந்தியா முழுக்க இருந்து ஆளுக வருவாகளாம்ல வேலைக்கு. அவுகள கணக்குப் பண்ணித்தேன் இந்த சேட்டு எல்லாம் செட்டப்பா பண்றாரு. இப்பல்லாம் வாடகைக்கு இருக்கத விட சொந்தமா வாங்குறதுதேன் அவுகளுக்கு சவுகரியமாம்ல என்றான் மாரி.

    நாமெல்லாம் பள்ளிக்கூடம் முடிச்சி B.A., M.A.,னு படிக்கப்போவோம். அவுகள்லாம் computer படிச்சவகளாம். மாசத்துக்கே லச்சக்கணக்குல சம்பளமாம்ல என்று வியந்தான் ரவி. ஆனா ஒன்னுடா, நம்ம ஆறுமுகம் இப்படியே பெயிலாயிகிட்டே இருந்தான்னா, மாடு மேய்க்க ஒரு வயல் கூட அவனுக்கு இருக்காது பாத்துக்குங்க என்று ரவி சொல்லவும், எட்டுத் திக்கும் விட்டுத் தெரித்து வானை முட்டியது சிரிப்பலை.

    நாமும் இவர்களுடன் சேர்ந்து சிரிக்கலாமா ?! இல்லை சிந்திப்போமா ?!

    Friday, May 18, 2007

    படம் பாரு கடி கேளு - 6


    சே! கப் ஐஸ் குடுய்யான்னா குச்சி ஐஸை குடுத்து ஏமாத்திட்டான். அடுத்த தடவை கோன் ஐஸையே அபேஸ் பண்ணிடணும்.

    படம் பாரு கடி கேளு - 5


    ஸ்டாம்பு எல்லாம் அப்புறம் ஒட்டிக்கலாம். மட மடன்னு கதவை மூடுங்கையா. அமெரிக்கா போகணும்.






    படம் பாரு கடி கேளு - 4


    நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அது ஸ்பீட் லிமிட் இல்லை. நமக்கு முன்னாலே 50 காரும் 40 பஸ்ஸும் எப்போதும் இருக்கும்னு சொல்றாங்க

    படம் பாரு கடி கேளு - 3


    ஆமாம் அவரு தான் - அந்த நீல கலர் பாண்டு தான் வாயை திறந்துகிட்டு தூங்கறாரு.

    Evergreen S.P.B - இளைய நிலா பொழிகிறதே

    இந்த இனிய மாலைப் பொழுதில் உங்களுக்கு ஒரு இனிய கானம்.

    எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு திரைப்படங்கள், எவ்வளவு பாடல்கள், எவ்வளவு இசை அமைப்பாளர்கள், எவ்வளவு பாடகர்கள். இன்றும் இப்பாடல் நமக்கு இனிக்கிறதென்றால், thats is S.P.B and Raja. என்ன ஒரு finish !!!

    Please click the below link to enjoy the video. கடைசியில், கண்டிப்பா நீங்களும் S.P.B. கூட சேர்ந்து ஆடுவிங்க.

    href="http://www.youtube.com/watch?v=W8l_ezoU8Lc&mode=related&search=

    என்றும் அன்புடன்
    சதங்கா

    Thursday, May 17, 2007

    வீணையடி நீ எனக்கு....

    ரிச்மண்ட் தமிழ் சங்கம் அண்மையில் தமிழ்ப் புத்தாண்டை இசைவிழாவாகக் கொண்டாடியது. நிறைய சிறுவர், சிறுமியர் தமிழில் இனிய பாடல்கள் பாடினர். பாரதியின் ஒரு பாடல் இதோ:


    இன்னும் இரண்டு மாதிரிகள் இந்த சுட்டியில் காணலாம்.

    இந்த நிகழ்ச்சிகள் அனைவற்றையும் நீங்கள் கண்டு களிக்கலாம் DVD வடிவில். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விரைவில் தெரிவிக்கிறோம்.

    சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

    எனது சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி படிக்க இங்கே க்ளிக்கவும் அல்லது கீழ்கண்ட இணைப்பில் க்ளிக்கவும்.
    http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html

    இதுவும் 2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலேயே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்த போது அப்போதைக்கும் இப்போதைக்கும் சன் டிவியின் தொடர்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிந்தது, அதனால் வெளியிட்டிருக்கிறேன்.
    அன்புடன்,
    முரளி.

    Wednesday, May 16, 2007

    படம் பாரு கடி கேளு - 2


    கை குலுக்கும் வீரர்: சார் நான் இங்கே இருக்கேன் சார். இது என் கை தான்.

    படம் பாரு கடி கேளு - 1

    என்ன இருந்தாலும் இந்த கட்டிடத்து பக்கத்தில் தும்மல் வரவேண்டாம்.

    மனங்கவர் சிங்கை

    ஆசியக் கண்டத்தின் ஆச்சரியக் குறிப்புள்ளி
    தேசிய மிதுவெனவே போற்றி வசிக்குமாந்தர்
    அளவிற் சிறிதாயினும் அனைவரையும் ஆனந்தத்
    திலார்த்து மற்புதச் சிங்கை (1)

    வானுயர்ந்த வண்ணக் கட்டிடங்கள் வரிசையில்
    வனப்புமிக பச்சைமரங் களெங்கும் -- வானம்
    முழுதும் பெய்யும் வெய்யிலு மிருக்கும்
    பொழுதில் நீர்வடிந்து விடும் (2)

    சிவ லயன்சித்தித் தண்டபாணி சீனிவாசன்
    ஸ்ரீவடபத்ர வைராவிமடவீ  ரகாளிமாரி யவள்
    யாவருடன் இன்னும்பலர் வீற்றிருக்கு மழகில்த்
    தவக்கோலம் காணும் சிங்கை (3)

    தீபத் திருநாள் திருக்கோலம் ஆண்டோறும்
    தைப் பொங்கல் மறந்தாலும் தைப்பூசத்
    திருவிழாவில் பலவிதக் காவடி தாங்கித்
    தெருவெலாம் பக்தர் மயம் (4)

    அரசுப் பேருந்தோ வாடகைச் சிற்றுந்தோ
    விரைவுரயிலு மதோவெதிலும் சுற்றுகையில் ஊரழகு
    வியக்கவைக்கும் நம்மனதை அதற்குழைக்கப் பாடுபடும்
    தயக்கம் சிறிதுமிலாச் சிங்கை (5)

    ஆடை அணிகலன்கள் அணிவகுக்கும் தொழில்நுட்பக்
    கடைத் தெருக்கள் ஏராளம் -- கூட்டம்
    அலைமோதி வாங்கத்துடிக் குமுயர்தரப் பொருட்கள்
    விலைமலிவில்க் கிடைக்கும் சிங்கை (6)

    ஆட்சி மொழி நான்கிலும் சமத்துவமே
    வீட்சி யுறுமெனக் கூறும் காட்சி
    இங்கில்லை அரசியலாக்க வில்லை இருந்தும்
    எங்கிலும் தெரியும் தமிழ் (7)

    உடுக்க உடை உண்ண உணவு
    படுக்க இடம் எல்லாமும் கிடைத்திட
    உண்டிங்கு வேலை என்று நம்மைச்
    சுண்டி யிழுக்கும் சிங்கை (8)

    கட்டுமானத் தொழிலாளர் ஓய்வான அந்நாளில்
    திட்டுத் திட்டாய்க் குவிதலில்க் கூட்டம்
    எட்டுத் திக்கும் பரவிநிற்க படபடக்கும்
    சிட்டாய்ச் சிராங்கூன் சாலை (9)

    குறைவிலா வசதி நிறைவான வளமுடன்
    முறையான வாழ்வு தனில் உறையும்
    ஊர்முழுக்கத் தூசிலாச் சுத்தத்திற்கு மாசற்ற
    பேர்பெற்ற மனங்கவர் சிங்கை (10)

    -----

    ஐந்து பாடல்களில் முடிக்க எண்ணி பத்து பாடல்களாகிவிட்டன. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. நெல் விதைத்து நெல் அறுக்க, நிறையையே சொல்ல முயற்சித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டமிடுங்கள்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    Tuesday, May 15, 2007

    அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!

    அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!
    http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd

    கவிஞர் புகாரி, திசைகள் மாலன் ஆகியோரின் முன்னுரையுடன் அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் வரத் துவங்குகின்றன.

    அனைவரும் பொறுமையாக வாசிக்கவும் என்று கேட்டுக்கொள்கிறோம், அனைத்து முடிவுகளும் வெளியாக சில காலம் ஆகும் என்பதால்.

    நடுவர்கள் வாசிப்புரை, வாழ்த்துரையுடன் கலக்கப் போகிறார்கள்!

    இயல்கவிதைப் பிரிவின் நடுவரான திசைகள் மாலன் அவர்களின் நடுவர் உரையின் ஒரு பகுதியும் இன்று வெளியாகியிருக்கிறது.

    தொடர்ந்து வாசிக்கவும்.

    Monday, May 14, 2007

    நிதர்சனம் - சிறுகதை

    எனது நிதர்சனம் சிறுகதையினை படிக்க இங்கே க்ளிக்கவும்.
    http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post.html
    இது 11/25/2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.

    அன்புடன்,

    முரளி.

    Friday, May 11, 2007

    தோட்டம்

    வாழைக் குலை தள்ளி
    வைத்த கன்று பலவிருக்கும்

    அவரை துவரை கொடியேறி
    அழக ழகாய்ப் பூத்திருக்கும்

    மலருண்ணும் வண்ணத்துப் பூச்சி
    மகரந்தத் தூள் பரப்பும்

    கொய்யா மரத்து அணில்
    குதித் தோடி விளையாடும்

    மா மரத்து மைனா
    மண்புழுவைத் தேடி நிற்கும்

    வேப்ப மர நிழலடியில்
    வெக்கை இன்றி குளுகுளுக்கும்

    இளந் தென்றல் மிதமாக
    இன்னிசை பாடி வரும்

    மண்ணில் கால் பதிக்க
    எண்ணம் நடை திறக்கும்

    -----

    என்றும் அன்புடன்
    சதங்கா

    Thursday, May 10, 2007

    படம் பார்த்து கடி சொல்

    வலையில் கண்ட சில படங்களும் என்னுடைய கற்பனை பின்னூட்டங்களும்

    "அப்பாடி, ப்ளேனுக்கு உள்ளேயே போயி ஏத்திவிட்டுட்டு வந்தாச்சு. இனிமே சத்தியமா திரும்பி வரமாட்டான்/திரும்பி வரமாட்டாள்"

    "படிச்சு படிச்சு சொன்னா பொஞ்சாதி நீ செய்யுற வேலைக்கு வைர மோதிரத்தை போட்டுக்கிட்டு போகாதே" ன்னு. நான் கேக்கலே! எந்த பாவிக்கு குடுத்து வெச்சிருக்கோ. ம்ஹூம்.

    அப்பாடி. நல்ல வேளை யாரும் பாக்கலே! எல்லோரும் நிகழ்ச்சியை ரசிச்சு பாத்துக்கிட்டு இருக்காங்க.



    "எங்களை கைது பண்ண போலீசாலே பக்கத்துல கூட வர முடியலே. Gas Mask போட்டு கூட பார்த்தங்க. அப்போ கூட தாங்க முடியல்லே (நாற்றம்). போராடுவோம் போராடுவோம். வியர்வை சிந்தி போராடுவோம்"

    "அவ ஸ்கேட்டிங்குக்கு அடியிலே கப்புனு ஒரு சின்ன கல்லை போட வேண்டியது தான். அப்புறம் நான் தான் ரேஸ்லே first"

    "டேய் மட மடன்னு குடிச்சிட்டு இந்த பாட்டிலையும் ரொப்பு. வண்டி கிளம்பிடிச்சுன்னா ட்யூப் இழுத்து பிச்சிக்கும்"

    வலைவலம்

    முதலில் வலப்பக்கத்தில் இருக்கும் வலைக்குலையும் காலண்டரும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். லேபிள் கிளவ்ட் என்று ஒரு தளத்தில் பார்த்தது. இங்கு சேர்க்க நான் கொஞ்சம் ததிங்கினத்தோம் போட்டேன். கடைசியில் பொன்ஸுக்கு் அவுட்ஸோர்ஸ் செய்ய, அவர்கள் ஆணி பிடுங்கி வேலை செய்ய வைத்தார்கள். லேபிள் கிளவுட்டை நான் வகைக்குலை என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

    இது கொஞ்சம் பழைய செய்திதான். இருந்தாலும் தமாஷ் - அதாவது உங்கள் தலையெழுத்து, என் கண்ணில் இன்றுதான் பட்டது. குஜராத்தில் பத்தொன்பது வயதான ஒரு பெண்ணும், பையனும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளப் பார்த்தார்கள். ஆனால் ஒரு பிரச்னை. குஜராத்தில் பையனுக்கு கல்யாணம் செய்ய இருவத்தோரு வயதாயிருக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்த செய்தியை ஒரு குரங்கு(மனம்) படித்துவிட்டு இப்படி கற்பனை செய்தது. குரங்கு(மனம்) நிறைய தமிழ் சினிமா பார்க்கிறது என நினைக்கிறேன். நம்ம ஊர் சத்தியாவிடம் சொல்லி நண்பருக்கு கொஞ்சம் ஆட்றா ராமா ஆட்டம் காண்பிக்கவேண்டும்.

    அந்த சினிமா கதை இருக்கட்டும். இந்த செய்தியைப் பாருங்கள். பாலச்சந்தர் பிச்சை வாங்கவேண்டும். மாண்ட்ரியல் நகரைச் சேர்ந்த மெலனி போய்வின் என்பவர் தனது 7 வயது மகளுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார். டெய்லர் சின்ட்ரோம் என்ற வியாதி கொண்ட மகளுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு இல்லை. அந்த குறையைத் தீர்க்க தாயார் மெலனியின் உத்தி என்ன தெரியுமா? தன் முட்டைகளை உறைநிலையில் வைத்து மகள் பெரியவளானவுடன் கர்ப்பம் தரிக்க பயன்படுத்துவாராம். ஆக ஒரே நேரத்தில் அவர் பாட்டியாகவும், தாயாராகவும் ஆவாராம். யாரோடு விந்தை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. பெண்ணிற்கு விந்துதானம் செய்பவர் தந்தையா, துணையா??? கேள்வியின் நாயகனைத்தான் கேட்க வேண்டும். குரங்க்கைக் கேட்டால் என்ன சொல்லும் என்று தெரியவில்லை.


    ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் பெரியார் சிலைக்கு குண்டு வைக்கப் பார்த்த அம்புஜம் மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டீர்களா? இந்த கண்மணிப் பக்கத்தில் அதைப் பற்றி படிக்கலாம். இன்னோரு மாமியிடம் ஒரு திருடன் பட்ட அவதி இந்தக் கதையில்.

    ஆப்பிள் கம்ப்யூட்டரின் ஸ்டீவ் ஜாப் பற்றி தெரியாதவர்கள் கிடையாது. அவரது 10 பாடங்கள் இந்த தளத்தில். இது அவரே சொன்னதா, இங்கே ஜல்லியடிக்கிறார்களா என்று தெரியவில்லை. கன்ஃபூசியஸ் சொன்ன ஒரு மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது.

    கன்ஃபூசியஸ் சொன்னதாக சொல்லும் பல மேற்கோள்கள் உண்மை கிடையாது - கன்ஃபூசியஸ்!


    பாடம் எல்லாம் இருக்கட்டும். வாழ்க்கைக்கு உதவும் இந்த சர்ச்சையைப் பார்ப்போம். தாளிப்பதற்கு எதைப் போடலாம் - எள்ளா, உளுந்தா? கடலை போடலாம் என்று குரல் கொடுப்பவர்கள் கடைசி பெஞ்சுக்கு போகவும். எள்ளா, உளுந்தா எந்த சமயத்தில் எதை பயன்படுத்தலாம் என்று கம்பராமாயணம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா இங்கே?

    இந்த விஷயத்தை நமது உள்ளுர் கம்ப ராமாயண வல்லுனரைக் கேட்டிருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

    Wednesday, May 09, 2007

    தமிழ்ச் சங்க தமிழ் இசை விழா

    இந்தப் பதிவை நான் வெளியிடும் நேரம் தமிழ் இசை விழாவின் பாதிப்பு சற்று ஓய்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
    பல விளம்பரதாரர்களைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற நிகழ்ச்சியின் DVD விற்பனை மிக நல்ல முயற்சி. இதை தொடர்ந்து செய்தால், பல பெற்றோர்கள் காம்கார்டரும் கையுமாக அலையாமல் நிம்மதியாக நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.
    குழந்தைகள் சற்று அமைதியாக இருக்க என்ன வழி என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவர்களுடைய பங்கேற்றல் முடிந்தவுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி சற்று தாங்க முடியவில்லை. நல்ல யோசனை சொல்பவர்களுக்கு ஏதேனும் இலவசம் என்று அறிவிக்கலாம் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையின் குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருட தமிழ் சங்கத்தின் சந்தா தள்ளுபடி என்று ஆசை காட்டி பார்க்கலாம்.
    முதலில் சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள்:
    அவர்கள் மேடையேறி பாடும் போதும் சரி, ஆடும் போதும் சரி, என்ன ஒரு கம்பீரம்! அவர்களுக்கு இணை அவர்களேதான். குறிப்பாக யாரையும் சொல்லப் போவது இல்லை. அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் வந்து விடக் கூடாது என்பதல்ல காரணம், அவர்களில் இவர் முதல், அவர் அடுத்து என சொல்லி அவர்கள் உழைப்பை, உற்சாகத்தை, முயற்சியை, உறுதியை கேள்வி கேட்கும் எந்தத் தகுதியும் எனக்கு இல்லாததுதான் காரணம்.
    மெல்லிசை நிகழ்ச்சி`
    ரிச் மெலோடீஸ் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சியில் பல புது முகங்களை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மெல்லிசை குழுவிற்கு புது முகங்களே தவிர தமிழ் சங்கத்துக்கு நன்கு பரிச்சயமானவர்களே.
    பயிற்சி என்பது இது போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முக்கியம். பாடல் வரிகளை மறப்பதோ, தவறாகப் பாடுவதோ, பின்னனி இசையை மாற்றி வாசிப்பதோ ஒப்புக் கொள்ளக்கூடியதாக இல்லை.
    பாட்டுத் தேர்வில் குழுவினர் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 'மெலோடீஸ்' என்ற பெயருக்கு ஏற்ப பாடல்களைத் தேர்ந்தெடுத்தால், ரசிகர்களைக் கட்டிப் போடுவது ரொம்ப கடினம். தேவுடா தேவுடா மட்டுமே வேகப் பாட்டு அதுவும் நிகழ்ச்சியின் கடைசியில் என்றால் என்னைப் போன்ற மெல்லிசை மோகர்களுக்கு போதாதுங்கோ.
    நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒரு ரசிகர், குழுவினரிடம் உங்களுக்கு ஒரு தகுதியான ஒலிப் பொறியாளர் (Sound Engineer) உடனடித் தேவை என சொல்லிக் கொண்டிருந்தார். அதை நானும் வழிமொழிகிறேன். அது நிகழ்ச்சிக்கு நன்கு மெருகூட்டியிருக்கும். பல இடங்களில், சுரேஷின் Bass Guitar-ன் திறமை வெளிப்படவே இல்லை. கார்த்திக்கின் தபலாவும், மிதுனனின் ட்ரம்ஸும், சிவாவின் இசையும் ஏன் மார்லானின் ரிதம் கிடாரின் இசையும் கூட சரிவர கேட்கவில்லை.
    அரவிந்தும் சிவாந்தியும் வழக்கம் போல கலக்கினார்கள், சிவாந்தியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. நாராயணன் மேடையில் பாடுவது நமக்கு புதிதல்ல, மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவது புதிது. ஆனால் அதுவும் தனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்பதை நிருபித்தார்.
    சித்ரா அவர்கள் மேடையில் கர்னாடக சங்கீதம் பாடி, கேட்டு மயங்காத ரிச்மண்ட் வாசிகள் இருக்க முடியாது. அவர் பாடியது நன்றாக இருந்தது. இருந்தாலும் அவர் சற்று வேகமான பாடலை எடுத்துக் கொண்டு கையாண்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இது, அவர் மீது என் போன்ற சிலரின் அதீத எதிர்பார்பே அன்றி வேறு இல்லை. அவர் மெலோடியஸாக பாடலகளை select செய்து பாடியது, பாம்பே ஜெயஸ்ரீ மேடையேறி, தமிழ்தாய் வாழ்த்து மட்டும் பாடிவிட்டு சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
    ஆரதி, தான் சிவாந்தியின் தங்கை என்பதை just like that நிருபித்து விட்டார் அவர் பாடிய 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம். கலா நன்றாக பாடினார், அவரும் சற்று வேகமான பாடல்களை பாடுவதற்கு முயல வேண்டும். பாடிய மற்றவர்களிடம் குறை என்று பெரிதாக ஏதுமில்லை, பயிற்சிக் குறைவைத் தவிர.
    ஒரு முறை யாரோ சொல்லி கேட்டது, A critic need not be a professional என்று, அதை முழுவதுமாக பின்பற்றும் ஒரு சிலரில் நானும் ஒருவன்.
    பின்னர் வழக்கமான கிறுக்கல்களில் சந்திக்கிறேன்.
    - பித்தன்.
    இந்த பதிவை எனது வளைப்பதிவிலும் படிக்கலாம்: http://pkirukkalgal.blogspot.com/2007/05/blog-post.html

    Tuesday, May 08, 2007

    உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 14

    பார்மிங்:

    நமக்கு வேண்டிய இணையதளம் போன்றே உள்ள வேறொரு இணைய தளத்தை நாம் அடைவதே பார்மிங் ஆகும் .

    நமக்கு வேண்டிய இணையதளத்தின் பெயரை நாம் உள்ளீடு செயதவுடன் நம் கணிணி டிஎன்எஸ் சர்வரைத் தொடர்பு கொள்ளும் . டிஎன்எஸ் சர்வரானது நமக்கு வேண்டிய ஐபி முகவரியைத் தரும். பின் நம் கணிணியானது அந்த முகவரியின் மூலமாக நமக்கு வேண்டிய இணையதளத்தை அடையும். பார்மர்கள் இந்த டிஎன்எஸ் சர்வர்களைத் தாக்கி ஐபி முகவரிகளை மாற்றி விடுவர் . பின் அது குறிப்பிட்ட பெயரைக் கேட்போருக்கெல்லாம் தவறாகவே செயல்படும். தவறான முகவரி கிடைக்கப் பெற்ற கணிணியானது தவறான இணையதளத்தை அடையும். உண்மையான இணையதளத்தைப் போன்றே இந்தத் தளமும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அதனால் வித்தியாசம் எளிதில் தெரியாது பார்மரின் வலையில் செல்பவர் விழுந்து விடுவர் .

    பிஷிங் வலையில் மாட்டாமல் விடுபட :

    வங்கிகள் நம்மை மின்னஞ்சல் மூலமாக சரிபார்க்க கேட்கவும் மாட்டார்கள் . நாமும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். மீறி சந்தேகம் இருப்பின் உரியவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்துக் கொள்ளுங்கள் .

    ஏதேனும் சுட்டிகள் தென்பட்டால் அதை அப்படியே சொடுக்கும் பழக்கத்தினை விடுங்கள் . அந்தச் சுட்டியை கட் செய்து பிரௌசரில் பேஸ்ட் செய்து அதன் மூலம் பயணியுங்கள்.

    சில முகவரிகள் https எனத் துவங்கும். அவை ஓரளவு பாதுகாப்பானவை. அந்த பிரௌசரின் கீழ் தங்கப்பூட்டு பூட்டப்பட்டு காட்சி அளிக்கும். அது பாதுகாப்பான இணைய பக்கம் என்பதைக் குறிக்கும் . சிலர் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் அதே மாதிரி பூட்டைக் காண்பிக்க இயலும். ஆனால் நாம் அந்த விண்டோவையே நகர்த்தினால் அந்தக் குட்டு வெளிப்படும்.

    பாதுகாப்பான இணையப் பக்கங்கள் மூலமே ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யவேண்டும் .

    நெட்கிராப்ட் செயலியை நிறுவுதன் மூலம் பிஷிங் சைட்டை நாம் அடைந்தால் எச்சரிக்கையினைப் பெறலாம் http://www.netcraft.com .

    முடிந்தது.
    என்னால் இயன்றவரை எழுதியுள்ளேன். குறைகள் இருப்பின் பொறுத்தருள்க. நான் எழுத நினைத்த விதம் வேறு. ஆனால், நேரத் தட்டுபாடு என்னை பாதித்ததால் இவ்வாறாக வந்திருக்கிறது.
    என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    -சுரேஷ்பாபு.

    அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

    Monday, May 07, 2007

    தடயம் - அத்தியாயம் - 4

    தடயம் மர்மத்தொடரின் நான்காவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்:
    http://kalaichcholai.blogspot.com/2007/05/4.html
    - முரளி.

    கர்னாடிகா சகோதரர்களின் கச்சேரி

    சென்ற வெள்ளியன்று கர்னாடிகா சகோதரர்களின் கச்சேரி ரிச்மண்டில் நடைபெற்றது. அந்த கச்சேரியை பற்றி நாராயணன் அவர்களின் வர்ணனை. நேரமின்மையால் ஆங்கிலத்தில் தருவதற்கு மன்னிக்கவும்.

    Dear fellow music lovers,

    The Carnatica brothers, Sashikiran and Ganesh, presented a
    scintillating concert on Friday evening. They put together a nice
    combination of ragams and krithis to fulfill and satisfy our hunger
    for carnatic music. The concert lasted for almost 4 hours.

    Here is a song list from the concert:

    1. Varnam - kathanakuthuhalam - Mysore Vasudevachar
    2. kanjadhaLAyadhAkshi - kamalAmanOhari - Muthuswami Dikshitar
    3. arulavEndum thAyE - sAramathi - dhandapani desikar
    4. parAthparA paramEshwara - vAchaspathi - Papanasam Sivan
    5. varashiki vAhana - supradIpam - tyAgarAja
    6. manasulOni marmamulu - varamu - tyAgarAja
    7. EdayyA gathi - chalanAta - Koteeshwara Iyer
    8. niravathi sukadA - ravichandrikA - tyAgaraja
    9. Ragam Thanam Pallavi - malayamArutham - Adi
    "rAgam thAnam pallavi trikAla tishramodu jolikkum"
    with swarams in kApi, sindhubhairavi and vAsanthi
    10. muruganin marupeyar - behAg - Periyasami thooran
    11. kandanAL mudalAi - madhuvanthi
    12. maithreem bajatha - rAgamAlika - Kanchi periyavAL.
    13. Mangalam

    They started off with a varnam, brisk varnam, as the audience was
    getting settled in. The kamalamanohari piece was rendered with an
    array of citta swaram combinations. Sashikiran presented a very nice
    alapana in vachaspathi. Ganesh took the alapana credits for his
    brilliant rendition of varamu. This was followed by a serene
    rendition of the KI krithi from his kandha gAnamudham in the ragam
    chalanata. The ragam and thanam in malayamarutham was very very good.
    The RTP was rendered with the exploration of anulOmam, prathilOmam,
    and off-course staying true to the lyric of the pallavi "tri-kalam"
    and "tishram". Even though they had only 3 ragams as part of the
    ragamalika swaram, each was handled more elaborately than is
    customary. They finished up with some nice thukkada pieces.

    Nagai Sriram was brilliant in support on his violin. He mirrored
    every phrase that the artistes threw at him with precision including
    all the layam dominated phrases. Murugaboopathy performed admirably
    in support on the mrdangam. Richmond's own Ravi provided excellent
    support.

    I was amazed at the professionalism of the artists in terms of the
    effort they put out inspite of a lower than expected turnout. They
    delivered an undiluted concert, with rich content and quality.

    Saturday, May 05, 2007

    மாறினால் மறக்க முடியுமா ?

    "சைலூ, இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் கெளம்பிடு. ஞாபகம் இருக்குல்ல ?" என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

    "எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

    சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.

    கைப்பைகளில் மதிய உணவைத் தினித்துக் கொண்டு மாடிப் படியிறங்கினர் இருவரும்.

    இவர்கள் அறை தள்ளி இடப்புறம் வினோதினி, வலப்புறம் எதிர் அறையில் ராஜி. அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அதுவரை அமைதியாய் இருந்த அந்த இருண்ட படிக்கட்டு டக், டக், டக் என்று ஜட்கா வண்டிப் பாதையானது. மெல்லப் போங்கடீ என்று சன்னமாய்க் கத்தினாள் சொர்ணா.

    இந்த ஓட்டப் படிக்கட்டு என்னமோ நம்ம ஹைஹீல்ஸ்ல தான் ஒடையற மாதிரி திட்டும் அந்த 'பிங்க் பேந்த்தர்'. வார்டனின் அறை தாண்டும் போது சற்றே எட்டிப் பார்த்துச் சொன்னாள் ராஜி. சூப்பர் பேருக்கா. பாரு தூங்கும் போது கூட ரோஸ் பவுடர் அடிச்சிருக்கறத.

    ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தும், ஹே, இந்த பொட்டு எங்கே வாங்கினே ? இந்த துப்பட்டா சூப்பரா இருக்கே ? அவ நெயில் பாலிஸ் பாருங்கடீ, கலர் different-ஆ இருக்கே ? என்று நித்தம் எழும் பல்லாயிரம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர் அனைவரும். சைலு, சிரிப்பை வெளியிலும், இருக்கத்தை உள்ளிலும் தாங்கி அவர்களைத் தொடர்ந்தாள்.

    காரை ஸ்டார்ட் செய்தாள் ராஜி. சைலு, நீ நேத்து முன்னாடி ஒக்காந்தே, இன்னிக்கு அது முடியாது. மரியாதயா பின்னாடி வா என்று கடிந்தாள் வினோதினி.

    பாவம் விடுடி. அவ ஒக்காந்திட்டுப் போறா. சின்னக் கொழந்த மாதிரி அடிச்சிக்கறீங்களே என்று அங்களாய்த்தாள் சொர்ணா. பரவாயில்ல, இந்தா ஒக்காந்துக்கோ என்று சினுங்கலுடன் பின் சீட்டுக்கு வந்துவிட்டாள் சைலு.

    பழைய மஹாபலிபுரம் கடற்கரை சாலையில் பயணித்து, பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்தனர். ராஜி, இன்னிக்கு நாங்க சீக்கிரம் கெளம்பிடுவோம். " சாயந்திரம் எங்களுக்கு காத்திருக்காத சரியா" என்ற சொர்ணாவிற்கு தலையசைத்து அவரவர் கட்டிடங்களுக்குச் சென்றனர்.

    வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைப்பிலேயே வீண் என்று தெரிந்த மின்னஞ்சல்கள் சிலவற்றை திறக்காமலே அழித்தாள். மணி பதினொன்றாகும் போது, டீ குடிக்கப் போலாம் வரியாடா என்ற ஜெமிமாவுடன் சென்றாள். ஜெமிமா கேட்டாள், ஒரு மாதிரியா இருக்கியே ஏதும் பிரச்சினையா ? உங்க TL பரந்தாமன் கூட லீவுலல இருக்காருனு கேள்விப்பட்டேன் !

    அவரு எப்பவுமே பிரச்சினை இல்லடி. மாட்யூல் நேரத்துக்கு முடிச்சி டாகுமெண்ட் அடிச்சிட்டாப் போதும். சூப்பர் type.

    எனக்கும் வாச்சிருக்கே ஒரு சிடுமூஞ்சி. பேரப் பாரு "சுந்தர வடிவேல்". பேருக்கும் ஆளுக்கும், ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது. ரெண்டு நிமிஷம் எங்கேயும் போய்டக்கூடாது. இப்பக் கூட என்னத் தேடிட்டு இருக்கும். ஜெமிமாவின் ஹிம்ம்ம்ம்மில் அத்தனை அழுத்தம் தெரித்தது.

    இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் சைலு. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை, மேசைத் தொலைபேசி மிதமாய்க் களைத்தது. அழைப்பானில் ராஜியின் பெயர்.

    சொல்லுடா ராஜி.

    இல்லே ... சொர்ணாக்கா கால் பண்ணிருந்தாங்க. உனக்கும் கொஞ்சம் முன்னால செல்-ல கால் பண்ணாங்களாமே. எங்கேடீ போய்ட்டே ?

    செல்லை மேசையிலேயே விட்டுவிட்டு ஜெமிமாவுடன் டீ குடிக்கச் சென்றது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

    அவங்களால இன்னிக்கு சாயந்திரம் வரமுடியாதாம். ஏதோ அவங்க ப்ராஜக்ட்-ல மேஜர் டிபெக்ட்டாம். இப்ப ஆன்-சைட் கூட கான்பரன்ஸ் கால்ல இருக்காங்க. எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாதாம்.

    அக்கா 4 மணிக்கா கெளம்ப்பிடச் சொன்னாங்க. நீ ரெடியானவுடன் சொல்லு. காலையில் பார்க்கிங் பண்ண இடத்துல சந்திப்போம்.

    TTK சாலை, பார்க் ஷெரட்டனில் நுழைந்தது, ராஜியின் கார். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, கப்பூச்சினோ நோக்கிச் சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து, லேசாய்ப் புன்னகை சிந்தி வரவேற்றான் ரமேஷ். இருவரும் மவுனமாய் அமர்ந்தனர். காபி என்றான். இல்லை வேண்டாம் என்றனர்.

    ஆறு மணிக்கு உங்களுக்கு மும்பை flightனு சொர்ணாக்கா சொன்னாங்களே என்று கேட்ட சைலு, அதான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டிங்கள்ல, இன்னும் எதுக்கு நேர்ல வரச்சொல்லிப் படுத்தறிங்க. பாவம் அவங்க ரொம்ப நொந்து போய்ருக்காங்க.

    டிக்கெட் cancel பண்ணிட்டேன். ஆமா, சொர்ணா வல்ல ? என்ற ரமேஷ், எனக்குத் தெரியும் அவ வர மாட்டானு என்று மெதுவே முனகினான்.

    விஷயம் என்னன்னா, என்னைக் கட்டிக்கரதா இருந்த அந்த மும்பைக்கார U.S. பொண்ணு, ஏற்கனவே ரெண்டு, மூனு கல்யாணம் பண்ணி divorce வாங்கினவனு இப்பத்தான் தெரிஞ்சது.

    கேவலமா இல்ல, நீ எல்லாம் படிச்சவன் தானே. எல்லாம் easyயா வேணும் உனக்கு. நாலு வருஷம். எப்படிப் பழகினாங்க உன்கூட. கொஞ்சமாவது யோசிச்சியா ? ரெண்டு மாசம் மும்பையில அவ கூடப் பழகிட்டு எப்படித் தான் அக்காவ கழட்டி விட மனசு வந்துச்சோ ?

    உன் கோபத்திலயும், சொர்ணாவின் கோபத்திலயும் ஆயிரம் அர்த்தம் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லல. நான் இப்ப மாறிட்டேன். ஒரு முடிவு செஞ்சிருக்கேன். எங்க வீட்டுல ஏற்கனவே சொர்ணாவுக்கு ஓகே சொன்ன மாதிரி, அவளையே கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன். இத மறக்காம சொர்ணாகிட்ட சொல்லிடுங்க. நான் அவள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்லுங்க என்று கெஞ்சினான் ரமேஷ்.

    நீங்க சொல்லிட்டிங்க. அவ்ள சீக்கிரம் அக்காவல மறக்க முடியுமானு தெரியல. ஆனா ஒன்னு, அவங்க மனசு மாறுகிற நிலையில இல்ல. அதுக்கு இந்த சான்றே போதும் என்று ரமேஷ், சொர்ணாவிற்கு அளித்த அன்பளிப்புக்கள், வாழ்த்து அட்டைகள், .... கடிதங்கள் அனைத்தும் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு ராஜியும், சைலுவும் அங்கிருந்து கிளம்பினர்.

    Thursday, May 03, 2007

    உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 13

    பிஷிங்(phishing)

    இதற்கு உரிய தமிழ்பெயர் இனிமேல்தான் வரவேண்டும். இது அடையாளத் திருடர்களால் கையாளப் படும் ஒருவகை தந்திரம். நமக்கு ஒரு மின்னஞ்சல் நம் வங்கி கணக்கினை சரிபார்த்துக் கொள்ளச் சொல்லி வரும் . நாம் அதன் மூலம் பயணித்து விபரங்களை அதில் இட்டோமானல் அவ்வளவுதான் நம் விபரங்கள் பிஷர் கையை அடைந்து விடும் .

    பெரும்பாலும் இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள் நம்மைத் தூண்டும் வண்ணமே வரும் . அவ்வாறு வருதலில் உங்களுக்கு உண்மையானது எனத் தோன்றினால் கடிதம், போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக சம்மந்தப் பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பின் பதில் அனுப்பவும் .

    இதுபற்றி மேலும் விபரங்கள் அறிய www.antiphishing.org

    பிஷிங் செய்பவர் கையாளும் வழிமுறைகள்:

    மின்ஏமாற்றுதல்(spoofing) தான் பிஷர்களின் முக்கிய ஆயுதம்.

    மின்னஞ்சல் முகவரி மூலமாக ஏமாற்றுதல் - நமக்கு அனுப்பும் மின்னஞ்சலின் தலைப்பு விபரங்களை (header information)மாற்றி, அது உண்மையான மின்னஞ்சல் என நம்பவைத்து விடுவர் .

    சுட்டிகள் மூலமாக எமாற்றுதல் - சுட்டிகள் எப்பொழுதும் பெயர் வேறாகவும் , அந்த இணைப்பு வேறாகவும் இருக்கும். உதாரணம் சுரேஷின் இணையதளம் இதில் சுரேஷின் இணையதளம் நம் கண்ணுக்கு தெரியும். .காம் தெரியாது. சுரேஷ்பாபு.காமை ரமேஷ்பாபு. காம் என மாற்றினாலும் வெளியில் ஒன்றும் தெரியாது. அப்பாவித் தனமாக அதை சொடுக்கி விடுவர் .

    இணையதள பெயர் மூலம் ஏமாற்றுதல் - இன்டர் எக்ஸ்புளோரரில் சில குறைகள் உள்ளது. அதை பயன்படுத்தி நாம் ஒரு இணையதளத்தில் இருந்தாலும் வேறொரு தளத்தில் இருப்பதுபோல் காட்ட முடியும். இதை வைத்தும் பிஷர் நம்மை ஏமாற்றி விடுவர். இந்த குறைபாடு நம் கணிணியில் உள்ளதா இல்லையா என நாம் அறிய http://secunia.com/internet_explorer_address_bar_spoofing_test/ . சொடுக்குங்கள் . உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பார் பொய் முகவரியை காட்டியது என்றால் உங்க பிரௌசரில் இந்தக் குறைபாடு இன்னும் சரி செய்யப் படவில்லை என்று அர்த்தம் . பேஜ் கேனாட்பி டிஸ்பிளேயிட் வந்தால் உங்களது பிரௌசரில் இந்தக் குறைபாடு இல்லை என்று அர்த்தம்.

    அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

    தொடரும்.

    மே மாத லொள்ளு மொழிகள்

    ஆறின கஞ்சி பழங்கஞ்சி
    ஏறின கஞ்சி சுண்டக்கஞ்சி

    Wednesday, May 02, 2007

    அமைதி

    கால வீசி நடக்கும் போது
    காத்து கூந்தல் கோதும் போது
    தென்றல் கொஞ்சம் தீண்டும் போது
    வெள்ளி நெலவு காயும் போது
    வானில் மீன்கண் சிமிட்டும் போது
    வசந்த மரங்கள் அலையும் போது
    மனசில் அன்பு மலரும் போது
    நேசம் நெஞ்சில் நெறயும் போது
    அமைதி வந்து எட்டிப் பாக்கும்
    இதயக் கதவத் தட்டிப் பாக்கும்!

    --கவிநயா

    Tuesday, May 01, 2007

    யாரிடம் கற்றோம் ?

    ஆடு தழைகளைத் தின்றதாலே
    நாம் கீரைகளை உண்கிறோமா ?

    புலி மானைத் தின்றதாலே
    நாம் ஆட்டை உண்கிறோமா ?

    எல்லைச்சண்டை அவை போட்டதாலே
    நாம் சண்டை இடுகிறோமா ?

    கூட்டமாய் அவை திரிந்ததாலே
    நாம் நட்பாய் இருக்கிறோமா ?

    மீனைக் கண்டு படகையும்
    மானைக் கண்டு ஊர்தியும்
    பறவையைக் கண்டு விமானமும்
    பல்செயலும் படைப்பும் அவைபோலே !

    இயற்கையாய்ப் பலவற்றில் மிருகமே
    நமது முன்னோராய் இருந்திருக்க

    சத்தமிடும் பேசா மிருகத்திடம்
    கற்றிருக்க நமக்கு வாய்ப்பில்லை

    மார்தட்டிச் சிரிக்கும் குரங்கிடமும்
    நம்மூத்தோர் கற்றுக் கொண்டதில்லை

    எவரிடம் எப்படிக் கற்றுக்கொண்டோம்
    பேச்செனும் மாயக் கலைதனை ?

    பின்பு வந்தது குகைச்சித்திரம்
    அதன்பின்னே வந்தது எழுத்துருவம்
    மனதில் எழுகிற திவ்வெண்ணம்
    விடை காணத்துடிக்குது எனதுள்ளம் !