Friday, June 15, 2007

சிவாஜி விமர்சனம்

அதோ வருகிறது, இதோ வருகிறது என்று பூச்சி காட்டிக்கொண்டு இருந்த சிவாஜி படம் வெளிவந்துவிட்டது. வந்தே விட்டது.... ரஜினி ரசிகர்கள் செய்யும் திவ்ய பாலாபிஷேக அலம்பல் பார்த்து புல்லரித்துப் போனேன். பாலை விரயம் செய்தால் பரவாயில்லை. இப்போது பீருக்கு வந்திருக்கிறார்களாம். கலி முத்திவிட்டது. இப்படி மக்களும் வவ்வால்களும் அத்தியாவசிய பொருட்களை விரயம் செய்வதை தடுக்க ஒரு சட்டம் வரவேண்டும்.

சில விமர்சனங்கள் இதோ...

இட்லிவடையாரின்
குற்றப் பத்திரிக்கை (FIRஆம்).... பாவி. தலைவருக்கே FIRஆ?

டுபுக்கு டவுன்லோடு செய்து பார்த்தேன் என்கிறார். சிவாஜின்னு பேரு இருக்கறதால மக்களோட குசும்பு ஜாஸ்தியாயிருக்கு...


கொஞ்சம் விலாவாரியான (அந்த விலா இல்லை) விமர்சனம், சக்கரபாணியோடது... ரஜினி இவ்வளவு நாள் சென்றும் பட்டையைக் கிளப்புவதற்கு காரணத்தை நச்சுன்னு கடைசி பாராவில் கோடி காட்டியிருக்கிறார். ரிச்மண்ட் மக்கள் இந்த வாரக்கடைசியில் ஜென்மசாபல்யம் அடைவார்களாக!

ஆனால் வலையில் ஜாக்கிரதையாக இருங்கள். இல்லாவிடில் இந்த மாதிரி சிவாஜி பஞ்ச் டயலாக் எல்லாம் படிக்க நேரிடும். மற்றபடி எல்லா 'சிவாஜி' விஷயங்களுக்கும் சிறில் அலெக்ஸ் வலையில் ஒரு கோவில் கட்டியிருக்கிறார். அங்கே போய் பார்த்து திவ்ய தரிசனம் செய்யுங்கள்.

கடைசியாக - குதிரையின் வாயிலிருந்தே..... (தயவு செய்து பாலையும், பீரையும் கணினித் திரையில் கொட்ட வேண்டாம்)


Wednesday, June 13, 2007

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி...

டும், டும், டும்.....

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி. தலைவர் நாகு அவர்களுக்கு ஒரு சந்தே.. ஹி.. ஹி... பழக்க தோஷம்.... சரி நேரா சப்ஜெக்டுக்கு வருகிறேன்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஆவலுடன் மாதா மாதம் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு தகவல் இதுதான். இந்த மாதம் நல்ல செய்தி.

க்ரீன்கார்டை நோக்கி நெடும்பயணம் செய்யும் மக்கள் முகத்தில் புன்னகை பூக்கும் காலம் வந்து விட்டது. வக்கீல் அலுவலகத்தில் வியர்வை சிந்திய எம் குல மக்கள் ஆனந்தமாக அஞ்சாமல் வீடு வாங்கி கடனாளியாகும் காலம் கனிந்து விட்டது. உத்தியோக சம்பந்தப்பட்ட அனைத்து விதமான விசாக்களும் கரண்ட். எனதருமை மக்களே... படையெடுங்கள் உடனே. தூங்கும் உங்கள் வக்கீல் அலுவலகத்துக்கு சென்று தட்டியெழுப்புங்கள் சிங்கங்களே....

டிபண்டெண்ட் விசாத் துணைகளே(politically correct ma..), பேசாம ஒரு பேங்க் எம்ப்ளாயியை கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியாக இந்தியாவில் இருந்திருக்கலாம் என்ற புலம்பலை நிறுத்தி, சதங்கா எழுதிய மாதிரி ஒரு விருந்து படையுங்கள் பார்க்கலாம்! சீனக்கடையில் உறைந்த வாழையிலை கிடைக்கிறதாகக் கேள்வி! முதலில் defrost செய்து கொள்க. இல்லாவிடில் அப்பளத்துடன் சிறிது வாழையும் இறங்கும்.

Sunday, June 10, 2007

விருந்து



தழுவி வரவேற்று
தலைவாழை இலைபோட்டு

அறுசுவைக் காய்கறிகள்
அரணென நிறுத்தி

இட்ட சாதத்தில்
விட்ட நெய்கிளறி

சொட்டு நீர்விட்டு
உட்கொளல் ஆரம்பம்

தாளித்த சாம்பாரும்
புளித்த மோர்க்குழம்பும்

தக்காளி ரசத்தின்பின்
தயிர்சாதம் பிசைந்துண்ண

வடைபாயசம் அப்பளம்
தடையின்றி தானிறங்க

நறுக்கிவைத்த ஆப்பிள்
ஆரஞ்சு மாம்பழம்

சிலதுண்டு வாயில்போட்டு
சிலாகித்து உள்ளிறங்க

காம்புகிள்ளி வெற்றிலை
காரத்துடன் நான்மெல்ல

உண்டு முடியுமுன்
துணிந்ததென் உறக்கமுமே

என்னென்று வியப்பேன்
எளிதில் மறவேன்.

Friday, June 08, 2007

கவிநயாவின் பரிசுப் பெற்ற காட்சிக்கவிதை

அன்புடன் கவிதைப் போட்டியில் கவிநயாவின் காட்சிக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. கவிநயாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!


அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
===========================================================

ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1
காட்சி வடிவம் இறுதியில் தரப்பட்டுள்ளது

அருவி

உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!

அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!

கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!

வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!

- கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா

Wednesday, June 06, 2007

மூப்பு

காலையிலிருந்து ஒரே கேள்வி மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது. குளித்துக் கொண்டிருக்கும்போது இந்த வரி ஞாபகத்திற்கு வந்தது. 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'. நேற்று பேங்க் பேலன்ஸ் பார்த்ததாலா, இல்லை பசங்கள் கேட்ட விளையாட்டு சாதனத்தாலா என்று தெரியவில்லை. நீங்கள் நினைக்கிற மாதிரி 'ஒரு நகை நட்டு உண்டா' என்ற டயலாக்கிலிருந்து இல்லை.

மனம் அந்த வரிகளை அசை போட ஆரம்பித்தது. ஆஹா என்ன வரி? எப்படி ஒரு உதவாத பொருளை வைத்து எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதை புரியும்படி எப்படி மகன்களுக்கோ, காதற்ற ஊசி போல பல விஷயங்களை வாங்கப் பார்க்கும் நம்ம வீட்டு பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டுக்கோ சொல்வது?
இங்க பாரு மக்கா, இதுக்கெல்லாம் அடிச்சிக்கறீங்களே - கடைசீல இத எல்லாமா கொண்டு போகப்போறீங்கன்னு கேட்டிருக்காரு பாருங்க அப்படின்னு ஒரு பில்ட் அப் கொடுத்து ஒரு பெரிய லெக்சர் அடிக்கலாமே. சரி யாரு சொன்னது இதை.

இது நம்மளுக்கு ரொம்ப தெரிஞ்ச விஷயமாச்சே. அட சட்னு பேரு வரமாட்டெங்குது. அதாம்பா பெரிய பணக்காரரா இருப்பாரு. அழகா ஒரு பையன் பிறப்பான். இவர விட வியாபாரத்துல பெரிய ஆளா வருவான். பையன் பேர்கூட திருவெண்காடன். அது பையன் பேரா, அப்பா பேரா? பையன் வியாபாரத்துக்கு வெளிநாடு போயி ரொம்ப பொருளெல்லாம் வாங்கிட்டு வருவான். இவரு போயி திறந்து பாத்தா எல்லாம் வரட்டியா இருக்கும். கோபத்துல பையன அடிக்க தேடுவாரு. ஒரு துண்டுசீட்டுல 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே'ன்னு எழுதிட்டு பையன் எஸ்கேப். பையன் வேறுயாருமில்லை. இறைவந்தான். அப்பறம் இவருக்கு ஞானம் வந்து எல்லாத்தையும் துறந்துட்டு ஆண்டியாவாரு.

அட - இவரு பேரு இப்பகூட தெரியாட்டி கேவலம். பேரு தெரியறவரைக்கும் படுத்தப்போவுது. பல்லிடுக்குல மாட்டின மாம்பழ நாரு மாதிரி உறுத்திட்டே இருக்கும்.

டி.எம். சௌந்தரராஜன்கூட நடிச்சிருப்பாரு. படம்பேரு இவருபேருதான். பாட்டெல்லாம் பிரமாதமாயிருக்கும். இவரு நாயன்மாரா இல்லையா? சரியா தெரியலை. பெரிய சித்தரு. இவரு ஆண்டியா அலையறாரு குடும்ப மானம் போகுதுன்னு இவரு அக்கா ஆப்பத்துல விஷம் வெச்சு இவருக்கு பிச்சை போடுவாங்க. அதுல விஷம் இருக்கறது தெரிஞ்சு ஓட்டப்பம் வீட்டைச் சுடும்னு ஆப்பத்தை கூரை மேல போடுவாரு. வீடு எரிஞ்சி போயிடும். அட வீடு கிடக்கட்டும். அவரு பேரு என்னா. சட்.

அக்கா புருஷனா எம்.ஆர். ராதா கலக்கியிருப்பாரு. ஊர்ல யாரோ கெளப்பிவிட்டு ரெண்டாம் ஷோ போயி, நா ஒருத்தன் தான் தியேட்டர்லியே முழிச்சிருந்தேன். டி.எம்.எஸ். ரொம்ப சின்னவயசா இருப்பாரு. நல்ல கம்பீரம். அவருக்கே இந்த படம் ஞாபகம் இருக்கோ இல்லியோ. நம்மள இந்த ப்ரச்னை இப்படி வாட்டுதே?

அம்மா சாகறவரைக்கும் அந்த ஊர்லயே சுத்திக்கிட்டு இருப்பாரு - இல்லையே அது ஆதி சங்கரர் கதையோ? இல்ல இதுலயும்தானா?? என்னடா ஒரே குழப்பமாயிருக்கு. அம்மா செத்த உடனே கொள்ளி வைக்கும்போது, அம்மா உடலை விறகுக்கட்டையேல்லாம் வாட்டும்னு வாழத்தண்டுங்க மேல போட்டு கொள்ளி வச்சாரு. அப்ப அவர் பாடுன பாட்டுகூட ரொம்ப உருக்கமா இருக்கும்.

அம்மா செத்ததுக்கப்பறம் இவரு கெளம்பி ஊர் ஊரா சுத்துவாரு. ஒரு ஊர்ல திருடனுங்க அரண்மனைல நகைய திருடிட்டு ஓடும்போது இவர் மேல போட்டுட்டு போயிடுவானுங்க. இவர திருடன்னு நினைச்சு ராஜாகிட்ட கூட்டிட்டுபோயி ராஜா இவர கழுவேத்த உத்தரவு போடுவாரு. கழுவேத்தறதுன்னா உங்க எத்தன பேருக்கு தெரியும்? அப்பறம் சொல்றேன். இப்ப சித்தர கண்டுபிடிக்கனும். டி.எம்.எஸ்(இவரு, இவருன்னு சொன்னா சித்தரா, ராஜாவான்னு நீங்க குசும்பு பண்ணுவீங்கன்னு தெரியும்) உடனே ஒரு பாட்ட எடுத்து உட்ட உடனே கழுமரம் எரிஞ்சி போயிடும். அப்பறம் அந்த ராஜாவும் இவரு சிஷ்யனாயி இவரு பின்னாடியே வந்துருவாரு. அந்த சிஷ்யருக்கு ஒரு நாயி தோஸ்த் ஆயிடும். இவரு சிஷ்யரு பந்தபாசம் எல்லாம் உட்றனும்னு சொல்லி அந்த நாய் மண்டைலியே திருவோட்டால ஒரு போடு போட்டு தள்ளிடுவாரு. இவருடைய சிஷ்யகோடி இவருக்கு முன்னாலியே மோட்சம் வாய்க்குவாரு. அட இவ்ளோம் பெரிய மனுஷன். இன்னமும் பேர் ஞாபகம் வரமாட்டிங்குது. என்ன லொள்ளுய்யா இது...

அப்பறம் சோழராஜா வந்து இவரண்ட கண்டுக்குவாரு. சோழராஜா யாருன்ரீங்க. நம்ம மேஜர்னு நெனக்கிறேன். மேஜர் தமிழ்ல சொல்லி இங்கிலிஷ்ல சொல்லாத ஒரே படம் இதுதான்னு நெனக்கிறேன். அப்பறம் கரும்ப வெச்சு சித்தர் பிலாசபியெல்லாம் உடுவாரு. ஆரம்பத்துல இனிக்கும் முடிவுல கசக்குற வாழ்க்க மாதிரி (ஆரம்பம் கரும்போட அடியில இருந்து). அப்பறம் கொஞ்சம் சித்து விளையாட்டுல்லாம் விளையாடுவாரு. விளையாடற பசங்கள கூப்ட்டு மேல ஒரு கூடய கவுக்க சொல்லிட்டு மாயமா அவங்க பின்னாடி இருந்து வருவாரு. ரெண்டு, மூனுவாட்டி இது மாதிரி பண்ணிட்டு அப்பறம் கூடய கவுத்திட்டு தொறந்து பாத்தா - சிவலிங்கமாயிருப்பாரு. அதாம்பா மோட்சம் வாங்கி எஸ்கேப்.

இவ்ள விஷய்ம் ஞாபகம் வருது, பேரு மட்டும் தெரியலையே? அய்யோ, அய்யோ!!!

அப்பறம் எங்கியாவது குளிக்கும்போது ஞாபகம் வந்து யுரேகா, யுரேகான்னு ஓடப்போறேன். அதுசரி. அப்டி ஓட்னது யாரு? போச்சுறா. இன்னொரு பேரும் அவுட்டா? ஆமா நம்ப பட்டினத்தாரு பேரே மறந்து போ...

ஹையா!!!! பட்டினத்தார்!!!!! பட்டினத்தார்!!!!!!! ஆகா நம்ப ஞாபகசக்தியே ஞாபகசக்தி!

யுரேகா பார்ட்டிய அப்பறம் பாக்கலாம். பட்டினத்தார் பத்தி உடனே கூகுளாண்டவர் கிட்ட கேக்கனும். நமக்கு தெரிஞ்ச விஷயத்துல எவ்ள நிஜம் எவ்ள உல்ட்டானு பாக்கறதுக்கு.

ரங்கநாதன் தெரு - தொடர்ச்சி


விக்கி பீடியாவில் ரங்கநாதன் தெரு பற்றி இருக்கிறது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.


மேலும் தகவல் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். http://en.wikipedia.org/wiki/T.Nagar
அன்புடன்,
முரளி.

Tuesday, June 05, 2007

ரங்கநாதன் தெரு, சென்னை

எப்போது சென்றாலும்
தப்பாமல் வேறுவழி
மாற்றிவிடும் காவலர்
மாறிவிடும் மக்கள்

தெருவிற்குள் நுழைகையிலே
பல்லடுக்கு மாடிக்கடை
சிலபடிகள் கொண்டகடை
மணற்சாலைக் குட்டிக்கடை

இருபுறமும் கடைபரப்பி
நடுவகிடாய் மக்கள்வெள்ளம்
பண்டிகை என்றில்லை
என்னாளும் திருநாளே

பறவைப் பார்வையிலே
தார்ச்சாலை நெளிவதுபோல்
மாடியேறி கீழ்நோக்கின்
தலைச்சாலை ஆகும்தெரு

பாத்திரங்கள் பளபளக்க
அணிமணிகள் மினுமினுக்க
நகைக்கடைகள் ஜொலிஜொலிக்கும்
புகைமண்டலமாகும் தெரு

சுவாசிக்கும் நம்உள்ளம்
மாசென்று அறிந்தபோதும்
குப்பைக்குக் குறைவில்லை
சுத்தமா(க்)க வழியில்லை

குறுகிய இத்தெருவில்
கடுகிவழி நடந்தால்
தொண்டைக்குழி வறண்டிருக்கும்
தொப்பலாய் நனையும்உடை

ஒன்றை இரண்டுக்கும்
இரண்டை மூன்றுக்கும்
விற்பவர்கள் ஏராளம்
கற்றதில்லை அவர்பாடம்

வாலிபத்தைத் தாண்டியவன்
வசதியற்ற காரணத்தால்
காலம் கடந்தபின்
வாய்ப்பாடு கூவுகின்றான்

கடைகடையாச் சுத்திவர
கடைசிவரை நேரமில்லை
வேண்டியது வாங்கவில்லை
அண்டியது அயற்சிமட்டும்

மீண்டும் வந்திங்கு
தேவையான பொருள்வாங்க
எண்ணவே முடியவில்லை
இருந்தும் மக்கள்கூட்டம்.

மார்ச் 31, 2009 யூத்ஃபுல் விகடனில்

Sunday, June 03, 2007

படம் பாரு கடி கேளு - 10


அப்பா அப்பா அந்த போலீஸ் மாமாவை கூப்பிட்டு அந்த துப்பாக்கி எங்கே வாங்கினார்னு கேட்டு எனக்கும் அது மாதிரி ஒரு துப்பாக்கி வாங்கி குடுப்பா!

டேய் கம்னு இருடா. ஹெல்மெட்டுக்கு பதிலா குல்லா போட்டுக்கிட்டு வந்திருக்கோம். அவருக்கு தெரியாம நைஸா நழுவிடலாம்னு பார்த்தா அவரை வேறு கூப்பிடு அப்படீங்கிறியே!

படம் பாரு கடி கேளு - 9


அட சீ கையை தூக்கு. கல்யாணத்தில் தாலிக்கு ஆசீர்வாதமா பண்றே?
ஜனாதிபதி பதக்கம் இது.

Saturday, June 02, 2007

ஜூன் மாத லொள்ளு மொழிகள்

பந்திக்கு முந்து
படைக்கு பிந்து
ப்ளாக் எழுத கப்னு குந்து

பாலாடையில் பால் விடலாம்
நூலாடையில் நூல் விட முடியுமா?