Tuesday, May 26, 2009

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்! (இரண்டாம் பாகம்)

காட்சி - 2
புலவர்களின் மோதல்
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

பல்லியூர் புலவர்: மன்னாதி மன்னா, பல்லியூர் நாட்டு மக்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, வருக வருக...இன்று எங்கள் ஆஸ்தான புலவர் உங்கள் பண்டிதத்தை சோதனை செய்வார். ஆஸ்தான புலவரே, தர்க்கத்தை துவக்கலாம்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா.

புலவரே, இதோ உங்களுடைய முதல் கேள்வி. சின்னத் திரையில் வரும் மெகா சீரியலில் ஒரு மாமியார் தன்னுடைய மருமகளுக்கு இன்முகத்துடன் காப்பி பானம் கொடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அவருக்கு மருமகளிடம் அபரிதமான அன்பென்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: தவறு. பானத்தில் விஷம் கலந்து கொடுத்து "சென்று வா மகளே" என்று சொல்கிறார் என்று அர்த்தம். இதோ உங்களுடைய அடுத்த கேள்வி. தமிழ் மெகா சீரியலில் கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும் ஒரு பெரியவர் குனிந்த தலையுடன் அழுகையில் உடம்பு குலுங்க ஒரு துண்டால் வாயை மூடி கொண்டு ஒரு வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அந்த வீட்டில் அவருடைய உறவினர் ஒருவர் தவறி விட்டார் என்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: இல்லை. அவருடைய மகள் புகுந்த வீட்டில் வேலைக்காரியாக உழைப்பதை கண்டு ரத்த கண்ணீர் பெருகி மகளின் கணவரையும், மாமியாரையும் "இது நியாயமா?" என்று கேள்வி கேட்டு அவர்களிடம் அவமானப்பட்டு வீடு திரும்புகிறார் என்று அர்த்தம்.

இதோ உங்களுடைய மூன்றாவது கேள்வி. சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: இந்தக் கேள்வி சற்று கடினமாக உள்ளது. எனக்கு சிறிது நேர அவகாசம் வேண்டும் புலவரே.

எலியூர் அரசன்: ஒரு மணி நேர உணவு இடைவேளைக்கு பின் தர்க்கத்தை மறுபடியும் தொடரலாம்.

புலவர்கள்: அப்படியே ஆகட்டும் மன்னா.

ராஜ சபையை விட்டு அனைவரும் வெளியேறுகிறார்கள்.

(சீக்கிரமே தொடரும்)
-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

9 comments:

  1. பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

    சரியா?

    கேள்வி, பதில்கள் அமர்க்களம். இதில் சோகம் என்னவென்றால் இந்த கேலிக்கூத்திற்கு இவ்வளவு வரவேற்பு, ரசிகர்கள்.....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஐயோ - அப்படி ஒரு அர்த்தம் வருதா. நான் சொன்னது மெகா சீரியல் பத்தி. உங்க மினி சீரியல் பத்தி இல்லை...

    ReplyDelete
  4. பெரிய திரையில் டூயட் பாடிக் கொண்டிருந்தார்கள்.

    (வெளி நாட்டுப் புலவர் இதை சொல்ல போவதில்லை - நான் ஒரு மணி நேர உணவு இடைவேளையின் போது அவரிடம் சொல்லியிருந்தாலும்)

    ReplyDelete
  5. நன்றி நாகு. ஒரு எலுமிச்சை அளவு கதையை வச்சு ஒரு ஏழெட்டு வருஷம் இந்த தொடர்களை இழுக்கும் தயாரிப்பாளர்களுக்கு hats off.

    ReplyDelete
  6. பலே! இது கேள்வி!
    டி நகரில் கறிகாய் விற்றுக்கொண்டு இருந்தார்களோ?

    ReplyDelete
  7. அனானிமஸ் மற்றும் பரதேசி,

    சின்னத் திரை கதாநாயகிகள் டூயட் பாடினார்களா அல்லது தி நகரில் காய்கறி வித்தார்களா அல்லது வேறேதேனும் செய்தார்களா என்று ஆஸ்தான புலவர் நாளை சொல்லி விடுவார். அவரிடம் கேட்டு கொள்வோமா? :-)

    ReplyDelete
  8. மீனா,

    உங்கள் பதிவும் சூப்பர், இந்த கதையும் சூப்பர். காலதாமதமாக வந்து பாராட்டுவதற்கு மன்னிக்கவும். ஆணி புடுங்கும் வேலையைத் தாண்டி, குடும்பத்தோடு, ஆகாச கங்கையை (நயாகரா) தரிசிக்க போயிருந்ததால் அதிகம் பின்னூட்டமிட நேரமில்லை.

    என் பங்குக்கு: சின்னத் திரை கதாநாயகிகள் சின்னத்திரையில் கடித்து கடித்து டமிள் பேஷி தொகுப்பாளிகளாக இருந்தார்கள்.


    முரளி.

    ReplyDelete
  9. முரளி,

    "குடும்பத்தோடு, ஆகாச கங்கையை (நயாகரா) தரிசிக்க போயிருந்ததால் அதிகம் பின்னூட்டமிட நேரமில்லை."

    தரிசனம் நன்றாக ஆயிற்றா? உங்கள் பாராட்டுக்கும் ஊக்குவிக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி. ஒரு பத்து நாட்களுக்கு முன் நான் தமிழில் எழுதுவேன் என்று யாராவது சொல்லியிருந்தால் விலா வலிக்க சிரித்திருப்பேன். ஏதோ நாகு மற்றும் கூகிள் புண்ணியத்தில் எனக்கும் தமிழில் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு. நான் எழுதுவதையும் படித்து நல்லா இருக்குன்னு சொல்லி ஊக்குவிப்பதற்கு ரிச்மண்ட் தமிழர்களால் மட்டும் தான் முடியும்.

    உங்கள் ஊகம் சரியா இல்லையா அப்படின்னு இன்று ஆஸ்தான புலவர் சொல்லி விடுவார். :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!