Thursday, June 04, 2009

மீனாவுடன் மிக்சர் - 2 {ராக்பெல்லர் மாமி எங்கே? நரிக்கொரவாஸ் எங்கே?}

சில வருஷங்களுக்கு முன்னாடி நான் கலிபொர்னியாவில் வசித்த போது ஒரு தோழியின் தங்கைக்கு கல்யாணம் நிச்சயித்து பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலிலேயே செய்வதா சொன்னாங்க. ஒரு மாதம் முன்பே கல்யாண பத்திரிகை குடுத்து எங்களை அவசியம் வர வேண்டும் அப்படீன்னு சொல்லிட்டு போனாங்க.

உங்களைப் பத்தி எனக்கு தெரியாதுங்க. எனக்கு நம்மூர் கல்யாணம்னாலே ஒரு தனி குஷி. அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்க போற முதல் இந்திய கல்யாணம் இது தான். சின்ன வயசில் எழுத்தாளர் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ங்கர புத்தகத்தை நான் படிச்சு படிச்சு கிழிச்சதுல என் தொல்லை தாங்காம ஒரு நாள் அந்த புத்தகம் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு சந்நியாசம் வாங்கிண்டு போயிடுத்துங்க.

அமெரிக்காவுல கல்யாணம்னா சும்மாவா? பெண் வீட்டுக்காரங்களுக்கு தான் எத்தனை வேலை இருக்கும்? இந்தியாலேந்து வண்டி(விமானத்த தான் சொல்லறேங்க) வச்சு எத்தனை சாமான் கொண்டு வரணும்? எத்தனை பேரை கூட்டிண்டு வரணும்? அதான் நம்ம எழுத்தாளர் சாவி அமெரிக்காவில் கல்யாணம் செய்தா என்னென்ன பண்ணனும்னு அவர் புத்தகத்துல பிட்டு பிட்டு வச்சிருக்காரே.

* தட்டானை வரவழைச்சு கல்யாண பெண்ணுக்கு வேண்டிய ஒட்டியாணம், வங்கி, வளையல்கள், ஹாரம், திருமாங்கல்யம் போன்ற நகைகளை செய்தாகணும்.
* வயசான பல பாட்டிகளை கூட்டி கொண்டு வந்து அப்பளம் இட்டு காய வைத்து கல்யாண விருந்துக்கு தயார் பண்ணியாகணும்.
* இட்ட அப்பளங்களை காய வைக்க பெரிய கட்டடங்களோட மொட்டை மாடியை வாடகைக்கு எடுத்தாகணும்.
* மடிசார் கட்டிக்க ஆசைப்படற பெண்களுக்கு, (ராக்பெல்லர் மாமி உட்பட) அதை சொல்லித்தர பாட்டிகளை ஏற்பாடு செய்தாகணும்.
* புரோகிதர்களை வரவழைத்து அவங்க தங்கரத்துக்கு இட வசதிகள் செய்து கொடுத்தாகணும்.
* வைதீக காரியங்களுக்கு மடியா தண்ணி வேணும்னு சொல்லற புரோகிதர்களுக்கு புதுசா கிணறு வெட்ட ஆட்களை வரவழைக்கணும்.
* மாப்பிளையை கார்ல ஊர்வலமா அழைச்சுண்டு போற ஜானவாச ரூட்டுக்கு கவர்மென்ட் பர்மிட் வாங்கணும்.
* ஜான்வசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.
* நலங்கில் பெண்ணும், மாப்பிள்ளையும் உருட்டி விளையாட தேங்காய் வரவழைக்கணும்.
* கல்யாண சத்திரம் வாசல்ல கட்ட வாழை மரம் வரவழைக்கணும்.
* பந்தியில் பரிமாற வாழை இலை வரவழைக்கணும். வடு மாங்காய் வரவழைக்கணும். வெள்ளைக்காரர்கள் பந்தியில் உட்கார்ந்து வடு மாங்காய் சாப்பிட்டு விரலை கடித்து கொண்டால் அவங்க கைக்கு பேண்ட் ஐட் போட தேவையான first aid boxes வரவழைக்கணும்.

நினைக்கவே எனக்கு மலைப்பா இருந்தது. என் தோழி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண ஏற்பாடுகள் பண்ண எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க செய்யறேன் அப்படீன்னு சொன்னதுக்கு எல்லாம் 'under control' அப்படீன்னு சொன்னாங்க. சரி தான். நிறைய ஆள்பலம் இருக்கும் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

கல்யாண நாள் கிட்ட நெருங்க நெருங்க எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எனக்கு ஒரே பரபரப்பு. தினமும் நான் அலமாரியை திறந்து நாலு தரம் கட்ட வேண்டிய பட்டு புடவைகளையும் நகைகளையும் சரி பார்த்து வைப்பதை பார்த்து என் கணவருக்கு ஒரே குழப்பம். அமெரிக்காவில் பட்டுப் புடவை கட்டிண்டு ஜானவாச கார் பின்னாடி நடக்கவும், நலங்கு போது கலாட்டா பண்ணி பாட்டு பாடவும், வாழை இலை கட்டி மாக்கோலம் போட்டிருப்பதை பாக்கவும் ஒரு குடுப்பினை வேண்டாமா? 'வாஷிங்டனில் திருமணம்' கதை போல நடக்கவிருக்கும் கலிபோர்னியா கல்யாணத்தை பாக்க எனக்கிருந்த ஆர்வம் அவருக்கு புரியலை.

கல்யாணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டுக்காரங்களை விட அதிக கவனத்தோட நான் ஜானவசத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த போது எதேச்சையா என் வீட்டுக்கு வந்த இன்னொரு தோழி என்னை பாத்து குழம்பி போய் நின்றாள். விசாரிச்சா கல்யாணத்துல ஜானவாசமே கிடையாதாம். அது மட்டுமில்லை. அடுத்த நாள் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தாலி மட்டும் கட்டி அரை மணியில முடிஞ்சுடுமாம். அப்புறம் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் buffet சாப்பாடு சாப்பிட்டு போகணுமாம்.

என்ன அக்கிரமம்க இது? ஒரு ஜானவாச கார் கிடையாதாம். கார் பின்னாடி நடக்கற ஊர்வலம் கிடையாதாம். ஊர்வலத்துக்கு காஸ் விளக்கு தூக்கிண்டு நடக்கும் நரிக்குரவங்க கிடையாதாம். மடிசார் கட்டிய ராக்பெல்லர் மாமி கிடையாதாம். உட்கார வச்சு வாழை இலைல பரிமாரற விருந்து கிடையாதாம். ரொம்ப ஏமாத்தமா இருந்துதுங்க. எனக்கு இருந்த கோவத்துல ஆசை காமிச்சு மோசம் பண்ணினதுக்கு திருவாளர் சாவி மேல கேஸ் போடலாமான்னு கூட யோசனை பண்ணினேன். நல்ல காலம் அப்படியெல்லாம் செய்யாமல் விட்டேன். இல்லேன்னா இப்போ அவர் பேரை சொல்லி ப்ளாக் எழுதினத்துக்கு என் பேர்ல கேஸ் போடுவாங்களே.

-மீனா சங்கரன்






10 comments:

  1. meena singara chennai la thirumanam sedukitta unnakae janavasam illadappo ne california la expect pannarathu overa illa.
    but unnoda ekkam puriyardhu.

    ReplyDelete
  2. //ஜான்வாசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.//

    அவங்களை பார்த்து வாஷிங்டன் நாய்கள் குரைக்காததால், தமிழகத்திலிருந்து நாய்களை கொண்டு வந்ததையும் நான் சமீபத்தில் 1963-ல் விகடனில் தொடர்கதையாக அந்த நாவல் வந்த போது படித்திருக்கிறேனே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. நம்ம மக்களுக்கு அவ்வளவுதான் உடம்பு வளையும். போன வருஷம் என்னுடைய மேற்கிந்திய நண்பர் பெண் கல்யாணத்துக்கு போயிருந்தேன். பெண் பல்லக்கில் வருவதும், இந்தோனேஷிய மாப்பிள்ளை குதிரையில் வந்து இறங்குவதுமாக கலக்கிவிட்டார்கள்.

    சாவியின் வா.தி. மாதிரி அயல்நாட்டில் வைத்து நம்ம ஊர் கதை வேறு யாரும் எழுதியதில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. meena maami kalakreenga ponga. i think i know you maami

    ReplyDelete
  5. ஜெயஸ்ரீ,

    நம்ம கல்யாணத்துல நடக்குறத நிதானமா என்ஜாய் பண்ண முடியாது. மத்தவாளோட கல்யாணத்துல தான் ஜாலியா சடங்குகளை எல்லாம் அனுபவித்து ரசிக்க முடியும். சாவியுடைய 'வாஷிங்டனில் திருமணம்' புஸ்தகம் என்னோட all time favorite.

    டோண்டு ராகவன் சார்,

    ரிச்மண்ட் தமிழ் சங்கத்து சார்பிலே உங்களை 'வாங்க வாங்க' ன்னு வரவேற்கிறேன். நீங்க சொல்லறது சரி தான். அந்த கதையில ஜானவாசம் போது நரிக்குறவர்களை பார்த்து குரைக்க இந்தியாவிலிருந்து நாய்களை வரவழைப்பாங்க. இன்னும் ஒரு விஷயத்தையும் நான் சொல்ல விட்டுட்டேன். அதான் சம்மந்தி சண்டையால் வரும் கலாட்டா. வந்து பதிவிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.

    நாகு,

    "பெண் பல்லக்கில் வருவதும், இந்தோனேஷிய மாப்பிள்ளை குதிரையில் வந்து இறங்குவதுமாக கலக்கிவிட்டார்கள்."

    பலே பலே! கேட்கவே நல்லாயிருக்கே. நீங்க சொல்வது போல் சாவியின் 'வா.தி' மாதிரி வேறு ஒரு கதையும் வெளி வந்ததா தெரியலை. அவருடைய கற்பனைத் திறனை நினைத்தால் என்னால் ஆச்சர்யபடாமல் இருக்க முடியலை. வருகைக்கு வழக்கம் போல நன்றி, நாகு. :-)

    ReplyDelete
  6. அனானிமஸ்,

    "i think i know you மாமி"

    ம்ம்ம்....உங்க பெயர சொல்லாம இப்படி சொன்னீங்கன்னா எப்படி? பெயரை சொல்லுங்க. தெரியுதான்னு பாப்போம். உங்க வருகைக்கும் பதிவுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  7. சாவி கதையை நானுமே படிச்சு கிழிச்சிருக்கேன் :) ஆனா, அவலை நினைச்சு ஒரலை இடிச்ச கதையால்ல இருக்கு உங்களது ... :)

    சொன்ன விதம் சூப்பர்.

    (இன்னும் பொட்டி தூசு தட்டல போல! வலை(பூவு)க்குள்ள நல்லாவே சிக்கிட்டீகன்னு தெரியுது :D)

    ReplyDelete
  8. மீனா,

    மீனாவுடன் மிக்சரா கலக்குங்க. நானும் என் நண்பியிடம் சமோசாவும் அவரும் என்று ஒரு பதிவு எழுதச் சொன்னேன் அதற்கு அவர் மாங்காயும் முரளியும்னு வேணும்னா நீ எழுதுன்னுட்டாங்க, நிஜமாவே தலைப்பு தராங்களா இல்லை என்னை கிண்டல் பண்றாங்களான்னு தெரியலை.

    சும்மா சும்மா சூப்பர் பதிவு சூப்பர் பதிவுன்னு எழுதி எழுதி போரடிக்குது அதனால இனி வேற ஏதாவது ஒரு வார்த்தையை கண்டு பிடிச்சு வெச்சுக்கனும் போல இருக்கு.

    ஆமா நரிகொறவர்களா, பாத்துங்க இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்டுட்டு அடி வாங்க போறீங்க. எனக்கு தெரிஞ்சு அவங்கள்ளாம் இப்ப நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. போன வருஷமோ அதற்கு முந்தின வருஷமோ ஞாபகம் இல்லை நரிக்குறவர் சமுதாயத்தில இருந்து ஒரு பையன் தமிழ் நாட்டில ஒரு மாவட்டத்தில முதல் மாணவனா +2 பாஸ் பண்ணியிருந்ததா விகடன்ல படிச்சேன்.

    நீங்க நிஜமவே அந்த கல்யாணத்துக்கு அப்படி பரபரன்னு தயாரானீங்களோ இல்லையோ தெரியாது ஆனா உங்க எழுத்தைப் படிச்சா அந்த அவஸ்த்தை, அந்த பரபரப்பு, அந்த எக்ஸைட்மண்ட் எல்லாம் அனுபவிக்க முடிஞ்சது.

    முரளி.

    ReplyDelete
  9. Kannanmurugan has left a new comment:

    Super Maami... Kannan Murugan, Dubai

    (RTS Admin: I apologize for rejecting his comment by mistake)

    ReplyDelete
  10. "சொன்ன விதம் சூப்பர்."

    வாங்க கவிநயா. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி. வலைக்குள்ள நல்லாவே மாட்டிக்கிட்டுருக்கேன். :-)

    முரளி,

    "ஆமா நரிகொறவர்களா, பாத்துங்க இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்டுட்டு அடி வாங்க போறீங்க."

    நீங்களே போட்டு கொடுப்பீங்க போல இருக்கே.:-)

    அந்த கதைல வர்றத சொன்னேங்க. பாரதியோட 'ஜாதி இரண்டொழிய வேறில்லை' எனும் கூற்றை மனப்பூர்வமா ஆதரிப்பவர்களில் நானும் ஒருத்தி. உங்க வருகைக்கும் பதிவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

    கண்ணன்முருகன்,

    வாங்க. உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!