Sunday, July 05, 2009

படம் பாரு கடி கேளு - 33



இடமிருந்து இரண்டாம் மீர் காட் (Meer cat):சே! சே! சே! சே! இன்னாடா இது இவ்வளவு நேரம் ஆக்குறே ஒரு படம் பிடிக்க. ம்ம்ம். அது தான்... அந்த பட்டன் தான். சீக்கிறம் அழுத்து. ஐயோ! அந்த பக்கம் ஒரு சிங்கம் வர்றா மாதிரி இருக்கு. சீக்கிறம் படம் எடுடா சாவுகிராக்கி.

Saturday, July 04, 2009

பரதேசிக்கு பட்டாம்பூச்சியா?

பெரியோர்களே! தாய்மார்களே! ப்ளாகிகளே! எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி கௌரவித்த ஜெயகாந்தன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னடா விருது் வாங்கியவுடன் மேடைப்பேச்சு பேசி பெனாத்தறேன்னு கேட்கறீங்களா? விருது/பட்டத்தின் மகிமை அது!! யார் விருது் வாங்கினாலும் உடனே இது மாதிரி ஆரம்பிப்பது தான் வழக்கம்.
நான் ஏதோ முடிந்தவரை கடித்துக்கொண்டிருந்தேன். இப்படி ஒரு விருதைக்கொடுத்து என்னை மேலும் ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி. ஜெயகாந்தன் பற்றி சொல்லத்தேவையில்லை. அவர் படம் எடுப்பதிலும் வல்லவர். பாடம் கற்பிப்பதிலும் வல்லவர்.

நான் வழங்கும் முதல் விருது மீனா சங்கரன் அவர்களுக்கு. சமீபத்தில் தமிழ்சங்க வலையில் ப்ளாக ஆரம்பித்த மீனா, தனது அலாதியான எழுத்தின் மூலம் பலரைக்கவர்ந்தவர். தேங்காய் மட்டையில் ஆரம்பித்து, மிக்சரை கலக்கி, கட்டி (காது) யை ஆராய்ந்து, வடை வரை சென்ற மீனா சங்கரன் அவர்களின் எழுத்தாற்றல் அபாரம்.

எனது அடுத்த விருது ஸ்ரீலதா அவர்களுக்கு. கவிதை புனைவதில் இவர் வல்லவர். இவர் பட்டாம்பூச்சியைப்பற்றி இயற்றிய கவிதையைப்படியுங்கள் இங்கே. ப்ரெஞ்சு மொழியிலும் வல்லவர். ஆரம்பத்தில் அவ்வப்போது தமிழ்சங்க வலைதளத்தில் ப்ளாகிய இவரக்காணாவில்லை. இந்த விருதைக்கொடுத்து அவரை மீண்டும் ப்ளாக அழைக்கிறேன்.

எனது அடுத்த விருது பித்தன் பெருமானுக்கு. இவரின் அரசியல் அலசல்களும், திரைப்பட விமர்சனங்களும் அபாரம். முதலில் தமிழ்சங்க வலைத்தளத்தில் ப்ளாகிய இவர் தனிக்கட்சி ஆரம்பித்து ப்ளாகிக்கொண்டிருக்கிறார். உதாரணம் இங்கே. அவ்வப்போது சுவாசியமான பின்னூட்டங்களும் எழுதுவார். மேலும் ப்ளாக வாழ்த்துக்கள்.

சரி, மூன்று பேருக்கு விருது கொடுத்தாகிவிட்டது. மூவருக்கும் வாழ்த்துக்கள்!



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Thursday, July 02, 2009

மைலாப்பூரில் திருமணம்.


ரிச்மண்டில் வளர்ந்த தீபக், ஜனனிக்கு நேற்று சென்னை மயிலாப்பூரில் திருமணம் நடந்தது. ரிச்மண்டில் இருந்து ஓரிரு குடும்பங்கள் தவிர மற்ற அனைவரும் இந்தத் திருமணத்திற்கு போயிருக்கிறார்கள். ரிச்மண்ட் தமிழர்கள் தவிர வேறு ஒரு சில உள்ளூர் பிரபலங்களும் இந்தத் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தார்களாம். :-)

மணமக்கள் தீபக் - ஜனனி, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

தினமலர் தளத்தில் இருந்து...

சென்னை : சென்னையில் நேற்று நடந்த "தினமலர்' இல்லத் திருமண நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் கருணாநிதி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.



"தினமலர்' வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதியின் மகள் வழி பேரன் தீபக்கின் திருமணம், மயிலாப்பூர் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மல்லிகா-நடராஜமூர்த்தி தம்பதியினரின் மகன் தீபக் என்ற சுப்ரமணியனுக்கும், சுபா-சுந்தர் தம்பதியினரின் மகள் ஜனனிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இவர்கள் அமெரிக்கா, வெர்ஜினியாவில் வசித்து வருகின்றனர். அமெரிக்க ராணுவத்தில் தீபக் நான்காண்டுகள் பணிபுரிந்துள்ளார். அமெரிக்க கப்பல் படை புலனாய்வுப் பிரிவில் இருந்தபோது, இரண்டாண்டுகள் ஈராக் போரின் போது, அங்கு பணியாற்றியுள்ளார். தீபக், அமெரிக்க குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகன் தீபக் அமெரிக்க "பாஸ்டான் பல்கலைக் கழகத்தில் மாஸ்டர்ஸ் படித்து வருகிறார். அதே பல்கலைக் கழகத்தில் மணமகள் ஜனனி சட்டம் பயின்று வருகிறார்.



ஜூலை 1ம் தேதி மாலை 6.30 மணியளவில் தீபக்-ஜனனி திருமண நிச்சயதார்த்தம் மயிலாப்பூர் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. கலைமாமணி லால்குடி கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி இடம் பெற்றது. தீபக்-ஜனனியின் திருமணம் நேற்று காலை 9.15ல் இருந்து 11 மணிக்குள் பெரியவர்கள் வாழ்த்துக்களோடு இனிதாக நடந்தது. மாலை 6.30 மணி முதல் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கலைமாமணி அருணா சாய்ராம் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி இடம் பெற்றது.



முதல்வர் வாழ்த்து: தமிழக முதல்வர் கருணாநிதி நேற்றிரவு 8 மணிக்கு நேரில் வந்து, மணமக்களை வாழ்த்தினார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், "மாத்ருபூமி' வீரேந்திரகுமார், "தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன், நாடக நடிகர்கள் கிரேசி மோகன், மாது பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி, லால்குடி ஜெயராமன், கிருஷ்ணா சுவீட்ஸ் கிருஷ்ணன் மற்றும் முரளி, டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்.



வரவேற்பில் கலந்து கொண்டவர்கள்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலர் சுலோச்சனா சம்பத், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். தீயணைப்புத்துறை இயக்குனர் நட்ராஜ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ஏ.வி.எம்.சரவணன், சிவாஜி புரொடக்ஷன் ராம்குமார், நடிகர்கள் டி.ராஜேந்தர், சரத்குமார், சிவகுமார், சூர்யா, பிரசாந்த், நடிகைகள் மனோரமா, சச்சு, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.



தே.மு.தி.க., இளைஞரணி அமைப்பாளர் சுதீஷ், தமிழக காங்., தலைவர் தங்கபாலு, அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், காங்., சட்டசபைத் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தொழிலதிபர் கிருஷ்ணராஜ வானவராயர், வி.எச்.பி., தலைவர் வேதாந்தம், இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், பா.ஜ., தலைவர் இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.



பத்திரிகை அதிபர்கள் மற்றும் ஐ.என்.எஸ்., நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திலக்குமார், ரவீந்திரகுமார், அதுல் மகேஸ்வரி, விலாஸ் மாரத்தே, நரேஷ் மோகன், மகேஷ்லர்பேரி, சோமேஷ் சர்மா, கிரண் தாக்கூர், பிஜி வர்கீஸ், விவேக் குப்தா, சங்கர், மன்மோகன், எச்.என்.காமா, பரிஷ்நாத், வெங்கட்ராம ரெட்டி, பிரதாப் பவார், வீரேந்திரகுமார், ஆதித்தன், கிரஷ் அகர்வால், சம்ஹித் பால், சந்திரன், தேவேந்திர தர்தா, ஜெஸ் தர்தி, ரவீந்திர தாரிலால், பிரதீப் குப்தா, சஞ்சய் அஜாரி, மொகித் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.



திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மணமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. "தினமலர்' பங்குதாரர் டாக்டர் இரா.வெங்கடபதி, ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதி மற்றும் பங்குதாரர்கள் இரா.ராகவன், இரா. சத்தியமூர்த்தி மற்றும் எல்.ராமசுப்பு, கி.ராமசுப்பு, எல்.ஆதிமூலம், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட தினமலர் குடும்பத்தினர், அனைவரையும் வரவேற்றனர்.




Wednesday, July 01, 2009

மீண்டும் ஒரு பட்டாம்பூச்சி

எனக்கா! எனக்கே எனக்கா! நிஜமா! என்ன இப்படி ஒரு கட்டு கட்றான்னு யோசிக்காதீங்க. ஒன்னும் இல்லை, நண்பர் ஜெயகாந்தன் எனக்கு பட்டாம்பூச்சி விருது தந்தவுடன் கொஞ்சம் படம் காமிக்கலாமேன்னு நினைச்சேன். இவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்குதுன்னு தெரியலை. ஒரு விஷயம் பத்தி கேட்டா, பட்டுன்னு ஒரு பத்து நிமிஷத்தில நமக்கு பதிலையும், கேட்ட விஷயம் பத்தி ஒரு 100 தகவல், இணையதள முகவரி எல்லாம் கொடுத்து நம்மை அசர அடிச்சுடுவார். புகைப்படம் எடுப்பதில் மன்னன். எனக்கும் பரதேசி மற்றும் வசந்தம் அவர்களுக்கும் பட்டாம்பூச்சி விருதினைத் தந்ததற்கு நன்றி.

பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு முன்பு, இந்த பட்டமளிப்பு தத்துவம் பதிவிட சோம்பி இருப்பவர்களை பதிவிட செய்ய ஒரு மிகச்சரியான உத்தி. பட்டம் கொடுத்தாச்சுன்னா வேற வழியே இல்லை எழுதித்தான் ஆக வேண்டும். இதை கொண்டு வந்ததற்கு அனைவருக்கும் நன்றி.


முதலில் நான் பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுத ஆரம்பித்திருக்கும் வேதாந்தி. இவர் அடுத்தவர் கதையிலும் கதை பண்ணுவதில் கெட்டிக்காரர். ஒரு புறம் அப்பாக்களை சிலாகித்து எழுதுவார் மறுபுறம் அரசியல்வாதி அப்பாக்களைத் தாக்கியும் எழுதுவார். இவரால் பல விஷங்களை பல கோணங்களில் பார்க்கவும் முடியும் அதை எழுதவும் முடியும். வாங்க விருதைப் பிடிங்க.


இரண்டாவதாக அஜாதசத்ரு. கல்கியின் எழுத்து சாயல் இவரிடத்தில் உண்டு. நிறைய யோசிப்பவர் என்பதும், அதை எழுத்தில் கொண்டுவர முயல்பவர் என்பதும் இவரது ஆரம்பகால எழுத்தில் தெரிந்தது. இரண்டு பதிவிற்குப் பிறகு இவரைக் காணவில்லை. தனிக் கட்சி ஏதும் துவங்கி விட்டாரோ என்னவோ தெரியவில்லை. இந்த விருதின் மூலம் இவரை மீண்டும் நமது வளைப்பூவில் எழுதத்தூண்டலாம் என்று இவருக்கு இந்த விருது.


மூன்றாவதாக விருதினைப் பெற அழைப்பது நாராயணன். இவரது சங்கீத பற்றும் அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் நமக்கெல்லாம் தெரியும். சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுதி கலக்கும் இவரது பின்னூட்டமும் மிகப் ப்ரபலம். ஒவ்வொரு முறை நாம் இந்தியா செல்லும் போதும் நாம் படும் பாட்டை நறுக்கென சொல்லி நம்மை கவர்ந்தவர். ஐயா வாங்க பிடிங்க உங்க விருதை.
எனக்கு இந்த விருதை வழங்கிய ஜெயகாந்தனுக்கு மிக்க நன்றி. விருது பெரும் வேதாந்தி, அஜாதசத்ரு, நாராயணன் மூவருக்கும் வாழ்த்துக்கள்.







நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளுக்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

முரளி இராமச்சந்திரன்

Sunday, June 28, 2009

தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே...


சென்ற வாரம் போயிருந்த முகாமில் ஒரு நாள் சூரிய உதயத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஐந்து மணிக்கு வரச்சொல்லியிருந்தார்கள். நான் கைக்கடிகாரத்தில் அலாரம் நேரத்தை சரியாக வைத்துவிட்டு அலாரம் ஆன் செய்ய மறந்துவிட்டேன். ஆனால் விப்பூர்வில் பறவைகள் மறக்காமல் எழுப்பிவிட்டன. அலறி அடித்துக்கொண்டு ஓடினால் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்ற பயத்தால் சத்தம் போடாமல் ஓடினேன்.
எல்லோரும் தூக்கத்தில் நடந்து வந்ததுபோல் இருந்தார்கள். ஒரு இருபது நிமிட நடையில் முகாமுக்கு நேர் மேலே ஒரு உச்சியை அடைந்தோம். அங்கிருந்து பார்த்ததில் தெரிந்த காட்சிதான் மேலே இருக்கும் படம்.

மூங்கில் இலை மீது தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே

இனி நான் குறுக்கே பேசவில்லை. சூரியன் உதிப்பதற்கு முன்னும், பின்னும் எடுத்த படங்களைப் பாருங்கள்.
மலையேற அஞ்சும் எங்கள் தலைக்காக அவர் நகர்ந்து உட்கார்ந்த நாற்காலியில் இருந்து சூரிய உதயத்தைப் பார்க்க கடேசியில் ஒரு வீடியோவும் உண்டு...

சூரிய உதயத்துக்கு முன்னால் வீடியோ...








சூரிய உதயம்...


இந்த வீடியோவில் வேகமாற்றம் ஏதும் இல்லை. நிகழ்ந்த மாதிரியேதான். சூரியன் உதிக்கும் முன் மாறும் நிறங்களைப் பாருங்கள். இது என் டிஜிட்டல் கேமராவின் வீடியோ வசதியில் எடுத்தது. நல்ல கனமான வீடியோ யாராவது தூக்கிக்கொண்டு வந்து கொடுத்திருந்தால் உங்களுக்கு இன்னும் அற்புதமான படம் கிடைத்திருக்கும். உங்களுக்கு வாய்த்தது இவ்வளவுதான்...

படம் பாரு கடி கேளு - 32


சே! என்னதான் பேண்டா (Panda) மேல் பிரியம் இருந்தாலும் இந்த zoo வில் நமக்கு பேண்டா வேஷம் போட்டுட்டாங்களே!. மரத்துல வேற ஏறச்சொல்லுவாங்களோ!

பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம்: விமர்சனம்




ஏழு வயதான சாங்-வூ-வின் தாய் சியோல் நகரத்தில் வேலை தேடவிருப்பதால் அவனை சிறு கிராமத்தில் வசிக்கும் வயதான தாயாரிடம் சில நாட்கள் விட்டுச் செல்கிறாள். மிக பின் தங்கிய கிராமத்தில் சிறுவன் சாங்-வூ-விற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அவனது வீடியோ கேம் மட்டுமே. பாட்டிக்கு பேச முடியாது, நியாபக மறதி வேறு. கிராமத்தில் விளைவிக்கும் காய்கறிகளை அருகில் இருக்கும் சிறு நகர் புறத்தில் விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறாள். ஆரம்பத்தில் பாட்டியை பிடிக்காமல் உதாசின படுத்துகிறான் சாங். ஆனாலும் பாட்டி அவனிடம் தனது நெஞ்சின் மேல் கையால் வட்டமிட்டு சைகையில் மன்னிப்பு கேட்கிறாள். பாட்டி தனது பழைய செருப்பினை தைக்க ஊசி நூல் கோர்த்து கொடுக்குமாறு, பையன் சலிப்புடன் சில முறை கோர்த்து கொடுக்கிறான்.



ஒரு சில நாட்களில் அவனது வீடியோ கேம் பாட்டரி தீர்ந்துவிடுகிறது. பாட்டியிடம் பாட்டரி வாங்க காசு கேட்டு அழுகிறான் சிறுவன். அவளிடம் காசு இல்லாததால் கோபத்தில் அவளது கூந்தல் முடிய வைத்துள்ள பழங்கால பொருளை விற்று விடுகிறான். அவளது ஒரே பழைய செருப்பினை தூக்கி எரிந்துவிடுகிறான். அவன் கொண்டுவந்த டின்னில் அடைத்த உணவுகள் தீர்ந்து விடுகிறது. பாட்டி கொடுக்கும் சாதம் அவனுக்கு பிடிக்கவில்லை. பசியால் வாடும் பேரனை பார்த்த பாட்டி அவனிடம் சைகையில் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கிறாள். அவன் தனது புத்தகத்தில் இருக்கும் கோழியை காட்டி கெண்டகி சிக்கன் வேண்டும் என்று கூறுகிறான். பாட்டியும் தனது விளைபொருட்களை எடுத்துக்கொண்டு சிறு நகருக்கு சென்று ஒரு கோழி வாங்கி வந்து நீரில் வேக வைத்து தருகிறாள். ஆனால் சிறுவனோ தனக்கு வறுத்த கோழி வேண்டும் என அழுகிறான்.




சிறுவனை அழைத்து கொண்டு சிறு நகருக்கு விளை பொருட்களை விற்க செல்கிறாள் பாட்டி. அவள் கஷ்டப்பட்டு சைகையில் விற்பதை பார்த்த சிறுவனின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது. அதில் வந்த பணத்தில் அவனுக்கு நல்ல ஷூ வாங்கி தருகிறாள். அவன் கேட்ட சாக்லேட் வாங்கி தருகிறாள். வீடு திரும்ப பஸ்சுக்கு காசு போதததால், சிறுவனை மட்டும் அருகில் வசிக்கும் ஒரு பையனிடம் பத்திரமாக பஸ்சில் கொண்டு விடும்படி சொல்கிறாள். வீடு திரும்பிய சிறுவன் வெகு நேரமாக பாட்டி வராததால் திரும்ப ரோட்டில் வந்து காத்திருக்கிறான். பாட்டி மாலையில் நடந்தே கிராமத்திற்கு வருவதை பார்த்த பையன் மனம் மிகவும் வருத்தமடைகிறது. பாட்டி தனக்கென மகள் கொடுத்த முதியவர் சாப்பிடும் மருந்துகளை அருகில் வசிக்கும் நோயுற்ற ஒரு முதியவருக்கு அளிக்கிறாள். அதை பார்த்த சிறுவன் மேலும் பாட்டியை மதிக்க ஆரம்பிக்கிறான்.


அவன் தாய் எழுதிய கடிதத்தில் இன்னும் சில நாளில் வந்து அவனை திரும்ப கூடிக்கொண்டு போவதாக சொன்னவுடன் பையன் வருத்தமடைகிறான். பாட்டியை விட்டு சென்றவுடன் எப்படி அவளால் தனக்கு கடிதம் எழுத முடியும் என்று எண்ணி தனது கையால் சில அட்டைகளில் "நலமாய் இருக்கிறேன்", "உடல் நலமில்லை", "உன்னை பார்க்க வேண்டும்" என எழுதி அதை படிக்க வசதியாக சிரிக்கும் படம், சோகமான படம் என வரைந்து தருகிறான். அவனது தாய் வந்து அழைத்து போகும் நாளில் பாட்டியிடம் சைகையில் நெஞ்சின் மேல் வட்டம் வரைந்து மன்னிப்பு கேட்கிறான்.

இந்த படம் நான் நேற்று பார்த்த கொரிய மொழியில் வெளியான "தி வே ஹோம்" படத்தின் கதை. இந்த காலத்து சிறுவர்கள் பார்த்து கற்று கொள்ள வேண்டிய படம் என தோன்றியது. பாட்டியாக நடித்த கிம் இந்த படத்தில் தான் முதன்முதலாக நடிக்கிறார் - இது வரை அவர் சினிமாவே பார்த்ததில்லை என்பது என்னும் ஒரு ஆச்சர்யம்!

ப்லோக்பஸ்டரில் இது வாடகைக்கு கிடைக்கும்.

Saturday, June 27, 2009

மீனாவுடன் மிக்சர் - 6 {பாம்பு செவியா? எனக்கா?}


எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னாங்க. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம். மனசுக்குள்ளே நான் சிரிச்சுண்டேன். ஒரு இருபது வருஷத்துக்கு முன் என் காது அடிச்ச கூத்து இவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை. சரியா சொல்லணும்னா என் காதை வச்சுண்டு என் அம்மாவும், ஒரு காது மூக்கு தொண்டை வைத்தியரும் அடிச்ச கூத்துன்னு சொல்லணும். எனக்கு காது சரியா கேக்கும்னு நம்பிக்கை போய் வீட்டுல எல்லோரும் Charades விளையாட்டு ஆடி சைகை செய்ய பழக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாருங்களேன். சுருக்கமா சொல்லணும்னா.......அனாவசியமா எதுக்கு சுருக்கணும்? அப்புறம் பதிவை நான் எப்படி ஜவ்வாட்டம் இழுக்கறது? முழுசாவே சொல்லறேன். கேளுங்க.

----------------------------------------------

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே எனக்கு முணுமுணுன்னு ஒரே காது வலி அன்னிக்கு. பையை வீசி விட்டு நேரா அம்மாகிட்ட போய் சொன்னேன். அம்மியில் ஏதோ துவையல் அரைச்சிண்டு இருந்த அம்மா நொடியில் டாக்டரா மாறி "மார்கழி மாச குளுரில் ஜில்லுனு தண்ணியில் காலங்கார்த்தால தலைக்கு குளிக்காதேன்னு நான் சொன்னா யார் கேக்கறா? அதான் சளி பிடிச்சு காது வலிக்கறது" அப்படீன்னு பளிச்சுன்னு டியாக்னோசிஸ் கொடுத்தா. "அதெல்லாம் இல்லைம்மா. காதுக்குள்ள ஒரு கட்டி இருக்குன்னு நினைக்கிறேன்" ன்னு நான் சொன்னவுடன் அம்மா மட மடன்னு வீட்டுக்குள்ளே போய் டார்ச் எடுத்துண்டு வந்தா .

இதை டார்சுன்னு சொல்லறதை விட பீமனோட கதைன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அத்தனை பெருசா இருக்கும். இந்த டார்ச் கூடிய சீக்கிரத்தில் மைகல் ஜாக்சனை விட பிரபலமாக போகுதுன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. சொர்கலோகத்து கதவு திறந்தால் என்ன மாதிரி ஒளி வரும்னு எங்க வீட்டு டார்ச் லைட் அடிச்சு பார்த்தா உங்களுக்கு புரிஞ்சுடும். டார்ச்சை என் காதுக்குள் அடித்து பார்த்த அம்மா அதிர்ந்து போனாள். "என்னடி இது, பிள்ளையார் சதுர்த்தி வெல்ல கொழுக்கட்டை சைசுக்கு இருக்கு இந்த கட்டி" அப்படீன்னு கவலையில் ஆழ்ந்தாள். இதை தொடர்ந்து நாலு நாட்கள் மஞ்சளும், உப்பும் அரைத்து கை வைத்தியம் செய்து பார்த்து தோற்ற அம்மா இனி டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

எங்க குடும்ப வைத்தியரை பத்தி தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. விடிகாலை சூரியன் உதிக்கும் முன் அவர் க்ளினிக்குக்குள்ளே போய் டென்ட் கட்டி கயித்து கட்டில் போட்டு படுக்க தயாரா இருந்தா தான் அங்கே போகணும். அதுக்கு நேரமோ பொறுமையோ இல்லாமல் நானும் என் அம்மாவும் நாலு தெரு தள்ளி புதுசா திறந்திருந்த ஒரு காது, மூக்கு, தொண்டை வைத்தியரிடம் போக தீர்மானித்தோம். "கோடியாத்து மாமி நேத்தி என் கிட்ட சொன்னா...இந்த டாக்டர் ரொம்ப படிச்சவராம். அதுவும் காதை பத்தி மட்டுமே ரெண்டு வருஷம் தனியா படிச்சிருக்காராம். நிச்சயம் சரி பண்ணிடுவார்." அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த டாக்டரிடம் நேரம் குறித்து கொண்டு ஒரு வழியாக செக்கப்புக்கு போனோம்.

என் அம்மாவை பத்தி ஒரு விஷயம் இங்கே சொல்லணும். கொடுக்குற காசு வீணாகாம டாக்டர்கிட்ட நிறைய கேள்வி கேட்பா. நிறைய விஷயம் சொல்லுவா. இந்த காது டாக்டர் முன் போய் உட்கார்ந்ததும் அம்மா பேச்சை துவங்கினாள். "வணக்கம் டாக்டர். என் பொண்ணுக்கு நாலு நாளா காதுல கட்டி. புதன்கிழமை அன்னிக்கு ஆரம்பிச்சது. அன்னிக்கி கார்த்தால ரசம் சாதம் சாப்டுட்டு போனா ஸ்கூலுக்கு. கொஞ்சம் மாம்பழம் நறுக்கி கொடுத்தேன். அதனால சூடு ஜாஸ்தியாகி இந்த கட்டி வந்ததோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை ஜாஸ்தி டாக்டர். இவள் காதை நன்னா செக் பண்ணி உள்ளுக்கு சாப்பிட நாலு மாத்திரையும், வெளியே தடவ ஒரு களிம்பும் எழுதி குடுத்திடுங்கோ. அடிக்கடி வந்துட்டு போறது கொஞ்சம் சிரமம். ஆனா பாவம் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அதனால பாத்து நல்ல மாத்திரையா எழுதுங்கோ." அம்மா மூச்செடுத்து மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ளே டாக்டர் புகுந்தார். "முதல்ல செக் பண்ணலாம் அம்மா. அப்புறம் எப்படி ட்ரீட் பண்ணனும்னு நான் சொல்லறேன்." என்னை பக்கத்து நாற்காலியில் உக்கார சொல்லி வாயை திறந்து நாக்கை நீட்ட சொன்னார். அவ்வளவு தீவிரமா அவர் என் வாய்க்குள்ளே டார்ச் அடித்து பார்ப்பதை பார்த்தால் கோகுல கிருஷ்ணன் வாய்க்குள் தெரிந்த உலகம் என் வாய்க்குள்ளேயும் தெரியுதோன்னு எனக்கு பயங்கர சந்தேகம். அப்படியே திறந்த வாக்கில் உறைஞ்சு போயிடுமோன்னு பயந்திருந்த என் வாயை ஒரு வழியா மூடிய போது, டாக்டர் டார்ச்சை மூக்கின் பக்கம் திருப்பினார். மூக்கை செக் செய்து விட்டு மருந்து சீட்டு எழுதி அம்மா கையில் கொடுத்தார். "இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு பத்து நாளைக்கப்புறம் வாங்க" ன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சுட்டார். வெளியே வந்த நாங்க குழம்பி போய் நின்னோம். கிளினிக் வாசலில் இருந்த பெரிய போர்டை மறுபடி படித்து பார்த்தால் "காது" டாக்டர்னு தான் போட்டிருந்தது. ஹ்ம்ம்...காதை தவிர மத்ததை தானே இவர் செக் பண்ணினார்? நிஜமாவே பெரிய டாக்டர் தான் போல இருக்கு. கட்டியை பாக்காமலே மாத்திரை குடுத்துட்டாரே?

அடுத்த பத்து நாளும் வீடு ஒரே சர்க்கஸ் தான். மாத்திரை சாப்பிட்டு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது கட்டி சௌபாக்யமா இருந்தது. ஒரு நாளைக்கு நாலு தரம் அம்மா என் காதுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து புலம்புவா. அதோட நிக்காமல் வாசல் கதவை திறந்து உள்ளே வரும் ஒருவரையும் விட்டு வைக்காமல் கூப்பிட்டு "கொஞ்சம் இப்படி வாங்கோளேன். எங்க மீனா காதுல கட்டி. பெரிய காது டாக்டரிடம் காமிச்சும் ஒண்ணும் சரியா போற மாதிரி இல்லை. இதோ டார்ச். மீனாவை கூப்பிடறேன். நீங்க கொஞ்சம் செக் பண்ணுங்கோ, சரியா? மீனா.....இங்க வந்து உன் காதை கொஞ்சம் காமிம்மா." என்னவோ பெருமையா ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து காமின்னு சொல்லரா மாதிரி அம்மா என்னை கூப்பிடுவா. ஒரு நாள் எங்க தெரு கீரைக்காரி கஷ்டப்பட்டு தலையில் இருந்த கூடையை இறக்கி வச்சுட்டு என் காதை டார்ச் அடிச்சு பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நாலு கை வைத்தியத்தை சொல்லிட்டு போனாள். வாசக்கதவு பக்கமா டார்ச் வைக்க ஸ்பெஷல் தட்டு ஒண்ணு கட்டலாமான்னு கூட வீட்டில் பேச்சு நடந்தது. ஒரு வாரம் அம்மா கூப்பிடவுடன் வந்து டார்ச் வெளிச்சத்தில் காதை காமித்து பழகி போய் அப்புறம் நானே வாசக்கதவு திறக்குற சத்தம் கேட்டால் டக்குனு போய் டார்ச் எடுத்துண்டு நின்னுடுவேன்னா பாருங்களேன்.

ஒரு வழியா பத்து நாள் மாத்திரை சாப்பிட்டு முடித்து விட்டு கட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது டாக்டரிடன் மறுபடியும் போனோம். இந்த முறை அவரிடம் காதை எப்படியாவது காட்டி விடணும் அப்படீங்கற தீர்மானத்தோடு போனோம். போய் நாற்காலியில் உட்காரும் போதே திரும்பி காது அவர் கண்ணுக்கு தெரியும் படி உட்கார்ந்தேன். இப்ப அவராலே எப்படி மிஸ் பண்ண முடியும்? ஆனால் அவர் "நேரா உட்கார்ந்து வாயை திறந்து நாக்கை நீட்டும்மா" ன்னாரு. வேறு வழியில்லாமல் அவர் சொன்ன படி உட்கார்ந்தால் பழைய படி தொண்டையையும், மூக்கையும் செக் செய்து விட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சார். நொந்து போய் "டாக்டர், எனக்கு கட்டி காதுல" ன்னு மெதுவா சொன்னேன். "ம்ம் தெரியும்மா. இந்த மாத்திரையை ஒரு அஞ்சு நாள் சாப்பிட்டுட்டு வா. கட்டி கரயலைனா கீறி எடுத்துடலாம்." என்னவோ மைசூர் பாகை கீறல் போடற மாதிரின்னாவது சொல்லறார். அங்கே நாங்க எடுத்த ஓட்டம் எங்க குடும்ப வைத்தியர் கிளினிக் வாசல்ல தான் நின்னுது. என் காது கூத்தை கேட்டு சிரிச்சுண்டே ஒரு களிம்பு எழுதி கொடுத்த எங்க வைத்தியர் "உனக்கு காசு ரொம்ப இருந்தா போய் அட்மிட் ஆகி ஆபரேஷன் எல்லாம் பண்ணிக்கோ. இல்லைன்னா இதை தடவிப்பாரு" அப்படீன்னாரு. ரெண்டே நாளுல கட்டி இருந்த இடம் தெரியாமல் போயிடுத்து. டார்ச்சை நல்லா துடைச்சு உள்ளே வச்சோம். அதுக்கும் தான் பாவம் ஓய்வு வேண்டாமா?

-மீனா சங்கரன்

நலமாய் வாழ பத்து வழிகள்


#அ: நல்ல மருத்துவரை அனுகவும்:
முதலில் அமெரிக்கன் மெடிக்கல் அசொசியோசன் மூலம் நல்ல மருத்துவரை தேர்ந்தெடுங்கள். அவரது அலுவலகம் உங்களுக்கு அருகாமையில் உள்ளதா, நண்பர்கள் பரிந்துரை, போர்டு அங்கீகாரம் பெற்றவரா என பார்த்து தேர்ந்தெடுக்கவும். ஒரு நல்ல மருத்துவர் ஒரு நல்ல வாத்தியாருக்கு இணை. நல்ல மருத்துவரை தேர்ந்தெடுப்பது நல்ல உடல் வளத்துக்கு வழிவகுக்கும்.

#ஆ: கேடு விளைவிக்கும் உணவுகள் தவிர்க்க வேண்டும்:
முதலில் உடலுக்கு கேடு  விளைவிக்கும் ஐந்து உப பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:
காரன் சிரப்:
இது பொதுவாக எல்லா சோடா குளிர் பானங்களிலும் சுவைக்காக சேர்க்கப்படும். இது நமக்கு தேவையில்லாத சர்க்கரையை உடலுக்கு சேர்த்து கேடு விழைவிக்கும்.

சர்க்கரை:
பொதுவாக சர்க்கரை சேர்த்த இனிப்புகளை உண்டவுடன் உங்கள் மூளை "எனக்கு கலோரிகளை கொடுத்துவிட்டாய், ஆனால் ஊட்டப்பொருள் (nutrients) எதுவும் இன்னமும் அனுப்பவில்லை என மேலும் உணவுக்காக ஏங்க ஆரம்பிக்கும்.

பதப்படுத்தப்பட்டவை ("Enriched"):
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (உ.தா. : மேன்படுத்தப்பட்ட கோதுமை ரொட்டி) அதிலுள்ள ஊட்டசத்துகள் இழப்பதால் அதில் செயற்கையான ஊட்டசத்துகள் சேர்க்கின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல.

கொழுப்பு வகை Trans fat:
பொதுவாக உணவுகளை நீண்ட நாட்கள் கெடாமல் வைக்க ஹைட்ரஜன் சேர்த்த கொழுப்பை உபயோகிப்பார்கள். இது முற்றிலும் கேடான பொருள்.

கொழுப்பு வகை Saturated fats:
இந்த வகை கொழுப்புகள் மாட்டு/பன்றி இறைச்சி, பால் உணவுவகைகளில் காணப்படும். இதுவும் நமக்கு நல்லதில்லை.

#இ: உடல் நலனுக்கு உகந்தவை:

அன்டிஆக்சிடன்ட்ஸ் / Antioxidants
தக்காளி, ப்ரக்கலீ, ராஜ்மா கடலை, நீல பெர்ரி, ஆர்ட்டிசொக், ப்ருன் போன்ற பழங்களில் அதிகமாக காணப்படும். இவை ஒரு நாளுக்கு ஐந்து முதல் ஏழு அளவைகள் (serving) சேர்க்க வேண்டும்.
ஒமேகா மூன்று வகை கொழுப்புகள் / Omega-3 Fats
ஒமேகா மூன்று வகை கொழுப்புகள் ப்ளக்ஸ் விதை , வால்நட், சாலமன் மீன், சோயா, ஸ்குவாஷ் காய்கள் முதிலானவற்றில் காணப்படும் நல்ல வகை கொழுப்புகள்.

நார் வகை:
ஒட் மீல், முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், பட்டாணி, பல காய்கறிகள் நார் சத்து நிறைந்தது.

ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் உடலுக்கு மிக உகந்தது.

#ஈ: மல்டி-வைட்டமின்:
மருத்துவரை கலந்தாலோசனை செய்தபின் உங்களுக்கு உகந்த வைட்டமின் மாத்திரைகள் உண்பது நலம். இங்கு எந்த வயதிற்கு என்ன சாப்பிடலாம் என சில ஆலோசனைகள் காணலாம்.

#உ: முக்கியமான எண்கள்:
இடுப்பளவு (பி எம் ஐ), ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், சக்கரை, வைட்டமின் டி, தைராயிட் போன்ற முக்கிய அளவுகோல்கள் உங்களுக்கு உடலில் நடக்கும் மாற்றங்களை உடனே காட்டிவிடும். பெரிய ஆபத்து வருமுன் காத்திடலாம்! நான் இவற்றை கூகிள் https://www.google.com/health - என்ற தளத்தில் இணையத்தில் (பாதுகாப்பாக) சேமித்து வைத்துள்ளேன்.

#ஊ: உடல நல ஆலோசகர்:
உங்கள் மனைவி/கணவர், மகன்/மகள் அல்லது நண்பர் இப்படி யாரவது ஒருவரை உங்கள் நல ஆலோசகராக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை ஊக்கப்படுதுவதுடன் மருத்துவரை தகுந்த கேள்விகள் கேட்டு உங்களுக்கு உதவ முடியும்.

#எ: மருத்துவ கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைக்கவும்
மருத்துவரை பார்த்து வெளிவருமுன் அந்த நாளைய குறிப்புகளை ஒரு பிரதி எடுத்து தருமாறு கேட்கவும். வேறு ஒரு மருத்துவரை இரண்டாம் கருத்து கேட்கவோ அல்லது உங்கள் குடும்ப நல வரலாறு அறிய இந்து உதவும். தற்போது கூகிள் https://www.google.com/health - என்ற தளத்தில் இணையத்தில் சேமிக்கும் வசதியை தந்துள்ளார்கள். சில மருத்துவமனைகள், பார்மசி கூகிள் உடன் நேரடி தொடர்பு கொண்டு உங்கள் நல வரலாற்றினை பரிமாறிக்கொள்ள வழி செய்திருக்கின்றனர்.

#ஏ: மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்யவும்:
வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை, இரு முறை பல் பரிசோதனை, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்தல் நலம். அது தவிர வயதிற்கு ஏற்ப ஆண்/பெண் இன்னும் பல மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். இது குறித்து மேலும் விபரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறியவும்.

#ஐ: உடற்பயிற்சி:
தற்கால கணினி பொறியாளர்கள் "எலியை" நகர்த்துவது தவிர வேறு வேலை எதுவும் உடலுக்கு கொடுப்பதில்லை. நல்ல உணவுடன், தினமும் முப்பது நிமிடம் நடக்க வேண்டும். முடிந்தால் முப்பது நிமிடம் மேல் உடல், கீழ் உடல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலை பலப்படுத்தி தசைகளுக்கு வலுவூட்டும். யோகா போன்ற தியான பயிற்சிகள் செய்தல் மனதை வளமாக வைக்க உதவும்.

#ஒ: தூக்கம்:

மனிதனுக்கு ஒரு நாளைக்கு எழு முதல் எட்டு மணி நேர தூக்கம் மிக அவசியம். #அ முதல் #ஐ வரை இருப்பவை சரியாக பின்பற்றினாலும் தூக்கம் இல்லையென்றால் இவை அனைத்தும் வீணாகிவிடும்.

நன்றி: டாக்டர் ஒஸ். இந்த பகுதி சமிபத்தில் "ஒபரா" வழங்கிய நிகழ்ச்சியிலிருந்து தமிழ் படுத்தப்பட்டது.

Thursday, June 25, 2009

இந்த வார சொர்க்கம்

சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நான் ஒரு சாரண முகாமில் இருக்கிறேன். வர்ஜினியாவின் ப்ளூரிட்ஜ் மலைத் தொடரில் இருக்கும் ஒரு பெரிய சாரண முகாம். புலஸ்கி கவுண்டியில் ஹிவாஸ்ஸி என்ற கிராமத்துக்கு அருகில். மலைகளும் சிறு நதிகளும் நிறைந்த இந்த இடம் இன்னொரு சொர்க்கபுரி.

இணையத்தொடர்பும் அலைபேசி தொடர்பும் வேலை செய்யாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  சொர்க்கத்தை அனுபவிக்காமல் இங்கே என்னய்யா செய்கிறீர்கள் என்பவர்களுக்கு - எல்லாம் உங்கள் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ளத்தான். சொர்க்கத்தின் ஒரு உதாரணம்...


இது என்ன என்கிறீர்களா?

எனது ஊஞ்சலில்(ஹம்மாக்) இருந்து எனக்கு தெரிவதெல்லாம் இதுதான்! போய் இன்னும் இன்றைக்கும் இந்த வாரம் மீதமிருக்கும் வேலைகளை எல்லாம் முடியுங்கள் சரியா? நான் கொஞ்சம் தூங்க வேண்டும்.

அடுத்த வாரம் விவரமாக...


விவரமாக அடுத்த வாரம்.