Wednesday, June 24, 2009

sorry. kozuppu konjam over

சாரி கொழுப்பு கொஞ்சம் ஓவர்
(இந்த கதைக்கும் மீனாவுக்கும் சம்பந்தம் இல்லை. கதையில் வருவன யாவும் கற்பனையே. மீனாவின் அனுபவம் எங்களது கற்பனயில் )
மனைவி மற்றும் குழ்ந்தைகள் அனைவரையும் இந்தியா அனுப்பி விட்டு அடுத்த நாள் கோவிலுக்கு சென்றேன். அங்கு அன்னபூரணியில் மீனாவை சந்தித்த போது அவர்கள் இந்தியா செல்ல இருப்பதாகவும், அவர்களின் சாம்பார் வடை சபதம் பற்றியும் சொன்னார்கள். நானும் அதே நாளில் அதே விமானத்தில் பயணம் செய்கிறேன் என்று சொன்னதும் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனால் சாம்பார் வடை சபதம் மட்டும் எனக்கு உறுத்தி கொண்டு இருந்தது. மனதுக்குள் அதனை சவாலாக எடுத்து கொண்டு, மீனாவை முந்தி விட வேண்டும் என்று நினைத்தவாறே கோவிலை விட்டு வெளியே வந்தேன். எல்லாம் இறைவனின் திருவிளையாடல்.
அது படியே நான் சவாலில் ஜெயித்து விட்டேன். எப்படி என்று தானே கேட்கிறீங்க. அதுக்கு தானே இந்த கற்பனையே.
என் கதையை படிச்சுட்டு நாகு இன்னொரு பஜ்ஜி ன்னு கமென்ட் அடிக்க போறாரு. அவருக்கு கொஞ்சம் லொள்ளு ஓவர் தான். இப்பவே அவருக்காக பஜ்ஜி ஆர்டர் பண்ணி வச்சுட்டேன், கூடவே கொஞ்சம் அல்வாவும், ஏன்னா அவர் வாயையும் திறக்க கூடாதுன்னு தான். தமிழனுக்கு ரொம்ப நல்ல எண்ணம்.
எங்கள் குடும்பம் பாசம் மிகுந்த பெரிய கூட்டு குடும்பம். அதுனால என் அண்ணனிடம் சாம்பார் வடை சவால் பற்றி சொன்னேன். அவர் கவலை படாதேன்னு சொல்லி விமான நிலையத்திற்கு வரும் போதே வாங்கி வந்து விடுகிறேன்னுட்டார். பயண நாளும் வந்தது, சாம்பார் வாடையும கிடைக்க போகுது.
அண்ணன் சொன்ன மாதிரியே வடை வாங்கி வந்து விட்டார். உடனே மீனாவை தேடினேன், அவரை காணவில்லை. சரி என்று நானே சாப்பிட்டு விட்டேன். மீனாவுக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும் என்று தான் ஆசை, அனால் அவர் வீட்டிற்கு போனவுடன் தான் பேச முடியும். மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.
என் முகத்தில் எதையோ சாதித்தது போல ஒரு பெருமை.
காரில் ஏறி வீட்டிற்கு வந்தால் அங்கு ஏக கூட்டம். எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு, ஒரு குளியல் போட்டு வந்து உட்கார்ந்தால், அங்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. என் அம்மாவிற்கு எப்படியோ வடை ரகசியம் தெரிந்து என் மனைவியை திட்டி கொண்டே ஒரு வடை கூட செஞ்சு கொடுக்க கூடாதான்னு சொல்லி கொண்டே வடை சுட்டு வைத்து இருந்தார்கள். பத்து வடையை (சும்மா ஒரு கணக்கு தான்) சாப்பிட்டு விட்டு கூடவே சுட சுட மதுர மல்லிகைப்பூ இட்லி, மல்லி சட்னியுடன் இட்லி பொடியும் சேரவே நாக்குல தண்ணி கொட்ட கொட்ட சாப்பிட்டு எழுந்தேன். சொந்த கதை எல்லாம் பேசி முடிக்க நைட் 2 1/2 மணி ஆயிடுச்சு. அதுக்கப்புறம் தூங்க போய் விட்டேன். காலை முழிச்சு பார்த்தால் மணி 12. வீட்டுல எல்லோரும் பயண களைப்பு என்று சும்மா கண்டுக்காம விட்டு விட்டாங்க. நைட் பட்ட வேதனை எனக்கு தான் தெரியும். எத்தனை தடவ தான் போறது. எனக்கோ யாரோ அமுக்குவது போல ஒரு வேதனை. சத்தம் போட்டு கூப்பிடலாமுன்னு பார்த்ததால் யாரும் வந்த மாதிரி தெரியலை. சிரிக்காதீங்கப்பா, எவ்வளவு வேதனை தெரியுமா.
ஒரு வழியாக என் அம்மா வந்து பார்த்தார்கள். என் நெலமையை பார்த்தட்வுன்ஒரே அழுகை. என்னவோ ஏதோ என்று மற்றவர்களும் மேல வந்தவுடன் சாம்பார் வடையின் விபரீதம் அவர்களுக்கு தெரிந்தது.
என் தங்கையோ ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து, கொஞ்சமா சாப்பிடனும், எதோ காஞ்ச மாடு கம்பம் கொல்லைல பாஞ்ச மாதிரி சாப்பிட்ட இப்படித் தான்.
என் அப்பாவோ, அது என்ன வந்ததும் வராததுமா சாம்பார் வடை. இவனை சொல்லி குத்தமில்ல, இவனுக்கு வடையை வாங்கி கொடுத்தவன தான் சொல்லனும்ன்னு என் அண்ணனுக்கு ஒரு குட்டு வைத்தார். என் அண்ணன் அங்கிருந்தால் வம்புன்னுட்டு உடனே எஸ் ஆயிட்டான்.
இதுக்கு அப்புறம் தான் ரகளையே.
என் அப்பா உடனே காரில் ஏற்றி அவருக்கு தெரிந்த நர்சிங் ஹோம் என்று ஒரு புது ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார். அங்கு அதே அனுபவம் தான். ஆனா ஒரு வித்தியாசம். டாக்டருக்கு தான் அனுபவம் பத்தலை. நம்ம உடம்ப பார்க்காம வேகம் அதிகமா இருக்குற மாத்திரையை கொடுக்க, அது தன வேலையை காட்டிடுச்சு. அலர்ஜி ஆகி, வேற மாத்திரை கொடுக்குறதுக்குள்ள மீனாவோட எல்லா அனுபவமும் அனுபவிச்சுட்டேன்.
நம்மள சமாதான் படுத்த டாக்டரும், நீங்கள் லோக்கல்ல இருந்தா ஒன்னு இரண்டு மாத்திரை கொடுத்து இருப்பேன். ஆனா நீங்கள் வெளி நாடுல இருந்து வந்து இருக்கீங்க, எப்பவாவது தானே வருவீங்க, அதுனால தான் இந்த கம்ப்ளீட் சிகிச்சைன்னு ஒரு சமாளிப்பு. அடுத்து கிரெடிட் கார்டு நம்பர் கேட்டாரு, அது எல்லாம் எடுத்து வரலைன்னு நானும் பதிலுக்கு ஒரு சமாளிப்பு ( எப்படி நம்ம திறமை) சமாளிச்சுட்டு வந்துட்டேன்.
ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தா, என் அம்மா கையில ஆரத்தி தட்டும் எலுமிச்சம் பழமும் நின்னு கிட்டு யாரையோ திட்டி கொண்டே இருந்தாங்க. எந்த பாவி கண்ணு பட்டுதோ, வந்ததும் வராததுமா இப்படி ஆயிடுச்சே.
ஆரத்தி எடுத்த கையோட, திருப்பதிக்கு மொட்டை போடனும்னு வேண்டிகிட்டங்க.
அடுத்த நாள் என் அண்ணனோ அவன் ஒரு ஹோமியோபதியை கூட்டி வந்து இருந்தார். அவரும் கை பிடித்து பார்த்து விட்டு சில மாத்திரைகளை கொடுத்தது விட்டு சாப்பாட்டில கவனமா இருக்க சொல்லிட்டு போய்ட்டாரு.
இது இப்படி இருக்க என் சித்தி விஷயம் அறிந்து ஒரு பச்சிலை வைத்தியரை கூடி வந்து விட்டார்கள். அவரும் கதையை எல்லாம் கேட்டு விட்டு, ஒரு தொக்கு எடுத்தால் சரி ஆகிவிடும் என்று வயிற்றை சுற்றி சாம்பல் தடவி தொக்கு எடுத்து சென்றார். ( இந்த வழி இன்னும் போக வில்லை)
என் அப்பவோ ஒரு படி மேல போய் ஜோசியரை கூடி வந்து விட்டார். ஆயுள் பலம் பற்றி கேட்டு விட்டு ஏதாவது பரிகாரம் உண்டான்னு கேட்க, ஜோசியரும் குசியாக தண்ணீரில் கண்டம் இருக்கு, வெறும் பிஸ்லேரி தண்ணி மட்டும் குடிக்க சொல்லி விட்டு அவர் பையை நிரப்பி விட்டு சென்றார்.
அடுத்த நாள் என்ன நடக்கும் என்று யோசிப்பதற்குள் காலையிலேயே உடுக்கை சத்தம் கேட்டது. என்னடாவென்றால் என் பாட்டி அவர் பங்கிற்கு ஒரு மாந்த்ரிகரை கூட்டி வந்து இருந்தார்கள்.
அவன் இது ஒரு செய்வன, நான் சாப்பிட்ட வடையை எடுத்து விட்டால் சரி ஆகி விடும் என்றான். சாப்பிட்டு மூணு நாளாச்சு, இப்ப எடுக்க போறாரா? நம்ம பேச்சை யார் கேட்க போகிறார்கள்? என்னால் ஒன்றும் பேச விடாமல் தண்ணீரை எடுத்து என் மேல் தெளித்தான்.
எப்படி என் வாயில் வடையை திணித்தான் என்று யோசிப்பதற்குள் வடையை வாயில் இருந்து எடுத்து எல்லோரிடமும் காட்டினான். என் பாட்டிக்கோ ஓர் சந்தோசம். செய்வன வடையை எடுத்தாச்சு என்று.
நல்ல வேளை, நான் 10+2 வடை சாப்பிட்டத சொல்லலை. சொன்ன இன்னும் 11 வடையை எடுக்கணும்ன்னு சொல்லி கொடுமை படுத்தி விடுவான். எப்படி நம்ம அறிவு. என் அண்ணனோ இது வேற வடை மாதிரி இல்ல இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருந்தான்.
இதுக்கு மேல் இங்க இருந்தா பைத்தியம் பிடித்து விடும் என்று மாமனார் வீட்டிற்கு வந்தேன். அங்கு வந்தால் மனைவியும், குழந்தையும் ஓர் அழுகை. எனக்கு ஒன்றும் இல்லை என்று சமாதானப் படுத்தும் போது, என் மனைவி சொன்னாள். அதுக்கெல்லாம் நாங்க அழவில்லை. நான் இப்படி இருக்கறதால அவர்களால் எங்கும் செல்ல முடிய வில்லையாம். இந்தியா வந்ததே வேஷ்ட்டுனு சொல்லி மீண்டும் ஓர் அழுகை.நம்ம என்ன செய்யறது, அவரவர் கவலை அவரவர்க்கு.
உள்ளே சென்ற மனைவி கையில் ஒரு லிஸ்டுடன் வந்தால். உங்கள் இரண்டு வார லீவு முடிய போகுது, அங்க இங்க சுத்தாம இதுல இருக்குறதா வாங்கி பேக் பண்ணுங்க. மறந்துறாம அமெரிக்க எடுத்துட்டு போங்கன்னு ஒரு அட்வைஸ்.
சரின்னு தலையை ஆட்டி விட்டு வீட்டுக்கு வந்தேன். என் அம்மா வேண்டுதலை நிறைவேத்தாம ஊருக்கு போக கூடாதுன்னுட்டு திருப்பதிக்கு டிக்கெட் புக் வேற பண்ணி வச்சுட்டாங்க. எனக்கோ முடி கொஞ்சம் கூட இல்லை. இதுல எங்க போய் மொட்டை போடறது. இறைவா இது எல்லாம் உன் திருவிளையாடல் தானே. அடுத்த தடவையாவது நல்ல சாப்பாடு கிடைக்க வழி செய்யப்பா என்று வேண்டி கொண்டே பேக் பண்ண ஆரம்பித்து விட்டேன்.
இன்று வரை உடம்பு சரி இல்லாததால் மீனா கூட கால் பண்ணி பேச கூட முடியவில்லை.
கொழுப்பு கொஞ்சம் ஓவர் தான்னு மீனாவோட புலம்பல் கேட்குது. அதுனால கற்பனையை இப்படியே ஓரம் கட்டி வச்சுட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமாயிட்டேன்.
- வேதாந்தி

Saturday, June 20, 2009

மீனாவுடன் மிக்சர் - 5 {வைத்தியரே! என்னைய வச்சு காமடி கீமடி பண்ணிறாதீங்க ஐயா)

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன். அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம். விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம். இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க. இது ஒரு சோக கதை. இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க. ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான்.

பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன். விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு. என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள். அது என்ன நகைக்கடை? அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு. அவளுக்கென்ன தெரியும்? இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன். இருந்தா முடிய மாட்டேனா? வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்? சரி அது போகட்டும். சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன். என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன். இது வரையில் என் சபதம் வெற்றி தான். அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.

என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன். திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம். எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். என் போறாத நேரம், என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு. சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45. கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது.

இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும். இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு. வைத்தியரை பார்க்கும் அறை. ஊசி போடும் அறை. மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள். ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள். மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன். இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார். அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார். பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும். ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி. பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?

என் விஷயத்துக்கு வருவோம். நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை. சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று. பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது. உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள். நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு. அசந்தே போனேன் நான். இவரென்ன தீர்கதரிசியா? நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை. அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை. அதுக்குள்ள அட்மிஷனா? அரை நொடியில் வீல் சேர் வந்தது. நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள். அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது. சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை. திடுக்கிட்டு போனேன். என்ன செய்யறது? சரி நம்ம குடும்ப பாட்டை பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது. நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா.

அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம். கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள். பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பயங்கர சந்தேகம். இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு. கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு வாய் திறக்காமல் படுத்திருந்தேன். குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா? உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார். கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன். உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு. இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சொகுசா தங்கிட்டு போக. "அதெல்லாம் வேணாம் டாக்டர். நாலு மாத்திரை எழுதி குடுங்க. நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன். ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர். "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்? நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான் கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது. அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி. திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு. நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு. அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க. எது எப்படியோ வைத்தியர் நல்லவர். மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

---------------------------------------

அவ்வளவு தாங்க என் சோக கதை. கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.

-மீனா சங்கரன்

அப்பாக்கள் தினம்

அப்பாவின் பேச்சுக்கள் எல்லாம் அனத்தல் என்று தான் தெரியும் ஆனால் அது அவரது ஏக்கம் என்று யாருக்கும் புரியாது. இன்றைக்கு அப்பாக்கள் தினம். எல்லோருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் அவர்களது பெற்றோர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தான். அப்பாக்கள் தினத்தன்று உன் அப்பாவிற்கு எதாவது செய் என்று கூறினேன். அவனோ என்னை ஒரு வித்தியாசமாக பார்த்தான். அது எல்லாம் அமெரிக்கர்களுக்கு தான் பொருந்தும் நமக்கு ஒன்றும் இல்லை.
நானும் யோசித்தேன், நாம் அப்பாவிற்கு சிறப்பாக என்ன செய்தோம் என்று. பணம் அனுப்புவதைத தவிர அவருடைய அன்றாட தேவைகளைப் பற்றி நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நண்பர்களே இந்த நாளில் ஒரு வாழ்த்து சொன்னால் கண்டிப்பாக அவரின் மனம் குளிரும். இதில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என்று பேதம் பார்க்க வேண்டாம்.
இந்த உண்மை நிகழ்ச்சியை கேட்டால் நீங்கள் அப்பாவின் அனத்தலை புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். ஆனால் வந்த இரண்டாவது மாதமே மிக சோகமாக இருந்தான். காரணம் கேட்ட போது அவன் தந்தை தவறி விட்டார் என்று தெரிய வந்தது. அவனை ஆறுதல் தேற்ற எப்படி இறந்தார் என்று கேட்க அவன் குமுறி குமுறி அழுக ஆரம்பித்து விட்டான். இறுதியில் அவன் அமெரிக்கா வந்ததால் தான் இறந்து விட்டார் என்றான். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. மகன் அமெரிக்கா வந்தால் அப்பாக்கள் சந்தோசம் தானே படுவார்கள். இவனோ இப்படி சொல்லுகிறான் என்று குழ்ப்பம்.
மீண்டும் அவனை விசாரித்தேன்.
நீண்ட நாள் முயற்சியில் ஒரு நாள் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் மிக்க சந்தோசம். பையன் முதன் முதலாக வெளிநாடு செல்லுகிறான் என்று பெருமிதம். அவனுக்கும் அது தான் முதல் பயணம். வீட்டை விட்டு வெளியில் செல்லாத ஒருவனுக்கு விமானம் ஏறி வெளிநாடு செல்லப்போகிறான், அவன் அப்பாவிற்கு ஒரு வித பயம் கலந்த சந்தோசம். பயத்தை வெளிக்காட்டாமல் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மிக்க ஆர்வமாயிருந்தார். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். அவனுடன் அவன் அப்பாவும் வழியனுப்ப சென்னை வந்தார். விமான நிலையத்திற்கு மிக முன்னதாகவே வந்து விட்டார்கள். டிக்கெட்டை செக் இன் பண்ணும் போது அதிகாரிகள் அன்று பயணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். அவனுக்கோ தலை சுற்றியது. கரணம் விசாரித்தால் டிக்கெட் ரீ கன்பர்ம் பண்ண வில்லை என்று சொல்லி விட்டனர், மேலும் 48 மணி நேரம் கழித்து தான் பயணம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர்.
அவனும் அவனது தந்தையும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வழியாக அதிகாரிகள் நண்பனுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இவனும் அப்பாவை ஊருக்கு போக சொல்லி விட்டு இரு நாட்கள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரத்தில் அவனுடைய அப்பாவிற்கு இதய வலி. காரணம் அவன் முதற் பயணம் தடை பட்டு விட்ட கவலையிலும், மகனை பிரிந்த கவலையிலும் இதய வலி வந்து விட்டது. அது நாளடைவில் அவரை நிரந்தரமாக பிரித்து விட்டது.
ஒரு வேளை நண்பன் இங்கு வராமல் இருந்தால் அவனது தந்தை உயிரோடு இருந்திருப்பாரோ?

வேதாந்தி

அரசியல்வாதி

தினசரி பத்திரிக்கையில் ஒரே பரபரப்பு. அன்றைய தலைப்பு செய்தி இது தான். ஒரு மந்திரியின் மகன் தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கிறான். மந்திரியிடம் பேட்டி. பேட்டியில் மந்திரி தன மகனை ஒரு சாதரண ஏழை குடிமகனாக வளர்ப்பேன் என்று சொல்லிவிட்டார். கட்சியிலும் மற்றும் மக்கள் மத்தியில் மந்திரியின் செல்வாக்கு கூடியது. சில வருடங்கள் கழித்து அதே பரபரப்பு மகனை சாதரண ஒரு ஏழைப பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
மக்கள் மத்தியில் அவர் ஒரு அவதார புருசனாக சித்தரிக்கப் பட்டார். அவர் மகனுக்கோ ஒன்றும் விளங்க வில்லை. என்ன ஆச்சு அப்பாவிற்கு. தன்னை ஏன் இப்படி நடத்துகிறார். ஒரு நாள் அவரிடம் தனியாக சென்று விசாரித்தான். உங்களின் விளம்பரத்திற்கு என்னை ஏன் பலிகடா ஆக்குகிறிர்கள்?
அவரோ பலமாக சிரித்து விட்டு கிறுக்கா உனக்கு ஒன்றும் புரியாது. ஒரு மந்திரியின் மகன் என்றால் அவன் ஒரு இளவரசனுக்கு சமம். அனால் நீயோ ஒரு அனாதைப் பயல். உன்னை நான் தத்து தான் எடுத்தேன். இப்பொழுது புரிகிறதா உன் பிறவிப் பயன். உன் பிறவியால் நான் பயன் பெற வேண்டும் என்று உன் தலைவிதி
அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவர் அப்பா இல்லை ஒரு அரசியல்வாதி என்று.
வேதாந்தி

Friday, June 19, 2009

படம் பாரு கடி கேளூ - 31


சிவப்பு பனியன்: டேய் உயிரை பணயம் வெச்சு வித்தை காட்டறோம்னு தெருவுக்கு வந்து கூட்டம் சேர்த்துட்டோம். ப்ரேக் எல்லாம் செக் பண்ணினியா? பிடிக்குமில்லே?

Thursday, June 18, 2009

பழமொழி வலைமொழி

நம்ம சதங்கா பழமொழி வலைமொழின்னு ஒரு தொடர் ஆரம்பித்து அழைத்திருந்தார். நாம பல பழமொழி தெரிஞ்சவங்களாச்சே,

சான் ஹோசே போனாலும் சன் டிவி விடாது... மாதிரி நிறைய விடலாம்னு பாத்தேன். ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு. இது வலையைச் சார்ந்திருக்கனுமாம். அட தேவுடா.... கொஞ்சம் சுதந்திரமாக விடமாட்டேங்கறாங்கப்பா... சரி கொஞ்சம் எடுத்து விடுவோம்...

புதிய தளத்தில் மீள் பதிவு...
தொடரிருக்கும்போதே தூற்றிக் கொள்.
பதிவு தேய்ந்து டிவிட்டர் ஆன கதை.
பதிவே எழுதாதவன் தமிழ்மண வார நட்சத்திரம் ஆன மாதிரி.
தனிப் பதிவு தொடராகுமா...
வாரமும் ஆச்சு, மாதமும் ஆச்சு, தொடரப் போட்றா சோமாறி (புரியாதவர்களுக்கு - எங்களூரில் மாட்டுப் பொங்கல் அன்று சிறுவர்கள் லாரியில் ஏறி போடும் கோஷங்களில் ஒன்று - போகியும் போச்சு, பொங்கலும் போச்சு. பொண்ண குட்றா பேமானி - ஊருக்கு வெளியே பேமானி கன்னாபின்னா என்று மாறும்)

தமிழ்லயே பதிவு போட வக்கில்லாதவன், காசு கொடுத்து தளம் வைத்து பீட்டர் பதிவு போட்டானாம்.

பதிவு கால்பணம், மக்களைப் படிக்க வைக்க முக்கால் பணம்.

சிறு துரும்பும் பதிவு எழுத உதவும்.

பாஸ்டன் பாலாவ பாத்து டோண்டு சூடு போட்டுக்கிட்டாராம்(பழமொழி சொன்னா கேட்டுக்கனும். சும்மா அர்த்தம்லாம் பாக்கக்கூடாது - ஏதோ தெரிஞ்ச ரெண்டு பேரு - இத வெச்சு காமெடி கீமெடி ஆரம்பிக்க வாணாம்...)

தமிழ் சொல்லிக்குடுக்கறவங்கல்லாம் துளசியல்ல...

செந்தழல் வழி தனி வழி... (தலைவர் சொன்னதெல்லாம் பழமொழிதான்)

அவனே பதிவு எழுதி பின்னூட்டமும் போட்டுக்கிட்ட மாதிரி...

பின்னூட்டம் போட்டு வாங்கி டிராபிக்கில் உய்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் பதிவு ஊசிப்போய் சாவார்.

ஊரான் வீட்டுப் பதிவே, சுட்டியப் போட்டு கலக்கே..

பதிவு எழுத தெரியாதவனுக்கு தமிழில் தட்டச்ச தெரியலன்னு சாக்கு.

ஊரார் பதிவைப் பின்னூட்டம் போட்டு வளர்த்தால், தன் பதிவு தானே வளரும்.

பதிவு செல்லும் பாதை எல்லாம் பின்னூட்டத்துக்கு கால்கள் உண்டு.

தமிழ்மணத்தில் மொக்கைப் பதிவன். (திருப்பதியில்...)

மொக்கைப் பின்னூட்டம் போட்டாலும் அளந்து போடு...

கடைசியாக....

இந்தப் பதிவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா.....!

நன்றி சதங்கா....

Monday, June 15, 2009

சேமிப்பிற்கு சில உபயோகமான வழிகள்!


அமெரிக்க பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போகிறது. இந்த காலத்தில் நம் வாழ்கையில் சில தேவையில்லாத செலவுகளை குறைத்திடவும், சேமிப்பினை அதிகரிக்கவும் சில வழிகளை இங்கு பார்ப்போமா! இது போல உங்களுக்கு தெரிந்த, முயன்ற வழிகளை பின்னூட்டமிட்டால் படிக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

உபயோகமில்லாத பொருட்களை வெளியேற்றுங்கள்:
"கராஜ் சேல்", கிரைக்ஸ் லிஸ்ட் , ஈ-பே போன்ற பல வழிகளில் நீங்கள் உபயோகிக்காத பொருட்களை விற்று காசாக்கலாம். சிலவற்றை உங்கள் அருகிலிருக்கும் குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம். உதாரணத்திற்கு கணினிகள், மின் கருவிகள் போன்றவை சில வருடங்கள் கழித்து அவற்றின் மதிப்பு குறைந்துவிடும். இவற்றை தேவையில்லாமல் வீட்டில் வைத்து குப்பை சேர்ப்பதை விட விற்று காசாக்கலாம் அல்லது குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம்.

பொது வளம்:
பொது நூலகம் ஒரு சிறந்த உபயோகமான "இலவச" வளம்! புத்தகங்கள், ஒளி குறுந்தகடுகள், இலவச வலை உபயோகம், குறைந்த செலவில் அச்சு மற்றும் நகல் எடுக்க வசதி, தனியாக படிக்க அறைகள் மற்றும் பல இலவச சேவைகள் உள்ளன. நீங்கள் கிங்கொஸ் சென்று பிரிண்ட் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு ஐம்பது சென்ட் செலவாகும்! ஆனால் நூலகத்தில் பத்து சென்ட் மட்டுமே!

தொலைகாட்சி மற்றும் டிஷ்:
நாம் தினமும் பார்க்கும் மிக முக்கியமான செய்திகள் மற்றும் நிகழ்சசிகள் (அமெரிக்காவில் மட்டுமே!!) பெசிக் கேபிள் எனப்படும் உள்ளூர் சேனலிலேயே வந்துவிடும். ஆனால் எக்ஸ்-டென்டேட் கேபிள் தேவையில்லாத பல சேனல்கள் கூட்டி விலை மூன்று மடங்காக்கிவிடுவர்கள். தேவையில்லாத டி-வி-ஆர் எனப்படும் கருவிக்கு மாதம் ஐந்து டாலர் வேறு! இப்போது பல சேனல்களின் நிகழ்சசிகள் இணையத்தில் இலவசமாக பார்க்கும் வசதி வந்துவிட்டது. http://www.hulu.com தளத்தில் டிவி நிகழ்சசிகள், சில திரைப்படங்கள் கூட உள்ளன. அதற்கு தேவை ஒரு கணினி (இணைய வசதியுடன்), மற்றும் ஒரு எஸ்-வீடியோ கேபிள். இந்த தளத்தில் கேபிள் டிவி'க்கு மாற்றாக ஆறு வழிகள் தந்துள்ளார்கள், முயன்று பாருங்கள். இதன் மூலம் வருடத்திற்கு முந்நூறு டாலர் வரை சேமிப்பு!

இரண்டாம் கை பொருட்கள்:
கார்கள் மட்டுமின்றி, வீட்டுக்கு தேவையான மேஜை போன்றவை சில சமயம் மிக குறைவான விலையில் craigslist.com போன்ற தளத்தில் பார்த்து வாங்கலாம். பல நல்ல பொருட்களுடன் சில சமயம் தரம் குறைந்தவையும் வருவதால் மிக கவனமாக சோதித்து பார்த்து வாங்குதல் நலம். எங்கள் தமிழ் சங்கத்திற்கு வாங்கிய முநநூறு டாலர் மதிப்புள்ள கம்பியில்லா ஒலி வாங்கி (wireless lapel mic) வெறும் எழுபத்தி ஐந்து டாலர் மட்டுமே!

அலைபேசி:
கர்ணனுக்கு கவச குண்டலம் போல மனிதனுக்கு அலைபேசி மிக அத்யாவசியமானதாகிவிட்டது. நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் சில சமயம் அலைபேசி நிறுவனங்களுடன் தள்ளுபடி விலையில் வழங்க வகை செய்திருக்கலாம். அப்படியில்லையேன்றால், http://www.freelancersunion.org/ என்ற தளத்தில் நிங்கள் ஒரு "சுதந்திரமாக தொழில் செய்பவர்" என பதிவு செய்து T-Mobile அலைபேசி மாத சந்தாவில் பத்து சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். (பிற அலைபேசிகளுக்கு இது போல இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டமிடவும்). இந்த தளத்தில் இன்னும் பல நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தங்கள் சேவையை வழங்குகிறது. என்னுடைய அலைபேசி சந்தாவில் இதனால் மாதத்திற்கு ஆறு டாலர் சேமிப்பு!

கிரெடிட் யூனியன்:
உங்கள் அருகில் இருக்கும் credit union வங்கிகளில் பல நல்ல சேவைகள் இலவசமாக கிடைக்கும். இதில் சேர ஒரு அறிமுக உறுப்பினர் அல்லது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தார் அந்த வங்கியுடன் இவ்வகை ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நான் https://www.penfed.org/ என்ற வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். அவர்களது கடன் அட்டை மூலம் உங்கள் அலைபேசி மாத சந்தாவை கட்டினால், உங்கள் அலைபேசிக்கு இலவச காப்பீடு தருகிறார்கள். இதன் மூலம் அலைபேசி தொலைந்தாலோ, உடைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ உங்களுக்கு பகுதி பணம் திரும்ப கிடைக்கும்! (மேலும் விபரங்களுக்கு https://www.penfed.org/pdf/accountsforms/CellPhoneProtectDisc.pdf). இதே கடன் அட்டையின் மூலம் வாகன எரிவாயுவிற்கு பணம் கட்டினால், ஐந்து சதவிகிதம் கட்டண தள்ளுபடி அந்த மாத இறுதியில் திருப்பி கொடுக்கிறார்கள்! இந்த கடன் அட்டைக்கு மாத சந்தா எதுவும் இல்லை.

ஆக்டேன் ரேடிங்:
வாகன எரிவாயு நிரப்பும் பொது மூன்று விதமான ஆக்டேன் ரேடிங் இருப்பதை பார்க்கலாம். பொதுவாக விலை அதிகமாக இருப்பதுதான் நல்ல எரிவாயு என சிலர் நம்பி அதிக விலை கொடுத்து நிரப்புவர். உங்கள் வாகனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குறைவான ஆக்டேன் ரேடிங் எரிவாயு நிரப்பினால் போதுமானது! பல வாகனங்களுக்கு ஆக்டேன் ரேடிங் 87 போதுமானது! அது தவிர சக்கரங்களில் சரியான அளவு காற்று நிரப்புதல் எரிவாயு சேமிப்பிற்கு உதவும்!

மாத சந்தாவா அல்லது வருட சந்தாவா!:
சில சமயம் வருட சந்தா கட்டினால் பல நிறுவனங்கள் கட்டணத்தில் தள்ளுபடி செய்வார்கள்! உதாரணத்திற்கு, வாகன காப்பீடு ஆறு மாதம் ஒரு முறை கட்டினால் மாதத்திற்கு பத்து டாலர் வரை சேமிக்கலாம்! அது தவிர வருடத்திற்கு ஒரு முறை உங்கள் வாகன காப்பீடிற்கு மற்ற நிறுவனங்கள் குறைவாக கொடுகின்றர்களா என பார்த்து கொண்டிருக்கவும். பல சமயம் புது வாடிக்கையாளர்களை கவர பல தள்ளுபடிகள் கொடுக்கலாம். கய்கோ நிறுவனத்தின் காப்பீடில் நான் penfed.org credit union உறுப்பினராக இருப்பதால் மாதம் பத்து டாலர் வரை தள்ளுபடி கொடுத்தார்கள்! அது தவிர நீங்கள் வருடத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சந்தா அமையும். அதனால், ஆரம்பத்தில் நீங்கள் சற்று குறைவான தூரம் கொடுப்பதனால் கட்டணத்தில் சேமிக்கலாம்.

தண்ணீர் தண்ணீர்:
அமெரிக்காவில் ஒரு காலத்தில் தண்ணீரும் எரிவாயுவும் ஒரே விலை இருந்தது! இப்போதும் தண்ணீரை பலர் காசு கொடுத்து பாட்டில்களில் வாங்குகின்றனர். அந்த பாட்டில்களில் நீர் எங்கு பிடிக்கப்பட்டது என எழுதியிருப்பதை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். பல நிறுவனங்கள் நகரின் குடிநீரை மேலும் சுத்தப்படுத்தி பாட்டில் அடைத்து விற்கின்றனர்! இதற்கு நம் வீட்டு குழாயில் வரும் நீரை பில்டர் செய்து குடிக்கலாம். அல்லது அருகாமையில் இருக்கும் கடைகளில் குறைவான விலையில் உடனடி பில்டர் செய்த நீரை விலைக்கு வாங்கலாம். அது தவிர உணவகங்களில் கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் வாங்காமல் நீரை பருகினால் உடலுக்கும் நல்லது, நம் பர்சுக்கும் நல்லது!

முயன்று பாருங்கள்!

Saturday, June 13, 2009

படம் பாரு கடி கேளு - 30


சார், ஆனியன் ஊத்தப்பமா வெஜிடபிள் ஊத்தப்பமா?

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

Thursday, June 11, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஆறு)

சார்ஜர்களும் கேபுள்களும் (Chargers and Cables)

ஒரு பிரயாணம்னு வந்தா, நமக்கு வேண்டிய சாமான்களை பாக்கிங் செய்வதை விட ஒரு கொடுமை என்ன தெரியுமா? இந்த சார்ஜர்களும் கேபுள்களும் தாங்க. இதில் தான் எத்தனை விதம். எத்தனை ரகம். இதோ எங்களது பெட்டிகளில் குமிந்திருப்பதன் பட்டியல்.

சார்ஜர்கள்:

  1. செல் போன் (2)
  2. காம்கார்டர் (1)
  3. டிஜிட்டல் கேமரா (1)
  4. எனது MP3 பிளேயர்
  5. மனைவியின் MP3 பிளேயர்
  6. மகனின் MP3 பிளேயர் 
  7. கணினி
கேபிள்கள்
  1. USB கேபிள் (2)
  2. செல் போன் சிங்க்-அப் கேபிள் (1)
  3. ஆடியோ வீடியோ கேபிள் (காம்கார்டர்) (1)
  4. ஒவ்வொரு MP3 ப்ளேயருக்கும் ஒரு காதொலி (head set) ( 3 )
  5. கணினிக்கு தேவையானவை.
என்று அடிக்கிக்கொண்டே போகலாம்....


இன்னும் சற்று முடி கொட்டிய நிலையில்,

நாராயணன்.