Monday, March 17, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 20

புத்தக விமர்சனம்

God Father
இந்த புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை படித்தேன். இது ஒரு சரித்திர ப்ரசித்தி பெற்ற கதை. வரிக்கு வரி (சில வரிகள் R ரகம் அவை தவிர மற்ற வரிகள்) எல்லாமே அருமையான வரிகள். நாயகன் கதை இந்தக் கதையின் உல்டா இல்லை, அது 80 களில் தாராவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் கதையும் இல்லை என்று கமலும், மணிரத்தினமும் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்கள். அதை நம்பி விடுங்கள். இந்தக் கதை பற்றியோ, அந்தத் திரைப் படம் பற்றியோ நான் எழுதப் போவதில்லை. ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு திரைக்கதையை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு. கதாபாத்திரங்களின் படைப்பு, அவர்களின் குணாதிசயங்கள், காட்சிகளின் தொகுப்பு என்று வரிக்கு வரி படிப்பவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் என்று கதாசிரியரின் சாமர்த்தியம் நம்மை ப்ரமிக்க வைக்கிறது.


Shall we tell the President
இந்த புத்தகத்தை பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அன்று இருந்த அதே விறுவிறுப்பு இன்றும் இருப்பது ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். கதை: அமெரிக்க அதிபரை கொலை செய்ய நடக்கும் முயற்சியும் அதைத் தடுக்க முயலும் அதிகாரிகளும் பற்றிய கதை.

இதைப் படிக்க ஆரம்பித்ததும் நண்பரிடம், "கதை என்ன விறுவிறுப்பு தெரியுமா, அன்னிக்கு படிச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கு" என்று பெருமையாக பீத்திக்கொண்டேன். அதற்கு அவர், "நீ, இதுக்கு முன்னாடி புத்தகமே படிச்சதில்லையா? குப்பை எழுத்தாளருக்கெல்லாம் இப்படி வக்காலத்து வாங்கரே? என்னவோ கிறுக்கரேன்னு சொல்லிட்டு, புத்தக விமர்சனம் சமீபத்தில பண்ணினியே, அந்த தமிழ் கதையாவது படிச்சுட்டு எழுதினியா, இல்லை கேட்டுட்டு எழுதினியா? என்றார். சொடேர் சொடேர் என்று யாரோ தலைமேல் போட்ட மாதிரி இருந்தது. நாம என்னவோ பெரிய பருப்பு மாதிரி விமர்சனம் எழுதறோம், ஆனா யாரும் இப்படி செவிட்டு இழுப்பு இழுக்கலையே ஏன் -ன்னு கொஞ்சம் யோசிச்சேன். பொழச்சுப் போறான் கொழந்தைப் பய-ன்னு விட்டுட்டாங்க போல இருக்கு சரி இனிமே கொஞ்சம் ஜாக்ரதையா எழுதனும்னு முடிவு பண்ணியிருக்கேன். முடிவு பண்ணினா மாதிரி, கதையை பொறுமையா படிச்சு முடிச்சேன். அதுல நண்பர் சொன்ன பல விஷயங்கள் புரிஞ்சுது.

முன்பு படித்ததற்கும் இப்போதைக்கும் பல வித்தியாசங்கள், ஒன்று - கதையில் இருக்கும் அதீத ஓட்டைகள், இரண்டு - அதை அடைக்க முயலாத கதாசிரியர், மூன்று - தேவையில்லாத கதைத் தொகுப்பு, நான்கு - பரமார்த்த குருவின் சீடர்கள் போல உள்ள மத்திய புலனாய்வுத் துறை. நம்மூரில் எஸ்.ஏ. ராஜ்குமார் என்று ஒரு மகானுபாவர் இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு பின்னனி இசைதான் போடுவார், அதையே படம் முழுக்க ஓட்டுவார். அது மாதிரி, இந்தக் கதையில் மாத்தி மாத்தி, "Sir Shall We tell the President" -ன்னு ஒருத்தர் கேட்டுகிட்டே இருக்கார், என்ன லாஜிக்கோ.

நண்பர் கூடவே, Desmond Bagley-ன் Running Blind படிச்சுட்டு சொல்லுன்னார். நூலகத்தில தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டேன். முதல் பக்கத்திலேயே போட்டு தாக்கியிருக்கார்.

"ஒரு ப்ரேதத்தை சுமந்து இருப்பது ரொம்ப அவஸ்தையான ஒரு விஷயம். அதிலும் இந்தப் ப்ரேதத்திற்கு ஒரு இறப்பு சான்றிதழ் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகு. எந்த மருத்துவரும், ஏன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சற்று முன் வந்த ஒரு மருத்துவரும்கூட இந்த இறப்பின் காரணத்தை சொல்லி விட முடியும். இந்த மனிதன் இருதயம் வேலை செய்யாததால் இறந்து விட்டான்.

இவனுடைய இருதயம் இரத்தத்தை மேலும் கீழும் செலுத்த முடியாதபடி ஒரு கூர்மையான உலோகத்தால் விலாவில் குத்தப்பட்டு, அது இருதயத்தைத் துளைத்து, இரத்தம் அதிகமாக வெளியேறி இருதயம் துடிப்பது நின்று போய் இறந்து விட்டான்.

நான் இவனுக்காக ஒரு மருத்துவரை தேடப்போவதில்லை, காரணம், இவனைக் குத்திய கத்தி என்னுடையது, அது அவனைக் குத்தும் போது, அந்தக் கத்தி எனது கையில்தான் இருந்தது. ....."

கமல் பாடின மாதிரி, துடிக்குது புஜம், தகிட தத்தீம் தத்தீம் ன்னு மண்டை இடி ஆரம்பிச்சுடுச்சு, இனி அடுத்த 3-4 நாட்கள் தூக்கம் போச்சு, வீட்டு வேலை எல்லாம் நின்னாச்சு, வீட்டுக்காரம்மா திட்டறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாச்சு. இருந்தாலும் படிக்கரத நம்மால நிறுத்த முடியாது. அதனால படிச்சு முடிச்சதும், கதைச் சுருக்கம் எழுதறேன்.

அரசியல் அசிங்கம்
இந்தப் பதிவு வெளியாகும் போது, நியூயார்க் மாநில ஆளுனரின் மீது கொண்டுவரப் பட்டுள்ள குற்றச்சாட்டை அனைவரும் படித்து சீ தூ என இகழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆமா ஜனநாயகக் கட்சில (நாகுதான் மொழிபெயர்த்து சொன்னார் - டெமாக்ரெட்டிக் கட்சின்னா ஜனநாயகக் கட்சின்னு, தப்புன்னா அவரை ரெண்டு தப்பு தப்புங்க) இப்படி கொஞ்சம் ஜொள்ளர்கள் அதிகம் இருக்கரமாதிரி இருக்கே என்ன காரணம். அங்க சில்லறை அதிகமோ? இப்படி ஊரே அந்தச் செயலைப் பற்றி பேசி, வருந்தும் போது, ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் தினசரியில் இது வரை அரசியலில் ப்ரபலமாக இருந்த யார் யாரெல்லாம் இது போல கெட்ட காரியம் செய்து மாட்டினார்கள் என்று விலாவரியாக எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். தேவையா இது?

இதுவே நம்ம ஊராயிருந்தா என்ன ஆயிருக்கும், உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.


யாருக்கும் வெட்கமில்லை.
அ.தி.மு.க சார்ந்த ராஜ்யசபா உறுப்பினராக தன்னை மீண்டும் தேர்வு செய்யாததால், அக்கட்சியின் வழக்கறிஞர் திரு. ஜோதி கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்

"கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது"

என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் 113 வழக்கு இருக்கிறது என்பது என்ன விதமான நல்ல செய்தி என்று தெரியவில்லை, அதை ஒரு பெருமையாக சொல்லக் கூடிய நிலையில் இன்றைய அரசியல் இருக்கிறது. இதற்கு திரு. ஜோதி அவர்களின் பதில் சூப்பரோ சூப்பர். நான் எனது வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவது இது ஒன்றும் முதல் தடவையில்லை. இதற்கு 10 மாதங்களுக்கு முன்பே ஒரு முறை சசிகலாவின் உறவினரின் ஆதிக்கம் அதிகமான போது, நான் எனது பொறுப்புகளையும், கட்சியிலிருந்து விலகுவது பற்றியும் மேலிடத்திற்கு தெரிவித்த பிறகு அவர்கள் என்னை சமாதானம் செய்ததால் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் என்று ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நல்ல கட்சித் தலைமை, நல்ல வழக்கறிஞர். இதைப் படிக்கும் போது 'சோ'வின் "யாருக்கும் வெட்கமில்லை" நாடகத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.


பித்தனின் சங்கு

முதல் சங்கு:
சங்கத்து ப்ளாக் திடீரென மாம்பலம் ரங்கநாதன் தெரு மாதிரி ஆகிவிட்டது. உடனடியாக வேறு சில மாற்றங்கள் செய்து நெரிசலை சமாளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் காதில் போடவேண்டும் என்று தெரியாததால், பொதுவாக சொல்லிவிட்டேன்.


இரண்டாவது சங்கு:
சங்கத்து ப்ளாகில் வரும் சதங்கா மற்றும் கவிநயாவின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட யாராவது ஒரு முயற்சி செய்யலாமே.

மூன்றாவது சங்கு:
கவிநயா, சதங்கா இருவரும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ, கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுக்கச் சொல்லாமே, அதிலும் வெண்பா இலக்கணங்களையும் சொல்லிக் கொடுக்க செய்யலாம். எப்ப பார்த்தாலும் இவங்க ரெண்டு பேர் மட்டும் அழகழகா கவிதை எழுதி போட்டு தாக்கராங்க. நாங்க என்ன செய்யரது.

பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு நாங்க இப்படி ஒரு கவிதை எழுதிடுவோம்.

'நான் காத்து வாங்கப் போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனான்
அந்த வண்ணான் என்ன ஆனான்".

இது எப்படி இருக்கு. கவிதைன்னா சொந்தமா எழுதனும்னு என்ன சாத்திரமா? இப்படி எம்.ஜி.ஆர். பாட்டை ஒட்டி வெட்டி சுயமா ஒரு கவிதை எழுதிடுவோம், தெரியுமில்லை. சீக்கிரமா கவிதை க்ளாஸுக்கு அழைப்பு வரலைன்னா, வாரத்துக்கு ஒரு கவிதையா எழுதிடலாம்னு இருக்கேன். யோசிச்சு முடிவு பண்ணுங்க.



சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
அரசியல் கிரிக்கெட்-ஸ்டாலின் அபார பந்து வீச்சு!
தமிழக முதல்வர் லெவன் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கும் இடையே சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல்வர் லெவன் அணி வெற்றி பெற்றது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து, சிறந்த பவுலர் விருதையும் தட்டிச் சென்றார்.
பேசாம இவரை இந்திய அணியில சேத்து விட்டா, ஒர் நல்ல பவுலர் கிடைச்ச மாதிரியும் இருக்கும் அழகிரிக்கு முதல்வர் வாய்பு கொடுத்தா மாதிரியும் இருக்கும்?
**************************************************************************************நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ரெடி-சரத்குமார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம், நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.என அ.இ.ச.ம. கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அப்படியே எந்த வருஷத் தேர்தலுக்குன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமா டெபாசிட் திரும்ப கிடைக்காதுங்கரதையும் உங்க வேட்பாளர்கள் கிட்ட சொல்லிடீங்களா?
**************************************************************************************
ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்
ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்து இருந்தால், அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசியல் செய்திருப்பார்கள் அதனால்தான் அமைதி காத்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்
அட போங்கப்பா சும்மா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. நமக்கு இருக்கர ஒரு ஓட்டை வெச்சுகிட்டு, ரொம்ப ஓவரா படம் காட்டரீங்க.
**************************************************************************************
அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!
கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.
ஏங்க தி.மு.க மாதிரி ஒரு 55-57 வயசுக்கு யாரையாவது பாருங்க, அதை விட்டுட்டு சின்னப் பசங்களை சேத்து என்னத்த அரசியல் பண்ண முடியும்.
**************************************************************************************
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்
நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஐ! நிஜமாவா சொல்றீங்க. 60000 கோடி கடன் தள்ளுபடி சும்மாவா செய்திருக்கீங்க. ஆமா, அம்மையார் கிட்ட கேட்டுட்டுதானே சொல்றீங்க.
**************************************************************************************
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

4 comments:

  1. நீங்கள் சொன்ன இரண்டு புத்தகங்களையும் படித்ததில்லை. டெல்லியில் பணிபுரியும்போது புத்தகங்களையே பார்க்காத ஒரு ப்ஞ்சாபி சக ஊழியன் படித்த ஒரே ஆங்கில புத்தகம் அதுதானாம். நான் படிக்காததற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம் :-)


    //ஆமா ஜனநாயகக் கட்சில (நாகுதான் மொழிபெயர்த்து சொன்னார் - டெமாக்ரெட்டிக் கட்சின்னா ஜனநாயகக் கட்சின்னு, தப்புன்னா அவரை ரெண்டு தப்பு தப்புங்க) இப்படி கொஞ்சம் ஜொள்ளர்கள் அதிகம் இருக்கரமாதிரி இருக்கே என்ன காரணம். //

    ஏனய்யா என்னை மாட்டி விடுகிறீர்கள். நாந்தான் கூடவே சொன்னேனே தமிழில் நான் சொன்ன பெயர்கள் இரண்டையும் ஒரே வரியில் எழுதினால் யாரைச் சொல்கிறோம் என்றே தெரியாது என்று...


    என்னைப் பொருத்தவரையில் இந்த ஜொள்ளு விஷயத்தில் மனிதர்கள் bipartisanதான். கட்சி எல்லையெல்லாம் கலந்து ஜொள்ளுஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்கள். குடியரசுக் கட்சியில் பஞ்சமா என்ன - சமீபத்தில் ஒரு செனட்டர் விமானநிலையத்து கழிப்பறையில் ஆண்களுடன் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார். ராஜினாமாகூட செய்யவில்லை இன்னும். வடகரோலினாவின் மூத்த செனட்டர் ஒருவர் இறந்த பிறகுதான் அவர் நடத்திய லீலைகள் அம்பலமாகியிருக்கின்றன. ஜெஃபர்ஸன் முதல் கிளிண்டன் வரை இது எல்லாம் தனிமனிதனின் லீலைகள். கட்சிகளில் அதற்காக குழுக்கள் இருக்கிறார்போல தெரியவில்லை :-)


    நியுயார்க் விஷயத்தில் என்ன தமாஷ் என்றால் மீடியாவிற்கு அவர் அவ்வளவ் செலவு செய்ததுதான் உறுத்துகிறது போலிருக்கிறது.


    நம்ப ஊராயிருந்தா என்ன ஆகியிருக்கும். தகுதிகளில் ஒன்று சரி என்று மக்கள் டிக் மார்க் அடித்துவிட்டு டீவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


    பித்தரே - படிக்கும்/எழுதும் நான்கைந்து பேரைக் கேட்காமல் ரங்கநாதன் தெருவாக்கியது தவறுதான். கொஞ்சம் மாற்றலாம் என்று 'யாரோ' நினைத்தார்கள் போலிருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? பழையபடியே போய்விடலாமா? மூன்று பட்டை முக்கியமான விஷயத்தை குறுகலாக்கிவிடுகிறது. இன்னும் கொஞ்சம் சரி செய்யவேண்டுமென்றால் கொஞ்சம் CSS தெரியவேண்டும். அதெல்லாம் நமக்கு கற்பூரவாசனை.



    பித்தரே - உம்ம பள்ளிக்கூட கவிதையெல்லாம் எடுத்துவிட்டால், எங்க ஊர் கபடி விளையாட்டு கவுஜ எல்லாம் வெளியே வரும் என்று எச்சரித்துக் கொள்கிறேன். மாதிரி: தென்னந்தோப்புல தயிரு விக்கற பொம்பள... :-)

    ய்

    ReplyDelete
  2. இந்த ஆளைவிட போன ஆளே தேவலாம் போல இருக்கு...

    http://www.usatoday.com/news/politics/election2008/2008-03-17-paterson-affairs_N.htm

    ReplyDelete
  3. ஏங்க பித்தன். கிறுக்குறது கிறுக்கறீங்க. இப்படியா வம்புல மாட்டி விடறது. ஏதோ கவிதை என்று நாங்க கிறுக்கிக் கொண்டிருக்கிறோம். அது பிடிக்கலையா :))

    ReplyDelete
  4. //இதுவே நம்ம ஊராயிருந்தா என்ன ஆயிருக்கும், உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.//

    "யாருக்கும் வெட்கமில்லை"ன்னு எங்க ஊர் பித்தர் இன்னொரு கிறுக்கல் எழுதியிருப்பாரு!

    அப்புறம்.. கவிதையெல்லாம் சொல்லிக் கொடுத்தா வருமான்னு தெரியல. உதாரணத்துக்கு சொல்றேன் - என்னதான் சொல்லிக் கொடுத்தாலும் எனக்கெல்லாம் உங்கள மாதிரி 'அழகா' கிறுக்க வராது! :) வெண்பா விதிகள் வேணுன்னா சொல்லுங்க - அனுப்பி வைக்கிறேன்...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!