Monday, June 08, 2009

நமட்டுச் சிரிப்பு

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கையில் வேலை, சம்பாத்தியம் என்பது பற்றி பேச்சு வந்தது. எதற்காக சம்பாதிக்கிறோம்? என்று பொதுவாக கேள்வி எழ, நானும் முந்திக்கொண்டு செலவழிக்கத்தான்! என்றேன். அந்த பெரியவரும் விடாமல் எதற்கு செலவழிக்கனும்? என்று கொக்கி போட, நானும் உடனே வாழத்தான்! என்றேன். பெரியவர் சிறிது நேரம் மௌனித்து ஒரு நமட்டுச் சிரிப்பு உதிர்த்து விட்டு வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றினார்.

அன்று இரவு படுக்கையில் அந்தப் பெரியவரிடம் பெசியனவற்றை மனது லேசாக அசை போட.. ஏதோ ஒன்று மனதுக்கு புலப்படாமல் தொல்லை தந்தது. அந்த பெரியவரின் நமட்டுச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? பதில் காண முயன்றும் முடியாமல் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு எப்படியோ தூங்கிப்போனேன்.

மறுநாள் காலையில் வீட்டின் அருகில் இருந்த காபிக் கடைக்கு வாகனத்தில் சென்று சூடாக ஒரு காபி வாங்கி 5 வெள்ளி மொழி எழுதி விட்டு காபியை சுவைத்துக்கொண்டு இருக்கையில்..அந்தப் பெரியவரின் நமட்டுச்சிரிப்பு திரும்பவும் நினைவில் வந்து தொல்லை தந்தது. பதில் தெரியாமல், ஏன்டா அந்தப் பெரியவரிடம் பேசினோம் என்று நொந்து கொண்டு, வேக வேகமாக காபியை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். சமையல் அறையிலிருந்து "பால் தீர்ந்துவிட்டது. தயிர் போட பால் வேண்டும். கொஞ்சம் சீகிரமாய் போய் வாங்கிட்டு வாங்க" என்று மனைவி அறைய, உடனே வாகனத்தை கிளப்பி Costco விற்கு விட்டேன்.

கடைக்கு உள்ளே நுழைந்ததும், பள பளவென மின்னிக்கொண்டு 64 அங்குல HDTV என்னை பார் என்றது. ஆஹா.. நம்ப வீட்ல இருக்கிற 2 தொலைக்காட்சி பெட்டிகளும் வாங்கி 2 வருடம் ஆகிவிட்டதே, மேலும் நமது மூன்றாவது படுக்கை அறையில் தொலைக்காட்சி பெட்டி இல்லையே.. 200 வெள்ளி குறைத்து வேறு போட்டிருக்கான்.. சரி வாங்கு என்று மூளை உத்திரவு போட, முதுகு வலிக்க எப்படியோ அந்த தொல்லைபெட்டியை கூடையில் கிடத்தினேன். அடுத்த சந்தில் நுழைந்தால்.. அங்கு ஒரு நீல நிற சட்டை வா! வா! வசந்தமே என்று கூப்பிட, நானும் நம்பகிட்ட இந்த நிறத்தில் சட்டை இல்லையே என்று யோசித்து, ஒரு சட்டையை எடுத்து கூடையில் வைத்தேன். இப்படி ஒரு வழியாக கடையை ஒரு வலம் வந்து காசாளரிடம் 1200 வெள்ளியை சிரித்துக்கொண்டே கடன் அட்டையில் கொடுத்துவிட்டு வாங்கினவற்றை முதுகு வலிக்க வாகனத்தில் முக்கி முனகி ஏற்றிக் கொண்டிருக்கையில். சிரிப்பு மணிபோல் செல்போன் அடிக்கவே, எடுத்து Hallo கூட சொல்லி முடிக்கலை. அடுத்த முனையில் இருந்து "ஏங்க.. பால் வாங்க போய் ஒன்றரை மணியாச்சி..எங்க இருக்கீங்க?" என்று மனைவி குரல் கேட்டதும் நினைவிற்கு வந்தேன். சிறிது யோசித்து "நண்பர் ஒருவரை சந்தித்தேன். அதான் கொஞ்ச நேரமாகிவிட்டது. இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்" என்று ஒருவழியாக "உண்மை" சொல்லி மூச்சு விட்டதும் பால் வாங்க மறந்தது மூளையை எட்டியது. உடனே அடித்து பிடித்து திரும்பவும் ஓடி ஒரு பால் புட்டியை எடுத்துக்கொண்டு costco வின் திருப்பதி வரிசையில் திரும்பவும் நின்று வாங்கி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். பிற்பகலில் மனைவி எங்கோ போக வேண்டும் என்று சொன்னது நினைவில் வரவே.. வெறும் பால் புட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு வாங்கிய மற்றனவற்றை வாகனத்திலேயே விட்டு விட்டு உள்ளே சென்றேன்.

மதிய உணவு அருந்திவிட்டு மனைவி வெளியே கிளம்பிவிட.. நான் புதிய தொலைகாட்சி பெட்டியை எடுத்துவந்து 1 மணி நேரமாய் மாட்டி விட்டு களைப்பில் சிறிது அசந்து படுக்கையில் சாய்ந்தேன். ஒரு அரை மணி நேரம் தூங்கியிருப்பேன். ஏதோ கெட்ட கனவு வந்து எழுப்பி விட்டது. இரண்டங்கெட்ட நிலையில் உட்கார்ந்திருந்த போது திரும்பவும் அந்த பெரியவரின் நமட்டு சிரிப்பு வந்து எரிச்சலூட்டியது. இதற்கு எப்படியாவது இன்று அர்த்தம் கண்டாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். திரும்பவும் அவருடன் பேசியவற்றை நினைவு கூர்ந்தேன். சம்பாத்யம், செலவழித்தல், வாழ்வதற்கு.. ஒரு வேளை நாம் செலவழிப்பன எல்லாம் வாழ்வதற்காக என்பதில் அந்த பெரியவருக்கு உடன்பாடு இல்லையோ? வாழ்வதற்கு அவசியம் உணவு, உடை, உறையுள்.,,, ஏதோ கொஞ்சம் புரிந்தார் போல் தோன்ற, வேகமாக எனது அலுவலக அறைக்கு சென்று கடந்த இரண்டு மாத வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை அறிக்கையும் எடுத்து ஒவொன்றாக ஆராய்ந்தேன். வீட்டு கடன், வாகன கடன், மளிகை செலவு, துணி செலவு இப்படி நீண்டு கொண்டே போனது. அனால் எல்லாம் இந்த உணவு, உடை, உறையுள் என்னும் வாழ்க்கைகு அவசியம் என்ற கோட்டிற்கு உள்ளேயே இருந்தது. ஆஹா. நாம் ஏதும் அனாவசியமாக செலவு செய்வதில்லை என்று மகிழ்ந்து.. ஒருவேளை அந்தப் பெரியவர் நாம் அளந்து செலவு செய்பவன் என்று தெரியாமல் அப்படி சிரித்திருக்கலாம் என்று நினைத்து.. அந்த புரியாத நமட்டு சிரிப்புக்கு அர்த்தம் தெளிந்ததாக எண்ணி ஒருவழியாக நிம்மதியானேன்.

மாலையில் சிறிது நடந்துவிட்டு திரும்புகையில் புதிதாய் வாங்கியுள்ள தொலைகாட்சி பெட்டியை மனைவி வந்ததும் காட்டி அசத்தனும் என்ற நினைப்புடன் வீடு திரும்பினேன். களைப்பு போக நன்கு குளித்து விட்டு புது பொலிவுடன், ஒரு காபி போட்டு கையில் எடுத்துக்கொண்டு புதிய தொலைகாட்சி முன் அமர்ந்தேன். அன்று இந்திய குடியரசு தினம். முன்னாள் ஜனாதிபதி திரு ஆ பி ஜே அப்துல் கலாம் அவர்களை நகைச்சுவை நடிகர் விவேக் எடுக்கும் நேர்முக பேட்டி ஓடிக்கொண்டு இருந்தது. விவேக் கேட்ட நகைச்சுவை கலந்த சுவையான கேள்விகளுக்கு ஜனாதிபதி சுவையாக பதிலளித்தார். "நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போதும் 4 சட்டை மட்டுமே வைத்து இருந்ததாக கேள்விபட்டேன். உண்மையா? ஏன் இந்த எளிமை?" என்று விவேக் அடுத்த கேள்வி கேட்க, அப்துல் கலாம் அவர்கள் "எனக்கு அவசியமானது அவ்வளவுதான்!" என்று கச்சிதமாக பதில் கூறி நன்கு சிரித்தார். அந்த சிரிப்பு கேட்டதும் எனக்கு யாரோ தலையில் சுத்தி வைத்து ஓங்கி அடித்து போல தோன்றியது. எல்லாம் தெளிந்ததாக இருந்த நிலை போய் பலபலவற்றை எண்ணி மனம் குழம்பியது. சிறிது சிறிதாக உண்மை புலப்பட அந்த நமட்டு சிரிப்பிற்கு உண்மையில் அர்த்தம் விளங்கியது.

வாழ்கை வாழ 10 சட்டை அவசியம். 100 சட்டை அனாவசியம். கிராமத்தில் மிரசுதாராக இருந்த தத்தா, உடுத்திருந்த துணியை குளிக்கும் பொது துவைத்து காயவைத்துவிட்டு நேற்று துவைத்து வைத்திருந்த துணியை எடுத்து உடுத்திக்கொண்டு வயலுக்கு செல்லும் காட்சி நினைவுக்கு வந்தது. ஒரு தொலைகாட்சி பெட்டி அவசியம். மூன்று அனாவசியம். ஒரு கைகடிகாரம் அவசியம். ஒன்பது அனாவசியம். ஒன்றோ இரண்டோ காலணி அவசியமாகலாம். பத்து அனாவசியம். வீட்டில் வாங்கி வைத்துள்ள german காபி போட்டு குடிப்பது அவசியமாகலாம். அருகில் இருக்கும் காபி கடைக்கு வாகனத்தில் சென்று 5 வெள்ளி கொடுத்து காபி குடிப்பது அனாவசியம். இப்படி எண்ண அலைகள் எங்கெங்கோ ஓட வீட்டை சுற்றி பாத்தேன். தலை சுற்றியது.

புதிதாக வாங்கிய தொலைகாட்சி பெட்டியை அதன் பெட்டியில் போட்டு வாகனத்தில் வைத்தேன். ஒரு படுக்கை அறை முழுக்க வெகு நாட்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த துணிகளை ஒரு பையில் போட்டு வாகனத்தில் ஏற்றினேன். உடுத்தாமல் வருடங்களாக தொங்கிகொண்டிருந்த துணிகள் மற்றும் தேவையில்லாத பல சாமான்களை வாகனத்தில் ஏற்றினேன். எட்டு பேர் அமரும் அந்த வாகனம் அவசியமில்லாத விஷயங்களால் நிரம்பி வழிந்தது. வாகனத்தை நேரே Costco விற்கு விட்டேன். தொலைகாட்சி பெட்டியை திரும்பக் கொடுத்தேன். அடுத்து நேராக Goodwill கு செலுத்தினேன். எல்லா அனாவசியங்களையும் தானம் செய்துவிட்டு திரும்புகையில் அங்கிருந்த வயதான பெரியவர் ஒருவர் நன்றிப் புன்னகையோடு கையசைத்து வழி அனுப்பினார். இந்தப் புன்னகையின் அர்த்தம் உடனே விளங்கியது.

வாகனத்தில் ஏறி கிளப்பியதும் ஒலி நாடாவிலிருந்து பாமா விஜயம் படத்திலிருந்து " வரவு எட்டணா.. செலவு பத்தணா" என்று பாட்டு வாகனத்தை நிறைத்தது. எனக்குள் சிரித்துவிட்டு, அந்தப் பெரியவரின் நமட்டுச் சிரிப்பையும் இந்தப் பெரியவரின் நன்றிச் சிரிப்பையும் அசை போட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்!!

13 comments:

  1. நச்'னு இருக்கு. அதுவும் நான் புது ஐஃபோன், பெரிய தொல்லைக்காட்சிப்பேட்டிய பாத்து ஜொல்லு விட்டுக்கிட்டு இருக்கும்போது.

    ஆஹா - யாரந்த பட்டினத்தார்?

    சொன்னீங்கன்னா என் பசங்கள கூட்டிட்டுப்போயி கொஞ்சம் பேச வைக்கலாம். ஆனா உங்களுக்கே புரிய இவ்வளவு நேரம் ஆனப்போ அவனுங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ....

    என் சின்னப்பையன் பள்ளியில் வாழ்க்கைக்கு அவசியமான, ஆசைப்படும்(wants and needs) பொருட்கள் பற்றிப் படித்துக் கொண்டிருந்தான். எல்லா விஷயத்தையும் நன்றாக பாகுபாடு செய்தவன் அவனுடைய gameboyயை மட்டும் அவசியம் என்று சொல்லிவிட்டான். அவனுடைய விளக்கம்: Without that, I will be bored to death! So its a need!!

    உங்களுடைய பெயரை இனிமேல் வசந்தப் பட்டினத்தார் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். உங்க பதிவை வூட்டுக்காரம்மா படிக்குமுன் ஓடிப்போயி எல்லா அனாவசிய விஷயங்களை வாங்கிட்டு வந்துர்றேன்... விடு ஜூட்...

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை. பகிர்ந்த விதமும் நல்லாருக்கு. நன்றி.

    ReplyDelete
  3. இந்த தெளிவு வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்லும்.

    ReplyDelete
  4. மற்ற கடைகள் எப்படியோ, காஸ்ட்கோ பொருட்கள் மட்டும் எப்படியோ என்ன விலை இருப்பினும் நம்பி வங்கி வந்து விடுகிறோம்! சில நல்லவை சில அனாவசியம்.

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல பதிவு. நாட்டில் பொருளாதாரம் நைந்து போயிருக்கும் இந்த நிலையில் எல்லாரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள். அப்பப்ப வந்து நல்ல விஷயங்களை எங்களுக்கெல்லாம் நியாபக படுத்தறீங்க. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  6. மறுமொழி எழுதியவர்கள் அனைவருக்கும் நன்றி.

    நாகு, பட்டினத்தாரின் கதை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியலை. அதனால் கிராமத்தான் என்று வேண்டுமானால் பெயர் சூட்டுங்கள்.

    நிகழ்காலத்தில், வருகைக்கு நன்றி. உங்களின் சில பதிவுகளை படித்து மகிழ்ந்தேன். எதிர்பார்ப்பை தவிர்பதன் மூலம் ஏமாற்றத்தை தவிர்க்கலாம் - பிடித்திருந்தது.

    மீனா, இந்தியா பயணம் நலமே அமைய வாழ்த்துக்கள். மீனா சபதம் எப்படி நிறைவேறியது என்று அப்பப்ப தெரிவிக்கவும்.

    ReplyDelete
  7. வசந்தம்,

    பதிவுக்கு நமட்டுச் சிரிப்பு என்பதற்கு பதில் வெறும 'சிரிப்பு' என்று வைத்திருந்தாலும் அருமைதான்.

    எனது நெருங்கிய நண்பரின் பாட்டனார் (பெரும் பணக்காரர்) பலப் பல வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சொன்னதாக் அவர் சொன்ன தகவல்:
    ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இவை:
    முக்கிய கேள்வி: இது ஒரு அத்யாவசியமான பொருளா? இல்லைன்னா வுடு ஜூட், இல்லைன்னா கிளைக் கேள்விக்கு பதில் சொல்லு.
    கிளைக் கேள்விகள்.
    1. அந்தப் பொருள் இல்லாது வாழ முடியுமா? வாழ முடியும்னா அடுத்த கேள்விகள் அனாவசியம்.
    2. அந்தப் பொருள் 10-12 வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கக் கூடிய பொருளா? இல்லைன்னா வாங்க வேண்டாம் வீட்டுக்கு போ, ஆமாம்னா அடுத்த கேள்வி
    3. அதை கடன்ல வாங்காம காசு கொடுத்து வாங்க உன்னோட பொருளாதாரம் இடம் கொடுக்குமா? வாங்கிட்டு நாளைக்கு மருந்து வாங்க காசு இல்லை, அரிசி வாங்க காசு இல்லைன்னு சொல்லக்கூடாது. இதுக்கு பிறகு யார் எந்த அனாவசியமா வாங்க முடியும்.

    இவையெல்லாம் நான் பாலோ பண்றேனான்னு குடையரதுக்குள்ள, அய்யாவும் உடு ஜூட்.

    முரளி.

    ReplyDelete
  8. I was taught to Walk & Run, now i am good at it.

    I was taught to speak & Sing, now I am good at it.

    I was taught to read&Write, now i am good at it.

    I was taught to ride bike, now i am good at it.

    I was taught to Swim, now i am good at it.

    No one taught me how to earn & Spend, but still i am good at it.

    If the theory of evolution is true by now we should have learned how to earn and spend money !

    ReplyDelete
  9. I wish all wives read this story !

    ReplyDelete
    Replies
    1. ஆசையே அழிவின் ஆரம்பம்

      Delete
  10. ஆசையே அழிவின் ஆரம்பம்.

    ReplyDelete
  11. Good read. Not just wives ,all husbands should read it too !!!! The story is written by a husband taking advice from a wise old man !!!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!