Monday, March 31, 2008

என் கண்மணி

நானே எப்பவாச்சும்தான் என் வலைப்பூ பக்கம் போறேன்; ஆனா நீங்களெல்லாம் எப்பவுமே (சதங்கா மட்டும் போனாப் போகுதுன்னு... நன்றி, சதங்கா! :) அந்தப் பக்கம் வரதில்லை. இதான் என் கடைசி முயற்சி, உங்களை வர வைக்க...

என் கண்மணி

பித்தனின் கிறுக்கல்கள் - 21

ஷாருக்கான் வாரம்
இந்த வாரம் ஷாருக்கானின் மூன்று படங்கள் பார்த்தேன். இவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று சொன்னால் அது உலக மகா பொய்யாக இருக்கும் இவருடைய நடிப்பு சற்று சிவாஜி காலத்து மிகை நடிப்பு வகையைச் சார்ந்தது. ஆனால் இவருடைய படங்களில் ஒரு ஒற்றுமை, எந்தத் திராபை படமானாலும் அதைத் தனது தோளில் தூக்கி சென்று காப்பாற்ற ரொம்ப பாடு படுகிறார்.

முதலில் கல் ஹோ நா ஹோ (நாளை இருக்குமோ இருக்காதோ- இது சரியான அர்த்தமா என்று தெரியவில்லை)

2003-ல் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் (இது சக்கை போடு போட்டத் தகவல் தந்தது எனது அலுவலக நண்பர், அது சரியில்லை என்றால் சொல்லுங்கள் அவரை 'சரியாக' கவனிக்கிறேன்)

கதை கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து எல்லோரிடமும் இருக்கிற ஒரு கதை. இது பாலைவனச் சோலையின் கதைதான். என்ன சுஹாசினிக்கு பதில் ஷாருக்கான். 5 தண்டச் சோறு தடிமாடுகளுக்கு பதில் அழகான ப்ரீத்தி ஜின்டாவும், சயிஃப் அலிகானும். அவர்கள் நடிப்பிலும் ஒன்றும் சோடையில்லை. யாருக்காவது ஏதாவது தேவையா, ஷாருக்கான் உதவுவார், வியாபாரம் டல்லா, ஷாருக்கான் உதவுவார், டேட்டிங்கில் ப்ரச்சனையா, ஷாருக்கான் உதவுவார், பாட்டிகளுக்கு மன உளைச்சலா கவலை வேண்டாம், ஷாருக்கான் உதவுவார். என்ன, வீடு, மனை வாங்க விற்க அணுகவும் என்று ஒரு போர்ட் போட்டுக் கொண்டு அவர் அலையாததுதான் பாக்கி. பாடல்கள் பலவும் சூப்பர். அதிலும், ப்ரெட்டி உமன் பாட்டு சங்கர் மகாதேவன் பின்னியிருந்தாலும் சரியான குத்து மெட்டு. எனக்கு பிடித்தது, சோனு நிகம் பாடியுள்ள டைடில் பாடல் 'ஹர் கடி பதல் ரஹி ஹை ரூப் ஜிந்தகி' பாடல்தான். ஆச்சர்யமான ஒரு விஷயம் ஷாருக்கானின் மிகை நடிப்பைத் தாண்டி அவரை இந்தப் படத்தில் மிகவும் ரசிக்க முடிகிறது. படம் முடியும் தருவாயில் மனதை சற்று அழுத்துகிறது ஷாருக்கானின் சில வசனங்கள்.

இரண்டாவது ஓம் சாந்தி ஓம்.
2007-ல் வெளிவந்து பாலிவுட்டில் பலரையும் ஆட்டம் காண வைத்த படம். இது சென்னையில் ரிலீஸான போது அதற்கு பெரிய கட்டவுட் வைத்து கொண்டாடினார்களாம். இந்தக் கதையும் ஒரு அடாசு கதைதான், ஹிந்தியில் ரிஷி கபூர் நடித்த கர்ஸ், தமிழில் கமல் நடித்து எனக்குள் ஒருவன் என்று வெளிவந்த அதே டப்பா கதைதான். கமல் கூட பரவாயில்லை கொஞ்சம் நஞ்சம் டான்ஸ் ஆடத் தெரியும், வெறும் சாணி மிதிக்கிற ரிஷி கபூர் நடித்த ஹிந்தி படம் தாங்க முடியாத குப்பை. இதை கலந்து கட்டி ஒரு அருமையான பொழுது போக்குப் படமாக தந்திருக்கிற ஷாருக்கானின் தைரியம், அதைவிட அதைத் தயாரித்த அவருடைய துணைவியார் கௌரி கானின் துணிச்சல் அசாத்தியம். படத்தில் எம்.ஜி.ஆர். போல காட்சிக்குக் காட்சி ஷாருக்கான் வருகிறார். கதாநாயகி புதுமுகம் தீபிகா படுகோனே. ஆம் முன்னாள் இந்திய பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேயின் மகள்தான் இவர். ஆனால் பாவம் இவர், துணி பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி படத்தில் பல காட்சிகளில் வருகிறார். மற்றபடி பேர் சொல்லும்படி ஒருவரும் இல்லாத இந்தப் படத்தில் ஷாருக்கான் மற்றும் ஷாருக்கான் (ஒன்று முன் ஜென்மம், அடுத்தது புனர்ஜென்மம்) மட்டுமே ப்ரதானமாகத் தெரிகிறார்கள். படத்தில் எனக்கு பிடித்த காட்சி, ஷாருக் தனது நண்பனுக்கு கைத் தொலை பேசியில் பேசும் போது தனது அம்மா தயாரா என்று கேட்க அதற்கு அவர், தயார்தான் ஆனால் ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்து விடுவார்கள் போல இருக்கு என்று சொல்ல, அதற்கு ஷாருக்கான், அதை ஒன்னும் பண்ண முடியாது அது எங்க குடும்பத்துப் ப்ராப்ளம் என்று சொல்லும் இடம் க்ளாஸ். இந்தப் படத்திலும் ஷாருக்கான் மட்டுமே இந்தப் ப்ரமாண்டமான படத்தை நகர்த்திச் செல்கிறார்.

மூன்றாவது - சக் தே இந்தியா (Go for it, India)
2007-ல் வெளிவந்த மற்றொரு படம். உலக கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானுடன் போராடி தோற்ற இந்திய அணியின் கேப்டன் கபீர் கான் வேடத்தில் ஷாருக்கான் நிஜமாகவே நடித்துள்ள ஒரு படம். 7 வருடம் அஞ்சாத வாசம் வாழ்ந்து விட்டு, பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கோச்சாக வருகிறார். அவர்களை கசக்கி பிழிந்து, ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தி, அந்தப் புள்ளி டீம் ஸ்பிரிட் என்று காட்டி அவர்களை உலகக் கோப்பை வெற்றி பெறச் செய்கிறார். முடிவில் இவரை 7 வருடம் தூற்றியவர்கள் அனைவரும் வாய் ஓயாமல் பாராட்டச் செய்கிறார். படத்தில் 16 இளம் பெண்கள் இருந்தும் ஒரு விகல்பம் கிடையாது, ஒரு அசிங்கமான நடனம், அசிங்கமான அங்க அசைவு கிடையாது, படம் முழுவதும் ஒரு 3-4 நாள் தாடியுடன் ஷாருக்கான் வருகிறார். ஒரு சில காட்சிகளில் ரொம்ப சாதுவாக இருக்கும் அவர், மற்ற காட்சிகளில் தன்னை மிஞ்சி ஒரு ஹாக்கி வீரர் இல்லை என்பது போல வளைய வருகிறார். பயிற்சியின் போது ஒரு பெண் பந்தை யாருக்கும் தராமல் தானே எடுத்து சென்று கோல் போட்டு விட்டு குதிக்கும் போது, அவரை அழைத்து என்னது அது என்று ஒரு வார்த்தையில் மடக்கி அவர் செய்த பிழை என்ன என்று தெரியும் வரை வெளியே நிற்க வைப்பது கலக்கல். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு பாடல் கிடையாது, கதாநாயகி யாரும் கிடையாது. வெத்து டைலாக் கிடையாது, முக்கியமாக, பஞ்ச் டைலாக் கிடையாது. இது போல ஒரு படம் செய்ய ஆமீர் கானைப் போல எனக்கும் தைரியம் உண்டு என்று நிரூபித்து இருக்கிறார். இந்த படத்திற்கு அவர் Filmfare சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் அது மிகப் பொருத்தமானதுதான்.

53-வது Filmfare விருது வழங்கும் விழா
இதில் சிறப்பு அம்சம், ஷாருக்கானும், சயிஃப் அலிகானும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சி. ஆரம்பிக்கும் போதே சயிஃப் சொல்லி விடுகிறார், இது ஒரு கடுமையான நிகழ்ச்சி, இது மற்றவர்களைப் புண்படுத்துவதற்காகத்தான், எனவே தவறாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று. இப்போது தெரிந்திருக்கும் அவர்கள் எப்படி அநியாயம் செய்திருப்பார்கள் என்று. அவர்கள் பேச்சு கொஞ்சம் வரம்பு மீறியிருந்தாலும், எனக்கு பிடித்தது இருவருடைய அபாரமான மேடைப் பேச்சின் ஒருங்கிணைப்பு. இது போல ஒரு ஜனரஞ்சகமாக ஒரு நிகழ்ச்சியை தமிழில் தர ஒருவரும் இல்லை என்பது என் வருத்தம். சமீபத்தில் இதே போல தமிழில் ஒரு நிகழ்ச்சி மலேஷியாவில் நடந்தது அதில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தலைமையில் ஒரு நாடகம் இடையிடையே நடத்தினார்கள் அதில் ராதா ரவியும் இருந்தார். சிரிப்பை வரவழைக்க எல்லோருக்கும் கிச்சு கிச்சு மூட்டிவிட வேண்டியிருந்தது, அவ்வளவு அடாசு ரகம். இதில் கமல் ரஜனி பங்கேற்கவில்லை, காரணம் அவர்கள் அவ்வளவு பிஸி. தமிழ் நடிகர்கள் ஏன் இவ்வளவு போலியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

காந்தி
காந்தியடிகள் பற்றிய கட்டுரையை நாகுவின் பதிவில் படித்ததும் சமீபத்தில் எனது நண்பர்களுடன் நடந்த ஒரு சிறிய உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.

உரையாடலில் எப்படி குஜராத்திகள் தாங்கள் ஆரம்பிக்கும் எந்த தொழிலையும் திறமையாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களின், கடின உழைப்பு, விடா முயற்சி, எந்தத் தொழிலும் கேவலம் இல்லை என்ற மன நிலை, அவர்களின் 'Kill Power' என்று நான் வாதாடினேன், 'Kill Power' பற்றி விளக்கச் சொன்ன போது நான் சொன்னேன், ஒருவன் தனது மனதில், இவரால் இது முடியும், அவரால் அது முடியும் என்றால் அது என்னாலும் முடியும் என்ற ஒரு வெறி ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் ஆழ வேறூன்றி இருக்கிறது, அது 'Will Power' என்பார்கள், நான் அதை 'Kill Power' என்பேன், காரணம், அவர்களின் அந்த வெறி அத்துணை பலம் வாய்ந்தது. ஒரு சாதாரண வக்கீல், அன்னிய மண்ணில் ஒரு முறை ஒரு நிற வெறியனால், ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவர்களை தனது சொந்த மண்ணிலிருந்து தானாக வெளியில் செல்ல வைக்கிறார். அதற்கு அவர் பின்னால் அவருடைய சொந்த நாடே அணி திரண்டு செல்கிறது. அந்த குஜராத்தியர் இன்றும் நமது தேசத்தின் தந்தை என்று போற்றப் படுகிறார். இன்றும் மகாத்மா என்றால் அவர் நினைவுக்கு வருகிறாரே என்றேன்.

மீண்டும் தொடங்கிய விவாதத்திற்கு வருகிறேன். பொதுவாக நம்பப் படும் கருத்துக்களுக்கு மாறாக ஒரு கருத்தை அளிக்க வேண்டும் என்றால், எத்தனையோ கருத்துக்களை எடுத்து எழுதியிருக்கலாம். இங்கு அரசியலில் அனைவரும் சுத்தம் என்று எழுதியிருக்கலாம், அதிலும் இந்நாட்டின் தலைவரே பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பின்பு, அனைவரும் சுத்தம் என்ற வகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தால், ஆசிரியர்கள் அதிர்ந்து போய் A+ கூட தந்திருப்பார்கள். அல்லது சீனா ஒரு ஜனநாயகக் குடியரசு என்றோ, மத்திய கிழக்கு ஆசியா நாடுகள் சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடி வசிக்கும் இடம் என்றோ எழுதியிருக்கலாம். என்ன ஒரு சிக்கல் அப்படி எழுதியிருந்தால், அப்படி எழுதிய மாணவர் (அ) மாணவி யார் என்று 'யாராவது' விசாரிக்க ஆரம்பித்திருப்பார்கள். காந்தியைப் பற்றி எழுதினால், யார் என்ன செய்யப் போகிறார்கள். அதோடு காந்தியை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், அவருடைய அஹிம்சா வழிகளைப் பற்றியும் தெரிந்தவர்கள் எனவே கண்டிப்பாக எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிந்திருக்கும்.


50% ஓட்டுக்கள் பெற்றால்தான் வெற்றி

சட்டசபைத் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், அவர் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தது 50 சதவீத ஓட்டுக்களைப் பெற வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாசாமி யோசனை தெரிவித்துள்ளார். இருவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்டம் இல்லாத போது, அதிலும் அதிக பட்ச வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடலாம் என்ற விதி முறையும் இல்லாத போது இது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. கள்ள ஓட்டைத் தவிர்க்க பொது விதி இல்லை, மேலும் பதிவாகும் ஓட்டுகள் அதிக பட்சம் 65% என்னும் போது இது எப்படி சாத்தியம். இந்தக் கருத்தை என்னைப் போன்ற அரசியல் அறிவு கிஞ்சித்தும் இல்லாத ஒருவர் சொன்னால், சரி, ஏதோ அறியாமையில் பிதற்றுகிறார் என்று விட்டு விடலாம், இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு உயரிய பதவியில் இருக்கும் ஒருவர், அதிகம் படித்த ஒருவர் இப்படி பேசியிருக்கிறார். இது ஒரு வேளை அவருடைய மன உளைச்சலை வெளிக்கொட்டி சொன்னதோ என்னவோ, எனக்குத் தெரியவில்லை.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தனின் மற்றப் பதிவுகளை
இங்கே படிக்கலாம்.

Friday, March 28, 2008

காரு பாரு...


மேலே இருக்கும் படம் எந்த கார் கம்பெனி எந்த கார்களையெல்லாம் தயாரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த கார்சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்காகத்தான் அந்தப் படத்தை இங்கே போட்டிருக்கிறது. அது என்ன?

படத்தைக் கிளிக்கினால், பெரிதாகப் பார்க்கலாம்.

Tuesday, March 25, 2008

என்று வருவான்?

கண்ணனுக்காக காத்திருக்கும் ராதைக்கு கொஞ்சம் வந்து ஆறுதல் சொல்லிட்டு போங்க :)

http://kavinaya.blogspot.com/2008/03/blog-post_25.html

உதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே

பெண், அப்படி என்றாலே கவிதை தான் இல்லையா ? கவிதை மீது காதல் கொள்ளாமல் இருக்கவும் முடியுமா ? ஒரு வாலிபனின் கனவுகள், கற்பனைகளாகக் கவிதை வடிவில் இங்கே. படித்துப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் !

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_1832.html

Thursday, March 20, 2008

தோப்பு

காவல்காரர் தூங்கிக்கிட்டு இருக்காரு. சத்தம் போடாம வாங்க. தோப்புக்குள்ள போய் ஒரு சுத்து சுத்திப் பார்த்துட்டு வரலாம். மெதுவா, ஷ்ஷ்ஷ்... இங்க க்ளிக் பண்ணுங்க‌

மனசு

சிறுகதை.. இங்க போய் படிச்சுப் பாத்துக் கருத்து சொல்லுங்க...

தமிழ்மணத்தில் சதங்கா!

சதங்காவுடைய கவிதைகளை தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில பார்த்தேன். வாழ்த்துக்கள் சதங்கா!

http://thamizmanam.com/readers_choice.php

Wednesday, March 19, 2008

காந்தியடிகள் சுதந்திர இந்தியாவுக்கு இழைத்த தீங்கு.

ரிச்மண்ட் தமிழ்க் குடும்பங்களில் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். "சுதந்திர இந்தியாவுக்கு காந்தியடிகளின் கொள்கைகளினால் நேர்ந்த தீங்கு"! முதலில் கேட்டு அதிர்ந்து போய்விட்டேன் - இப்படியெல்லாம் யோசிக்கிறார்களா என்று. அதுவும் மாணவரின் தாய் தந்தையர் காந்தியடிகளிடம் மிக்க மரியாதை வைத்திருப்பவர்கள்.

அந்த கட்டுரைக்கான அடிப்படை இதுதானாம். பொதுவாக நம்பப்படும் கருத்துக்களுக்கு மாறாக ஒரு கருத்தை அளிக்க வேண்டுமாம். பார்த்தார் இந்த மாணவர் - வீட்டிலும், மற்ற இந்தியர்களாலும் மதிக்கப்படும் காந்தியைப் பிடித்தார். இங்கே அவருடைய கட்டுரையைப் போட்டால் நம் 'நண்பர்கள்' நாகுவும் ரிச்மண்ட் தமிழ் சங்கமும் காந்தியைத் திட்டுகிறார்கள் என்று கழுவேற்றிவிடுவார்கள் நம்மை. அதனால் இங்கே போய் படித்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமுன் அங்கே முதல் பாராவை ஒரு முறைக்கு நாற்பது முறைகள் படித்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Monday, March 17, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 20

புத்தக விமர்சனம்

God Father
இந்த புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை படித்தேன். இது ஒரு சரித்திர ப்ரசித்தி பெற்ற கதை. வரிக்கு வரி (சில வரிகள் R ரகம் அவை தவிர மற்ற வரிகள்) எல்லாமே அருமையான வரிகள். நாயகன் கதை இந்தக் கதையின் உல்டா இல்லை, அது 80 களில் தாராவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் கதையும் இல்லை என்று கமலும், மணிரத்தினமும் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்கள். அதை நம்பி விடுங்கள். இந்தக் கதை பற்றியோ, அந்தத் திரைப் படம் பற்றியோ நான் எழுதப் போவதில்லை. ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு திரைக்கதையை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு. கதாபாத்திரங்களின் படைப்பு, அவர்களின் குணாதிசயங்கள், காட்சிகளின் தொகுப்பு என்று வரிக்கு வரி படிப்பவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் என்று கதாசிரியரின் சாமர்த்தியம் நம்மை ப்ரமிக்க வைக்கிறது.


Shall we tell the President
இந்த புத்தகத்தை பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அன்று இருந்த அதே விறுவிறுப்பு இன்றும் இருப்பது ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். கதை: அமெரிக்க அதிபரை கொலை செய்ய நடக்கும் முயற்சியும் அதைத் தடுக்க முயலும் அதிகாரிகளும் பற்றிய கதை.

இதைப் படிக்க ஆரம்பித்ததும் நண்பரிடம், "கதை என்ன விறுவிறுப்பு தெரியுமா, அன்னிக்கு படிச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கு" என்று பெருமையாக பீத்திக்கொண்டேன். அதற்கு அவர், "நீ, இதுக்கு முன்னாடி புத்தகமே படிச்சதில்லையா? குப்பை எழுத்தாளருக்கெல்லாம் இப்படி வக்காலத்து வாங்கரே? என்னவோ கிறுக்கரேன்னு சொல்லிட்டு, புத்தக விமர்சனம் சமீபத்தில பண்ணினியே, அந்த தமிழ் கதையாவது படிச்சுட்டு எழுதினியா, இல்லை கேட்டுட்டு எழுதினியா? என்றார். சொடேர் சொடேர் என்று யாரோ தலைமேல் போட்ட மாதிரி இருந்தது. நாம என்னவோ பெரிய பருப்பு மாதிரி விமர்சனம் எழுதறோம், ஆனா யாரும் இப்படி செவிட்டு இழுப்பு இழுக்கலையே ஏன் -ன்னு கொஞ்சம் யோசிச்சேன். பொழச்சுப் போறான் கொழந்தைப் பய-ன்னு விட்டுட்டாங்க போல இருக்கு சரி இனிமே கொஞ்சம் ஜாக்ரதையா எழுதனும்னு முடிவு பண்ணியிருக்கேன். முடிவு பண்ணினா மாதிரி, கதையை பொறுமையா படிச்சு முடிச்சேன். அதுல நண்பர் சொன்ன பல விஷயங்கள் புரிஞ்சுது.

முன்பு படித்ததற்கும் இப்போதைக்கும் பல வித்தியாசங்கள், ஒன்று - கதையில் இருக்கும் அதீத ஓட்டைகள், இரண்டு - அதை அடைக்க முயலாத கதாசிரியர், மூன்று - தேவையில்லாத கதைத் தொகுப்பு, நான்கு - பரமார்த்த குருவின் சீடர்கள் போல உள்ள மத்திய புலனாய்வுத் துறை. நம்மூரில் எஸ்.ஏ. ராஜ்குமார் என்று ஒரு மகானுபாவர் இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு பின்னனி இசைதான் போடுவார், அதையே படம் முழுக்க ஓட்டுவார். அது மாதிரி, இந்தக் கதையில் மாத்தி மாத்தி, "Sir Shall We tell the President" -ன்னு ஒருத்தர் கேட்டுகிட்டே இருக்கார், என்ன லாஜிக்கோ.

நண்பர் கூடவே, Desmond Bagley-ன் Running Blind படிச்சுட்டு சொல்லுன்னார். நூலகத்தில தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டேன். முதல் பக்கத்திலேயே போட்டு தாக்கியிருக்கார்.

"ஒரு ப்ரேதத்தை சுமந்து இருப்பது ரொம்ப அவஸ்தையான ஒரு விஷயம். அதிலும் இந்தப் ப்ரேதத்திற்கு ஒரு இறப்பு சான்றிதழ் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகு. எந்த மருத்துவரும், ஏன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சற்று முன் வந்த ஒரு மருத்துவரும்கூட இந்த இறப்பின் காரணத்தை சொல்லி விட முடியும். இந்த மனிதன் இருதயம் வேலை செய்யாததால் இறந்து விட்டான்.

இவனுடைய இருதயம் இரத்தத்தை மேலும் கீழும் செலுத்த முடியாதபடி ஒரு கூர்மையான உலோகத்தால் விலாவில் குத்தப்பட்டு, அது இருதயத்தைத் துளைத்து, இரத்தம் அதிகமாக வெளியேறி இருதயம் துடிப்பது நின்று போய் இறந்து விட்டான்.

நான் இவனுக்காக ஒரு மருத்துவரை தேடப்போவதில்லை, காரணம், இவனைக் குத்திய கத்தி என்னுடையது, அது அவனைக் குத்தும் போது, அந்தக் கத்தி எனது கையில்தான் இருந்தது. ....."

கமல் பாடின மாதிரி, துடிக்குது புஜம், தகிட தத்தீம் தத்தீம் ன்னு மண்டை இடி ஆரம்பிச்சுடுச்சு, இனி அடுத்த 3-4 நாட்கள் தூக்கம் போச்சு, வீட்டு வேலை எல்லாம் நின்னாச்சு, வீட்டுக்காரம்மா திட்டறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாச்சு. இருந்தாலும் படிக்கரத நம்மால நிறுத்த முடியாது. அதனால படிச்சு முடிச்சதும், கதைச் சுருக்கம் எழுதறேன்.

அரசியல் அசிங்கம்
இந்தப் பதிவு வெளியாகும் போது, நியூயார்க் மாநில ஆளுனரின் மீது கொண்டுவரப் பட்டுள்ள குற்றச்சாட்டை அனைவரும் படித்து சீ தூ என இகழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆமா ஜனநாயகக் கட்சில (நாகுதான் மொழிபெயர்த்து சொன்னார் - டெமாக்ரெட்டிக் கட்சின்னா ஜனநாயகக் கட்சின்னு, தப்புன்னா அவரை ரெண்டு தப்பு தப்புங்க) இப்படி கொஞ்சம் ஜொள்ளர்கள் அதிகம் இருக்கரமாதிரி இருக்கே என்ன காரணம். அங்க சில்லறை அதிகமோ? இப்படி ஊரே அந்தச் செயலைப் பற்றி பேசி, வருந்தும் போது, ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் தினசரியில் இது வரை அரசியலில் ப்ரபலமாக இருந்த யார் யாரெல்லாம் இது போல கெட்ட காரியம் செய்து மாட்டினார்கள் என்று விலாவரியாக எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். தேவையா இது?

இதுவே நம்ம ஊராயிருந்தா என்ன ஆயிருக்கும், உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.


யாருக்கும் வெட்கமில்லை.
அ.தி.மு.க சார்ந்த ராஜ்யசபா உறுப்பினராக தன்னை மீண்டும் தேர்வு செய்யாததால், அக்கட்சியின் வழக்கறிஞர் திரு. ஜோதி கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்

"கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது"

என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் 113 வழக்கு இருக்கிறது என்பது என்ன விதமான நல்ல செய்தி என்று தெரியவில்லை, அதை ஒரு பெருமையாக சொல்லக் கூடிய நிலையில் இன்றைய அரசியல் இருக்கிறது. இதற்கு திரு. ஜோதி அவர்களின் பதில் சூப்பரோ சூப்பர். நான் எனது வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவது இது ஒன்றும் முதல் தடவையில்லை. இதற்கு 10 மாதங்களுக்கு முன்பே ஒரு முறை சசிகலாவின் உறவினரின் ஆதிக்கம் அதிகமான போது, நான் எனது பொறுப்புகளையும், கட்சியிலிருந்து விலகுவது பற்றியும் மேலிடத்திற்கு தெரிவித்த பிறகு அவர்கள் என்னை சமாதானம் செய்ததால் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் என்று ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நல்ல கட்சித் தலைமை, நல்ல வழக்கறிஞர். இதைப் படிக்கும் போது 'சோ'வின் "யாருக்கும் வெட்கமில்லை" நாடகத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.


பித்தனின் சங்கு

முதல் சங்கு:
சங்கத்து ப்ளாக் திடீரென மாம்பலம் ரங்கநாதன் தெரு மாதிரி ஆகிவிட்டது. உடனடியாக வேறு சில மாற்றங்கள் செய்து நெரிசலை சமாளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் காதில் போடவேண்டும் என்று தெரியாததால், பொதுவாக சொல்லிவிட்டேன்.


இரண்டாவது சங்கு:
சங்கத்து ப்ளாகில் வரும் சதங்கா மற்றும் கவிநயாவின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட யாராவது ஒரு முயற்சி செய்யலாமே.

மூன்றாவது சங்கு:
கவிநயா, சதங்கா இருவரும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ, கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுக்கச் சொல்லாமே, அதிலும் வெண்பா இலக்கணங்களையும் சொல்லிக் கொடுக்க செய்யலாம். எப்ப பார்த்தாலும் இவங்க ரெண்டு பேர் மட்டும் அழகழகா கவிதை எழுதி போட்டு தாக்கராங்க. நாங்க என்ன செய்யரது.

பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு நாங்க இப்படி ஒரு கவிதை எழுதிடுவோம்.

'நான் காத்து வாங்கப் போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனான்
அந்த வண்ணான் என்ன ஆனான்".

இது எப்படி இருக்கு. கவிதைன்னா சொந்தமா எழுதனும்னு என்ன சாத்திரமா? இப்படி எம்.ஜி.ஆர். பாட்டை ஒட்டி வெட்டி சுயமா ஒரு கவிதை எழுதிடுவோம், தெரியுமில்லை. சீக்கிரமா கவிதை க்ளாஸுக்கு அழைப்பு வரலைன்னா, வாரத்துக்கு ஒரு கவிதையா எழுதிடலாம்னு இருக்கேன். யோசிச்சு முடிவு பண்ணுங்க.



சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
அரசியல் கிரிக்கெட்-ஸ்டாலின் அபார பந்து வீச்சு!
தமிழக முதல்வர் லெவன் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கும் இடையே சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல்வர் லெவன் அணி வெற்றி பெற்றது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து, சிறந்த பவுலர் விருதையும் தட்டிச் சென்றார்.
பேசாம இவரை இந்திய அணியில சேத்து விட்டா, ஒர் நல்ல பவுலர் கிடைச்ச மாதிரியும் இருக்கும் அழகிரிக்கு முதல்வர் வாய்பு கொடுத்தா மாதிரியும் இருக்கும்?
**************************************************************************************நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ரெடி-சரத்குமார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம், நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.என அ.இ.ச.ம. கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அப்படியே எந்த வருஷத் தேர்தலுக்குன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமா டெபாசிட் திரும்ப கிடைக்காதுங்கரதையும் உங்க வேட்பாளர்கள் கிட்ட சொல்லிடீங்களா?
**************************************************************************************
ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்
ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்து இருந்தால், அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசியல் செய்திருப்பார்கள் அதனால்தான் அமைதி காத்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்
அட போங்கப்பா சும்மா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. நமக்கு இருக்கர ஒரு ஓட்டை வெச்சுகிட்டு, ரொம்ப ஓவரா படம் காட்டரீங்க.
**************************************************************************************
அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!
கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.
ஏங்க தி.மு.க மாதிரி ஒரு 55-57 வயசுக்கு யாரையாவது பாருங்க, அதை விட்டுட்டு சின்னப் பசங்களை சேத்து என்னத்த அரசியல் பண்ண முடியும்.
**************************************************************************************
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்
நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஐ! நிஜமாவா சொல்றீங்க. 60000 கோடி கடன் தள்ளுபடி சும்மாவா செய்திருக்கீங்க. ஆமா, அம்மையார் கிட்ட கேட்டுட்டுதானே சொல்றீங்க.
**************************************************************************************
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Saturday, March 15, 2008

கிராமத்து நடவு

கிராமங்களில் நாற்று நடுவதே ஒரு விழா போலத் தான் நடக்கும். உழவர்களும், மாடுகளும், சேறும், நாற்றும், நாற்று நடும் பெண்களும் ... அப்படியே ஒரு ரம்மியமான சூழல். அதைப் பற்றி ஒரு கவிதை "கிராமத்து நடவு".

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_13.html

Friday, March 14, 2008

என் தமிழ்!

என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!


--கவிநயா

Thursday, March 13, 2008

அட நம்ம ஊரு..

இந்த வாரம் அலுவலகத்துக்கு சென்றபோது, என் மேஜையில் ஒரு வாரப்பத்திரிக்கை. முகப்பைப் பார்த்து ஏதோ நம்ப ஊர் பத்திரிக்கை என்று நினைத்துவிட்டேன். பார்த்தால் இங்கே வரும் ஒரு பத்திரிக்கை. ஓசியில் வந்து கொண்டிருக்கும் பத்திரிக்கை.



இந்தியக் கம்பெனிகள் விலைமலிவான வேலைக்கு மட்டுமில்லாமல் மற்ற கில்லாடி வேலைகளும் பண்ண துடிக்கிறார்களாம். ஆனால் அவர்களால் இன்னும் கில்லாடி வேலை பண்ண முடியாது என்று ஜல்லியடிக்கிறார்கள். படத்திலுள்ள அம்மணி பற்றி ஒன்றும் சொல்லக் காணோம் :-)

இந்த பத்திரிக்கை இரண்டு மாதமாக ஓசி சந்தாவை புதுப்பிக்காவிட்டால் மேலும் அனுப்பமாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். நிறுத்தினால் நல்லது என்று நிம்மதியாக இருந்தேன். பயமுறுத்துவதை நிறுத்திவிட்டார்கள்! நமக்கு இருக்கும் நாழிக்கு இரண்டு பக்கம் படிக்குமுன் மூன்று இதழ்கள் வந்து நிற்கின்றன.

அடி பெண்ணே !

டிஸ்கி: இது என் சொந்தக் கதை அல்ல. வெகு நாட்கள் முன் ஆ.வி.யில் படித்த ஒரு கதையும் (used at climax here), பின் நண்பர்கள், அவர்தம் நண்பர்களின் கதைகள் எல்லாம் கலந்து செய்து கலவை தான் அடி பெண்ணே ! படிச்சுப் பார்த்து புடிச்சிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க !!!

பி.கு.: எங்க ஊட்டுக்காரம்மா ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க, ஏன் இந்த மாதிரி விசயங்களில் பெண்கள் தான் தவறு செய்வார்களா ? பசங்க செய்றதில்லையா என்று ! ஏன் இல்லை, அது பற்றியும் ஒரு கவிதை எழுதி போட்டுறலாம் என்று சொல்லி, நல்ல வேளை கவிதையின் நாயகி யாரு என்று அவர்கள் கேட்கும் முன்னால எஸ்கேப்ப்ப்ப்ப் ....

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post.html

Wednesday, March 12, 2008

எங்கும் சுஜாதா, எதிலும் சுஜாதா...

வாரத்துக்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சி எனக்கு சுஜாதாவை நினைவூட்டாமல் இருந்ததில்லை.

எங்காவது அரிசி சிந்தியிருப்பதைப் பார்த்தால் சுஜாதா!

குதிரைக்கு வெகு அருகே சென்றால், சுஜாதா! (டாக்டர் குதிரைக்கடியா என்று ஒரு பெரிய புத்தகத்தை எடுப்பார். மனைவி உடனே - அதில் குதிரைக்கடிக்கு இல்லை என்பாள்! போன டாக்டரின் அனுபவம்)

ரோட்டிலோ ட்ரெயினிலோ விற்கும் தின்பண்டங்களைப் பார்த்தால் சுஜாதா! (அந்த பண்டம் வேண்டாம் - இஞ்சினுக்கு போடும் ஆயிலில் பண்ணியிருப்பான்!)

டைம் மெஷின் பற்றி எங்கு படித்தாலும் சுஜாதா! (கடவுள் வந்திருந்தார்).

திருப்பதி பற்றி பேசினால் சுஜாதா - 'திமலா'.

சாடிலைட் என்றால் சுஜாதா! வானத்தில் ஒரு மௌனத் தாரகை. (கூட அவர் கிளாஸ்மேட்டும் நினைவில்)

சினிமாவிலோ விமான நிலையத்திலோ கழிப்பறையில் காத்திருந்தால் சுஜாதா! " என் ராசி - எனக்கு முன்னால் இருப்பவன்தான் குடம் குடமாக போவான்" - நிர்வாண நகரம் என்று நினைக்கிறேன்

சிறுவர்களுக்கு மகாபாரதம் கதை சொல்லும்போது தர்மன் - யட்சன் விவாதத்தில் சுஜாதா!

யாருக்காவது கலைமாமணி கிடைத்தால், சுஜாதா! - சென்ற வாரம் நானும் லூஸ்மோகனும் கலைமாமணி பெற்றுக்கொண்டோம்.

சிங்கப்பூரில் ட்ரெயின்கள் நிமிடம் தவறாமல் வருகிறது என்று நண்பன் புகழ்ந்தால் - சுஜாதா(சொர்க்கத்தீவு - don't ask me!)

சாய்பாபா கலைஞருக்கு மோதிரம் கொடுத்தார் என்றால் சுஜாதா!(கடவுள் வந்திருந்தார்)

சிப்பாய் கலகம் அல்லது  பைராகி என்றால் சுஜாதா! (ரத்தம் ஒரே நிறம்)

குடகு காபித்தோட்டம் என்றால் சுஜாதா! (கதைப் பெயர் மறந்துவிட்டது - ஒருவர் மனைவி காணவில்லை என்று கணேஷ்-வசந்திடம் கதை பண்ணுவார்)

ஸ்காட்லண்ட் யார்ட் என்றால் சுஜாதா! (ப்ரியா)

அழகான நாய்க்குட்டியைப் பார்த்தால் சுஜாதா!(மீண்டும் ஜீனோ)

நியூட்டன் விதிகள் என்றால் சுஜாதா! (ஒரு கதையில் அவ்விதிகளை வைத்து விபத்துக்கு காரணம் யார் என்று கணேஷ் கண்டுபிடிப்பான்)

சமீப காலமாக, யாருக்காவது இருதய சிகிச்சை என்றால் சுஜாதா - சிகிச்சைப்பிறகு எடுத்த என் போட்டோவைப் பார்த்து சின்ன பசங்கள் பயப்படுகிறார்களாம்.

உங்கள் பட்டியலை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மும்பையைச் சார்ந்த என் சக ஊழியரிடம் ஒருமுறை பெங்களூர் மற்றும் டெல்லி ஆட்டோக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் நாம் போகுமிடத்திற்கு வராமல் அவர்கள் போகுமிடத்தை சொல்லி அழைப்பார்கள் நினைவிருக்கிறதா? அவர் தனக்கு அந்த பிரச்சினை எப்போதுமே பெங்களூரில்
இருந்ததில்லை என்றார். ஆட்டோவை நிறுத்தி பனசங்கரி காவல்நிலையம் போகவேண்டும் என்பாராம். ஒரு மறுப்பும் வராதாம். அவர் வீடு காவல்நிலையத்திற்கு பக்கத்து வீடாம். "அப்படியா, என் அபிமான எழுத்தாளர் தமிழில் அப்படி காவல்நிலையத்து பக்கது வீட்டில் இருந்தவரை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறார் என்றேன். தமிழ் சுத்தமாக தெரியாத அந்த மனிதரிடம் இருந்து வந்த கேள்வி - "யார் சுஜாதாவா?"

எனக்கு ஒரே ஆச்சரியம். சுஜாதா அந்த வீட்டில் அவருக்கு முன்னால் குடியிருந்தாராம்!

போன மாதம் மகனுடன் ஒரு வகுப்பிற்கு சென்றிருந்தேன். அந்த வகுப்பில் இன்னொரு இந்தியர் தன் மகளுடன் வந்திருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தபோது அவர் பெங்களுர் பி ஈ எல்'லில் பணிபுரிந்ததாகச் சொன்னார். உடனே நமக்கு வேறு என்ன தோன்றும்? - ரங்கராஜன் என்று ஒருவர் இருந்தாரே தெரியுமா? ஏதோ நமக்கு ரொம்ப தெரிந்தவர் மாதிரி! சுஜாதா அவருடைய மேலாளருக்கு மேலாளராம். எங்காவது வேலை நிமித்தமாக பயணம் செய்ய அனுமதி வாங்க சில சமயம் பேசியிருக்கிறாராம்.

நான் பெங்களூரில் பணிபுரிந்த சமயம் சதாசிவ நகரில் இருந்த எங்கள் அலுவலத்தின் வழியாக சிலமுறை சுஜாதா காரில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எம்ஜிரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சிஆரெல்லிருந்து வெளியே வந்து பக்கத்தில் நடந்து வந்தார். அவ்வளவு அருகில் சுஜாதா! எனக்கு ஸ்தம்பித்து விட்டேன். சுதாரித்து, பேசலாம் என்று பார்த்தால் சட்டென்று காரில் ஏறி சென்று விட்டார்.

அப்போது பெங்களூர் அலுவலகத்தில் CASE Tools எழுதிக்கொண்டிருந்தோம். சரியாக ப்ரோக்ராம் எழுத வராதவர்கள் போய் மற்றவர்களுக்கு எப்படி எழுதுவது என்று ட்ரெய்னிங் கொடுக்க செல்வார்கள். அப்படி செல்பவர்களில் ஒருவர் ஒரு நாள் - that Rangarajan should be shot dead என்று கூவிக் கொண்டிருந்தார். என்னய்யா விஷயம் என்றேன். பிஈஎல்லில் ட்ரெய்னிங் போயிருந்தாராம். அப்போது அங்கே ஒரு ரங்கராஜனிடம் வாக்குவாதம். ப்ரோக்ராமர்கள் தாங்கள் எழுதுவதை அவர்களே டாக்குமெண்ட் செய்யவேண்டுமா வேண்டாமா என்று. நமக்கு நம்மை சொன்னால் கூட கோபம் வராது. சுஜாதாவைச் சொல்லிவிட்டால்? எனக்கு அதில் முரணான கருத்து இருந்தாலும் அந்த ஆளிடம் சுஜாதா சார்பாக அரைதினம் சண்டை போட்டேன். சுஜாதா பற்றி ஏதாவது சொல்லிவிட்டு யார் தப்பித்தார் நம்மிடமிருந்து. சதங்காவிடம் கேட்டுப் பாருங்கள். நம் பதிவில் சதங்காவிடம் பின்னூட்டத்தில் நடந்த சண்டை பற்றி தெரியுமா உங்களுக்கு?


சிறு வயதில் என் சகோதரர்களுக்குள்ளே கடும்சண்டை வர ஒரு காரணம் சுஜாதா புத்தகம் - யார் முதலில் படிப்பது என்று. முதலில் படிப்பவன் சத்தமாக சிரித்து சிரித்து மற்றவர்கள் வயத்தெரிச்சலை கொட்டிக் கொள்வான். சுஜாதா பற்றி நிறைய வாக்குவாதம் சகோதரர்களுக்குள் நடந்திருக்கிறது. என் சகோதரர்கள் அறிமுகப்படுத்தியதால் என் வகுப்பில் எல்லோரும் அம்புலிமாமா படிக்கும் வயதிலேயே  நான் சுஜாதாவுக்கு தாவிவிட்டேன்.

உயர்நிலைப்பள்ளியில் கலைக்கழகப் போட்டி நடக்கும். தமிழ்க் கட்டுரையில் - உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் - இந்த தலைப்பை விட அதிகமாக அரைத்த புளி ஏதாவது இருக்கிறதா? அதிலும் வழக்கம்போல திருவள்ளுவர் அல்லது பாரதி பற்றிதான் எல்லோரும் எழுதுவார்கள். நான் ஒருமுறை பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து சுஜாதா பற்றி எழுதிவிட்டு வந்தேன். என் அண்ணன்மார் எல்லாம் சிரி சிரி என்று சிரித்தார்கள். மறுநாள் போய் பார்த்தால் எனக்கு இரண்டாம் இடம்! உமாபதி வாத்தியார் சொன்னார் - "உயிரோடு இருக்கும் எழுத்தாளரைப் பற்றி எழுதியதற்காகவே உனக்கு இரண்டாம் இடம்". அப்படியும் முதலிடத்தை பாரதியே தக்கவைத்துக் கொண்டார். இப்போது அந்த வரிசையில் அநியாயமாக சேர்ந்து விட்டார் இந்த மனுஷனும்!


கல்லூரியில் ஆங்கில வகுப்பில் உனக்கு பிடித்த விஞ்ஞானக் கதையைப் பற்றி எழுது என்று ஒரு அஸைன்மென்ட். மக்களெல்லாம் அஸிமோவ் அது இது என்று பீட்டர் விட்டுக்கொண்டிருந்தார்கள். லைப்ரரியில் இருக்கும் ஒன்றிரண்டு புத்தகங்களும் போய்விட்டன. நமக்கு என்ன கவலை? மீரா பேனர்ஜி எல்லா தலைப்புகளையும் புரட்டி விட்டு திடீரென வாய்விட்டு படித்தார்கள்: A Silent Star in space - by Sujatha! நினைவில் இருந்த கதையை ஆங்கிலத்தில் சிறிதாக மொழி பெயர்த்து சேர்த்து ஒரு விமர்சனமும் எழுதி முடித்துவிட்டேன். மீரா பேனர்ஜிக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் சயன்ஸ் பிக்ஷன் கூட எழுதுகிறார்களா என்று? மீரா பேனர்ஜி மேடம் கூட சென்ற மாதம்தான் காலமானார்கள்.

இதில் வருத்தமான விஷயம் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக். மனுஷன் சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டார் என்று ரவி திருவேங்கடத்தான் கூட மின்னஞ்சலில் புலம்பியிருந்தார். அடுத்த ஜென்மத்தில் சொல்வாரா என்று பார்த்தால் மனுஷன் எங்கே திரும்பி வரப் போகிறார், அரங்கன் காலில் போய் ஐக்கியமான பிறகு? குட் பை, சுஜாதா! உங்களாலான சின்ன உதவி - சமயம் கிடைக்கும்போது அரங்கன் செவியில் ராஜேஷ் பற்றி கொஞ்சம் போட்டு வையுங்கள்.

Monday, March 10, 2008

சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா காலமாகிவிட்டார் என்பதை நாகுவின் பதிப்பில் பார்த்தவுடன் எனக்கு சில நிமிடங்கள் ஏதும் செய்யத் தோன்றவில்லை. இது வெறும் வதந்தி என்ற செய்தி வரக்கூடாதா என்ற ஏக்கம் அடிமனதில் குடைந்து கொண்டிருந்தது நிஜம். காலனின் கணக்கை யார் அறிவர். அவர் சிவாஜி படத்தில் எழுதிய ஒரு வசனம், "சாகிற தேதி தெரிஞ்சுட்டா, வாழற காலம் நரகமாயிடும்". அது முற்றிலும் சரி. ஆனால் இதைத்தான் மயான வைராக்கியம் என்கின்றனர் பெரியோர்.


பொதுவாக கதை படிக்கும் ஆவலை எனக்குள் புகுத்தியது எனது சகோதரர்களும் எனது சகோதரியும் அது ஒரு சுவாரசியமான முயற்சி அதைப் பற்றி பிறகு ஒரு கிறுக்கலில் தொடருகிறேன். எனக்கு சுஜாதாவின் எழுத்தை அவர்கள் அறிமுகம் செய்தது நடந்து ஒரு 30 வருடங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய நைலான் கயிறு நாவல்தான் நான் முதலில் படித்த அவருடைய படைப்பு. கதையின் கட்டமைப்பு, அதில் தனியாக வரும் கணேஷின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, வார்த்தைகளில் சொல்லி விளக்க முடியாதது. அவருடைய அந்தக் கதை அந்தக் காலத்தில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனை. மோர் குழம்பில் இருக்கும் வெண்டைக்காய் போல சவ சவ என எழுதி வந்த பலருடைய பதவிக்கு வேட்டு வைத்து தனக்கென மிக பெரிய ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஒருவர் சுஜாதா.

இவருடைய படைப்புகள் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். சில எனது கையிருப்பிலும் இருக்கிறது. என்னைப் போல பலருக்கும் கணிப்பொறியை (கம்ப்யூட்டர்) அறிமுகம் செய்து வைத்த புண்ணியவான். மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை இப்போ சொல்றேன், அப்பறம் சொல்றேன்னு சொல்லி கடைசிவரை சொல்லாமல் ஏமாற்றியவர். கணேஷ் வசந்த் என்ற இரு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் நிஜம் என்று பலரையும் நம்ப வைத்தவர். அதில் வசந்த் கதாபாத்திரம் பற்றி பல அபிப்ராய பேதங்கள் இருந்த போதும் அதைப் பற்றி கவலைப் படாதவர். மேடை நாடகங்களில் மாற்றங்களை சர்வ சாதாரணமாக கொண்டு வந்தவர். இவருடைய மறைவு தமிழுக்கு கண்டிப்பாக ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பு.

கணையாழியில் வந்த இவருடைய கடைசிப் பக்கங்கள் என்னை கிறுக்கல்கள் எழுதத் தூண்டியதும் நிஜம். இவரை தனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவராக என்னைப் போல பலரும் கருதுவதும் நிஜம். இவரது பாதிப்பில்லாமல் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதும் நிஜம். நாகு குறிப்பிட்டது போல், சிறுகதை, நாவல், நாடகம், சங்க இலக்கியம், அறிவியல் என்று எல்லாத் துறையிலும் கால் பதித்து தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தவர்.

இவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.

- பித்தன்.


Wednesday, March 05, 2008

அபார்ட்மென்ட் எண் 26

அபார்ட்மென்ட் பத்தி ஒரு செய்தியைக் கதையாய் எப்படி சொல்லலாம் என்று எண்ணி, ரொம்ப நாளா எழுதணும் என்று நினைத்து இப்ப தான் நேரம் கிடைத்தது. எழுதியிருக்கிறேன், வந்து படிச்சு பார்த்து உங்க கருத்துகளச் சொல்லுங்க.

http://vazhakkampol.blogspot.com/2008/03/26.html

Tuesday, March 04, 2008

சின்னக் கண்மணி…

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பெற நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வன்னப் பிஞ்சுப் பாதத்துல
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோக்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பொண்ணே தங்கப் பொண்ணே
கொத்திக்கொத்தி என் மனச
கொள்ளை கொண்ட சின்னப் பொண்ணே

மோகமுல்லச் சிரிப்பக் கண்டு
சோகந் தொலஞ்சு போச்சுதடி
பால்நெலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

ஒன்னழகப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி ஒன்னக் கட்டிக்கத்தான்
வாஞ்ச மீற ஏங்குதடி


--கவிநயா

Monday, March 03, 2008

ஷ்யாம்!

பரதேசியாரே - அமெரிக்கர்களும் மற்றவர்களும் நம்ப ஊரில் சேலை கட்டுவது இருக்கட்டும். இங்க நம்ப சங்கத்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையன் எல்லோருக்கும் சாந்து பொட்டும், சந்தனப் பொட்டும் வைக்கிறானே, கவனித்தீர்களா? வெங்கட், வித்யா தம்பதியினரின் இளைய குட்டி ஷ்யாம் பற்றித்தான் சொல்கிறேன். நம் ஊர் செய்தித்தாளில் வந்த இந்த செய்தியைப் பாருங்கள்.

நான் அடுத்த முறை ஷ்யாமைப் பார்க்கும்போது ஒரு ஆட்டோகிராப் வாங்கி வைத்துக்கொள்ளப் போகிறேன். சின்ன வயதிலிருந்தே டென்னிஸ் மட்டையும் கையுமாக இருந்த ஷ்யாம் இப்போது டென்னிஸ் கோர்ட்டில் 'சும்மா அதிருதுல்ல..'ன்னு சொல்லாமல் சொல்கிறான். இவன் பெயரை சொல்வது கஷ்டமா, இவன் கூட விளையாடுவது கஷ்டமா என்று எல்லோரும் விழிக்கப் போகிறார்கள். மேலும், மேலும் டென்னிஸ் உலகில் உயர எங்கள் வாழ்த்துக்கள்.
அது எல்லாம் இருக்கட்டும். வெங்கட் அவர்களே - செய்தித்தாளில் போட்டிருக்கிறதே அது யார் மீனா? :-)

டென்னிஸோ டென்னிஸ்


எல்லாம் இந்த ஸானியா மிர்ஸாவினால வந்த வினை - புடவையோடு தான் டென்னிஸ் ஆடணும்னு ரூல் போட்டுவிட்டாங்க. என்ன பண்றது?