Saturday, June 20, 2009

அரசியல்வாதி

தினசரி பத்திரிக்கையில் ஒரே பரபரப்பு. அன்றைய தலைப்பு செய்தி இது தான். ஒரு மந்திரியின் மகன் தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கிறான். மந்திரியிடம் பேட்டி. பேட்டியில் மந்திரி தன மகனை ஒரு சாதரண ஏழை குடிமகனாக வளர்ப்பேன் என்று சொல்லிவிட்டார். கட்சியிலும் மற்றும் மக்கள் மத்தியில் மந்திரியின் செல்வாக்கு கூடியது. சில வருடங்கள் கழித்து அதே பரபரப்பு மகனை சாதரண ஒரு ஏழைப பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
மக்கள் மத்தியில் அவர் ஒரு அவதார புருசனாக சித்தரிக்கப் பட்டார். அவர் மகனுக்கோ ஒன்றும் விளங்க வில்லை. என்ன ஆச்சு அப்பாவிற்கு. தன்னை ஏன் இப்படி நடத்துகிறார். ஒரு நாள் அவரிடம் தனியாக சென்று விசாரித்தான். உங்களின் விளம்பரத்திற்கு என்னை ஏன் பலிகடா ஆக்குகிறிர்கள்?
அவரோ பலமாக சிரித்து விட்டு கிறுக்கா உனக்கு ஒன்றும் புரியாது. ஒரு மந்திரியின் மகன் என்றால் அவன் ஒரு இளவரசனுக்கு சமம். அனால் நீயோ ஒரு அனாதைப் பயல். உன்னை நான் தத்து தான் எடுத்தேன். இப்பொழுது புரிகிறதா உன் பிறவிப் பயன். உன் பிறவியால் நான் பயன் பெற வேண்டும் என்று உன் தலைவிதி
அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவர் அப்பா இல்லை ஒரு அரசியல்வாதி என்று.
வேதாந்தி

Friday, June 19, 2009

படம் பாரு கடி கேளூ - 31


சிவப்பு பனியன்: டேய் உயிரை பணயம் வெச்சு வித்தை காட்டறோம்னு தெருவுக்கு வந்து கூட்டம் சேர்த்துட்டோம். ப்ரேக் எல்லாம் செக் பண்ணினியா? பிடிக்குமில்லே?

Thursday, June 18, 2009

பழமொழி வலைமொழி

நம்ம சதங்கா பழமொழி வலைமொழின்னு ஒரு தொடர் ஆரம்பித்து அழைத்திருந்தார். நாம பல பழமொழி தெரிஞ்சவங்களாச்சே,

சான் ஹோசே போனாலும் சன் டிவி விடாது... மாதிரி நிறைய விடலாம்னு பாத்தேன். ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு. இது வலையைச் சார்ந்திருக்கனுமாம். அட தேவுடா.... கொஞ்சம் சுதந்திரமாக விடமாட்டேங்கறாங்கப்பா... சரி கொஞ்சம் எடுத்து விடுவோம்...

புதிய தளத்தில் மீள் பதிவு...
தொடரிருக்கும்போதே தூற்றிக் கொள்.
பதிவு தேய்ந்து டிவிட்டர் ஆன கதை.
பதிவே எழுதாதவன் தமிழ்மண வார நட்சத்திரம் ஆன மாதிரி.
தனிப் பதிவு தொடராகுமா...
வாரமும் ஆச்சு, மாதமும் ஆச்சு, தொடரப் போட்றா சோமாறி (புரியாதவர்களுக்கு - எங்களூரில் மாட்டுப் பொங்கல் அன்று சிறுவர்கள் லாரியில் ஏறி போடும் கோஷங்களில் ஒன்று - போகியும் போச்சு, பொங்கலும் போச்சு. பொண்ண குட்றா பேமானி - ஊருக்கு வெளியே பேமானி கன்னாபின்னா என்று மாறும்)

தமிழ்லயே பதிவு போட வக்கில்லாதவன், காசு கொடுத்து தளம் வைத்து பீட்டர் பதிவு போட்டானாம்.

பதிவு கால்பணம், மக்களைப் படிக்க வைக்க முக்கால் பணம்.

சிறு துரும்பும் பதிவு எழுத உதவும்.

பாஸ்டன் பாலாவ பாத்து டோண்டு சூடு போட்டுக்கிட்டாராம்(பழமொழி சொன்னா கேட்டுக்கனும். சும்மா அர்த்தம்லாம் பாக்கக்கூடாது - ஏதோ தெரிஞ்ச ரெண்டு பேரு - இத வெச்சு காமெடி கீமெடி ஆரம்பிக்க வாணாம்...)

தமிழ் சொல்லிக்குடுக்கறவங்கல்லாம் துளசியல்ல...

செந்தழல் வழி தனி வழி... (தலைவர் சொன்னதெல்லாம் பழமொழிதான்)

அவனே பதிவு எழுதி பின்னூட்டமும் போட்டுக்கிட்ட மாதிரி...

பின்னூட்டம் போட்டு வாங்கி டிராபிக்கில் உய்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் பதிவு ஊசிப்போய் சாவார்.

ஊரான் வீட்டுப் பதிவே, சுட்டியப் போட்டு கலக்கே..

பதிவு எழுத தெரியாதவனுக்கு தமிழில் தட்டச்ச தெரியலன்னு சாக்கு.

ஊரார் பதிவைப் பின்னூட்டம் போட்டு வளர்த்தால், தன் பதிவு தானே வளரும்.

பதிவு செல்லும் பாதை எல்லாம் பின்னூட்டத்துக்கு கால்கள் உண்டு.

தமிழ்மணத்தில் மொக்கைப் பதிவன். (திருப்பதியில்...)

மொக்கைப் பின்னூட்டம் போட்டாலும் அளந்து போடு...

கடைசியாக....

இந்தப் பதிவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா.....!

நன்றி சதங்கா....

Monday, June 15, 2009

சேமிப்பிற்கு சில உபயோகமான வழிகள்!


அமெரிக்க பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போகிறது. இந்த காலத்தில் நம் வாழ்கையில் சில தேவையில்லாத செலவுகளை குறைத்திடவும், சேமிப்பினை அதிகரிக்கவும் சில வழிகளை இங்கு பார்ப்போமா! இது போல உங்களுக்கு தெரிந்த, முயன்ற வழிகளை பின்னூட்டமிட்டால் படிக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

உபயோகமில்லாத பொருட்களை வெளியேற்றுங்கள்:
"கராஜ் சேல்", கிரைக்ஸ் லிஸ்ட் , ஈ-பே போன்ற பல வழிகளில் நீங்கள் உபயோகிக்காத பொருட்களை விற்று காசாக்கலாம். சிலவற்றை உங்கள் அருகிலிருக்கும் குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம். உதாரணத்திற்கு கணினிகள், மின் கருவிகள் போன்றவை சில வருடங்கள் கழித்து அவற்றின் மதிப்பு குறைந்துவிடும். இவற்றை தேவையில்லாமல் வீட்டில் வைத்து குப்பை சேர்ப்பதை விட விற்று காசாக்கலாம் அல்லது குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம்.

பொது வளம்:
பொது நூலகம் ஒரு சிறந்த உபயோகமான "இலவச" வளம்! புத்தகங்கள், ஒளி குறுந்தகடுகள், இலவச வலை உபயோகம், குறைந்த செலவில் அச்சு மற்றும் நகல் எடுக்க வசதி, தனியாக படிக்க அறைகள் மற்றும் பல இலவச சேவைகள் உள்ளன. நீங்கள் கிங்கொஸ் சென்று பிரிண்ட் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு ஐம்பது சென்ட் செலவாகும்! ஆனால் நூலகத்தில் பத்து சென்ட் மட்டுமே!

தொலைகாட்சி மற்றும் டிஷ்:
நாம் தினமும் பார்க்கும் மிக முக்கியமான செய்திகள் மற்றும் நிகழ்சசிகள் (அமெரிக்காவில் மட்டுமே!!) பெசிக் கேபிள் எனப்படும் உள்ளூர் சேனலிலேயே வந்துவிடும். ஆனால் எக்ஸ்-டென்டேட் கேபிள் தேவையில்லாத பல சேனல்கள் கூட்டி விலை மூன்று மடங்காக்கிவிடுவர்கள். தேவையில்லாத டி-வி-ஆர் எனப்படும் கருவிக்கு மாதம் ஐந்து டாலர் வேறு! இப்போது பல சேனல்களின் நிகழ்சசிகள் இணையத்தில் இலவசமாக பார்க்கும் வசதி வந்துவிட்டது. http://www.hulu.com தளத்தில் டிவி நிகழ்சசிகள், சில திரைப்படங்கள் கூட உள்ளன. அதற்கு தேவை ஒரு கணினி (இணைய வசதியுடன்), மற்றும் ஒரு எஸ்-வீடியோ கேபிள். இந்த தளத்தில் கேபிள் டிவி'க்கு மாற்றாக ஆறு வழிகள் தந்துள்ளார்கள், முயன்று பாருங்கள். இதன் மூலம் வருடத்திற்கு முந்நூறு டாலர் வரை சேமிப்பு!

இரண்டாம் கை பொருட்கள்:
கார்கள் மட்டுமின்றி, வீட்டுக்கு தேவையான மேஜை போன்றவை சில சமயம் மிக குறைவான விலையில் craigslist.com போன்ற தளத்தில் பார்த்து வாங்கலாம். பல நல்ல பொருட்களுடன் சில சமயம் தரம் குறைந்தவையும் வருவதால் மிக கவனமாக சோதித்து பார்த்து வாங்குதல் நலம். எங்கள் தமிழ் சங்கத்திற்கு வாங்கிய முநநூறு டாலர் மதிப்புள்ள கம்பியில்லா ஒலி வாங்கி (wireless lapel mic) வெறும் எழுபத்தி ஐந்து டாலர் மட்டுமே!

அலைபேசி:
கர்ணனுக்கு கவச குண்டலம் போல மனிதனுக்கு அலைபேசி மிக அத்யாவசியமானதாகிவிட்டது. நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் சில சமயம் அலைபேசி நிறுவனங்களுடன் தள்ளுபடி விலையில் வழங்க வகை செய்திருக்கலாம். அப்படியில்லையேன்றால், http://www.freelancersunion.org/ என்ற தளத்தில் நிங்கள் ஒரு "சுதந்திரமாக தொழில் செய்பவர்" என பதிவு செய்து T-Mobile அலைபேசி மாத சந்தாவில் பத்து சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். (பிற அலைபேசிகளுக்கு இது போல இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டமிடவும்). இந்த தளத்தில் இன்னும் பல நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தங்கள் சேவையை வழங்குகிறது. என்னுடைய அலைபேசி சந்தாவில் இதனால் மாதத்திற்கு ஆறு டாலர் சேமிப்பு!

கிரெடிட் யூனியன்:
உங்கள் அருகில் இருக்கும் credit union வங்கிகளில் பல நல்ல சேவைகள் இலவசமாக கிடைக்கும். இதில் சேர ஒரு அறிமுக உறுப்பினர் அல்லது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தார் அந்த வங்கியுடன் இவ்வகை ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நான் https://www.penfed.org/ என்ற வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். அவர்களது கடன் அட்டை மூலம் உங்கள் அலைபேசி மாத சந்தாவை கட்டினால், உங்கள் அலைபேசிக்கு இலவச காப்பீடு தருகிறார்கள். இதன் மூலம் அலைபேசி தொலைந்தாலோ, உடைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ உங்களுக்கு பகுதி பணம் திரும்ப கிடைக்கும்! (மேலும் விபரங்களுக்கு https://www.penfed.org/pdf/accountsforms/CellPhoneProtectDisc.pdf). இதே கடன் அட்டையின் மூலம் வாகன எரிவாயுவிற்கு பணம் கட்டினால், ஐந்து சதவிகிதம் கட்டண தள்ளுபடி அந்த மாத இறுதியில் திருப்பி கொடுக்கிறார்கள்! இந்த கடன் அட்டைக்கு மாத சந்தா எதுவும் இல்லை.

ஆக்டேன் ரேடிங்:
வாகன எரிவாயு நிரப்பும் பொது மூன்று விதமான ஆக்டேன் ரேடிங் இருப்பதை பார்க்கலாம். பொதுவாக விலை அதிகமாக இருப்பதுதான் நல்ல எரிவாயு என சிலர் நம்பி அதிக விலை கொடுத்து நிரப்புவர். உங்கள் வாகனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குறைவான ஆக்டேன் ரேடிங் எரிவாயு நிரப்பினால் போதுமானது! பல வாகனங்களுக்கு ஆக்டேன் ரேடிங் 87 போதுமானது! அது தவிர சக்கரங்களில் சரியான அளவு காற்று நிரப்புதல் எரிவாயு சேமிப்பிற்கு உதவும்!

மாத சந்தாவா அல்லது வருட சந்தாவா!:
சில சமயம் வருட சந்தா கட்டினால் பல நிறுவனங்கள் கட்டணத்தில் தள்ளுபடி செய்வார்கள்! உதாரணத்திற்கு, வாகன காப்பீடு ஆறு மாதம் ஒரு முறை கட்டினால் மாதத்திற்கு பத்து டாலர் வரை சேமிக்கலாம்! அது தவிர வருடத்திற்கு ஒரு முறை உங்கள் வாகன காப்பீடிற்கு மற்ற நிறுவனங்கள் குறைவாக கொடுகின்றர்களா என பார்த்து கொண்டிருக்கவும். பல சமயம் புது வாடிக்கையாளர்களை கவர பல தள்ளுபடிகள் கொடுக்கலாம். கய்கோ நிறுவனத்தின் காப்பீடில் நான் penfed.org credit union உறுப்பினராக இருப்பதால் மாதம் பத்து டாலர் வரை தள்ளுபடி கொடுத்தார்கள்! அது தவிர நீங்கள் வருடத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சந்தா அமையும். அதனால், ஆரம்பத்தில் நீங்கள் சற்று குறைவான தூரம் கொடுப்பதனால் கட்டணத்தில் சேமிக்கலாம்.

தண்ணீர் தண்ணீர்:
அமெரிக்காவில் ஒரு காலத்தில் தண்ணீரும் எரிவாயுவும் ஒரே விலை இருந்தது! இப்போதும் தண்ணீரை பலர் காசு கொடுத்து பாட்டில்களில் வாங்குகின்றனர். அந்த பாட்டில்களில் நீர் எங்கு பிடிக்கப்பட்டது என எழுதியிருப்பதை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். பல நிறுவனங்கள் நகரின் குடிநீரை மேலும் சுத்தப்படுத்தி பாட்டில் அடைத்து விற்கின்றனர்! இதற்கு நம் வீட்டு குழாயில் வரும் நீரை பில்டர் செய்து குடிக்கலாம். அல்லது அருகாமையில் இருக்கும் கடைகளில் குறைவான விலையில் உடனடி பில்டர் செய்த நீரை விலைக்கு வாங்கலாம். அது தவிர உணவகங்களில் கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் வாங்காமல் நீரை பருகினால் உடலுக்கும் நல்லது, நம் பர்சுக்கும் நல்லது!

முயன்று பாருங்கள்!

Saturday, June 13, 2009

படம் பாரு கடி கேளு - 30


சார், ஆனியன் ஊத்தப்பமா வெஜிடபிள் ஊத்தப்பமா?

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

Thursday, June 11, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஆறு)

சார்ஜர்களும் கேபுள்களும் (Chargers and Cables)

ஒரு பிரயாணம்னு வந்தா, நமக்கு வேண்டிய சாமான்களை பாக்கிங் செய்வதை விட ஒரு கொடுமை என்ன தெரியுமா? இந்த சார்ஜர்களும் கேபுள்களும் தாங்க. இதில் தான் எத்தனை விதம். எத்தனை ரகம். இதோ எங்களது பெட்டிகளில் குமிந்திருப்பதன் பட்டியல்.

சார்ஜர்கள்:

  1. செல் போன் (2)
  2. காம்கார்டர் (1)
  3. டிஜிட்டல் கேமரா (1)
  4. எனது MP3 பிளேயர்
  5. மனைவியின் MP3 பிளேயர்
  6. மகனின் MP3 பிளேயர் 
  7. கணினி
கேபிள்கள்
  1. USB கேபிள் (2)
  2. செல் போன் சிங்க்-அப் கேபிள் (1)
  3. ஆடியோ வீடியோ கேபிள் (காம்கார்டர்) (1)
  4. ஒவ்வொரு MP3 ப்ளேயருக்கும் ஒரு காதொலி (head set) ( 3 )
  5. கணினிக்கு தேவையானவை.
என்று அடிக்கிக்கொண்டே போகலாம்....


இன்னும் சற்று முடி கொட்டிய நிலையில்,

நாராயணன்.

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஐந்து)

பயணத்துக்கு தயார்

உஸ்ஸ்ஸ் அப்பாடா....

ஒரு வழியாக ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுது. பாக்கிங்கும் ஒரு 99% முடிஞ்சாச்சு. இனிமே போர்டர் வேல பாக்க கொஞ்சம் பளு தூக்கி தயார் பண்ணிக்கணும். Immigration check, customs, security check எல்லாம் நினைத்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.

இதுல என்ன விசேஷம்னா, எங்களோட ஒரு சபதம் நிறைவேறும் போல இருக்கு. ஆனா இன்னும் இங்கிருந்து கிளம்புகிற வரையில் நிச்சயம் இல்லை. அதனால் மார் தட்டி கொள்ள கொஞ்சம் பயமாக இருக்குகிறது. கட்டயில குட்ட (knock on wood). பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்ற சபதத்தில் படு தோல்வி ஒப்பு கொள்கிறோம். பெட்டிகளில் ஒன்று, சிறியதாக அமைந்து விட்டது. 16.67% வெற்றி பெற்றோம். பெட்டிகளின் எடை, அதிலும் தோல்வியே. கையில் எடுத்து செல்லும் பெட்டிகளில் மட்டும் சற்று நம்பிக்கை வைத்திருக்கிறோம். பாப்போம்.

ரிச்மண்டிலிரிந்து பல குடும்பங்கள் சேர்ந்து, உடன் பயணம் செய்யபோகிறோம். மீனா நினைவு கூர்ந்த வாஷிங்டனில் திருமணத்திற்கு சென்னையிலிருந்து வண்டி பூட்டின கல்யாண குழு போல, சென்னையில் நடக்க விருக்கும் திருமணத்திற்கு நம்ம ஊர்லேந்து ஒரு பெரிய குழு போவது போல் ஒரு உணர்வு. அந்த விதத்தில் இந்த பிரயாணத்தை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

நாராயணன்

இனி வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.


Wednesday, June 10, 2009

தோட்டக்கலை - சில கேள்விகள் - 1

ரிச்மண்ட் பட்டினத்தார் அல்லது கிராமத்தான் வசந்தம் அவர்களுக்கு,

உங்களுடைய தோட்டக்கலை பற்றிய பதிவில், ஆர்வம் இருப்பவர்களுக்கு உத்திகள் கற்றுத் தருவதாகக் கூறியிருந்தீர்கள். நாகு கூட உங்க தோட்டம் பற்றி சிலாகித்து, பதிவிலும் எழுதி, தொலைபேசியிலும் புகழ்ந்து தள்ளிவிட்டார். உங்கள் உதவி எங்களுக்கு, இல்லை இல்லை நாட்டுக்குத் தேவை.

தோட்டக்கலை பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், யு.எஸ். மண்ணுக்கு ஏற்ற‌ சில பொதுவான கேள்விகளை இப்போதைக்கு முன் வைக்கிறேன்.

நம்ம ஊரு ரேடியோ அதிகாலையில் ஆன் செய்திருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள். அப்பதான் ஒரு எஃபெக்டிவ்வா இருக்கும் :))

1. நிலத்து மண் களிமண் ஆகையால், எங்கள் ஊரில் ஒரு அரை அடிக்குத் தோண்டி, மண் நிறப்பி தான் நண்பர்கள் தோட்டம் போடுகிறார்கள். கடைகளில் ஏராள மண்வகைகள் கிடைக்கின்றன. எந்த நிறுவன மண் சிறந்ததென நீங்கள் நினைக்கிறீர்கள் ?

2. கடையில் இருக்கும் வரை செடிகளில் இருந்த பசுமை, வீட்டில் நட்டவுடன் சிலநாட்களில் மஞ்சளாகி விடுகிறதே ! பசுமையைக் காக்க என்ன செய்ய வேண்டும் ?

3. இரண்டு இலை விட்ட கத்தரிக்காய் செடி, பூச்சிகளின் புண்ணியத்தால், இலைகள் சல்லடையாக ... பூச்சிக்கொள்ளி மருந்துக்குப் பின் வாடவும் இல்லை, வளரவும் இல்லை. என்ன செய்ய வேண்டும் ?

4. செடிகளுக்கு பூச்சிக் கொள்ளி, தாவர உணவு, தண்ணீர் விட‌ காலை நேரம் சிறந்ததா, மாலை நேரம் சிறந்ததா ?

5. இயற்கை உரம் தயாரித்திருக்கிறீர்களா ? இங்கு சாத்தியமா ?

ம‌ண்வெட்டிய‌ அப்டீக்கா க‌டாசீட்டு, எங்க‌ளுக்கு ப‌தில‌ விளாசீட்டு போங்க‌ வ‌ச‌ந்த‌மே !!!

உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி !!!

Tuesday, June 09, 2009

பட்டாம்பூச்சி


நான் என்ன பதிவு போடலாம்னு யோசிச்சி யோசிச்சி கண்ல பட்டாம்பூச்சி பறக்கற அளவு வந்ததை யாரோ கவிநயாகிட்ட சொல்லிட்டாங்க போல இருக்கு. கண்ல மட்டும் ஏன் பூச்சி பறக்கனும். பதிவு பதிவா பறக்கட்டும்னு எந்த புண்ணியவானோ ஆரம்பிச்ச தொடரில் சேர்ந்து அவங்க பறக்கவிட்ட பட்டாம்பூச்சி விருதுல என்னையும் சேத்துக்கிட்டாங்க. விருதுக்கு நன்றி கவிநயா! கவிநயா எந்த தலைப்பு எடுத்தாலும் கலக்கறவங்க. பதிவும் சரி, கவிதையும் சரி, பாடுகிறதுக்கு வசதியா பாடுறதும் சரி, நாட்டியத்திலும் சரி, பக்தியிலும் சரி - அவங்களுக்கு நிகர் அவங்கதான். அதனாலதான் அவங்களுக்கு ரெண்டு பேர் இந்தப் பட்டாம்பூச்சி விருதை கொடுத்திருக்காங்க....

நமக்கு அவங்க ரேஞ்சுக்கு எழுத முடியாட்டியும் கொஞ்சம் படம் காமிப்பமேன்னுதான் மேலே இருக்கற படம்.   வர்ஜினியா ட்வின் லேக் பார்க்கில் நானே எடுத்தது. டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி. அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் காணப்படும் இந்தப் பட்டாம்பூச்சி வர்ஜினியா மற்றும் நான்கு மாநிலங்களுக்கு மாநிலப் பூச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நான் இந்தப் பட்டாம்பூச்சி விருதை இந்த மூனு பேருக்கு வழங்குகிறேன். முதலாவதாக எங்க கட்சியில் இருந்து போய் தனிக்கட்சி ஆரம்பிச்சி அப்பப்போ கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் சதங்கா!சுவையாக கவிதை, கதை எழுதுவதுஓவியம் வரைவது, வீட்டில் சமையலறை எந்த திசையில் இருக்கிறது என்று கூடதெரியாமல் சமையல் குறிப்பு எழுதுவது(சும்மானாச்சியும் சொன்னேன்) என்று பல கட்சிகள் நடத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார். மனுஷன் பல சுவையான சின்ன விஷயங்களை அவருடைய கவிதை மூலம் அப்படியே நம் கண் முன்னால் நிறுத்துவார். சுந்தரத் தெலுங்கினில் அவருடன் ஆணி பிடுங்கும் பெண்டிராகட்டும், நம்ம ஊர் டீக்கடை ஆகட்டும், ஓட்டு வீட்டு முற்றமாகட்டும், நம்ம ஊர் டவுன் பஸ்ஸாகட்டும்- இவருடைய எளிய, இனிய தமிழ் அப்படியே நம்முன் வந்து நிறுத்தும். நான் எழுதும் தமிழ் தாங்காமல் வேறு ஊருக்கு ஓடிவிட்டார். உங்க ஊர் 'பட்டாம்பூச்சி' குறித்து எழுதுங்க சதங்கா!

அடுத்தது செல்வராஜ்! அவருடைய கொங்குநாட்டுத் தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய எழுதிக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய எழுதும் செலுத்தலுக்கு ஏதோ கட்டுப்பாடு வந்திருக்கிறது :-) அதாங்க இவர் வேதிப் பொறியியலில் செலுத்தக் கட்டுறுத்தல் (Process Control) துறையில் பணி புரிபவர். தமிழ்மணத்தின் நிர்வாகத்தில் இவருடைய தொண்டும் உண்டு.  வேதிப் பொறியியலை விளக்கும் பதிவுகளும், அவருடைய மகள்கள் கேட்கும் கேள்விகள் குறித்த பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடித்தவை. இவருடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது மகள்களின் துவக்கப் பள்ளியில் இந்தியா குறித்து அவர் செய்த ஒரு வீடியோ. மழலையுடன் பெண்கள் இந்தியாவின் அருமை, பெருமைகளை விளக்க அழகாக இந்தியாவைப் படம் பிடித்திருந்தார். சுட்டி கிடைக்கவில்லை. நீங்கள் திரும்ப உங்க பதிவில் பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடவேண்டும், செல்வராஜ்.

மூன்றாவதாக கானாப்பிரபா! "ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" - அவரைப் பற்றிய அவரது விளக்கமே நெஞ்சில் ஒரு வலியைத் தரும்! எனக்கு இங்கே பல ஈழத்தோழர்கள் மூலமாக கொஞ்சம் ஈழப்பாரம்பரியம் குறித்துத் தெரிந்திருந்த போதிலும் ஈழத் தமிழரின் பாரம்பரியத்தை எனக்கு நிறைய அறிமுகப் படுத்தியவர் பிரபா. இணுவில், யாழில் வளர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். இவருடைய மடத்து வாசல் பிள்ளையாரடியும், றேடியோஸ்பதி பதிவும் மிகவும் பிரசித்தம்.

ஒருமுறை இவருடைய நல்லூர் கோவில் பதிவை எனது ஈழ நண்பர் வீட்டில் காண்பித்தேன். கண்கலங்க அப்படியே கணினி முன் சேவிக்கவிருந்தார்கள். நல்லூர் ஈழ மக்கள் வாழ்வில் எப்படி பிணைந்திருக்கிறது என்று எனக்கு உணர்த்தியது. அவருடைய பிள்ளையாரடி பதிவுகளில் எனக்கு ரொம்பவும் பிடித்தது கல்லடி வேலர் பதிவு.  சென்ற வாரம் பல ஈழப்பதிவர்களுடன் ஈழத்து முற்றம் ஆரம்பித்திருக்கிறார். ஈழத் தமிழின் இனிமையும், தூய்மையும் அனைவரும் அறிந்ததே. ஈழத்து பேச்சு வழக்குகளை நமக்கெல்லாம் விளக்குவதற்கான இந்த சேவையின் ஆரம்பமே முசுப்பாத்தியாக இருந்தது. ஈழத்து பட்டாம்பூச்சிகளைத் தொடர்ந்து பறக்கவிடவேண்டும், பிரபா!

மூவருக்கும் வாழ்த்துகள்!
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்