Thursday, May 22, 2014

தாய் - 4

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் மூன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


இதுவரைக்கும் அம்மா எப்படி தன்னை வளர்த்தாள், எப்படி தன்னை பெற்றெடுத்தாள் ந்னு பாடிய பட்டினத்து ஸ்வாமிகள் அம்மாவின் சிதைக்கு தீ மூட்டி அது அடங்கியதும் நேரடியாக சிவபெருமானிடம் கேட்கும் சில கேள்விகள் இந்தப் பாடலில்;

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ
என்னை மறந்தாளோ சந்தமும் உன்னையே நோக்கி
உகந்து வரம் கிடந்தென் 
தன்னையே ஈன்றெடுத்த தாய்.

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானே எப்பொழுதும் உன்னை தன் அகக் கண்ணால் பார்த்து மகிழ்ந்து குழந்தைப் பேறு வரம் வேண்டித் தவம் கிடந்து என்னை உன் அருளால் ஈன்ற என் தாய் நான் இட்ட தீயினால் வெந்து ஆம்பல் ஆயினளோ, அவள் அன்புக்கு உரிய என்னை மறந்து விட்டாளோ, அவள் உன்னை எப்பொழுதும் மறவாதவள் அதனால் அவள் உன் பதத்திற்கு வந்து பேரின்பம் அடைந்தாளோ என்று கேட்கிறார்.


அடுத்து ஊரார் அனைவரையும் அழைக்கின்றார், அழைத்து இந்த வாழ்க்கை எப்படிப் பட்டது என்பதை நான்கு வரிகளில் தெளிவாக்குகிறார்.

வீற்றிருந்தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


என் தாய் நேற்று உயிருடன் இருந்தாள், திண்ணையில் வீற்றிருந்தாள், பிறகு இறந்து போய் வீதி தனில் கிடந்தாள், இன்று வெந்து சாம்பலாகிப் போனாள்.  இதற்கு காரணம் என்ன என்று யாரும் யோசிக்காமல், அதற்காக அழாமல் எல்லோரும் அவளுக்காகப் பால் தெளிக்க வாருங்கள்.  இங்கும் அங்கும் எங்கும் பரவி இருப்பது சிவமயமே.

இவ்வளவு நேரம் தனது தாயின் பிரிவை எண்ணி கலங்கிய பட்டினத்தார் எப்படி இந்த கடைசிப் பாடலில் எல்லோரையும் அழாதே என்று சொல்கிறார்ன்னு ஒரு கேள்வி எழும்.  இவருக்கு ஒரு நீதி நமக்கு ஒரு நீதியா? அப்படி இல்லை, அவர் அழுவதாக காட்டியிருப்பது ஒரு தாய் என்பவள் எப்படி பட்ட நல்ல குணங்கள் கொண்டவள், எப்படிப்பட்ட கருணை கொண்டவள் என்று நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்கு புரியவைக்க என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவரது இந்த கருத்தை சார்ந்து பிற்காலத்தில் ஒரு கவிஞர் இப்படிப் பாடினார்:

"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ நிலத்தீர்"

தன்னைச் சுமந்து பெற்ற தாய்க்கு இறுதிக் கடன் செய்யும் போது இவர் பாடிய பாடலைப் பார்த்தோம்

அடுத்து இவர் தனக்கு பிறவா வரம் வேண்டி பாடுகிறார் என்று பார்ப்போம்.

எத்தனையூர், எத்தனை வீடு எத்தனைதாய் பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டு அழைக்க ஏன் என்றேன் நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா 
உனக்கு திருவிளையாட்டோ


நமக்கு கிடைத்த இந்த பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்று நமக்கு தெரியாது,
எத்தனை ஊர்ல இருந்தோம் தெரியாது.
எத்தனை வீடுகள்ல இருந்தோம் தெரியாது,
நம்மை பெற்றவர்கள் எத்தனைப் பேர் தெரியாது,
எத்தனைபேர் இட்டு அழைத்தார்கள் தெரியாது - அதாவது எவ்வளவோ பேர் நம்மை அழைத்து பேசியிருப்பார்கள் தெரியாது
இன்னொரு அர்த்தம் - எவ்வளவு பெயர் நமக்கு இதுவரை இருந்தது தெரியாது
இப்படி இத்தனை பிறவிகளில் நான் எல்லோருக்கும் ஏன் ஏன் நு பதில் சொல்லி சொல்லி களைப்பாகி விட்டேன். இது என்ன உனக்கு ஒரு திருவிளையாடலா ந்னு கேக்கரார்.  இந்தப் பாடலில் தன்னைப் பற்றிச் சொல்லி பிறவா வரம் தரச் சொல்லி கெஞ்சுகிறார்.


இந்தப் பாடலைத் தழுவி தமிழ்த் திரைப்படத்தில் வந்த ஒரு பாடல்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா, அந்த ஊர் நீயும் கூட இருந்த ஊர் அல்லவா

 அடுத்த பாடலில் அம்மா, பிரம்மா இருவருக்கும் இருக்கும் கஷ்டத்தைச் சொல்லி பிறவா வரம் கேக்காரார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா

திரு இருப்பையூரில் இருக்கும் சிவனே என்னை பெற்று பெற்று எத்தனையோ அம்மாக்கள் உடல் சலித்து விட்டார்கள், கடுமையான வினைகள் உடைய நான் பிறவிப் பெருங்கடலைக் கடக்க நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலையெழுத்தை எழுதி எழுதி வேதா (பிரமன்) கை சலித்து விட்டான், அதனால் எனக்கு இன்னொரு முறை ஒரு தாயின் கருப்பையில் வாழ வேண்டிய கஷ்டத்தைத் தராதே என்கிறார்.

அடுத்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிச் சொல்லி பிறவா வரம் கேக்கிரார்.

மண்ணும் தணலாற வானும் புகையாற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் பண்ணும் அயன்
கையாறவும் அடியேன் காலாறவும் கண்பார்
ஐயா திருவையாறா

திருவையாற்றில் வீற்றிருக்கும் சிவனே, என்னை மீண்டும் படைக்காமல் இருந்தால், மீண்டும் மீண்டும் நான் இறந்து என்னை கொளுத்தி கொளுத்தி இந்த பூமி சூடாவதைத் தடுக்கலாம்.

அப்படி கொளுத்தி கொளுத்தி வெளியேறும் புகையால் வானம் மறைக்கப் படாமல் காக்கலாம்.

பலகோடி தாய்மார்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் கொஞ்சம் இளைப்பாறலாம்
என்னைப் படைத்து படைத்து பிரமன் கை வலியில் துடிக்கிறார் அவருக்கு கொஞ்சம் கை வலியிலிருந்து ஆறுதல் கிடைக்கட்டும்.

உன்னைத் தேடித் தேடி இப்படி அலைந்து அலைந்து வலிக்கும் என் கால்கள் கொஞ்சம் இளைப்பாற எனக்கு பிறவா வரம் தா என்கிறார்.

என்னைப் போன்ற மனிதர்கள் இந்த உடலை பேணிவளர்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் இந்த உடலை ஒரு புண் என்கிறார் இவர்:

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு 
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியின் பொடி.

அதோடு இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு இதன் நிலை என்ன என்பதை இந்தப் பாடலில் தெளிவாக்குகிறார்:

எரியெனக்கு என்னும் புழுவோ
எனக்கென்னும், இந்த மண்ணும்
சரி எனக்கு என்னும் பருந்தோ
எனக்கு எனும் தான் புசிக்க
நரியெனக்கு என்னும் புன் நாய் எனக்கு
என்னும் இந்நாறு உடலைப் 
பிரியமுடன் வளர்த்தேன் இதனால்
என்ன பேறு எனக்கே.

எரி - நெருப்பு, புழு, மண், பருந்து, நரி, நாய் எல்லாம் என் உடலை சாப்பிட ஆவலுடன் இருக்கும் அது தெரியாமல் நாறும் இந்த உடலை இப்படிப் பிரியமாக வளர்த்தேனே இதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்கிறார்.

ஆரணம் நான்கிற்கும் அப்பால் அவர் அறியத் துணிந்த
நாரணன் நான்முகனுக்கு அரியான் நடுவாய் நிறைந்த பூரணன்
எந்தைப் புகலிப் பிரான் பொழில் அத்தனைக்கும் காரணன்
அந்தக் கரணம் கடந்த கருப்பொருளே


வேதங்கள் நான்கிற்கும் அப்பாற்பட்டவன்
அவனை அறியப் புறப்பட்ட நாரணன் மற்றும் பிரமன் இருவருக்கும் தெரியாதவன்
எல்லாப் பொருளிலிலும் இருந்து இயக்குபவன்
என் தகப்பன்
எல்லா உலகங்களுக்கும் வினை முதலானவன்
அந்தக் கரணங்களான - மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என ஒன்றும் இல்லாதவனும் முழு முதற் பொருளானவனுமான அந்தச் சிவனை வணங்கு கின்றேன்.


இந்தப் பாடலோடு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

முரளி இராமச்சந்திரன்.

3 comments:

  1. 4 பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். வாவ், மிகவும் அற்புதமாகத் தந்திருக்கிறீர்கள் முரளி! மிகவும் நன்றி!!

    ReplyDelete
  2. நன்றி கவிநயா.

    முரளி.

    ReplyDelete
  3. முரளி ,

    மீண்டும் மீண்டும் படித்தேன். எத்தனை முறைப் படித்தேன் என்பது தெரியவில்லை. ஆனால் என் கண்கள் பணித்தது மட்டுமே எனக்கு தெரியும். தாயை அருகில் இருந்து பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அதிகம் ஆகி விட்டது.

    எனக்கு பட்டினத்தார் மிகவும் பிடிக்கும். அவர் பாடல்களை தனிமையில் மட்டுமே கேட்பேன். ஏன் என்றால் அது சோகத்தை கிளப்புகிறது என்று மற்றவர்கள் தடுத்து விடுவார்கள்.

    அவர் தன் தாய் உயிருடன் இருக்கும் வரை ஊரை விட்டு போக மாட்டேன் என்றும் சொல்லுவார்.

    மிக அருமையான பதிவு. பட்டினத்தார் படம் பார்த்த ஒரு திருப்தி.
    இருந்தாலும் ஊருக்கு சென்று தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் அதிகப் படுத்தி விட்டது.

    மீண்டும் படிப்பேன்.
    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!