Tuesday, March 04, 2008

சின்னக் கண்மணி…

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பெற நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வன்னப் பிஞ்சுப் பாதத்துல
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோக்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பொண்ணே தங்கப் பொண்ணே
கொத்திக்கொத்தி என் மனச
கொள்ளை கொண்ட சின்னப் பொண்ணே

மோகமுல்லச் சிரிப்பக் கண்டு
சோகந் தொலஞ்சு போச்சுதடி
பால்நெலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

ஒன்னழகப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி ஒன்னக் கட்டிக்கத்தான்
வாஞ்ச மீற ஏங்குதடி


--கவிநயா

Monday, March 03, 2008

ஷ்யாம்!

பரதேசியாரே - அமெரிக்கர்களும் மற்றவர்களும் நம்ப ஊரில் சேலை கட்டுவது இருக்கட்டும். இங்க நம்ப சங்கத்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையன் எல்லோருக்கும் சாந்து பொட்டும், சந்தனப் பொட்டும் வைக்கிறானே, கவனித்தீர்களா? வெங்கட், வித்யா தம்பதியினரின் இளைய குட்டி ஷ்யாம் பற்றித்தான் சொல்கிறேன். நம் ஊர் செய்தித்தாளில் வந்த இந்த செய்தியைப் பாருங்கள்.

நான் அடுத்த முறை ஷ்யாமைப் பார்க்கும்போது ஒரு ஆட்டோகிராப் வாங்கி வைத்துக்கொள்ளப் போகிறேன். சின்ன வயதிலிருந்தே டென்னிஸ் மட்டையும் கையுமாக இருந்த ஷ்யாம் இப்போது டென்னிஸ் கோர்ட்டில் 'சும்மா அதிருதுல்ல..'ன்னு சொல்லாமல் சொல்கிறான். இவன் பெயரை சொல்வது கஷ்டமா, இவன் கூட விளையாடுவது கஷ்டமா என்று எல்லோரும் விழிக்கப் போகிறார்கள். மேலும், மேலும் டென்னிஸ் உலகில் உயர எங்கள் வாழ்த்துக்கள்.
அது எல்லாம் இருக்கட்டும். வெங்கட் அவர்களே - செய்தித்தாளில் போட்டிருக்கிறதே அது யார் மீனா? :-)

டென்னிஸோ டென்னிஸ்


எல்லாம் இந்த ஸானியா மிர்ஸாவினால வந்த வினை - புடவையோடு தான் டென்னிஸ் ஆடணும்னு ரூல் போட்டுவிட்டாங்க. என்ன பண்றது?

Wednesday, February 27, 2008

எழுத்தாளர் சுஜாதா காலமானார்

எழுத்தாளர் சுஜாதா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது எழுபத்து ஐந்து. சிறுகதை, தொடர்கதை, நாவல், நாடகம், சினிமா, அறிவியல், சங்க காலக் கவிதைகள் என்று அனைத்து வகைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் சுஜாதா.
அவருடைய மரணம் எழுத்துலகுக்கு பேரிழப்பாகும்.

சுஜாதா பற்றி விக்கிபீடியாவில்.

சற்றுமுன் பதிவில் வந்த செய்தி.

சுஜாதா பற்றி ஜெயமோகன்

Tuesday, February 26, 2008

கிராமத்து ஊருணி


"ஊருணி நீர் நிறைந்தற்றே - உலகவாம்

பேரறி வாளன் திரு"

என்று ஊரே உண்ணும் ஊருணி பற்றி வள்ளுவர் பெருந்தகை அருமையாக ஈற்றடிகளில் சொல்லியிருப்பார். அவர் சொல்கிற ஊருணியில் கடல் அளவுக்கு விசயங்கள் அடங்கியிருக்கும். நாம என்னதான் வரி வரியா எழுதினாலும், அந்தக் காலத்து ஆட்களை கிட்ட கூட நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. இதோ எனது கவிதை.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_25.html

Sunday, February 24, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 19

நடிகர்கள் கட்சி
நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். என்று பா.ம.க தலைவர் அதாவது மரம் வெட்டி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.

நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.

முதல் முடிவு சரி அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டால் அடுத்த எம்.ஜி.ஆராக வந்துவிட்டால், நம்ம கதை கந்தலாகிவிடும் என்று இவர் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. இரண்டாவது முடிவும், மூன்றாவது முடிவும் தான் சூப்பர். இவரை விடமாட்டேன் என்று கெட்டியாக பிடித்திருக்கும், திருமாவளவன் சமீபத்தில் சில படங்களில் நடித்து (அல்லது வெறும வந்து போனாரோ என்னவோ, அதைப் பார்த்த துர்பாக்கியசாலிகள் சொன்னால்தான் தெரியும்) தானும் ஒரு நடிகன் என்று பறையறிவித்தாரே, அது பரவாயில்லையா? அல்லது அவரையும் கழட்டி விட்டு விடுவாரா? நடிகர்களை பட்டாளம் பட்டாளமாய் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும், தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லையா? இதுதான் இந்த புத்தாண்டில் நான் கேட்ட மிக நல்ல அரசியல் செய்தி, அவர் சொன்னது போல் செய்தார் என்றால் (அப்படி செய்யும் பழக்கம் இல்லாதவர் அவர்), பா.ம.க வுக்கு பெரிசாக சங்கு ஊதிவிடலாம், தமிழ் நாடு உருப்பட ஒரு வழி பிறக்கும்.

கழிசடை அரசாங்கம்
ஒரு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு குஜராத் உதாரணம் என்றால், எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு தமிழகம் உதாரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை பெண்கள் கடத்துகிறார்களாம், அதனால், மனம் வெந்து, நொந்து, உருகி உருகி ஒரு (அபத்தக்) கவிதையை முதல்வர் எழுதியிருக்கிறார். இது என்ன அரசாங்கமா, அல்லது வடிவேலு நடிக்கும், 23-ம் புலிகேசி படமா? ஒரு குற்றம் நடந்திருக்கிறது, அதைச் செய்பவர்கள் யார் என்று தெரிகிறது, அவர்களைப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து அடுத்து அதே தவறை யாரும் செய்ய அஞ்சும்படி செய்யாமால், ஒரு கவிதை எழுதி விட்டால், அவர் ஒரு தலைவர், முதல்வர், என்னய்யா அரசாங்கம் இது, இது போதாதென்று, பாரதி பெயரையும் கவிதையில் சேர்த்து எழுதிவிட்டார். ஏன் பாரதி சொன்னாரே, 'சீ சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' அது நினைவில் இல்லையா? ஒரு ஓட்டுப் பள்ளிக் கூடத்தில் தீவிபத்தில் குழந்தைகள் இறந்தால் - ஒரு கவிதை, ஒரு திருமணத்தில் தீ விபத்து அதில் பலர் இறந்தால் - ஒரு கவிதை, என்ன நடவடிக்கை என்று யாராவது கேட்டால் - 'வரியா வரியா நீயும் நானும் தீ குளிக்கலாம்' என்று பொது மக்கள் எதிரில் நிருபர்களை அநாகரீகமாக பேசலாம், இப்படி ஒரு முதல்வர், இவர் தலைமையில் ஒரு அரசாங்கம். இந்தக் கழிசடை அரசாங்கம் இனியும் தேவையா? சிந்தியுங்கள்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்
எனக்கு அமெரிக்காவின் தேர்தல் சற்று ஆச்சர்யம் கலந்த குழப்பம்தான். வீட்டுக்கு வீடு போஸ்டர் ஒட்டவில்லை, வண்ண (வன்னமா? வண்ணமா? என்பதை RTS-ல் யாராவது தீர்மானிக்கட்டும், எனக்குத் தெரிந்ததை நான் எழுதி விட்டேன், இதுக்காக பின்னூட்டம் போட்டு என் தமிழ் அறிவை(?) அசிங்கப் படுத்தாதீங்க) வண்ண சுவர் விளம்பரம் இல்லை, இரவு 12 மணி வரை முச்சந்தியில் மைக் செட் கட்டி அவன் இப்படி, இவன் இப்படி என்று ஏக வசனத்தில் லட்ச்சார்ச்சனை இல்லை. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல் இது. அதுவும் ஒரே கட்சியிலிருந்து பலர் ஒரே பதவிக்கு போட்டியிடுவார்களாம், அவர்கள் அருகருகே அமர்ந்து அடிச்சுக்காம பேசுவாங்களாம். அடப் பாவிகளா, இது அடுக்குமா, அவ்வளவு நல்லவங்களாடா நீங்கள்ளாம்!

இந்தப் ப்ரைமரி கூத்து நடந்த பிறகு யார் அடுத்த கட்சி வேட்பாளரோடு போட்டியிடலாம் என்று முடிவெடுப்பார்களாம். இந்தியாவில் கட்சித் தலைவர்தான் முதல்வர், அதே மாதிரி கட்சித் தலைவர்தான் பிரதமர். (தற்போதைய பிரதமரைத் தவிர, மேலும், இவர் எங்கே ஆட்சி செய்கிறார், வேறு ஒருவர் செய்யர ஆட்சியில் இவர் வெறும், வாய்தானே அசைக்கிறார்). இங்கு எவர் அதிகம் பிரபலமோ, எவர் அதிகம் கட்சிக்கு நிதி கொண்டுவந்தாரோ அவர் போட்டியிடுவாராம், அட போங்கப்பா, இதேல்லாம் நல்லாவா இருக்கு, கஷ்டப்பட்டு ஒருத்தர் கட்சியை ஆரம்பிப்பாராம், வேர ஒருத்தர் அதிபராகி விடுவாராம். அந்தக் கதையெல்லாம், எங்க ஊர்ல கிடையாது. சொந்தப் பிள்ளைக்கே பதவி கொடுக்காம, புதையல பூதம் காக்கரமாதிரி நாங்க பதவியைப் பிடிச்சிட்டு இருக்கோம், இங்க யாரோ ஒருத்தர் கிட்ட பதவியை கொடுப்பாங்களாம். ஆமாம், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பலரும் Democratic கட்சியின் ஆதரவாளர்களாமே, அப்படியா? அது ஏன் என்று யாராவது பின்னூட்டமிட முடியுமா? அதோடு Democratic கட்சிக்கு தமிழாக்கம் என்ன என்றும் பின்னூட்டமிட்டால் நல்லது.


ஆத்திகமா, நாத்திகமா

ஆத்திகம் நாத்திகம் ரெண்டையும் பற்றிய குழப்பம் பலருக்கும் இருக்கும். சமீபத்தில் சன் டீவியில் சத்யராஜின் பேட்டியில் இதை விளக்கி தனது நாத்திகப் பற்றை விளக்கினார். அவர் சொல்கிறார், எப்போது ஒருவர் கடவுள் தந்த கண்ணை நம்பாமல் கண்ணுக்கு கண்ணாடி அணிகிறாரோ அப்போதே அவர் நாத்திகவாதியாகி விட்டார். எவர் கடவுளை நம்பாமல் டாக்டரை பார்க்க போகிறாரோ அவரும் நாத்திகவாதிதான் என்கிறார். அடுத்து எவர் காலையில் பல் துலக்குகிறாரோ அவரும், எவர் குளிக்கிறாரோ அவரும், எவர் உடை உடுத்துகிறாரோ அவரும், ஏன் உலகில் யாருமே ஆத்திகவாதிகள் இல்லை, எல்லோருமே நாத்திகவாதிகள்தான் என்று சொல்வார் என்று நினைக்கிறேன். இதற்கு அவர் பெரியார்தான் தனக்கு ஆசான் என்று கூறினார். கடவுள் சிலைகளைக் கும்பிட்டால், நாம் பழமைவாதிகள், மறைந்த மனிதர்களுக்கு வைக்கப் பட்டுள்ள சிலைகளை வணங்கினால், பகுத்தறிவு. கனவில் கடவுள் தோன்றியதாக புராணங்கள் சொன்னால், அது கட்டுக்கதை, கனவில் அண்ணா, பெரியார், இராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் வந்ததாகச் சொல்லி மக்களை முட்டாளாக்கினால், அது பகுத்தறிவு. சத்யராஜிடம் எனக்குப் பிடித்தது, அவருடைய கிண்டல், கேலி, ஆனால், இந்து மதத்தை மற்றும் தாக்கிக் கொண்டிருந்த பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்ளும் அவர், தைரியமாக இப்படி எல்லா மதத்தினரையும் தாக்கி அனைவரும் நாத்திகர்தான் என்று சொன்னது ரொம்ப அதிகமாக இருந்தாலும், அவர் இப்படியே பேசி வருவது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

வெத்து அன்புமணியின் மற்றுமொரு வேண்டுகோள்
ஷாருக் கான், ஆமீர் கானைப் பார்த்து அவரிடமிருந்து படைப்பாளிகளின் முக்கியத்துவம், மற்றும் அருமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

சினிமாவில் நடிகர்கள் புகை பிடித்தால் அது பார்கின்ற சிறுவர்களை பாதித்து அவர்கள் புகை பிடிப்பது அதிகரிக்கிறது, நடிகர்கள் குடிப்பது போன்ற காட்சியினால், சிறுவர்களை அது பாதித்து அவர்களும் குடிக்க ஆரம்பிக்கின்றனர். எனவே, ஷாருக் கானும், அமிதாப் பச்சனும், படங்களில் புகை பிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மீண்டும் கூறியிருக்கிறார். அனைத்து அதிகாரங்களும் உள்ள அரசாங்கத்தால், சிகரெட், பீடி, புகையிலை எல்லாவற்றையும் தடை செய்ய முடிந்தாலும், செய்ய மாட்டார்கள் அது அவர்கள் பாக்கெட்டை நிரப்புவது தேவை, ஏன் குறைந்த பட்சம் சாராயத்தை தடை செய்யுங்களேன், அது முடியவில்லையே, தெருவுக்கு 2-3 டாஸ்மார்க் கடை வருகிறதே அது பரவாயில்லையா? ஆமாம், சினிமாவில் வரும் வன்முறையால் சிறுவர்கள் பாதிப்படையவில்லையா? காதல் காட்சி என்ற போர்வையில் வரும் கவர்ச்சியும், அநாகரீகங்களும், பரவாயில்லையா? வசனங்களால் வரும் பாதிப்பு பரவாயில்லையா? இதையெல்லாம் தடை செய்து விடலாமா? பிறகு என்ன கருமத்துக்கு படம் எடுப்பது என்று எல்லோரும் வேறு வேலை செய்யப் போயிட்டா, பல கோடி அரசாங்கத்துக்கு வரும் வரிப்பணம் போயிடுமே பரவாயில்லையா?

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

பித்தன்.
piththanp@gmail.com
பித்தனின் மற்ற கிறுக்கல்களை இங்கு படிக்கலாம்

Saturday, February 23, 2008

உயிர் காக்க உதவுங்கள்

ராஜேஷ் அவர்கள் பற்றி ஒரு கட்டுரையும், கவிதையும் எழுதி எண்ணாலான மிகச் சிறிய உதவியாக எனது வலைத்தளைத்தில் பதிந்திருக்கிறேன். வாருங்கள், வாசியுங்கள், ராஜேஷ் குடும்பத்தாருக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_23.html

இன்ஸ்ப்ரூக்கில் வெடிகுண்டு...

வெள்ளிக்கிழமை மதியம் ஒரு ஐந்து மணி இருக்கும். எப்போதடா வீட்டுக்கு கம்பி நீட்டலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சக ஊழியர் கூப்பிட்டார் - "ஏய் இங்கே வந்து பாரேன்". போய் ஜன்னல் வழியாக பார்த்தால் தூக்கிவாரிப்போட்டது. சூப்பர் ஸ்டார் சிவாஜி படத்துல ஸ்பேஸ் ஸூட் போட்டு வருவாரே, அதுபோலவும் அசலாய் கீழே படத்தில் இருப்பவர்போலவும் ஒருவன் பார்க்கிங் லாட்டில் ஒரு காரைச் சுற்றி சுற்றி வந்தான்.

அதுவும் நம் காருக்கு அடுத்த வரிசையில் ஒரு காருக்கு பின்னால் மண்டியிட்டான். அப்புறம் எழுந்து வேகமாக ஜகா வாங்கினான். சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் வந்து காருக்கு பின்னால் மண்டியிட்டு ஏதோ செய்தான். மறுபடியும் ஜகா வாங்கினான். சக ஊழியன் சினிமாவில் வருவது போல சிவப்பு வயர் இல்ல, நீல கலர் வயரை கட் பண்ணு என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தான். 
இப்படியே போய் கொண்டிருந்தது. பிறகு முகமூடி மனிதன் காணவே காணோம். நான்கு தீயணைப்பு வண்டிகளும், இரண்டு இன்ஸ்ப்ரூக் பேட்ரோல் கார்கள், சில போலீஸ் கார்கள் வந்து பார்க்கிங் லாட்டை நிரப்பி விட்டார்கள். இதற்குள் வெடிகுண்டு பயம் போய், கார் சுக்கு நூறாய் வெடிக்கும் காட்சியைப் பார்க்கும் ஆசை பாழும் மனதில் தொற்றிக் கொண்டது. ஆனால் யாரும் கார் கிட்டேயே போகவில்லை. கிட்டே போனால்தானே தப்பான வயரை வெட்டுவதற்கு...
கொஞ்ச நேரம் அந்தக் காரையே வேடிக்கை பார்த்துவிட்டு போரடித்ததால் வீட்டுக்கு கிளம்பி விட்டேன். இப்போது கவிநயாவின் கவிதையில் புல்லரித்துப் போய் உட்கார்ந்திருந்த போது, சக ஊழியனிடம் இருந்து இந்த சுட்டி வந்தது. இதற்குத்தானா இவ்வளவு கலாட்டா? ஆனால் அவ்வளவு காத்திருந்ததற்கு அந்த சின்ன வெடிப்பையாவது சீக்கிரம் பண்ணித் தொலைத்திருக்கலாம் :-)

Friday, February 22, 2008

பதங்களின் சரசம்

அண்ட சராசரம் அனைத்தும் உறைய!
ஆடிய பதங்களில் ஆனந்தம் துலங்க!

இருகரு விழிகளில் கனவுகள் விரிய!
நவரசம் கண்டு நானிலம் மயங்க!

காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
காற்சதங்கை ஒலி பாடல்கள் இசைக்க!

கூந்தல் கலைந்து வானம் அளக்க!
அபிநயம் பார்த்து அகிலம் வியக்க!

சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
வியர்வை கங்கை ஆறாய் ஓட!

நினைவுகள் யாவும் நிர்மலமாக!
உணர்வுகள் மறைந்து உலகம் ஜொலிக்க!

ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
பதங்களின் சரசம் பரவசமன்றோ!!


--கவிநயா

Sunday, February 17, 2008

அரிதாரத்தப் பூசிக் கொள்ள ஆசை

கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகிப்போச்சு என்று நினைக்கும்போது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என வியக்க வைக்கிறது. அதாங்க போன வருசம் பனி பற்றி ஒர் வெண்பா பதிவு போட்டோம். இந்த வருசம் பனி பத்தி யோசித்துக் கொண்டிருந்தபோது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று, அசையாப் பொருட்கள் எல்லாம் அரிதாரம் பூச ஆசைப்பட்டு, விழுந்த பனியை தம்மேல் பூசிக்கொள்வது போல எழுதியிருக்கிறேன். படித்துச் சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று ;-)

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_11.html